வவுனியாவில் நாளை பல இடங்களில் மின் தடை : விபரம் உள்ளே!!

மின் தடை..

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு் மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக வவுனியாவில் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை 04 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வவுனியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும்.

வவுனியா பிரதேசத்தில் ஆச்சிபுரம், ஆசிகுளம், எல்லப்பர் மருதங்குளம், எல்லப்பர் மருதங்குளம் கோவிலடி, கற்குளம் (சிதம்பரபுரம்), கோமரசங்குளம் மாதா கோவிலடி, மகா மயிலங்குளம்,

மதுராநகர், கல்நாட்டினகுளம், பெரிய கோமரசங்குளம், சமணங்குளம், சிதம்பரபுரம் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் தாய் மற்றும் மகளுக்கு நேர்ந்த கதி : சிசிடிவியில் பதிவாகியிருந்த அதிர்ச்சிக் காட்சி!!

இந்தியாவில்..

இந்தியாவில், தாய் மற்றும் மகளை அடையாளம் தெரியாத கும்பல் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள தங்கள் குடியிருப்பிற்கு இரவு உள்ளூர் நேரப்படி சரியாக 10 மணிக்கு காரில் தாய் ஒருவர் தன்னுடைய மகளுடன் வந்துள்ளார்.

அப்போது கார்பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அந்த பெண்ணின் மகள் வெளியேறிய போது, அங்கு திடீரென்று வந்த பெண்கள் அவர் மகளை தாக்க ஆரம்பித்தனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே காரை விட்டு வெளியே வந்து தடுக்க முயன்ற போது, திடீரென்று அங்கிருந்த சில ஆண்கள் கையில் வைத்திருந்த இரும்பு கம்பி மற்றும் உருட்டுக் கட்டையால் அவரை கண்மூடித்தனமாக தாக்கினர்.

இதில் அவர் ஒரு கட்டத்தில் நிலைகுலைந்து கதறி துடிக்கவே, உடனே அந்த கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது. இது தொடர்பான வீடியோ காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து தாக்குதலுக்குள்ளான அந்த பெண் அளித்துள்ள புகாரில், நானும் எனது மகளும், சம்பவம் நடந்த அன்றைய இரவு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பந்தனா குமாரியின் ஆட்களால் அடித்து நொறுக்கப்பட்டோம்.

எம்.எல்.ஏ பந்தனா குமாரியின் கணவர் மீது 2019-ஆம் ஆண்டு நான் காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், அதை மனதில் வைத்துக் கொண்டு, இந்த தாக்குதலை நடத்தியிருக்கின்றனர்.

பெண் எம்.எல்.ஏவின் தவறான விஷயங்களை நான் அம்பலப்படுத்தி வருவதால் எனக்கு இது நேர்ந்துள்ளது. ஏற்கனவே எம்.எல்.ஏ மற்றும் அவரின் கணவர் மீது பல வழக்குகள் உள்ளதாக் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடக்கம் செய்யப்பட்ட நபர் 3 மாதம் கழித்து உயிருடன் வந்ததால் அலறியடித்து ஓடிய மக்கள்!!

இந்தியாவில்..

இந்தியாவில் இறந்தவிட்டதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட தொழிலாளி, 3 மாதங்களுக்குள் பின் உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவத்தின் தலைசுற்றவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் சிக்கமாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராஜப்பா (59). இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மதுபோதைக்கு அடிமையான நாராஜப்பா, பெங்களூருவில் உள்ள இளையமகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கும், மது அருந்திவிட்டு, வீட்டிற்கு செல்லாமல் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்துள்ளார். இதையடுத்து தந்தையை காணவில்லை என அவரது மகள் போலீசில் புகாரளித்துள்ளார்.

இந்நிலையில், அங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே, நாராஜப்பா இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்குப் பின்னர், சொந்த ஊரில் மகள்கள் இருவரும் அவரது உடலை அடக்கம் செய்துள்ளனர்.

பின்னர், நாராஜப்பாவுக்கு இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான், திடீரென நாராஜப்பா, சொந்த ஊரான சிக்கமாலூர் கிராமத்திற்கு வந்துள்ளார். இறந்துவிட்டதாக கூறி 3 மாதங்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்டவர் திடீரென உயிருடன் வந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து தலைதெறிக்க ஓடினர்.

தகவலறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இறந்தது நாராஜப்பா இல்லை என்பதும், அவரது உருவ ஒற்றுமை கொண்ட வேறு நபர் என்பதும் தெரியவந்தது.

