9 ஆண்டுகளாக காதலியின் மகளை வன்கொடுமை செய்த காதலன் : அதிர்ச்சி சம்பவம்!!

 
அர்ஜென்டினாவில் காதலியை ஏமாற்றி அவரது மகளை தாயின் காதலனே பாலியல் வன்கொடுமை செய்துவந்தது தெரியவந்துள்ளது.

அர்ஜெண்டினா தலைநகர் Buenos-இல் வசித்து வந்தவர்கள் Celia Beatriz Sosa-Sergio Eduardo Gimenez, இருவரும் காதலர்கள்.Celia-விற்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார், தன் தாய் மீது அச்சிறுமி அதிர்ச்சியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதாவது, தனக்கு 8 வயதாக இருக்கும் போது பேய் பிடித்து விட்டதாக கூறிய தாயின் காதலன், உறவு வைத்துக் கொண்டால் பேயை விரட்டி விடலாம் என கூறியுள்ளார்.

இதை உண்மை என நம்பிய அச்சிறுமியின் தாய் சம்மதம் தெரிவித்துள்ளார், கடந்த 9 ஆண்டுகளாக தன்னை பாலியல் ரீதியாக பலமுறை சித்ரவதை செய்துள்ளதாகவும் ஒரு முறை கருவை கலைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமி பாட்டியிடம் தெரிவித்த நிலையில், அவரின் உதவியோடு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் சிறுமியின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதை உறுதி செய்த பின்னர் சிறுமியின் தாய்க்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கமல்ஹாசனின் புதிய கட்சியில் உறுப்பினர்களான பிரபல நடிகர்கள் மற்றும் நடிகை!!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்களின் பட்டியலில் பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நேற்று மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் 40 அடி உயர கட்சியைக் கொடியேற்றினார்.  பின்னர் தனது கட்சியின் பெயராக மக்கள் நீதி மய்யம் என்பதை அறிவித்தார்.

இதையடுத்து இந்த கட்சிக்கான உயர்மட்ட குழு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதில் கமலுடன் பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீபிரியா, கமலின் விருமாண்டி, உத்தமவில்லன் திரைப்படங்களில் அவருடன் நடித்த பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதோடு நடிகர் நாசரின் மனைவி கமீலா, அடையாறு மாணவர் நகலகம் சவுரிராஜன், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மவுரியா, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோரும் நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் சினேகன், வையாபுரி ஆகியோரும் மேடையில் கமல் கட்சியில் இணைந்தார்கள்.

கமலின் பொதுக்கூட்டத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!!

கமலின் அரசியல் கட்சி ஆரம்ப விழா பொதுக்கூட்டத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்தவர் தான் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து உலகநாயகனாக உயரும் அளவிற்கு வளர்ந்த கமல்ஹாசனின் தந்தை பெயர் சீனிவாசன்.

அரசியல் கட்சி துவக்க உள்ளதாக அறிவித்திருந்த கமல்ஹாசன், மதுரையில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி தனது கட்சி பெயர் மற்றும் கொடி உள்ளிட்டவற்ரை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அந்த கூட்டத்திற்கு வந்திருந்த ஜக்கிரியா என்பவர் கூறுகையில், “கமல் தந்தை சீனிவானும் நானும் நெருங்கிய நண்பர்கள். கமல் நடிப்பதற்காக சென்னை சென்ற பிறகு அவர் படம் வெளிவரும் போதெல்லாம் சீனிவானிடம் சென்று சொல்வேன். அவர் உடனே படத்தை பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக தெரிவிப்பார். சைக்கிள் கடை நடந்தி வந்த நான் அவரை சைக்கிளில் வைத்து படத்துக்கு அழைத்துச் செல்வேன்”.

பின்னர் காலங்கள் மாறிவிட்டன. சீனிவாசன் சென்னை சென்றுவிட்டார். அங்கிருந்து எனக்கு அவர் எழுதிய பல கடிதங்களை நான் இன்னமும் பத்திரமாக வைத்துள்ளேன்.

குறிப்பாக அவர் அனுப்பிய கமலுடனான அவரது புகைப்படம் இன்னமும் என்னிடம் இருக்கிறது என காட்டுகிறார், ஜக்கிரியா.

வாய் பேச முடியாத ஜக்கிரியா, கமல் தந்தையுடனான தனது நட்பு குறித்து தன் மனைவி ஜெரினா பேகம் உதவியுடன் நெகிழ்ச்சியோடு எடுத்து கூறியது குறிப்பிடத்தக்கது.

நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்ட தொகுப்பாளினியின் பிரசவம்!!

