இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன் உற்பத்திகளுக்கு எதிராக விதித்துள்ள தடையை நீக்க, சில மாதங்களாகும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐரோப்பிய ஒன்றிய சமுத்திரங்கள் மற்றும் மீன்பிடி தொடர்பான ஆணையாளருடன் அண்மையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது மீன் தயாரிப்புகளுக்கான தடையை நீக்க இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டியுள்ளது. எனினும் சட்டவிரோத மீன்பிடியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை இந்த தடை நீக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு – செலவுத்திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் உரையுடன் குறித்த வரவு – செலவுத் திட்டம் முன்மொழியப்படவுள்ளது.
இவ் வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு உட்பட மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் உள்ளடக்கப்படவிருப்பதால் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இவ் வரவ செலவுத் திட்டத்தை எதிர்பார்த்துள்ளனர்.
வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதிக்கு அண்மையில் வீதி அபிவிருத்திக்கென நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் கொண்டு வந்து கொட்டி குவிக்கப்பட்டிருக்கும் கற்குவியல்களால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
வியாபரத்தலங்கள், தனியார் கல்விநிலையங்கள் அதிகளவில் அமைந்துள்ள இந்த புகையிரத நிலையவீதியில் கொண்டு வந்து போடப்பட்டிருக்கும் கற்குவியல்களினால் மிகவும் நெருக்கடி மிக்க போக்குவரத்துக்கு பாதையாக வைரவபுளியங்குளம் மாறியுள்ளதாக அதனூடாக போக்குவரத்து செய்யும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இப் புகையிரத நிலையவீதி ஊடாக பகலில் ஓரளவு பயணம் செய்யகூடியதாக இருந்தாலும் ஒரே நேரத்தில் எதிரும் புதிருமாக வாகனங்கள் செல்வதற்கு சிரமமாகவே உள்ளது. இரவுவேளைகளில் சொல்லவே தேவையில்லை. வயதுமுதிர்ந்தவர்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு சென்று துவிச்சக்கர வண்டிகளில் வீடு திரும்பும் மாணவ மாணவியரும் கடும் சிரமங்களுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு வியாபாரநிலையங்கள் மற்றும் அங்குள்ள குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு முன்னால் கிடக்கும் இக் கற்குவியல்களால் தங்களுடைய வாகனங்கள் மற்றும் வியாபாரத்தலங்களுகுரிய பொருட்களை ஏற்றி இறக்குவதிலும் சிரமாக உள்ளதாக அறியமுடிகிறது.
தங்கள் வீடுகளுக்கு வாகனங்களில் வரும் உறவினர்கள் வாகனங்களை தூர இடத்தில் அல்லது ஒழுங்கைகளுக்குள் நிறுத்திவிட்டு வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுவதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியாவின் மிக முக்கியமான இந்த புகையிரதநிலைய வீதிஎப்போது திருத்தப்படும்? பொதுமக்கள் எப்போது நிம்மதியாக போக்குவரத்து செய்யமுடியும்? மாணவர்கள் எப்போது நிம்மதியாக பயணிக்க முடியும்? வியாபாரிகள் எப்போது தங்களது நடவடிக்கைகள் இலகுபடுத்தப்படும்? குடியிருப்பாளர்கள் எப்போது தங்களது வீட்டு வாசலில் வாகனத்தை நிறுத்தமுடியும்? வீதி அபிவிருத்தி அதிகார சபை, நகரசபை மற்றும் வீதிப்போக்குவரதுடன் தொடர்புபட்ட நிறுவனங்கள் தூக்கத்திலா என பல்வேறுபட்டகேள்விகளை எழுப்பியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வவுனியா நகரசபையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளே இதனை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறோம்.
உடனடியாக புகையிரத நிலைய வீதியை மக்களுக்கு பாதுகாப்பான முறையில் போக்குவரத்து செய்யகூடிய வகையில் மாற்று ஏற்பாடு ஒன்றை செய்யும்படியும். அல்லது விரைவாக இந்த வீதியை புனரமைப்பு செய்யுமாறும் அப்பிரதேசத்தில் குடியிருக்கும் மற்றும் வியாபாரம் செய்யும் அத்துடன் வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள் சார்பிலும் இக்கோரிக்கையை உங்களிடம் விடுக்கின்றோம்.
வவுனியா தீ விபத்தில் காயமடைந்திருந்த கணவனும் சிகிச்சை பலனின்றி நேற்று(28.01) மரணமானார். வவுனியா, உக்கிளாங்குளத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தீ விபத்தில் கணவனும் மனைவியும் சிக்கி காயமடைந்தனர்.
வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் கஜேந்திரன் சுதாஜினி (28) நேற்று முன்தினம் மரணமானார். இவரின் கணவரான பாலச்சந்திரன் கஜேந்திரன் (40) என்பவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பயனளிக்காமல் அவர் நேற்று மாலை மரணமானார் என தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்கச் சாமியார் என்றழைக்கப்படும் கண்டி, கால்தென்ன காமினி ஆனந்த என்ற பிரபல சாமியார், வருமான வரி கட்டாத காரணத்தால் நீதிமன்ற சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் ஒரு மணி நேரத்தில் அபராதமாக சுமார் 48 இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளார்.
