அமெரிக்காவில் இலங்கை பெண் கொலை : தமிழ் நீதிபதியின் உத்தரவு!!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இலங்கை பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்த சந்தேக நபரின் பிணை நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

27 வயதான Dantey Moore என்பவரின் பிணையை நிராகரித்து விளக்கமறியலை நீடிக்குமாறு நீதிபதி ராஜ ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை இந்த கொலை தொடர்பான வழக்கு, விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இலங்கையை பூர்வீகமாகவும் அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற கீதா கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை வழங்குமாறு சந்தேக நபரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி Marina Tricorico, நீதிபதியிடம் கோரியுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது குறித்த பெண்ணை காப்பாற்ற முயற்சித்த நபர் மீதும் இந்த சந்தேக நபர் தாக்குதல் மேற்கொண்டிருந்தார்.

ஏற்கனவே இந்த சந்தேக நபர் மீது 3 குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அவற்றில் ஒரு குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொலை வழக்கு நாளைய தினம் மீளவும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட சாந்தன், ஜூட் இருவரினதும் நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

 
கடந்த 2001ம் ஆண்டு மார்கழி 07 ம் திகதி வவுனியா வைரவபுளியங்குளத்தில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவர்களான ஜூட் கஜன் மற்றும் சாந்தன் ஆகியோரின் 16வது வருட நினைவு தினமும் ஜங்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 23வது வருட பூர்த்தியையும் முன்னிட்டு உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தீபச்சுடரும் ஏற்றி நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. அதன் பின்னர் உதைப்பந்தாட்ட போட்டியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அமரர் சாந்தனின் சிறிய தந்தை விஜயகுமார் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம் , வட மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா, கண்ணகி தேவராஜா, சுந்தரலிங்கம் , எஸ்.எஸ்.வாசன், விவேகானந்தன், ஜங்ஸ்டார் கழக தலைவர் ஜீவன், செயலாளர் லெஸ்லி , பொருலாளர் ரதீபன், கழக உறுப்பினர்களான சந்திரகுமார் கண்ணன், பாபு, ஹரிகரன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா நீதிமன்றில் சான்றுப் பொருட்கள் ஏலவிற்பனை!!

வவுனியா நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் சனிக்கிழமை (09.12.2017) காலை 10 மணிமுதல் சான்றுப் பொருட்கள் ஏலவிற்பனைக்கு விடப்படவுள்ளதாக வவுனியா நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது

பறிமுதல் செய்யப்பட்டதும், உரிமை கோரப்படாததுமான கீழ்க்காணும் பொருட்கள் எதிர்வரும் சனிக்கிழமை 9ஆம் திகதி காலை 10 மணிக்கு வவுனியா நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பகிரங்க ஏலவிற்பனை செய்யப்படவுள்ளது.

குறிப்பிட்ட ஏதாவது ஒரு பொருட்கள் சம்பந்தமாக உரிமை கோருபவர்கள் இருப்பின் ஏலவிற்பனைக்கு குறிப்பிட்ட தினத்தில் ஏலவிற்பனை ஆரம்பமாவதற்கு முன்னர் உரிமைக் கோரிக்கையினை சமர்ப்பித்தல் வேண்டும்.

புதிவாளர் அனுமதி பெற்று ஏலவிற்பனை ஆரம்பமாவதற்கு முன்னர் ஏலவிற்பனைக்கென குறிப்பிடப்பட்ட பொருட்களைப்பார்வையிடலாம்.

நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்படும் தகுந்த தொகையானது விற்பனையின்போது ஏற்றுக்கொள்ளப்படாத சந்தர்ப்பத்தில் மன்றில் விருப்புரிமையின் பிரகாரம் அப்பொருட்களை ஏலவிற்பனையில் இருந்து நீக்கிவிடுவதற்கான உரித்தை மன்று கொண்டுள்ளது.

ஏலவிற்பனையின்போது ஏலத்தில் வாங்கப்பட்ட பொருட்கள் உடனடியாகப் பணம் செலுத்தப்பட்டு நீதிமன்ற வளாகத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். எல்லாக் கொடுப்பனவுகளும் பணமாக செலுத்தப்படவேண்டும். காசோலைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

பொருட்களை ஏலத்தில் கோருபவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டையினை கொண்டுவருதல் அவசியமானதாகும்.

