மீன்பிடி படகில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில், சிங்கள மீனவர்கள் இருவர் தஞ்சமடைந்துள்ளனர்.
இலங்கை நீர்கொழும்புவை சேர்ந்த வர்ணகுல ஜெயபுஷ்பகுமார், 52, வர்ணகுல ஜெலஸ்டின் ஜினோமணி, 34 என்ற இரு மீனவர்களே தஞ்சமடைந்துள்ளனர்.
நேற்று (21) மாலை, மன்னார் கடற்கரையில் இருந்து, பைப்பர் கிளாஸ் படகில் மீன்பிடிக்க புறப்பட்டு, இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்த போது படகில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது.
உடனே, அங்கு மீன்பிடித்த, இராமேஸ்வரம் நாட்டுபடகு மீனவர் உதவியுடன் ராமநாதசுவாமி கோயில் கோபுர மின்விளக்கு வெளிச்சத்தில், இரவு 8.30 மணிக்கு, அக்னி தீர்த்த கடற்கரையில், தஞ்சம் அடைந்தனர்.
மீனவர்கள் இருவரும் மது அருந்தி இருந்ததால், படகை திருடி வந்திருப்பார்களா குற்ற வழக்கில் இருந்து தப்பிக்க இங்கு வந்திருப்பார்களா என பொலிசார் விசாரணை நடத்தினார்.
ஜெலஸ்டின் ஜினோமணி கூறியதாவது: ஒரு வருடமாக மன்னார் கடற்கரையில் தங்கி மீன்பிடித்து வருகிறோம்.
நேற்று இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் மன்னார் கரைக்கு திரும்ப முடியாமல் தமிழக நாட்டுபடகு மீனவர் உதவியுடன் இராமேஸ்வரம் கரைக்கு வந்தோம் என்றார்.
அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான வாகனம் பழைய முறிகண்டி பகுதியில் நேற்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார்.
வீதியின் அருகில் இருந்த பழைய முறிகண்டி பிள்ளையார் கோயிலும் முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும்
தெரியவருவதாவது,
ஏ-9 வீதியில் வேகமாக வந்த கனரக வாகனம் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டுவிலகி அருகில் இருந்த கோயிலை இடித்து தள்ளியுள்ளது. இதனால் கோயில் முற்றாகச் சேதமடைந்துள்ளது.
இதன்போது வாகனத்தின் உதவியாளர் காயமடைந்து கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவர் கண்ணிமையை நீளமாக வளர்த்ததன் மூலம் உலகின் மிக நீளமான கண்ணிமைக்கு சொந்தக்காரர் என்று சாதனை படைத்துள்ளார்.
கண் இமையில் இவ்வளவு அதிகமான முடிகள் வளர்வதற்கு சாத்தியம் இல்லையொன்றாலும், சில ஹோமோன் மாற்றங்கள் மூலம் தலைமுடி போல கண்ணிமையும் வளரலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜயகாந்த் நடிப்பில் ஹிட்டான படம் ரமணா. இந்தப் படத்தைத் தற்போது இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.
வானம் படத்தின் இயக்குநர் க்ரிஷ், இந்தியில் இயக்கப் போகிறார். விஜயகாந்த் வேடத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
அக்ஷய் குமாருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் ஸ்ருதி தான் நடிக்கப் போகிறார் என தற்போது செய்தி பரவுகிறது.
ஏற்கெனவே அக்ஷய் குமாருடன் தமன்னா நடித்துவிட்டதால் ஸ்ருதியை ஒப்பந்தம் செய்தார்கள் என்கிறது படக்குழு.
ஆனால், உண்மை அதுவல்ல. பொலிவுட்டில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என தவித்து வரும் ஸ்ருதி என்ன மந்திரமோ செய்து தமன்னாவின் வாய்ப்பைப் பறித்து விட்டாராம்.
