தாய்ப்பால் குடித்தபோது இறந்த குழந்தை… குற்ற உணர்வில் தாய் எடுத்த விபரீத முடிவு!!

கேரளாவில்…

தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தை மூச்சி திணறி இறந்ததால் குற்ற உணர்வு தாங்க முடியாமல் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் பச்சிளம் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்த சம்பவத்தை தொடர்ந்து, குழந்தையின் தாய் மகனுடன் சேர்ந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளா மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட உப்புத்துறை பகுதியைச் சேர்ந்தவர் லீசா. அப்பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வரும் இவருக்கு ஏழு வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில், மீண்டும் கருவுற்ற லீசாவுக்கு கடந்த 28 நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்தது. இந்தநிலையில், லீசா நேற்று தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக் கொண்டிருந்தபோது பால் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறி குழந்தை மரணம் அடைந்தது.

பதறி அடித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே குழந்தை உயிர் பிரிந்ததால் லீசாவும் குடும்பமும் கதறி அழுது துடித்தனர். தாய் பாலால் குழந்தை இறந்த துக்கம் தாங்காமல் மிகவும் மனமுடைந்த நிலையில் லீசா காணப்பட்டார்.

அந்த நேரத்தில் தாய் பால் கொடுக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் குழந்தை இறந்திருக்காது என்று லீசா தனக்குத்தானே வருந்தி குற்ற உணர்ச்சியுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் லீசா தனது மூத்த மகனுடன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கட்டப்பனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு தாய்பால் தான் மிகவும் ஊட்டச்சத்தாக உள்ளது. ஒரு குழந்தை வளர வளர அவர்களது நோய் எதிர்ப்பு சக்திக்கும் தாய் பால்தான் காரணம்.

தாய்ப்பாலை தவிர்க்க முடியாத விஷயமாக இருப்பதால் குழந்தைகளுக்கு எந்தெந்த நேரத்தில் எந்த அளவில் தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்பதை அனுபவம் வாய்ந்த மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிக மிக அவசியம்.

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!!

பாடசாலை விடுமுறை..

இலங்கையில் பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த விடுமுறையானது ஏப்ரல் 16ஆம் திகதிவரை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில் மேலும், 2022ஆம் கல்வி ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக மே மாதம் 13ஆம் திகதி முதல், மே மாதம் 24ஆம் திகதிவரை, முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட விடுமுறை வழங்கப்பட உள்ளது.

மூன்றாம் கட்ட விடுமுறை எதிர்வரும் ஜுலை மாதம் 21ஆம் திகதி முதல், 23ஆம் திகதிவரை வழங்கப்பட உள்ளது. 2023ஆம் கல்வி ஆண்டின், இரண்டாம் தவணை விடுமுறை, எதிர்வரும் அக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதல், நவம்பர் மாதம் 12ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது.

குறித்த காலப்பகுதியில், 2023ஆம் கல்வி ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையும், க.பொ.த உயர்தரப் பரீட்சையும் இடம்பெறவுள்ளன.

மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிவரை வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கையடக்க தொலைபேசி SIM பாவனை தொடர்பில் கடுமையாகும் சட்டம்!!

இலங்கையில்..

உயிரிழந்தவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களுக்கு கையடக்க தொலைபேசி சிம் அட்டைகள் வழங்க வேண்டாம் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாள தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் பெயர்கள், அவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய பட்டியல் நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலிருந்தும் மாதத்திற்கு ஒருமுறை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு பெற்றுக்கொடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

ஒருவர் இறந்தவுடன் தொடர்புடைய தொலைபேசி எண்ணைத் துண்டிக்கவும், அவரது தேசிய அடையாள அட்டை எண்ணுக்கு சிம் வழங்குவதைத் தடுக்கவும் தொலைபேசி சேவை நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மகன் உயிரிழந்த சோகத்தில் தந்தையின் எடுத்த விபரீத முடிவு!!

யாழில்..

போதைக்கு அடிமையான நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவை சேர்ந்த நபரின் பிள்ளைகள் கடந்த வருடம் 5ஆம் மாதம் கடலுக்குள் மூழ்கி உயிரிழந்தனர்.

அன்று தொடக்கம் மன விரக்தியில் இருந்த அவர் குடிபோதைக்கு அடிமையாகி உள்ளார்.

