செல்லமே படத்தின் மூலம் சினிமா உலகில் காலடி வைத்தவர் விஷால். இதுவரை 12 தமிழ்ப் படங்களில் நடித்து விட்டார். ஒருசில படங்களில் சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டியிருக்கிறார்.
இவர் நடித்த “பட்டத்து யானை” அடுத்த வாரம் ரிலீஸாக உள்ளது. அடுத்ததாக “மதகஜ ராஜா”வும் ரிலீஸிற்குத் தயாராக இருக்கிறது. இதனையடுத்து தற்போது “பாண்டிய நாடு” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதுவரை நடிகராக மட்டுமே இருந்து வந்த விஷால் சுசீந்திரன் இயக்கும் “பாண்டிய நாடு” படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார். அதைத் தொடர்ந்து இப்போது விநியோகஸ்தராகவும் அவதாரம் எடுத்து இருக்கிறார்.
பூபதி பாண்டியன் இயக்கத்தில் விஷால் ஐஸ்வர்யா அர்ஜுன் நடித்துள்ள “பட்டத்து யானை” படத்தை சென்னை முழுவதும் விஷால் தான் வாங்கி வெளியிடுகிறார்.
மேலும் தன்னுடைய நீண்ட நாள் ஆசை ஒன்றையும் வெளிப்படுத்தி இருக்கிறார் விஷால். வில்லனாக நடிக்க வேண்டும் என்பது தான் அவருடைய ஆசையாம்.
அவன் இவன் படத்தில் பெண்மை கலந்த வேடத்தில் கூட நடித்து விட்டேன். அதேபோல வில்லன் ரோலும் கிடைத்தால் மகிழ்ச்சியுடன் நடிப்பேன் என்று சொல்லியிருக்கிறார் விஷால்.
விரைவில் டி.ஆர்.எஸ் முறைக்கு மூடுவிழா நடத்தப்படலாம் என்று முன்னாள் சர்வதேச நடுவர் பொமி ஜமுலா தெரிவித்தார்.
நடுவர்கள் முடிவை தொழில் நுட்பம் மூலம் மறுபரிசீலனை செய்யும் (டி.ஆர்.எஸ்) முறைக்கு தொடக்கத்தில் இருந்தே இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளில இம்முறை பயன்படுத்தப்படுவதில்லை.
சமீபத்தில் முடிந்த ஆஷஸ் தொடர் முதல் டெஸ்டில் களத்தில் இருந்த நடுவர்கள் வழங்கிய 13 முடிவுகளில், 8 தீர்ப்புகள் மூன்றாவது நடுவரால் மாற்றப்பட்டது. இதனால் டி.ஆர்.எஸ் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியாவின் முன்னாள் நடுவர் பொமி ஜமுலா கூறுகையில், தொழில்நுட்ப அடிப்படையில் செயல்படும் டி.ஆர்.எஸ் முறை பல்வேறு நேரங்களில் சிறப்பாக இருந்தது.
ஆனால் அவ்வப்போது தவறுதலான தீர்ப்பும் தருகிறது. இன்னும் சில டெஸ்ட் போட்டிகளில் பார்க்கலாம். தொடர்ந்து தவறுகள் நேரும் பட்சத்தில் டி.ஆர்.எஸ் முறையை தூக்கி எறிந்து விடவேண்டும்.
அதேநேரம் தொழில்நுட்பங்கள் நடுவர்களுக்கு உதவியாகவும் அமையும். இதை பயன்படுத்தும் போது தான் மொழி காரணமாக சரியாக புரிந்து கொள்ள முடியாமல் போகிறது. இவர்களுக்கு சிறப்பாக பயிற்சி கொடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
நண்பன் படத்தைத் தொடர்ந்து விக்ரமை வைத்து ‘ஐ’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
இந்தப் படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், தீபாவளிக்கு வெளியிட முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘ஐ’ படத்தைத் தொடர்ந்து ஷங்கர்-விஜய் மீண்டும் இணையப்போவதாக சில நாட்களுக்கு முன்பு பரபரப்பாகப் பேசப்பட்டது.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசி இருக்கிறார் ஷங்கர். இது கதை விவாதம் நடத்துவதற்கான சந்திப்பா அல்லது நட்பு ரீதியான சந்திப்பா என்று தெரியவில்லை.
