வீட்டில் வளர்த்த நாகப் பாம்பு ஒன்று தீண்டி சுற்றாடல் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆய்வு நோக்கத்திற்காக வீட்டில் வளர்த்து வந்த நாகப் பாம்பு ஒன்றே இவ்வாறு தீண்டியுள்ளது.
காலியைச் சேர்ந்த 47 வதான அமல் விஜேசேகர என்பவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். காலி கலேகானே பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் இந்த நபரை வீட்டு வாயிட் கதவு அருகாமையில் இறந்து கிடந்த நிலையில் உறவினர்கள் மீட்டுள்ளனர்.
இலங்கைக்கே உரிய உயிரினங்கள் தொடர்பில் ஆய்வு நடத்தி வரும் ஆய்வுக் குழுவொன்றின் அங்கத்தினராக இவர் கடமையாற்றி வந்தார்.
பிரதேசத்தில் பல்வேறு வீடுகளுக்கு வரும் பாம்பு இனங்களை பிடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று ஆய்வு செய்து வந்துள்ளார்.
தங்கியிருந்த வீட்டின் ஒரு பகுதியில் இந்த பாம்புகள் வளர்க்கப்பட்டுள்ளன. இந்த பாம்பு வகைகளில் இரண்டு பெரிய நாகப் பாம்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாம்பு அவரைக் கொத்தியதன் பின்னர் வீட்டுக்கு வெளியேற சென்றிருக்கலாம் எனவும் அதன் போது நுழைவாயிலுக்கு அருகாமையில் வீழ்ந்து இறக்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
பாம்பு விசத்தினால் இந்த மரணம் ஏற்பட்டதாக கராபிட்டிய வைத்தியசாலையில் நடத்திய பிரதேப் பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜேர்மனியில் பேருந்து ஒன்றை 11 வயதே ஆன சிறுவன் திருடி ஓட்டிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் உள்ள பாவரியன் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றில் நுழைந்து குறிப்பிட்ட சிறுவன் விளையாடி வந்துள்ளான்.
தனியாருக்கு சொந்தமான அந்த பேருந்து சில காரணங்களால் அந்த பகுதியில் உரிமையாளர்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே பேருந்தினுள் புகுந்து விளையாடி வந்த சிறுவனின் கண்ணில் பேருந்தை இயக்கும் சாவி சிக்கியுள்ளது.
இதை வாய்ப்பாக பயன்படுத்திய சிறுவன் அந்த பேருந்தை அங்கிருந்து இயக்கி தெருவழியாக பிரதான சாலைக்கு எடுத்து வந்துள்ளான்.
மட்டுமின்றி பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளையும் ஏற்றியுள்ளான். ஓட்டுனர் சிறுவன் என்று தெரியாமலே மூன்று பயணிகளும் அந்த பேருந்தில் ஏறியுள்ளனர். இதனிடையே பேருந்து சீராக செல்லவில்லை என்பதை உணர்ந்த பயணிகள் வாகனத்தை ஓட்டுவது யாரென்று கவனித்துள்ளனர்.
அப்போதுதான் அவர்களுக்கு தெரிந்தது, இதுவரை சிறுவன் இயக்கி வந்த பேருந்தில் தாங்கள் இதுவரை பயணம் செய்துள்ளதாக.
உடனடியாக அந்த பயணிகளில் ஒருவர் இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் கடின முயற்சிக்கு பின்னரே சிறுவனிடம் இருந்து பேருந்தை கைப்பற்றினர்.
மட்டுமின்றி சிறுவனை அவனது தாயாரிடமும் ஒப்படைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக சிறுவனின் பேருந்து பயணம் எந்த வித அசம்பாவிதங்களையும் ஏற்படுத்தவில்லை. பரபரப்பான அந்த சாலையில் துணிவுடன் அந்த சிறுவன் பேருந்தை இயக்கியுள்ள போதிலும் பேருந்திற்கு ஆயிரம் யூரோ அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சுவாதி கொலை தொடர்பாக அவரது நண்பர் முகமது பிலாலிடம் அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக நேற்று இந்த விசாரணை நடைபெற்றுள்ளது. முகமது பிலாலிடம் ஏற்கனவே பலமுறை பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், நேற்று மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சுவாதி கொலை தொடர்பாக பல்வேறு கேள்விகளை விசாரணை அதிகாரிகள் பிலாலிடம் கேட்டுள்ளனர்.
