இலங்கை மாகாண மட்ட இருபது – 20 தொடரில் கந்துரட்ட மரூன்ஸ் அணி வெற்றிபெற்று சம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது.
பஸ்நாஹிர கிறீன்ஸ் அணியுடன் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மெத்திவ்ஸ் தலைமையிலான பஸ்நாஹிர அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலளித்த குமார் சங்கக்கார தலைமையிலான கந்துரட்ட மரூன்ஸ் அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 113 ஓட்டங்களைப் பெற்று சம்பியனானது.
இதன் மூலம் அடுத்த மாதம் இந்தியாவில் ஆரம்பிக்கவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவென்டி டுவென்டி தொடரின் தகுதிகாண் போட்டிகளில் கந்துரட்ட அணி கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஒவர், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஹராரேயில் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தொடர் தொடங்க இன்னும் ஒருவார காலமே இருக்கும் நிலையில் சிம்பாப்வே வீரர்கள் திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துடன் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வீரர்கள் புதிய சங்கத்தை தொடங்கி இருக்கிறார்கள். ஊதிய உயர்வு, அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக சிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. அளிக்கும் கட்டணதொகையில் 10 சதவீதத்தை வீரர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
ஊதிய உயர்வு அளிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள சிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தொடருக்கு தயாராகாமல் பயிற்சியை புறக்கணித்துள்ளனர். பிரச்சினைக்கு தீர்வு காண வீரர்கள் சங்க பிரதிநிதிகளுக்கும், சிம்பாப்வே கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த பிரச்சினை குறித்து சிம்பாப்வே கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குனர் வில்பிரட் முகோன்டிகா கூறுகையில், ‘வீரர்கள் சங்கம் அமைக்க கடந்த சில மாதங்களாக முயற்சித்தனர். ஆனால் இவ்வளவு விரைவில் வீரர்கள் சங்கம் அமைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. வீரர்களின் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
சம்பள பிரச்சினைக்கு விரைவில் முடிவு காணப்படும். பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிதி பற்றாக்குறை காரணமாக சிம்பாப்வே கிரிக்கெட் வாரியம், வீரர்களுக்கு கடந்த மாத (ஜூலை) சம்பளத்தை வழங்கவில்லை.
இந்தியாவுக்கு எதிரான தொடரால் எங்களுக்கு பணம் கிடைத்தாலும், ஏற்கனவே உள்ள தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு பணம் கிடைக்கவில்லை. வீரர்களுக்கான சம்பள பாக்கி நிச்சயம் அளிக்கப்படும்’ என்றார்.
கார்த்தி நடிக்கும் பிரியாணி படத்தின் எட்டுப் பாடல்களும் இணையதளத்தில் வெளியாகி உள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளார் படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
யுவனின் இசையில் உருவாகும் 100வது படம் பிரியாணி. யுவனின் சகோதரர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்தின் பாடல்கள் மிகச் சிறப்பாக வந்துள்ளதாகவும், பிரமாண்ட விழாவில் இசைத் தட்டு வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், அனைத்துப் பாடல்களும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் யுவனுக்கு இது மிகுந்த அதிர்ச்சி அளித்துள்ளது. “முழுப் பாடல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது அதிர்ச்சியாக உள்ளது. பைரசியை ஒழித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ள”தாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரியாணி படத்தில் கார்த்தி – ஹன்சிகா – பிரேம்ஜி நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. பாடல்கள் உரிமையை சொனி நிறுவனம் பெற்றுள்ளது.
முன்பெல்லாம் படத்தின் ஒரு பாடல் அல்லது ஓரிரு காட்சிகளைத்தான் திருட்டுத்தனமாக வெளியிடுவார்கள். ஆனால் முதல்முறையாக இப்போதோ அனைத்துப் பாடல்களையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
தலைவா படம் ரிலீசாகாததால் தமிழக அரசுக்கு எதிராக விஜய் தரப்பில் வழக்குத் தொடரப் போவதாக பரபரப்பாக செய்திகள் கிளம்பியுள்ளன.
