மலேசிய சிரிய ரக விமானம் வெடித்து சிதறிய விபத்தில், அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மலேசிய பிரதமருடைய மகளின் திருமண நிகழ்வுக்கு சென்றுவிட்டு திரும்பிய போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மலேசிய நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் மகளின் திருமணம், பெகான் என்ற இடத்தில் நேற்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் மலேசியாவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்து, அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜமாலுதீன் ஜோர்ஜிஸ், பிரதமரின் உதவியாளர் உள்ளிட்ட 6 பேர் ஹெலிகொப்டரில் திரும்பினர்.
மலேசியாவின் தெற்கு மாகாணமான செமன்யீக் பகுதியில் ஹெலிகொப்டர் சென்று கொண்டிருந்த போ அதிகாலை 4.55 மணியளவில் ஹெலிகொப்டரில் திடீரென தீபிடித்தது.
பின்னர் வெடித்து சிதறிய விமானம் அடர்ந்த காட்டு பகுதியில் விழுந்தது. இதில் முன்னாள் தூதர் ஜமாலுதீன் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து மீட்பு படையினர் விரைந்து சென்று உடல்களை மீட்டனர். இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் உத்தரவிட்டுள்ளார்.
திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய முக்கிய பிரமுகர்கள், ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த தினமாக பெரிய வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அனுஸ்டித்தனர்.
மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக் கொண்ட இயேசு கிறிஸ்து பின்னர் ஞாயிறு அன்று உயிர்தெழுந்தார்.
இதனை நினைவுகூரும் முகமாக உயிர்த்த ஞாயிறு நிகழ்வுகள் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இன் நிகழ்வுகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்தியுடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர் உடை மாற்றும் அறையில் ரகசிய கமரா இருந்ததாக புகார் எழுந்த நிலையில், ஆடைகளை வாங்கும்போது, அவற்றை வீட்டில் சென்று அணிந்து பார்க்க வேண்டும் என்று குஷ்பு கூறியுள்ளார்.
கோவாவில் மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சென்ற பிரபல ஆயத்த ஆடை கடை ஒன்றில், உடை மாற்றும் அறையில் ரகசிய கமரா இருந்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில் இது குறித்து இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், இது மாதிரியான அச்சத்தின் காரணமாக, நான் ஒருபோதும் கடைகளில் உள்ள அறைகளில் உடைகளை முயற்சித்துப் பார்ப்பதில்லை.
ஆனால், பெரும்பாலானவர்கள் கடைகளிலேயே உடைகளை முயற்சித்துப் பார்க்கும் நிலையில், இந்த மாதிரியான சம்பவம் வெளிவந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
உடைகளை வாங்குபவர்கள், வீட்டிற்கு வந்து அணிந்து பார்த்து, சரியில்லையென்றால் திரும்பக் கொடுப்பதே பாதுகாப்பானதாக இருக்கும்.
ஆனால், ஒரு பெண் கடைகளில் தவறான இடங்களில் இம்மாதிரி கமராக்கள் இருப்பதாக நினைத்தால், உடனடியாக காவல்துறையை அணுக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கல்முனைக் கடற்கரைப் பள்ளிவாசல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளச் சென்றிருந்த சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்த 7 வயதான இந்தச் சிறுமி சில தினங்களுக்கு முன் தனது பாட்டியுடன் கல்முனைக் கடற்கரைப் பள்ளிவாசல் வருடாந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த சமயம் காணாமல் போயுள்ளார்.
உடனடியாக அங்கு நின்றவர்களின் உதவியுடன் சிறுமியைத் தேடிய பொழுது கடற்கரைப் பள்ளி சூழலில் மையத்துப் பிட்டி பஸ்கள் நிறுத்துமிட மறைவில் குறித்த சிறுமி இளைஞனால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைக் கண்டு மக்கள் சிறுமியைக் காப்பாற்றியதோடு சம்பந்தப்பட நபரையும் பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
சிறுமி தற்சமயம் கல்முனை அஷ்ரப் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வாழைச்சேனை புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த நபர் பொலிஸாரின் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுமியின் தாய் சிறுமியை பாட்டியின் பொறுப்பில் விட்டு விட்டு மத்திய கிழக்கில் வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வவுனியா, புளியங்குளம், ஏ 9 வீதியில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா, புளியங்குளம் சந்திக்கு அண்மையில் ஏ 9 வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு பயணித்த மோட்டர் சைக்கிள் வீதியில் நின்ற மாட்டுடன் மோதியதில் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் காயமடைந்து புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, வவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை 6 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த சிறிய டொல்பின் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் இருந்த மதகுடன் மோதி சுமார் 10 மீற்றர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவை தொடர்பான விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலய மஹோற்சவத்தின்ஒன்பதாவது நாளான நேற்று முன்தினம் 03.04.2015 வியாழன் காலையில் தேர்த் திருவிழா இடம்பெற்றது .
காலையில் கும்ப பூசை மூலஸ்தான பூசை மற்றும் கொடிதம்ப பூசையை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை என்பன ஆலய பிரதம குருவும் மகோற்சவகுருவுமாகிய சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. தொடர்ந்து அம்பாள் ஒன்பதுமணியளவில் தேரில் ஆரோகணித்து ஒன்பதரை மணியளவில் உலாவந்த நிகழ்வு இடம்பெற்றது .
