இடியுடன் கூடிய கனமழை : வட கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில்..

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் (09) நாளையும் (10) மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு, ஊவா ,மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் பொலநறுவை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என்றும் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, பொத்துவில், ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதேவேளை, 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்கு அல்லது கிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கல்குவாரி ஒன்றில் இருந்து கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சடலமாக மீட்பு!!

வவுனியா, வீரபுரம் பகுதியில் வசித்து வந்த குறித்த நபர் கால்நடைவளர்ப்பு மற்றும் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் குறித்த நபரை கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போன நிலையிலே நேற்று (08.01) மாலை குறித்த நபர் விவசாய செய்கையினை மேற்கொள்ளும் காணிக்கு அருகில் உள்ள கல்குவாரி குழியில் உள்ள நீரில் மிதந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சடலம் செட்டிகுளம் பொலிசாரால் இரவு மீட்கப்பட்டதுடன், சடலத்தினை திடீர் மரண விசாரணை அதிகாரி க.ஹரிபிரசாத் பார்வையிட்டிருந்தார்.

03 பிள்ளைகளின் தந்தையான சுப்பையா மருதன் என்ற 78 வயதுடைய முதியவரே சடலமாக மீட்கப்பட்டவரார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் ஸ்கானர் இயந்திரத்துடன் வைத்தியர் உட்பட மூவர் கைது!!

வவுனியாவில் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான ஸ்கானர் இயந்திரம் ஒன்றை 15 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற வைத்தியர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (08.01) அதிகாலை பொலிஸாரின் விசேட புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் இணைந்து குறித்த மூவரையும் கைது செய்து வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இளைஞர் ஒருவர் புதையல் தோண்டும் ஸ்கானர் இயந்திரம் ஒன்றை விற்பனை செய்வதற்காக பொலிஸ் புலனாய்வு பிரிவு எனத் தெரியாது, புலனாய்வு பிரிவினரிடம் விலைபேசியுள்ளார்.

குறித்த ஸ்கானர் இயந்திரத்தை 15 இலட்சம் ரூபாய்க்கு விலை பேசிய அவர், கார் மற்றும் ஹயஸ் ரக வாகனம் என்பவற்றில் குறித்த ஸ்கானர் இயத்திரத்தை வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இதன்போது அங்கு நின்ற பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் இணைந்து குறித்த ஸ்கானர் இயந்திரத்தை கைப்பற்றியதுடன், அதனை உடமையில் வைத்திருந்த வைத்தியர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்ததுடன், அவர்கள் பயணித்த வாகனத்தையும் மீட்டனர்.

34 வயதுடைய மதாவாச்சியை சேர்ந்த வைத்தியர், 38 வயதுடைய வவுனியா மணிபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் மற்றும் வவுனியா கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டவர்களாவர்.

மீட்கப்பட்ட ஸ்கானர் இயந்திரம் மற்றும் கைது செய்யப்பட்ட மூவரும் வவுனியா பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

1500 பரத நாட்டிய கலைஞர்களுடன் திருகோணமலையில் நடைபெற்ற பொங்கல் விழா!!

திருகோணமலையில்..

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானைகள் ,1500 பரத நாட்டிய கலைஞர்கள் மற்றும் 500 கோலப் போட்டியாளர்களுடன் பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது. குறித்த நிகழ்வானது இன்று (08.01.2024) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலையில் நடைபெற்று வருகின்றது.

பொங்கல் விழாவை வரவேற்கும் முகமாக நேற்றுமுன்தினம் ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெற்ற நிலையில் தொடர்ச்சியாக பல விளையாட்டுக்கள் இடம்பெற்று வருகின்றன.மேலும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக நடிகர் பிரசாத் , அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்த கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முச்சக்கர வண்டியில் ஏறிய பெண் : சினிமா பாணியில் செய்த அதிர்ச்சி செயல்!!

இரத்தினபுரியில்..

