கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த வீதிகள் பலவும் நேற்று முதல் பொதுமக்கள் போக்குவரத்திற்காக திறந்துவிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதியின் உத்தரவிற்கு இணங்க பொதுமக்கள் பாதுகாப்பு, கிறிஸ்தவ மதவிவகாரம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் திறந்துவைக்கப்பட்டது.
இதற்கு முன் பஸ், லொறி, பாரவூர்திகளுக்காக மூடப்பட்டிருந்த பௌத்தாலோக மாவத்தை, ஸ்ரான்லி விஜேசுந்தர மாவத்தையில் இருந்து தும்முல்ல சந்தி வரையான வீதிகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் இதுவரைகாலமும் முழுமையாக மூடப்பட்டிருந்த ஜனாதிபதி மாவத்தை, ஸ்ரீமத் பாரன் ஜயதிலக மாவத்தை, சதாம் வீதி, முதலிகே மாவத்தை வீதிகள் இலகுரக வாகனங்களுக்காக மாத்திரம் திறக்கப்பட்டுள்ளன. இவ்வீதியில் லொறி, பஸ், டிரக்டர், கொள்கலன்கள் பயணிக்க முடியாதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்
டீசல் விலை குறைவடைந்துள்ளதால் பஸ் கட்டணங்களை 7 வீதத்தால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவே தீர்மானமெடுக்க வேண்டுமெனவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை நுகேகொடையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே கெமுனு விஜேரட்ண இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் இந்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது; எரிபொருள் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் கட்டணங்களை 7 வீதத்தால் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதுடன் ஆரம்பக் சட்டணம் ஒரு ரூபாவால் குறைப்பதற்கும் எதிர்பார்த்துள்ளோம். எவ்வாறாயினும் கட்டணங்களைக் குறைக்கும் நடவடிக்கைகளை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவே மேற்கொள்ள வேண்டும். இதன்படி எதிர்வரும் நாட்களில் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, 92 ஒக்ரன் பெற்றோல் 117 ரூபாவாகவும் 95 ஒக்ரன் பெற்றோல் 128 ரூபாவாகவும் டீசல் 95 ரூபாவாகவும் மண்ணெண்ணெய் 65 ரூபாவாகவும் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பஸ் இரயில் போக்குவரத்து கட்டணங்ககளை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் செய்திகள் தெரிவிகின்றன .
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு முழுமையான மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே ஜனாதிபதி சிறிசேன இந்த மன்னிப்பை வழங்கியிருப்பதாக ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், சரத் பொன்சேகா இழந்திருந்த சகல சிறப்புரிமைகளையும் எந்தச் சட்டச் சிக்கலுமின்றிப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டிருந்த சரத் பொன்சேகா, அத்தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து இராணுவச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நீதிமன்ற விசாரணைகளின் இறுதியில் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு அமைய அவரது பதவி நிலை மற்றும் பதக்கங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாது, அவரது பிரஜாவுரிமை மற்றும் ஓய்வூதியம் என்பனவும் பறிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இராணுவ சேவையில் இருந்து ஓய்வுபெறும்போது சரத் பொன்சேகா ஜெனரல் பதவி நிலையுடன் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாகவும் பதவி வகித்திருந்தார்.
சிவன் முதியோர் இல்ல புதியகட்டிட தொகுதியின் திறப்பு விழா இன்று 21/01/2014 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் எல்லப்பர் மருதங்குளத்தில் சிவன் முதியோர்இல்லத்தில்அமைக்கபட்ட புதிய கட்டிடதொகுதி நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திறந்து வைத்து அருளாசி வழங்கிய நிகழ்வு இடம்பெற்றது .வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் அமைக்கபட்ட இந்த முதியோர் இல்லத்தில் தற்போது 180 க்கு மேற்பட்ட் முதியவர்கள் வசித்துவருகின்றனர்.