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக மகளிர் அமைப்பினர் இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டமைப்பினரால் பெண்கள் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் வெளிவருவதாகக் கூறியே இவ்வார்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வார்ப்பாட்டத்தில் த.தே.கூ. தலைவர் இரா சம்பந்தன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
தந்தை செல்வா நினைவு சதுக்கத்தின் அருகாமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், மார்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் அலுவலகம் வரை சென்றது.
அலுவலகத்திற்கு முன்னால் இரு தலைவர்களின் உருவபொம்மைகளும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு அலுவலக முன்றலில் எரியூட்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மாவை சேனாதிராசாவே தமிழ் இளைஞர்கள், விதவைப் பெண்களை மறுமணம் செய்ய வேண்டும் என்றீரே! உமக்கு பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இவ்வாறு செய்து முன்னுதாரணமாக நடந்து கொள்வீரா?’ பெண்களாய் பிறந்தது எமது சகோதரிகளின் குற்றமா? உரிமைகளோடு உங்களை நம்பி உதவி கேட்டு வருபவர்களுக்கு வன்புணர்வுதான் உதவியா? போன்ற பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.
பாடசாலைகள் ஊடாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 50 வீதமானோர் கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களில் சித்தியடையவில்லை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலைகள் ஊடாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 602 பேர் கணிதப் பாடத்தில் சித்தியடைந்துள்ளதுடன், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 198 பேர் அந்த பாடத்தில் சித்தியடையவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.
அத்துடன் ஆங்கிலத்தில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சித்தியடையவில்லை.
ஆங்கிலப் பாடத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 701 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 943 மாணவர்கள் சித்தியடையவில்லை.
பாடசாலைகள் ஊடாக முதல் முறையாக சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய 2 லட்சத்து 57 ஆயிரத்து 322 மாணவர்களில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 612 மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.
பாடசாலையில் 8 ஆம் வகுப்பில் படிக்கும் போது பார்வையிழந்த மாணவன் ஒருவர் ப்ரெய்லி எழுத்து மூலம் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி சாதனை படைத்துள்ளார்.
கடுவலை கொத்தலாவல கல்லூரியில் 8 ஆம் வகுப்பில் படித்து கொண்டிருந்த ஹர்ச நிலுபுல் நயனப்பிரிய என்ற மாணவன் திடீரென நரம்பு வியாதி காரணமாக பார்வை இழந்தார். இதனையடுத்து பெற்றோர் மாணவனை பார்வையற்றோர் படிக்கும் பாடசாலையில் சேர்த்துள்ளனர்.
இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் ப்பிரெய்லி எழுத்து முறையில் தேர்வு எழுதிய அவர், வரலாற்று பாடத்தில் பீ. சித்தியும், சிங்களம், சமயம், விவசாயம், சமூக கல்வி ஆகியவற்றில் சீ சித்தியும் சங்கீதம் மற்றும் கணிதம் ஆகியவற்றிலும் சித்தி பெற்று உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளார்.
8 வருடங்கள் வரை சாதாரண சிங்கள எழுத்தில் படித்து வந்த அவர், பார்வையிழந்த பின்னர் இரண்டு வருடங்களில் ப்பிரெய்லி எழுத்து முறையை கற்றுக்கொண்டு பரீட்சையில் சித்தியடைந்திருப்பது மிகப் பெரிய சாதனை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மகனின் திறமை குறித்து ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ள அவரது தாயான நிலுகா சுபாஷினி,
எனது மகனுக்கு சிறு வயதில் நன்றாக பார்வை இருந்தது. பார்வையில் சிறிய குறைப்பாடு இருந்தது. கண்ணாடி அணிந்தால், சரியாகி விடும் என மருத்துவர்கள் கூறினார்கள்.
இடது கண் தெரியவில்லை என 8 ஆம் வகுப்பு படிக்கும் போது மகன் கூறினார். நாங்கள் அவரை கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றோம். இடது கண்ணில் சவ்வு கழன்று இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்.
நரம்பு கோளாறு நோய் என்பதால் சவ்வை பொருத்த முடியாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து மகனை நாங்கள் இரத்மலானை பார்வையற்றோர் பாடசாலையில் சேர்த்தோம். மகனின் இடது கண் முற்றாக பார்வையிழந்து விட்டது. வலது கண்ணில் சற்று பார்வை இருக்கிறது. வலது கண்ணிலும் எதிர்காலத்தில் பார்வை இழந்து போகும் என மருத்துவர்கள் கூறினர் என்றார்.
பரீட்சையில் சித்தியடைந்தது குறித்து தெரிவித்த ஹர்ச நிலுபுல், நான் மிகவும் ஆசையோடு படிக்கின்றேன். . இரண்டு கண்களில் பார்வையில்லை என்ற போதிலும் அதனை கற்பதற்கு தடையாக கருதவில்லை.