இரத்தினபுரி – கொடகவெல பகுதியில் பயணம் செய்ய வேண்டும் என கூறி முச்சக்கர வண்டியில் ஏறிய பெண் சாரதியை கொலை செய்துவிட்டு முச்சக்கர வண்டியை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதியின் கழுத்தில் துணியால் கட்டி அழுத்தியதுடன், முகத்தை மூடிக்கொண்டு கொள்ளையடிக்க முயன்ற குற்றச்சாட்டில் குறித்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடகவெல நகரில் இருந்து முச்சக்கரவண்டியில் ஏறிக்கொண்ட யுவதி, கொடகவெல ரன்வல வீதியில் இரண்டு கிலோமீற்றர் பயணித்த போது முச்சக்கரவண்டி சாரதியின் பின் இருக்கையில் இருந்து முன் இருக்கை வரை கழுத்தில் துணியால் அழுத்தப்பட்டதாக சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது முச்சக்கரவண்டியை கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி நின்றுள்ளது. அங்கு வந்த கிராம மக்கள் சந்தேகமடைந்த பெண்ணை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி கொடகவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான பெண் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொடகவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடு செல்ல தயாரான தாய், தந்தை மரணம் : உயர்தர பரீட்சை எழுதும் மகள்!!

பத்தேகமவில்..

பத்தேகம ஹல்பதோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் கணவன் – மனைவி உயிரிழந்துள்ளனர். கடந்த 6 ஆம் திகதி மாலை கெப் வண்டி ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பிரசன்ன குருசிங்க என்ற 42 வயதுடைய நபரும் 38 வயதுடைய கங்கா நில்மினி என்ற அவரது மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த தம்பதியினரின் பிரேத பரிசோதனை நேற்று காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி மகேஷ் தர்மரத்னவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. “என் அம்மாவும் அப்பாவும் இறந்து விட்டார்கள். நான் அம்பேகம கல்லூரியில் படிக்கிறேன். இந்த ஆண்டு உயர்தர பரீட்சை எழுதுகிறேன். தம்பி அதே பாடசாலையில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

வெளிநாட்டு வேலைக்கு செல்லும் எதிர்பார்ப்புடன் மத்துகம பிரதேசத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் அம்மா பயிற்சி பெற்று வந்தார். கடந்த 6ம் திகதி பயிற்சி முடிவடைந்ததால், தாயை அழைத்து வர தந்தை மோட்டார் சைக்கிளில் சென்றார். வீட்டுக்கு வரும்போது அம்மா என்னை தொலைபேசியில் அழைத்து மழையால் வீட்டிற்கு வர தாமதமாகிவிடும் என்பதனால் தனியாக இருக்காமல் அயல் வீட்டிற்கு செல்லுமாறு கூறினார்.

இரவு 9.00 மணியளவில் தாயும் தந்தையும் விபத்துக்குள்ளாகி எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கராப்பிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் என உயிரிழந்த தம்பதியின் மூத்த மகள் தெரிவித்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டியை வர்த்தகரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முருங்கைக்காயின் விலை 3 ஆயிரம் ரூபா!!

முருங்கைக்காய்..

சந்தையில் முருங்கைக்காய் கிலோ ஒன்றின் விலை 3,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் இவ்வாறு முருங்கைக்காயின் விலை அதிவேகமாக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, முருங்கைக்காய் ஒரு கிலோ கிராமின் மொத்த சந்தை விலை 2,500 ரூபாவாக காணப்படுகின்றது. சந்தைகளில் மரக்கறிகளின் வரத்து குறைவடைந்துள்ளதன் காரணமாக இவ்வாறு வேகமான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக பெய்த கடும் மழையின் தாக்கம் காரணமாக விவசாய செய்கை நிலங்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் மரக்கறிச் செய்கையும் பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக மலைநாட்டில் உற்பத்தி செய்யப்படும், போஞ்சி, கரட், முட்டை கோவா உள்ளிட்ட மேலும் பல மரக்கறிகளும் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி உள்ளிட்டவற்றின் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது. இதேவேளை, ஒரு சில இடங்களில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடான நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடியை விமர்சித்த அமைச்சர்கள் மூவர் இடைநீக்கம்!!

அமைச்சர்கள் மூவர் இடைநீக்கம் ..