தலைவா படம் பழசாகிவிட்டாலும், அதைச் சுற்றியுள்ள பிரச்சினைகள், அதற்கு விஜய் தரப்பு எதிர்த்தும் எதிர்க்காமலும் காட்டும் எதிர்வினைகள்தான் சுவாரஸ்யமான செய்திகளாக உலா வருகின்றன.
நாளை இந்தப் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக விஜய் தரப்பு அறிவித்து, அரசிடம் அனுமதியும் கோரியது. ஆனால் கேட்ட சில மணி நேரங்களில அனுமதி மறுத்துவிட்டது தமிழக அரசு.
இப்போது புதிய திருப்பமாக, கமல்ஹாஸன் ஸ்டைலில் தமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடரப் போகிறார் என செய்திகள் கிளம்பியுள்ளன.
நாளை உண்ணாவிரதம் கைவிடப்பட்ட நிலையில், படத்தை வெளியிடும் சூழலை உருவாக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்குத் தொடரப் போகிறார்களாம் விஜய் தரப்பில். இதுகுறித்து வழக்கறிஞர்களுடன் விஜய் விவாதித்து வருகிறாராம்.
அண்மைக்காலமாக பாடசாலை மட்டத்திலும், மாகாண மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் தடகளப் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி, வெற்றிகளையும், பதக்கங்களையும் குவித்து வரும் வடக்கைச் சேர்ந்த கமலநாதன் லேகாஜினியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக ஜனனம் அறக்கட்டளை நிறுவனம் இன்று அறிவித்தது.
லேகாஜினிக்காக கழக, மாவட்ட, மாகாண மட்டப் போட்டிகளுக்கான போட்டி ஆடைகள், பயிற்சி ஆடைகள், வழக்கமான ஆடைகள் என்பவற்றோடு, போட்டிகளில் பங்குபற்றத் தேவையான விசேட காலணி, வழக்கமான பயிற்சிகளுக்கான காலணி ஆகியவற்றை ஜனனம் அறக்கட்டளையின் பிரதம அறங்காவலர் திரு விநாயகமூர்த்தி ஜனகன் இன்று கையளித்தார். அத்தோடு, லேகாஜினின் உடற்தகுதிக்குத் தேவையான ஊட்டப் பொருட்களுக்கான செலவிற்கான பணத்தை மாதந்தோறும் எதிர்வரும் ஒரு வருடத்திற்கு வழங்குவதற்கும் ஜனனம் அறக்கட்டளை முன்வந்துள்ளது.
வவுனியா சைவப்பிரகாச இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான கமலநாதன் லேகாஜினி, இந்த வருடம் நடைபெற்ற 55ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள், வவுனியா மாவட்ட தேசிய விளையாட்டு விழா, வடமாகாண தேசிய விளையாட்டு விழா என்பவற்றில் கலந்து கொண்டு 200 மீற்றர், 400 மீற்றர் மற்றும் 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அத்துடன், வட மாகாண மட்டத்தில் 200 மீற்றர் மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய சாதனையையும் அண்மையில் படைத்துள்ளார்.
வவுனியா விபுலானந்த கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியரான ரி. பத்மசொரூபன் அவர்களே லேகாஜினியின் பிரத்தியேக பயிற்சியாளராக லேகாஜினியின் வளர்ச்சிக்கு பங்களித்து வருகின்றார். அவரும், வவுனியா நகர விளையாட்டு அதிகாரி தவராஜா கமலனும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
கமலநாதன் லேகாஜினியின் திறமையை அங்கீகரிக்கும் வகையிலும், தேசிய மட்டத்தில் அவரது திறமையை அறியக் கொணரும் வகையிலும், அனுசரணையாளராக செயற்படுவதற்கு ஜனனம் அறக்கட்டளை முன்வந்துள்ளது.
இந்த அனுசரணையின் ஊடாக லேகாஜினிக்கு, தேவையான பயிற்சி உபகரணங்கள், தடகளப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான ஆடைகள் மற்றும் மேலதிக ஊட்டச்சத்து வழங்கல் என்பவற்றில் ஜனனம் அறக்கட்டளை கவனம் செலுத்தவுள்ளது.
