கனடாவில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் பொருட்டு விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
கனடாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது.
இதனை குறைக்கும் பொருட்டு விசா விதிமுறைகளை அரசு கடினமாக்கியுள்ளது.
விதிமுறைகள்:
1. புதிய விசா விண்ணப்ப படிவங்களுக்கு திருப்பிக் கிடைக்காத வகையில் புதிய கட்டண விகிதங்கள் போடப்பட்டுள்ளன.
2. புதிய ஊழியர் தேவை என்றால், முதலில் உள்ளூர் பத்திரிகைகளில் மூன்று மாதங்களுக்கு முன்னால் தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு அளிக்கப்படவேண்டும்.
3. இதுமட்டுமில்லாமல் நிறுவனதாரர்கள் குறைந்தது இரண்டு முறைகளிலாவது இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிரூபிக்க வேண்டும்.
4. ஆங்கிலமும் பிரெஞ்ச் மொழியும் தெரிந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுதல் வேண்டும்.
இது இல்லாமல் யாரேனும் தெரிவு செய்யப்பட்டால், அதற்கு வலுவான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.
கனடா நாட்டவர்களுக்கு அளிக்கப்படும் சராசரி ஊதியத்தைவிட 15 சதவிகிதம் குறைவாகக் கொடுப்பதன் மூலம் ஒரு வெளிநாட்டவரை இங்கு பணியில் அமர்த்தலாம் என்ற நடைமுறை இதுவரை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது
2014 ம் ஆண்டில் வட பகுதிக்கு முழுமையாக மின்சார வசதி அளிக்க உள்ளதாக இலங்கையின் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்திற்கு தடையின்றி சீராக மின்சாரம் வழங்குவதற்காக 3300 மில்லியன் ரூபா செலவில் சுன்னாகத்தில் உப மின் நிலையமென்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த மாதம் திறந்து வைக்கவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஒரு இலட்சத்து 32 ஆயிரம் வோல்ட் கொண்ட அதி உயர் மின் அழுத்த மின் விநியோக மார்க்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு ஏற்கெனவே வழங்கப்படும் மின் விநியோகம் அதி உயர் அழுத்த மின்சாரத்தை கொண்டதாக மாற்றப்பட உள்ளது.
நேற்று புதிய மின் விநியோக மார்க்கத்தினூடாக பரீட்சார்த்தமான மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது.
இதேவேளை யுத்தம் காரணமாக வடக்கின் அநேக பகுதிகளின் மின் விநியோக கட்டமைப்பு முழுமையாக சேதமடைந்தன. மின்சாரத்தை என்றும் கண்டிராத பல பகுதிகளுக்கு புதிதாக மின்சார வசதி அளிக்கப்பட்டு வருகிறது. யுத்தம் முடிவடைந்த பின் முதலில் அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரை மின் விநியோக மார்க்கம் அமைக்கப்பட்டது.
தற்பொழுது யாழ்ப்பாணத்திலுள்ள சகல நகரங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள் என்பவற்றுக்கு 100 வீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி பகுதிக்கு 67 வீதமும் யாழ். மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு தலா 90 வீதமும் மன்னார் மாவட்டத்திற்கு 80 வீதமும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 50 வீதமும் மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. என்றார் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.
இந்தோனேசிய படகு விபத்தில் உயிரிழந்த இலங்கையர்களின் விபரங்களை இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. இறந்தவர்களின் உறவினர்களைக் கண்டறிவதற்கு பொது மக்களின் உதவியை வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.
