வவுனியாவில் யுவதியின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடிய திருடன்!!

வவுனியா கணேசபுரம் பகுதியில் நேற்று (13.12.2017) மாலை. 4.50 மணியளவில் வீதியில் தனிமையில் சென்று கொண்டிருந்த யுவதி ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்து கொண்டு திருடன் தப்பி ஓடி விட்டதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை 4.50 மணியளவில் கணேசபுரம் பகுதியிலிருந்து தனது வீட்டிற்கு துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த இளம் யுவதியை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிலில் சென்ற இளைஞர் ஒருவர் வீதியில் சன நடமாட்டம் அற்ற பகுதியில் வைத்து இளம் யுவதி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அபகரித்துக்ககொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

எனினும் குறித்த யுவதி மோட்டார் சைக்கிலின் இலக்கத்தை குறித்து வைத்துள்ளார். இதையடுத்து நேற்று மாலை 6.30 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்திற்குச் உறவினருடன் சென்ற குறித்த யுவதி முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து குறித்த மோட்டார் சைக்கிலின் இலக்கத்தை வைத்து திருடனைக்கைது செய்வதற்கு பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

O/L பரீட்சை எழுத வந்த மாணவருக்கு நேர்ந்த விபரீதம்!! 

2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர் ஒருவர் வைத்தியசாலை ஒன்றிலிருந்து பரீட்சையை எழுதியுள்ளார்.
இவர் நேற்றைய தினம் இவ்வாறு பரீட்சை எழுதியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீகொடை மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்திற்கு மோட்டார் சைக்கிள் மூலம் அநுஷ மதுரங்க என்ற மாணவர் தனது சகோதரனுடன் புறப்பட்டுள்ளார்.
இவர்கள் பரீட்சை நிலையத்தினை அண்மித்த வேளையில், அவர்களுக்கு பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இருவரும் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சாதாரண தர பரீட்சை எழுதவிருந்த அநுஷவிற்கு ஹோமாகம வலய கல்வி அலுவலகத்தின் பரீட்சை கண்காணிப்பாளர் ஒருவரின் விசேட மேற்பார்வையின் கீழ் வைத்தியசாலையிலேயே பரீட்சை எழுதுவதற்கான அனுமதி கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர் வைத்தியசாலையிலேயே பரீட்சை எழுதியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை உட்பட இரு சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தியது ஈபிடிபி!!

 
வவுனியா மாவட்டத்தின் ஐந்து சபைகளில் வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை ஆகிய இரு சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) இன்று (13.12.2017) மாலை வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் செலுத்தியது.

இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஈபிடிபி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் குலசிங்கம் திலீபன்,
ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பாக வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு பிரதேச சபை என்பவற்றுக்கான கட்டுப்பணம் இன்று (13.12.2017) பிற்பகல் 4 மணியளவில் கட்டப்பட்டுள்ளது.

மக்கள் போலித் தேசியம் பேசுபவர்களையும், போலி வாக்குறுதிகளை கொடுப்பவர்களையும் இனங்காணத் தொடங்கியுள்ளனர். இம்முறை நடைபெறப் போகின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வவுனியாவில் ஆழமான கால் பதிக்கும். இளைஞர்களின் வரவேற்பு அதிகரித்துள்ளது.

கிராமங்கள், நகரங்கள் என செல்லும் இடமெல்லாம் எமது கட்சியையும், அதன் செயலாளர் நாயகத்தின் அபிவிருத்தியையும் மக்கள் அங்கீகரிகத் தொடங்கியுள்ளனர். இம்முறை புதிய மாற்றத்துடன் அபிவிருத்தி நோக்கி எமது கட்சி பயணிக்கும் எனத் தெரிவித்தார்.

இதில் கட்சி வேட்பாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நீதிமன்றத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு!!

 
வவுனியா நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் மிக நீண்டகாலமாக நிலவிவந்த இரு பிரச்சினைகளுக்கு இன்று (13.12.2017) தீர்வு எட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில் குழந்தைகளுடன் நீதிமன்றத்திற்குவரும் தாய்மாரின் அசௌகரியங்களை போக்கும் வகையில், நீதிமன்ற வளாகத்தில் ‘மழலைகள் மகிழ்வகம்’ திறந்து வைக்கப்பட்டதுடன், வாகனத்தரிப்பிடம் அமைப்பதற்காக கால்கோளிடும் நிகழ்வும் இடம்பெற்றது.