மேற்படி நிகழ்வு மங்கல தவில் நாதஸ்வர கலைஞர்கள் மற்றும் அருளகம் சிறுவர் இல்லத்தை சேர்ந்த சிறுவர் சிறுமியர் இருபுறமும் நின்று விழா அதிதியான நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமா சாரிய சுவாமிகள் அவர்களை வரவேற்று பின்னர் சுவாமிகள் புதிய கட்டிடத்துக்கு முன்னால் சைவ சமய முறைப்படி நந்தி கோடியை ஏற்றி தொடர்ந்து நாடாவினை வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் . அதனை தொடந்து மங்கல விளக்கினை சுவாமிகள் ஏற்றி வைக்க தொடர்ந்து அந்தணர் பெருமக்கள் மற்றும் வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திர்கொவில் அறங்காவலர் சபையின் தலைவர் சபாநாதன் மற்றும் செயலாளர் ஆ. நவரட்னராஜா நயினை நாகபூசணி அம்பாள் தேவஸ்தான அறங்காவலர் சபை தலைவர் திரு .ஆறுமுகம் தியாகராஜா மற்றும் மாகாணசபை உறுப்பினர் லிங்கநாதன் மரணவிசாரணை அதிகாரி கிசோர் ஆகியோரும் ஏற்றிவைத்தனர் . தொடந்து கோவிலின் அறங்காவலர்சபை உறுப்பினரான திரு ஆ.உமாதேவன் அவர்களால் பஞ்ச புராணம் ஓதப்பட்டு அருளகம் சிறுவர் இல்லத்தை சேர்ந்த சிறுமிகளின் வரவேற்பு நடனத்துடன் இன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகின .
வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் சபையின் செயலாளர் திரு ஆ நவரட்ணராஜா அவர்களால் வரவேற்புரையையும் தலைமையுரையும் நிகழ்த்தபட்டது .
தலைமையுரையில் வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேச்வர் ஆலயத்தின் அறப்பணி மற்றும் சமூகப்பணி என்பன தொடர்பாகவும் தாம் சிறுவர்களை பராமரிப்பதற்கு அருளகம் என்னும் சிறுவர் இல்லத்தையும்முதியவர்களை பேணுவதற்குசிவன் முதியோர் இல்லம் என்னும் அமைப்பையும் அதேபோல் கால்நடைகள் பசுக்கள் போன்றவற்றை பராமரிப்பதர்ற்கு பசுவனம் என்னும் கால்நடை பராமரிப்பு அமைப்பையும் உருவாக்கி அதனை திறம் பட நடாத்தி வருவதாக குறிப்பிடிருந்தார். சிவன்கோவில் ஒன்றினால் அல்லது கோவில்களினால் செய்யகூடிய அறப்பணி அத்துடன் இணைந்து இந்த சமூக பணியையும் தாம் செய்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர் சிவன் முதியோர் இல்லத்தின தோற்றம் பற்றியும் தந்து தலைமையுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
எமது சமுதாயத்தில் ஆதரவற்று நிர்க்கதியாகவுள்ள முதியோர்களைப் பாதுகாக்க வேண்டியது சமூகக்கடமை. அந்த உணர்வோடு முதியோர்களுக்கான ஓர் இல்லம் அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் ஆலய நிர்வாகசபையினருக்கு இருந்து வந்தாலும் 2௦௦9 இல் நாட்டில் இடம்பெற்ற பிரச்சினைகளால் பாதிப்புற்று கைவிடப்பட்ட நிர்க்கதியான முதியோர்களின் வருகையால் அந்த தேவை, எண்ணம் உடனேயே பூர்த்தி செய்யப்பட வேண்டியதாயிற்று.
ஏற்கனவே 2௦௦1 புரட்டாதி மாதத்தில் ஆலயத்தால் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வந்த ஆண்,பெண் சிறுவர் இல்லங்களால் ஆலயத்திற்கு நற்பெயரும், சமுதாய மதிப்பும் ஏற்பட்டிருந்தமையால் 2௦௦9 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்செயலால் பாதிக்கப்பட்டு ஆதரிப்பார் யாருமின்றி கைவிடப்பட்ட,சுமார் 250 முதியவர்களை வன்னியின் பாதுகாப்பு படை அதிகாரிகள் அழைத்து வந்து சிவன்கோவிலில் ஒப்படைத்தனர். அதனால் முதியோர் இல்லத்தை உடனடியாக ஆரம்பிக்கவேண்டிய தேவை உருவாயிற்று. அதன் காரணமாக வவுனியா சமணங்குளம் அ.த.க. பாடசாலையில் அம்முதியோர்களைத் தங்கவைத்து சிவனாலயம் பாதுகாத்து, பராமரித்து வந்தது.
