போலி ஆவணத் தயாரிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது கோட்டை நீதவான் திலினி கமகே, திஸ்ஸ அத்தநாயக்கவை 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
பிணை வழங்க முடியாதிருக்கும் அளவிற்கு பொலிஸ் தரப்பில் இருந்து சாட்சிகள் முன்வைக்கப்படாததால் சந்தேகநபருக்கு நீதவான் பிணை வழங்கியுள்ளார்.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் மாதம் 11ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வவுனியா கந்த சுவாமி கோவிலின் வருடாந்த உற்சவம் கடந்த வாரம் நிறைவு பெற்று கோவிலை புனரமைப்பு செய்வதற்காக திருவருள் கூடியுள்ளது.வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலினை புனரமைத்து கும்பாபிசேகம் செய்வதற்கான தருணம் கைகூடிவந்துள்ள நிலையில் நேற்று(10.02.2015) இரவு முதல் பாலஸ்தானம் செய்வதற்க்கான உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை ஒன்பது மணிமுதல் பாலஸ்தான அபிசேகங்கள் நடைபெற்று வருகின்றன .
மேற்படி பாலஸ்தான நிகழ்வில் அடியார்கள் பங்கு பற்றி முருகபெருமானின் அருளை பெறுவதோடு நின்று விடாமல் கோவிலை புனரமைப்பு செய்தவதற்கு உங்களது தாராளமான திருப்பணி உதவிகள் செய்து கும்பாபிசேக நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் தெரிவிக்கின்றனர் .
ஆலய புனரமைப்புக்கு தேவையான திருப்பணிகளில் பங்கெடுக்க விரும்பும் அடியார்கள் கோவில் காரியாலயத்துடன் அல்லது 0242222445 என்னும் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும் .
அதிகாலை வேளையில் வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் வீட்டிலிருந்தவர்களை கட்டிப்போட்டு விட்டு சுமார் 7 பவுண் தங்கநகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வவுனியா உமாமகேஸ்வரன் வீதியில் அமைந்துள்ள சின்னப்புதுக்குளத்தில் இன்று 10-02-2015 அதிகாலை 01.30 மணியளவில் மேற்படி திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது இன்று அதிகாலை சந்திரா ஞானப்பிரகாசம் என்பவரது வீட்டின் கதவை உடைத்த திருடர்கள் வீட்டிலிருந்த தாயையும் மகனையும் கட்டிபோட்டு அவரிடம் இருந்த 7 பவுண் தங்க நகைகளை அபகரித்து சென்றுள்ளனர்.இன்று அதிகாலை வேளை நல்ல மழை பெய்து கொண்டிருந்தமையால் திருடர்கள் வந்து போனமை தொடர்பாக அயலவர்கள் அறிந்திருக்கவில்லை.
இதுகுறித்து வீட்டு உரிமையாளர் சந்திரா ஞானப்பிரகாசம் தெரிவிக்கையில் திருடர்கள் மூன்றுபேர் முகத்தை மூடி துணியால் கட்டிகொண்டு கையில் கத்தி,வாள் போன்ற ஆயுதங்களுடன் வீட்டின் பின் கதவை உடைத்துக்கொண்டு உள்வந்ததாகவும் தன்னையும் மகனையும் கட்டிபோட்டு தங்கநகைகளை கொள்ளையிட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார்.
மேற்படி திருட்டு சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து மேலதிக விசாரணையை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளதையடுத்து, முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்க உள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 14 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் 67.14 சதவீத ஓட்டுகள் பதிவானது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 673 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேர்தலுக்கு பின் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கே சாதகமாக அமைந்து உள்ளன.
அதிக பட்சமாக அக்கட்சி 53 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனாலும், பா.ஜ.க. எடுத்த கருத்து கணிப்பில், அந்த கட்சிக்கு 34 முதல் 38 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி, பா.ஜ.க. இடையே நிலவும் கடும் போட்டி காரணமாக காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் அதிகபட்சமாக 5 இடங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன.
ஆனால் கருத்துக்கணிப்புகளை மிஞ்சும் அளவுக்கு ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.
முன்னணி நிலவரம்:
ஆம் ஆத்மி – 65
பா.ஜ.க. – 4
காங்கிரஸ் – 0
மற்றவை – 1
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெறுவதை அடுத்து அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். கட்சி அலுவலகத்தில் திரண்ட தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தாலும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதாக இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற உலகக்கிண்ணப் பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அனுபவ வீரரான டில்ஷான் சதம் விளாசினார். இருப்பினும் இலங்கை அணி துரதிஷ்டவசமாகத் தோல்வியைத் தழுவியது.
