ஹொரவப் பொத்தானை – கெப்பித்திக்கொல்லாவ பிரதான வீதியில் கிவுளக்கடை பகுதியில் வேனொன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.இன்று (10.11.2023) காலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து வவுனியாவுக்கு நேர்முகத் தேர்வு ஒன்றுக்காக சென்றவர்களே விபத்தில் சிக்கியுள்ளனர். வாகனம் வீதியோரம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்தவர்கள் ஹொரவ்பொத்தான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் 4 பேர் மேலதிக சிகிச்சைக்களுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சாரதியின் அசமந்தத்தினால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாமென கருதப்படுகிறது. விபத்து தொடர்பில் விசாரணைகளை ஹொரவ்பொத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய கிழக்கு நாடான ஜோர்தானில் சுமார் 100 இலங்கையர்கள் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இந்த இலங்கையர்களின் விசா காலாவதியாகியுள்ள போதிலும்,
தொழிற்சாலையினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவர்களை நாட்டுக்கு அனுப்ப குறித்த தொழிற்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த தொழிற்சாலை நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்காமல் சேவைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதனால் குறித்த இளைஞர்கள் மீண்டும் இலங்கைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை தடை செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று கூடிய நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அதன் கடமைகளை கடுமையாக மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, இலங்கையில் கிரிக்கெட் விவகாரங்களை தன்னாட்சி முறையில் நிர்வகிக்க வேண்டும் மற்றும் நிர்வாகம், ஒழுங்குமுறை மற்றும் நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைநீக்கத்தின் நிபந்தனைகள் சர்வதேச கிரிக்கெட் பேரவையால் சரியான நேரத்தில் முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக கிரிக்கெட் நிறுவனத்திற்குள் பல்வேறு மோடிகள் இடம்பெறுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
சமகால நிர்வாக சபையை முழுமையாக கலைத்து புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கம்பஹாவில் வீடொன்றில் மர்மமான முறையில் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் ஒன்று நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிரிதிவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஊராபொல பிரதேசத்தைச் சேர்ந்த கே.ஏ.சஞ்சீவனி 35 வயதான ஒரு பிள்ளையின் தாயின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவரது கணவர் பல வருடங்களாக வெளிநாட்டில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் குறித்த பெண்ணின் கணவனின் தாய், தந்தை மற்றும் சகோதரருடன் கணவரின் வீட்டில் வசித்து வந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீட்டின் வரவேற்பறையின் நடுப்பகுதியில் சடலமாக கிடப்பதைக் கண்ட மாமியார், சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தாயாருக்கு தெரியப்படுத்தியதுடன், பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார். குறித்த இடத்திற்குச் சென்ற பூகொட பதில் நீதவான் கமல் சமந்தபெரும, பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டார்.
சடலத்தை வட்டுப்பிட்டிவல வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று நீதிமன்றில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். உயிரிழந்த பெண்ணின் கணவரின் சகோதரன் காணாமல் போயுள்ளதாகவும், அவரை கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் உயிரிழந்த இலங்கை பிரஜையான சுஜித் பண்டாரவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு இஸ்ரேல் அரசாங்கம் வழங்கி வரும் அனைத்து இழப்பீடுகள் மற்றும் கொடுப்பனவுகளை சுஜித் அவர்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கு பணியகம் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுஜித் பண்டார யடவர 2018 ஆம் ஆண்டு உதவியாளர் பணிக்காக இஸ்ரேலுக்கு சென்ற நிலையில் அங்கு உயிரிழந்தார்.