தொடர்ந்து அரசாங்கம் இம் முதியோர் இல்லத்திற்கான தேவையை உணர்ந்து வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் வழங்கிய காணியில் தற்காலிகமான குடில்கள் அமைக்கப்பட்டு ஏ’ற்கனவே இருந்த முதியவர்களுடன் பிள்ளைகளால் உறவுகளால் கைவிடப்பட்ட முதியோர்களையும் தங்கவைத்து அவர்களுடைய தேவைகள்,படுக்கை வசதிகள் முக்கியமாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு பேணிப் போஷிக்கப்பட்டனர். இதற்கு அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகளும் பங்களிப்பும் தூண்களாகி உதவின.
ஆனால் காலஞசெல்லச் செல்ல நிரந்தரக் கட்டிடம் அமைக்க வேண்டிய தேவை அதிகரித்ததனால் வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் ஆலய நிர்வாகசபையினால் ஆலய நிதியிலிருந்து புதிய நிரந்தரக் கட்டிடம் முதியோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பெருந்தொகை பணச்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள கட்டிடத் தொகுதியில் கீழ்த்தளம் பூரணமாகத் தற்போது அமைக்கப்பட்துள்ளது. பெருந்தொகை பண செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமா சாரிய சுவாமி அவர்களால் ஆசியுரை வழங்கப்பட்டது. சுவாமிகள் தனது உரையில் முதியோர்களை பேணிபாதுகாத்தலின் அவசியம் பற்றியும் ஒவ்வொருவருக்கும் முதியோர்கள் பெரியோர்களது ஆசிர்வாதம் கட்டாயம் அவசியம் எனவும் மேற்படி திருகோவிலின் செயல்பாடுகளும் அறப்பணி மற்றும் சமூகப்பணி தொடர்பாக தான் இதுவரை வேறெங்கிலும் கண்டதுமில்லை.கோவில்குளம் சிவன் ஆலயம் எண்கள் சைவ பெருமக்களின் வாழ்க்கை நெறிக்கு முன்னுதாரணமாக திகழ்வதை எண்ணி தான் பெருமிதமடைவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் ஆலயத்தின் சிறுவர் முதியோர் மற்றும்பசுக்கள் முதலியவற்றை பாராமரிக்கும் செயல்பாட்டை காவோலைக்கும் குருத்தோலைக்கும் வாழ வழிவகை செய்வதோடு நின்று விடாமல் கால்நடைகளையும் பேணுகின்ற இச்செயலானது மிகவும் உன்னதமானது என்றும் இலங்கையிலே இங்குதான் இவ்வளவு இடர்கள் கஷ்டங்கள் சிரமங்களை கண்டு துவண்டுவிடாது தொடர்ந்து இந்த ஆலய அறங்காவலர் சபையினர் சமூக பணியில் தமக்கென ஒரு பாதையில் ஒற்றுமையுடன் செயல்படுவதாகவும் சில காரியங்களை சொல்வது எளிது செயல்படுத்துவது மிக கடினமானது எனவும் இருந்த போதும் வவுனியா கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேச்வர் திருகோவிலின் இப்பணி தொடர தானும் கடவுளுடைய அனுக்கிரகம் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் பிரார்த்திப்பதாக தனது ஆசியுரையை வழங்கினார் .தொடந்து சுவாமி அவர்கள் சிவன் முதியோர் இல்லத்துக்கு ஒரு வாழ்த்து பாவினை அறங்காவலர் சபை தலைவரான சபாநாதனிடம் வழங்கினார் ..
அதனை தொடர்ந்து அருளகம் சிறுவர் இல்லத்து சிறுவர் சிறுமியரதும் முதியோர் இல்லத்து முதியவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன . அத்தோடு மாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் மற்றும் முதியோர் தொடர்பான நலன்களுக்கு பொறுப்பான சமூக சேவைகள் அமைச்சின் அலுவலர் உரையும் திரு அகளங்கன் அவர்களது உரையும் தொடர்ந்து சட்டத்தரணி தயாபரனின் உரையும் அத்துடன் கிறிஸ்தவ பாதிரியார் அவர்களது உரையும் இடம்பெற்றன .