‘யுனிசெப்’ அமைப்பினால் சர்வதேச சிறுவர் தினம் – 2017 எனும் செயற்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தளபாடங்களைக் கொண்டு, நீதி அமைச்சின் அனுசரணையுடன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனின் வழிகாட்டலின் கீழ் ‘மழலைகள் மகிழ்வகம்’ உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார், வவுனியா மேலதிக மாவட்ட நீதிபதி தஸ்னீம் பௌஷான், வலயக் கணக்காளர் ஜீவா சுகந்தன், முன்னாள் வவுனியா மேல் நீதிமன்ற பதிவாளர் ஜனாப் அபூபக்கர் ஆகியோர் முன்னிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி முருகேசு சிற்றம்பலம், சிரேஷ்ட சட்டத்தரணி கங்காதரன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

இதேவேளை மிக நீண்டகாலமாகக் காணப்பட்ட சட்டத்தரணிகளுக்கான வாகனத் தரிப்பிட இடவசதியின்மையை போக்கும் வகையில் நீதிமன்றிற்கு அருகில் வாகனத்தரிப்பிடம் அமைப்பதற்கு ஏதுவாகக் கால்கோளிடும் நிகழ்வு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி. பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வு வவுனியா நகரசபைச் செயலாளர் ஆர்.தயாபரனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வுகளில் நீதிபதிகள், சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்!!

 
வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பிரதேச செயலக பதிவுகளை நிராகரித்து இன்று (13.12.2017) காலை 10 மணியளவில் வவுனியா பிரதேச செயலகத்தினை முற்றுகையிட்டு வவுனியா பிரதேச செயலாளருக்கும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கும் மகஜர் கையளித்தனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பதிவுகளை தாங்கள் நிராகரிப்பதாகவும், ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் ஆணைக்குழுக்கள் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எவ்வித விசாரணைகளும் முன்னேடுக்கப்படவில்லை. இவ் விடயத்தை கவனத்தில் கொண்டு பல வருடங்கள் தாமதமாகிக் கொண்டிருப்பதனால் இப் பதிவினை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்து,

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு சென்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரனவிடமும் வவுனியா பிரதேச செயலகத்திற்கு சென்று வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசாவிடமும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

சீனாவில் 62 மாடிக் கட்டிடத்தில் சாகச முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் தவறி வீழ்ந்து மரணம்!!(வீடியோ)

சீனாவில் 62 மாடிக் கட்டிடத்தில் சாகசம் செய்ய முயன்ற இளைஞன் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த வு யாங்கிங் என்ற இளைஞன் உயரமான கட்டிடங்களின் மீது ஏறி சாகசங்கள் செய்து வந்தார். அவற்றை வீடியோ செய்து சீன இணையத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.

அவரின் சாகசங்களைக் கண்டு அவரை சீனாவின் சூப்பர் மேன் என்று அழைத்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரின் சாகச முயற்சியே அவருடைய மரணத்திற்கான காரணமாக அமைந்துவிட்டது.

யாங்கிங் சீனாவில் உள்ள 62 மாடிக் கட்டிடத்தின் மாடியில் சாகசம் செய்வதற்காகத் தயாரானார். அதை வீடியோ எடுக்க அனைவரும் தயாராக இருந்தனர்.

அவர் மாடியில் ஏறி இரண்டு கால்களையும் கீழே தொங்கவிட்டு கைகளால் கட்டிடத்தைப் பிடித்திருந்தார்.
சில நிமிடங்களில் கை நழுவி கீழே வீழ்ந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

2016 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வட மாகாணம் 4.2% பங்களிப்பு!!

2016 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வட மாகாணம் 4.2 வீத பங்களிப்பை வழங்கியுள்ளது.

வட மாகாணத்தின் அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள மத்திய அரசாங்கம் மேலும் கரிசனை செலுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட உரையில் மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

நாட்டில் வேலையற்றோர் தொகை 4.4 வீதமாகக் காணப்படும் போது, வட மாகாணத்தில் வேலையற்றோர் தொகை 6.3 வீதமாக அமைந்துள்ளது.

