அம்பலாந்தோட்டையில் மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற மாணவன் ஒருவர் மயங்கி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அம்பலாந்தோட்டை பொலன மஹா வித்தியாலத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமாக இன்று மரதன் ஓட்டப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பங்கேற்ற பாடசாலையின் 10ம் ஆண்டில் கல்வி பயின்ற, 15 வயதான சமோத் சத்சர என்ற மாணவரே சம்பவத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவர் ஓடிக்கொண்டிருந்து போது மயங்கி வீழ்ந்த நிலையில் உடனடியாக அம்பலாந்தோட்டை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நாடாளுமன்றிற்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. திஸ்ஸ அத்தநாயக்க தற்போது விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளில் அத்தநாயக்கவை பங்கேற்கச் செய்ய அனுமதிக்குமாறு கோட்டே நீதவான் திலின கமகே, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் அத்தநாயக்க பங்கேற்க அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச தொடர்பாளர் குமரன் பத்மநாபான் என்ற கே.பி. இலங்கையை விட்டு வெளியேற, மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கே.பி.யின் கடவுச்சீட்டை முடக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கே.பி.யை கைது செய்ய உத்தரவிடுமாறு வலியுறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஜனவரி 19ம் திகதி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் நிதியமைச்சரும் அரசியலமைப்பு தொடர்பான சட்டத்தரணியுமான கே.என்.சொக்ஸி தனது 82 வயதில் இன்று கொழும்பில் காலமானார்.
1933ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ம் திகதி பிறந்த கே.என்.சொக்ஸி, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சராகவும், சட்ட வல்லுனருமாக செயற்பட்டுள்ளார். சொக்ஸி புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
93-94ம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சரவை அமைச்சராக கடமையாற்றியுள்ளார்.
2002ம் ஆண்டு ரணில் பிரதமராக பதவி வகித்த காலத்தில் நாட்டின் நிதி அமைச்சராக சொக்ஸி கடமையாற்றியிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட சொக்ஸி, 2010ம் ஆண்டு வரையில் நாடாளுமன்றில் அங்கம் வகித்து வந்தார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
வவுனியா பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிசூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாவக்குளம் அருகில் நேற்று இரவு குறித்த துப்பாக்கிசூடு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் 36 வயதுடைய பிரியந்த பிரேமரத்தின எனப்படுவராகும். நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் அதிகாரி இவ்வாறு துப்பாக்கிசூட்டில் காயமடைந்துள்ளார்.
எப்படியிருப்பினும் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மீன் வகைகளை ஏற்றுமதி செய்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடை உத்தரவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இத்தடையானது 6 மாதங்களின் பின்னரே அமுல்படுத்தப்படவுள்ளதாக மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சர் துலிப் வெதாரச்சி தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் ஐரோப்பாவிற்கு விஜயம் மேற்கொண்ட போது மீன்பிடித்தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், சர்வதேச தர நிர்ணயங்கள் பேணப்படுவதில்லை எனவும், தெரிவித்து ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எதிராக ஏற்றுமதி தடை விதித்திருந்தது.
இவ்வாறு மீன்வகைகள் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்படுவதினால் நாட்டுக்கு பாரியளவிலான வருமான இழப்பு ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச தர சான்றிதழ்களுக்கமைவாக மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தடையை முழுமையாக நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சர் துலிப் வெதாரச்சி தெரிவித்துள்ளார்.
தைவான் நாட்டில் 53 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் 19 பேர் பலியானதாக தைவான் உள்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தைவான் நாட்டு செய்தி ஏஜென்சி குறிப்பிடுகையில், ஆற்றில் விழுந்த விமானத்தில் சிக்கியுள்ள பயணிகளின் நிலை தெரியவில்லை.
ஆனால் அதில் 16 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை உயிருடன் மீட்க வேண்டும் என்ற உறுதியுடன் பணிகளை தொடர்கிறோம் என தெரிவித்துள்ளது.