ஏலவிற்பனை செய்யப்படவுள்ள பொருட்கள், 11மோட்டார் சைக்கில்கள், இரண்டு முச்சக்கரவண்டிகள், சவல்கள், மண்வெட்டிகள், இரண்டு உழவு இயந்திரங்கள், இரண்டு உழவு இயந்திரப்பெட்டிகள், காட்டுக்கத்திகள், கோடாரிகள், இரும்புவாளிகள், பெரிய தாச்சிகள் சில பொருட்கள் சேதமைந்த நிலையிலும் காணப்படுகின்றன.

மேற்குறிப்பிடப்பட்ட சான்றுப் பொருட்கள் சனிக்கிழமை காலை ஏலவிற்பனை செய்யப்படவுள்ளதாக வவுனியா நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் குடும்ப ஆட்சி : தாதிய பரிபாலகரின் இடமாற்றத்ததை ரத்து செய்ய கோரிக்கை!!

 
பருத்துறையில் தாதிய பரிபாலகராக பணிபுரியும் குணசீலனை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்ய வேண்டாமென வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினால் வைத்தியசாலையின் பணிப்பாளர், வடமாகாண சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் மூலம் கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் ஆகிய நாம் தெரிவிப்பது, தற்போது யாழ்ப்பாண மாவட்டத்திலிலுள்ள பருத்துத்துறை ஆதார வைத்தியசாலையில் தாதிய பரிபாலகராக கடமையாற்றிவரும் குணசீலனை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யவுள்ளதாக அறிகின்றோம்.

எமது வைத்தியசாலையினை பொறுத்தவரையில் தாதிய பரிபாலகர்கள் போதியளவில் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். தற்சமயம் குறித்த பரிபாலகரின் துணைவியாரும் , சகோதரியும் எமது வைத்தியசாலையின் தாதிய பரிபாலகராக கடமையாற்றி வருகின்றனர்.

அத்துடன் குணசீலன் தாதிய பரிபாலகராக கடமையாற்ற அனுமதிக்கப்படுமாயின் ஒர் குறித்த தாதிய பரிபாலகர்களது அலுவலக அறையில் கணவன், மனைவி, சகோதரி என குடும்பமாக கடமையாற்றுவது எமது தாதிய உத்தியோகத்திற்கு ஆரோக்கியமான விடயமாகாது.

குறித்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய சமயத்தில் வைத்தியர்கள் , தாதியர்களுக்கிடையே நல்லுறவானது சிதைக்கப்பட்டு நாளிற்கு நாள் வைத்தியர்கள், தாதியர்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்பட்டு நோயாளர் பராமரிப்பை சரிவர வழங்க முடியாததால் நோயாளர்கள் பாதிப்படைந்தனர்.

அத்துடன் வவுனியா தாதியர் கல்லூரிக்கு வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள், விஷேட வைத்திய நிபுனர்கள் இவருடைய முரண்பாடான செயற்பாடுகள் மற்றும் தாதிய பணிப்புறக்கணிப்பு என்பவற்றால் கல்வி கற்பிக்க செல்லாது புறக்கணித்தனர்.

நோயாளர் பராமரிப்பில் வைத்தியர்கள், தாதியர்களின் நல்லுறவானது மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. குறித்த நபர் மீண்டும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இடமாற்ற நடவடிக்கை எடுத்துவரும் சமயத்தில் இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் தொடருமென நாம் அச்சத்திலுள்ளோம்.

தற்சமயம் வைத்தியர், தாதியர்களிடையேயான உறவானது சீராக நன் நிலையில் காணப்படுகின்றது. இதன் மூலம் நோயாளர் பராமரிப்பானது திறன்பட அமைக்கின்றது. எனவே இவரின் இடமாற்றத்தினை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ வைத்தியர்கள் சங்கத்தினரும் இவரின் இடமாற்றத்தினை ரத்துச் செய்ய கோரி ஆதரவு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு!!

 
வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு இன்று (07.12.2017) காலை 9.30 மணிக்கு பாடசாலையின் பிரதி அதிபர் த.மோகன் தலமையில் நடைபெற்றது.

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்ற எட்டு மாணவர்கள் உட்பட 55 மாணவர்களை கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் மு.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான ந.சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன் வடமாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ப.தியாகராஜா ஆகியோர் கலந்து கொண்டு சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.

வவுனியா குருமண்காட்டில் விசித்திரமான முறையில் திருட்டுச் சம்பவம்!!

