வவுனியாவில் பார ஊர்தி விபத்து : சாரதி மாரடைப்பால் உயிரிழப்பு!!

 
வவுனியா A9 வீதி புதூர் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த பார ஊர்தியின் சாரதிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளதுடன், பார ஊர்தி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது..

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இரும்பகம் ஒன்றிற்கு பொருட்களை ஏற்றிச்சென்ற பார ஊர்தியின் சாரதிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டமையினால் பாரஊர்தி வீதியை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந் நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், குறித்த பார ஊர்தியின் சாரதி உயிரிழந்திருந்திருந்தமை தெரியவந்தது.

உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அவரது சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைப் பெண்ணின் அதிரடிக் கேள்வி : பதிலளிக்குமா ICC?

 
சர்வதேச கிரிக்கெட் சபையிடம் (ICC) ட்விட்டரில் இலங்கைப் பெண் எழுப்பிய கேள்வி அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியும் பொலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதுகுறித்து பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ICCயும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தது.

இதனை கவனித்த இலங்கை பெண் ICC மீது நியாயமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.அதில் ’கோஹ்லி-அனுஷ்கா திருமணம் நடைபெற்றது மகிழ்ச்சி தான். ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எப்போது திருமணத்திற்கு வாழ்த்து சொல்ல தொடங்கியது? இதுவரை வேறு யாருக்காவது வாழ்த்து கூறியதுண்டா என்பது போன்ற கேள்வியை எழுப்பியுள்ளார்’?

அனைவரையும் சிந்திக்க வைத்துள்ள அவரின் இந்த கேள்வி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

 

கேரள மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை : தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!!

 
கேரளாவில் சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்குதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கேரள மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா, கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியது.

இந்த வழக்கில் அசாமைச் சேர்ந்த அமீருல் இஸ்லாம் என்ற 23 வயது இளைஞரை பொலிசார் கைது செய்தனர்.

கொச்சி நீதிமன்றத்தில் 18 மாதங்களாக நடைபெற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமீருல் இஸ்லாம்தான் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் அவனுக்கு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

வவுனியா ஓமந்தை கமநல சேவைகள் நிலையத்திற்கு எதிராக விவசாயிகள் குற்றச்சாட்டு!!

 
ஓமந்தை கமநல சேவைகள் நிலையத்தினால் விவசாயிகளுக்கு பசளைகளுக்கென அரசினால் வழங்கப்படும் 5000 ரூபா மானியம் பெறுவதற்காக பொதுமக்கள் பலநாட்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவதாகவும் இதேவேளை பொதுமக்கள் வரிசையில் நின்று பல மணிநேரம் காத்திருந்த பின்பு அவர்களை “இன்று போய் நாளை வா..” என்ற பாணியில் திருப்பி அனுப்புகிறார்கள் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் வயது முதிந்தவர்களும் இங்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்து திரும்ப செல்கிறார்கள். இவ் விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் விஜயகுமாரை தொடர்பு கொண்ட போது,

குறித்த கமநல சேவைகள் நிலையத்தில் உள்ள அமைப்பினருக்கு குறித்த மானியத்தை பெறுவதற்கு இறுதி தினம் கடந்த 30.11.2017 உடன் முடிவடைந்து விட்டது. எனினும் 05.12.2017 தொடக்கம் 08.12.2017 வரை காலவரையறை நீடித்திருந்தும் இதுவரையில் படிவங்கள் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை

இதேவேளை குறித்த நிலையத்தின் கீழ் உள்ள அமைப்புகளுக்கு பதிவு தபால் மூலமும் நேரடியாகவும் அறிவுறுத்தல் பதாதைகள் ஒட்டப்பட்டும் இதுவரையிலும் முழுமையாக படிவங்களை குறித்த அங்கத்தவர்கள் எமக்கு கிடைக்க தரவில்லை என குறிப்பிட்டதுடன்,

ஓமந்தை மற்றும் செட்டிகுளம் கமக்கார நிலையங்களினால் காணப்படும் இது போன்ற காலதாமதத்தினால் 15000 விவசாயிகளுக்கு பணத்தை வழங்குவதற்கு தம்மால் முடியவில்லை எனவும் குறிப்பிட்டார்.

டெஸ்ட் போட்டி முறைகளில் அதிரடி மாற்றம்!!

நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் தினமும் 98 ஓவர்கள் வீச வேண்டும் என்று, பொலோ- ஒன் கொடுப்பதற்கான ஓட்ட வித்தியாசம் 150 ஓட்டங்கள் எனவும் ஐ.சி.சி. கூறியுள்ளது.