இதையடுத்து கடந்த மாதம் 12ஆம் திகதி திடீர் சுகயீனம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இவ்வாறு நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

3 ஆண்டுகளாக பேசாத தாய்… விரக்தியில் எலி மருந்து சாப்பிட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

புதுச்சேரியில்..

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 3 ஆண்டுகளாக பேசாத தாயை பயமுறுத்தி பேச வைப்பதற்காக எலி மருந்து சாப்பிட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் தோமாஸ் அருள் வீதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது தம்பி ரமேஸ்வரன். ரமேஸ்வரன் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன், முத்துமாரி (40) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் காரைக்கால் மாதா கோவில் வீதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இந்தநிலையில் தற்போது ரமேஸ்வரன் மலேசியாவில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் முத்துமாரிக்கும், அவரது தாயார் அமுதாவிற்கும் கடந்த 3 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லையென கூறப்படுகிறது. இதற்கிடையே பலவகையில் முயற்சித்தும் தனது தாயாருடன் முத்துமாரியால் பேசமுடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த முத்துமாரி எலி மருந்து சாப்பிட்ட நிலையில் கடந்த 8-ந்தேதி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த விவரத்தை தனது பெரியப்பாவான மகேஸ்வரனுக்கு முத்துமாரியின் மகன் சுசில்பாரதி, போனில் தகவல் கொடுத்துள்ளார்.

உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று முத்துமாரியிடம் மகேஸ்வரன் விசாரித்த போது தனது தாய் கடந்த 3 ஆண்டுகளாக பேசாமல் இருந்து வருகிறார். கணவரும் வெளிநாட்டில் இருப்பதால் தனது தாயாரை பயமுறுத்துவதற்காக பேசவைக்கும் முயற்சியாக எலி மருந்து சாப்பிட்டதாக முத்துமாரி கூறியுள்ளார்.

தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பரித்திரிக்கு முத்துமாரி கொண்டு செல்லப்பட்டார். அங்கும் முடியாததால், சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார்.

அங்கும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் முத்துமாரி காரைக்காலுக்கு அழைத்து வரப்பட்டார். உடல்நிலை மோசமானதையடுத்து, மீண்டும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட முத்துமாரி சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இது குறித்த புகாரின்பேரில் காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 3 ஆண்டுகளாக பேசாமல் இருந்த தாயை பயமுறுத்தி பேச வைக்கும் முயற்சியில் எலி மருந்து சாப்பிட்ட மகள் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

வவுனியா – பூவரசன்குளம் பொலிஸ் பிரிவில் ஒரே நாளில் மூவர் மரணம் : நஞ்சு அருந்திய பெண் வைத்தியசாலையில் அனுமதி!!

மூவர் மரணம்..

வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாரிக்குட்டியூர் பகுதியில் ஒரே நாளில் மூவர் மரணமடைந்துள்ளதுடன், நஞ்சு அருந்திய இளம் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாரிக்குட்டியூர், படிவம் 4 பகுதியில் தவறான முடிவெடுத்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (17.03) மதியம் பூவரசன்குளம் பொலிசாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் சிறுநீரக நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த வாரிக்குட்டியூர் படிவம் 5 இல் வசிக்கும் 41 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மேலும் வாரிக்குட்டியூரின் அயல் கிராமமான கங்கன்குளம் பகுதியில் வசிக்கும் 60 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் சிறுநீரக நோயினால் மரணமடைந்துள்ளார்.

இதுதவிர ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் வாரிக்குட்டியூர், படிவம் 5 இல் வசிக்கும் 20 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (16.03) மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய போது நஞ்சு அருந்திய நிலையில் அப் பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடம் ஒன்றில்,

மயங்கிய நிலையில் ஊர் மக்களால் மீட்கப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை பாதிப்படைந்துள்ளதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பூவரசன்குளம் வாரிக்குட்டியூர் பகுதியில் ஒரே நாளில் இடம்பெற்ற 3 மரணங்கள் தொடர்பிலும், இளம் பெண் பெண் ஒருவர் நஞ்சருந்தி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பிலும் பூவரசன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

இரவு உயிரிழந்த தந்தை.. காலையில் கனத்த இதயத்துடன் தேர்வுக்கு போன மாணவன்!!