சுஜித் இறக்கும் போது அவருக்கு வயது 48 ஆகும். இந்நிலையில், ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த சுஜித் பண்டார யடவரவின் உடல் நேற்று காலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டம்ை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி – ஆனையிரவு பகுதியல் இன்றையதினம் (09-11-2023) மாலை இளைஞன் ஒருவர் கஞ்சா போதைபொருளுடன் இளைஞன் ஒருவர் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுத்துறை பகுதியிலிருந்து கஞ்சா போதைபொருளுடன் இளைஞன் ஒருவர் செல்வதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதையடுத்து, ஆனையிரவு பகுதியில் வைத்து சோதனையிட்ட போது
மோட்டார் சைக்கிளுடன் 390 கிராம் கஞ்சா போதைபொருளுடன் வவுனியாவை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்டிமார் தும்பவத்தை தோட்டத்தில் வசிக்கும் 14வயதுடைய தியாகராஜ் சரணியா எனும் சிறுமி காணாமல் சென்ற நிலையில் வவுனியா நாகர்இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இன்று (10.11.2023) மதியம் மீட்கப்பட்டமையுடன் உடனிருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியை காணவில்லை என கடந்த (03.11.2023) அன்று குறித்த சிறுமியின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டமையுடன் சமூக வலைத்தளத்திலும் சிறுமியின் புகைப்படத்தினை பிரசுரித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று (10.11.2023) மதியம் அச் சிறுமியை வவுனியா நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் இளைஞருடன் தங்கிருந்தமையினை அவதானித்த அயலவர்கள் அப்பகுதி கிராம சேவையாளருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில்,
கிராம சேவையாளருடன் பொதுமக்கள், பொலிஸார், சிவில் அமைப்புக்கள், பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து சிறுமியை மீட்டெடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தானும் அந்த இளைஞனும் தொலைபேசியூடாக காதலித்ததாகவும் அவருடன் வாழ ஆசைப்பட்டு தான் இங்கே வந்ததாகவும் தெரிவித்தார்.
ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் சிறுமி பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையுடன் 18 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
13ஆம் திகதி வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் நடைபெறும் என கல்வி அமைச்சின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மத்திய மாகாணம், சபரகமுவ மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில் பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.இத் தீர்ப்பானது இன்றைய தினம் (09.11.2023) கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் திகதி மாத்தறை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண்னை வெட்டிப் படுகொலை செய்து கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் மற்றும் CID யினர், சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அயலில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்தில் வேலை செய்த மரணித்தவரின் காதலனான எதிரியினை கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் மரணித்தவர் இறுதியாக வைத்திருந்த கைத்தொலைபேசி மற்றும் உடைகள் என்பவற்றுடன் கைது செய்திருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு, பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில வழக்கு தொடரப்பட்டு இன்றைய (09-11-2023) தினம் குறித்த வழக்கானது கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ ஏ. எம் .ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எதிரிக்கு தீர்ப்பு வாசித்துக் காட்டப்படதுடன் எதிரியின் இறுதிக் கருத்தும் கேட்டதை தொடர்ந்து குறித்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்ப்பு வழங்கும் போது அனைவரும் எழுந்து நின்றதுடன்,
நீதிமன்றத்தின் அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டு நீதிமன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட முதலாவது மரண தண்டனை தீர்ப்பு இதுவாகும்.
முல்லைத்தீவில் பாடசாலை மாணவன் ஒருவரை புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிடாமல் தடுத்த பாடசாலை நிர்வாகத்தின்மீது குறித்த மாணவனின் பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பாடசாலையில் தரம் 5 இல் கல்விகற்று வந்த பாடசாலை மாணவனை புலமை பரிசில் பரீட்சை எழுதவிடாது பாடசாலை நிர்வாகம் தடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தை சேர்ந்த தரம் 5 இல் கல்விகற்ற மாணவனை புலமை பரிசில் பரீட்சைக்காக பெற்றோர்கள் தயார் படுத்தியுள்ளார்கள்.
இதன்போது குறித்த மாணவனக்கு வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக வயிற்று பகுதியில் பாரிய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் குறித்த மாணவன் இரண்டு மாத காலமாக பாடசாலை செல்லவில்லை.
ஆனால் அதற்கான மருத்துவ அறிக்கையினையும் பெற்றோர்கள் பாடசாலையில் காட்டியுள்ளார்கள். இந்த நிலையில் புலமைபரிசில் பரீட்சைக்கான நாள் கடந்த 15.10.2023 அன்று நெருங்கி வந்த வேளை பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பெற்றோரை அழைத்து குறித்த மாணவனை பரீட்சை எழுத அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாடசாலை அதிபரிடமும் பெற்றோர்கள் முறையிட்ட போது மாணவன் பரீட்சைகளில் 70 புள்ளிகளுக்கு கீழ் எடுக்கின்றார். இது போதாது புலமை பரிசில் பரீட்சை முக்கியமில்லை அதனால் பிரச்சினை இல்லை பிறகு படிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் பாடசாலை நிர்வாகம் பெற்றோரிடம் கடிதம் ஒன்றினை எழுதி கையெழுத்தும் வாங்கியுள்ளனர்.