அக்ஷய் குமாருடன் நடிப்பதன் மூலம் தனக்கும் பொலிவுட்டில் நல்ல இடம் கிடைக்கும் என நம்புகிறாராம் ஸ்ருதி.
தென்னிந்தியத் திரைப்பட விருது விழாக்களில் ஒன்றான 60-வது ஃபிலிம்பேர் விருது விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் தனுஷ் இரண்டு விருதுகளை தட்டிச் சென்றார். “3” படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. அதுபோல “3” படத்தில் தனுஷ் பாடிய வை திஸ் கொலவெறி பாடலுக்காக சிறந்த பாடகர் விருது தனுஷுக்கு வழங்கப்பட்டது.
நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்த சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த படமாக வழக்கு எண் 18/9, சிறந்த இயக்குநராக பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலினுக்கு சிறந்த புதுமுக நடிகர் விருதும், சுந்தரபாண்டியன்´ படத்தில் நடித்த லட்சுமி மேனனுக்கு சிறந்த புதுமுக நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.
சிறந்த துணை நடிகருக்கான விருது தம்பி ராமையாவுக்கும் (கும்கி), சிறந்த துணை நடிகைக்கான விருது சரண்யா பொன்வண்ணனுக்கும் (நீர்ப்பறவை) வழங்கப்பட்டது.
சிறந்த இசை அமைப்பாளர் விருது டி.இமானுக்கும் (கும்கி), சிறந்த பாடலாசிரியர் விருது யுகபாரதிக்கும் (சொல்லிட்டாலே அவ காதல கும்கி) வழங்கப்பட்டது.
சிறந்த பாடகிக்கான விருது என்.எஸ்.கே.ரம்யாவுக்கு நீதானே என் பொன்வசந்தம் கிடைத்தது.
இதை நம்புவது கொஞ்சம் கடினம்தான். ஆனாலும் மறுக்கமுடியாத உண்மை. “Driving Dogs” என்ற அமைப்பொன்று நாய்களுக்கு வாகனம் ஓட்ட பயிற்சியளித்து வருவதுடன் இந்த முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர்ப் பகுதிகளில் இரண்டாவது இரவும் வன்முறைகள் நடந்துள்ளன. பிரான்ஸின் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை- புர்கா அங்கி அணிவதற்கு உள்ள தடையை எதிர்த்து நடந்துவரும் போராட்டங்களிலேயே இந்தக் கலவரங்கள் நடந்துள்ளன.
போலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் தடியடிப் பிரயோகம் நடத்தி போராட்டக்காரர்களைக் கலைத்துவருகின்றனர். கடந்த வியாழக்கிழமை, முகத்தை முழுமையாக மூடி புர்கா அணிந்திருந்த பெண்ணொருவரை போலிசார் எச்சரித்தபோது, அந்தப் பெண்ணின் கணவனான இளைஞர் போலிசாரின் கழுத்தைப் பிடித்துள்ளார்.
முகத்திரையை அகற்றுமாறு தனது மனைவிக்கு உத்தரவிடப்பட்டதை அந்த இளைஞர் எதிர்த்துள்ளார். அந்த இளைஞரை போலிசார் கைதுசெய்ததை அடுத்தே போராட்டம் வெடித்துள்ளது. இனச் சிறுபான்மை மக்கள் செறிவாக வாழும் பாரிஸின் புறநகர்ப் பகுதிகளில் பெருமளவு கொந்தளிப்பு நிலை காணப்படுகிறது.
டான்ஸர், நடிகர், இயக்குநர் என பல முகங்கள் கொண்டவர் பிரபுதேவா. அத்தனை முகங்களிலும் தன்னுடைய சாதனையைப் பதித்தவர்.
சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தபோது, “எந்தெந்த நடிகர்கள் சூப்பராக டான்ஸ் ஆடுவார்கள்?” என கேட்கப்பட்டது.
அவரும் சிரஞ்சீவி, ஹ்ருத்திக், ஷாகித், ரன்பீர், ராம் சரண், அல்லு அர்ஜுன், ஜுனியர் என்.டி.ஆர். தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி என நடிகர்களின் பெயரைச் சொல்லியிருக்கிறார்.