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியை அடுத்த கல்லாவி கீழ் காலனி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவர் சமீபத்தில் நோய் வாய்ப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையே அவரது மகனான ஜெகத், கல்லாவி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தொழில் பிரிவில் படித்து வந்துள்ளார். மேலும் பிளஸ் டூ மாணவர்களுக்காக தற்போது அரசு பொதுத் தேர்வு நடந்து வரும் சூழலில் ஜெகத்தும் மிக தீவிரமாக தயாராகி தேர்வுகள் எழுதி வந்துள்ளார்.

அப்படி ஒரு சூழலில் தான் அதிர்ச்சி சம்பவம் ஒன்று ஜெகத் குடும்பத்தில் அரங்கேறி உள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரது தந்தை கோடீஸ்வரன் திடீரென மரணித்தது அவரையும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது.

இதற்கிடையே மறுபபக்கம் பொதுத்தேர்வு நடந்து வந்த சூழலில், ஆங்கிலத் தேர்வு எழுதுவதற்காக மறுநாளே பள்ளிக்கு செல்லவும் ஜெகத் முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் பள்ளிக்கு தேர்வு எழுத சென்ற ஜெகத்தை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஆறுதல் தெரிவித்து தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தந்தை உயிரிழந்த துக்கம் ஒரு பக்கம் இருந்த சூழலில், மகன் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற தந்தையின் கனவையும் நிறைவேற்ற வேண்டுமென்றும், தனது படிப்பும் வீணாக கூடாது என்ற காரணத்தினாலும் தேர்வு எழுத வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுடன் மட்டுமில்லாமல் நிச்சயம் மாணவன் ஜெகத் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தனது தந்தைக்கு பெருமை சேர்ப்பார் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

வவுனியாவில் அனுமதியின்றி கட்டப்பட்ட சிலை தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சர்ச்சை!!

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சர்ச்சை..

வவுனியா நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட பத்மநாபாவின் சிலை தொடர்பில் கவனம் செலுத்திவிட்டு, நாளாந்த வாழ்வாதாரத்திற்காக வியாபாரம் செய்யும் வீதியோர வியாபாரிகளை அகற்றுங்கள் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (17.03) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கு.திலீபன் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

போராடிய தலைவர்களுக்கு சிலை வைப்பதற்கு நான் எதிர்ப்பில்லை. ஆனால் முறையான அனுமதிகள் பின்பற்றப்பட்டதா என்பதே என்னுடைய கேள்வி. குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் முச்சக்கர வண்டியை வாழ்வாதரமாக கொண்ட முச்சக்கர வண்டி சங்கத்திற்கு அலுவலகம் அமைக்கப்பட்ட போது முறையான அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவித்து அந்த கட்டுமாணப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டது.

நாளாந்த வாழ்வாதாரத்திற்காக வியாபாரம் செய்யும் வீதியோர வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் ஆகியோரை நகரசபை குற்றவாளிகள் போல் அவர்களது பொருட்களுக்கும் சேதம் விளைவித்து அள்ளிச் செல்கின்றது.

அவ்வாறு சட்டப்படி இயங்குவதாக இருந்தால் வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் பத்மாநாபாவின் சிலை வைப்பதற்கு முறையான அனுமதி பெறப்பட்டதா. நகரசபை செயலாளர் மற்றும் நகரசபை என்ன செய்கின்றார்கள். உள்ளுராட்சி திணைக்களம் என்ன செய்கிறது.

பொலிசாருக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே முறையற்ற விதத்தில் இந்த சிலை அமைக்க அனைவரும் ஒத்துழைத்துள்ளார்கள். ஆனால் அப்பாவி மக்களுக்கு எதிராக சட்டத்தை காவித் திரிகிறார்கள்.

இனிமேல் வவுனியா நகரில் வீதியோர வியாபாரிகளை நகரசபை அகற்றுவதாக இருந்தால் முதலில் முறையான அனுமதியின்றி அமைக்கப்பட்ட சிலையை அகற்றிவிட்டு செல்லுங்கள். அதனை அகற்றாது விட்டால் வீதியோர வியாபாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க கூடாது எனத் தெரிவித்தார்.

இதில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், பிரதேச செயலாளர் நா.கமலதாசன், உள்ளுராட்சி மன்ற பணிப்பாளர், திணைக்கள தலைவர்கள், நகரசபை செயலாளர், பிரதேச சபை செயலாளர், பொலிசார், அரச உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

காதலன் இறந்த ஒரே மாதத்தில் காதலி எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சென்னையில்..