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்த மாலைதீவைச் சேர்ந்த அமைச்சர்கள் மூவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட SNORE KILLING எனப்படும் ஆழ்கடல் நீச்சலுக்கான உடையில் இருந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

பிரதமர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு மாலைதீவுக்குப் பதிலாக லட்சத்தீவைப் பரிந்துரைக்கும் விதத்திலும் அமைந்தன. இதையடுத்து மாலைதீவு அமைச்சர்களான மரியம் ஷியுனா, மல்ஷா மற்றும் ஹசன் ஜிஹான் ஆகியோர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

அமைச்சர்களின் கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்,மாலைதீவு அரசாங்கம் குறித்த அமைச்சர்கள் மூவரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தது. அதோடு அது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் உயர்மட்ட நபர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தரக்குறைவான கருத்துக்கள் பதிவேற்றப்பட்டு இருப்பது அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.

இந்த கருத்துகள் தனிப்பட்டவை. அவை மாலைதீவு அரசாங்கத்தின் கருத்துகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை. இதுபோன்ற தரக்குறைவான கருத்துகளை கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மாலைதீவு அமைச்சர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தமது பயணத்தை இரத்து செய்துள்ளனர்.அத்துடன் Boycott maldives என்ற ஹேஷ்டேக்கும் இணையங்களில் தற்போது டிரென்டாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காதலை மறுத்ததால் யுவதிக்கு நேர்ந்த பயங்கரம்!!

பிலியந்தலையில்..

தன் காதலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் காதலன் காதலியைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. இந்தச் சம்பவம் பிலியந்தலை பிரதேசத்தில் இன்று (07) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய இளைஞர், கொலைக்குப் பயன்படுத்திய கத்தியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த 26 வயதான ஜே.எம். ஆயிஷா லக்மினி என்ற யுவதியே கொலை செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட யுவதி தனது தாய், தந்தை மற்றும் சகோதரருடன் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் பிலியந்தலை பிரதேசத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான காதலனுடன் கொல்லப்பட்ட யுவதி சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் காதல் உறவில் இருந்த நிலையில், பின்னர் கடந்த மூன்று மாதங்களாகத் தனது காதலனைத் தவிர்த்து வந்தமை சந்தேகநபரின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளதாகவும் பிலியந்தலை பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

தென்னிலங்கையில் உயிரிழந்த ஆறு வயதுச் சிறுவன்!!

களுத்துறையில்..

களுத்துறையில் இடம்பெற்ற விபத்தில் ஆறு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெலவத்த நெலுவ வீதியில் தேயிலை ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றில் வீழ்ந்தமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளதாக தினியாவல பொலிஸார் தெரிவித்தனர். யட்டபான 9 மைல்கல் பகுதியில் வசிக்கும் ஆதித்ய புன்சர என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். பெலவத்தையில் இருந்து தினியாவல நோக்கி பயணித்த லொறி யட்டபாத 9 மைல்கல் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் மெகதன்ன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலதிக விசாரணைகளை தினியாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை நடிகை மீது பாலியல் துஸ்பிரயோகம்!!

இலங்கையில்..

இலங்கையின் 23 வயதுடைய பிரபல நடிகை ஒருவரை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிலியந்தலை, ஜாலியகொட பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோதே இந்த அசம்பாவித்திற்கு நடிகை முகம் கொடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மொரட்டுவ கட்டுபெத்த பிரதேசத்திலிருந்து முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென முச்சக்கரவண்டியை வீதிக்கு அருகில் நிறுத்தி, தொழில்நுட்ப கோளாறை சரிபார்ப்பதாக கூறிய சாரதி, நடிகையை துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்துள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபரை நடிகை தள்ளிவிட்டு முச்சக்கரவண்டியிலிருந்து குதித்து தப்பித்துள்ளார். இதனையடுத்து முச்சக்கரவண்டியின் சாரதி நடிகையை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தின் பின்னர் முச்சக்கரவண்டி கொழும்பு ஹொரணை வீதியூடாக பொரலஸ்கமுவ நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்த மகளின் கல்லறைக்கு சென்ற தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இலங்கையில்..