மாதுரி தீக்ஷித், தேவி, சோனாக்ஷி ஷின்கா, பிரியங்கா சோப்ரா என நன்றாக டான்ஸ் ஆடக்கூடிய நடிகைகளின் பெயரையும் சொல்லி இருக்கிறார்.
ஆனால், கடைசிவரை விஜய்யின் பெயரைச் சொல்லவே இல்லையாம். இத்தனைக்கும் விஜய்யை வைத்து இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார் பிரபுதேவா.
பொலிவுட் ஸ்டார்கள் அக்ஷய் குமார், ஷாருக்கான் ஆகியோரே விஜய்யின் நடனத்தை வியந்து பாராட்டியிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது பிரபுதேவா விஜய்யைத் தவிர்த்த மர்மம் என்ன என்பது தெரியவில்லை.
கொலை செய்து சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்ட பெண் உயிருடன் தனது கள்ளக்காதலருடன் இருப்பது தெரிய வந்து பரபரப்பு ஏற்பட்டது. தற்போது உண்மையில் கொலையான பெண் யார் என்ற விசாரணையை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அருகே உள்ள நங்கமங்கலம் ஏரியில் கடந்த 17-ந்தேதி சாக்கு மூட்டையில் இளம்பெண் பிணம் கிடந்தது. 25 வயது மதிக்கதக்க அந்த பெண் நிர்வாண நிலையில் கிடந்தார். தலையில் வெட்டுக் காயங்கள் இருந்தன. அடையாளம் தெரியாமல் இருக்க முகம் சிதைக்கபட்டிருந்தது.
சம்பவ இடத்தில் சிவப்பு கலர் சுடிதாரும் வெள்ளை நிற டாப்சும் கையுறைகளும் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர். போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ராணிப்பேட்டையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் திலகவதி என்பவர் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையம் சென்று சென்னை திருநின்றவூரில் வசிக்கும் தனது அண்ணன் மகள் கங்காதேவி (27) கடந்த சனிக்கிழமை காணாமல் போனார்.
எனவே பிணமாக கிடந்ததா அவரா என்று சந்தேகப்படுகிறோம். எனவே உடலைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து திலகவதி, அவரது அண்ணன், அண்ணி சரஸ்வதி, கங்காதேவியின் கணவர் சரவணன் ஆகியோர் விரைந்து வந்தனர். வாலாஜா அரசு மருத்துவமனை பிரேதக் கிடங்கில் உடலைப் பார்த்தனர்.
அப்போது அந்த உடல் தனது மனைவியுடையதுதான் என்று கணவர் சரவணன் கூறியுள்ளார். ஆனால் கங்காதேவியின் பெற்றோர் அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறினர். இதையடுத்து மரபணு சோதனைக்கு உத்தரவிடப்பட்டது. அதேசமயம், கங்காதேவிதான் கொலையானதாக கருதி போலீஸார் அந்த்க கோணத்தில் விசாரணையை முடுக்கினர்.
கங்காதேவியின் கணவர் திருவான்மியூரில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. அடிக்கடி கங்காதேவி திருநின்றவூரில் உள்ள தாய் வீட்டுக்கு செல்வார். அப்போது அவருக்கும் பக்கத்து வீட்டு வாலிபரான கார்த்தி என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது கங்கா தேவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கண்டித்தனர்.