நாட்டில் தலைக்குரிய வறுமைச்சுட்டி 4.1 வீதமாகக் காணப்படுகின்ற போது, வட மாகாணத்தில் தலைக்குரிய வறுமைச்சுட்டி 7.7 வீதமாகக் காணப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் தனது வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டார்.

வட மாகாண சபையின் நேற்றைய 112 ஆவது அமர்வின் போது முதலமைச்சர் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிமுக உரையை ஆற்றினார்.

75 ரூபாவிற்கும் அதிகமாக தேங்காயை விற்போர் மீது சட்ட நடவடிக்கை!!

75 ரூபாவை விட கூடுதலான விலையில் தேங்காய் விற்பனை செய்த 119 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவிக்கின்றது.

அதிக விலையில் தேங்காயை விற்பனை செய்வோர் தொடர்பில் நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பை அண்டியுள்ள பகுதிகளிலிருந்தே அதிகளவில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் ஹசித திலகரத்ன சுட்டிக்காட்டினார்.

சந்தைகளிலும் தேங்காயின் தரம் மற்றும் விலை தொடர்பிலான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிக விலைக்கு தேங்காய் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகார சபையின் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவிக்கின்றது.

18 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்த கிறிஸ் கெயில்!!

பங்களாதேஷில் நடைபெற்ற பி.பி.எல். இறுதி போட்டியில் கிறிஸ் கெயிலின் அதிரடி சிக்சர்களால் ரங்க்பூர் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் இறுதி போட்டி டாக்கா டைனமைட்ஸ் மற்றும் ரங்பூர் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியை வென்ற டாக்கா டைமண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக சார்லசும், க்ரிஸ் கெயிலும் களமிறங்கினர். ஆனால், இரண்டாவது ஓவரில் ஜான்சன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன்பின் கெயிலுடன் மெக்கல்லம் களமிறங்கினார்.

இதையடுத்த் கிறிஸ் கெயில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார். அவரது அதிரடிக்கு மெக்கல்லம் ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் அணியின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இறுதியில், அந்த அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்கள் எடுத்தது.

கெயில் 69 பந்துகளில் 18 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடித்து 146 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த மெக்கல்லம் 43 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் அடித்து 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்த ஆட்டத்தில் கிறிஸ் கெயிலின் சாதனை துளிகள்:

* 18 சிக்சர்கள் அடித்துள்ளார்
* T20 கிரிக்கெட்டில் 11,000 என்ற மைல் கல்லை தொட்ட முதல் துடுப்பாட்ட வீரர்.
* T20 கிரிக்கெட்டில் 20 சதங்கள் அடித்து அசத்தியவர்
* மொத்தம் 819 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தவர்
* பிபி எல்லில் 100 சிக்சர்கள் அடித்தவர்
* T20 இறுதிப் போட்டியில், மெக்கலமுடன் சேர்ந்து கெயில் 201 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

இதையடுத்து, டாக்கா டைனமைட்ஸ் அணி 202 ஓட்டங்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கியது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஜஹ்ருல் இஸ்லாம் 38 பந்துகளில் 2 சிக்சர்கள், 4 பவுண்டர்ரி அடித்து 50 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற யாரும் தாக்குப் பிடிக்கவில்லை.

இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் ரங்பூர் ரைடர்ஸ் அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சாதனைகள் படைத்து வரும் கிறிஸ் கெயிலுக்கு பலரும் தங்களது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

பேஸ்புக்கில் டிரம்பை எச்சரித்து தாக்குதல் நடத்தியவர்!!

அமெரிக்காவின் நியூ​யோர்க்கில் உள்ள பேருந்து முனையத்தில் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததால் தீவிரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் நபர், தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதி டிரப்பை எச்சரிக்கும் ஒரு பதிவை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

´உங்கள் நாட்டை பாதுகாக்க தவறிவிட்டீர்கள் டிரம்ப்´ என அந்த பதிவு கூறுகிறது. செவ்வாய்க் கிழமையன்று அரசு வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தபோது, அகாயத் உல்லாவின் பதிவு குறித்த தகவல் வெளிவந்தது.