இது குறித்து டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் கூறுகையில், இலங்கை அணி தோல்வியை தழுவினாலும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதாகவும், அடுத்த போட்டிகளில் இளம் வீரர்கள் மேலும் பிரகாசிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
எகிப்தில் கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் ஏற்பட்ட வன்முறையில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள ஏர் டிஃபென்ஸ் காற்பந்து மைதானத்தில் எகிப்தியன் பிரிமியர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் சமலெக் மற்றும் இ.என்.பி.பி.ஐ. ஆகிய அணிகளுக்கிடையே போட்டி நடைபெற இருந்தது.
அந்த சமயம் திடீரென்று சமலெக் அணியின் ஆதரவாளர்களான ‘அல்ட்ராஸ் வயிட் நைட்ஸ்’ குழுவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் வாங்காமல் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
அப்போது அவர்களை விரட்ட பொலிசார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தினர். இதில் ஏற்பட்ட நெரிசல், மூச்சுத் திணறலால் 30 பேர் பலியாயினர். 25 பேர் காயமடைந்தனர்.
மைதானத்துக்கு வெளியேயும் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இதனையடுத்து காற்பந்து போட்டி கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதே போன்று 2012ம் ஆண்டில் எகிப்தின் போர்ட் செட் நகரில் உள்ள காற்பந்து மைதானத்தில் ஏற்பட்ட வன்முறையில் 72 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலைத்தேய மோகத்தில் விடுபட்டு தமிழரின் பாரம்பரிய வாத்தியங்களை இசைத்து பொது நிகழ்வுகளை சிறப்பிக்க வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் குறித்தெதுக்கப்பட்ட நிதியிலிருந்து வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு இன்னிய (பாரம்பரிய இசைக்கருவிகள்) உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
தமிழரின் பாரம்பரிய கலையை பிரதிபலிக்கும் உடுக்கை, தவில், நாதஸ்வரம், பறை, புல்லாங்குழல், கொம்பு போன்ற உபகரணங்கள் அமைச்சரினால் பாடசாலை அதிபரிடம் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர், இன்று நம்மில் பலர் எமது பாரம்பரிய கலையை மறந்து ஆங்கிலேய கலாசாரத்தில் மோகம் கொண்டுள்ளோம். இதனால்தான் பாண்ட் வாத்தியங்களில் கவனத்தை செலுத்தியுள்ளோம். எமது மொழி, கலாசாரம் மிகத்தொன்மை வாய்ந்தது. இனிவரும் காலங்களில் இவ்வாறான இன்னிய வாத்தியங்களை இசைத்து பொது நிகழ்வுகளை நடாத்த வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
“போலி தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளே” என்ற தலைப்பில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இலங்கையின் சுதந்திர தின விழாவில் இருவரும் பங்கேற்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தசுரரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அச்சுவரொட்டிகளில்,
“ஜனநாயக சோசலிஷக் குடியரசு எனப்படும் இலங்கையின் தேசிய சின்னங்கள் அனைத்திலும் சிங்கள மேலாதிக்கத்தைப் பிரதிபலிக்கும் அடையாளங்களே உள்ளன.
சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு தமிழ் மக்கள் மீது இனவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையின் அரசியல் சாசனத்தைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்த 43 வருடங்களாக இலங்கையின் அனைத்து தேசிய தினங்களையும் தமிழர்கள் புறக்கணித்தே வந்தனர்.
அரசாங்கம் என்பது மாறக் கூடியது. ஆனால் சிங்கள மேலாதிக்கவாதிகளின் அடக்கியாளும் ஆக்கிரமிப்புப் போக்கும் தமிழ் மக்களின் கொள்கைப் பற்றும் மாறாதவை என்பதை சம்பந்தனும் பின் கதவால் தமிழ் அரசியலுக்குள் நுழைந்த சுமந்திரனும் அறியாத ஒன்றல்ல.
இருந்தும் தாம் சார்ந்த மக்களினதும் கட்சியினதும் விருப்புக்கு மாறாக இத்தகைய காரியத்தை அவர்கள் எதற்காக நிகழ்த்தினர் என்பதே தமிழரை வேதனையடைய வைத்துள்ளது.