கங்காதேவியின் சகோதரர் ரவிச்சந்திரன் கார்த்திக் வீட்டுக்கு சென்று அவரை கண்டித்து தகராறு செய்தார். இதனால் இரு வீட்டாருக்கும் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் தான் கங்காதேவி மாயமானார். கங்காதேவியின் உடல் அடையாளம் காணப்பட்டதால் கார்த்திக்கைத் தேடி வந்தனர் போலீஸார். ஆனால் அப்போதுதான் அவர்களுக்குத் திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
அதாவது கங்காதேவி சாகவில்லை. மாறாக தனது கள்ளக்காதலர் கார்த்திக்குடன் கோவையில் பதுங்கியிருப்பதாக அவர்களுக்குத் தகவல் கிடைத்தது. மேலும் கங்காதேவியும் தனது உடல் அடையாளம் காணப்பட்டதாக வெளியான பத்திரிக்கைச் செய்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே தனது சகோதரரை தொடர்பு கொண்டு தான் உயிருடன் இருப்பதாக கூறியுள்ளார். போலீஸாரிடமும் பேசியுள்ளார். போலீஸாரிடம் மட்டும் தானும், கார்த்திக்கும் கோவையில் இருப்பதாக தெரிவித்துள்ளார் கங்காதேவி. மேலும் பாதுகாப்பும் கோரியுள்லார். இதையடுத்து போலீஸார் கோவை விரைந்துள்ளனர்.
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம் “அன்னயும் ரசூலும்”. இந்தப் படத்தில் இயக்குநர் பாசில் மகன் பர்கத் பாசிலும், ஆண்ட்ரியாவும் ஜோடியாக நடித்திருந்தனர்.
இதையடுத்து ஆண்ட்ரியாவைக் காதலிப்பதாக சமீபத்தில் பர்கத் பாசில் கூறியிருந்தார். அவருடைய இந்த அறிவிப்பு தமிழ் மற்றும் மலையாளப் பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் பர்கத்தின் காதலை ஆண்ட்ரியா நிராகரித்து விட்டார். பர்கத்தை நண்பனாக மட்டுமே நினைத்து பழகினேன் என ஆண்ட்ரியா தெரிவித்தார்.தற்போது இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்யப் போகின்றனர்.
படத்தை உதயநிதி ஸ்டாலினின் “ரெட் ஜெயண்ட் மூவிஸ்” நிறுவனம் வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
தமிழிலும் ஆண்ட்ரியாவே ஹீரோயினாக நடிப்பார் என தயாரிப்பாளர் வினோத் விஜயன் தெரிவித்து உள்ளார்.
துபாயில் கற்பழிக்கப்பட்ட நோர்வேபெண்ணிற்கு பொது இடத்தில் பாலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு 16 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நோர்வே நாட்டைச் சேர்ந்தவர் டெபோரா டலேல்வ் என்ற 24 வயது பெண். கட்டிட உள் அலங்கார நிபுணரான இவர் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தபோது கற்பழிக்கப்பட்டார். தனக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் குறித்து துபாய் போலீசில் புகார் செய்தார் டெபோரா.
புகார் அளிக்கச் சென்ற டெபோராவின் கடவுச்சீட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் தடாலடியாக வர் மீதே வழக்கை திசை திருப்பினர். அதில் டெபோரா மது அருந்திவிட்டு வெளி நபரிடம் பாலுறவில் ஈடுபட்டதாகவும் உண்மையைத் திரித்துக் கூறுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் டெபோராவிற்கு 16 மாத சிறைத்தண்டனையும் அவரை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டவருக்கு 13 மாத சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
துபாய் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் நோர்வேயில் உள்ள மனித உரிமைக் குழுவினர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகமும் கோபத்தில் உள்ளன. பாதிக்கப்பட்ட தனக்கு சிறைத்தண்டனை விதித்ததால் அதிர்ச்சியடைந்த டெபோரா மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் அரசியல் படுகொலைகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை..
பா.ஜ.க.வைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலரும், அவர்களோடு கொள்கை உறவு கொண்ட இந்து சமயக் கட்சியினர் சிலரும் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர். இம்மாத தொடக்கத்தில் அக்கட்சியைச் சேர்ந்த வெள்ளையப்பன் என்பவர் இதேபோன்று கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்.