நாடெங்கிலும் இளைஞர், யுவதிகளின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களின் திறன் அபிவிருத்திக்கான பங்களிப்பினை வழங்குதல் என்ற அடிப்படையில் தடகள விளையாட்டுக்களில் தேசிய ரீதியில் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக போராடி வரும் கமலநாதன் லேகாஜினிக்கு அனுசரணை வழங்குவதற்கு ஜனனம் அறக்கட்டளை முன்வந்துள்ளது.
விளையாட்டு வீர, வீராங்கனைகள் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் சாதனைகளைப் படைத்த பின்னர் அவர்களைத் தேடிச் சென்று அவர்களுக்கான ஆதரவை வழங்குவதை விடுத்து, அவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஆரம்பிக்கும் போதே அவர்களுக்குரிய உதவிகளை வழங்குவதன் மூலமாகவே அவர்களை உயர்த்த முடியுமென ஜனனம் அறக்கட்டளை நம்புகிறது.
“ஏனையோரின் வாழ்க்கையில் வண்ணங்களை ஏற்படுத்துவோம்” என்பதை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வரும் நிறுவகமாக ஜனனம் அறக்கட்டளை (Jananam Foundation) விளங்குகின்றது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கின் கல்வி, விளையாட்டு அபிவிருத்திகளுக்கு ஜனனம் அறக்கட்டளை தன்னாலான பணிகளைச் செய்து வருகின்றது.
வவுனியாவின் விளையாட்டு அபிவிருத்திகள், விளையாட்டு வீர, வீராங்கனைகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் கொழும்பில் போட்டிகளில் பங்குபற்றுவதற்றும் போது வடக்கு மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்றன உள்ளடங்கிய முழுமையான பேட்டிகளுக்காகக் காத்திருங்கள். க.லேகாஜினி, ரி.பத்மசொரூபன் இருவரும் இதுகுறித்து மனந்திறந்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.
பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் கறுப்புக் கொடி போராட்டமும், ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை விடுதலை அடைவதற்கு முன்பும், விடுதலை அடைந்த பின்னரும்; நேரு, இந்திரா, ராஜீவ் ஆகியோர் காலத்திலும்; ஈழத் தமிழர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட எந்த ஒப்பந்தத்தையும் நிறைவேற்றாமல் அவற்றை மீறி, சர்வதேசக் கண்ணோட்டத்தில் நம்பகத்தன்மையை முழுவதுமாய் இழந்து நிற்கிறது இலங்கை.
இந்தியாவுக்கும், தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிராகவே இலங்கை தொடர்ந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தன ஒப்பந்தத்தின்படி உருவான இலங்கை அரசமைப்பின் 13வது சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான அனைத்து வகை முயற்சிகளையும் சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இன்றைக்கு வந்துள்ள செய்தியில் கூட, கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 49 மீனவர்களில் 8 பேர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். எஞ்சிய 41 பேருக்கு ஒகஸ்ட் 21ஆம் திகதி வரை சிறைக் காவலை நீட்டித்து மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக மீனவர்களைக் கைது செய்வதும், அவர்களை இலங்கைக்குக் கொண்டு சென்று நீதி மன்றத்தில் நிறுத்துவதும், அண்மைக் காலமாக தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கடைப்பிடித்து வரும் நடைமுறையாகும். தமிழக மீனவர்களின் கதி பற்றி நமது வேண்டுகோளின்படி இந்திய அரசு இலங்கைக்குப் பல முறை கடிதங்களை எழுதியும், தூதுவரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியும் அதைப் பற்றி இலங்கை அரசு இம்மியளவு கூட காதில் போட்டுக் கொள்வதாகத் தெரிய வில்லை.
இந்தச் சூழ்நிலையிலே தான் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும், ஏன் அனைத்துத் தமிழ் மக்களும், உலகத் தமிழர்களும் ஒருமனதாக இந்திய அரசு நவம்பர் திங்களில் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று வேண்டிக் கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.
ஆனால் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வரும்படி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேரில் அழைப்பு விடுப்பதற்காக 18-8-2013 அன்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் டெல்லிக்கு வருவதாக செய்தி வந்துள்ளது.