பாடசாலை நிர்வாகம் தங்கள் பரீட்சை விகிதத்தினை சிறப்பாக காட்டவேண்டும் என்பதற்காகவும் படிப்பித்த ஆசிரியர் தான் படிப்பித்த பிள்ளைகள் அனைவரும் சித்தியடைந்துள்ளனர் என பெருமை பேசவும் உடல் உபாதை காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு மாணவனை பரீட்சை எழுதவிடாமல் தடுத்துள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மாணவன் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள். இப்போது பாடசாலை செல்வதற்கு விருப்பம் அற்ற நிலையில் காணப்படுவதாகவும் அவர் மனக்கவலையாக இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்.இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடு செய்துள்ளனர்.
பாடசாலை சமூகம் நற்பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு பாடசாலை மாணவரின் பரீட்சையினை தடைசெய்வது அவனை தடுப்பது என்பது மனித உரிமை மீறல்களில் ஒன்றாக கருதப்படவேண்டும் இது தொடர்பில் கல்வி திணைக்களமோ கோட்டக்கல்வி அலுவலகமோ, சிறுவர் உரிமை தொடர்பில் அக்கறை கொண்ட அமைப்புக்களோ உடனடியாக கவனத்தில் எடுக்கவேண்டும் என்பதுடன் இனி இவ்வாறான சம்பவம் வேறு எந்த குடும்பங்களுக்கும் ஏற்படக்கூடாது என்பது பெற்றோரின் எதிர்பார்ப்பாகும்.
இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இரண்டாவது இலங்கையர் சுஜித் யட்டவர பண்டாரவின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் இன்று (09.11.2023) காலை கட்டுநாயக்க விமான நிலைய விமான சரக்கு முனையத்தை வந்தடைந்துள்ளது.
இதன்போது சுஜித் யட்டவர பண்டாரவின் மனைவி ஜயனி மதுவந்தி, 13 வயது மகள், 09 வயது மகன் ஆகியோர் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
அத்துடன் இலங்கைக்கான இஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் தினேஷ் பிரியந்த, முன்னாள் அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விமான நிலைய நிர்வாக அதிகாரி அசோக பிரேமசிறி ஆகியோர் உடன் இருந்தனர்.
உயிரிழந்தவரின் இறுதிக்கிரியைகள் வென்னப்புவ, துலாவெல, மடவலப்பிட்டி பொது மயானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (11.11.2023) இடம்பெறவுள்ளதாக அவரின் மனைவி ஜயனி மதுவந்தி தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இளைஞர் ஒருவர் அரை ஏக்கரில் மிளகாய் பயிரிட்டு 70 லட்சம் ரூபா வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளார்.திறபனையை சேர்ந்த இளம் விவசாயி ஒருவரினால் இந்த மிளகாய் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிக அடர்த்தி பயிர்ச்செய்கை முறையைப் பயன்படுத்தி அவர் இந்த விவசாய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
பாரம்பரிய முறையில் அரை ஏக்கரில் 6000 மிளகாய் செடிகளை மட்டுமே வளர்க்க முடியும். ஆனால் அதிக அடர்த்தி பயிர்ச்செய்கை முறையில் 13,000 மிளகாய் செடிகளை வளர்க்கலாம்.
மகைலுப்பல்லம விவசாய ஆராய்ச்சி நிறுவனம் ஏற்கனவே இரண்டு புதிய மிளகாய் ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.அதற்கமைய, இந்த இளைஞன் மிளகாய் பயிரிட்டு 70 லட்சம் ரூபா வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளார்.
ஹோமாகம நீதிமன்ற வீதியில் உள்ள வாடகை அறையில் நேற்று கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் காதலன் என கூறப்படும் இளைஞனும் அதிக அளவிலான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விவசாய அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தரான அச்சினி துஷார விஜேதுங்க என்ற 31 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.“என் சகோதரி வழக்கமாக தினமும் 6மணிக்கு வீட்டிற்கு வருவார்.
அன்று வெகுநேரமாகிவிட்டதால், எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தோம். அதிகாலையில் நாகொட பொலிஸ் நிலையத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்துள்ளது.
எனது தங்கையுடன் பழகிய இளைஞன் மாத்திரைகளை உட்கொண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் கூறினார்கள்.நாங்கள் முச்சக்கர வண்டியில் நாகொடைக்குச் சென்றோம்.