மற்றொரு மாநில நிர்வாகியான காந்தி என்பவர் நடைபயிற்சி செய்துக் கொண்டிருந்தபோது பட்டப்பகலில் நடந்த கொலை முயற்சியில் இருந்து படுகாயத்துடன் தப்பியுள்ளார். தங்கள் கட்சியினர் அடுத்தடுத்து கொல்லப்பட்டதை பட்டியலிட்டுள்ள அக்கட்சியின் பொதுச் செயலர் தமிழிசை செளந்தரராசன் கூறியுள்ளது போல், இது திட்டமிட்ட படுகொலைகளாகவே தெரிகிறது.
ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்தான் இப்படிப்பட்ட படுகொலைகள் தடையின்றி தொடர்கிறது என்று கூறியுள்ளார். இந்த கொலைகள் செய்தவர்களைப் பற்றி வெளியாகும் தகவல்கள் அனைத்தும், பணத்திற்கு கொலை செய்யும் கூலிப் படையினரை ஏவிவிட்டு நடத்தப்பட்டுள்ளது நன்கு தெரிகிறது.
பாஜக பொதுச் செயலாளர் ரமேஷை அரிவாளால் வெட்டிக்கொன்ற மூன்று பேர் கும்பல் எவ்வித பதற்றமுமின்றி மிகச் சாதாரணமாக நடந்து தெரு முனைக்குச் சென்று தப்பியதாக நேரில் பார்த்தவர் கூறியுள்ளார். இதிலிருந்து கொலையாளிகள் கூலிப்படையினர்தான் என்பது புலனாகிறது. தமிழ்நாட்டில் சமீப காலமாக கூலிப்படையினரின் அராஜகம் தலைவிரித்தாடுகிறது.
12 ஆண்டுகள் காத்திருந்து என் கணவரைக் கொன்ற எதிரியை பழி தீர்த்தேன் என்று காவல்துறையினரிடம் ஒரு குற்றவாளி வாக்குமூலம் தந்த செய்தி நாளிதழ்களில் வந்தது. இதேபோல் பல சமூக குற்றவாளிகள் அவர்களின் தொழில் எதிரிகளால் படுகொலை செய்யும் செய்திகள் அடிக்கடி வருகின்றன.
கேரளத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி புரட்சி மார்க்சிஸ்ட் கட்சியை தொடங்கிய டி.பி. சந்திரசேகர் படுகொலை செய்யப்பட்டது குறித்து தனது துயரத்தை வெளிப்படுத்திய மலையாள நடிகர் மோகன்லால் நான் கொல்லப்பட்டிருந்தால் எனது தாய் எப்படி துடித்திருப்பாரோ அதுபோலத்தானே சந்திரசேகரனின் தாய் துடிதுடித்திருப்பார். அந்த தாயின் மன நிலையில் இருந்து அந்தத் துயரத்தை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறினார்.
கொலை செய்யப்படுபவர் யாராயினும், அதற்கு கொள்கையோ, அரசியலோ காரணமாயினும் கொல்லப்பட்டவரின் தாயார் மற்றும் குடும்பத்தாருக்கு ஏற்படும் இழப்பும், துயரமும் பொதுவானதுதான். கொள்கை எதிரிகளை தீர்த்துக்கட்டுவது என்கிற நிலை, அதுவும் கூலிப்படை கொண்டு கணக்குத் தீர்ப்பது என்று போனால், அது நமது சமூக, அரசியல் வாழ்விற்கே பெரும் அச்சுறுத்தலாகிவிடும்.
எனவேதான் இப்பிரச்சனையை தீவிரமாக கையாண்டு கொலையாளிகளையும், அவர்களை பின்னின்று இயக்கிய வர்களையும் காவல் துறையினர் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். கொலை கொள்ளை செய்திகள் இல்லாத நாளே இல்லை என்று கூறும் அளவிற்கு குற்றச்செயல்கள் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெருகியுள்ளது.