சென்னை அருகே காதலன் இறந்த ஒரே மாதத்தில் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார்.

இவரது இரண்டாவது மகள் மைத்தீஸ்வரி. இவர் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று சுரேஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர்.

இதனால் மைத்தீஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து சுரேஷ் மகளுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் எடுக்கவில்லை. பல முறை போன் செய்தும் எடுக்காததால் பக்கத்து வீட்டில் இருப்பவர்களைத் தொடர்பு கொண்டு வீட்டிற்குச் சென்று பார்க்கும்படி கூறியுள்ளார்.

இதையடுத்து அவர்கள் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டு இருந்தது. இவர்கள் கதவைத் தட்டிப்பார்த்தும் மைத்தீஸ்வரி திறக்கவில்லை.

இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே பெற்றோர்களுக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

பிறகு அங்கு வந்த போலிஸார் மைத்தீஸ்வரி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவரை மைத்தீஸ்வரி காதலித்துவந்தது தெரியவந்தது. மேலும் கடந்த 10ம் தேதி செல்போனில் தொடர்பு கொண்டு, உன்னை நேரில் பார்க்க வேண்டும் என பிரவீன், மைத்தீஸ்வரிக்கு போன் செய்து கூறியுள்ளார்.

இதற்கு அவர் இன்று வரமுடியாது. திங்கட்கிழமை பார்க்கலாம் என கூறியுள்ளார். ஆனால் பிரவீன், நீ இன்றே வரவில்லை என்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்ற கடிதத்தை எழுதிவைத்து விட்டு பிரவீன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தெரிந்து மனவேதனை அடைந்த காதலி மைத்தீஸ்வரி இன்றைய தினமே தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஆனால் அவரது பெற்றோர் அவரை தடுத்து அறிவுரை வழங்கியுள்ளனர். இந்நிலையில்தான் வீட்டில் யாரும் இல்லாதபோது காதலன் இறந்த ஒரு மாதத்தில் மைத்தீஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிந்தது.

இரத்த வாந்தி எடுத்த இளைஞன்… வயிற்றில் இருந்த 56 பிளேடுகள்.. மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

ராஜஸ்தானில்..

சில மாதங்களுக்கு முன்னர் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் வயிற்றிலிருந்து 62 ஸ்பூன்களை மருத்துவர்கள் 2 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக வெளியே எடுத்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்பின்னர் கர்நாடகத்தை சேர்ந்த 58 வயது நபரின் வயிற்றில் இருந்து ஒன்றரை கிலோ எடைகொண்ட 187 நாணயங்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் ராஜஸ்தானின் நடைபெற்றுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த 25 வயது யஷ்பால் சிங் என்ற நபர் ஜலோர் மாவட்டத்தின் சாஞ்சூர் என்னும் இடத்தில் உள்ள டேட்டா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்.

அவர் திடிரென ரத்த வாந்தி எடுத்த நிலையில் அங்கு இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைத்துள்ளனர்.

அதன்படி அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் அவரது வயிற்றில் சில உலோகங்கள் இருந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவருக்கு அடுத்தபடியாக எண்டோஸ்கோபி எடுக்கப்பட்டதில் அவரின் வயிற்றில் நிறைய பிளேடுகள் இருந்தது தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் அவருக்கு அறுவைசிகிச்சை நடைபெற்று அவரின் வயிற்றில் இருந்த பிளேடுகள் அகற்றப்பட்டது. அவரின் வயிற்றில் இருந்து 56 பிளேடுகள் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த நபர் பிளாஸ்டிக் கவருடன் பிளேடுகளை சாப்பிட்டதால் அதை விழுங்கும்போது காயம் ஏற்படவில்லை என்றும் ஆனால் வயிற்றுக்குள் சென்று அது உள்உறுப்புகளை சேதப்படுத்தியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பல துண்டுகளாக வெட்டப்பட்ட தாய் : 2 மாதங்களாக மறைக்கப்பட்ட உடல் உறுப்புகள்.. விசாரணை வளையத்தில் மகள்!!

மும்பை..

