முன்னாள் புலி உறுப்பினர்கள் 132 பேர் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு!!

ltte

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 132 பேர் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியுள்ளனர்.

கடந்த வருடம் நடைபெற்ற க. பொ. த. (உயர்தரப்) பரீட்சையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களும் தோற்றி இருந்தனர். இவர்களில் 132 பேர் தற்போது பல்கலைக்கழங்களுக்குத் தெரிவாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 12,081 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களில் 650 பேர் சிவில் பாதுகாப்புப் படையணியில் இணைந்து பணிபுரிவதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் ஜகத் விஜேதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி இல்லாததால் வழக்குகள் தாமதம்!!

vavunia_high_court

வவுனியா மேல் நீதிமன்றத்தில் கடமையாற்றிய மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்றதன் பின்னர், அந்த இடத்திற்கு வேறு ஒருவர் நியமிக்கப்படாத காரணத்தினால் கடந்த ஒன்றரை மாதங்களாக முக்கியமான வழக்குகள் விசாரணை செய்யப்படாமல் பிற்போடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான வழக்குகளும் குற்றவியல் வழக்குகளுமே மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுகின்றன.

இவற்றில் குறிப்பாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான வழக்குகள் பெரும் எண்ணிக்கையில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீதிபதி இல்லாத காரணத்தினால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்ச்சியாகப் பின்போடப்பட்டு வருவதாகவும் தாங்கள் நீதிமன்ற விசாரணைக்காக அலைய நேர்ந்துள்ளதாக சந்தேக நபர்களின் உறவினர்கள் கூறுகின்றார்கள்.

புதிய நீதிபதி ஒருவர் நியமிக்கப்படாத காரணத்தினால் வழக்கு விசாரணைகள் மட்டுமல்லாமல், மேல் நீதிமன்றத்தின் நிர்வாக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த வவுனியா சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சட்டத்தரணி கந்தசாமி தயாபரன், இது குறித்து பிரதம நீதியரசரின் கவனத்திற்கும் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

வவுனியா பூந்தோட்டத்தில் வெல்டிங் கடை தீயில் எரிந்து நாசம்!!

வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள கடையொன்று நேற்று (14.10) திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. பூந்தோட்டம் ஸ்ரீநகரில் உள்ள வெல்டிங் கடையொன்றே நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது.

இந்த வெல்டிங் கடையில் பணிபுரிபவர்கள் மதிய உணவுக்காக கடையைப் பூட்டிவிட்டுச் சென்ற போதே தீவிபத்து இடம்பெற்றது. கடை தீப்பற்றி எரிவதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக கடை உரிமையாளருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு விரைந்த பொலிஸாரும், கடையில் பணிபுரிபவர்களும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பல லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இந்தத் தீவிபத்துக்கு மின் ஒழுக்கே காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

50 51

 

வவுனியாவில் கடத்தப்பட்டு இரண்டரை மணி நேரத்தில் பொலிசாரால் மீட்கப்பட்ட சிறுமி!!

வவுனியா, பசார் வீதியில் வைத்து நேற்று முன்தினம் (13,10) இரண்டு வயது சிறுமி ஒருவர் கடத்தபட்டிருந்த நிலையில் விரைந்து செயற்பட்ட பொலிசார் இரண்டரை மணிநேரத்தில் குறித்த சிறுமியை மீட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலை குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜெயதிலக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் தர்சினி என்பவர் தனது இரண்டு வயது மகளுடன் வவுனியா பசார் வீதியில் உள்ள அடைவுக்கடை ஒன்றிற்கு மதியம் 11 மணியளவில் வந்துள்ளார். குறித்த பெண் அடைவுக் கடையில் நின்ற போது அவருடைய தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.

தான் லோஜி பேசுவதாகவும் குறித்த பெண்ணின் கணவருடைய நண்பி எனவும், நானும் தங்கள் கணவரின் நாடாகிய துபாயில் இருந்தே வந்துள்ளேன் எனவும் கூறியதுடன் எங்கு நிற்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.

அப்போது குறித்த பெண் தான் வவுனியா நகரில் நிற்கும் கடையின் பெயரைக் கூறியுள்ளார். உடனடியாக குறித்த பகுதிக்கு வந்த அந்தப் பெண் தன்னை அறிமுகப்படுத்தியதுடன் சிறுமியையும் தூக்கி வைத்திருந்துள்ளார். இதன் போது சிறுமியை அப் பெண்ணுடன் விட்டுவிட்டு தர்சினி அடைவு கடைக்குள் நின்ற போது அந்த பெண் சிறுமியுடன் மாயமாகியுள்ளார்.