இவர்களின் செயல் மக்களின் கொள்கைகளையும், கட்சிக் கொள்கைகளையும் குழி தோண்டிப் புதைக்கும் செயலாகும்.
அண்மைக் காலமாக தமிழ் அரசியலை ஏகபோகமாக நடத்தி வரும் சம்பந்தரையும் அவருக்குப் பக்க வாத்தியமாக இருந்து தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படாமல் பின் கதவால் அரசியலுக்குள் நுழைந்த சுமந்திரனையும் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தூக்கி எறியும் காலம் வெகு தொலைவில இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
போலி ஒப்பந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவின் நலனை விசாரிக்க அவரது மகள் துல்மினி அத்தநாயக்க நேற்று சிறைசாலைக்கு சென்றுள்ளார்.
தன் தந்தைக்கான பகல் உணவுடன் சென்ற துல்மினி ஊடகத்திடம் தன் தந்தை நலமாக உள்ளதாகவும் வெகு விரைவில் பிணை கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
துல்மினி அத்தநாயக்க பிரித்தானியா நிவ் காசல் பல்கலைகழகத்தின் பட்டதாரி என்பது குறிப்பிடதக்கது.
சுவிட்சர்லாந்து வங்கிகளில் இலங்கையைச் சேர்ந்தவர்களால் 58.3 மில்லியன் டொலர் பணம் இரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவிஸ் லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, இலங்கையைச் சேர்ந்த 92 வாடிக்கையாளர்களால் சுவிஸ் வங்கிகளில் 129 கணக்குகள் பேணப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
அதிகபட்சமாக இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவரால், 10.7 மில்லியன் டொலர் வைப்பில் இடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 112வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எச்.எஸ்.பி.சி வங்கி அதனது வாடிக்கையாளர்களுக்கு வரி ஏய்ப்பு செய்ய உதவியதாக பிபிசிக்கும் ஏனைய சில ஊடகங்களுக்கும் கசிந்த ஆவணங்கள் காண்பிக்கின்றன.
எச்.எஸ்.பி.சி.க்காக ஜெனீவாவில் வேலைபார்த்த கணினி நிபுணர் ஒருவர் 2007ல் கசியவிட்ட தரவுகளில் இருந்து கிடைக்கப்பெறுகின்ற தகவல்களே தற்போது வெளியாகியுள்ளன.
2006-2007 காலகட்டத்தில் இந்த வங்கியில் கணக்கு வைத்திருந்த மொத்தம் 203 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து ஆறாயிரம் பேரின் கணக்கு விவரங்களை பிபிசியின் பனோரமா நிகழ்ச்சி ஊடகவியலாளர்கள் உட்பட பல்வேறு சர்வதேச ஊடக நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.
பிரஞ்சு பத்திரிகையான ´ல மோந்த்´துக்கு இந்த தரவுகள் முதலில் கொடுக்கப்பட்டிருந்தன.
அதன் பின்னர் புலனாய்வு பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு என்ற அமைப்பினாலும் பிபிசி உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களாலும் இந்த தரவுகள் ஆராயப்பட்டிருந்தன.
தனிநபர்கள் ரகசியக் கணக்குகளை வைத்துக்கொள்ள அனுமதிக்கும் எச்.எஸ்.பி.சி.யின் சுவிஸ் கிளைநிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு அந்த வங்கி, அரசாங்க வரித்துறைக்கு தெரியாமல் பணத்தை கொண்டு வந்து சேர்க்கும் வழிகள் பற்றி இந்த வங்கி ஆலோசனை வழங்கியதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
வெளியில் தெரியாமல் பணம் வைக்கக்கூடிய வசதி தரக்கூடிய கணக்குகளை பயன்படுத்திக்கொண்டு, சிலர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருந்தனர் என்பதை எச்.எஸ்.பி.சி ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால் அவ்வகையான வங்கிக் கணக்குகளுக்குரிய விதிமுறைகளை தாம் முற்றாக மாற்றிவிட்டதாகவும், அவற்றின் வழியாக யாரும் வரி ஏய்ப்பு செய்ய இனி வாய்ப்பு இல்லை என்றும் எச்.எஸ்.பி.சி கூறுகிறது.