ஐ.எஸ் குழுக்களால் ஈர்க்கப்பட்ட 27 வயதான பங்களாதேஷ் குடியேறியான அகாயத் உல்லா, வெடிகுண்டை உடலில் சுமந்து வந்து வெடிக்கச் செய்தார்.

திங்கட்கிழமை அன்று பரபரப்பான காலை நேரத்தின்போது மான்ஹாட்டனில் உள்ள துறைமுக ஆணைய பேருந்து முனையத்தில், குறைந்த தொழில்நுட்பம் கொண்ட வெடிக்கும் கருவிகளை அகாயத் உல்லா தன் உடலில் சுற்றிவந்து வெடிக்கச் செய்தார். இந்த தாக்குதலில் அவரும் மற்ற மூவரும் காயமடைந்தனர்.

தீவிரவாத செயலுக்கு ஆதரவளித்தது, தீவிரவாத அச்சுறுத்தல் செய்தது போன்ற குற்றச்சாட்டுகளை அகாயத் உல்லா எதிர்கொண்டுள்ளதாக நியூ​யோர்க் பொலிஸார் ட்வீட் செய்துள்ளனர்.

´´ஐ.எஸ் அமைப்புக்காக நான் இதைச் செய்தேன்´´ என கைதுக்கு பிறகு அகாயத் உல்லா கூறியதாக அரசு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தபுகாரில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஐ.எஸ் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதால் தான் தூண்டப்பட்டதாக அகாயத் உல்லா விசாரணை அதிகாரிகளிடம் கூறியதாக ஆவணங்கள் கூறுகின்றன.

இந்த வெடிக்கும் சாதனத்தை தயாரிக்க கிருத்துமஸ் விளக்கு உள்ளிட்ட பல பொருட்களை உல்லா பயன்படுத்தியதாக புகார் கூறுகின்றது. வெல்க்ரோ பட்டையின் உதவியால் இந்த சாதனத்தை உடலில் இணைத்துள்ளார்.

சந்தேச நபர் உல்லாவின் வீட்டில் சோதனை செய்தபோது, ´உலோக குழாய்கள், வயர்கள் மற்றும் உலோக திருகுகள் கண்டுபிடிக்கப்பட்டன. வெடிகுண்டு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வெடி பொருட்களுடன் இவை ஒத்துபோகின்றன´´ என அரசு வழக்கறிஞர் ஜூம் கிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

´´ஒரு வருடத்திற்கு முன்பே எப்படி வெடிகுண்டு செய்வது என்ற ஆராய்ச்சியைத் தொடங்கியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த குறிப்பிட்ட தாக்குலை நடத்த அவர் பல வாரங்களாகத் திட்டமிட்டுள்ளார்´´ எனவும் அரசு வழக்கறிஞர் கூறினார்.

´அதிகளவு மக்களைக் கொல்ல´ இந்த இடத்தையும் நேரத்தையும் அவர் தேர்ந்தேடுத்துள்ளார் என ஜூம் கூறுகிறார்.

அகாயத் உல்லாவின் குடும்பம் 2011-ம் ஆண்டு அமெரிக்காவுக்குக் குடியேறியுள்ளது. உல்லா தொடர்பாக எந்த குற்ற பதிவும் இல்லை எனவும், கடந்த செப்டம்பர் மாதம் அவர் பங்களாதேஷ் வந்ததாகவும் பங்களாதேஷ் அரசு கூறியுள்ளது.

ராமர் பாலம் கட்டுக்கதை அல்ல : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!

ராமர் பாலம், மனிதர்களால் உருவாக்கப்பட்டது, அது கட்டுக்கதை அல்ல என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை கடலுக்கு அடியில் 50 கி.மீ. தூரத்துக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது. ராமாயண காலத்தில், இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க சென்ற ராமருக்காக வானர சேனைகள் அந்த பாலத்தை கட்டியதாக நம்பப்படுகிறது. அதனால், அதை இந்துக்கள் புனிதமாக கருதுகிறார்கள்.