அதையும் தாண்டி இப்படிப்பட்ட அரசியல் படுகொலைகள் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருவது மக்களை மேலும் அச்சமடையச் செய்துள்ளது. பா.ஜ.க. பொறுப்பாளர்கள் அடுத்தடுத்துக் கொல்லப்பட்டதன் பின்னணியை கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆடிட்டர் ரமேஷ் அவர்களை கோர மரணத்தில் பறிகொடுத்து, துயரத்தில் துடி துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் சீமான்.
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா எதிர்வரும் 25ஆம் திகதி வியாழக்கிழமை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
“இயல் இசை நாடகத்தால் இன்பத் தமிழ் வளர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடத்தப்படவுள்ள இக் கலாசார விழா காலை 9 மணிக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் பண்பாட்டு பேரணியுடன் ஆரம்பமாகவுள்ளது.
இதனையடுத்து பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ள வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனால் மங்கலவிளக்கேற்றப்பட்டு நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளால் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்படவுள்ளது.
தொடர்ந்து புளியங்குளத்தை சேர்ந்த நிருத்திய கலாசேஸ்திர நுண்காலைக் கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனமும் வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் வே.ஆயகுலனின் வரவேற்புரையும் இடம்பெறவுள்ளது.
தலைமையுரையினை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் ஆற்ற “காலம் தோறும் தமிழ்” எனும் இலக்கிய சொற்பொழிவினை இலக்கிய சுடர் ஐ.கதிர்காமசேகரமும் நெடுங்கெணி நாவலர் முன்பள்ளி மாணவர்களின் இசைவும் அசைவும் நிகழ்வும் கவிக்கதிர் தம்பித்துரை ஐங்கரனின் தலைமையில் கவிஞர் மாணிக்கம் ஜெகன், வன்னியூர் நிசான், நந்தா, மருதோடை நிலா ஆகியோரின் பங்கேற்புடன் “நல்லதோர் வீணை செய்வோம்” எனும் தலைப்பில் கவியரங்கமும் கண்ணீந்த கண்ணப்பன் எனும் தலைப்பில் திருக்காலத்தி வில்லிசைக்குழுவினரின் வில்லிசையும் “மருதமுகில்” நூல் வெளியீடும் இடம்பெறவுள்ளது.
நூலின் வெளியீட்டுரையினை வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் மி.சூசைதாசனும் ஏற்புரையினை மலராசிரியர் ஜெ.கோபிநாத்தும் ஆற்றவுள்ளதுடன் நெடுங்கேணி செம்மொழிக்கலாமன்றத்தை சேர்ந்த இராஜேந்திரம், தவபாலன் ஆகியோரின் மதுரக்குரலிசையும் இலக்கியச்சுடர் ஐ.கதிர்காமசேகரம் தலைமையில் இன்றைய உலகில் தமிழர் பாரம்பரியம் பெரிதும் பின்பற்றப்படுகின்றதா? பின்தள்ளப்படுகின்றதா? எனும் தலைப்பில் இன்தமிழ் இனியன் எஸ்.எஸ்.வாசன், இளங்கலைச்சுடர் ஜெ.கோபிநாத், க.தவபாலசிங்கம், ஜெ.திருவரங்கன், பா.ரஜீவன், த.தர்மேந்திரா ஆகியோரின் பங்கேற்புடன் பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது
மேலும் நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளின் செம்பு நடனமும், புளியங்குளத்தை சேர்ந்த நிருத்திய கலாசேஸ்திர நுண்கலைக் கல்லூரி மாணவிகளின் கீதாஞ்சலியும், வவுனியா வடக்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் “இனியாகினும் திருந்துவோம்” எனும் தலைப்பில் தாளலயமும், நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளின் சுளகு நடனமும், கனகராஜன்குளம் மகாவித்தியாலய மாணவர்களின் அரிச்சந்திர மயான காண்டம் இசை நாடகமும், மதியாமடு விவேகாநந்தா வித்தியாலய மாணவா்களின் சுமைதாங்கி எனும் சமூக நாடகமும் நடைபெறவுள்ளது.