 
அமெரிக்காவில் வானொலி தொகுப்பாளினிக்கு திடீரென குழந்தை பிறந்த நிலையில் அவரின் பிரசவம் வானொலியில் நேரடியாக ஒலிபரப்பாகியுள்ளது. சென்லூசிஸ் நகரில் உள்ள த ஆர்ச் என்னும் தனியார் வானொலி நிலையத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

காசிடே ப்ரோக்டர் என்ற பெண் த ஆர்ச் வானொலியில் தொகுப்பாளினியாக வேலை செய்து வந்த நிலையில் செவ்வாய் காலை நிகழ்ச்சி செய்து கொண்டிருந்த போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காசிடேவின் பிரசவத்தை எல்லோரும் கேட்க வேண்டும் என்ற வித்தியாசமான நோக்கில் அவரின் பிரசவத்தை உயிர்ப்போடு வானொலியில் ஒலிபரப்ப முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உதவியுடன் வானொலி நிறுவனத்தின் தலைவர் ஸ்காட் ரோடி அதற்கு ஏற்பாடு செய்தார்.

இதையடுத்து காசிடேவின் பிரசவம் நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. காலை 7.45 மணிக்கு அழகான ஆண் குழந்தையை காசிடே பெற்றெடுத்த நிலையில் அதற்கு ஜேம்சன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கட்சி அறிவிப்பு மாநாட்டில் நடிகர் செய்த செயல் : எச்சரித்த கமல்ஹாசன்!!

மதுரையில் நடைபெற்ற கட்சி அறிவிப்பு மாநாட்டில் காலில் விழுந்த நடிகர் பரணியை கமல் இனிமேல் இப்படி எல்லாம் செய்யக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நேற்று மதுரை ஒத்தக்கடையில் நடந்த கட்சி அறிவிப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு இவரை காண்பதற்கு திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் பிரபல நடிகருமான பரணி இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். கமல் மாநாட்டின் மேடைக்கு வருவதற்கு முன்பே மேடையில் இருந்த ஒருவர் கமல் வந்த பின்பு அவர் காலில் விழக்கூடாது, அது அவருக்கு பிடிக்காது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் பரணி கமலஹாசனை பார்த்தவுடன் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முற்பட்டார்.  இதைக் கண்ட கமலின் ஆதரவாளர்கள் உடனடியாக தடுத்து நிறுத்தி, கமல்ஹாசன் காலில் யாரும் விழ வேண்டாம் என்றும், தன்னுடைய ஆதரவாளர்கள் எப்போதும் தலை நிமிர்ந்து மக்களின் நன்மைக்காக செயல்படுவதையே அவர் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

அதன் பின் பரணியை சந்தித்த கமல் இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

நொடிப்பொழுதில் உயிர் தப்பிய நபர் : திக் திக் நிமிடங்கள்!!(காணொளி)

இந்தியாவில் வீதியை கடக்க முயன்ற நபர் ஒருவருக்கு நேர்ந்த விபரீதம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

குஜராத்தின் கோத்ரா நகரில் தான் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியின் பிரதான சாலை ஒன்றை கடந்த 20-ஆம் திகதியன்று கடக்க முயன்ற நபர் ஒருவர் மீது அந்த வழியாக சென்ற லொறி ஒன்று மோதியது.

மோதிய வேகத்தில் தூக்கி எறியப்பட்ட அந்த நபர் எந்த காயமுமின்றி உயிர் பிழைத்தது அனைவருக்கும் வியப்பையும், மகிழ்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதிலும் வைரலாகி வருகிறது.

வவுனியாவில் சாரணியத்தின் தந்தையின் 161வது பிறந்ததினம்!!

 
வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியில் சாரணியத்தின் தந்தை றொபர்ட் பேடன் பவல் பிரபுவின் 161 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று 22.02.2018 மதியம் 2 மணிக்கு பாடசாலையின் உதவி சாரண தலைவரும் ஜனாதிபதி சாரணருமாகிய வ.பிரதீபன் தலை மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக பாடசாலை அதிபர் திரு.மதிவண்ணன், பிரதி அதிபர் திரு.ரொஷான், சாரண தலைவர் தற்பரன் ஆசிரியர் (வ/விபுலாநந்தாக் கல்லூரி) கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

4 கோடி பெறுமதியான நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி!!

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் தலைமை ஆசிரியை ஒருவர் 4 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் தலைமை ஆசிரியை T.A. பொன்மணி தேவி. 85 வயதாகும் பொன்மணி 4 கோடி மதிப்புமிக்க, தனது 93 சென்ட் நிலத்தை சித்தோடு அரசு மகளிர் உயர்நிலை பள்ளிக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அந்த பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம், அவரது நிலத்தின் ஆவணங்களை அளித்தார்.

சித்தோடு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியானது 1948ம் ஆண்டு டிசம்பர் 5ம் நாள் தொடங்கப்பட்டு கடந்த வருடம் தான் உயர்நிலைப் பள்ளி எனும் அந்தஸ்த்தை பெற்றது.

இங்கு 6 முதல் 11ம் வகுப்பு வரை 486 மாணவர்கள் பயின்றுவருகின்றனர், 37 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் A.G பரமேஸ்வரி ஊடகத்தினரிடம் பேசும்போது “ இந்த பள்ளியில் 16 வகுப்பறைகள் போதிய வசதி இல்லாமல் உள்ளன, மேலும் 20 புதிய வகுப்பறைக்கள் தேவைப்படுகின்றன, இதுபற்றி முன்னாள் தலைமை ஆசிரியர் தேவியிடம் தெரிவித்தபொது அவர் வகுப்பறையை மேம்படுத்த உடனடியாக 2 லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்தார்.
பின்னர் தனது நிலத்தையும் பள்ளிக்கு அளித்து மாணவர்களின் கல்விக்கு உதவியுள்ளார்” என்றார்.

முன்னாள் தலைமை ஆசிரியை T.A. பொன்மணி தேவி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அவரது கணவர் மற்றும் மகன் மறைந்துவிட்டதால் தற்போது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் அரவணைப்பில் உள்ளார்.

ஏற்கனவே இதே பள்ளிக்கு விடுதி கட்டுவதற்காக 2500 சதுர அடி நிலத்தை பொன்மணி தேவி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல் : கனகரத்தினம் தியாகராசா!!

பிறப்பு 03.08.1940 || இறப்பு 21.02.2018

இவர் காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் வள்ளியம்மை அவர்களின் அன்பு மகனும், புவனேஸ்வரியின் பாசமிகு கணவரும் வசந்தி(ஆசிரியை ஆசிகுளம் அ.த.க பாடசாலை), சுமதி, காலஞ்சென்றவர்களான சேரன், சந்திரன், யோகேஸ்வரன் மற்றும் சுகந்தி அமுதா, சுதன்( சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

கணேஸ்வரன், மாணிக்கநடராசா, விஜிதரன், சுதர்சன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம் , கார்த்திகேசு, மற்றும் தர்மபுத்திரியின் அன்புச் சகோதரரும், கிஷோபன், விதுரன், தர்ஷிகன், பவித்திரா, கேஷானி, டயார்த்தன், பவிஷா, கோபிகா, லதுஷன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 23.02.2018 வெள்ளிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று 2.00 மணியளவில் எல்லப்பர் மருதங்குளம் பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்
குடும்பத்தினர்.

ஒரே நேரத்தில் தொலைபேசியில் பேசிக்கொண்டே தற்கொலை செய்த காதலர்கள்!!

கைத்தொலைபேசியில் பேசியபடி அவரவர் வீட்டிலிருந்த காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அச்சமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி, இவர் தனது வீட்டில் விஷம் அருந்தி, மயங்கிக் கிடந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரும் தனது வீட்டில் விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இருவரும் ஒரே வகையான விஷத்தை அருந்தியதால் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் நடத்திய விசாரணையில் கார்த்திக்கும், பாரதியும் காதலர்கள் என்பதும் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாரதிக்கு அண்மையில் திருமண நிச்சயம் நடைபெற்ற நிலையில், விரைவில் திருமணம் நடைபெற இருந்தது.

இதையடுத்து காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்தனர், அதன்படி கைபேசியில் பேசிக் கொண்டே அவரவர் வீட்டில் இருந்தவாறு விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

திருமணம் செய்துகொள்ள இலங்கை வந்த யுவதிக்கு ஏற்பட்ட நிலை!!

வெளிநாட்டில் தொழில் புரிந்து விட்டு திருமணத்திற்காக நாடு திரும்பிய யுவதியின் கூந்தல் இல்லாமல் போனதால், திருமணத்தை ஒத்திவைத்த சம்பவம் ஒன்று மலையகத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடொன்றில் மூன்று வருடங்களாக வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்த யுவதி, தனது சகோதரி பார்த்து வைத்திருந்த இளைஞனை திருமணம் செய்வதற்காக தான் சம்பாதித்த பணம் மற்றும் பொருட்களுடன் நாடு திரும்பியுள்ளார்.

தனது எதிர்கால கணவனின் உறவினர்கள் தன்னை பெண் பார்க்க சகோதரியின் வீட்டுக்கு வரவுள்ளதால், யுவதி ஆயிரம் கனவுகளுடன் சகோதரியின் வீட்டுக்கு வந்துள்ளார்.

வீட்டுக்கு வந்த யுவதி, தனது சகோதரியின் பெண் குழந்தைகளுடன் உறங்கியுள்ளார். யுவதி உறக்கத்தில் இருப்பதால், சிறுமிகள் தமது தனிமையை போக்கிக்கொள்ள வீட்டில் இருந்த சீப்பு மற்றும் கத்தரிகோலை எடுத்து சிகையலங்காரம் செய்யும் விளையாட்டை விளையாடியுள்ளதுடன் சித்தியின் நீண்ட கூந்தலை கத்தரித்துள்ளனர்.

சிறிது நேரத்தின் பின் நித்திரையில் விழித்த யுவதி தனது கூந்தலுக்கு நேர்ந்த கதியை கண்டு வெட்கத்துக்கு உள்ளாகியுள்ளதுடன் திருமணத்தை ஒத்திவைத்துள்ளார். வீட்டில் இருந்து வெளியில் வர முடியாத நிலையில் யுவதி இருப்பதாக கூறப்படுகிறது.

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் : தற்கொலையா, கொலையா?

 
கிளிநொச்சி – புதுமுறிப்புக்குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் நேற்றைய தினம் காணாமல் போனதாக பெற்றோரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி உரிமையாளரான 25 வயதான ப.டனுசன் என்ற இளைஞரே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கிளிநொச்சியிலிருந்து, கிளிநொச்சி மேற்கு நோக்கி சென்ற போதே காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் புதுமுறிப்புக்குளத்திலிருந்து குறித்த இளைஞரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா, கொலையா என என்பது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் சீனிப்பாணியை தேன் என்று வியாபாரம் மேற்கொண்ட இருவருக்கு நேர்ந்த கதி!!

வவுனியா நெளுக்குளம் ஊர்மிலாகோட்டம் பகுதியில் சீனிப்பாணியை காய்ச்சி பல இடங்களுக்குச் சென்று தேன் என்று தெரிவித்து பொதுமக்களை ஏமாற்றி வியாபாரம் மேற்கொண்ட இருவர் நேற்று ஓமந்தை பனிக்கநீராவி பகுதியில் சுகாதாரப்பரிசோதகர்களினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் சுகாதாரப்பரிசோதகர் தெரியவருகையில்,

நேற்றைய தினம் பனிக்கநீராவிப்பகுதியில் தேன் வியாபாரம் மேற்கொண்ட இருவரை சந்தேகத்தில் தேனை பரிசோதனை மேற்கொண்டபோது அது சீனிப்பாணி என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்களை விசாரணைக்குட்படுத்தியபோது நெளுக்குளம், ஊர்மிலாகோட்டம் பகுதியிலிருந்து எடுத்து வந்து பல இடங்களில் இவ்வாறு விற்பனை செய்து வருவதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர்களிடம் கைப்பற்றப்பட்ட 27 போத்தல் தேனுடன் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற சட்ட நடவடிக்கை மேற்கொண்டபோது அவர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரப்பரிசோதகர் கே.சிவரஞ்சன் மேலும் தெரிவித்துள்ளார்.

சற்றுமுன் நாடு திரும்பினார் சர்ச்சைக்குரிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ!!

பிரித்தானியாவுக்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளார்

இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்திய தமிழர்களை எச்சரிக்கும் வகையில் செயற்பட்டிருந்தார் என பிரியங்க பெர்னாண்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து குறித்த சம்பவம் ஊடகங்கள் மற்று்ம சமூவலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டதுடன், ஜனாதிபதியின் உத்தரவில் மீண்டும் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் பிரியங்கர பெர்னாண்டோ மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.

சாவித்திரி வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிற்கு தகுதியில்லை : பழம்பெரும் நடிகை!!

மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்றும் சினிமா படமாக தயாராகிறது.

இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேசும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். நாக் அஸ்வின் இயக்குகிறார். சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கு பழம்பெரும் நடிகை ஜமுனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

“நான் 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறேன். சாவித்திரியோடு நடித்தவர்களில் நான் மட்டும்தான் உயிருடன் இருக்கிறேன். சாவித்திரியை பற்றி எனக்குத்தான் நிறைய விடயங்கள் தெரியும். ஆனால் என்னிடம் எதுவும் கேட்காமல் அவரது வாழ்க்கையை படமாக்குவது வேதனையாக இருக்கிறது.

இந்த படத்தில் சாவித்திரியாக நடிப்பவருக்கு (கீர்த்தி சுரேஷ்) தெலுங்கு தெரியாது. மொழி தெரியாத அவரால் சாவித்திரி கதாபாத்திரத்துக்கு திரையில் எப்படி உயிர் கொடுக்க முடியும்? இப்போதுள்ள நடிகைகள் அரைகுறை ஆடைகளில் நடிக்கிறார்கள். ஆனால் எங்கள் காலத்தில் அப்படி இல்லை.
நானும், சாவித்திரியும் சேர்ந்து நடித்து இருக்கிறோம். எனக்கு மகன் பிறந்தபோது தொட்டிலில் போடும் நிகழ்ச்சிக்கு அவர் வந்து இருந்தார்.

அப்போது கணவர் அமைவது அவரவர் புண்ணியம். உனக்கு நல்ல கணவர் அமைந்து இருக்கிறார். ஆனால் ஜெமினி கணேசன் என்னை மோசம் செய்துவிட்டார் என்று சொல்லி என்னை கட்டிப்பிடித்து அழுதார்.

நாங்கள் தடுத்தும் கேட்காமல் நீதானே விரும்பி அவரை மணந்தாய் என்று நான் ஆறுதல் சொன்னேன். சாவித்திரிக்கு சென்னையில் 3 பங்களா வீடுகள் இருந்தன. அவரை மாதிரி சினிமாவில் எந்த நடிகையும் சம்பாதிக்கவில்லை. வீட்டில் நீச்சல்குளம் கட்டி இருந்தார். மைசூரில் இருந்து சந்தன கட்டைகளை வரவழைத்து பூஜை அறையை உருவாக்கி இருந்தார்.

கொடைக்கானலிலும் வீடு இருந்தது. அந்த காலத்திலேயே சென்னையில் உள்ள அவரது ஒரு வீடு ஒரு கோடிக்கு விலைக்கு போகும். இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாமே என்று அவரிடம் கூறினேன். ஆனால் அந்த சொத்துகள் அனைத்தும் எப்படியோ கரைந்து போனது. கடைசி காலத்தில் மதுவுக்கு அடிமையாகி உடல் மெலிந்து துரும்பாகி கோமாவிலேயே இறந்துபோனார். இப்படி அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் எனக்கு தெரியும். என்னிடம் கேட்காமல் எப்படி படத்தை சிறப்பாக எடுக்க முடியும்?” இவ்வாறு ஜமுனா தெரிவித்துள்ளார்.

அணியில் இடம் கிடைக்காததால் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகன் தற்கொலை!!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகன், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ள்ளார்.

பாகிஸ்தானின் ஒருநாள் போட்டிக்கான அணியில் 1990 ஆம் ஆண்டுகளில் விளையாடிய அமீர் ஹனிப் இன் மகனே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்காக 5 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும், முதல்தர போட்டிகளில் அதிகமாக பங்கெடுத்துள்ளார்.

இவரின் மகன் முகம்மது ஜர்யப். இவர் கல்லூரியில் கல்விகற்று வருகிறார். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்பெற முகம்மது தீவிரமாக பயிற்சி மேற்கொண்டார். ஆனால், வயது அதிகம் என்பதால் அவரை தேர்வாளர்கள் நிராகரித்து விட்டனர். இதனால், மனமுடைந்த முகம்மது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து முகம்மதுவின் தந்தை ஹனிப் கூறுகையில்,

“ தேர்வாளர்கள் எனது மகனுக்கு வயது அதிகம் எனக்கூறி 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு தேர்வு செய்ய மறுத்துவிட்டனர்.

இதனால், எனது மகன் மனஅழுத்தத்துடன் காணப்பட்டான். அவனிடம் பயிற்சியாளர்கள் நடந்தவிதம் தான் அவனை இந்த முடிவுக்கு தள்ளிவிட்டது. மற்ற வீரர்களையும் இதுபோன்ற சூழலில் இருந்து காக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

கராச்சி 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் முகம்மது ஜர்யப் விளையாடி வந்துள்ளார். சமீபத்தில் லாகூரில் நடந்த போட்டியில் ஜர்யப் விளையாடும் போது, காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர், அப்போது, மீண்டும் வாய்ப்பு தருகிறோம் எனவும் கூறிவிட்டனர். ஆனால், வாய்ப்பு வழங்காததால் தற்கொலை செய்து கொண்டார் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.