நாராஜப்பா கூலி வேலை செய்துகொண்டு 3 மாதங்களாக ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இறந்ததாக கூறி அடக்கம் செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாட்டில் மரக்கறி விலை அதிகரிப்பால் மக்கள் எடுத்த முடிவு!!

மரக்கறி விலை அதிகரிப்பால்..

நாட்டில் தற்போது மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கல் காரணமாக மக்கள் அனேகமானோர் பலாக்காய்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புஸ்ஸல்லாவ நகரில் இன்று (03.12.2021) பலாக்காய் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடித்து கொண்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,பலாக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட போதும் மக்கள் அதிகளவில் பலாக்காயை கொள்வனவு செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை முழுவதும் இன்று மின்சாரம் தடைப்பட்டமைக்கான காரணம் இதுதான்!!

மின்தடை..

இலங்கை முழுவதும் இன்று ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையானது நாசவேலையின் விளைவினால் ஏற்பட்டதல்ல என இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய மின்சார தடையானது, இயற்கையான நிகழ்வுகளினால் ஏற்பட்டதென சங்கத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். நுரைச்சோலையில் இரண்டு நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களும் செயலிழந்துள்ளதாகவும்,

அனைத்து மின் உற்பத்திகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எப்படியிருப்பினும், ஒரு நிலக்கரி மின் நிலையம் தற்போது வரையில் பழுது பார்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சப்புகஸ்கந்தையில் உள்ள மின்சார ஜெனரேட்டர்களும் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார சபை அதிகாரிகள் நிலைமையை கண்கானித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் மின்சார விநியோகம் முழுவதும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. நாட்டில் முழுமையான மின் உற்பத்தி முறை இன்னமும் செயற்படவில்லை என தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் வேளையில் நாடாளாவிய ரீதியில் தடைப்பட்ட மின்சாரம் தற்போது படிப்படியாக வழமை நிலைக்கு திரும்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

நாடு முழுவதும் மீண்டும் ஏற்படவுள்ள மின் தடை : இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

மின் தடை..

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 900 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 3 நிலையங்கள் முழுமையாக இயங்கும் வரை அடுத்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் குறுகிய கால மின்சாரத் தடைகள் ஏற்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தவிர்ந்த ஏனைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களினதும் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் விநியோகத்தை சரிசெய்ய குறைந்தது 2 நாட்களாவது தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் இன்று முற்பகல் முதல் சுமார் ஆறு மணித்தியாலங்கள் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவர்களுக்கான விடுமுறையில் மாற்றம் : கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவித்தல்!!

பாடசாலை விடுமுறை..

எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு வழங்கப்படவிருந்த விடுமுறையில் தற்போது மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு வழங்கப்படவிருந்த குறித்த விடுமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வியமைச்சினால் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 2022 ஜனவரி 2 ஆம் திகதி வரை குறித்த விடுமுறையை நீடிக்கக் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, 2022 ஜனவரி 3 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிறுத்தப்பட்ட எரிவாயு விநியோகம் : வெளியானது புதிய அறிவிப்பு!!

எரிவாயு விநியோகம்..

மறு அறிவித்தல் வரும் வரை எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனை ஆகியன இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எரிவாயுவின் தரம் தொடர்பான தெளிவான உத்தரவாதம் கிடைக்கும் வரை குறித்த முடிவு நடைமுறைப்படுத்தப்படும் என குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், தமது எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.வேகப்பிட்டிய கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் பலி!!

புகையிரதத்துடன் மோதுண்டு..

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் கப் ரக வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சற்றுமுன்னர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த விபத்தில் தவசிகுளம், கொடிகாமம் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சூசைநாதன் பிரதீபன் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

மஞ்சள் நிற சமிக்கை விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்த போது குறித்த வாகனம் கடவையை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது விபத்தில் படுகாயமடைந்தவரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு மக்களை திக்கு முக்காட வைத்த மின் தடை : சற்று முன்னர் வெளியான அறிவிப்பு!!

மின் தடை..