சுவாதி கொலை வழக்கில் ராம்குமாரே குற்றவாளி என்று பொலிசார் ஆரம்பம் முதலே தெரிவித்துவந்த நிலையில், முகமது பிலாலிடம் நடைபெற்றுவரும் விசாரணை தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
“சுவாதியை எப்படி தெரியும்?” என்பது போன்ற ஊடகங்களின் கேள்விகளுக்கு பிலால் பதிலளிக்க மறுத்திருந்த நிலையில், அவரிடம் விசாரணை நடத்தப்படுவது இவ்வழக்கில் பல்வேறு தரப்பினராலும் கூர்ந்து நோக்கப்பட்டு வருகிறது.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, கடந்த ஜூன் 24ம் திகதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் இளைஞர் ஒருவர் தனது மாமியாரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாதேபுரா மாவட்டத்தில் வசித்து வரும் 22 வயதான சூரஜ் என்ற இளைஞரே அவரது 42 வயதான மாமியார் ஆஷா தேவியை காதலித்து மணந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு சூரஜ் என்பவருக்கும் லலிதாவிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் நடந்த சில தினங்களுக்கு பின்பு சூரஜிற்கு உடல் நிலை சரியில்லை என்று அவரை பார்த்துக்கொள்ள லலிதாவின் அம்மா ஆஷா தேவி அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆஷாவின் கணவர் டெல்லியில் பணிபுரிவதால், சூரஜ் மற்றும் ஆஷாவிற்கு இடையே காதல் ஏற்பட்டு இருவரும் வெளியேயும் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளனர்.
அதன்பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். ஜூன் மாதம் இருவரும் ஊரைவிட்டு ஓடிவிட்டதாகவும், பின்னர் தங்களின் கிராமத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
திரும்ப வந்த பிறகு, ஊர் பஞ்சாயத்து, இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலிப்பதால் சேர்ந்து வாழ அனுமதி அளித்துள்ளது.
தற்போது இருவரும் சேர்ந்து வாழ்கின்றனர். இதற்கு முந்தைய திருமணத்தில் இருந்து சட்டரீதியாக விவாகரத்து வாங்கி இருவரும் பிரிந்து வந்தனரா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
தனது மகளுடன் சேர்ந்து சூரஜிடன் வாழ ஆஷா விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் இவர்களின் இந்த செயலால் அவர்களது குடும்பத்தினர் கடும் கோபமடைந்துள்ளனர்.
மேற்கு அவுஸ்திரேலியாவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தண்ணீரில் மிகப் பெரிய பந்து போன்ற பொருள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
முதலில் படகு என்றும், பின்னர் மிகப் பெரிய வெப்பக் காற்று பலூன் என்றும் நினைத்தனர் அருகே நெருங்க நெருங்க வேற்றுக்கிரகப் பொருளாக இருக்கலாம் என்று ஆச்சரியத்தில் மூல்கினர், பின் அருகே சென்றவுடன் அது ஒரு இறந்த திமிங்கலம் என்பதை உணர்ந்தனர்.
அது குறித்து மீனவர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘திமிங்கலத்தின் வயிறு முழுவதும் வாயுவால் நிறைந்துள்ளது. அதனால் தான் அது பந்து போல் உப்பலாக இருந்தது. அருகே செல்லச் செல்ல அது ஒரு இறந்த திமிங்கிலம் என்று அதன் துர்நாற்றத்தை வைத்து உணர்ந்தோம்’ என்று தெரிவித்துள்ளார்.
இதுவரையில் இப்படி ஒரு சம்பவத்தைப் பார்த்ததே இல்லை என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழிக்கருகில் உள்ள கிணற்றின் அகழ்வுப் பணிகள் நாலாவது நாளாகிய வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ராஜபக்ச தெரிவித்திருக்கினறார்.
