கடந்த வியாழக்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு நீதி கோரி இன்றைய தினம் காலை முதல் நண்பகல் வரை யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்..
யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக திரண்ட பல்கலைக்கழக மாணவர்கள் கண்டி நெடுஞ்சாலையை மறித்து பொலிஸாரின் தாக்குதலை கண்டித்து கோசங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் நண்பகல் 12 மணியளவில் மாணவர்கள் மேற் கொண்ட போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. மாணவர்கள் தமது கோரிக்கைகள் உள்ளிடங்கி மகஜரை யாழ் அரச அதிபர் வேதநாயகனிடம் ஒப்படைத்துள்ளனர்.
இப் போராட்டத்தின் போது சீருடையணிந்த பொலிஸார் எவரும் கடமையில் இருக்கவில்லை. எனினும் புலனாய்வுத் துறையினரின் கண்காணிப்பு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு A9 வீதிக்கு குறுக்காகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 அளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
குறித்த மாணவர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், யாழ். நகரில் அமைந்துள்ள மாவட்ட செயலக வாயில்களுக்கு முன்னால் அமர்ந்து அமைதியான முறையில் இந்த போராட்டத்தை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவிருந்த போதும் அரச நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நோக்கில் அரச செயலகம் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்புக்கு நீதிவேண்டி வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு மக்கள் முழு ஆதரவினையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ். பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்ஷன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோர் கடந்த 20ஆம் திகதி பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் அகால மரணமடைந்துள்ளனர்.
இறந்த அந்த இளைஞர்களுக்கு அனுதாபம் தெரிவித்தும் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்களுக்கு எதிராக நீதியான விசாரணையை வலியுறுத்தியும் எதிர்வரும் 25 ஆம் திகதி வடமாகாணம் முழுவதும் ஒருநாள் அடையாள முழு அடைப்பு (ஹர்த்தால்) தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாமும் அதற்கு முழு ஆதரவினைத் தெரிவிப்பது எமது தார்மீகக் கடமையாகும். ஆகவே இந்த நீதிக்கான கோரிக்கைக்கு எமது ஆதரவினைத் தெரிவித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25.10.2016) அன்று அனைத்து நடவடிக்கைகளையும் தவிர்த்து இறந்த ஆத்மாக்களுக்கு அமைதி வேண்டியும் நீதி வேண்டியும் பிரார்த்திப்போம்.
இந்த போராட்டத்தில் அரசாங்கத்தின் அனைத்து திணைங்களைச் சேர்ந்த ஊழியர்களும், கல்விச் சமூகத்தினரும், தனியார் மற்றும் அரச போக்குவரத்து ஊழியர்களும், முச்சக்கர வாகன ஊழியர் மற்றும் உரிமையாளர் சங்கங்களும், அனைத்து பொது அமைப்புக்களும், சிவில் அமைப்புக்களும், தொழிற்சங்கங்களும் பொதுமக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கணணி உலகில் ஜாம்பவானாக திகழும் மைக்ரோசொப்ட் நிறுவனம் மென்பொருள் வடிவமைப்பு மட்டுமன்றி பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகின்றது.
இவற்றில் ஸ்கைப் எனப்படும் வீடியோ, குரல்வழி அழைப்புக்கள் உட்பட கோப்புக்களை பரிமாற்றிக் கொள்ளும் சேவையாகும்.
இச் சேவையில் கணக்கு ஒன்றினை உருவாக்குவதற்கு ஏனைய நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகளையும் நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
அவ்வாறு உருவாக்கப்பட்ட ஸ்கைப் கணக்கினை கொண்டு இனிமேல் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஏனைய அனைத்து சேவைகளுக்கும் பயன்படுத்த முடியும் என அந் நிறுவனம் அறிவித்துள்ளது.
உதாரணமாக Office, OneDrive, Xbox உட்பட அனைத்து மைக்ரோசொப்ட் சேவைகளிலும் உள் நுழைவதற்கு பயன்படுத்த முடியும்.
இதேபோன்று கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியினைக் கொண்டுள்ள ஒருவர் அந் நிறுவனத்தின் பல்வேறு சேவைகளையும் பயன்படுத்தக்கூடிய வசதி ஏற்கனவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைபேசியில் செல்பி எடுக்கும் மோகம் இளைஞர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் செல்பியை எடுத்து சமூகவலைதளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பதிவேற்றுவதை பலர் அதிக அளவில் செய்து வருகின்றனர்.