மும்பை லால்பாக்கில் நேற்று வீணா ஜெயின் (55) என்ற பெண் கொலைசெய்யப்பட்டு பல துண்டுகளாக வெட்டப்பட்டு வீட்டிலிருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீஸார் வீணாவின் மகள் ரிம்பிள் ஜெயின்(24) என்பவரைக் கைதுசெய்திருக்கின்றனர். வீணாவை அவரின் மகள்தான் கொலை செய்தாரா… அல்லது அவர் இயற்கையாக மரணம் அடைந்தாரா… என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

வீணாவின் சகோதரர் சுரேஷ் போர்வெல் அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவருகிறார். கடந்த சில மாதங்களாக அவரால் வீணாவுடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதால், தன் மனைவியை அனுப்பி வீணாவைப் பார்த்துவிட்டு வரும்படி கேட்டுக்கொண்டார்.

சுரேஷ் மனைவி வந்தபோது ரிம்பிள் ஜெயின் வீட்டுக்குள் விட மறுத்ததோடு, தன் தாயார் கான்பூர் சென்றிருப்பதாகத் தெரிவித்தார். கதவைத் திறக்காததால் சுரேஷ் மனைவி தன் மகனை போன் செய்து வரவழைத்தார். அவரின் மகன் வந்து பலவந்தமாக கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றார்.

ஆனால், வீட்டில் வீணா இல்லை. வீடு அலங்கோலமாகக் கிடந்தது. அதோடு வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்தது. உடனே ரிம்பிள் ஜெயினை அழைத்துக்கொண்டு சுரேஷ் குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்தனர்.

அதோடு, வீட்டில் துர்நாற்றம் இருப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸார் வீட்டில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது வீட்டிலிருந்த பீரோவை போலீஸார் திறந்து பார்த்தனர். உள்ளே பெரிய பிளாஸ்டிக் பேக் இருந்தது.

அதில் என்ன இருக்கிறது என்று ரிம்பிள் ஜெயினிடம் கேட்டதற்கு எதுவும் சொல்லவில்லை. அதைத் திறந்தபோது வீணாவின் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டு மிகவும் அழுகிய நிலையில் இருந்தது.

வீணாவைப் பல துண்டுகளாக வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மார்பிள் கட்டர், கத்தி போன்றவையும் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீஸ் அதிகாரி பிரவின் முண்டே, “வீணா கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல் மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டார்.

அவரின் கீழ் தளத்திலிருந்த உணவக ஊழியர்கள் இரண்டு பேர் வீணாவை வீட்டில் கொண்டுவந்து விட்டுச் சென்றனர். இதில் வீணா படுகாயமடைந்து இறந்தாரா அல்லது வீணாவை ரிம்பிள் கொலைசெய்தாரா அல்லது போலீஸ் விசாரணைக்கு பயந்து இறந்துபோன வீணாவை பல துண்டுகளாக வெட்டி தடயத்தை மறைக்க முயன்றாரா என்ற கோணத்தில் விசாரித்துவருகிறோம்.

ரிம்பிள் நீண்ட நாள்களாகக் குளிக்காமல் இருந்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. அவரிடம் மனநல மருத்துவரின் துணையோடு விசாரித்துவருகிறோம். தற்போது ரிம்பிள் சரியான மனநிலையில் இல்லை. அவர்களது வீட்டிலிருந்து சுமார் இரண்டு மாதமாக துர்நாற்றம் வந்து கொண்டிருந்தது.

ஆனால், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு, அந்த துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் இருந்தனர். ரிம்பிள் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கிறது. அவரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தவிருக்கிறோம். தடயவியல் நிபுணர்களின் துணையோடு விசாரித்துவருகிறோம்.

ரிம்பிள் இரண்டு ஆண் நண்பர்களுடன் போனில் பேசியிருக்கிறார். அவர்கள் வீணாவைப் பல துண்டுகளாக வெட்ட உதவி செய்தார்களா என்ற கோணத்தில் விசாரித்துவருகிறோம்.

வீணாவும், அவரின் மகள் மட்டும் அந்த வீட்டில் வசித்துவந்தனர். அந்த வீட்டுக்கான வாடகையை வீணாவின் சகோதரர் சுரேஷ் போர்வெல்லின் கொடுத்துவந்தார்” என்று தெரிவித்தார்.

29 வயதில் 40 கோடி… சாதித்துக் காட்டிய இளம் பெண் தொழிலதிபர்!!

நீலம் சிங்..

இந்தியாவில் பர்கர் நிறுவனம் நடத்தி 40 கோடி வருவாய் ஈட்டி சாதித்துள்ளார் 29 வயது பெண்ணொருவர். உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் நீலம் சிங். இவர் நடத்தி வரும் தி பர்கர் கம்பெனி மூலம் தொழிலதிபராக உயர்ந்துள்ளார்.