இவ்விபத்தில் உயிரிழந்த யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த அல்பிரட் பன்ங் அன் செலானின் சடலம் அவரின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
திவ்யா ஒன்றரை வயது பெண் குழந்தை, ரொனால்ட் 33 வயது ஆண், இன்ஜா 7வயது பெண் குழந்தை, டனிசன் 5 வயது ஆண் குழந்தை இவர்களது சடலங்கள் கிடைக்கப் பெற்றிருப்பதுடன், இவர்களது உறவினர்கள் உடனடியாக வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
20 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படவில்லையென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சு கொன்சியூலர் பிரிவு இல, 14 சார் பாரன் ஜயதிலக மாவத்தை கொழும்பு 1 என்ற முகவரிக்கோ அல்லது 0112437635 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது 0112473899 என்ற தொலைநகல் இலக்கத்துடனோ அல்லது consular@sltnet.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவோ விபரங்களை அறிந்துகொள்ள முடியுமென்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு ஜவாகி சியான்ஜர் கடற்பரப்பில் கடந்த ஜூலை 23ம் திகதி இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களுள் இலங்கையர் என்று சந்தேகிக்கப்படுபவர்களின் விபரங்களையே வெளிவிவகார அமைச்சு இவ்வாறு வெளியிட்டுள்ளது.
கிளிநொச்சி பிரமந்தனாற்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரமந்தனாறு சுண்டிக்குளம் வீதியில் இரவு 8.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அடித்துக் கொலை செய்யப்பட்டவர் மோட்டார் சைக்கிளில் வெளிச்சம் இல்லாமல் செல்வதாகவும் இதனால் சைக்கிளில் செல்லும் இளைஞர்கள் அவருடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் இறந்தவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் தொடர்பாக நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 30 ஆம் திகதி வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இறந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் கையளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய், அமலபால் ஜோடியாக நடித்து, இயக்குனர் விஜய் இயக்கியுள்ள படம் தலைவா. இந்த படத்தை வெளியிட்டால் திரை அரங்குகளில் குண்டு வைப்போம் என்று ஒரு தரப்பினர் மிரட்டல் விடுத்ததன் காரணமாக படம் குறிப்பிட்ட திகதியில் வெளியாவது தடைபட்டது.
இருப்பினும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் தலைவா’குறிப்பிட்ட திகதியில் வெளியானது. இதனால், இப்படத்தின் திருட்டு விசிடிக்கள் புழக்கத்தில் வர ஆரம்பித்துள்ளன. இதனால் படக்குழுவினர் பெரும் பிரச்சினையை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் சென்னை காவல்துறை ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தலைவா திரைப்படம் கடந்த ஆக 9ம் திகதி உலகமெங்கும் வெளியாகி இருந்தது. ஆனால் திரையரங்குகளுக்கு வந்த மொட்டை கடிதங்களாலும், தொலைபேசி மிரட்டல்களாலும் திரையரங்கு உரிமையாளர்கள் தலைவா திரைப்படத்தினை வெளியிட மறுத்து வருகிறார்கள்.
இதனால் தமிழகத்தில் மட்டும் தடைசெய்யப்பட்டு திரைக்கு வெளிவராத சூழல் அமைந்துள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மிகுந்த பொருள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை தவிர உலகமெங்கும் வெளியான காரணத்தினால் தலைவா திரைப்படம் அனுமதியின்றி இணையதளத்திலும், விசிடி வழியாகவும் தமிழகமெங்கும் புற்றீசல் போல பரவி உள்ளது.
தமிழகத்தில் தலைவா திரைப்படம் வெளிவர பல வகையில் முயற்சித்தும் திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிடாத காரணத்தினால் தலைவா படத்தில் நடித்த நடிகர் விஜய், சத்யராஜ், அமலாபால் மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளும், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், இயக்குனர் விஜய், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தலைவா திரைப்படம் தமிழகத்தில் உடனடியாக வெளியாக வேண்டி ஆக.16 அல்லது 17 திகதி அரசு அனுமதி கொடுக்கும் இடத்தில் அடையாள உண்ணாவிரதம் இருக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். அதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கிரிக்கெட் லீக் போட்டியில் ஒரு பெண் வீராங்கனை, ஆண் வீரர்களுடன் இணைந்து விளையாடி புதிய வரலாறு படைத்துள்ளார்.