சிறிது நேரத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்தப் பெண் “தனக்கு தர்சினியின் கணவன் 5 லட்சம் ரூபாய் தரவேண்டும். அதனைத் தந்தால் சிறுமியை விடுவேன் எனவும் அல்லது காசு இரண்டு லட்சமும் மிகுதி மூன்று லட்சத்திற்கு நகையும் தா சிறுமியை விடுகிறேன்” என மிரட்டியுள்ளார். இதனையடுத்து 11.50 மணியளவில் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது.

பொலிசாரின் துரித செயற்பாட்டின் மூலம் குறித்த பெண் சிறுமியுடன் பயணித்த ஆட்டோ சாரதி கண்டிபிடிக்கப்பட்டு அவரை விசாரணை செய்த போது அப்பெண்ணையும் சிறுமியையும் மன்னார் வீதியில் உள்ள காமினி வித்தியாலயம் முன்பாக இறக்கி விட்டதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து அவ் இடத்திற்கு சென்ற பொலிசார் அவ்வீதி வழியாக சென்ற பஸ்களை இலக்கு வைத்து, தேடிய போது வவுனியா தாலிக்குளம் பகுதியில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டதுடன் சிறுமியும் மீட்கப்பட்டு பிற்பகல் 2.20மணியளவில் தாயிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

40 41

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் காஞ்சி சிவமட மண்டபத்தில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின விழா!!(படங்கள், வீடியோ)

நேற்று (14.10) சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாடில் கோவில்குளம் சிவன்கோவில் காஞ்சி சிவமடத்தில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசஅதிபர், மேலதிக அரச அதிபர், பிரதேச செயலாளர், சிறுவர் தேசிய அதிகாரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் வவுனியாவில் இயங்கும் அருளகம் சிறுவர் இல்லம், இந்து அன்பகம், சிரிலிய செவன, சாய் சிறுவர் இல்லம் , டொன்போஸ்கோ, கிருபை இல்லம் ஆகியனவற்றின் சிறுவர்களும் பிரதிநிதிகளும் சிவன் முதியோர் இல்லத்தின் முதியவர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வில் சிறுவர்களின் நிகழ்சிகள் நடனம், வில்லுப்பாட்டு முதலியனவும் சிவன் முதியோர் இல்லத்தை சேர்ந்த முதியவர்களும் சிறுவர்களினால் மாலையணிவித்து கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

அத்துடன் அருளகம் சிறுவர் இல்லத்திலிருந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு அருளகம் சிறுவர் இல்ல நிர்வாகத்தினரால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

-கஜேந்திரன்-

11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

வவுனியாவில் மீண்டும் இரு வாரங்களின் பின்பு இன்று மழை!!

இரண்டு வாரங்களின் பின் இன்றும் வவுனியாவின் நகரை அண்டிய பகுதிகளில் மாலை 5.30 மணி முதல் 6.30 மணிவரையான காலப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

சில நாட்களாக கடும் வெப்பமான காலநிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்றைய மழையை அடுத்து ஓரளவு குளிச்சியை உணரக்கூடியதாக இருந்தது.

-பண்டிதர்-

1 2 3

2 கோடி வெளிநாட்டுப் பணத்தை மலவாயிலில் மறைத்து கடத்திய மூவர் கைது!!

dollar

சட்டவிரோதமான முறையில் இரண்டு கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் நோக்கிப் பயணிக்கவென இன்று (14.10) காலை கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற மூவரை சோதனை செய்தபோது வெளிநாட்டு நாணயங்கள் மீட்கப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

இவர்களிடம் இருந்து இரண்டு கோடியே 20 லட்சம் பெறுமதியான யூரோ மற்றும் சுவிஸ் பிராங் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மலவாயிலில் மறைத்து குறித்த பணத்தை சிங்கப்பூர் கொண்டுசெல்ல சந்தேகநபர்கள் முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நபர்களே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லண்டனில் ஜெயவாணி குழந்தைகளுடன் மரணமான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது!!

jeyavany

லண்டனில் தமிழ் பெண்ணொருவர் தனது குழந்தைகள் இருவரை கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது.