கடந்த திங்கட்கிழமை இந்த அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. சுமார் பதினைந்து அடி ஆழம் வரையில் அகழப்பட்ட இந்தக் கிணற்றில் இருந்து சில எலும்புகள், பல் ஒன்று நாணயம் ஒன்று உட்பட பல தடயப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்தத் தடயப் பொருட்கள் இரசாயன பகுப்பாய்வு செய்யப்பட்டு, அது தொடர்பில் மன்னார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
அதன் பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என்றார் டாக்டர் ராஜபக்ச.
திருக்கேதீஸ்வரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்புப் பணிகளின்போது பணியாளர்களினால் மனித எலும்புகள் சில கண்டெடுக்கப்பட்டதையடுத்து, அந்தப் பகுதியில் மனிதப் புதைகுழி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் 2014 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, சுமார் 80 பேருடைய மனித எலும்புக்கூடுகளும் எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டு பரிசேததனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைளின்போது, அந்த மனிதப்புதைகுழிக்கருகில் மூடப்பட்டிருந்த பழைய கிணற்றின் உள்ளேயும் மனித எலும்புக்கூடுகள் இருக்கலாம் என காணாமல் போனோருடைய உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து விடுத்த வேண்டுகோளை ஏற்று நீதிமன்றம் இந்தக் கிணற்றில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்ததையடுத்தே இந்த அகழ்வுப் பணிகள் நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதற்கிடையில் காவல்துறையினருடைய பாதுகாப்பில் உள்ள இந்தக் கிணற்றை பொறுப்பெடுத்து, அதனைச் சுத்தப்படுத்தி பொதுமக்களின் பாவனைக்கு விடுமாறு மன்னார் மாவட்ட நீதவான் மன்னார் பிரதேச சபையினருக்கு உத்தவிட்டு இந்த வழக்கு விசாரணையை செப்டம்பார் மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அம்பாள் உற்சவத்தின் ஒன்பதாம் நாளான இன்று(04.08.2016)அதிகாலைமுதல்சிவஸ்ரீ.சதா.சங்கரதாஸ்சிவாச்சாரியார் தலைமையில்அபிசேகங்கள்மூலஸ்தான பூசை, யாகபூசை,கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை எட்டுமணியளவில் வசந்தமண்டப பூசை இடம்பெற்றது.
தொடர்ந்து அம்பாள் உள்வீதி வலம்வந்து ஒன்பது மணியளவில் தேரில் ஆரோகணித்து ஒன்பதரை மணியளவில் ஒருபுறம் ஆண்பக்த அடியார்களும் மறுபுறம் பெண் பக்த அடியார்களும் வடம்பிடிக்க திருவீதியுலா வந்தாள்.
சரியாக காலை பதினோரு மணியளவில் தேர் இருப்பிடத்தை அடைய அதன் பின் அர்ச்சனைகள் இடம்பெற்றன.
வவுனியா இராசேந்திரகுளம் விக்ஸ்காடு பகுதியில் நேற்று முன்தினம் (02.08.2016) சட்டவிரோதமான முறையில் காடுவெட்டி காணி அபகரிக்க முயன்றதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற வவுனியா உதவி மாவட்ட வன அதிகாரி இரா.ரவிராஜ் சட்டவிரோதமான முறையில் வன திணைக்களத்திற்குரிய பகுதியில் குடியேற முயன்றவர்களிடம் தெரிவிக்கையில்..
எதிர்வரும் காலங்களில் இந்த விக்ஸ் மரத்தோட்டத்திற்குள் அத்துமீறி உட்பிரவேசிப்பது அல்லது குடியிருப்பது சட்டத்திற்கு முரணானது என்பதை தெளிவுபடுத்தியதுடன், இப்பகுதியானது வன திணைக்களத்திற்குச் சொந்தமானது எனவே இனந்தெரியாதவர்களினால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு முயற்சிகளிலிருந்து பொதுமக்கள் விலகியிருக்குமாறு தெரிவித்ததுடன்
அத்துமீறி உட்பிரவேசித்தால் அவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து அப்பகுதியில் குடியேற முற்பட்ட 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவ் அறிவித்தலை ஏற்றுக்கொண்டு காணி அபகரிக்கும் முயற்சியை கைவிட்டு திரும்பி சென்றுவிட்டனர்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் 400 இடங்களில் Wifi வசதியை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 5 நிறுவனங்களிடம் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்போது 28,000 பேர் மாத்திரமே Wifi வசதிகளை பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதிய தொழிநுட்பத்தினூடாக பெற்றுக் கொடுக்கப்படும் Wifi வசதி இருமடங்கு வேகம் கொண்டதாக காணப்படும் எனவும் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்டதாவும், தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில் மரண தண்டனை பெற்ற 20 தீவிரவாதிகளுக்கு, ஒரே நாளில் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று ஈரான் ஊடகம் தகவல் வெளியிட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை தூக்கிலிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் கொலை செய்தவர்கள்… பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்தவர்கள், அழிவிற்கு காரணமானவர்கள். நாட்டின் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட்டவர்கள், குர்திஷ் பிராந்தியத்தில் மதத் தலைவர்களை கொலை செய்தவர்கள்,” என்று அரசு தலைமை வழக்கறிஞர் முகமது ஜாவித் மாண்டஷேரி கூறியதாக ஐ.ஆர்.ஐ.பி. செய்தி வெளியிட்டு உள்ளது.