கொழும்பின் சில பகுதிகளிலும், யாழ்ப்பாணத்தின் சில பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் மேலும் சில பிரதேசங்களிலும் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடையின் காரணமாக பொது மக்கள் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ள நிலையில் தற்போது மூன்று மின் விநியோக கட்டமைப்புகளின் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனுராதபுரம் – ஹபரணை, லக்ஷபான – அதுருகிரிய மற்றும் கொத்மலை – பியகம ஆகிய மின் விநியோக கட்டமைப்புகளின் மின்சார விநியோக நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் அறிவித்துள்ளாா்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உத்தியோகத்தர் ஒருவருக்கு உடலில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து,

அவருக்கு முன்னெடுக்கப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த உத்தியோகத்தருடன் நெருங்கி பழகிய உத்தியோகத்தருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில்,

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவரும் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா செட்டிகுளம் படுகொலையின் 37 ஆவது நினைவு நாள்!!

செட்டிகுளம் படுகொலை..

வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்தில் 52 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் மரணித்தவர்களின் உறவுகளினால் அவர்களது வீடுகளிலேயே நினைவு கூறப்பட்டப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பொலிசாரால் அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில் இறந்த அம் மக்களை நினைவுகூற வன்னியைச் சேர்ந்த எந்த அரசியல் தலைமைகளும் முன்வராத நிலையில் உறவுகளை இழந்தவர்கள் தத்தமது வீடுகளில் மரணித்த தமது உறவுகளுக்கு தீபமேற்றி நினைவு கூர்ந்தனர்.

கடந்த 1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 2 ஆம் திகதி செட்டிகுளம் பகுதியில் ஊரடங்கு உத்தரவு நேரம் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட 52 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா, வைவரவபுளியங்குளம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (02.12.2021) இரவு 10.20 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள மதுபான விருந்தகம் ஒன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று,

அங்கிருந்து வேகமாக புகையிரத வீதி ஊடாக குருமன்காடு நோக்கி சென்ற போது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி தடம் புரண்டது.

இதன்போது முச்சக்கர வண்டியும் தடம் புரண்டு கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், கார் விபத்துக்குள்ளாகி தடம் புரண்டமையால் வீடு ஒன்றின் மதில் மற்றும் வீட்டின் கேற் என்பனவும் உடைந்து விழுந்துள்ளன.

குறித்த விபத்தில் காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பள்ளி ஆசிரியைக்கு மாமனாரால் நடந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

திருப்பத்தூர்..

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சிவா (40). இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2009ம் ஆண்டு முருகம்மாள் (36) என்பவரை திருமணம் செய்தார்.

இவர்களுக்கு மதுனிஷா (11) மற்றும் ரோகித் (8) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். முருகம்மாள் கலர்பதி பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். முருகம்மாள், கணவரோடு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

கடந்த 3 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். 3 வருடமாக அவருடைய அப்பா வீட்டில் தங்கி வாழ்ந்து வருகிறார் முருகம்மாள்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜங்களாபுரம் பகுதியில் உள்ள கணவன் வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த மாமனாரிடம், இந்த வீடு எனக்கு சொந்தம் நீங்கள் வீட்டைவிட்டு வெளியேறுங்கள் என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனால், மாமனாருக்கும், மருமகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதனையடுத்து, முருகம்மாள் சமையலறையில் இருக்கும் பொழுது ஆத்திரம் அடைந்த மாமனார் மணி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருமகளை கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.

இதில், நிலைகுலைந்த முருகம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து உயிரிழந்தார். முருகம்மாளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

அப்போது, ரத்த வெள்ளத்தில் முருகம்மாள் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், உடனே நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் வந்தனர்.

அப்போது, போலீசாரிடம் மணி, தான் மருமகளை வெட்டி கொலை செய்ததாக கூறி சரணடைந்தார். இதனையடுத்து, மணி மீது வ.ழக்கு பதிவு செய்த போலீசார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருமகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சனைக்காக மாமனாரே மருமகளை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முகநூல் காதலால் கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கேரளா..

கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் மோபியா பர்வீன் சட்டக்கல்லூரி மாணவி. தொடுபுழாவில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவருக்கு பேஸ்புக் மூலம் முகமது சுஹைல் என்பவர் ப.ழக்கமானார்.

முகநூல் நட்பு நாளடைவில் கா.தலாக மாறியது. சுஹைல் முகநூல் மூலம் பர்வீனுக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பே பர்வீனை பெண் கேட்டுள்ளார். இடைதரகர் மூலம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. அதன்பின்னரே முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது.

இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் நடந்துள்ளது. சுஹைல் தான் வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக பர்வீன் தந்தை மற்றும் அவரது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் வெளிநாடு சென்றுவிடுவோம் எனக் கூறியுள்ளார்.