அப்படி நாம் எடுக்கும் செல்பி புகைப்படங்களையோ அல்லது மற்றவர்கள் பதிவேற்றும் புகைபடங்களையோ திரும்ப திரும்ப பார்க்கும் போது பார்ப்பவருக்குள் ஒரு வித தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு வாழ்க்கை வெறுப்புகுறியதாக மாறுவதாக சமீபத்திய ஒரு ஆய்வு முடிவுகள் கூறுகிறது.
அதிலும் முக்கியமாக மற்றவர்கள் பதிவேற்றும் அவர்களின் புகைபடங்களை நாம் தொடர்ந்து பார்க்கையில் நாம் நம்முடைய சுயமரியாதையை இழப்பதாகவும் அமெரிக்காவில் ஒரு புகழ் பெற்ற பல்கலைகழகம் எடுத்த ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறி்க்கையில்,
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடராசா கஜன், பவுன்ராஜ் சுலக்சன் ஆகிய இருவரும் யாழ்ப்பாண சோதனைச்சாவடிக்கு அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சிங்களக்காவல்துறையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இச்சம்பவம் பெருத்தத் துயரத்தையும், மிகுந்த மனவேதனையையும் தருகிறது.
உயிரிழந்த இரு மாணவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன். தமிழ் மாணவர்களைச் சுட்டுக்கொலை செய்திருக்கிற இந்தச் சம்பவத்தின் வாயிலாக தமிழர்களைக் கொன்றொழிக்கும் இரத்தவெறி பிடித்த சிங்களக்காடையர் கூட்டத்தின் பசி ஒருபோதும் அடங்காது எனும் கூற்று மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் இந்தப் படுகொலையை விபத்து எனக்கூறி மூடி மறைக்க முயன்ற சிங்களக்காவல்துறையினர் பின்னர், உடலில் தென்பட்ட காயங்களின் வாயிலாக அது கொலை என வெளியுலகத்துக்குத் தெரியவரவே, சப்பைக்கட்டு கட்டி தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க முனைகிறார்கள். அவர்கள் எக்காரணத்தைக் கூறினாலும் எதன்பொருட்டும் இச்செயலை ஏற்க முடியாது. இச்செயலுக்கு எனது வன்மையானக் கண்டனத்தைப் பதிவுசெய்கிறேன்.
மகிந்தா ராஜபக்சே ஆண்டாலும், மைத்திரிபால சிறிசேனா ஆண்டாலும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் இதுதான் தமிழர்களின் நிலை என்பது இச்சம்பவம் வாயிலாகத் தெளிவாகப் புலனாகியிருக்கிறது. ஏற்கனவே, மூத்தப் போராளிகளை நஞ்சை செலுத்திக் கொன்றுவரும் சிங்களப்பேரினவாதம், தற்போது தமிழ் இளந்தலைமுறை மீதும் கோரத்தாக்குதல் தொடுத்திருப்பது உலகத்தமிழர்களின் உள்ளத்திலிருந்து உதிரத்தை வரவழைத்திருக்கிறது.
தமிழ் இளைஞர்களின் மனங்களிலும், எண்ணங்களிலும் போர்க்குணமும், போராட்ட உணர்வும் எழாதவாறு அவர்களை மழுங்கடிக்கும் வேலையை வீரியத்தோடு சிங்கள அரசப்பயங்கரவாதம் செய்துகொண்டு வருகிறது. அதனையும் மீறி கிளர்ந்தெழும் மாணவர்களையும், இளைஞர்களையும் அச்சுறுத்தவே இதுபோன்ற கொலைகளை அது நிகழ்த்துகிறது. இதனை ஈழத்தமிழர்கள் தங்களது தந்தையர் நாடாகப் போற்றும் இந்தியப் பெருநாடும், மானுடம் பேசுகிற சர்வதேசச் சமூகமும்கூட பார்த்துக்கொண்டு மௌனியாக இருப்பதுதான் பெருத்த கொடுமையானச் செய்தியாகும்.
இவ்விவகாரத்தில், தமிழர்களைக் கொன்ற சிங்களக் காவல்துறையினர் மீது சிங்கள அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதைவிட ஒரு அறிவிலித்தனம் ஒன்றும் இருக்க முடியாது. எனவே, இச்சம்பவத்தில் ஐ.நா.பெருமன்றமும், இந்தியப் பேரரசும் தலையிட்டு கொலை செய்யப்பட்ட மாணவர்களின் படுகொலைக்கு உரிய நீதிவிசாரணை நடத்த வழிகோல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேடையில் நடனமாடிக்கொண்டிருந்தபோது பிரபல மராத்தி நடிகை அஸ்வினி மாரடைப்பால் உயிரிழந்தார்.