அவரது பெயர் கோலே வால்வெக். 20 வயதான இவர் போல்டன் அசோசியேஷன் லீக் போட்டியில் கலந்து கொண்டு வால்ஷா அணி சார்பாக விளையாடினார்.
இந்த அணி கோல்பேன் அணிக்கு எதிரான போட்டியில் மோதியது. வால்ஷா அணியில் சக வீரர்கள் அனைவரும் ஆண்களே. கோலே மட்டும்தான் பெண் ஆவார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆண்களோடு இணைந்து ஆடிய முதல் பெண் என்ற பெருமை கோலேவுக்குக் கிடைத்தது.
போல்டன் அசோசியேஷன் லீக் 125 ஆண்டு கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதாகும். இந்த வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் ஆண்களுடன் இணைந்து ஆடியது இதுவே முதல் முறையாகும்.
பந்து வீச்சாளரான கோலே 11 ஓவர்கள் பந்துகளை வீசி 4 விக்கெட்களையும் பறித்து சாதனை படைத்தார். இதன் மூலம் தனது அணிக்கும்அவர் வெற்றி தேடித் தந்தார்.
வெற்றிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” நான் ஆட வந்தபோது அனைவரும் என்னைப் பார்த்து சிரித்தனர். ஆனால் எனக்குக் கிடைத்த வாய்ப்பை நான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். அணியில் நான் மட்டுமே பெண்ணாக இருந்ததை நான் கவலைப்படவில்லை” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ” நான் பந்து வீச முயன்றபோது என்னை அவர்கள் கேலி செய்தனர். ஆனால் அதைப் பொருட்படுத்தவில்லை” என்றார். கோலே, தனது 8 வயது முதலே வால்ஷா அணிக்காக ஆடி வருபவர் ஆவார். மேலும் அவர் கால்பந்திலும் விளையாடுகிறார்.
பங்களாதேஷில் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில், இடம்பெற்ற ஆட்ட நிர்ணய சதி குறித்த தகவலை மறைத்ததாக இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த தொடரின் போட்டி ஒன்றில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுமாறு இலங்கை வீரர் ஒருவர் அணுகப்பட்ட போதும் அதனை அவர் நிராகரித்துள்ளார். எனினும் இது குறித்த அவர் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு தகவல் வழங்கி இருக்கவில்லை.
இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள வீரர் நேற்றையதினம் இலங்கை கிரிக்கட் நிறைவேற்று குழுவின் முன்னால் அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது .
குற்றம் சுத்தப்பட்டுள்ள வீரர் முன்னர் இலங்கை கிரிக்கட் அணியில் விளையாடி இருந்த போதும் பின்னர் சரியாக திறமையை வெளிப்படுத்தாக காரணத்தினால் அணியில் இருந்து நீக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரின் டாக்கா கிளேடியேட்டர் அணியில் பங்கு பற்றி இருந்த 9 வீரர்கள் ஆட்டநிர்ணய சதி தொடர்பான குற்றச்சாட்டுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது அவர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த விசாரணைகள் நிறைவடையும் வரையில் குறித்த 9 வீரர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படமாட்டாது என்று சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.
குறித்த 9 வீரர்களில் 7 பேர் மீது பணத்துக்காக போட்டியில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதேநேரம் இருவர் இந்த ஆட்ட நிர்ணயம் குறித்த தகவல்களை அறிந்திருந்த போதும், அதனை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவிக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆட்ட நிர்ணய சதி குறித்த தகவல்களை வழங்காத இரண்டு வீரர்களில் ஒருவர் இலங்கையர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரின் பெயர் விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
1 கோடி வாய்ப்பை ஏற்கத் தயங்கியது தான் கோடம்பாகத்தை ஆச்சரியமாக பார்க்க வைத்துள்ளது. நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் தவிர்த்து விளம்பர பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.