மேலும் நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளின் சத்தியவான் சாவித்திரி இசை நாடகமும், சின்னடம்பன் பாரதி வித்தியாலய மாணவா்களின் காணல் நீர் சமூக நாடகமும், நெடுங்கேணி மகாவித்தியாலய ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் இணைந்து வழங்கும் ஸ்ரீவள்ளி எனும் இசை நாடகமும், சின்னப்பூவரசன்குளம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவர்களின் காலங்கள் மாறினாலும் எனும் தலைப்பில் சமூக நாடகமும், மாறாவிலுப்பை அ.த.க. பாடசாலையின் ஏழு பிள்ளை நல்ல தங்காள் எனும் இசை நாடகமும், கலைவேந்தன் இசை நாடக வள்ளல் ம.தைரியநாதன் குழுவினரின் பூதத்தம்பி இசை நாடகமும், கற்சிலை மடு பரந்தாமன் நாடக கலாமன்றத்தினரின் பண்டார வன்னியனார் எனும் வரலாற்று நாடகமும் இடம்பெறவுள்ளன.
இந் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ச. மோகநாதன், வவுனியா வடக்கு வலய கல்வி பணிப்பாளர் திருமதி ப.கணேசலிங்கம், சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஆய்வாளருமான அருணா செல்லத்துரை ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மு. பாலசுப்பிரமணியமும் முன்னாள் வவுனியா நகரபிதா ஜி.ரி. லிங்கநாதனும் சேவா லங்காவின் நிகழ்சி திட்ட பிரதி பணிப்பாளர் திருமதி அனட்ரோய் பிரேமலதாவும் பொஸ்டோ நிறுவன நிகழ்சி திட்ட முகாமையாளர் பி. செந்தில் குமரனும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் நிகழ்ச்சி திட்ட அலுவலர் சா. சயந்தனும் கலந்து கொள்ளவுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவிகள் தங்கிருந்த வீட்டுக்கு இனம்தெரியாத நபர்கள் மது போத்தல்கள் மற்றும் கற்கள் என்பனவற்றை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தென்னிலங்கை மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு பின் புறமாக உள்ள கம்பஸ் லேனில் தனியார் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று தங்கி கல்வி கற்று வருகின்றனர்.
குறித்த வீட்டுக்கு நேற்று நள்ளிரவு மது போதையில் சென்ற சிலர் கத்தி கூச்சலிட்டதுடன் வாயில் கதவையும் தள்ளி திறக்க முற்பட்டுள்ளனர்.
கதவை திறக்க முடியாது போனமையினால் வீட்டுக்கு கற்கள் மற்றும் வெற்று மது போத்தல்கள் என்பவற்றை வீசியுள்ளார்கள் .
இதனால் வீட்டு யன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன் வீட்டின் முன்பகுதி முழுவதும் வீசப்பட்ட போத்தல்களின் கண்ணாடிகள் சிதறியுள்ளன. இச் சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மாணவிகளால் அறிவிக்கப்பட்டதை அடுத்து நிர்வாகத்தினால் அங்கு தங்கியிருந்த 16 தென்னிலங்கை மாணவிகளும் பாதுகாப்பாக யாழ். பல்கலைக்கழக விடுதிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்கள்.