இந்த நேரத்தில் இந்தியப் பிரதமர்; தமிழர்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தாமல்; மனதிலே கொண்டு, இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்று திட்டவட்டமாகவும், வெளிப்படையாகவும் தெரிவிக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த வேண்டுகோளையும் இந்திய அரசு புறக்கணிக்குமானால், பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்கின்ற நிகழ்வைக் கண்டித்து, தமிழ் மக்களின் உணர்வையும், கண்டனத்தையும் வெளிப்படுத்த; அந்நாளில் தமிழர் இல்லங்கள் தோறும், வணிக நிலையங்கள் தோறும் கறுப்புக் கொடி ஏற்றுதல், ரயில் நிறுத்தப் போராட்டம் போன்றவைகளில் ஈடுபட நேரிடும் என்பதை மத்திய அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் ஹபிஷாபாத் நகரை சேர்ந்தவர் சிகந்தர் ஹயாத் (35). நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் இஸ்லாமாபாத்தில் உள்ள பாராளுமன்றம் அருகே காரில் வந்து இறங்கினார்.
அங்கு தனது மனைவி, மகன்களை மனித கேடயமாக வைத்து கொண்டு தானியங்கி துப்பாக்கியால் சுமார் 6 மணி நேரம் சரமாரியாக சுட்டுக் கொண்டே இருந்தார். இதனால் மிகவும் பரபரப்பான அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த ஷமுர்த் கான் அருகே சென்று சமாதானம் செய்ய முயன்றார். அவரால் முடியவில்லை. அதை தொடர்ந்து அதிரடிப் படையினர் சாமர்த்தியமாக முன்னேறி காலில் சுட்டு அவரை மடக்கி பிடித்தனர். அவரது மனைவி, குழந்தைகளை பத்திரமாக மீட்டனர்.
நவாஸ் செரீப் அரசை நீக்க வேண்டும். பாகிஸ்தானில் ஷிரியாத் எனப்படும் இஸ்லாமிய சட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ஸ்ரீதேவி.
அழகிய இரு மகள்கள், அன்பான கணவர் என பொறுப்பான குடும்பத் தலைவியாக மாறிவிட்ட ஸ்ரீதேவி, கடந்த 15 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் ‘இங்கிலீஷ், விங்கிலீஷ்’ படத்தின் மூலம் மீண்டும் திரை உலகில் அடி எடுத்து வைத்தார்.
சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பிரபு தேவாவுடன் நடனமாடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ஸ்ரீதேவி.
தன் மகள்களின் விருப்பத்திற்காகவே அந்த நடன அரங்கேற்றம் என தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவி.
மேலும், நடனம் குறித்து அவர் கூறுகையில், நான் பொதுவாக விருது வழங்கும் விழாக்களில் நடனமாடுவது கிடையாது. எனக்கு அது வசதியான ஒன்றாக இருக்காது.
சமீபத்தில் பிரபுதேவாவுடன் நடனமாடியது கூட என் மகள்களின் கட்டாயத்தால் தான்.
அதிலும் எனது இளைய மகள் நான் நடனமாடுவது குறித்து அதிக ஆர்வமாக இருந்தாள்.
நானும் பிரமாதமாக ஆடினால் போயிற்று என்று பிரபு தேவாவுடன் நடனம் ஆடினேன்.
நான் இதுபோன்று மேடைகளில் நடனமாடுவதை பார்ப்பது இது தான் அவர்களுக்கு முதல் முறை.
இதற்கு முன் நான் இது போன்று மேடைகளில் நடனமாடிய போது அவர்கள் மிகவும் சிறிய குழந்தைகள் என்கிறார் ஸ்ரீதேவி.
உலகின் மிகப் பிரம்மாண்டமான ஒன்லைன் சொப்பிங் சேவையை வழங்கிவரும் அமேசான் தளமானது தற்போது புதிய சேவையினை அறிமுகப்படுத்துகின்றது.
இதன்படி வாடிக்கையாளர்கள் தரவிறக்கம் செய்யக்கூடிய வகையிலோ அல்லது கொள்வனவு செய்யக்கூடிய வகையிலோ மென்பொருட்கள் மற்றும் வீடியோ கேம்களை வழங்கவுள்ளது.