பதுளை மாவட்டத்தில் உயிரிழந்த யுவதியின் சடலம் புதைக்கப்பட்ட பின்னர் சடலத்தை சவக்குழியில் இருந்து மீண்டும் தோண்டி​ எடுத்து, ஆடைகளை கழற்றி நிர்வாணமாக விட்டுச்​ சென்றுள்ளதாக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பண்டாரவளை பதுலுகஸ்தான பகுதியைச் சேர்ந்த 24 வயதான ரஷ்மிகா மதுஷானி என்ற இளம் பெண் நிமோனியா காய்ச்சலால் கடந்த புதன்கிழமை (03.01.2024) உயிரிழந்துள்ளார். இதையடுத்து அனைத்து மத சடங்குகளுக்கு பின் இளம் பெண்ணின் சடலம் அடுத்த நாள் புதைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த யுவதியின் பிறந்த தினமான இன்று (07.01.2024) யுவதியின் தந்தை கல்லறைக்குச் சென்றுள்ளார். அப்போது ​​தனது மகளின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, ஆடைகள் இன்றி நிர்வாணமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து, இது தொடர்பில் பண்டாரவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் குறித்து பண்டாரவளை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரியவருகின்றது.

வடையை மட்டுமல்ல தங்கத்தையும் களவாடிய காகம் : வெளிவந்த சுவாரஸ்ய சம்பவம்!!

கேரள மாநிலத்தில்..

சிறுமியின் தங்க வளையலை தூக்கிச்சென்று காகமொன்று கூடு கட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு காப்பட் பகுதியை சேர்ந்த தம்பதியினர் நசீர் மற்றும் ஷரீப, திருமண நிகழ்வொன்றுக்கு சென்றுள்ளனர். அதன் போது அவரது சிறிய மகளையும் தங்க நகைகள் அணிவித்து அழைத்துச் சென்றுள்ளனர்.

திருமணம் முடிந்து மீண்டும் வீடு திரும்பிய பின்னர் சிறுமி தங்க வளையலை கழற்றி கடதாசியில் சுற்றி வீட்டில ஓர் இடத்தில் வைத்துள்ளார். மீண்டும் ஒருநாள் அவர்கள் உறவினர் வீட்டுக்குச் செல்லும் சிறுமியின் வளையலை தேடிப்பார்த்த போது அது மாயமாகியிருப்பது தெரியவந்துள்ளது.

அதையடுத்து அவர்கள் பாத்திமா நகையை கழற்றி வைத்த இடம் உட்பட வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் நகைகள் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பதற்றமடைந்தனர். அவரும், பையின் மீது வைத்ததாக கூறினார்.

ஆனால், அந்த இடத்தில் பார்த்த போது வளையல் இல்லாததால் அவர்கள் வேதனையடைந்தனர். இந்நிலையில், அவர்களின் உறவினர்கள் காகம் ஒன்று பிளாஸ்டிக் வளையல் மற்றும் சிறு குச்சி போன்றவற்றை தூக்கி சென்றதை பார்த்துள்ளனர்.

அதனால், தங்களது தங்க வளையலையும் தூக்கிச் சென்றிருக்கக்கூடும் என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது, இதன்பின்னர், சிறுமியின் உறவினர் காகம் கூடு கட்டி வைத்திருந்த தென்னை மரத்தில் ஏறி பார்த்தனர். அப்போது சிறுமியின் தங்க வளையல் இருந்தது, அவர் அதனை எடுத்து சிறுமியின் தாயிடம் கொடுத்துள்ளார்.

புதிய வரி நடைமுறை : வாகனம், காணி கொள்வனவு செய்வோருக்கு முக்கிய தகவல்!!

இலங்கையில்..

இலங்கையில் ஒருவர் வாகனம், நிலம் அல்லது வீடு வாங்கினால் மட்டும் அந்த நபர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊழியர்களாக பணிபுரிந்து 12 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே வருமான வரி விதிக்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறானவர்கள் செலுத்த வேண்டிய வருமான வரியானது தனது திணைக்களத்திற்கு முதலாளி ஊடாக பெறப்படுவதாக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரிக் கொள்கை மற்றும் சட்டப்பிரிவின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் நிஹால் விஜேவர்தன தெரிவித்தார். ஊடகமொன்றின் உடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

“ஒருவர் நீண்ட கால சேகரிப்பின் மூலம் வாகனம் வாங்கலாம், வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் ஊடாக கிடைத்த பணம், பரிசாக கிடைத்த பணம், அல்லது மாதாந்தம் செலுத்தி வாகனம் வாங்குவதற்கு வருமான வரி விதிக்கப்படாது. தாங்கள் வருமானமாக பெறும் 12 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும்.