29 வயதாகும் நீலம் சிங், ஐந்து ஆண்டுகளில் தனது நிறுவனத்தின் மூலம் 40 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். குர்கானில் பிறந்த நீலம் சிங் பி.காம் படிப்பை முடித்தார். அதன் பின் MBA படிப்பை முடித்தவுடன் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

ஆனால் தொழில் முனைவோராக வேண்டும் என்று விரும்பிய நீலம், ஐந்து ஆண்டுகள் தான் சம்பாதித்த பணத்துடன் 2016ஆம் ஆண்டு வேலையை விடுத்துள்ளார்.

ஏற்கனவே கல்லூரி விழாவில் சிறிய உணவகத்தை அமைத்து, சுமார் ஒரு லட்சம் லாபம் ஈட்டிய அனுபவம் உள்ளதால் உணவகம் அமைக்க முடிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து தன்னிடம் இருந்த பணத்தைக் கொண்டு 2018ஆம் ஆண்டு தி பர்கர் கம்பெனியை தொடங்கினார். 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது தி பர்கர் கம்பெனியின் கிளை வணிக மொடலை உருவாக்கிய நீலம், ஆரம்ப காலங்களில் சிறிய பணியாளர்களுடன் தன் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.

முதலாளியாக மட்டும் நினைத்துக் கொள்ளாமல் உணவகத்தில் அனைத்து வேலையையும் நீலம் செய்துள்ளார். இவ்வாறாக உயர்ந்த அவரது நிறுவனம் தற்போது ஏழு மாநிலங்களில்,

100 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. நித்தேஷ தன்கர் என்பவரை திருமணம் செய்துகொண்ட நீலம் சிங், 29 வயதில் கோடீஸ்வரராக உயர்ந்து பல பெண்களுக்கு முன் உதாரணமாக விளங்கி வருகிறார்.

வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா-2022

 

வவுனியா இறம்பைக்குளம் சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா மற்றும் 2023இல் பாடசாலை  செல்லவுள்ள  மாணவர்களை கௌரவிக்கும்  நிகழ்வு என்பன கடந்த 04.03.2023 சனிக்கிழமை  பள்ளியின்  நிர்வாக இயக்குனர் S.நந்தசீலன் தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

மேற்படி  நிகழ்வில்  வவுனியா மாவட்ட மேலதிக அரசஅதிபர்  திரு.தி.திரேஸ்குமார் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து  கொண்டார். கௌரவ விருந்தினராக திருமதி.எம்.திருமகள் (உளநல மருத்துவ அதிகாரி-பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வவுனியா)அவர்கள் கலந்து கொண்டதுடன் திரு.கு.செந்தில்குமரன் (உதவிக் கல்விப் பணிப்பாளர்-உடற்கல்வி) வலயக்கல்வி அலுவலகம் வவுனியா தெற்கு) T.இராஜேஸ்வரன் (ஓய்வுபெற்ற உதவி கல்விப் பணிப்பாளர் முன்பள்ளி,வவுனியா வடக்கு வலயம்),திரு.ஸ்ரீதரன் (ஓய்வுபெற்ற அதிபர்- செட்டிகுளம் மகா வித்தியாலயம்),திருமதி.சுமித்திரா(பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் -வவுனியா),பவித்திரா (கிராமசேவையாளர் இறம்பைக்குளம்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

மேலும்  விசேட அழைப்பின் பேரில்  திருமதி.கே.செல்வராணி (முன்பள்ளி இணைப்பாளர் – வவுனியா நகரம்-02)லயன் R.பாலரூபன் (முகாமையாளர் அலியான்ஸ் இன்சூரன்ஸ் யாழ்ப்பாணம்),T.துஷ்யந்தன் (உளவள ஆலோசகர் யாழ்ப்பாணம்) R.சதீசன் (விற்பனை மேம்பாட்டு உத்தியோகத்தர் -கிரவுன் லிமிடெட்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வின்போது 2023 இல் பாடசாலைக்கு செல்லவுள்ள மாணவர்கள் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டதுடன் முதலாம் இரண்டாம் வருட மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் குறையுமென காத்திருந்தவர்களுக்கு சோகமான செய்தி!!

இலங்கையில்..

இலங்கையில் தங்கப் பவுணொன்றின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த கிழமையளவில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 140000 என்ற பெறுமதிக்கு குறைந்திருந்தது.