என்ன தான் அதிக சம்பளம் கொடுத்தாலும் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்கிறார்.
இந்நிலையில் பிரபல புடவை நிறுவனம் ஒன்று நயன்தாராவை அணுகி எங்கள் விளம்பர தூதராக இருங்கள், உங்களுக்கு 1 கோடி சம்பளம் தருகிறோம் என்று தெரிவித்துள்ளது.
கோடியைக் கேட்டதும் நயன்தாரா உடனே ஒப்புக் கொள்ளவில்லையாம். யோசித்து கூறுகிறேன் என்று அவர்களை அனுப்பி வைத்துவிட்டாராம். இப்படி வாசல் தேடி வந்த கோடியை நயன்தாரா ஏற்க தயங்குகிறாரே என்று கோடம்பாக்கத்தினர் ஆச்சியப்படுகிறார்களாம்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாராவின் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆரம்பம். இப்படத்தின் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கி கொண்ட அஜித் ஒருவழியாக மீதிப் படத்தை முடித்துக் கொடுத்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறுகையில் கடந்தாண்டு தொடங்கப்பட்ட இப்படத்திற்கு சமீபத்தில் தான் பெயர் சூட்டியுள்ளோம்.
இதில் அஜித் உட்பட அனைவருமே தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
இப்படத்திற்காக படு பயங்கரமான சண்டைக் காட்சி ஒன்று மும்பையில் படமாக்கப்பட்டது. அதில் அஜித் ஓடும் ஒரு காரிலிருந்து, மற்றொரு காரில் தாவுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக அஜித் விபத்தில் சிக்கியதில் வலது காலில் அடிபட்டது. ஆர்யா தான் அந்த காரை ஓட்டிச் சென்றார். இதில் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய அஜித் வலியை பொறுத்துக் கொண்டு நடித்துக் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்து வரும் அஜித், படம் முடிவடைந்த பின்பு அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தில் காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருந்த போது ஆந்திர எம்.பி ஒருவர் படுத்து உறங்குவது போன்று வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் இரு பிரிவினருக்கு இடையே ரம்லான் அன்று கடந்த 9ம் திகதி ஏற்பட்ட கலவரத்தில் மூன்று பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து அங்கு சில மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் நிலவும் இந்த கவலைக்கிடமான நிலை குறித்து சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை ஒன்றை வாசித்தார்.
இதற்கு முதலில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம் குறித்தும், குறிப்பாக அங்கு சென்ற போது தான் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்தும் பேசினார்.
இப்படியாக தொடர்ந்து விவாதம் நடந்து கொண்டிருந்த வேளையில், ப.சிதம்பரத்திற்கு பின்னால் அமர்ந்திருந்த ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.பி பால்வை கோவர்த்தன் ரெட்டி நன்கு உறங்கிக் கொண்டிருந்தது அங்கிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமுடியைப் பற்றி மிகவும் இளக்காரமாக நினைப்பவர்கள் நாம். வந்தமுப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது.
அப்படி தலை முடி உதிர்வதை தடுக்க, மீண்டும் வளர உள்ள வழிமுறைகளை கீழே படியுங்கள்
* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
* வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
* இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
* முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
* காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
* தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
* செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
* நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
* முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.
* முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
* காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
* சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
மெய்ன் ஹூன் அப்ரிடி படத்தில் வரும் முத்தக் காட்சி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷகிட் அப்ரிடியை கோபமடைய செய்துள்ளது.
பாகிஸ்தானில் எடுக்கப்பட்டுள்ள படம் மெய்ன் ஹூன் அப்ரிடி. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷகிட் அப்ரிடியை போன்று ஆக வேண்டும் என்று அசைப்படும் ஒரு இளைஞனின் கதை தான் மெய்ன் ஹூன் அப்ரிடி.