இதுபற்றி ஈரான் புலனாய்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், 2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த குண்டுவெடிப்புகள், கொள்ளைச் சம்பவங்கள் உள்ளிட்ட 24 ஆயுத தாக்குதல்களை பட்டியலிட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும், மற்றவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு புலந்த்ஷர் என்ற இடத்தில் காரில் சென்ற தாய்- மகளை 7 பேர் கும்பல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து பொருட்களை கொள்ளையடித்து சென்றது.
இந்த சம்பவத்தின் சோகம் மறையும் முன்பு பரேலி என்ற இடத்தில் சாலையில் நடந்து சென்ற ஆசிரியை காரில் கடத்திச் செல்லப்பட்டு 2 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த இரு சம்பவங்களிலும் குற்றவாளிகளை தேடும் பணியில் பொலிசார் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆக்ராவில் 2 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. முதலாவது சம்பவம் ஆக்ரா பிரகாஷ் நகரில் நடந்தது. இங்கு தனது சகோதரருடன் வசித்து வந்த 19 வயது ஊனமுற்ற பெண்ணை அவரது உறவினரும் மற்றொரு வசதி படைத்தவரும் வீடு புகுந்து கற்பழித்தனர். இருவரும் அளவுக்கு அதிகமான போதையில் இருந்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆக்ரா அருகே நவடா என்ற இடத்தில் விதவைப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். இறந்துபோன அவரது கணவரின் நண்பகளால் அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே பரேலியில் ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பள்ளியில் படிக்கும் 50 மாணவிகள் தங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் கேட்டு பொலிசில் மனு கொடுத்துள்ளனர். அதுவரை பள்ளி – கல்லூரிகளுக்கு செல்ல மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் தொடரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்களால் முதல்- மந்திரி அகிலேஷ் யாதவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இயக்குனர் விஜய்யும் அமலாபாலும் விவாகரத்து செய்துவிட்டு, தற்போது தனித்தனி வீடுகளில் வசிப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அமலாபாலை விவகாரத்து செய்துவிட்டது குறித்து விஜய்யும், அவருடைய தந்தை அழகப்பனும் உறுதியாக கூறிவிட்டாலும், அதற்கான காரணத்தை அவர்கள் தெளிவாக கூறவில்லை.
இதற்கிடையில், பல்வேறு இணையதளங்களில் விஜய்-அமலாபால் பிரிவிற்கு இதுதான் காரணம், அதுதான் காரணம் என பலவகை காரணங்களை வைத்து எழுத ஆரம்பித்தனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக இயக்குனர் விஜய்யே தான் அமலாபாலை பிரிவதற்கான காரணத்தை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..
சில நாட்களாகவே நானும், அமலாவும் பிரிவது பற்றி வெளிவரும் எண்ணற்ற செய்திகளை நான் படித்து வருகிறேன். ஆனால் அவற்றுள் வதந்திகளும், கற்பனை கதைகளும் தான் மிக அதிகம். இந்த தருணத்தில் நான் ஒன்றை மட்டும் தெளிவுப்படுத்தி கொள்ள விரும்புகிறேன்.
நானும் அமலாவும் பிரிகிறோம் என்ற செய்தி உண்மைதான், ஆனால் மற்ற எல்லா தகவல்களும் முற்றிலும் பொய்யானது.