இறுதியில் அறங்காவலர் சபையை சேர்ந்த ஆ.உமாதேவன் அவர்களால் நன்றியுரை வழங்கபட்டது .அவர் தனது நன்றியுரையில் எங்கோ பிறந்த நாம் வியாபர மற்றும் தொழில் நிமித்தம் இங்கு வந்துள்ள நாம் இவ்வாறான அறப்பணி மற்றும் சமூகப்பணியில் இணைந்து செயலாற்றுவதற்கு முற் பிறப்பில் பெரும் புண்ணியம் செய்தமையினாலோதானோ தெரியவில்லை இப்பிறவியிலும் இந்த மகத்தான பணிய யாரோ ஆட்டுவிக்கின்றார் நாம் செயல்படுகிறோம் நாம் வெறும் கருவிதான் எல்லாம் அவன் செயல் ஒருபொல்லாப்பும் இல்லை என செல்லப்பா சுவாமிகளின் கருத்துகளையும் தனது நன்றியுரையுடன் பகிர்ந்து கொண்டார். அதனை தொடர்ந்து அனைவருக்கும் மதியபோசனம் வழங்கபட்டது .
இன்றைய சிவன் முதியோர் இல்ல புதிய கட்டிட திறப்பு விழாவில் மாகாண சபை மற்றும் நகர சபை சுகாதார சேவை கிராம சேவை உத்தியோகத்தர்கள் சமூக சேவை அமைப்புக்களின் பிரதி நிதிகள் சிறுவர் முதியவர் மற்றும் பொதுமக்கள் சிவன்கோவில் பக்த அடியார்கள் தொண்டர்கள் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் வவுனியா நகரை அண்டிய கோவிகளின் அந்தணர்பெருமக்கள் அறங்காவலர்கள் தொண்டர்கள் அத்துடன் வானொலி தொலைகாட்சி பத்திரிகை மற்றும் செய்தி இணையதளங்களை சேர்ந்த ஊடகவியலாளர் என பெருவளவானோர் கலந்து கொண்டனர் .
திருமதி மைதிலி தயாபரன் எழுதிய “விஞ்சிடுமோ விஞ்ஞானம்” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை (20.01.2015) செவ்வாய்க்கிழமை பகல் 1.00 மணியளவில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125வது ஆண்டை முன்னிட்டு பழையமாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இன் நிகழ்விற்கு தமிழறிஞர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமைதாங்கவுள்ளார்.
பிரதம விருந்தினராக அருட்சகோதரி திரேசா சில்வா (அதிபர் -இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி) அவர்களும் சிறப்பு விருந்தினராக செல்வி மேரி அன்றோனியா ஸ்ரனிஸ்லாஸ் (முன்னாள் பிரதி அதிபர் – இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இன் நிகழ்வில் கலை ஆர்வலர்கள், பழையமாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.
வவுனியா, புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் இன்று(19.01) காலை குளவி கொட்டியதில் பாதிப்படைந்த 7 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது..
வவுனியா, புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் மைதானத்தில் விளையாட்டு பயிற்சிகள் இடம்பெற்றது. இதன்போது பாண்ட் வாத்திய அணிவகுப்பு பயிற்சியும் இடம்பெற்றுள்ளது. பாண்ட் வாத்திய அதிர்வால் பாடசாலை மைதானத்தின் அருகில் உள்ள கட்டடத்தின் கூரையில் இருந்த குளவிகள் பறந்து வந்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் தாக்கியுள்ளன.
இதன் காரணமாக நான்கு ஆசிரியர்களும் மூன்று மாணவர்களும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்.