இந்த படத்தில் ஹீரோ நைட் கிளப்பில் ஒரு பெண்ணை கட்டிப்பிடித்து முத்தமிடும் காட்சி உள்ளது. இந்த காட்சியை படத்தின் டிரெய்லரில் வைத்துள்ளனர். இதைப் பார்த்த அப்ரிடி கடுப்பாகிவிட்டார்.
படம் குறித்து அவர் கூறுகையில், மெய்ன் ஹூன் அப்ரிடி படம் என் வாழ்க்கையைப் பற்றியது அல்ல. குழந்தைகள் மத்தியில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் தான் நான் இந்த படத்திற்கு அனுமதி அளித்தேன்.
ஆனால் அந்த படத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத காட்சிகள் இருக்கக் கூடாது. பல குடும்பங்கள், குழந்தைகள் எனக்காக இந்த படத்தை பார்க்கச் செல்வார்கள். அவர்கள் படத்தை பார்த்துவிட்டு வருத்தப்படக் கூடாது. அதனால் அந்த காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்வார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
டெக்சாஸைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷலின் புதிய வளர்ப்பு மகன் என்று கூறி அவரது வங்கிக் கணக்கு விவரங்களை சேகரித்து பணம் எடுக்க முயன்று கைதாகியுள்ளார்.
டெக்சாஸைச் சேர்ந்த ஜொனி பிளெட்சர் கூடன் ஜுனியர் (29) என்பவர் பிரையனில் உள்ள சேஸ் வங்கிக்கு சென்றுள்ளார். வங்கி ஊழியரிடம் தான் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷலின் வளர்ப்பு மகன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
மிஷலின் வங்கிக் கணக்கு குறித்த விவரங்களை அவர் கேட்டுள்ளார். வங்கி ஊழியருக்கு ஜொனி பொய் சொல்கிறார் என்று தோன்றியதால் அவரை வங்கியை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.
மிஷலுக்கு இந்த வங்கியில் கணக்கு இல்லை என்று கூறியும் அவர் வெளியே செல்ல மறுக்கவே பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். பொலிசாரிடம் அவர் கூறுகையில் மிஷல் என்னை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு தத்தெடுத்துக் கொண்டார்.
அதனால் தான் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க வந்தேன் என்றார். ஆனால் பொலிசார் கேட்ட கேள்விகளுக்கு ஜொனியால் பதில் கூற முடியவில்லை. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு பிராஸோஸ் கவுன்ட்டி சிறையில் அடைக்கப்பட்டார்.
கணவர் இறந்த 2 மாதத்தில் நடிகரும் இயக்குனருமான மணிவண்ணனின் மனைவி செங்கமலம் மரணம் அடைந்தார்.
இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் கடந்த ஜூன் மாதம் 15ம் திகதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு செங்கமலம்(55) என்ற மனைவியும், ரகுவண்ணன் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர்.
செங்கமலத்தால் கணவர் திடீர் என்று இறந்த அதிரிச்சியில் இருந்து மீள முடியவில்லை. அவர் மகனுடன் சென்னை கே.கே.நகர் ஜெய்பாலாஜி நகர் திருமலை தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனில்லை. இந்நிலையில் அவர் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். செங்கமலத்தின் உடலுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த திரையுலகினர் செங்கமலத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது.
இலங்கையின் முன்னாள் சர்வதேச கிரிக்கட் நடுவர் செல்லையா பொன்னுத்துரை காலமானார். தமது 78 வது வயதில் அவர் காலமானதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
1985ம் ஆண்டு இலங்கை அணி டெஸ்ட் போட்டியொன்றில் முதல் வெற்றியை இந்தியாவுக்கு எதிராக பதிவுசெய்தபோது அதில் பொன்னுதுரையே நடுவராக கடமையாற்றினார்.
பொன்னுத்துரை 1985-93 காலப்பகுதியில் 3 டெஸ்ட் போட்டிகளுக்கும் 8 சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கும் நடுவராக செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.