தொழில் கிடைக்கும் சம்பளத்திலேயே வருமான வரி அறவிடப்படும். அந்த சம்பள பணத்தில் வாகனம் வாங்கினால் அதற்கு வருமான வரி அறவிடப்படாது. காணி அல்லது வீடு கொள்வனவு செய்யும் போதும் அந்த நபருக்கு எவ்வாறு பணம் கிடைத்ததென்பதனை பொறுத்தே தீர்மானிக்கப்படும்.

ஒரு வாகனம், வீடு அல்லது காணிக்கு முழு தொகையையும் செலுத்தி கொள்வனவு செய்கின்றார் என்றால் அது தொடர்பான தகவல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு கிடைத்துவிடும். எனினும் அந்த பணம் எப்படி கிடைத்ததென்பதனை ஆராய்ந்து அது வரி செலுத்தாத வருமானமாக இருந்தால் மாத்திரமே வரி அறவிடப்படும். ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் தவறான மத போதனையால் பலர் உயிரிழக்கும் ஆபத்து!!

நாட்டில்..

சமூக ஊடகங்கள் மூலம் மத போதனைகளை வழங்கி உயிரை மாய்க்க தூண்டியதாக கூறப்படும் ருவான் பிரசன்ன குணரத்னவின் ஆதரவாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை கண்டுபிடிக்க குற்றப்புலனாய்வு திணைக்களம் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது இரகசியப் பொலிஸ் பிரிவின் இரண்டு உதவி பொலிஸ் அத்தியட்சகர்களின் கீழ் 15 அதிகாரிகள் கொண்ட இரண்டு குழுக்களால் நாடு முழுவதும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவில் உயிரை மாய்த்துக்கொண்ட ஏழு பேரின் மருத்துவப் பதிவுகள் மூலம் விசாரணை நடத்தி வருகிறது, மேலும் யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்களும் இந்த விசாரணைக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

மேலும், இந்த நபரின் போதனைகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பெற மற்றைய பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரனைக்கமைய, இறந்த நபருக்கு எத்தனை சீடர்கள் இருந்தார்கள், சம்பந்தப்பட்டவர்கள், அவர்கள் எந்தெந்த மாகாணங்களை சேர்ந்தவர்கள் என கண்டறியப்படவுள்ளது.

சமீபத்தில் பதிவான ஏழு சந்தேக மரணங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, இந்த ஏழு பேரும் அதே விஷத்தை குடித்து உயிரை மாய்த்துக் கொண்டதால், இந்த விஷத்தை குறித்த போதனைகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் விநியோகித்தாரா என்ற சந்தேகத்தில் இந்த விசாரணை நடத்தப்படுகின்றது.

மேலும், உயிரிழந்தவரின் வழியை பின்பற்றி அவரை பின்பற்றுபவர்கள் தொடர்ந்து இதுபோன்ற விரிவுரைகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய இந்த விசாரணைகள் நடத்தப்படும். இந்த தற்செயலான உயிரை மாய்க்கும் அலையாக மாறுவதைத் தடுக்க இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க மற்றும் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காவிந்த பியசேகர ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வவுனியா ஊடான வடக்கு புகையிரத சேவைகள் ஆறு மாதங்களுக்கு நிறுத்தப்படும்!!

இலங்கையில்..

வடக்கு மாகாணத்திற்கான தொடருந்து சேவைகள் ஆறு மாத காலத்திற்கு நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (07.01.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மஹவ மற்றும் அநுராதபுரத்துக்கிடையிலான பாதை அபிவிருத்திக்காகவே 6 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக தொடருந்து பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று முதல் கொழும்பிலிருந்து மஹவ வரையும் அநுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையுமே தொடருந்து சேவைகள் இடம்பெறுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மட்டக்களப்பு தொடருந்து பாதையையும் இவ்வருடம் புனரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை புதிய தொடருந்து சேவையையும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.