 
வவுனியா குருமன்காட்டுச் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள தனியார் அலுவலகம் ஒன்றில் விசித்திரமான முறையில் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள தொழில்நுட்ப அலுவலகத்தில் நேற்றைய தினம் இனந்தெரியாத நபர்களினால் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று இன்று மேற்கொள்ளப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட சமயத்தில் வர்த்தக நிலையத்திலுள்ள கணணிகள், தளபாடங்கள், கதிரைகள், தொலைபேசிகள் என்பன திருடப்பட்டுள்ளதாகவும் வர்த்தக நிலையத்தின் கதவுகள் எவையும் உடைக்கப்படாமல் சாவி போட்டு கதவுகள் திறக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புகையிரத பயணிகளின் முக்கிய கவனத்திற்கு!!

 

புறக்கோட்டையில் இருந்து, தூர இடங்களுக்கான சேவையில் ஈடுபடும் புகையிரதங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.

புகையிரத சாரதிகளுக்கான உதவியாளர்களை சேர்த்துக்கொள்ளும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத இயந்திர சாரதிகள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பின் காரணமாக குறித்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நாடளாவிய ரீதியில் சேவையில் ஈடுபடும் 150 நாளாந்த புகையிரத சேவைகளை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்த பிரச்சினையினை சீர் செய்வதற்காகவும், இதற்கு தீர்வு காணும் பொருட்டும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா புகையிரத தொழிற்சங்கங்களுடன் இன்று மதியம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

இம் முறை கா.பொ.த. சாதாரண தரத்தில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை தொடர்பான அறிவுறுத்தல் ஒன்றை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள புதிய மற்றும் பழைய பாடங்களுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பாக பரீட்சைத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை புதிய மற்றும் பழைய பாடங்களின் கீழ் 2017.12.12 முதல் 2017.12.21 வரையில் பரீட்சை நடைபெறவுள்ளது.

பரீட்சை காலை 8.30 க்கு ஆரம்பமாகவுள்ளது. காலை 8.00 மணிக்கு முன்னர் அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்டை அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கு சமுகமளிக்கவேண்டும்.

இவ்வாறு பரீட்சைக்கு சமுகமளிக்கும் போது பரீட்சை அட்டை அல்லது தேசிய அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு அவசியம் கொண்டுவரவேண்டும்.

பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் பரீட்சார்த்தி பரீட்சை அட்டையில் தாம் விண்ணப்பித்துள்ள பாடத்திற்கான மத்திய மற்றும் உறுதிசெய்யப்பட்டமை உள்ளிட்டவை தொடர்பில் சரியாக பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். ஏதேனும் மாற்றங்கள் இருக்குமாயின் உடனடியாக பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவிக்கவேண்டும்.

இதேபோன்று பரீட்சையின் போது பரீட்சார்த்திகளினால் ஸ்மாட் கைக்கடிகாரம் , கையடக்கதொலைபேசி , இலத்திரணியல் உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் பரீட்சை மோசடிகள் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பரீட்சை நிலையத்திற்கு பொறுப்பானவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் பரீட்சார்த்திகளுக்கு 5 வருடங்களுக்கு பரீட்சைத்திணைக்களத்தினால் நடத்தப்படும் அனைத்து பரீட்சைகளிலும் தோற்றுவது தடைப்படும். அத்துடன் இம்முறை பரீட்சை பெறுபேறுகளும் இரத்து செய்யப்படும்.

பரீட்சை நடைபெறும் சந்தர்ப்பத்தில் வெளித்தரப்பினரால் பரீட்சார்த்திக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்படுத்தப்படுமாயின் அது தொடர்பில் பரீட்சைத்திணைக்களத்திற்கும், பொலிஸ்திணைக்களத்திற்கும் அறிவிப்பதற்கு அனைத்து ஆலோசனைகளும் பரீட்சை மண்டபத்திற்கு பொறுப்பானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் பரீட்சை மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படாத எந்தவொரு நபரும் பிரவேசிக்க கூடாது.