வெளிநாட்டு வங்கிகளில் பணம் வைப்பது என்பதே சட்டவிரோதம் என்றில்லை. ஆனால் வரித்துறை அதிகாரிகளிடம் இருந்து பணத்தை பதுக்குவதற்காக இவ்வகை கணக்குகளை பலர் பயன்படுத்தும் நிலை காணப்படுகிறது.
வரி விதிக்கப்படாத வகையில் நிதியை நிர்வகிப்பது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட செயல்தான். ஆனால் வரி ஏய்ப்பிற்காக பணத்தை பதுக்குவது சட்டவிரோதமானது.
அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம் அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் எச்.எஸ்.பி.சிக்கு எதிராக குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.
ஆனால் இந்த வங்கியின் தலைமையகமான பிரிட்டனில் கிரிமினல் விசாரணைகள் எதனையும் அது எதிர்கொள்ளவில்லை. விசாரிக்கும் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாக எச்.எஸ்.பி.சி. கூறுகிறது.
கொழும்பு 07 நெளும் பொக்குன (தாமரை தடாக) வீதி மீண்டும் ஆனந்தகுமார சுவாமி மாவத்தை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (10.02) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நெளும் பொக்குன (தாமரை தடாக) கட்டிடம் அமைக்கப்பட்ட பின் அதற்கு முன்பாக இருந்த ஆனந்தகுமார சுவாமி மாவத்தை நெளும் பொக்குன மாவத்தையாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
எனினும் கல்வியாளர்கள், கலைஞர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இந்த பெயர் மாற்ற தீர்மானத்தை எடுத்துள்ளார்.
பெயர்மாற்ற நிகழ்வில் அமைச்சர்களான கரு ஜயசூரிய, விஜேதாஸ ராஜபக்ஷ, டி.எம்.சுவாமிநாதன், நந்திமித்ர ஏக்கநாயக்க, பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.
வவுனியா, மதவாச்சி பிரதான வீதியில் எகேலகஹ வளைவில் லொறி ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பலியானதுடன் 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பிரேசில் நாட்டில் இளம்பெண் ஒருவர் தான் அணிந்த உள்ளாடையால் உயிர் பிழைத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியாவுக்கு அருகே பேலம் பகுதியில் குளோபோ-இவாட்டே மெட்டிரியாஸ் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வீட்டுக்கு தேவையான பொருட்களை வணிக வளாகத்தில் வாங்கி கொண்டிருந்தனர். அப்போது வணிக வளாகத்தின் எதிர்பக்கம் துப்பாக்கியுடன் வலம் வந்த திருடன் ஒருவன் துப்பாக்கியை காட்டி பொதுமக்களை நகை, பணத்தை கொடுக்குமாறு மிரட்டி கொண்டிருந்தான்.
இந்நிலையில் அந்நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு குண்டு இவாட்டேவின் இடதுபக்க மார்பு மீது பாய்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சியில் மயக்கமாகி கீழே விழுந்த இவாட்டே இறந்துவிட்டதாக அவரது கணவர் கருதியுள்ளார்.
ஆனால் இவாட்டேவின் உடைகளை சோதித்த கடை உரிமையாளர், அவரது ஆடையை துளைத்து சென்ற துப்பாக்கி குண்டு, உள்ளாடையின் அடியில் கனத்த கம்பி வலையில் சிக்கி கொண்டிருந்தை கண்டுபிடித்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவாட்டே, தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.
இதுகுறித்து இவாட்டே கூறுகையில், கடவுள்தான் இந்த உள்ளாடையை அளித்தார் என்று கருதுகிறேன் என்றும் இது மட்டும் இல்லை என்றால் இந்நேரம் இறந்து போயிருப்பேன் எனவும் உருக்கத்துடன் கூறியுள்ளார்.
துருக்கியில் பாலியல் தொந்தரவு கொடுத்த கணவனை அவரது மனைவி கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.
துருக்கியை சேர்ந்த கோனுல் (49) என்ற பெண் தன் கணவனின் (67) கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, பொலிசாரிடம் சரணடைந்து பரபரப்பான வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது,
எண்ணற்ற கனவுகளுடன் திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்த நான், கணவரின் அன்பால் 20 நாட்கள் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ்ந்தேன்.
ஆனால் அதற்கு பின்னர் தான் கணவரின் வக்கிரபுத்தி எனக்கு தெரிய வந்தது. அவர் விடிய விடிய ஜேர்மன் நீலப்படங்களை பார்த்து அதேபோல் என்னையும் நடந்து கொள்ள கட்டாயப்படுத்துவர்.