அங்கு இளைஞனின் தாயார் இருந்தார். உங்கள் தங்கையின் கழுத்தை அறுத்து விட்டேன். நீங்கள் சென்றால் காப்பாற்ற முடியும் என என்னுடைய தங்கையின் காதலன் கூறியிருந்தார்.
நாங்கள் விரைவில் ஹோமாகமவில் உள்ள தங்கையின் தங்கும் விடுதிக்கு வந்து பார்த்தோம், தங்கை முதல் நாள் இரவு படுகொலை செய்யப்பட்டதை அறிந்தோம். என் தங்கைக்கு ஏன் இப்படி நடந்தது? தங்கைக்கு என்ன நடந்தது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது” என ஹோமாகம பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய உயிரிழந்த பெண்ணின் சகோதரி தெரிவித்துள்ளார்.
எங்கள் குடும்பத்தில் நானும் என் தங்கையும் மட்டுமே. தங்கை தொழிலுக்கு போக ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிறது. அங்கு அந்த இளைஞனுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். அவர் எனது தங்கை பணியாற்றிய இடத்திலும் பணியாற்றியுள்ளார்.அந்த உறவுக்கு சுமார் நான்கு மாதங்கள்.
தங்கை இதைப் பற்றி எங்களிடம் குறிப்பிட்டிருந்தார். நான் இப்போது அம்மா அப்பாவிடம் என்ன சொல்லப் போகிறேன்? என அவர் கூறியுள்ளார்.இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், விவசாய அமைச்சில் பணிபுரியும் 32 வயதுடைய பட்டதாரி என ஹோமாகம தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர் ஒருவர் இன்று (09) காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் விழுந்து ஹொரணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் புளத்சிங்கள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சனபட வீதி, கொபாவ, பகுதியில் வசிக்கும் 12 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் பயணித்து பாடசாலைக்கு செல்ல பஸ்ஸில் செல்ல வேண்டியுள்ளது.
இன்று காலை குழந்தையின் தந்தை வீட்டில் இல்லாத காரணத்தினால் வீட்டிலிருந்து நடந்து பாடசாலைக்கு தனியாக சென்றுள்ளார்.இதன்போது சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் விழுந்து காயமடைந்த நிலையில் மாணவன் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஹொரண வைத்தியசாலை பொலிஸார், புலத்சிங்கல பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தையின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் சடலத்தின் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா – உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்டிமார் தும்பவத்தை தோட்டத்தில் வசிக்கும் தியாகராஜ் சரணியா (வயது 14) என்ற சிறுமியே காணாமற் போனவராவார்.
கடந்த வெள்ளிக்கிழமை (03.11.2023) பகல் 11 மணியளவில் தனது தாயிடம் கைபேசியில் உரையாடிய பின்னர் சிறுமி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த (01.11.2023) திகதி புதன்கிழமை தந்தை, சிறுமியை கந்தப்பளை – பூப்பனை கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் சிறுமியின் பாட்டி வீட்டில் தீபாவளி பண்டிகை முடியும் வரை பாட்டிக்கு துணையாக அழைத்து வந்து விட்ட நிலையிலேயே காணாமற்போயுள்ளார்.
இவர் தொடர்பான தகவல் அறிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையம் அல்லது 075 620 3901 என்ற தொலைபேசிக்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இலங்கையின் ஆழமற்ற கடற்பகுதிகளில் காணப்படும் விஷப் பாறை மீன்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தவகை பாறை மீன்கள் கடித்து பலர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பல செய்திகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் ஒட்டுண்ணியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜானக ரூபன் கூறுகையில்,
‘கோன்மஹா-ஸ்டோன் ஃபிஷ்’ ‘(Gonmaha-Stone Fish) என நச்சு மீன் இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மீன்கள் இடிபாடுகள் நிறைந்த பாறை அடுக்குகள், ஆழமற்ற தடாகங்கள் மற்றும் குறைந்த அலைகள் உள்ள பகுதிகளில் காணப்படும்.
இந்த மீன்களின் மெதுவான இயக்கம் காரணமாக அவை சில நேரங்களில் பாசிகளால் மூடப்பட்டிருக்கும். இந்த மீன்கள் இனப்பெருக்க நோக்கத்திற்காக கரைக்கு அருகில் வரும் அதேநேரம் மீனின் முதுகில் உள்ள முதுகெலும்புகள் விஷம் கொண்டது. இதனால் கடலில் குளிக்கும் போது செருப்பு அணிந்து செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.