அதன்படி, குழந்தைகள் தாயினால் மூச்சுத் திணர கொலை செய்யப்பட்டுள்ளதும் பின்னர் தாய் தற்கொலை செய்து கொண்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அனோபன் (5), நதிபன் (8 மாதம்) ஆகிய இரு ஆண் பிள்ளைகளையும் கொன்று விட்டு, ஜெயவாணி என்ற பெண் தற்கொலை செய்துள்ளார்.

குறித்த பெண்ணின் கணவன் சக்திவேல் விக்னேஸ்வரன் (36) வீட்டுக்கு வந்தபோது மூவரும் சடலமாக கிடப்பதைக் கண்டு கொண்டார்.

கறுப்பு பைகளுக்குள் பிள்ளைகளின் சடலங்கள் போடப்பட்டு இருந்தன. மனைவியும் இறந்து காணப்பட்டார். வேலையில் இருந்து திரும்பி வந்த கணவன் இதைகண்டு பேரதிர்ச்சி அடைந்தார்.

இம்மரணங்களில் வேறு எவர் மீதும் பொலிஸாருக்கு சந்தேகம் இல்லை. குழந்தையின் பிறப்புக்கு பின்னரான மன அழுத்தத்தால் ஜெயவாணி பாதிக்கப்பட்டு இருக்கக் கூடும் என்று பொலிஸார் சந்தேகித்தனர்.

கழுத்து இறுக்கப்பட்ட்டமையே ஜெயவாணியின் மரணத்துக்கான காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

வவுனியாவின் பிரபல பொருளியல் ஆசிரியரும் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் ஆசிரியருமான பாலஸ்ரீந்திரன் அவர்களுக்கு “பிரதீப பிரபா” விருது!!

 
வவுனியாவின் பிரபல பொருளியல் ஆசிரியரும் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் பொருளியல் ஆசிரியருமான திரு.பாலசிங்கம் பாலஸ்ரீந்திரன் அவர்களுக்கு கடந்த 06.10.2014 அன்று மஹிந்த சிந்தனை தேசிய புனர்வாழ்வு செயற்திட்டத்தின்கீழ் “பிரதீப பிரபா” எனும் விருது வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று(13.10.2014) பாடசாலையினாலும் வர்த்தகப் பிரிவு மாணவர்களினாலும் பாராட்டு விழா நடைபெற்றது.
அத்துடன் இன்று அவரது பிறந்ததின விழாவும் பாடசாலையினால் அந்த இவ் வைபவத்தில் கொண்டாடப்பட்டது. வர்த்தகப் பிரிவு மாணவர்களினால் பிறந்ததின விழா வகுப்பறையில் கொண்டாடப்பட்டது.

சாதிக்கப் பிறந்து சாதனைகள் பல படைத்த பாலஸ்ரீந்திரன் ஆசிரியருக்கு இந்த விருது கிடைத்தமைக்காக பாடசாலை அதிபர், ஆசிரியர், மாணவர்கள் சார்பாக வர்த்தகப் பிரிவு மாணவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.

-யதார்த்தனி, ரீபிகா, ரிபிசனா, ஸ்ரீதர்சிகா, சாய்ரா-

1 2 3 4 05 56

யாழ் செல்வதற்கான ரயில் கட்டண விபரம்!!

train

இன்று யாழ்ப்பாணம் வரையான யாழ் தேவி ரயில் சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதன்படி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்ல சராசரியாக நான்கு பிரதான ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

முழுமையாக குளிரூட்டப்பட்ட ரயில் மற்றும் யாழ்தேவி ரயில் சேவைகள் கல்கிஸ்சை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளன.

மேலும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து கடுகதி மற்றும் இரவு நேர தபால் ரயில் சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இவை யாழில் இருந்து நாளாந்தம் கொழும்பு கோட்டை வரை பயணிக்கும்.

அத்துடன் கொழும்பில் இருந்து யாழ் வரை செல்ல சாதாரண ரயில் கட்டணமாக 320 ரூபா அறவிடப்படவுள்ளது.

மேலும் முதல் வகுப்பு ஆசனங்களுக்கு 900 ரூபாவும் இரண்டாம் வகுப்பு ஆசனங்களுக்கு 800 ரூபாவும், அறிவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குளிரூட்டப்பட்ட ரயில் சேவைக் கட்டணமாக 1500 ரூபா அறவிடப்படவுள்ளது.