அம்பிட்டிய கால்தென்ன ஸ்ரீ பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்தல் பிரபல சாமியராக இருக்கும் இவர், காளி தேவியின் அருள் கொண்டு அற்புதங்கள் மேற்கொள்பவராக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
இதன் காரணமான இவரது தேவாலயத்திற்குச் சென்று அனேகர் தங்கமாக தமது காணிக்கைகளைச் செலுத்துவர். இவரது உடலில் சுமார் 20ற்கும் மேற்பட்ட கிலோ எடைகொண்ட தங்கம் அணிந்து கொண்டு, சர்வசாதாரணமாக வலம் வருகிறார். இந்நிலையில், இவர் பல வருடங்களாக வருமான வரி செலுத்த வில்லை என தொடரப்பட்ட வழக்கில் கண்டி நீதவான் சிரிநீத் விஜேசேக்கர ரூபா 488 6840 அபராதத்தை விதித்தார்.
இருப்பினும், சுமார் ஒரு மணி நேரத்தில் அப்பணம்முழுவதும் செலுத்தப்பட்டு அவர் விடுதலையாகியுள்ளார்.
வவுனியாவில் இளைஞன் ஒருவரைத் தாக்கி மோசடியான முறையில் அவரிடம் கடிதம் பெற்ற இளைஞர்கள் மூவரை தாம் கைதுசெய்து நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைத்துள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்..
தன்னைத் தொலைபேசியில் அழைத்த மூவர் மறைவான இடத்தில் வைத்து தாக்கி மோசடியான முறையில் கடிதம் பெற்றதுடன், தனது மோட்டார் சைக்கிளையும் பெற்றுக்கொண்டனர் என்று பாதிக்கப்பட்ட இளைஞர் கடந்த சனிக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இது தொடர்பாக வவுனியா, குருமன்காடு பகுதியில் உடல் வலுவூட்டல் நிலையம் ஒன்றை நடத்தும் நபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இவர்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாம் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்த யாஸ்மின் ஏலேபி (40) என்ற பெண்ணே இவ்வாறு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
எத்தனையோ வருடங்களாக தேடியும், தனக்கு ஏற்ற காதலன் கிடைக்காத விரக்தியில் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த திருமணத்தில் அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த சில வாரங்களாக என் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்த உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்றும், இந்த திருமணத்தின் போது எனக்கு கிடைத்த அன்பும், ஆதரவினால் மகிழ்ச்சியாக உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா அருகேவுள்ள ஜாவா கடலில் விழுந்து மூழ்கிய ஏர்ஏசியா விமானத்தின் பாகங்களை தேடும் பணியை நிறுத்திக் கொள்வதாக இந்தோனேசிய ராணுவம் அறிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து கடந்த மாதம் 28ம் திகதி, 162 பேருடன் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர்ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்துள்ளது. இதையடுத்து கடலில் விழுந்த விமான பாகங்கள், பயணிகளின் உடல்களை தேடும் பணி தொடங்கியது.
மீட்பு பணியில் ஈடுபட்ட இந்தோனேசிய ராணுவம் விமானத்தின் கருப்பு பெட்டிகள், வால் பகுதி உள்ளிட்ட பல பாகங்களை மீட்டுள்ளன.
விமானத்தில் பயணம் செய்த 162 பேரில் 70 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை. இந் நிலையில் ஏர்ஏசியா விமானத்தின் பாகங்களை தேடும் பணியை நிறுத்திக் கொள்வதாக இந்தோனேசிய ராணுவம் அறிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் பயணிகளின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்ட 81 கடற்படை வீரர்களில் பலர் கடலுக்கு அடியில் சென்று பாகங்கள் மற்றும் உடல்களை தேடியதால் 17 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் ஜகர்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளனர் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை விந்தியா, தற்போது அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக உள்ளார். 2011 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சிக்காக பிரசாரம் செய்தார்.
இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நான்கு நாட்களாக தினமும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று மாலை அவரது உடல் நிலை திடீரென மோசம் அடைந்து, மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது கணையம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
மூன்று நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் விடுதியில் தங்கிப்படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் உள்ள லிங்ககடா உறைவிடப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்த அந்த மாணவி, அதே வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது அறையில் அந்தப் பெண் பிரசவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அலட்சியப்போக்கின் காரணமாக பள்ளியின் தலைமையாசிரியை, இரு ஒப்பந்த ஆசிரியைகள், பள்ளி மருந்தக செவிலியர் ஆகியோரை பணி நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியானது கலப்பு உணர்வுகளுடன் புதிய கலாசாரத்தை நோக்கி செல்ல வேண்டிய பதவி என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இதனடிப்படையில் செயற்படும் போது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் என கொழும்பு சேர் மார்க்ஸ் பெர்ணாந்து மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் அரசியல் பாத்திரமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூலமே உருவாகினேன். எனது உடலில் ஓடுவது அந்த இரத்தம். இதனால், கட்சியை பாதுகாப்பதற்காகவே நான் முன்னுரிமை வழங்குவேன். கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பதால், கட்சியினை மேலும் வலுப்படுத்த அது உதவியாக அமையும். ஜனாதிபதி கட்சியின் தலைமை பதவியை ஏற்று இரண்டாக பிளவுபடுவதை தடுத்து காப்பாற்றினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதே எமது நோக்கம். இதற்காக அனைவரும் பொறுமையாக செயற்பட வேண்டும்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெரும் சேவைகளை செய்துள்ளார். அதனையும் இந்த சந்தர்ப்பத்தில் கட்டாயமாக நினைவுக்கூற வேண்டும். நாங்கள் அங்கம் வகித்த அரசாங்கத்தில் குறைபாடுகள் பல இருந்தன என்பதை ஏற்றுக்கொள்கிறோம்´ என எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று (27.01) இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் தீயில் எரிந்த பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் காயமடைந்த நிலையில் அவரது கணவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
வவுனியா உக்குளாங்குளத்தில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தினால் கணவனும் மனைவியும் பலத்த தீக் காயங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இன் நிலையில் சிகிச்சை பலனின்றி மனைவி மரணமடைந்துள்ளார்.
வவுனியா உக்கிளாங்குளத்தைச் சோந்த கஜேந்திரன் சுதாஜினி (28) என்ற பெண்ணே மரமடைந்துள்ளதுடன் அவரது கணவனான பாலசந்திரன் கஜேந்திரன் (40) என்பவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை மரணமடைந்த குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து அண்மையில் வந்தவர் என தெரியவருகின்றது. இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் 45 வது பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் சட்டவிரோத நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட 43 வது பிரதம நீதியரசர் இன்று மீண்டும் அந்த பதவியில் கடமையாற்றியதுடன் ஒருநாளில் ஓய்வுபெறுகிறார்.
44 வது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட மொஹான் பீரிஸ் இன்னும் பதவியை ராஜினாமா செய்யவில்லை. எனினும் அவரது நியமனம் சட்டவிரோதமானது என இலங்கையின் புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில், நாளைய தினம் புதிய பிரதம நீதியரசராக ஸ்ரீபவன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் சர்ச்சையான சூழ்நிலையில், அவர் பிரதம நீதியரசராக பதவியேற்பதில் தயக்கம் காட்டி வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையிலேயே பதவிப் பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சரத் பொன்சேகாவிடம் இருந்து பறிக்கப்பட்ட அனைத்து பதவிகள் பட்டங்களும் மீள அவருக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இராணுவத்தில் அவர் வகித்த முப்படைகளின் பிரதானி, இராணுவ தளபதி போன்ற பதவிகள் மற்றும் அவர் வசமிருந்து ஜெனரல் உள்ளிட்ட பட்டங்கள் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன இந்த தகவலை உறுதி செய்துள்ளன.
ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்தில் இருந்து விலகி ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்டதுடன் தேர்தல் தோல்வியின் பின் அவர் கைது செய்யப்பட்டார்.
வெள்ளைக் கொடி வழக்கு, ஹைகொப் வழக்கு போன்றவற்றில் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டார். மேலும் அவரது பதவி, பட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன.
இந்நிலையில் சரத் பொன்சேகா அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்த நிலையில் சரத் பொன்சேகா இழந்த அனைத்தும் இன்று மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா மகாறம்பைக்குளம் வீட்டுத்திட்டத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள தாய் சேய் நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று 28.01.2015 காலை 12 மணியளவில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா, வவுனியா மாவட்ட வைத்திய அதிகாரி லவன், மகாறம்பைக்குளம் பொலிஸ் தலைமை அதிகாரி ரணசிங்க மற்றும் கிராம உத்தியோகத்தர் கனகவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதற்கட்ட நிதியாக மகாறம்பைக்குளம் வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த திரு.பிள்ளைநாயகம் 100,000 ரூபாவினையும், வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த அன்ரன் 50,000 ரூபாவினையும் கிராம அபிவித்திச் சங்கத்திடம் கையளித்தனர்.
இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் 43வது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசராக இருக்க காணப்பட்ட அனைத்து தடைகளும் நீக்கப்பட்டுள்ளன.
அதன்படி அவர் மீண்டும் பிரதம நீதியரசராக செயற்படுவதாகவும் நாளை (29.01) ஓய்வு பெறுவார் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.
அதன்படி புதிய பிரதம நீதியரசராக கே.ஸ்ரீபவன் நியமிக்கப்படலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஷிராணி பண்டாரநாயக்க மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இன்று 28ம் திகதி தொடர்ந்தும் கடமையை பொறுப்பேற்கலாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே அவர் இன்று நீதிமன்றம் சென்று கடமைகளை பொறுப்பேற்றதாகவும் அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.