விமானம் விபத்துக்குள் சிக்கிய போது வானிலை சீராகவே இருந்துள்ளது, எனினும் இந்த விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் நோக்கி பயணத்தை ஆரம்பித்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானமொன்று ஈரானின் தெஹரான் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
யு.எல்.563 என்ற விமானம் இவ்வாறு அவரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட இருதய நோய் காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
நோயாளி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின் விமானம் மீண்டும் பாரிஸ் நகர் நோக்கிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலுமுள்ள சிறைக்கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் சுமார் 491 சிறைக்கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 கைதிகள் இன்று புதன்கிழமை விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
நாடுபூராகவும் சிறு குற்றங்கள் புரிந்தவர்கள், தண்டப்பணம் செலுத்த முடியாதவர்கள் என்ற அடிப்படையில் கைதிகள் விடுதலைச் செய்யப்படும் நிலையில் வவுயியாவிலிருந்தும் 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் விடுவிக்கப்பட்ட கைதிகளை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்ததுடன், வெளியில் சென்று நல்ல பிரஜைகளாக வாழவேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர்.
மாத்தறையில் இருந்து வவுனியாவுக்கு சென்ற “ரஜரட்ட ரெஜின” புகையிரதத்தில் கெப் ரக வாகனம் ஒன்று மோதியதால் அதில் பயணித்த நான்கு பேர் பலியாகியதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் ராகம பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. புகையிரதம் பயணித்துக்கொண்ருக்கையில் குறித்த வாகனம் கடவையை கடக்க முற்பட்டபோதே அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக, பிரதான புகையிரத பாதையினூடான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
படுகாயமடைந்தோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்கள் இராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவில் உப்பை ஊட்டி மகனை கொன்ற தாய்க்கு 25 வருடங்கள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள கென்டக் நகரில் வசித்து வரும் லேசி பியர்ஸ் (27) என்ற பெண்மணி, தனது 5 வயது மகனை கொல்வதற்கு பல வழிகளை இணையதளத்தில் தேடியுள்ளார். இறுதியில், உணவில் கலக்கும் உப்பை தொடர்ச்சியாக அதிக அளவு கொடுத்து வந்தால் மரணம் ஏற்படும் என்பதை தெரிந்துகொண்டு, தனது மகனுக்கு தினமும் அதிக அளவில் உப்பை கொடுத்து வந்துள்ளார்.
பொலிசிடம் சிக்கக்கூடாது என்பதற்காக, தனது மகனின் உடல்நிலை மோசமாகி வருகிறது என்று, அடிக்கடி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவந்துள்ளார்.
இதற்கிடையில், தனது மகனின் உடல்நிலை மோசமானபோது, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஓவ்வொரு முறை குழந்தையை பரிசோதித்தபோது, உடலில் சோடியத்தின் அளவு கூடிக்கொண்டே சென்றதை கண்டுபிடித்த மருத்துவர்கள் தாயின் மீது சந்தேகப்பட்டனர்.
இந்நிலையில், டுவிட்டரில் ‘எனது செல்ல மகன் இன்று 23 வது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான், விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்துக்கொள்ளுங்கள் என்று பதிவை செய்துவிட்டு மருத்துவமனை சென்றுள்ளார்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் மீண்டும் சோடியத்தின் அளவு மோசமாக கூடியிருந்ததை கண்டுபிடித்தனர். மேலும், குழந்தையின் மூளையில் வீக்கம் ஏற்பட்டதால் மூன்று நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை இறந்தது.
மேலும் மருத்துவ பரிசோதனையில், மகனின் வயிற்றிற்குள் பைப் வழியாக அதிக அளவு உப்பை செலுத்திவிட்டு, அங்கிருந்த அனைத்து தடையங்களையும் அழித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அந்த பெண்ணின் கைப்பேசியை பரிசோதித்ததில், சந்தேகப்பட முடியாத அளவில் கொலை செய்வது எப்படி என இணையதளத்தில் தேடியிருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர். அந்த பெண்ணிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில், தன் மகனை கொன்றதை ஒப்புக்கொண்டார்.