இந்த நிலையில் குறித்த விலை வீழ்ச்சியானது ஒரு சில நாட்கள் மாத்திரமே காணப்பட்ட நிலையில் தற்போது தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்து வருகிறது.

தொடர்ந்தும் தங்கத்தின் விலை குறையும் என தங்க ஆபரணம் வாங்குவதற்காக காத்திருந்தவர்களுக்கு தற்போது மீண்டும் பழைய விலைக்கே தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான சூழலில் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 188,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 174,000 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது இலங்கையிலும் தாக்கம் ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

200 ரூபாவாகும் டொலரின் பெறுமதி… ஜனாதிபதியின் நடவடிக்கை குறித்து வெளியான தகவல்!!

டொலரின் பெறுமதி..

டொலரின் பெறுமதியை குறைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தகவல் வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருதது தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், அடுத்த வருட இறுதிக்குள் டொலரின் பெறுமதியை 200 ரூபாவாக கொண்டுவர ஜனாதிபதி செயற்பட்டு வருகிறார்.

ஜனாதிபதியின் காலை இழுக்காமல் ஆதரித்தால் பிரச்சினைகளை தீர்த்து மகிழ்ச்சியாக இருக்கும் நாட்டைக் கட்டியெழுப்புவார். இந்த நேரத்தில் நாட்டு மக்கள் தேர்தலுக்குத் தயாராக இல்லை. அரசியல்வாதிகள் தான் தேர்தலைக் கேட்கின்றனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி அரசாங்க கொடுப்பனவு பெறும் 8000 பேரை நியமிப்பது இந்த நேரத்தில் நாட்டுக்கு சுமை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

11 இலட்சம் ரூபா வட்டியில்லா கடன்.. நிதிமைச்சின் அதிரடி அறிவிப்பு!!

இலங்கையில்..

இலங்கையில் உயர்கல்வி பெற காத்திருக்கும் மாணவர்களுக்காக புதிய திட்டமொன்றை கொண்டுவரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்குவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வியை தொடர போதிய வசதியற்ற தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதற்காக இந்த கடன் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின்கீழ் பாடநெறிக்காக 8 இலட்சம் ரூபாவும், நாளாந்த செலவுகளுக்காக 3 இலட்சம் ரூபாவும் என மொத்தமாக 11 இலட்சம் ரூபாவை மாணவரொருவர் கடனாக பெற முடியும்.

ஐந்து வருட கடன் திட்டமாக இது காணப்படும். இந்த கடனுக்கான வட்டியில் பாதியை மாணவர்கள் செலுத்துவதெனவும், மிகுதியை அரசாங்கம் செலுத்துவதெனவும் முன்னதாக யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும் இது தொடர்பில் ஜனாதிபதி தலையீடு செய்து மொத்த வட்டியையும் அரசாங்கமே செலுத்தும் எனவும் மாணவர்கள் கடன் தொகையை மாத்திரம் செலுத்தும் வகையிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.

இதனை தொடர்ந்தே வட்டியற்ற இந்த கடன் திட்டத்தை கொண்டு வர தீர்மானம் எட்டப்பட்டது. சுமார் ஐயாயிரம் மாணவர்கள் இந்த கடன் திட்டம் மூலம் பயனடையவுள்ளனர்.

முதலில் இந்த கடன் திட்டத்தை இலங்கை வங்கியில் மாத்திரம் கொண்டு வருவதற்கான யோசனையே முன்வைக்கப்பட்டிருந்த போதும் தற்போது மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி உள்ளிட்ட வங்கிகளிலும் கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த கடன் திட்டத்திற்கு உலகளவில் அதிக கேள்வி உள்ள பாடநெறிகளை தெரிவு செய்யும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. அதிலும் தொழிநுட்பம் சார்ந்த பாடநெறிகளை தெரிவு செய்யும் மாணவர்கள் இந்த கடன் திட்டத்தை பெறுவதற்கான முதன்மை உரிமையை பெறுவார்கள்.

இந்த கடனை அவர்கள் உயர் கல்வியை நிறைவு செய்து தொழிலுக்கு சென்றதன் பின்னர் திருப்பிச் செலுத்த முடியும். எனவே இது தொடர்பான யோசனையானது அடுத்த வாரமளவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். வெகுவிரைவில் இந்த திட்டம் இலங்கை நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.