கிரிக்கெட்டில் தற்போது டெஸ்ட், 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் மற்றும் 20 ஓவர்கள் கொண்ட டி20 என மூன்று வகை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒரு வீரரின் உண்மையான திறமையை கண்டறிய டெஸ்ட் போட்டிதான் சிறந்ததாக இருந்து வருகிறது.

காலப்போக்கில் ஐந்து நாட்கள் முழுவதும் செலவழித்து டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் விரும்புவதில்லை. இதனால் ஒருநாள் போட்டிக்கு முக்கியத்தும் கொடுத்த ரசிகர்கள், தற்போது டி20 கிரிக்கெட்டிற்கு மாறி வருகின்றனர். இதனால் பாரம்பரிய போட்டியாக கருதப்படும் டெஸ்டிற்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் காலையில் நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டிகளை பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக நடத்த அனைத்து நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. அவுஸ்திரேலியா இதில் முன்னணியாக விளங்குகிறது. அந்த அணி அடிலெய்டில் பகல் – இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளை நான்கு நாட்களாக குறைக்க வேண்டும் என்ற கருத்துக்கள் நிலவி வருகிறது. முதற்கட்டமாக தென்னாபிரிக்கா இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது. இதற்கு ஐ.சி.சி. சம்மதம் தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தென்னாபிரிக்க – சிம்பாப்வே இடையில் வருகிற 26ம் திகதி ‘பாக்சிங் டே’ டெஸ்டாக இதை நடத்துகிறது. இந்த டெஸ்ட் எத்தனை மணி நேரம் நடக்கும்? எத்தனை ஓவர்கள் வீச வேண்டும் என்ற விதிமுறை வகுக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு நாள் 98 ஓவர்கள் வீச வேண்டும் என்றும், பொலோ-ஆன் 150 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், 6.30 மணி நேரம் போட்டி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரத்தில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றம்!!

வவுனியா நகர்பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் நகரின் முக்கிய பகுதிகளில் அதி விசேட சி.சி.ரி கமரா பொருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வழி நடத்தலில் வவுனியா வர்த்தகப்பிரமுகர்கள் இந் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா வர்த்கப்பிரமுகர்கள் ஒன்றிணைந்து நகரின் முக்கிய பகுதிகளில் அதி விசேடமான சி.சி.ரி கமராவினைப் பொருத்துவதற்கு மதிப்பீடு செய்யப்பட்டபோது இந்நடவடிக்கைக்கு இரண்டு மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் இப்பணத்தினை நகரிலுள்ள வர்த்தகப்பிரமுகர்களின் உதவியுடன் செய்து முடிப்பதற்கான வேலைத்திட்டத்தினை மேற்கொண்டு இன்று முதல் பணம் சேகரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

எனவே இந்நடவடிக்கைக்கு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தங்களலான உதவிகளை வழங்குமாறும் இந்நடவடிக்கை நாளை எங்களுக்கு பேருதவியாக இருப்பதுடன் குற்றச் செயல் புரிபவர்களை கைது செய்வதற்கும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நடவடிக்கையினை அடுத்து நகரில் இடம்பெற்றுவரும் குற்றச்செயல்கள், திருட்டுச்சம்பவங்கள், வழிப்பறிப்பு நடவடிக்கைகள், கடத்தல்கள், வாள்வெட்டுச்சம்பவம் போன்ற குற்றச் செயலை தடுப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதுடன் இந் நடவடிக்கையினை வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அலுவலகம் மேற்கொண்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்குப் பாடசாலைகளை 8 மணிக்கே ஆரம்பியுங்கள் : மாகாண சபையில் வலியுறுத்தல்!!