பிரபல மராத்தி நடிகையும் பரதநாட்டிய நடனக்கலைஞருமான அஸ்வினி ஏக்போத். இவருக்கு வயது 44, நேற்றிரவு புனேவில் நடந்த பரத நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வினி அபாரமாக நடனம் ஆடிக்கொண்டிருந்த போது திடீரென மேடையில் சரிந்து விழுந்துள்ளார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் ஏற்கனவே அவருடைய உயிர் மாரடைப்பு காரணமாக ஏற்கனவே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர் ராகாவா லாரன்ஸ் 131வது குழந்தையில் உயிரை காப்பாற்ற உதவி செய்துள்ளார்.
பிரபல திரைப்பட நடிகர், நடன இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பலதிறமை தன்னுள் வைத்துள்ளவர் ராகவா லாரன்ஸ். எப்போதும் தன்னை நம்பி வருபவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர். இவர் அனாதை குழந்தைகள் பலரை தன்னுடைய ஆசிரமத்தில் இலவசமாக கவனித்து வருகிறார். அவர்கள் படிப்பதற்கு அது போக தன்னுடைய நடன திறமைகளையும் அவர்களுக்கு கற்றுத் தருகிறார்.
இந்நிலையில் உதவி செய்வதற்காகவே அமைப்பினை நடத்திவரும் இவர் பல குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் செய்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது பெண் குழந்தையின் இதய அறுவைசிகிச்சைக்கு ராகவா லாரன்ஸ் உதவி செய்துள்ளார்.
இதுவரை மருத்துவ உதவி செய்து பலரையும் காப்பாற்றியுள்ள லாரன்ஸ் தற்போது 131வது முறையாக குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்துள்ளார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
வட அமெரிக்காவில் அட்லாண்டிக் கடலில் உள்ள மிக சிறிய தீவு நாடு ஹைதி. இதன் தலைநகர் போர்ட் அயு பிரின்ஸ் அருகே ஆர்சாய் என்ற இடத்தில் மத்திய சிறை சாலை உள்ளது.
இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல ஆண்டுகளாக இங்கு தங்க வைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த சிறை சமீபத்தில் உடைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து அங்கு அடைக்கப்பட்டிருந்த 170 கைதிகள் தப்பி ஓடினர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே சிறைக் காவலர்கள் அவர்களை தடுத்தனர். அதை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
அதில் சிறைக்காவலர்கள் மூவர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி ஒருவர் பலியானார். இருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே தப்பி ஓடிய கைதிகள் ஒரு சிறையில் இருந்து ஐந்து துப்பாக்கிகளை கொள்ளையடித்து சென்றனர்.
தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க ஹைதி அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சிறை பகுதியில் உள்ள சோதனை சாவடிகள் மற்றும் ரோடுகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. இதுவரை சிறையில் இருந்து தப்பிய 11 பேர் பிடிபட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தனது இரு பிள்ளைகளை கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர் பதுளை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் மடுல்சீமை பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண் எனத் தெரியவந்துள்ளது. மேலும், சம்பவத்தில் இரு மாதங்களேயான அப் பெண்ணின் மகன் மற்றும் இரண்டரை வயதான மகளுமே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
முதலில் தனது பிள்ளைகளை கூரிய ஆயுதத்தால் தாக்கிய அவர், பின்னர் அதே ஆயுதத்தை பயன்படுத்தி தன்னையும் காயப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து அப் பகுதி மக்கள் இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். பின்னர் பொலிஸார் அப் பகுதிக்கு சென்று மூவரையும் பதுளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மடுல்சீமை பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமைய பதுளை நீதவான் ருவன்திகா மாரசிங்க சந்தேகநபரான பெண்ணை எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை அப் பெண் மன ரீதியான பாதிப்புக்கு உள்ளானவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
இவர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த சம்பவத்தைக் கண்டித்து, வடக்கில் எதிர்வரும் 25ம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர் விடுதலை கூட்டணி, தமிழர் சமூக ஜனநாயக கட்சி ஆகிய 6 கட்சிகள் கூட்டாக இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.
கடந்த 21ம் திகதி யாழ்.கொக்குவில் – குளப்பிட்டி பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக இன்றைய தினம் மாலை 3.30க்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 4 அங்கத்துவ கட்சிகளும் மேலும் 2 கட்சிகளும் இணைந்து அவசர கலந்துரையாடல் ஒன்றை மாலை 5.30 மணி வரையில் நடத்தியிருந்தது.