அதேபோல் எதிர்வரும் தினங்களில் மாத்தறையில் இருந்து யாழ்ப்பாணம் வரை, பிரதி சனிக்கிழமைகள் ரயில் சேவை இடம்பெறவுள்ளதோடு, ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை வரையிலும் ரயில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – யாழ்ப்பாணம்- கொழும்பு புகையிரத நேர அட்டவணை!!

4

இன்றைய தினம் இலங்கை ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட யாழ்-கொழும்பு புகையிரத சேவையின் படி இவ் இரு நகரங்களுக்குமான பிரயாண இடைவெளி ஆறு மணித்தியாலங்களாக சுருக்கமடைகின்றது.

இதன்படி யாழ்-கொழும்பு புகையிரத சேவையின் நேர அட்டவணை புகையிரத ரகங்களுக்கேற்ப பின்வருமாறு,

‪யாழ் நகரிலிருந்து கொழும்பு கோட்டை வரை‬

1.யாழ்தேவி – காலை 7.25க்கு புறப்பட்டு பிற்பகல் 3.47க்கு சென்றடையும்

2.இன்ரசிற்றி – முற்பகல் 11.00க்கு புறப்பட்டு பிற்பகல் 5.40க்கு சென்றடையும்

3.குளிரூட்டிய அதிவேக புகையிரதம் – பிற்பகல் 1.45க்கு புறப்பட்டு இரவு 8.00க்கு சென்றடையும்

4.தபால் புகையிரதம் – இரவு 7.05க்கு புறப்பட்டு அதிகாலை 4.23க்கு சென்றடையும்

5.விசேட புகையிரதம் – ஞாயிறுகளில் மட்டும் முற்பகல் 10.00க்கு புறப்பட்டு பிற்பகல் 6.11க்கு சென்றடையும்

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்நகர் வரை‬

1.குளிரூட்டிய அதிவேக புகையிரதம் – காலை 5.50க்கு புறப்பட்டு முற்பகல் 11.57க்கு வந்தடையும்

2.யாழ்தேவி – காலை 7.15க்கு புறப்பட்டு மாலை 3.00க்கு வந்தடையும்

3.இன்ரசிற்றி – முற்பகல் 11.50க்கு புறப்பட்டு பிற்பகல் 6.15க்கு வந்தடையும்

4.தபால் புகையிரதம் – மாலை 7.45க்கு புறப்பட்டு அதிகாலை 5.07க்கு வந்தடையும்

5.விசேட புகையிரதம் – சனிக்கிழமைகளில் மட்டும் காலை 9.40க்கு புறப்பட்டு பிற்பகல் 5.20க்கு வந்தடையும்

24 வருடங்களின் பின்னர் யாழில் உத்தியோகபூர்வமாக கால்பதித்தது யாழ்தேவி!!

24 வருடங்களுக்கு பின்னர் யாழ்தேவி ரயில் இன்று யாழ்ப்பாணத்தினை சென்றடைந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை இன்று திறந்துவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வடபகுதிக்கான ரயில் சேவை உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் வரை ஆரம்பித்து வைக்கப்பட்டது. பளையில் இருந்து முற்பகல் 10 மணி அளவில் யாழ்தேவி ரயில் பயணத்திணை ஆரம்பித்துள்ளது.

பளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவையை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி பின்னர் கொடிகாமம், நாவற்குழி பகுதிகளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரத நிலையங்களையும் திறந்து வைத்ததுடன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரதான பகையிரத நிலையத்தையும் திறந்து வைத்தார்.

பளையில் இருந்து முற்பகல் 10 மணி அளவில் யாழ்தேவி ரயில் பயணத்தை ஆரம்பித்து 11.15 அளவில் யாழ்ப்பாணத்தினை சென்றடைந்தது.

1 2 3 4 5 6

ஒட்டுசுட்டான் பண்பாட்டுப் பெருவிழாவில் கலைஞர்கள் கௌரவிப்பு!!

ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா அண்மையில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் குருபரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச கலைஞர்கள் ஐவர் கௌரவிக்கப்பட்டதில் வளர்ந்து வரும் இளங் கவிஞர் வே.முல்லைத்தீபனும் கௌரவிக்கப்படார். இவருக்கான கௌரவத்தினை யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் அருந்தாகரன் அவர்கள் வழங்கினார்.