வடக்கு மாகாணப் பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பிப்பதால் மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர், முன்னர் இருந்தமை போன்று 8 மணிக்கே பாடசாலை ஆரம்பிக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை அமர்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாளில் கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் மற்றும் வடக்குமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோரால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் குறிப்பிடுகையில், வடக்கு மாகாணத்தில் தற்போது பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படுவதால் மாணவர்கள் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
நேரத்திற்கு எழுந்து பாடசாலைக்குச் செல்லவேண்டியிருப்பதால் காலை உணவைக் கூட உண்ணாது செல்கின்றனர். இதனால் அவர்களின் உடல் நிலை சோர்வடைந்து கற்றலைத் தொடர முடியாது அவதிப்படுகின்றனர்.
இதேபோன்றே ஆசிரியர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாகக் குடும்பப் பொறுப்புள்ள ஆசிரியர்களது பாதிப்புக்கள் பல வகைகளில் காணப்படுகின்றன. ஆகவே இதனைக் கல்வி அமைச்சர் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவிக்கையில், காலை 7.30 மணிக்கு பாடசாலை ஆரம்பிப்பது பொருத்தம் இல்லை, மாணவர்கள் பாதிக்கப்படுபின்றனர். எனவே இதனை அமைச்சர் பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதன்போது சபை இதனை மாற்றச் சம்மதித்தால் பரிசீலிக்கலாம் என்று வடமாகாண கல்வி அமைச்சர் பதிலளித்துள்ளார்.

திருச்செந்தூர் முருகன் கோவில் மண்டபம் இடிந்து பெண் பக்தர் பலி : கோவில் அடைப்பு!!

 
தமிழ்நாடு, திருச்செந்தூரில் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் ஏராளமான பக்தர்கள் சிக்கியிருந்தனர். இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதை அடுத்து உடனடியாக கோவில் நடை அடைக்கப்பட்டது.

அறுபடை முருகன் கோவிலில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் முருகன் கோவில். இந்த கோவிலுக்கு தினசரியும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து வந்து முருகனை தரிசனம் செய்வது வழக்கம். இன்று பாதையாத்திரையாக வந்த பக்தர்கள் முருகன் கோவில் பிரகாரங்களில் தங்கி இளைப்பாறியிருந்தனர்.

திருச்செந்தூர் முருகன் கோவில் நீண்ட பிரகாரங்களைக் கொண்டது. வள்ளி குகை அருகே உள்ள பிரகார மண்டபம் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த மண்டபம் இன்று காலையில் திடீரென்று இடிந்து விழுந்தது.

பிரகாரத்தில் ஒய்வெடுத்துக் கொண்டிருந்த பக்தர்கள் உள்ளே சிக்கினர். இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது பற்றி தெரியவில்லை.

பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப்பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் காயம் கட்டிட இடிபாடுகளுக்குள் பக்தர்கள் பலர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

அங்கு கோவில் நிர்வாகிகள் தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெண் பக்தர் கோவிலுக்குள் மரணமடைந்த காரணத்தால் கோவில் நடை உடனடியாக அடைக்கப்பட்டது.

மகளுக்காகவே வாழ்ந்த தந்தைக்கு நேர்ந்த சோகம்!!

கரைக்கு 200 மீற்றர் தொலைவில் இருந்தபோது கடலில் சிக்கிய தந்தை பரிதாபமாக பலியானார். இதனால், அவரது ஒரே மகள் அனாதரவாகியுள்ளார்.

நாற்பத்தைந்து வயது நிரம்பிய இந்த நபருக்கு மூன்று பெண் பிள்ளைகள். மனைவியையும் மூத்த இரண்டு மகள்களையும் 2004 சுனாமிக்கு பலிகொடுத்த இவர், கடைசிப் பெண்பிள்ளையை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்.

தங்காலை, மாவெல்ல-கல்பொக்க பகுதியைச் சேர்ந்த மீனவரான இவர், நேற்று முன்தினம் (12.12) சக மீனவர்கள் நால்வருடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தார்.

வழியில் திசைகாட்டி சரியாக வேலை செய்யாததால் கரைக்குத் திரும்ப முடிவெடுத்த இவர்கள், கரைக்கு சுமார் 200 மீற்றரே தொலைவில் படகை நங்கூரமிட்டனர்.

பின்னர் மகளைப் பார்த்துவிட்டு வரலாம் என்று எண்ணி, பிராணவாயுக் குழாய் சகிதம் கடலுக்குள் குதித்து கரையை நோக்கி நீந்தத் தொடங்கினார் இந்தத் தந்தை. இது அவரது அன்றாட நிகழ்வுதான். ஆனால், அன்று மற்றைய நாட்களைப் போல அமையவில்லை.

கரையை நோக்கி நீந்தியபடி இருந்த இவர் திடீரெனக் கடலில் மூழ்கினார். நீச்சலில் வல்லவரான இவர் கடலில் மூழ்குவார் என்று கொஞ்சமும் எண்ணியிராத சக மீனவர்கள் அவரைக் கண்காணிக்கத் தவறினர்.