பரீட்சை நிலையமாக உள்ள பாடசாலை வளவுக்குள் நிர்மாணப்பணிகள், வகுப்புக்களை நடத்துதல், விளையாட்டு வைபவம், கூட்டங்களை நடத்துதல் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் இதற்கமைவாக செயற்படுவதற்கு பரீட்சை மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை அதிபர்கள் இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பரீட்சை மண்டபத்தில் யாரேனும் ஏதேனும் மோசடி அல்லது முறைகேடுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் பரீட்சைத்திணைக்களத்திற்கும் பரீட்சார்த்திகளுக்கும் பெற்றோர்களுக்கும் அறிவிக்க முடியும்.

இந்த பரீட்சை தொடர்பாக முறைப்பாடுகளுக்கு கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும். இதற்கான தொலைபேசி இலக்கங்கள் பரீட்சை திணைக்களத்துடன் உடனடியாக தொடர்புகொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம் 1911 பரீட்சை ஏற்பாட்டுக்கிளை தொலைபேசி இலக்கம் 0112784208 , 0112784537 , 0113188350 , 0113140314 பொலிஸ் தலைமையகம் 0112421111 , பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் 119

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் வழங்கிய இலங்கை கிரிக்கெட் சபை!!

டெல்லி காற்று மாசுபாடு தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இலங்கைக் கிரிக்கெட் சபை புகார் அளித்துள்ளது.

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் நடந்தது. இந்தப் போட்டியின் இரண்டாவது நாளில் காற்று மாசுபாடு காரணமாக, இலங்கை வீரர்கள் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகப் புகார் எழுந்தது.

மேலும் முகமூடி அணிந்து கொண்டு இலங்கை வீரர்கள், இரண்டாவது நாளில் களத்தடுப்பு செய்தனர். இதனால், இந்திய அணி, இன்னிங்ஸை டிக்ளேர் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், டெல்லியில் காற்று மாசுபாடு அதிகம் இருந்த நிலையில், போட்டி நடத்தப்பட்டதாகக் கூறி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) இலங்கைக் கிரிக்கெட் சபை புகார் அளித்துள்ளது.

இந்தத் தகவலை இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐ.சி.சியிடம் கடந்த செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டதாகவும், 4 வீரர்கள் வாந்தி எடுக்கும் அளவுக்குப் பாதிக்கப்பட்டதால், இது போன்ற சூழலில் தங்களால் விளையாட முடியவில்லை’ என்றும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தந்தையை கொலை செய்த பிள்ளைகளுக்கு மரணதண்டனை!!

தந்தை கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இரண்டு மகன்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் உயர் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர அமல் ரணராஜாவினால் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வர்ணகுலசூரிய கித்சிரி பிரேமலால் பெர்ணான்டோ மற்றும் அவரது தம்பியான சனத் கொலின் மெதிவ் பெர்ணான்டோ ஆகிய இருவருக்குமே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலைச் சம்பவம் 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சிலாபம், வென்னப்புவ போலவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தந்தை மற்றும் மகனுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் தந்தை சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என வழக்கு விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

வெளிநாடொன்றில் இலங்கையர்களின் மோசமான செயற்பாடு!!

இத்தாலியில் சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களினால் நடத்திச் செல்லப்பட்ட சூதாட்ட விடுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் சிசிலி தீவில், மெச்சினா நகரத்தில் அமைந்துள்ள வீடொன்றில் சூதாட்ட விடுத்தி நடத்திச் செல்லப்பட்டுள்ளது.

இத்தாலிய பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது 11 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணம் மற்றும் சூதாட்ட அட்டைகளை மறைக்க முயற்சித்த போதிலும், பொலிஸார் அதனை கைப்பற்றியுள்ளனர்.

சூதாட்ட விடுதியை சுற்றி வளைத்த சந்தர்ப்பத்தில் 4500 யூரோ பணம் மற்றும் சூதாட்ட அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தொடர்புடைய வீடு சூதாட்ட விடுதியாக பயன்படுத்தியமையினால் குறித்த வீடு மற்றும் சொத்துக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சட்டவிரோத செயற்பாட்டுடன் தொடர்புடைய ஏனையவர்களை கைது செய்ய இத்தாலிய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மதுவில் மயங்கி நடுவீதியில் வீழ்ந்துகிடந்த பெண்!!

வெளிப் பிரதேசமொன்றைச் சேர்ந்த பெண்ணொருவர், மதுபோதையில் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணிப் பிரதேச வீதியோரத்தில் விழுந்து கிடந்துள்ளார்.