அது மட்டும் இல்லாமல் கோச்சடையான் ட்ரைலரை ஷங்கருக்குக் காட்டுவதற்காக ரஜினி அழைத்து இருக்கலாம் என்றும் கருத்துகள் நிலவுகின்றன.
ரஜினிகாந்த்-ஷங்கர் இணைந்த எந்திரன் படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்தப் படத்திற்கு இணையான வசூலை இதுவரை வேறு எந்த ஒரு படமும் முறியடிக்கவில்லை.
தற்போது ரஜினி-ஷங்கர் சந்தித்துள்ளது பல விதமான யூகங்களைக் கிளப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை மலேசிய பிரதமர் பகிஸ்கரிக்க வேண்டும் என அந்நாட்டு பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஏற்கனவே மலேசியாவில் இடம்பெற்ற இஸ்லாமிய மாநாட்டுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அது பலத்த எதிர்ப்புக்களால் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் இலங்கையில் சிறுபான்மை தமிழர்களின் முஸ்லிம்களின் வணக்கத்தலங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனை தடுக்க இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை.
எனவே இதனைக் கருத்திற் கொண்டு மலேசிய பிரதமர் பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று குலசேகரன் மலேசிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றின்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த ஆண்டு பிரேசிலில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா வெள்ளிக்கிழமை அறிவித்தது.
உலகெங்குமுள்ள கால்பந்து ரசிகர்கள் இப்போட்டிகளை கண்டுகளிக்க சுமார் முப்பது லட்சம் நுழைவுச் சீட்டுகள் விற்கப்படவுள்ளன.
இந்த டிக்கெட்டுகளின் விற்பனை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியிலிருந்து தொடங்கும்.
அதிக ஆர்வம் இருக்காது என்று கருதப்படும் ஆரம்பகட்ட போட்டிகளை காணவரும் வெளிநாட்டு ரசிகர்களுக்கு, டிக்கெட்டுகள் 90 டாலர்கள் தொடக்கம் கிடைக்கும். ஆனால் இறுதிப் போட்டிகளுக்கோ இந்தக் கட்டணம் ஆயிரம் டாலர்கள் வரை இருக்கும்.
ஆனால் வழக்கம் போல போட்டிகளை நடத்தும் நாடான பிரேசிலில் உள்ளவர்களுக்கு நுழைவுச் சீட்டுக் கட்டணங்களில் சலுகைகள் உண்டு.
அந்நாட்டினருக்கு மட்டும் நான்கு லட்சம் டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டில் போட்டிகளைக் காண விரும்பும் சில ரசிகர்களுக்கு மிகக் குறைந்த கட்டணமாக 15 டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், முதியவர்கள் அல்லது அரசின் நலத்திட்டங்களை நம்பியுள்ளவர்களுக்கே இந்தக் குறைந்த விலையான 15 டாலர் கட்டண டிக்கெட்டுகள்.
கடந்த முறை தென் ஆப்ரிக்காவில் போட்டிகள் நடைபெற்ற போது இதே போன்ற மக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட இது ஐந்து டாலர்கள் குறைவு.
இதன் மூலம் ஃபிஃபாவும், பிரேசில் உலகக் கோப்பை போட்டிகளின் ஏற்பாட்டுக் குழுவினரும், 2014 ஆம் ஆண்டு போட்டிகளுக்கான டிக்கெட் கட்டணங்கள்தான் இதுவரை இருந்துள்ளதிலேயே மிகக் குறைவானவையாக இருக்கும் என்று அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளனர் என்று பிபிசியின் பிரேசில் செய்தியாளர் கூறுகிறார்.