கூப்பிடு தூரத்தில் கரை இருக்க, மகளின் நினைவுடனேயே கடலில் மூழ்கி உயிரிழந்தார் இந்தத் தந்தை.

தற்போது, மொத்தக் குடும்பத்தையும் கடலுக்கே தாரை வார்த்துவிட்ட சாமிக்கா என்ற அந்தப் பதினைந்து வயதுச் சிறுமி, யாருமற்ற நிலையில் கரையில் அனாதரவாக விடப்பட்டிருக்கிறார்.

கூகுளில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட சொல் பாகுபலி-2!!

கூகுள் தேடுதல் இயந்திரத்தில் ஒவ்வொரு வருடமும் அதிகம் தேடப்படும் வாசகம் பற்றி அறிவிப்பு வெளியிடப்படுவது உண்டு.

அவ்வகையில் இந்த வருடம் ஆதிக்கம் செலுத்திய செய்திகள், நிகழ்வுகள் மற்றும் டிரெண்டிங் தொடர்பான பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது.

அதில், ராஜமவுலி இயக்கிய, பல சாதனைகளை படைத்த பாகுபலி-2 திரைப்படம், அதிகம் தேடப்பட்ட வாசகங்களில் மொழிகளை கடந்து முதல் இடத்தில் உள்ளது.

இதனை தொடர்ந்து இந்தியன் பிரீமியர் லீக் என்ற வாசகம் 2வது இடத்திலும், லைவ் கிரிக்கெட் ஸ்கோர் என்ற வாசகம் 3வது இடத்திலும் உள்ளன.

இந்த வருடத்திற்கான டொப் பொழுதுபோக்காளர்கள் வரிசையில் சன்னி லியோன் மீண்டும் முதல் இடத்தில் உள்ளார். தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்கள் ஆர்ஷி கான் மற்றும் சப்னா சவுத்ரி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் யூ டியூபில் பாடகி வித்யா வாக்ஸ் உள்ளார்.

கடந்த வாரம் போராட்டத்தில் பங்கேற்காத ரயில் ஊழியர்கள் இன்று காலை முதல் பணிப் புறக்கணிப்பு!!

இன்று காலை முதல் ரயில் ஊழியர்கள் சிலர் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். ரயில்வே தொழிநுட்ப முகாமைத்துவ உதவி அதிகாரிகளே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை கடந்த வாரம் ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து மேற்கொண்ட வேலை நிறுத்தத்தில் இவர்கள் பங்குபற்றி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த 6ம் திகதி நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்கள் சில ஒன்றிணைந்து பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுத்தனர்.

இதனால், ரயில் போக்குவரத்துக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டதோடு, இந்த விடயம் குறித்து, போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுடன் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் அது பலனளிக்காது போராட்டம் தொடர்ந்தது.

இந்தநிலையில், இந்த விடயம் குறித்து ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் சரத் அமுணுகம தலைமையில் குழுவொன்றை நியமித்தார்.

குறித்த நால்வர் அடங்கிய குழுவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ரயில்வே தொழிற்சங்கங்கள் தமது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப முடிவு செய்தன.

எனினும், குறித்த கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டினால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி, இன்று காலை முதல், தாம் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளதாக, ரயில்வே தொழிநுட்ப முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுஇவ்வாறு இருக்க, ரயில் போக்குவரத்து அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்தும் வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுமாயின் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து பிரதியமைச்சர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

மின்சாரம் தாக்கி 3 பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்!!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரம் எகமுத்துகம பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் வெங்கடாசலம் சகுந்தலா வயது 52 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனது வீட்டின் நீர் இறைக்கும் மோட்டாருக்கு அருகாமையில் மின் கம்பியை பிடித்தவாறு விழுந்து கிடந்ததாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் 2 மணித்தியாலத்துக்கு முன்னதாகவே உயிரிழந்துள்ளதாகவும் அவரின் பிள்ளைகள் தெரிவித்தனர்.

குறித்த பெண் நித்திரை கொள்வதற்காக வேறொரு வீட்டிற்கு செல்வது வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அதன்படி நேற்று இரவு குறித்த பெண்மனி நித்திரை கொள்ள வராததையடுத்து அவரை தேடிய போதே இன்று அதிகாலை உயிரிழந்திருந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இறந்தவரின் சடலம் பிரேத பிரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படியும் தங்கம் கடத்தலாம் : இலங்கையிலிருந்து சென்ற ஐயப்ப பக்தர்கள் கைது!!