அதேவேளை இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஒன்றுபட்டு நிற்கின்றோம் என்பதை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செயலாளருமாகிய மாவை சேனாதிராஜா தெரிவித்தார். எங்கள் தலைமையின் முடிவை நாங்கள் பூரணமாக வரவேற்பவர்கள். ஆற்றலும் ஆளுமையும் அனுபவமும் கொண்ட நீதியரசர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அவரின் வெற்றிக்குப் பின்னால் நாம் நிற்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியின் போதே இந்த கருத்தினை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபை தேர்தலில் நான் போட்டியிட வேண்டுமென மக்களும் ஆதரவாளர்களும் என்னை வற்புறுத்திய போதும் அதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. ஆனால் மக்கள், கட்சி ஆகியன விரும்புமாக இருந்தால் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு நான் தயாராகவுள்ளேன் என்பதை மாத்திரமே நான் கூறியிருந்தேன். யாரிடமும் என்னை முதலமைச்சர் வேட்பாளரக நியமியுங்கள் என நான் கேட்கவில்லை. இந்த நிலையில்தான் எமது கட்சியின் தலைவருக்கும் செயலாளருமாகிய எனக்குமிடையில் ஒரு பிளவு ஏற்பட்டு விடக்கூடாது. நாம் ஒன்று சேர்ந்து நிற்கின்றோம் என்பதை சர்வதேசத்துக்கு சொல்ல வேண்டும். சர்வதேசத்தில் நிலவுகின்ற இந்த நல்ல சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கமானது பேசி தீர்வு காணப்பட வேண்டுமென சர்வதேசம் அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில் நான் ஒரு வேட்பாளனாக நின்று ஒரு போட்டியை பிளவை ஏற்படுத்த எனது மனம் இடங்கொடுக்கவில்லை. அதன் காரணமாகவே நான் அந்தப் போட்டியினைத் தவிர்த்துக்கொண்டேன். இன்று கூட்டமைப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு சிறந்த நீதியரசர். மதிப்புப்பெற்றவர். அதன் காரணமாகவே அவரை நாம் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். இதுகட்சியின் ஏகோபித்த முடிவு. நான் தலைமைக்கு கட்டுப்பட்டவன். எனக்கும் தலைமைக்கும் இடையில் எந்த வேறுபாடும் பிளவும் இல்லையென்பதையும் கூட்டமைப்பில் சிறந்த ஒற்றுமை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் வெளிக்காட்டுவதாகவே எனது முடிவு அமைந்திருந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
என்னுடைய கதையை லிங்குசாமி கொப்பியடித்துவிட்டார் என இயக்குனர் சீமான் இயக்குனர்கள் சங்கத்தில் கொடுத்த புகாரால் சங்கம் கலகலத்து போயுள்ளது.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா விரைவில் ஒரு படம் நடிக்கிறார். படத்தின் பெயர், கதாநாயகி, தொழில்நுட்பக் கலைஞர்கள் என எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் லிங்குசாமி படத்தின் கதை இதுதான் என்று இரண்டுவரி கதை ஒன்று ஊடகங்களில் பிளாஷானது.
மருத்துவராக இருக்கும் சூர்யா மக்களுக்கு நல்லது செய்கிறார். மருத்துவராக இருந்தால் ஒரு குறிப்பிட்ட எல்லைவரையே மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என பொலிஸ் அதிகாரியாக மாறுகிறார். இதுதான் அந்த இரண்டுவரி கதை.
சீமான் பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கும் பகலவன் படத்தின் ஒன்லைனும் இதுதான். மருத்துவராக இருக்கும் கதாநாயகன் பொலிஸ் அதிகாரியாக மாறி அநியாயத்தை வேரறுப்பது.
விஜய், ஜீவா இருவரும் பகலவனில் இருந்து விலகிய நிலையில் தற்போது ஜெயம் ரவியை வைத்து பகலவனை எடுக்கும் முடிவில் இருக்கிறார் சீமான். இந்நிலையில் பத்திரிகையில் லிங்குசாமியின் கதையை பற்றிய விவரம் தெரிந்ததும் கடும் அதிர்ச்சிடைந்தவர் இயக்குனர்கள் சங்கத்தில் புகார் தந்திருக்கிறார்.
சீமான் பகலவன் கதையை பல வருடங்களாக பலரிடம் சொல்லி வந்தது அனைவருக்கும் தெரியும் என்பதால் லிங்குசாமி சூர்யாவுக்காக புதிய கதை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இப்படியொரு சர்ச்சையில் சிக்கிய பின் சூர்யா லிங்குசாமியின் கதையில் நடிப்பாரா என்பதும் சந்தேகமே.