அனைத்து டிக்கெட்டுகளும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி முதல் ஃபிஃபா.காம் எனும் இணையதளத்தின் மூலமே விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித் ஷர்மா, புஜாரா இருவரும் சமீபத்தில் ஊடகத்துக்கு பேட்டி அளித்தனர்.
முத்தரப்பு தொடரில் தொடக்க ஆட்டக்காரராக ஆடிய அனுபவத்தை ரோகித் ஷர்மா பகிர்ந்து கொண்டார். சிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது குறித்து புஜாரா மனம் திறந்தார்.
ஆனால், கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தை மீறி இருவரும் பேட்டி அளித்துள்ளதாக கூறிய இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில்,
‘தொடர் முடிந்ததும் உடனடியாக மீடியாக்களிடம் பேசக்கூடாது என்று அவர்கள் இருவரும் எச்சரிக்கப்பட்டனர். கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த விதிமுறைகள் அவர்களுக்கு சுட்டிக்காட்டி, அதற்குட்பட்டு நடக்கும்படி கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் அறிவுறுத்தினார்’ என்றார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் மொத்தம் 39 வீரர்கள் இடம் வகிக்கிறார்கள். இவர்கள், குறிப்பிட்ட ஒரு தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பும், அந்த தொடர் முடிந்து ஒரு மாதத்திற்கு பின்பும் எந்த காரணத்தை கொண்டும் மீடியாக்களிடம் பேசக் கூடாது என்று ஒப்பந்த விதியில் கூறப்பட்டுள்ளது.
மீடியாக்களிடம் பேச தடை விதிக்கும், கிரிக்கெட் வாரியத்தின் இந்த நடவடிக்கை நியாயமற்றது என்று இந்திய முன்னாள் வீரர்கள் கீர்த்தி ஆசாத், சந்து போர்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கௌதம் மேனனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா ஜோடியாக அசின் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் ஒரு மழைக் காலம் படத்தில் இருவரையும் ஜோடியாக நடிக்க வைப்பதற்கு ஏற்கனவே கௌதம் முடிவு செய்திருந்தார். ஆனால் அப்படம் நின்று போனது.
எனவே துருவ நட்சத்திரம் படத்தில் இருவரையும் ஜோடி சேர்க்க முடிவுசெய்துள்ளார். அசின் தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் அசின் இப்படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து இந்து மக்கள் கட்சி மண்டல தலைவர் முத்து ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தமிழர் பிரச்சினையில் நடிகர், நடிகைகள் இலங்கை செல்ல திரையுலக சங்கங்கள் தடை விதித்தன.
ஆனால் அந்த தடையினை மீறி அசின் இந்தி படப்பிடிப்புக்காக இலங்கை சென்றார். எனவே அவரை தமிழ் படங்களில் நடிக்க வைக்க கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
இந்நிலையில் கௌதம் மேனன் தனது படத்தில் அசினை நடிக்க வைப்பது கண்டிக்கதக்கது. இதை அனுமதிக்க முடியாது. மேலும் தமிழர்கள் உணர்வுகளுக்கு எதிராக கௌதம் மேனன் செயல் படக்கூடாது. அசினை நடிக்க வைத்தால் படப்பிடிப்பை நடத்தவிட மாட்டோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா நௌறு தீவு அகதிகள் முகாமில் நேற்று இரவு பாரிய கலவர நிலை தோன்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏபிசி செய்திசேவையின் தகவல்படி, பெரும்பாலான இலங்கையர்கள் உட்பட்டவர்கள், அங்கு கடமையில் இருந்த பொலிஸாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் 50 பேர் வரை நேற்றிரவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். மற்றும் ஒரு செய்தியின்படி சுமார் 500 அகதிகள் தப்பிச் செல்வதற்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை அகதிகள் தமது கலவத்தை ஆரம்பித்தனர். இரண்டு மணித்தியாலங்களுக்குள் அவர்கள் நௌறு அகதி முகாமின் மத்திய பகுதியை கைப்பற்றினர்.