இதனை அவதானித்த கிராம மக்கள், இப்பெண் மது அருந்தியுள்ளமை பற்றி அறியாது, ஏதேனும் விபரீதம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதி, பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அப்பிரதேசத்திற்கு விரைந்த பொலிஸார் அப்பெண்ணை விசாரிப்பதற்காக முடிந்தளவு சத்தம் போட்டுள்ளனர். எனினும் அப்பெண் எழுந்திருக்கவில்லை. தோல்வியடைந்த பொலிஸார், அப்பெண்ணை அப்படியே விட்டுச் சென்றுள்ளனர்.

எனினும் சற்று நேரத்தில், போதை ஓரளவுக்குத் தெளிந்த அப்பெண், பொலிஸார் ஸ்தலத்துக்கு வந்ததை அறிந்ததுடன், வெட்கத்தில் அங்கிருந்து ஓடியதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

தளபதி 62 படக்குழுவின் அடுத்த அதிகாரபூர்வ அறிவிப்பு!!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 62 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு ஒன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க இருக்கிறார்.

துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதன்படி இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்திரன் படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தற்போது ராகவா லாரன்சின் காஞ்சனா 3 படத்தை தயாரித்து வருகிறது. அதனைத்தொடர்ந்து விஜய் 62 படத்தை தயாரிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக அக்கறை கொண்ட படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கான படப்பிடிப்பு வருகிற பெப்ரவரியில் தொடங்குகிறது. படம் தீபாவளிக்கு வௌியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு!!

அனுராதபுரம் விலாச்சிய பிரதான வீதியின் ஆலயபத்துவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரத்திலிருந்து விலச்சிய நோக்கி பயணித்த ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் அனுராதபுர பொதனேகம பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் 16 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஆசிரியர் கைது!!

 

வவுனியா, ஓமந்தை பகுதியிலுள்ள 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா, ஓமந்தை அலகல்லுபோட்டகுளம் பகுதியிலுள்ள 16 வயதுடைய சிறுமியின் வீட்டிற்குச் சென்று நல்லுறவுடன் பழகிய நபர் ஒருவரே இவ்வாறு 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவி வயிற்று வலி என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை குறித்த மாணவி கர்ப்பம் என அறியவந்துள்ளதையடுத்தும் கடந்த 29 ஆம் திகதியன்று ஓமந்தை பொலிஸாரிடம் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தும் நேற்றைய தினம் குறித்த மாணவியின் வாக்குமூலத்தையடுத்தும் வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் இச்சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாகத் தெரிவித்து சந்தேகத்தில் நொச்சிக்குளம் பாடசாலையின் ஆசிரியரான குமாரசிங்கம் இந்திரசிங்கம் (வயது 50) என்பவரை நேற்று காலை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வீரகேசரி-

எம்மை ஏமாளிகள் என நினைத்தால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பு!!

தமிழ் தேசிய ஒற்றுமைக்காக செயற்படும் எம்மை, அரசியல் ஏமாளிகள் என நினைத்தால், அதனால் ஏற்படும் முழுமையான விளைவுகளிற்கும் அவர்களே பொறுப்பு என, தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அக் கட்சியின் தலைமைக் குழு கூட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாம் தமிழ் தேசிய அரசியல் நீரோட்டத்தில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகளோடு கருத்து பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றோம். தமிழ் தேசிய ஒற்றுமைக்காக பரந்துபட்ட ஆதரவுக்காக நாம் தொடர்ந்தும் உழைப்போம். ஆனால், எம்மை அரசியல் ஏமாளிகள் என நினைத்தால் அதனால் ஏற்படும் விளைவுக்களுக்கு அவர்களே பொறுப்பு.

இன்று நாம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி தமிழீழ விடுதலை கழகம், தமிழர் விடுதலை கூட்டணி ஆகியோருடன் பேசியுள்ளோம். நாளை தமிழ் தேசிய மக்கள் முன்னனியோடு பேசவுள்ளோம்.

எமது நீண்டகால அரசியல் பயணத்தில் இது ஒரு சாதாரண விடயமாகும். ஆனால் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தமிழ் தேசியத்தின் ஒற்றுமை என்பது விளையாட்டு பந்தாக மாற்றமடைந்து விட கூடாது என்பதை கூறிக் கொள்கின்றோம்.
இந்த நொடி வரை இதுவே எமது நிலைப்பாடு. ஆனால் எதிர்காலம் குறித்து ஆரூடம் கூற முடியாது என குறிப்பிட்டார்.

-அத தெரண-