பண்பாட்டு ஊர்வலம் முடிவடைந்த பின்னர் பிரதேச கலை கலாசார பண்பாடுகளை பிரதிபலிக்கும் நோக்குடன் பாரம்பரிய கூத்துக்கள், நாடகங்கள், நிகழ்வுகள் இடம்பெற்றன. இக் கௌரவங்களானது.. வளர்ந்துவரும் இளவல்களை ஊக்கப்டுத்துவதுடன் மேலும் இலக்கியப் பணி செய்யத் தூண்டும் என்பது பலரின் கருத்தாக இருந்ததை அவதானிக்கக் கூடியதாகயிருந்தது.

1 2

வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தின் தேருக்கு தீ வைத்த சம்பவத்திற்கு செல்வம் எம்.பி.கண்டனம்!!

ther

வவுனியா மாவட்டத்தின் இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தின் தேர் இனந்தெரியாதோரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தேர் இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடையம். மக்களுக்கிடையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் இனம் தெரியாத நபர்களினால் குறித்த நாசகாரிய செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆலயத்தினுள் சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தேர் எரிக்கப்பட்ட சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கருத முடிகின்றது. எனவே குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வவுனியா பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக ஆலயங்கள் மீதும் பள்ளிவாசல்கள் மீதும் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸார் முன்வர வேண்டும் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் பிணை மனு வரும் 17ம் திகதி விசாரணை : உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!!

Jeya

சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிணை மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், வரும் 17ம் திகதி பிணை மனு மீது விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பிணை கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிணை கேட்டு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் சிக்ரி, லோகூர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் பாலின் நரிமன் ஆஜராகி, மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து, பிணை மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வரும் 17ம் திகதி மனு மீதான விசாரணை நடைபெறும் என்று அறிவித்தனர்.

பெங்களூரு சிறையில் இன்றுடன் 17வது நாளாக இருக்கும் ஜெயலலிதாவுக்கு, அக்டோபர் 17ம் திகதி பிணை கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வினோத கழிப்பறை உணவகம்!!

சீனாவில் விசித்திரமான வடிவமைப்பில் கழிப்பறை உணவகம் தொடங்கப்பட்டுள்ளது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சீனாவின், தையுயானின் ஷாங்ஜி மாகாணத்தில் தொடங்கப்பட்டுள்ள கழிப்பறை உணவகத்தில், மேற்கத்திய கழிப்பறை வடிவில் நாற்காலிகளும், கை கழுவும் வாஷ்பேசினைப் போன்று மேஜையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கழிப்பறையுடன் கூடிய குளியலறையில் நுழைவது போன்ற உணர்வு ஏற்படும் வகையில், தரை மற்றும் சுவர்களுக்கு, பாத்ரூம் டைல்ஸ்களும், கதவுகளில் கழிப்பறை பேப்பர் மற்றும் குழாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த உணவகத்தில் பரிமாறப்படும், நுாடுல்ஸ், இறைச்சி, சைவ உணவுகளுடன், சுருண்ட பிரவுன் நிற பின்னல் போன்ற ஐஸ்கிரீம்களும் பிரபலமானவை.

பார்ப்பதற்கு மனிதக் கழிவுகள் போல தோற்றமளிக்கும் இவை, கழிப்பறை வடிவிலான பாத்திரங்களில் பரிமாறப்படுகிறது.

சீனாவின் பீஜிங், ஷாங்காய் மற்றும் ஹாங்ஜூ நகரங்கள் மட்டுமல்லாமல், கொரியா, ஜப்பான் நாடுகளிலும் கழிப்பறை வடிவிலான காபி ஷொப்கள் திறக்கப்பட்டுள்ளன.

சீனாவில் இயங்கும் உணவகங்களில் கழிப்பறை வசதி கிடையாது, இங்கு வரும் வாடிக்கையாளர்கள் உணவகத்திற்கு வெளியில் உள்ள பொதுக் கழிப்பறையைத்தான் பயன்படுத்த வேண்டும்.

புதிதாக திறக்கப்பட்டுள்ள கழிப்பறை உணவகங்களுக்கு முதன் முறையாக வருபவர்கள் ஏராளமான கழிப்பறைகளைக் கண்டு ஆச்சரியமடைகின்றனர்.

40 41 42 43 44 45