ஆனால், ராமர் பாலம் என்பது வெறும் கட்டுக்கதை என்று மற்றொரு சாரார் கூறுகிறார்கள். கடலுக்கு அடியில் இயற்கையாக அமைந்த மணல் திட்டுகளே அவை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த 2005ம் ஆண்டு, இந்தியா-இலங்கை இடையிலான கடல் பகுதியை சரக்கு கப்பல் போக்குவரத்துக்காக ஆழப்படுத்த சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட்டது.

ஆனால் அத்திட்டத்தின் வழித்தடம், ராமர் பாலத்தை சேதப்படுத்தும் வகையில் இருந்ததால், அதற்கு எதிர்ப்பு எழுந்தது. இவ்விவகாரம் குறித்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இம்மாத இறுதியில் மத்திய அரசு தனது பிரமாண மனுவை தாக்கல் செய்ய உள்ளது.

இந்நிலையில், ராமர் பாலம் கட்டுக்கதை அல்ல, அது மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவில், இந்தியானா பல்கலைக்கழகம், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகம், கொலராடோ பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதை கண்டறிந்துள்ளனர்.

ராமர் பாலம் அமைந்துள்ள இடத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆய்வுகளை வைத்து அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இதுகுறித்து தெற்கு ஓரிகன் பல்கலைக்கழக வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர் செல்சியா ரோஸ் கூறியதாவது..

ராமர் பாலம் பகுதியில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள மணல் திட்டுகள் வேண்டுமானால், இயற்கையாக உருவானவையாக இருக்கலாம். ஆனால் அங்குள்ள சுண்ணாம்புக்கல் பாறைகள், மனிதர்களால் உருவாக்கப்பட்டவைதான். அவை 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு, அமெரிக்காவில் டிஸ்கவரி கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விஞ்ஞான சேனலில் இன்று காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் நேற்று ஒளிபரப்பப்பட்டது. அதை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டனர். 16 மணி நேரத்தில், 11 லட்சம் பேர் அந்த முன்னோட்ட காட்சியை பார்த்தனர்.

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, இந்த கண்டுபிடிப்பை வரவேற்றுள்ளார். ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று தலைப்பிட்டு, அந்த முன்னோட்டத்தை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

உடல் மெலிய அறுவை சிகிச்சை செய்த நடிகை?

கும்கி படம் மூலம் பிரபலமானவர் நடிகை லட்சுமி மேனன். பள்ளி படிப்பு படிக்கும் போதே கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் பள்ளியில் படிக்கும் பெண் போல் தோற்றம் இல்லாமல் இருந்ததால், பல படங்களில் நடித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் லட்சுமி மேனன் மிகவும் குண்டானார்.
இதனால் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. அஜித்துடன் நடித்த வேதாளம் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தார் லட்சுமிமேனன். இதனால் அவரது ஹீரோயின் இமேஜ் பாதித்தாக கூறப்பட்டது. கடைசியாக இவரது நடிப்பில் றெக்க படம் வெளியானது.

இப்படத்திற்குப் பிறகு இவரது நடிப்பில் கடந்த ஒரு வருடமாக எந்த படமும் வெளியாகவில்லை. இந்நிலையில், மிகவும் குண்டாக இருந்த லட்சுமி மேனன் தற்போது உடல் எடையை குறைத்து, யாரும் அடையாளம் காணமுடியாதளவிற்கு ஒல்லியாகி விட்டார்.

சமீபத்தில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் லட்சுமிமேனன். இதைப்பார்த்த ரசிகர்கள் இது லட்சுமிமேனனா என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.
லட்சுமி மேனன் உடல் எடையை குறைப்பதற்காக கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன் பிறகாவது லட்சுமி மேனனுக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

மரணத்திற்கு இவர்கள் தான் காரணம் : வீடியோவை பதிவு செய்த தற்கொலை செய்த நடிகர்!!

தெலுங்கு சினிமாவில் பொம்மரிலு போன்ற வெற்றி படங்களில் காமெடி நடிகராக நடித்திருந்தவர் விஜய் சாய். இவர் நேற்று மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் விஜய் சாய் தற்கொலை செய்வதற்கு முன் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், தனது சாவுக்கு காரணம் முன்னாள் மனைவி, அவரின் வழக்கறிஞர், இயக்குனர் சசிதர் என்று கூறியுள்ளாராம்.