கொழும்பிலிருந்து வந்த ஐயப்ப பகத்தர்கள் இருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து, விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்த நிலையில், குறித்த இருவரும் நேற்று பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இருவரிடமும் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவர்களது கழுத்தில் அணிந்திருந்த மாலையில் உள்ள கருப்பு உருண்டையில் 630 கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதன், சர்வதேச சந்தை மதிப்பு 19 (இந்திய ரூபாய்) இலட்சம் என தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, மாலைகள் சுங்க பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இலங்கையிலிருந்து சென்ற பக்தர்கள் சுங்க அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், ‘‘தங்கத்தை எந்த வழியில் கடத்தி வந்தாலும், அதனை பறிமுதல் செய்வோம்’’ என அதிகாரிகள் குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த இருவரிடமும் சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

சுவிஸ்லாந்தில் அரசியல் பாதுகாப்பு கோரும் 146 இலங்கையர்கள்!!

இலங்கையில் இருந்து சுவிஸ்லாந்திற்கு சென்ற 146 இலங்கையர்கள் அந்நாட்டில் அரசியல் பாதுகாப்பு கோரியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த 146 இலங்கையர்களும் இந்த வருடத்தில் சுவிஸ்லாந்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வித உயிர் அச்சுறுத்தல்களும் இல்லாத நிலையில் சுவிஸ்லாந்தில் அரசியல் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.
குறித்த இலங்கையர்கள் போலி மரண அச்சுத்தல்களை காட்டி அரசியல் பாதுகாப்பு கோரியுள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வருடத்தில் 8315 வெளிநாட்டவர்கள் சுவிஸ்லாந்தில்  அரசியல் பாதுகாப்பு கோரியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்காக 4 மற்றும் 2 நட்சத்திர ஹோட்டல்கள் இரண்டு நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான காணியில் நட்சத்திர ஹோட்டல் நிர்மாணிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

விமான பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த சேவை ஒன்றை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஹோட்டல் நிர்மாணிப்பு தொடர்பில் இரு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கான ஆலோசனை வழங்க அவர்கள் தவறியுள்ளனர்.

இந்நிலையில் வேறு முதலீட்டாளர்களிடம் அதற்கான ஆலோசனையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய ஒரு பகுதியில் 4 நட்சத்திர ஹோட்டலும், மற்றைய பகுதியில் 2 நட்சத்திர ஹோட்டலும் நிர்மாணிப்பதற்கு தகுதியான முதலீட்டாளர்கள் தெரிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சமாதான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை பல மடங்காக அதிகரித்துள்ளது.

மேலும் பல வெளிநாட்டவர்களை கவரும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையில் பல்வேறு வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காதலன் முகத்தில் அசிட் வீச்சு : சூப் மூலம் வெளிவந்த உண்மை!!

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த சுவாதி தனது கணவர் சுதாகரை கள்ளக்காதலன் ராஜேசுடன் இணைந்து கொலை செய்தார். அவர் உடலை வனப்பகுதியில் புதைத்து வைத்தனர். சுவாதி, ராஜேசின் முகத்தை மாற்றி அவரை தனது கணவர் என கூறி ஏமாற்ற திட்டம் தீட்டினார்.

அதன் படி சுவாதி, ராஜேசின் முகத்தில் அசிட் ஊற்றினார். அவரது முகம் அடையாளம் தெரியாமல் மாறியது. பின்னர் தனது உறவினர்களிடம் அடையாளம் தெரியாத நபர்கள் சுதாகர் முகத்தில் பெட்ரோல் ஊற்றி விட்டதாக கூறினார். இதை நம்பிய அனைவரும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அவர்களின் நாடகம் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வால் வெளிச்சத்திற்கு வந்தது. ராஜேசிற்கு மட்டன் சூப் கொடுத்தனர். அவர் சைவம் என்பதால் சாப்பிட மறுத்துள்ளார். ஆனால் சுதாகர் அசைவம் சாப்பிடுபவர். இதனால், உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

சுதாகரின் பெற்றோர்கள் பொலிஸில் புகார் அளித்தனர். ராஜேசின் கைரேகையை சோதனை செய்ததில் அவர் சுதாகர் இல்லை என்பது தெரிய வந்தது. பொலிஸார் சுவாதியிடம் விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

இதையடுத்து பொலிஸார் சுவாதியை கைது செய்தனர். ராஜேஸ் மருத்துவமனையில் இருப்பதால் அவர் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.