இதன்போது அவர்கள் கத்தி, கம்பு உட்பட்ட பல ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளனர். அத்துடன், அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த புதிய மருத்துவமனை உட்பட்ட கட்டிடங்களையும் அவர்கள் சேதப்படுத்தினர்.
இந்த சம்பவத்தின்போது சுமார் 15 பொலிஸார் காயமடைந்தனர். முகாமில் உள்ள இரண்டு இலங்கையர்கள் நேற்று தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்த சம்பவங்களை அடுத்தே இந்த கலவரநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வருபவர்கள் நேரடியாக பப்புவா நியுகினிக்கு அனுப்பப்படுவர் என்று அவுஸ்திரேலிய பிரதமர் அறிவித்த சில மணித்தியாலங்களிலேயே இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா- நெடுங்கேணி பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களினால் விசாரணைகளுக்கென அழைத்துச் செல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவன் கடுமையாக தாக்கப்பட்டு, சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒரு மாத காலத்திற்குப் பின்னர் உறவினர்களினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
யாழ்.பல்கலைக்கழக மாணவனும், முன்னாள் போராளியுமான தேவராசா பிரதீபன் என்ற 26 வயது இளைஞர் கடந்த மாதம் 15ம் திகதி வீட்டிலிருந்த சமயம் 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் விசாரணைக்கென அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து மூன்று தினங்களின் பின்னர் அதே நபர்களினால் வீட்டில் கொண்டுவந்து விடப்பட்டுள்ளார். விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டிருந்த 3 தினங்களில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன் சூடேற்றிய இரும்பு கம்பிகளால் சூடப்பட்டும், சிகரட்டினால் சுடப்பட்டும் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து உறவினர்கள் மிகுந்த அச்சத்தினால் விடயத்தை அப்படியே மூடிமறைத்துள்ளனர்.
இதேவளை குறித்த இளைஞர் திருமணமாகி ஒரு பிள்ளையின் தந்தை எனவும், முன்னாள் போராளியான இவர் புனர்வாழ்வுக்குட்படுத்தப்படாமல், குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கிராமத்தில் அயலவருடன் ஏற்பட்ட தகராறையடுத்தே விசாரணைக்கு இனந்தெரியாத நபர்கள் அழைத்துச் சென்று தாக்கி, சித்திரவதை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான பரோன் டேவிஸ் தன்னை வேற்றுக் கிரகவாசிகள் பறக்கும் தட்டுக்கு கடத்திச் சென்று மீண்டும் பூமியில் இறக்கிவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இரு வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரிலிருந்து லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை நோக்கி தான் சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.
34 வயதான பரோன் டேவிஸ் 6 அடி 3 அங்குல உயரமானவர். அமெரிக்காவின் பல்வேறு கழகங்களுக்காக விளையாடியவர். இரு தடவைகள் அமெரிக்க அனைத்து நட்சத்திர அணியிலும் இடம்பெற்றவர். இறுதியாக 2012 ஆம் ஆண்டு நியூயோர்க் நைக்ஸ் கழகத்துக்காக விளையாடியவர். 2001 ஆம் ஆண்டு குட்வில் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்க அணியிலும் அவர் இடம்பெற்றார்.
கடந்த வியாழனன்று “த சம்ப்ஸ்” எனும் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்குபற்றிய அவர் தன்னை வேற்று கிரகவாசிகள், அவர்களின் பிரதான விண்வெளிக் கலமொன்றுக்கு (பறக்கும் தட்டுக்கு) கொண்டு சென்றதாக கூறினார்.