எங்களின் பிரிவிற்கு என்ன காரணம் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். என்னுடைய நெருங்கிய நண்பர்களும், ஒரு சில ஊடக நண்பர்களும் இதைப்பற்றி வெளிப்படையாக பேசுமாறு கேட்டுக்கொண்டாலும், என் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை நான் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.
ஒரு சராசரி தந்தையாக மகனின் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த பிரச்சனைகளால் நொந்துபோன என் தந்தை, தன் மனதில் சரி என்று பட்டதை ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் சொன்னது, இந்த பிரச்சனையை திசை திருப்பியது.
இயல்பாகவே சமூதாயத்தின் மீதும், பெண்கள் மீதும் அதிக அக்கறையும், மரியாதையும் கொண்டவன் நான். எனது இயக்கத்தில் வெளியான ஒன்பது படங்களும், பெண்களின் சுயமரியாதையை பிரதிபலிக்கும் வண்ணமாகத்தான் இருந்திருக்கிறது. அமலா தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால், திருமணத்திற்கு பிறகும் அவரின் விருப்பத்திற்கு என்னால் முடிந்த ஆதரவை கொடுத்து வந்தேன்.
அப்படி இருக்கும்போது திருமணத்திற்குப் பின்னர் அமலா நடிப்பதால் தான் நாங்கள் விவாகரத்து பெறுகிறோம் என்று பரவும் செய்திகள் அனைத்தும் பொய்யே.
நம்பிக்கை, நேர்மை ஆகிய இரண்டு குணங்களும் தான் ஒரு வலுவான திருமண வாழ்விற்கு சிறந்த பாலமாக செயல்படுகிறது. அந்த இரண்டும் உடைந்த பிறகு திருமண வாழ்வை தொடர்ந்தால், அதில் எந்தவித அர்த்தமும் இருக்காது. நாங்கள் இருவரும் பிரிந்துவிடுவோம் என கனவில்கூட நான் நினைத்ததில்லை, ஆனால் இன்றைக்கு அது நடந்துவிட்டது.
மிகுந்த வலியை என் இதயத்தினுள் பூட்டிக்கொண்டு, எனது வாழ்க்கையை கண்ணியமான முறையில் தொடர நான் முடிவு செய்துவிட்டேன்.
இந்த உண்மை எதுவும் தெரியாமல், குறிப்பிட்ட சில ஊடகங்கள் பரப்பும் வதந்திகளால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன். அதை நினைக்கும்போதுதான் எனக்கு மேலும் வருத்தமாக இருக்கிறது. இனியாவது எங்களின் தனிப்பட்ட உணர்வுகளை மதித்து, இதுபோல் வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் என்னுடன் இருந்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பொலனறுவை – திம்புலாகலவை சேர்ந்த தமிழரான தந்தையொருவர் தனது நான்கு பிள்ளைகளையும் பிக்கு சாசனத்தில் இணைத்துள்ளார்.
இந்நான்கு பிள்ளைகளுள் ஆண் பிள்ளைகள் மூவரும் திம்புலாகல துறவிகள் மடத்திலும், பெண் பிள்ளை பொலனறுவை அசரன சரண சுகத விகாரையிலும் துறவறம் பூண்டுள்ளனர்.
ஆண்பிள்ளைகள் மூவரும் 9, 14, 16 ஆகிய வயதுடையவர்கள் எனவும் பெண் பிள்ளை 11 வயதானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நால்வரும் தற்போது பிரிவெனா கல்வியினை கற்று வருகின்றனர்.
சுமார் 2 வருடங்களுக்கு முன்பாக பணிப்பெண்ணாக சவூதி சென்ற தனது மனைவி தொடர்பில் கடந்த ஆறு மாதங்களாக எந்தவித தகவல்களும் கிடைக்க வில்லை என்றும், பிள்ளைகளை கவனித்துக் கொள்வதற்கு யாருமில்லாத காரணத்தினாலும் அவர்களை துறவறத்தில் இணைத்துவிட்டதாக அவர்களின் தந்தையான சித்திரவேல் சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.