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா இன்றைய தினம் (19.01) காலை 09.00 மணியளவில் ஆரம்ப பாடசாலை அதிபர் திருமதி.கி.நந்தபாலன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா நகரசபை முன்னாள் உப நகரபிதாவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் கோயில்குளம் இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான கௌரவ சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வலயக்கல்வி பணிமனையை சேர்ந்த திருமதி N.கிரேனியர், ஆரம்ப பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.சு.தவபாலன், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் செல்வி.உமா இராசையா, பிரதி அதிபர் திருமதி.க.பாக்கியநாதன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
கால் கோள் விழா நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் சமூக ஆர்வலர் திரு.கண்ணதாசன், கோயில்குளம் இளைஞர் கழகத்தின் சஞ்சீ, நிகேதன், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்ய உத்தரவிடுமாறு வலியுறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சாதாரண வாழ்க்கை வாழ்ந்துவரும் நிலையில், குமரன் பத்மநாதன் எவ்வித புனர்வாழ்வுக்கும் உள்ளாக்கப்படாமல், எவ்வித விசாரணைகளும் இன்றி கடந்த அரசாங்கம் அவரை சுதந்திரமாக நடமாட இடமளித்து உள்ளதாக ஏற்கெனவே மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வுனியா, வேப்பங்குளம் இந்து அன்பகம் சிறுவர் இல்லத்தில் சிவசுப்பிரமணிய சுவாமிகளின் 15ம் ஆண்டு நிகழ்விற்கான இசைப்பேளை வெளியீட்டு விழாவும் கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும் கடந்த 16.01.2015 அன்று இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன். கௌரவ விருந்தினர்களாக வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி ஆதிபர் உமா இராசையா, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், வரியிறுப்பாளர் சங்கத்தலைவர் செ.சந்திரகுமார், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், சர்வ மதத் தலைவர்கள், அந்தணர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சிவசுப்பிரமணிய சுவாமிகளின் 15ம் ஆண்டு நிகழ்விற்கான இசைப்பேளை வெளியீட்டு வைக்கப்பட்டதுடன், கலைஞர்கள் பலரும் கௌரவிக்கப்பட்டனர்.
கூகுள் நிறுவனம் உலகம் முழுக்க நடத்திய Google Business Group Success Stories போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற Mogo Reader (app) நிறுவனம் முதலிடத்தை வென்றுள்ளது.
உலகம் முழுக்க 56 நாடுகளைச் சேர்ந்த 317 போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
முன்னேற்றம் கண்டுவரும் தொழிநுட்ப உலகில் Mogo Reader (app) ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வாசகர்களுக்குத் தேவையான துறைசார்ந்த விடயங்களை ஒரே இடத்தில் கொண்டுசேர்க்கும் புதிய தொழிநுட்ப முறையுடன் இந்த Mogo Reader (app) திகழ்கிறது.
உதாரணமாக விளையாட்டுத் துறைசார்ந்த செய்திகளை நீங்கள் படிக்க விரும்பினால் தனித்தனியே இணையத்தளங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை. Mogo Reader (app) உங்கள் பாவனைக்கு வைத்திருந்தால் நீங்கள் தேடும் அனைத்து விளையாட்டு செய்திகளும் ஒரு இடத்தில் குவிவதோடு இலகுவாகவும் வாசித்துக் கொள்ள முடியும்.
தற்போது சிங்கள மொழியில் மாத்திரம் தேடுதல்களை மேற்கொள்ளக்கூடிய வசதி கொண்டுள்ள Mogo Reader (app) எதிர்வரும் காலங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலும் சேவையை விஸ்தரிக்க எதிர்பார்த்துள்ளதாக Mogo Reader (app) நிறுவுனர் விமுக்தி லியனகே தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திச் சென்ற இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொச்சி விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 13 லட்சம் பெறுமதியான 400 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது. ஆடைகளுக்குள் மறைத்து குறித்த பெண்கள் தங்கம் கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா கோவில்குளம் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் திருக்கோவிலினால் வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் சிவன் முதியோர் இல்லத்திற்காக புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடம் 21/01/2015 புதன்கிழமை காலை 8.20 தொடக்கம் 10.20 மணி வரையான சுபவேளையில் திறந்து வைக்கப்படுவது இறையருளால் கைகூடியுள்ளது.
இந்த “சிவன் முதியோர் இல்லத்தினை” 21.01.2015 புதன் கிழமை சுபவேளையில் யாழ்ப்பாணம், நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமா சாரிய சுவாமிகள் திறந்து வைத்து அருளாசி வழங்குவார்.
மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறுவவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் நிர்வாகத்தினர் அறியத்தருகின்றனர் .