அவருக்கு அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அதில் இருந்து பணம், நகை ஆகியவற்றை பறித்துக் கொள்வது அவரை தொல்லை செய்வது என அவரது மனைவி பல வேலைகளை செய்திருக்கிறாராம்.

இப்படி பல விஷயங்களால் மன அழுத்தத்திற்கு ஆளானதால் விஜய் சாய் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

வவுனியா வேப்பங்குளம் பாரதி முன்பள்ளியின் ஒளிவிழா 2017!!

 
வவுனியா வேப்பங்குளம் பாரதி முன்பள்ளியில் ஒளி விழா நிகழ்வானது பாரதி சனசமூக நிலையத்தின் தலைவர் க.கணேசராசா தலைமையில் வெளிச்சம் அறக்கட்டளையின்அணுசரனையுடன் பாரதி முன்பள்ளி நிலையத்தில் இன்று (12.12.2017) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களினது வரவேற்பு நடனம், முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகளும், மற்றும் உள்ளூராட்சி மன்றத்தினால் வாசிப்பு மாதத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வின் அதிதிகளாக வேப்பங்குளம் தேவாலய பங்குத் தந்தை, வவுனியா நகரசபையின் செயலாளர் தயாபரன், சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களான வத்சலா, யுனைற் வஜுபா, வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன், செயலாளர் தி.கார்த்திக், பா.சிந்துஜன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உறுப்பினர் வ.பிரதீபன், சனசமூக நிலையத்தின் செயலாளர் சிவராஜசேகரன், பாரதி முன்பள்ளி ஆசிரியர் மேரி மெற்றில்டார், முன்னாள் உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவிலுள்ள கிரவல் வீதிகளுக்கு தார் போடும் நடவடிக்கை : மக்கள் விசனம்!!

 
வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியிலிருந்து நேரியகுளம் செல்லும் பகுதியிலுள்ள கிரவல் வீதிக்கு இன்று (12.12.2017) தார் போட்டு வீதி செப்பனிடப்பட்டு வருகின்றது.

வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியிலிருந்து நேரியகுளம் செல்லும் வீதியில் பாவற்குளம் வைத்தியசாலையிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீற்றர் நீளத்திற்கு வெறும் கிரவல் வீதிக்கு தார் போட்டு வீதி செப்பனிடப்பட்டு வருகின்றது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பூரண கட்டுப்பாட்டிலுள்ள குறித்த வீதி சரியான முறையில் செப்பனிடப்படவில்லை மழை பெய்யும்போது மழைநீரில் தார் கழுவிச் சென்றுவிடும் என்றும் குறித்த வீதியை சரியான முறையில் செப்பனிடப்படல் வேண்டுமே தவிர அவசரமாக இவ்வாறு மேற்கொள்வதால் திரும்பவும் குறித்த வீதி செப்பனிடப்படவேண்டும் இதன் காரணமாக செலவுகளே அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே குறித்த வீதி செப்பனிடும் பணிகளை நிறுத்தி உரியமுறையில் வீதியைச் செப்பனிட்டுத்தருமாறு அப்பகுதியிலுள்ள சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வவுனியா பொதி அனுப்பும் நிறுவனத்திற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் 7 முறைப்பாடுகள்!!

வவுனியா கந்தசாமி கோவில் வீதியிலுள்ள பிரபல பொதிகள் அனுப்பும் நிலையத்திற்கு எதிராக ஏழு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவிலிருந்து வெளிநாடுகளிலுள்ள உறவினருக்கு அனுப்பும் பொருட்கள் அங்கு சென்று சேரவில்லை என ஏழு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த பொதி அனுப்பும் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அனுப்பப்படும் பொருட்களுக்கு 17ஆயிரம் ரூபா செலவிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட போதிலும் அப் பொருட்கள் உறவினர்களுக்குச் செல்லவில்லை எனவும் பொதி அனுப்பும் நிலையத்தில் கேட்டால் உங்களுடைய உறவினருக்கு வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்து வருகின்றனர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

கந்தசாமி கோவில் வீதியிலுள்ள பொதி அனுப்பும் ஒரு கடைக்கே ஏழு முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாகவும் இம் முறைப்பாடு தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.