இரு வாரங்களுக்கு முன் நான் உண்மையில் வேற்றுக் கிரகவாசிகளால் கடத்தப்பட்டேன். லாஸ் வேகாஸிலிருந்து லொஸ் ஏஞ்சல்ஸுக்கு காரை செலுத்திக் கொண்டிருந்தபோது இது இடம்பெற்றது. அவ்வேளையில் நான் சற்று களைப்படைந்திருந்தேன். திடீரென பெரும் வெளிச்சத்தைக் கண்டேன். பாரிய ட்ரக் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதாக நான் நினைத்தேன்.
அதன்பின் நான் பாதியளவு மனிதர்களைப் போன்ற அவலட்சணமான நபர்களைக் கண்டேன். அவர்கள் என்னை தமது விண்வெளி ஓடத்தின் மூலம் தமது பிரதான கலத்துக்கு கொண்டு சென்றார்கள்.” என பரோன் டேவிஸ் கூறினார்.
இதற்குமுன் வேற்றுக் கிரகவாசிகளின் பறக்கும் தட்டையும் வேற்றுக்கிரக வாசிகள் போன்ற இனந்தெரியாத நபர்களையும் கண்டதாகவும் சிலர் கூறியுள்ளனர். ஆனால், பறக்கும் தட்டுவாசிகளால் பூமியிலுள்ள மனிதர் ஒருவர் தமது பறக்கும் தட்டுக்கு கடத்தப்பட்டதாக அல்லது பறக்கும் தட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
பரோன் டேவிஸ் கூறுவதை மேற்படி நிகழ்ச்சியை நடத்திய நீல் பிரெனன், மோஷ் கேஷர் ஆகியோர் கூட நம்பவில்லை. “நீங்கள் சீரியஸாக சொல்கிறீர்களா? என செவ்வி கண்டவர்களில் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
ஆமாம். உண்மையாக. அவர்கள் எனது மூக்கில் குத்தினார்கள். எனது கண்களை உற்று நோக்கினார்கள் என டேவிஸ் பதிலளித்தார். அவர் தனது கூற்றுகளை வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு வழங்கப்பட்ட பல வாய்ப்புகளையும் நிராகரித்தார்.
எனது கைகள் கட்டப்பட்டிருந்தன. அதன்பின் நான் மொன்ட்பெல்லோவில் (லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள ஒரு நகரம்) இருந்தமைதான் எனக்குத் தெரியும்” என பரோன் டேவிஸ் சத்தியம் பண்ணாத குறையாக கூறினார். அதையடுத்து இத்தகவல்கள் அமெரிக்காவின் பல முக்கிய ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக வெளியாகின.
ஆனால் இருநாட்களின் பின்னர் நேற்று முன்தினம் தனது டுவிட்டர் பக்கத்தில், வேற்றுக்கிரகவாசிகள் விடயம் ஒரு ஜோக் என பரோன் டேவிஸ் தெரிவித்தார். அதே டுவிட்டர் செய்தியில் எனக்கு உதவுங்கள். என் வீட்டுக்கு வெளியே கறுப்பு உடையணிந்த நபர்கள் நிற்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் பரோன் டேவிஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியவை உண்மையா அல்லது பின்னர் டுவிட்டரில் கூறியது உண்மையா என பலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். வேற்றுக்கிரகவாசிகளால் கடத்தப்பட்டதாக கூறி இரண்டு நாட்கள் ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளிவரச் செய்த பரோன் டேவிஸுக்கு எதிராக அமெரிக்க அதிகாரிகளால் ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மேற்கிந்திய தீவு சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற தொடர் 1-1 என சமநிலை வகித்தது. மூன்றாவது போட்டி சென்ட் லூசியாவில் நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவு அணித் தலைவர் டுவைன் பிராவோ களத்தடுப்பை தேர்வு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பாகிஸ்தான் அணி சார்பாக மிஸ்பா 75 ஓட்டங்களையும் உமர் அக்மல் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மேற்கிந்திய தீவு சார்பில் ஜாசன் ஹோல்டர், டுவைன் பிராவோ தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவு அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க சாமுவேல்ஸ் 46 ஒட்டங்களையும், சிம்மன்ஸ் 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பின்வரிசை விக்கட்டுகள் சொற்ப ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட மேற்கிந்திய தீவு அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தான் அணி சார்பில் சயீத் அஜ்மல், ஜுனைத் கான் தலா 3, விக்கட்டுகளையும் முகமது இர்பான் 2, வாகாப் ரியாஸ் ஒரு விக்கற்றையும் வீழ்த்தின
இதன் மூலம் போட்டி சமநிலையில் முடிந்தது. தொடர் 1-1 என மீண்டும் சமநிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருதை பாகிஸ்தானின் மிஸ்பா, மேற்கிந்திய தீவின் சிம்மன்ஸ் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். இவ்விரு அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டி சென்ட் லூசியாவில் நாளை நடக்கிறது.
மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களிலும் அரசாங்கம் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையின் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற தமிழ், முஸ்ஸிம் மக்களின் மீள் குடியேற்றத்தை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் உள்ளடங்களாக மாவட்டத்தின் பல பாகங்களிலும் அரசாங்கம் 6 ஆயிரம் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
ஆனால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து சென்று வேறு இடங்களில் அகதிகளாக வாழ்ந்து வரும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான தமிழ், முஸ்ஸிம் குடும்பங்களை உரிய முறையில் அவர்களுடைய சொந்த மண்ணில் குடியேற்றம் செய்ய அரசு முயற்சிகளை மேற்கொள்ளாது அசமந்த போக்குடன் செயற்பட்டு வருகின்றது.
ஆனால் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள பல்வேறு உத்திகளை அரசு கையாண்டு வருகின்றது.
தமது மீள் குடியேற்றங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து தமது சொந்த மண்ணில் மீள் குடியேற முடியாத நிலையில் உள்ள மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை முதலில் உரிய முறையில் அரசு மீள்குடியேற்றம் செய்ய வேண்டும்.
இந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படால் சிங்கள குடியேற்றங்களை அரசு மேற்கொண்டால் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலை ஏற்படும்.
எனவே யுத்தத்தினால் பல பாதிப்புக்களையும், இழப்புக்களையும் சந்தித்த தமிழ், முஸ்ஸிம் மக்களை அவர்களுடைய சொந்த மண்ணில் உரிய முறையில் குடியேற்றம் செய்ய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்கிறது. 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
இதில் ஒரு நாள் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது.
கொழும்பில் நடக்கும் முதல் ஒரு நாள் போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
மேற்கிந்திய தீவுகளில் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் இலங்கை அணித் தலைவர் மத்தியூசிற்கு 2 ஆட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் இலங்கை அணிக்கு சண்டிமால் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி தனது பயிற்சி போட்டியில் வெற்றி பெற்று உள்ளதால் அதிக நம்பிக்கையுடன் உள்ளது.
தென்னாபிரிக்க அணி இலங்கை அணிக்கெதிராக இலங்கை மண்ணில் விளையாடிய போட்டிகள் ஒரு ஒரு போட்டியில் மாத்திரமே இதுவரை வெற்றியீட்டி இருக்கிறது. அப்போட்டி 1993ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியென்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் புகைப்படங்களை தரவேற்றம் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பலர் ஆர்வங்காட்டுகின்றனர்.
எனினும் பல புகைப்படங்களை தரவேற்றும் போது ஒன்றன் பின் ஒன்றாக தரவேற்றம் செய்ய வேண்டி இருப்பதால் நேரம் விரயமாகின்றது.
இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்தவற்கு Photo Uploader எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாக காணப்படுகின்றது.
Windows 8 இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இம்மென்பொருளின் மூலம் தரவேற்றப்படும் புகைப்படங்களுக்கு விசேட எபெக்ட் போன்றனவும் வழங்க முடிவதுடன் ஒரே தடவையில் 100 வரையான புகைப்படங்களை தரவேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.