புதிதாக வெளியாகும் மென்பொருட்கள், கேம்களை இதனூடு பெற்றுக்கொள்ள முடிவதுடன், 10GB கொள்ளளவுக்கு அண்மையான அல்லது அதற்கு மேற்பட்ட கோப்பு அளவுகளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரித்தானியாவில் அறிமுகமாகும் இச்சேவையானது விரைவில் ஏனைய நாடுகளிலும் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை மல்லிகா ஷெராவத்தை ஆபாச நடனம் தொடர்பாக கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி மும்பையில் 5 நட்சத்திர ஓட்டலில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் பங்கேற்று நடனமாடினார்.
அவரது நடனம் பல்வேறு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இவரது நடனம் மிகுந்த ஆபாசமாக இருந்ததாக கூறி சட்டத்தரணி நரேந்திர திவாரி மற்றும் பரோடா சட்டத்தரணி சங்க முன்னாள் தலைவர் ஆகியோர் கடந்த 2007ம் ஆண்டு வதேரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் மல்லிகா ஷெராவத்துக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மல்லிகாஷெராவத் குஜராத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உச்சநீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் வதேரா நீதிமன்றம் கடந்த யூலை மாதம் 8ம் திகதி மல்லிகா ஷெராவத்தை கைது செய்ய வாரண்டு பிறப்பித்தது.
பிணையில் வெளிவரக்கூடிய வகையிலான இந்த கைது வாரண்டை எதிர்த்து மல்லிகா ஷெராவத் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையிலான பெஞ்ச் வதேரா நீதிமன்றத்திற்கு பிறப்பித்த கைது வாரண்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அல்-கொய்தா தீவிரவாத அமைப்பில் வெடிகுண்டு தயாரிக்கும் நிபுனராக கருதப்படுபவன், இப்ராகிம் அல்-அசிரி.
விமான நிலைய ஸ்கேனர்களின் பார்வையில் இருந்து தப்பிக்கும் வகையில் நவீனரக வெடி குண்டுகளை இவன் தயாரித்துள்ளதாக இங்கிலாந்து உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
பெண்கள் ஆபரேஷன் மூலமாக அமைத்துக் கொள்ளும் செயற்கை மார்பகத்தின் உள்ளே வெடிகுண்டுகளை பொருத்தி லண்டன் ஹித்ரோ விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த பெண் தீவிரவாதிகளை அல்-கொய்தா களமிறக்கியுள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து, ஹித்ரோ மற்றும் லண்டன் நகருக்கு வெளிப்புற பகுதியில் உள்ள முக்கிய விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
உடலில் பொருத்தப்பட்ட செயற்கை மார்பகங்களின் உள்ளே வெடிகுண்டையும் சேர்த்து பொருத்தி பெண் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் பெண் பயணிகளை அதி தீவிரமாக கண்காணிக்கும்படி தங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஹித்ரோ விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனுஷ்கா – சர்மி இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு பட உலகம் கிசுகிசுக்கிறது. வரலாற்று படங்களில் அனுஷ்காவுக்கு போகும் கரக்டர்களை பறிக்க சார்மி மல்லுக்கட்டுகிறார். ஏற்கனவே அருந்ததி என்ற படத்தில் நடித்து வரலாற்று படங்கள் கரக்டருக்கு பொருத்தமானவர் என பெயரெடுத்தார்.
தொடர்ந்து அதே மாதிரியான படம் வாய்ப்புகள் வந்தன. தற்போது ருத்ரமாதேவி என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தனக்கும் வரலாற்று படங்கள் பொருத்தமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்க தொடங்கியுள்ளார் சர்மி.
இதற்கு வசதியாக ஏற்கனவே வரலாற்று கரக்டரில் தான் நடித்த பட ஸ்டில்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இது அனுஷ்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் பனிப்போர் நடக்கிறது.
ஒரு நாட்டின் அதிபர் தீர்க்கவேண்டிய அத்தியாவசியப் பிரச்சினைகள் எத்தனையோ இருக்க, வெனிசுலா அதிபரான நிக்கோலஸ் மதுரோ முன் ஒரு வித்தியாசமான பிரச்சினை வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நீளக் கூந்தல் உள்ள பெண்களின் முடி தொடர்ந்து திருடப்படுகிறது. அதுவும் சில நேரங்களில் கத்தி முனையில் பெண்களை மிரட்டும் திருடர்கள், அவர்களின் கூந்தலைக் கத்தரித்து எடுத்துச் செல்கிறார்கள். பின்னர் இதனை செயற்கை முடி தயாரிப்பவர்களிடம் விற்று பணமாக்கி விடுகின்றார்கள்.