நியூயோர்க் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் அந்த பெண்ணிற்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர், தன் மகனை திட்டம் போட்டு கொன்றுவிட்டு நாடகமாடிய குற்றத்திற்காக அதிகபட்சம் 25 வருடங்கள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்னும் சில தினங்களில் வழங்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் 8 மாத கர்ப்பிணியான தாயையும், தந்தையையும் 3 வயது மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூமெக்சிக்கோவில் நடந்த இந்த சம்பவத்தில், 3 வயது மகன் தனது தாயின் கைப்பையில் பாடல்களை கேட்க ஐபாட் ஐ தேடியுள்ளான்
ஆனால் கையில் துப்பாக்கி கிடைத்ததும் விளையாட்டாக தந்தையை நோக்கி சுட்டுள்ளான். இதில் தந்தையின் பின்புறத்தில் நுழைந்த குண்டு இடுப்பு வழியாக வெளியேறி கர்ப்பிணி தாயின் கையை சுட்டது.
தற்போது குண்டடிப்பட்ட பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்திற்கு காரணமான துப்பாக்கியை கையகப்படுத்திய பொலிசார், அசம்பாவிதத்தில் உயிர்சேதம் எதுவும் நிகழவில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த சிறுவனும் அவனது 2 வயது தங்கையும் 48 மணி நேரத்திற்கு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் குடும்ப நல துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், பெற்றோர்களின் கவனக்குறைவால் தான் இந்த விபத்து நடந்துள்ளது என்றும் துப்பாக்கியை சொந்தமாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள், அது குழந்தைகளிடம் அகப்படாதவாறு பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இளம்பெண் ஒருவர் ”வாருங்கள், வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள்” என்று அழைப்பு விடுக்கும் காணொளி ஒன்று இணையதளத்தில் வேகமாக பரவிவருகிறது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. கடந்த 13 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் தினமும் சுமார் 57க்கும் மேற்பட்ட பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மாதுரி தேசாய் என்ற இளம்பெண் பேசும் காணொளி ஒன்று கடந்த மாதம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் பேசியுள்ள அவர், வாருங்கள் வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள். பேருந்து நிலையம், கோவில், பஜாரில் பலாத்காரம் செய்யுங்கள். நான் தெருவில் தனியாக செல்கிறேன்.
அது எப்படி உங்கள் சகோதரி இறுக்கமாக ஆடை அணியலாம். உங்களின் கோபம், விரக்தியை பிற பெண்களிடம் காட்டுகிறீர்கள். வாருங்கள், வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள்.
நான் உங்கள் டாக்சியில் வருகிறேன் என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்களை பலாத்காரம் செய்துவிட்டு அதை நியாயப்படுத்தும் இந்திய ஆண்களை மாதுரி கடுமையாக விமர்சித்துள்ள இந்த காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல தமிழ் திரைப்பட நடிகை ரம்பாவின் ஐதராபாத் வீட்டில் 4.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நடிகை ரம்பாவிற்கு சென்னை மற்றும் ஐதராபாத்தில் வீடுகள் உள்ளன.
இந்நிலையில் அவரது ஐதராபாத் வீட்டில் உள்ள பீரோவில் பூட்டி வைக்கப்பட்டு இருந்த நகைகள் மாயமாகியுள்ளது. இந்த வீட்டில் வசிக்கும் ரம்பாவின் அண்ணன் வெளியே சென்று இருந்த போது இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது குறித்து பொலிசில் புகார் மனு அளித்துள்ள ரம்பா சகோதரர் சீனிவாஸ், வீட்டில் இருந்த எனது தங்கை ரம்பாவின் நகைகளை காணவில்லை. கொள்ளை போன நகைகளில் மதிப்பு 4.5 கோடி ஆகும்.
இந்த நகைகளை என் மனைவி பல்லவி குடும்பத்தினர் திருடி இருக்கலாம் என்று நினைக்கிறேன். பல்லவியுடனும், அவரது குடும்பத்தினருடனும் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது. ஏற்கனவே அவர்கள் ரம்பா மீதும் என் மீதும் பொய் புகார் அளித்து என்னிடம் 1 கோடி கேட்டு வந்தனர்.
இந்நிலையில் ரம்பாவின் நகைகள் காணாமல் போய் உள்ளதால் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.