இந்தக் கலந்துரையாடலின் நிறைவில் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற சகல கட்சிகளினதும் கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பிலேயே ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மேலும் கூறியதாவது,
வட மாகாணத்தில் வர்த்தக அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமது ஆதரவினை இந்த ஹர்த்தாலுக்கு வழங்குவதற்கு முன்வந்திருக்கின்றார்கள். இதேபோல் அரசியல் கட்சிகளும் தங்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். இதற்காக சகல அரச நிறுவனங்களும், பாடசாலைகளும் முழுமையாக மூடப்பட்டு போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டு முழுமையான எதிர்ப்பினை காட்டுவதற்கு தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும், என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இன்றைய ஹர்த்தால் அறிவிப்பின் போது, இலங்கை தமிழரசு கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலொ, மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி, தமிழர் சமூக ஜனநாயக கட்சி ஆகியன கலந்துகொண்டிருந்தன.
வவுனியாவில் நேற்று மாலை 3.30 மணிக்கு இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வவுனியாவிலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்ததுடன் சமகால அரசியல் நிலவரங்களையும் எதிர்காலச் செயற்பாடுகளையும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துரையாடினர்.
அத்துடன் எதிர்வரும் காலத்திலும் இச்சந்திப்புக்களை மேற்கொண்டு கலந்துரையாடுவதற்கும் முடிவு எடுக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன் வடபகுதியில் இடம்பெறும் இராணுவ மயமாக்கல், பௌத்த விகாரைகளை அமைப்பது, நில அபகரிப்பு, வவுனியா பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு பொருத்தமான இடத்தெரிவு போன்றவை கலந்துரையாடப்பட்டது.
இறுதியில் கடந்த சில் தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொண்ட கொடூரத்தாக்குதலில் உயிரிழந்த இரண்டு மாணவர்களுக்கும் அனுதாபம் தெரிவிக்கப்பட்டதுடன் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
மட்டக்குளி – சமித்புற பகுதியில் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்துக்கு மேற்பட்டவர்கள் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த ஆறு பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் நால்வர் உயிரிழந்ததாகவும் ,மற்றும் படுகாயமடைந்த இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
என்ன காரணத்திற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.
இதேவேளை , பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே மிகவும் உயரமான மலையான எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஜூன்கோ தாபெய் தனது 77 ஆவது வயதில் கடந்த(20) வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் புற்றுநோய் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என அவருடைய உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜப்பானில் பிறந்த இவர் தனது 10 வயதிலேயே மலையேறும் பயிற்சியில் ஈடுப்பட்டு 1975 ஆம் ஆண்டு எவரஸ்ட் சிகரத்தை அடைந்தார். எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் என்ற பெருமையைத் தட்டிக் கொண்டவர்.
எட்மன்ட் ஹிலரியும், டென்சிங் நோர்கேயும் உலகிலேயே மிகவும் உயரமான மலையான எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் ஆண்கள் என்ற சாதனை பதிவுக்கு பின்னர் 22 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூன்கோ தாபெய் எவரஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். கொக்குவில் குளப்பிட்டியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் இறந்த பல்கலைக்கழக மாணவன் சுலக்சன் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகன்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவன் துப்பாக்கிக் சூடு பட்டு இறந்த போது, மற்றைய மாணவனும் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், பொலிஸார் கீழே விழுந்த மாணவனை அருகில் இருந்த மதிலோடு தாக்கி கொன்றதாகவும் இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியுடன் கூறியுள்ளனர்.
யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலை மாணவன் சுலக்சன் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகன் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
மரணமடைந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் சுலக்ஸனின் நடிப்பில் உருவான குறுந்திரைப்படம்..
யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை அவரது கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு இரணைமடு பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, மாணவர்களின் படுகொலைகளை கண்டித்து கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து நாளை (24) பேரணி ஒன்றை நடாத்த அழைப்பு விடுத்துள்ளார்கள்.
மேலும், காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பிக்கும் பேரணி கிளிநொச்சி அரச அதிபர் செயலகத்தை சென்றடைய இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எமது சமூகம் இழந்தது மாணவர்களை மட்டும் அல்ல ஒரு சிறந்த கலைஞரையும் இந்த படுகொலை சம்பவங்களுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கப்பட வேண்டும்.