56 வயதான சித்திரவேல் சுந்தரலிங்கம், வலது கை பூரண இயலாமையாலும், கண்பார்வை குறைபாட்டினாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது துறவறம் பூண்டுள்ள தமது பிள்ளைகளுடன் திம்புலாகல மடாலயத்தில் வசித்து வருகின்றார்.
இவர் வெலிகந்த, செவணபிடிய, கரபொல கிராமத்தில் வசித்து வந்த வேளையில் குடும்ப பொருளாதார சிக்கல் காரணமாக காணித் தரகர் ஒருவரின் வார்த்தைக்கு அமைய தாம் வசித்து வந்த நிலத்தினை 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவுக்கு அடகு வைத்து விட்டு தனது மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானம் தொடர்பான ஒரு வருட கற்கை நெறியை பூர்த்தி செய்துள்ள சுந்தரலிங்கம், 11 வருடங்களாக செங்கலடி மாவட்ட செயலகத்தில் காரியாலய உதவியாளராக கடமையாற்றி வந்திருந்த நிலையில் வருமானம் போதாமையினால் பொலனறுவையிலுள்ள அரிசி ஆலையொன்றில் கடமையாற்றி வந்தவர்.
தற்போது தனது இயலாமையின் காரணமாக மடத்தில் வசித்து வரும் இவரை தனது (ஆண்) பிள்ளைகள் மூவரும் துறவறம் பேணிவந்தாலும் சிறப்பாக கவனித்துக் கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். அதுமட்டுமின்றி விடாமுயற்சி மிக மிக முக்கியமாகும். அல்லாவிடில் மண்ணைக் கவ்வ வேண்டியது தான்.
இவ்வாறே முன்பு ஒரே நேரத்தில் சில கிளாஸ்களை பயன்படுத்தி மது பானங்களை ஒன்றுடன் ஒன்று கலந்து சாதனை படைத்திருந்தனர்.தற்போது இதனை முறியடிக்கும் வகையில் 17 கிளாஸ்களை பயன்படுத்தி இரு வகையான மதுபானங்களை கலந்து முந்தைய சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் எருமை மாட்டிடம் பேட்டி எடுத்த வினோத சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் பிரபல ஜியோ தொலைக்காட்சியில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வருபவர் அமின் ஹபீஸ். இவர் லாகூரின் மெஹ்மூத் பூட்டி மாவட்டத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு குறித்து செய்தி சேகரித்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த எருமை மாட்டிடம் கருத்து கேட்டுள்ளார், இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
சூரியனை சுற்றி வரும் விண்கல் ஒன்று பூமியை தாக்கும் என்றும் அதனால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சூரியனை மையமாக வைத்து கோடிக்கணக்கான விண்கற்கள் நாம் வசிக்கும் இந்த பால்வீதியை சுற்றி வருகின்றன.
இவற்றில் ஒரு விண்கல் தான் Bennu என அழைக்கப்படும் ஆபத்தான விண்கல். இது சூரியனை மையமாக கொண்டு மணிக்கு சுமார் 63,000 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது.கடந்த 1999ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் திகதி இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அதனை கூர்ந்து கண்காணிக்க Osiris-Rex என்ற விண்கலம் அனுப்பப்பட்டு தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுமார் 500 மீற்றர் சுற்றளவு கொண்ட இந்த விண்கல் பூமிக்கு அருகில் ஒவ்வொரு 6 ஆண்டுகளுக்கும் வந்து செல்லும்.ஆனால், எதிர்வரும் 2135ம் ஆண்டில் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே கடக்கும்போது, அந்த விண்கல் பூமி மீது மோத வாய்ப்புள்ளது என தற்போது விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அசுர வேகத்தில் பூமி மீது மோதினால், 7 கி.மீ தூரத்திற்கு எரிமலை வாய் போல் துளை ஏற்படும் என்றும், சுமார் 500 கி.மீ தூரம் வரை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், உயிரிழப்புகளும் உண்டாகும் என Dante Lauretta என்ற விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது Bennu விண்கல்லை ஆய்வு செய்து வரும் Osiris-Rex 2023ம் ஆண்டு பூமிக்கு திரும்பும் என்றும், அதில் பதிவாகியுள்ள தகவல்களை ஆராய்ந்தால் கூடுதல் விவரங்கள் தெரியவரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.