அவரின் ஆசைக்கு நான் இனங்கவில்லை என்றால், என்னை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இனியும் இந்த வேதனை தாங்க முடியாததால், அவரின் கழுத்தை கத்தியால் அறுத்து துடித்துடிக்க கொன்றேன் என தெரிவித்துள்ளார்.
கொடைக்கானலில் நாய்க்கு மதுபானம் கொடுத்ததை கண்டித்த பெண்ணை 3 நபர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்.
கொடைக்கானல் சீனிவாசபுரத்தை சேர்ந்த பிரதீப் அலெக்ஸ்சாண்டர் என்பவரது வீட்டில், மதுரை கொடிமங்கலத்தை சேர்ந்த பாண்டி செல்வி (25) என்பவர் 3 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாண்டி செல்வி வீட்டில் தனியாக இருந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்.
இதில் பாண்டி செல்வி போட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, 2 பேர் தப்பி ஓட, ஒருவர் மட்டும் போதை தலைக்கேறிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த நபர் பொலிசில் ஒப்படைக்கப்பட்டார், பொலிசில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் பியர்சோழா ரோட்டில் தனியார் காட்டேஜில் வேலை பார்த்து வந்தேன்.
மேலும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அறை எடுத்து கொடுக்கும் வேலையும் பார்த்து வருகிறேன். என்னை தேடி எனது நண்பர்கள் அடிக்கடி கொடைக்கானல் வருவது வழக்கம். அதுபோல் கடந்த 6 ஆம் திகதி ஜெகதீசபாண்டியும், சக்திவேலும் வந்தனர். நாங்கள் 3 பேரும் காட்டேஜில் மது குடித்து கொண்டிருந்தோம்.
அப்போது எங்கள் காட்டேஜ் அருகில் உள்ள பிரதீப் அலெக்ஸ்சாண்டரின் நாய் குரைத்து கொண்டே இருந்தது. நாங்கள் அதற்கு மதுபானமும், பிரியாணியும் கொடுத்தோம்.
இதைப்பார்த்ததும், பாண்டி செல்வி எங்களை திட்டிவிட்டு நாயை அழைத்து சென்றுவிட்டார். வீட்டிற்கு சென்ற பிறகும் கூட பாண்டி செல்வி எங்களை திட்டி கொண்டே இருந்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் அவரது வீட்டிற்குள் சென்றோம். ஆனால், எங்களை வீட்டிற்குள் விடாமல் அவர் கதவை அடைத்து கொண்டார்.
ஆனாலும் கதவை தள்ளிக் கொண்டு 3 பேரும் உள்ளே சென்று பாண்டி செல்வியை சரமாரியாக தாக்கினோம். அப்படியும் எங்களுக்கு ஆத்திரம் தீராததால், அவரது ஆடைகளை களைந்து பலாத்காரம் செய்தோம்.
அப்போது பாண்டி செல்வி சத்தம் போட்டதில், விடயம் வெளியே தெரிய கூடாது என்பதற்காக அவரை கத்தியால் குத்தினோம். இதில், ரத்த வெள்ளத்தில் பாண்டி செல்வி அதே இடத்தில் இறந்து போனார்.
உடனே என்னுடன் வந்தவர்கள் தப்பியோடி விட்டனர். நானும் தப்ப வெளியே சென்றபோது அக்கம்பக்கத்தினர், போதையில் இருந்த என்னை சரமாரியாக தாக்கி பொலிசில் ஒப்படைத்துவிட்டனர் என்று கூறியுள்ளார். பொலிசார் தப்பியோடிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் மோதிய உலகக்கிண்ண பயிற்சிப்போட்டியில் தென்னாபிரிக்க அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
11ஆவது உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் இன்று நியுசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சிப் போட்டி யில் இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதன் படி களமிறங்கிய இலங்கை அணி டில்சான் பெற்ற சதத்தின் உதவியுடன் 44.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ஓட்டங்களை பெற்றது.
போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் இலங்கை அணியின் துடுப்பாட்டம் 44.4 ஓவர்களுடன் மட்டுப்படுத்தப்பட, தென்னாபிரிக்க அணிக்கு 30 ஓவர்களில் 224 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் ஆட்டம் இலங்கையின் பக்கம் இருந்தாலும் மீண்டும் மழை குறுக்கிட, 25 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டு 188 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட தென்னாபிரிக்க அணி 24.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்று 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.