மேற்படி நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள் யாவும் வவுனியா நெற் இணையத்தின் மூலம் உலகெங்கும் பரந்துவாழும் எம் இன உறவுகளை சென்று சேரும் வகையில் எம்மாலான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என்பதை வவுனியா நெற் நிர்வாகத்தினராகிய நாமும் வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.
சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்து தென் ஆபிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
இவர் 31 பந்துகளில் சதம் அடித்தார். இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர் கோரி அண்டர்சன் 36 பந்துகளில் சதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.
அவரின் உலகசாதனையை இன்று ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முறியடித்து விட்டார் டிவில்லியர்ஸ்.
டிவில்லியர்ஸ் வானவேடிக்கை காட்டிய இந்தச் சதத்தில் 11 ஆறு ஓட்டங்களும், 8 நான்கு ஓட்டங்களும் அடங்கும்.
இந்தப் போட்டியில், டிவில்லியர்ஸ் மொத்தம் 16 ஆறு ஓட்டங்களுடனும், 9 நான்கு ஓட்டங்களுடனும் 44 பந்துகளில் 149 ஓட்டங்கள் குவித்தார்.
இன்றைய போட்டியில் டிவில்லியர்ஸ் 16 பந்துகளில் அரைச் சதத்தைக் கடந்து அதிலும் புதிய உலக சாதனை படைத்து அசத்தினார்.
இதற்கு முன்னர் இலங்கை அணி வீரர் சனத் ஜெயசூரிய 1996ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 17 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுவே இதுவரை சாதனையாக இருந்தது.
மேலும் இன்றைய போட்டியில் மொத்தமாக 16 ஆறு ஓட்டங்களை அடித்ததன் மூலம் இந்திய வீரர் ரோஹித் ஷர்மாவினால் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய(16) ஆறு ஓட்டங்கள் என்ற சாதனையையும் சமப்படுத்தியுள்ளார்.
உலகக்கிண்ணப் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து அணியை நீக்க சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த மாதம் உலகக்கிண்ணப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து உலகக்கிண்ண அணியில் தெரிவு செய்யப்பட்ட வீரர்களில் பலர், பாரம்பரியமாக இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் அல்ல என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இங்கிலாந்து உலகக்கிண்ண அணிக்கு அணித்தலைவராக, அயர்லாந்தைச் சேர்ந்த இயன் மோர்கன் உள்ளார். இவரைத் தவிர, கேரி பலன்ஸ் (சிம்பாப்வே), பென் ஸ்டோக்ஸ் (நியூசிலாந்து) உள்ளிட்ட வீரர்கள் வேறு நாட்டினை சேர்ந்தவர்கள். அதே போல் வேகப்பந்து வீச்சாளர் ஜோர்டன், மேற்கிந்திய தீவுகளின் பார்படோசை சேர்ந்தவர்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் பழைய விதியை பயன்படுத்தி தான் மோர்கன் உள்ளிட்ட வீரர்களை தெரிவு செய்து, இங்கிலாந்து அணி பலன் அடைய முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.
அதாவது பழைய ஐ.சி.சி விதி 2010, 3.3ன் படி, தெரிவு செய்யப்படும் வீரர் அந்த நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். அதேநேரம், 7 ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட நாட்டில் குறைந்தது 183 நாட்கள் தங்கியிருந்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதேநேரம், புதிய விதிப்படி,சம்பந்தப்பட்ட நாட்டில் 6 வயது, 6 மாதத்தில் இருந்து வசிப்பவராக இருக்க வேண்டும். தொடர்ந்து 12 மாதத்துக்கு மேல், வேறு நாட்டில் தங்கியிருக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அணித்தலைவர் அலெஸ்டர் குக் தான், இதை வெளியில் கொண்டு வந்துள்ளார்.
இதையடுத்து, இந்தப் புகார் குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) ஏற்கனவே விசாரிக்கத் தொடங்கி விட்டது. இதில் இங்கிலாந்து அணியின் மீதான தவறு நிரூபிக்கப்பட்டால், உலகக்கிண்ணத் தொடரில் இருந்து அந்த அணி நீக்கப்படலாம் என்ற மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது.