டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானியான இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான அர்ச்சனா செல்லத்துரை பயணிகளுடனான முதல் பயணம் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தனது பேஸ் புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கனவு மெய்ப்பட்டது.
முதன்மை அதிகாரி எனும் பதிவியுடன் முதல் நாளில் பயணிகளுடன் முதல் பணி. நமது லட்சியத்தை நாம் அடையும்போது கிட்டும் மகிழ்ச்சிக்கு மாற்றே கிடையாது.
பயங்கள் எப்போதும் கடுமையாகவே இருந்தது. இந்த எல்லையை தொடுவதற்கு எனது வாழ்க்கையில் பலவற்றை நான் இழந்திருக்கிறேன்.
நண்பர்கள் விட்டகன்றனர், ஆண்டுகள் பல மறைந்தன, குடும்பத்துடன் செலவிட்ட காலங்கள் மறைந்தன, இளமையும் மறைந்துள்ளது.
பல முறை நனையும் கண்களை நானே துடைத்துக்கொள்ள நேர்ந்தது. இருப்பினும் நான் மகிழ்கிறேன், இதுபோன்று எனது வாழ்க்கையில் எப்போதும் நான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா, லூசியானா மாகாணத்தில், பேட்டன் ரூஜ் நகரில், ஒரு வணிக வளாகத்தின் அருகில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்ட காரில் 1 வயது குழந்தையை 2 வயது குழந்தை கைத்துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்க நாட்டில் துப்பாக்கி கலாசாரம் பரவி வருகிறது. துப்பாக்கி எல்லோருடைய கையிலும் எளிதாக கிடைப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
துப்பாக்கி வைத்துக்கொள்ள கடும் கட்டுப்பாடுகள் விதித்து சட்டம் இயற்ற வேண்டும் என்று ஜனாதிபதி ஒபாமா வலியுறுத்தி வந்தும் அதில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.
இந்த நிலையில் அங்கு லூசியானா மாகாணத்தில், பேட்டன் ரூஜ் நகரில், ஒரு வணிக வளாகத்தின் அருகில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்ட காரில் 1 வயது குழந்தையை 2 வயது குழந்தை கைத்துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்துள்ளது.
இதில் சுடப்பட்ட குழந்தை படுகாயம் அடைந்தது. உடனடியாக அந்தக் குழந்தை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுபற்றி அந்த நகர பொலிஸ் செய்தி தொடர்பாளர் மெக்நீலி நிருபர்களிடம் கூறுகையில்,
துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தின் அருகில் வயது வந்த 2 பேர் நின்று கொண்டிருந்தும், இந்த சம்பவம் எப்படி நடந்தது என தெரியவில்லை.
2 வயது குழந்தையின் கையில் துப்பாக்கி கிடைத்தது எப்படி என்பதுவும் புரியவில்லை.
இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என குறிப்பிட்டார். இந்தச் சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுவாதி கொலை வழக்கில் கழுத்தறுபட்ட நிலையில் கைதாகி, சிறையிலேயே மின்சார வயரைக் கடித்ததாகச் சொல்லப்பட்டு, மர்ம மரணம் அடைந்த ராம்குமாரின் உடல் கடந்த அக்டோபர் 1-ந் தேதி போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு 40 நாட் களைக் கடந்துவிட்டது.
ஆனால், ராயப்பேட்டை பிணவறை வாசலிலேயே காத்திருந்து போஸ்ட்மார்ட்டம் (post mortem ) ரிப்போர்ட்டை வாங்கிச்சென்ற விசாரணை அதிகாரியும் மாஜிஸ்திரேட்டுமான தமிழ்ச்செல்வி அந்த ரிப்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காததால் மரணத்துக்கான காரணம் மர்மமாகவே தொடர்கிறது.
இத்தனை நாட்கள் ஆகியும் பி.எம். ரிப்போர்ட்டை வெளியிடாத மர்மம் என்ன? அந்த ரிப்போர்ட்டில் அப்படி என்னதான் உள்ளது? விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு முந்தைய ராம்குமாரின் புகைப்படத்தை நம்மிடம் காண்பித்த போஸ்ட்மார்ட்டம் டீம் டாக்டர் ஒருவர், “சிறையில் இருந்த ராம்குமார் ஸ்விட்ச் போர்டை உடைத்து மின்சாரக் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டான் என்றுதான் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. ஆனால், நன்றாக பரிசோதனை செய்து பார்த்துட்டோம். வாயில கரண்ட் ஷாக் அடிச்சதுக்கான காயமோ தடயமோ இல்லை.
இடதுபக்க மார்பில் மேலும் கீழும் ஸ்க்ரூ டைப்பில் இரண்டு காயங்கள் உள்ளன. இதை, பஞ்சர் ஊண்ட் (puncture wound) என்று சொல்லுவோம். வலதுகை தோள்ப்பட்டையில் பிறாண்டியது போன்ற காயம், தாடைப் பகுதியில் காயமும் இருந் தது. அப்படிப் பார்த்தால், மின்சாரமானது நெஞ்சுப் பகுதியில்தான் பாய்ந்துள்ளது. அதனால், நெஞ்சுப்பகுதியில் Electrocution என்றுதான் பி.எம். ரிப்போர்ட்டில் எழுதியுள் ளோம்” என்றவரிடம் “ராம்குமாரின் மரணம் எப்படி ஏற்பட்டது?’ என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
யாராவது கொலை செய்து கரண்ட் ஷாக் வைத்திருந்தால் ஹிஸ்டோபெத்தாலஜி ரிப்போர்ட்டில் தெரிந்துவிடும். உணவில் ஏதாவது கலந்து கொடுத்து கொலை செய்திருந்தால் விஸ்ரா ரிப்போர்ட்டில் முழுமையாகத் தெரியும். ஆனால், சம்பந்தப்பட்டவரை மயக்கமடைய வைத்து கரண்ட் ஷாக் கொடுத்து கொலை செய்திருந்தால் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் மட்டுமல்ல… ஹிஸ்டோபெத்தாலஜி, விஸ்ரா எந்த ரிப்போர்ட்டிலும் கண்டுபிடிப்பது சிரமம். காவல்துறையின் உண்மையான ஸ்பாட் இன்வெஸ்டிகேஷனில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்” என்று பகீரூட்டுகிறார்.
நாம் ராம்குமாரின் போட்டோவைக் கேட்க… “மெடிக்கோ லீகல் கேஸில் இவ்வளவு நேரம் பேசியதே எனக்கு ஆபத்துதான்’’என்றபடி நழுவினார் டாக்டர்.
மரணத்தை மறைத்த வார்டன்..
ஞாயிற்றுக்கிழமை மாலை 4:32 மணிக்கு சிறை மருத்துவர் நவீன்குமாருக்கு தொடர்பு கொள்கிறார் ஆண் நர்ஸ். 3 நிமிடங்களில் பதறியடித்துக்கொண்டு ஓடி வருகிறார் டாக்டர் நவீன்குமார். ஸ்ட்ரெக்சரில் வைத்து தள்ளியபடி கொண்டு வரப்பட்ட ராம்குமாரின் உயிரை மீட்கப் போராடுகிறார். ஆனால், பல்ஸ் இல்லை. ஆனால், ராம்குமாரின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்ட கிரேடு-2 வார்டன் கார்த்திக், “சாதாரண புட் பாய்சன்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளோம்’ என்று கேஷுவலாக சொல்லிவிட்டு போனை துண்டித்தார்.
108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தவரும் இவர்தான். ராம்குமாரின் வழக்கறிஞர் தொடர்பு கொண்டபோது பேசியதும் இவர்தான். “ஏன் அப்படி தவறான தகவலை கொடுத்தீர்கள்?’ என்று நாம் வார்டன் கார்த்திக்கை தொடர்புகொண்டு கேட்டபோது, “எனக்கு டைரக்ஷன் கொடுக்கப்பட்டது. அதனால், அப்படிச் சொன்னேன்” என்று முடித்துக்கொண்டார்.
அருகிலுள்ள, ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் “சிறைக் கைதியை இங்கு எப்படி அழைத்து வந்தீர்கள்?’ என சிறை டாக்டர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் நர்ஸுகளின் உயிரை வாங்கி விடுவார்கள். எப்படியும் ராம்குமாரை காப்பாற்ற முடியாது என்பது தெரிந்த பிறகு தான் ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டுவரப் பட்டது உடல்.
ராம்குமார் இறந்த செய்தியை சிறை டாக்டர் நவீன்குமார், உயரதிகாரிகளுக்கு இன்பார்ம் பண்ணினாலும் ஈ.சி.ஜி. எடுத்து கன்பார்ம் பண்ணியது அரசு ராயப்பேட்டை மருத்துவமனையின் சீப் மெடிக்கல் ஆபீஸர் டாக்டர் சையத்துதான். இவர்கள் எழுதிய ஏ.ஆர். (accident register) காப்பியிலும் கூட வாயில் காயம் இருப்பதாகக் குறிப்பிடப்படவில்லை.
சிறை போட்டோ லீக்..
ராம்குமார் கரண்ட் வயரைக் கடிக்க வாய்ப்பே இல்லை.… இது, காவல்துறையின் வேற மாதிரி என்கவுன்ட்டர் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சிறையில் ராம்குமார் கடித்த ஸ்விட்ச் போர்டு இதுதான்’ என்று போட்டோ லீக் அவுட் ஆனது. எவ்வளவோ பெரிய வி.ஐ.பிகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தும்கூட அவர்களது சிறை போட்டோக்கள் வெளியில் லீக் ஆனதில்லை.
ஆனால், ராம்குமார் தற்கொலைதான் செய்து கொண்டான் என்று பரப்புவதற்காக, விசாரணைக்கு வந்த மாஜிஸ்திரேட்டுடன் வந்தவர் எடுத்த புகைப்படத்தை சிறைத்துறை லீக் அவுட் செய்தது.
மாலை 6 மணிவரை ராயப்பேட்டையிலேயே இருந்து போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை பதைபதைப்போடு வாங்கிய மாஜிஸ்திரேட், இன்றுவரை அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. எந்த ரிப்போர்ட்டும் இவ்வளவு காலதாமதம் ஆனதில்லை’ என்கிறார்கள் சட்டம் சார்ந்த மருத்துவர்கள்.
உதவும் சாட்சியங்கள்..
சனிக்கிழமை 1-ந் தேதி போஸ்ட் மார்ட்டம் முடிந்தது. ஆனால், செவ்வாய்க்கிழமை 4-ந் தேதி புழலுக்கு விரைந்தது போஸ்மார்ட்டம் செய்த டாக்டர்கள் செல்வக்குமார், பாலசுப்பிரமணியன், வினோத், மணிகண்டராஜா ஆகியோர் களைக் கொண்ட டீம்.
ராம்குமார் தங்கியிருந்த டிஸ்பென்ஸரி வார்டில் 5 செல்கள் உள்ளன. இதில், மூன்றாவது செல்லில்தான் இரண்டு கைதிகளுடன் அடைக்கப்பட்டிருந்தான் ராம்குமார். நான்காவது செல்லில் 8 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களி டம் விசாரணை நடத்திய போது அச்சத்தில் கைதிகள் வாய் திறக்கவில்லை.
சேட்டு, செல்வக்குமார் என்கிற கைதிகள், ராம்குமார் மின்சாரக் கம்பியை பிடித்து தற்கொலை செய்ததைப் பார்த் தோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த சாட்சிகளைத்தான் சிறைத்துறை நம்பியுள்ளது.
அதிகாரிகளுக்குள் விரிசல்..
ராம்குமார் மின்சார கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டான் என்பதற்கு வலு சேர்ப்பதுதான் சமீபத்தில் டில்லிராஜா என்ற கைதி மின்சார வயரை கடித்து தற்கொலைக்கு முயற்சித்தார் என்ற செய்தியும்! தொடர்ந்து தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், சூப்பிரெண்டண்ட் அன்பழகன் ஓய்வு பெறும் நிலையில் பழைய புகாரில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்குக் காரணம், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினரும் சிறைத்துறை டி.ஐ.ஜி.யுமான கருப்பண்ணன் மற்றும் விஜிலென்ஸ் டி.எஸ்.பி சேகரும்தான் என்று உள்ளிருந்தே’ சொல்கிறார்கள்.
கைதிகளின் நலனில் அக்கறையோடு செயல்படுபவர் என்று பெயர் எடுத்த சூப்பிரெண்டண்ட் அன்பழகனை காலி செய்வதற்காகவே கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் இவர்கள் ஓய்வுபெறும்போது காலி செய்துவிட்டார்கள் என்று புலம்பிக்கொண்டிருக்கிறது அன்பழகன் தரப்பு.
ராம்குமார் விவகாரத் திலும் டி.ஐ.ஜி. தரப்பின் லிங்க் உள்ளது என்கிறார்கள் சிறைக்கைதிகள்.
சுவாதி படுகொலை டூ ராம்குமார் மர்ம மரணம்..
ராம்குமார் சுவாதியை பேஸ்புக்கில் பழக்கமாக்கித்தான் கொலை செய்தார் என்று காவல்துறையினரால் பரப்பப்பட்டது. நாம் ராம்குமாரின் பேஸ்புக்கை ஆராய்ந்தபோது அவர்களுக் குள் பேஸ்புக் மூலம் எந்த நட்பும் இல்லை என்பது தெரியவந்தது.
ஆனால், சுவாதி கொலையான நாளிலிருந்தே சுவாதியின் பெயரை பேஸ்புக்கில் போட்டு சுவாதி குறித்த தகவல்கள் வருகிறதா என்பதையே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான் ராம்குமார். மேலும், சுவாதி கொலைக்குப் பிறகு செல்லை ஸ்விட்ச் ஆப் செய்தால் ட்ரேஸ் பண்ணமுடியுமா? என்றும் தனது நண்பனிடம் சாட்டிங்கில் கேட்டிருக்கிறான் ராம்குமார். இப்படிப்பட்ட டெக்னிக்கல் இன்பர்மேஷன்களை வைத்துதான் சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதுகிறது, விசாரணை காக்கிகள் தரப்பு.
ஆனால், ராம்குமாரோடு மட்டுமே விசாரணையை நிறுத்திக்கொண்டது.… ராம்குமாரை கைது செய்ததிலிருந்தே பிளேடால் கழுத்தறுப்பு,… நீதிமன்ற விசாரணைக்கு முன்பே வாயில் மின்சாரம் பாய்ந்து மரணம் என்பதெல்லாம் என பேச… சுவாதி கொலையில் மேலும் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக போலீஸின் சதி வேலையாக இருக்குமோ என்ற சந்தேகங்களும் எழும்பிக் கொண்டேதான் இருக்கின்றன.
சுவாதி கொலை போலவே உண்மைகள் புதைக்கப்படுகின்றன ராம்குமார் மர்ம மரணத்திலும்.
இங்கிலாந்தில் ரெல்பி இனத்தைச் சேர்ந்த செல்லப்பிராணியான நாய் ஒன்று புரியும் சாகசம் அனைவரையும் வியக்க வைக்கின்றது.
செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் பல்வேறு சாகசங்களை புரிகின்றன. எனினும் இங்கிலாந்தில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய் ஒன்று ஒரு நொடியில் சிலையாக மாருகின்றது.
குறித்த நாயானது உரிமையாளரின் சொற்படி புகைப்படங்களுக்கு ஏற்றவாறு தன்னை சிலை போல் அடையாளம் காட்டிக்கொள்கின்றது.
இரு கால்களை உயர்த்தியவாறு நிற்பது, பந்தை மூக்கின் மேல் வைப்பது, கண்ணாடி குவளையை மூக்கின் மேல் வைப்பது போன்று பல்வேறு வகையில் தன்னை சிலை போல் காட்டிக்கொள்கின்றது.
குறித்த நாயின் சாகசங்களை பார்ப்போர் வியக்கும் வண்ணம் குறித்த காட்சிகள் புகைப்படங்களாக பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் ஒன்றான வட்ஸ் அப் நிறுவனமானது தனது வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்த காத்திருந்த வீடியோ அழைப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் முன்னணி வகிக்கும் வட்ஸ் அப்பில் ஏற்கனவே தொலைபேசி வசதியினை வழங்கியிருந்தது.
இந்நிலையில் தற்போது வட்ஸ் அப் பயன்படுத்தும் எல்லா வகை தொலைபேசி பயனாளருக்கும் வீடியோ காஅழைப்பு வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வருடமாகவே எங்களது பயனாளர்கள் வீடியோ அழைப்பு வசதி வேண்டி என்ற கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனை கருத்தில் கொண்டு பல சோதனை முயற்சிகளுக்கு பின்னர் எல்லாவிதமான அண்ட்ராய்ட், விண்டோஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன்களிலும் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறித்த வசதியினை பெறுவதற்கு வட்ஸ் அப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்ட வாட்ஸ் அப்பினை அப்டேட் செய்வதன் மூலம் நீங்களும் பயன் பெறலாம்.
திருடனை கொடூரமான முறையில் தாக்கிய காணொளி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மான்செஸ்டர் நகரில் பிக்காடில்லி பூங்காவில் பெண்கள் கையில் சிக்கிய திருடனின் தலையில் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கும் காணொளி தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.
இச்சம்பவத்தின் போது பெண்களும் குறித்த திருடனை கொடூரமாக தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பூங்காவில் இருந்த ஒரு நபரினால் குறித்த காணொளி எடுக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமுற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை மரணித்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
கட ந்த திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் ஏறாவூர் நகர சபைக்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டபோது இந்த விபத்து சம்பவித்தது.
ஹோட்டல் உரிமையாளரான காத்தான்குடி-06 ஐச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆதம்லெப்பை முஹம்மது ஷாஜஹான் (வயது 39) என்பரே மரணித்தவராகும்.
இவர் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் முன்னதாக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
காத்தான்குடியிலிருந்து ஓட்டமாவடி நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ஏறாவூர் நகரில் பிரதான வீதிக்குக் குறுக்கே சென்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் மோதுண்டு பலத்த அடிபட்டு வீதியில் விழுந்து காயம்பட்டிருந்தனர்.
சிம்பாபேவில் இடம்பெறும் முக்கோண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில், நேற்று இலங்கையை எதிர்கெண்ட மேற்கிந்திய தீவுகள் அணி 62 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மேற்கிந்திய தீவுகள் அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.
இதற்கமைய களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் 49.2 ஓவர்களில், 227 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜே.எல். கார்டர் 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து 228 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்குடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்களான தனஞ்சயடி சில்வா மூன்று ஓட்டங்களுடனும், குஷல் பெரேரா 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
அதன் பின்னர் வந்த வீரர்களும் அரைச்சதம் கூட பெற முடியாத நிலையில் மேற்கிந்திய தீவு வீரர்களின் பந்து வீச்சில் தடுமாறி வரிசையாக வௌியேறினர்.
எனினும் சஜித் பத்திரண சற்று நிதானமாக ஆடி 45 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
இந்தநிலையில், 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை 165 ஓட்டங்களை மட்டுமே பெற்று 62 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்ற அகதிகள் படகு ஒன்று கடலில் மூழ்கியதில் 100 பேர் பலியாகி உள்ளனர்.
லிபியாவில் இருந்து ஒரு அகதிகள் படகு ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றது.
அதில் 122 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் 10 பேர் பெண்கள். இந்த படகு மத்திய தரைக்கடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியது.
இதனால் படகில் பயணம் செய்தவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஜெர்மனியின் சென்னை கப்பல் அங்கு விரைந்து சென்று 20 பேரை காப்பாற்றியது.
இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த மீட்பு படையினர் கடலில் மூழ்கியவர்களை தேடி வருகின்றனர்.
படகில் பயணம் செய்த மேலும் 100 பேரை காணவில்லை. எனவே அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது
பிரபல இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அமைப்புக்கு இந்திய மத்திய அரசு 5 வருடங்கள் தடை விதித்துள்ளது.
ஜாகிர் நாயக்கின் பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு பங்களாளதேஷ் முஸ்லிம்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை பங்களாளதேஷ் அரசு கேட்டுக் கொண்டது.
பங்களாளதேஷத்தில் ஒளிபரப்பாகும் அவருக்குச் சொந்தமான “பீஸ் டிவி´க்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.
இந்நிலையில், பிரபல இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்புக்கு மத்திய அரசு 5 வருடங்கள் தடை விதித்துள்ளது.
நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிராக அவரின் பேச்சுக்கள் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருட்டு குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் இளைஞர் ஒருவரும் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் குருநகர் திட்டி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரும், 19 வயதுடைய இளைஞர் ஒருவருமே நேற்று புதன்கிழமை இரவு இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் அவர்களது வீட்டில் வைத்தே கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்படும் போது, அவர்களது உடமையில் இருந்து 2 மடிக்கணனிகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
இவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்றும், குறித்த இருவரையும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இனந்தெரியாத நபர்களால் வாள்வெட்டிற்கு இலக்காகிய நிலையில் மானிப்பாய் பொலிசாரால் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் வெளிபிரசேத்தில் நேற்று இரவு 7.00 மணியளவில் குறித்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கல்லுன்டாய்வெளி பிரதேசத்தில் வெட்டுக்காயத்துடன் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் துடிதுடித்த நிலையில் கிடப்பதைக் கண்டு அப்பகுதியால் சென்ற மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதன் பிரகாரம் மானிப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றதுடன், வெட்டுக்காயங்களுக்கு இலக்கானவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் விசரணைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
முழங்காவில் நாச்சிக்குடாப்பகுதி கடையொன்றில் நேற்று மாலை ஏற்ப்பட்ட தகராறு காரணமாக இரண்டு குழுக்கள் மோதுண்டதில் ஒரு இரு இளைஞர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகி முழங்காவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் குறித்த பகுதி பதற்ற நிலையில் இருப்பதாகவும் மீண்டும் மோதல் ஏற்படாதவாறு முழங்காவில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல் எதனையும் பெற முடியவில்லை எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட புதுக்குளம் கனிஸ்ட பாடசாலையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களை தயார்படுத்திய ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு மாணவர்களின் பெற்றோரின் ஏற்பாட்டில் கடந்த 03.11.2016 அன்று இடம்பெற்றது.
மேற்படி பாடசாலையில் 50 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்று 25 மாணவர்கள் வெட்டுபுள்ளிகளுக்கு மேல் எடுத்து சித்தியடைந்ததுடன் ஏனையோர் 100 புள்ளிகளுக்கு மேல் எடுத்திருந்தனர்.
தேசிய ரீதியில் இந்த பாடசாலை புலமை பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பத்தாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வவுனியா வடக்கு வலய கல்விப்பணிப்பாளர் வை.ஸ்ரீஸ்கந்தராஜா ,ஓய்வுபெற்ற முன்னாள் வலயகல்வி பணிப்பாளர்கள் திருமதி அன்டன் சோமராஜா மற்றும் திருமதி பராசக்தி ஆகியோர் கலந்து கொண்டு பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் கெளரவித்திருந்தனர்
தம்பிலுவில் சிவன் கோவில் வீதியை சேர்ந்த கிருஸ்ணமூர்த்தி ரவிதாஸ் என்பவர், விதை நடு கருவியை கண்டுபிடித்துள்ளார்.
தம்பிலுவில் சிவன் கோவில் வீதியை சேர்ந்த கிருஸ்ணமூர்த்தி ரவிதாஸ் என்பவர், விதை நடு கருவியை கண்டுபிடித்துள்ளார்.
இதன் அறிமுக நிகழ்வு சாகாமம் பிரதேசத்தில் நடைபெற்றதுடன், குறித்த இயந்திரத்தின் செயற்பாட்டை திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன், விவசாயத்திணைக்களத்தின் போதனாசிரியர் தர்சினி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் அவதானித்தனர்.
இவரின் புதிய கண்டுபிடிப்பை தேசிய ரீதியில் கொண்டுசெல்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு தானாகவே விதை நடும் முதலாவது கருவியை உருவாக்கிய இவர், தற்போது மின்சாரத்தின் உதவியுடன் விதைகளை நடும் கருவியை உருவாக்கியுள்ளார்.
இந்த இயந்திரத்தின் மூலம் மணித்தியாலத்துக்கு 03 ஏக்கரில் விதைகளை நட முடிவதுடன், ஒரே நேரத்தில் 4 நிரல்களில் நடக்கூடிய வசதியினையும் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரு தடவையில் 8 கிலோகிராம் தானியங்களை கொள்ளவு செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இவ் இயந்திரத்தின் மூலம் ஒரு நாளைக்கு குறைந்தது 15 ஏக்கர் நிலத்தில் விதைகளை நட முடியும்.
இந்த இயந்திரத்தின் பின்புறம் உள்ள சக்கரமானது விதையை விதைக்கின்ற இடைவெளியை நிர்ணயிப்பதுடன், தானகவே மடுக்களை தோண்டி தானியங்களை இட்டு மூடி அவ்விடத்தை அமர்த்தி விதைகளை நடும்.
சோளம், பயறு, கௌப்பி, நிலக்கடலை போன்ற மேட்டு நிலப்பயிகளுக்கான விதைகளை நடமுடிவதுடன் குறிப்பாக குறைந்தளவு நேரத்தில் கூடிய நிலப்பரப்பில் விதைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக இவ்வுபகரணத்தின் வடிவமைப்பாளர் கிருஸ்ணமூர்த்தி ரவிதாஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று(16.11.2016) வவுனியா தாண்டிக்குளம் புகையிரத நிலையத்துக்கு அருகில் வேகமாக பயணித்த ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு சொந்தமான கார் டயர் வெடித்த நிலையில் கட்டுபாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியது.
மேற்படி விபத்து சமவத்தின் போது காரை ஒட்டி சென்ற சாரதி சிறு காயங்களுக்குள்ளானார். சம்பவ இடத்துக்கு வருகை தந்த போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி விபத்து சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து கிடைக்கப்பெற்ற விபத்து தொடர்பான CCTV காணொளி இணைக்கபட்டுள்ளது .