மொபியா ஃப்ரீலான்ஸ் டிசைனராக வருமானம் ஈட்டி வந்துள்ளார். திருமணம் முடிந்த சில நாளில் சுஹைல் மொபியாவிடம் நான் ஒரு படம் எடுக்க விரும்புகிறேன். அதற்காக ரூ40 லட்சம் தேவைப்படுகிறது. நீ உன் வீட்டில் வாங்கிக் கொடு எனக் கேட்டுள்ளார்.

வரதட்சணை கேட்டு பெறுவதில் விருப்பம் இல்லாத பர்வீன் மொபியா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதன் பின்னர் காதலன் சுஹைலின் உண்மை முகம் பர்வீன் மொபியாவுக்கு தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு வேலை என சுஹைல் கூறியது அனைத்தும் பொய் என்றும் பர்வீன் வருமானத்தில் சுஹைல் காலம் தள்ளிவந்தது தெரியவந்தது. வரதட்சனை கேட்டு துன்புறுத்த தொடங்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் இவர்களின் கொடுமையை தாங்க முடியாமல் ஆலுவா போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக விசாரிக்குமாறு ஆலுவா போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஆலுவா காவல் நிலையத்தின் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுதிர் என்பவர் நவம்பர் 22ஆம் தேதி பர்வீன் குடும்பத்தினரையும், சுஹைலின் குடும்பத்தினரையும் அழைத்துள்ளார்.

அப்போது சுஹைல், அவரது தந்தை, தாய் ஆகியோர் காவல்நிலையம் வந்துள்ளனர். சுஹைல் பர்வீன் குடும்பத்தினரை கடுமையான சொற்களால் பேசியுள்ளார்.

இதனால் கோபப்பட்ட பர்வீன் சுஹைலை அறைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுதிர் மிக கடுமையாக நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்தப்பெண் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

காவல்நிலையத்தில் இருந்து வீட்டுக்கு மிகவும் மவுனமாக வந்துள்ளார். வீட்டிற்கு வந்தும் அமைதியாகவே இருந்துள்ளார். சில மணி நேரங்களில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

அவர் எழுதியிருந்த கடிதத்தில், “எனது சாவுக்கு கணவர் சுஹைல், அவரது பெற்றோர் யூசூப்- ருகியா, ஆலுவா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுதிர் ஆகியோர் தான் காரணம்.

அப்பா நீங்கள் சொன்னது சரி. சுஹைல் நல்லவன் கிடையாது” என எழுதியிருந்தார். இதையடுத்து அன்றைய தினம் முகமது சுஹைல் மற்றும் அவரது பெற்றோரை கோத்தமங்கலம் போலீஸ் கைது செய்தனர்.

இன்ஸ்பெக்டர் சுதிர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையத்திற்கு வெளியே போராட்டங்கள் நடந்தன.

காவல் அதிகாரில் சுதிர் இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்தது, மற்றும் பர்வீனை அவமதிக்கும் விதமாக நடந்துக்கொண்டுள்ளார். இதனை அந்தப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

எனவே காவல் அதிகாரியின் பெயரையும் இந்த வழக்கில் சேர்க்கப்படவேண்டும் அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என இளம்பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போராட்டம் நடத்தினர்.

தொடர் போராட்டம் காரணமாக சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கேரளா இளம்பெண் உத்ராவின் கொலை வழக்கு விசாரணையின்போது இந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆரம்ப கட்ட விசாரணையில் அலட்சியமாக இருந்தது தொடர்பாக இவரது குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது அவர் அன்சல் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

சில கணனி, அலைபேசி விளையாட்டுக்களுக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை!!

கணனி, அலைபேசி விளையாட்டு..

சில வகை கணனி மற்றும் அலைபேசி ஒளித்தோற்ற விளையாட்டுகளுக்கு (Video Games) தடை விதிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இந்தக் கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.

சில வகை ஒளித்தோற்ற விளையாட்டுக்களை கணனி அல்லது அலைபேசி வழியாக விளையாடுவதனால் சிறுவர்களின் உளநிலை பாதிக்கப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அநேகமான சிறுவர் சிறுமியர் கணனி விளையாட்டுக்களுக்கு அடிமையாகியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில வகையான கணனி விளையாட்டுக்களை விளையாடும் சிறார்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு உளநிலை பாதிக்கப்படுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஆபத்தான விளையாட்டுக்களை தடை செய்ய அரசாங்கம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரியுள்ளார்.