இத்தகைய திருட்டு அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மரகைபோவில் இத்தகைய திருடர்கள் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன.
இதில் விசித்திரம் என்னவென்றால், முடி வளர்க்கும் பல்வேறு பெண்களிடம், அவர்களின் முடியை குதிரைவால் போல் கட்டிக்கொண்டு வரும்படி திருடர்கள் கூறுகிறார்களாம். அப்போதுதான் அவர்களுக்கு கத்தரிக்க எளிதாக இருக்குமாம். எனினும், இதுவரை எந்த புகாரும் பெறப்படவில்லை.
காவல்துறையிடம் புகார் அளிப்பது குறித்து ஒரு பெண்ணிடம் கேட்டபோது, தன்னை கேலி செய்வார்கள் என்ற காரணத்தினால் தான் புகார் தர மறுத்து விட்டதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், தலைநகர் காரகாசில் நேற்று ஒரு ரெயில் நிலையத் திறப்பு விழாவிற்குத் தலைமை தாங்க அதிபர் மதுரோ வந்திருந்தார். அவர் தனது சிறப்புரையில், இந்த முடித் திருடர்களை பெண்களின் முடியைக் கத்தரிக்கும் மாபியா கும்பல் என்று குறிப்பிட்டார். இவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.
நிர்வாண நிலையில் யோகா செய்தபடி பெண் ஒருவர் தனது குழந்தைக்கு பால் கொடுப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் பிரபலமடைந்து வருகிறது.
ஹவாய் தீவில் அமி உட்ரப் என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.இங்கு ஆடைகள் இன்றியும் சுதந்திரமாக வசிக்கலாம்.
இந்நிலையில் அமி உட்ரப் தனது பெண் குழந்தைக்கு பால் கொடுப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த புகைப்படம் யோகப் பிரியையான அமி நிர்வாண கோலத்தில் தலைகீழாக தொங்கியபடி தனது குழந்தை நையாவுக்கு பால் கொடுப்பது போன்று உள்ளது. இதுகுறித்து அமி கூறுகையில், எனக்கு யோகாசனம் ரொம்ப முக்கியம். குழந்தைக்கு பால் கொடுப்பதும் முக்கியம்.
நான் யோகா செய்து கொண்டிருந்தபோது என் குழந்தை பசியெடுத்து என் மார்பருகே வந்தபோது அப்படியே அதற்குப் பாலூட்டினேன் இதில் தவறேதும் இல்லையே என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அமியின் இந்த செயலுக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. தாய்மையை இழிவுபடுத்தும் செயல் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் கடுமையான புதிய குடிவரவுக் கொள்கைகளை கண்சர்வேடிவ் கட்சித் தலைவரான டோனி அப்பாட் பிரேரித்துள்ளார்.
அந்நாட்டில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தற்போது தஞ்சக் கோரிக்கை நிலுவையில் உள்ளவர்களுக்கு வேலை பார்க்க கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் விதமான தற்காலிக வதிவிட உரிமை மட்டுமே வழங்குவது என்றும், நிரந்தர வதிவிட உரிமை வழங்குவதில்லை என்றுமான மாற்றத்தை இத்தேர்தலில் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏற்படுத்தும் என அப்பாட் கூறினார்.
தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்டவர்களுக்கு அம்முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருந்துவரும் உரிமை ரத்து செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தஞ்சக் கோரிக்கையாளர்கள் விவகாரம் தேர்தல் வெற்றிக்கு உதவும் என்று இரண்டு முக்கியக் கட்சிகளும் நம்புவதால், இந்த விவகாரத்தில் யார் மிகவும் கடுமையான நிலைபாட்டை எடுப்பது என்பதில் அவற்றின் தலைவர்கள் போட்டிபோடும் ஒரு சூழல் காணப்படுவதாக சிட்னியிலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.