நான் விளையாட்டில் வெற்றி பெற்றிருக்கின்றேன். செஸ் போட்டியில் கிண்ணம் வென்றுள்ளேன். கண் தெரியாவிட்டாலும் நான் இடைநடுவில் நிறுத்த போவதில்லை. நன்றாக படிக்க வேண்டும்.
நான் படிப்பதற்கு மடிக் கணனியும் ப்பிரொய்லி தட்டச்சு கருவியும் கிடைத்தது பெரிய புண்ணியம் என்றார்.
வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலய மஹோற்சவத்தின்எட்டாவது நாளான நேற்று முன்தினம் 02.04.2015 வியாழன் இரவு சப்பற திருவிழா இடம்பெற்றது .
மாலையில் யாகபூசை மூலஸ்தான பூசை மற்றும் கொடிதம்ப பூசையை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை என்பன ஆலய பிரதம குருவும் மகோற்சவகுருவுமாகிய சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. அத்துடன் கலைநிகழ்வுகளும் இடம்பெற்று இறுதியாக அம்பாள் அழகிய சப்பரத்தில் திருவீதி உலா வந்தாள்.
தமிழகத்தின் தஞ்சாவூர் ரயிலடியில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உருவபொம்மையை எரித்ததாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த 13 பேரை பொலிஸர் நேற்று கைது செய்துள்ளனர்.
இதில், எல்லை தாண்டி மீன் பிடிக்கத் தமிழக மீனவர்களை அனுமதிக்க மாட்டோம். எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்கள் படகுகளுடன் கைது செய்யப்படுவர் எனக் கூறிய இலங்கை ஜனாதிபதியைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர், இலங்கை ஜனாதிபதியின் உருவபொம்மைக்குத் தீ வைத்தனர் என தமிழக ஊடகமான தினமணி கூறியுள்ளது.
இதைப் பார்த்த பொலிஸார் தீயை அணைத்தனர். இதுதொடர்பாக 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அந்த ஊடகச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நிமல் சிறிபால டி சில்வா தொடர்ந்தும் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர். அதேபோல தினேஷ் குணவர்த்தனவால் எதிர்க்கட்சி தலைவராக முடியாது.
ஒரே கட்சி ஆளும் தரப்பாகவும் எதிர்த்தரப்பாகவும் இருந்து செயற்பட அனுமதியில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியை உருவாக்க நாம் தயார் , சபாநாயகரிடமும் எமது விருப்பத்தை முன்வைத்துள்ளதாக அவர் கூறினார்.
பிரதான இரு கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில் பாரளுமன்றத்தின் எதிர்க்கட்சி யார் என்ற முரண்பாடு ஏற்பட்டுள்ள சந்தர்ப்பதில் இது தொடர்பாக வினவியபோதே அனுரகுமார திசாநாயக மேற்படி தெரிவித்தார் , அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தேசிய அரசாங்கத்தை சொந்தம் கொண்டாடுகின்றன. இரு கட்சிகளின் அங்கத்தவர்களும் அமைச்சு பதவிகளை வகிக்கின்றனர்.
ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஒரு சிலர் தம்மை எதிர்க்கட்சியாக அடையாளப்படுத்திக்கொண்டு விவாதிக்கின்றனர் , பாராளுமன்றத்தில் நான்கு கட்சிகளே அங்கம் வகிக்கின்றன, ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரு அரசாங்கமாக இருக்கையில் அதே கட்சி எவ்வாறு எதிர்க்கட்சியாக முடியும் , பாராளுமன்றத்தினை வேடிக்கையாகும் வேலையினை இவர்கள் செய்கின்றனர் .
அதேபோல் நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சி தலைவராக வர முடியாது , அவருடன் இருந்த பலர் இன்று ஆளும் தரப்பாக மாறி அமைச்சு பதவிகளையும் எடுத்துள்ளனர் , இந்த நிலைமையில் தொடர்ந்தும் அவரை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க முடியாது , நிமல் சிறிபால டி சில்வாக்கே இந்த நிலைமை எனின் தினேஷ் குணவர்தனவை எவ்வாறு எதிர்க்கட்சி தலைவராக்குவது, இவர்கள் நான்கு பேரை இணைத்துக்கொண்டு தனிக்கட்சியாக காட்டிக்கொண்டாலும் இவர்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அங்கத்தவர்களாகவே உள்ளனர்.
எனவே பாராளுமன்ற விதிமுறைகளை அனைவரும் பின்பற்றவேண்டும், பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பு அல்லாத இரண்டாவது பெரும்பான்மை கட்சி யார் என்பதை அவதானித்து அவர்களை எதிர்க்கட்சியாக தெரிவு செய்வதே வழக்கமானது. ஆனால் இன்று பெரும்பானை கட்சிகள் இரண்டுமே ஆளும் கட்சியாக இருப்பதனால் எதிர்க்கட்சிக்கான தகுதி தமிழ்தேசிய கூட்டமைப்பினர்க்கே உள்ளது.
எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியாக நியமிக்க வேண்டும். அதேபோல் நாம் பிரதிநிதித்துவப் படுத்தும் ஜனநாயக கூட்டணியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி அந்தஸ்தினை பெறவேண்டும் என்பதே எமதும் நிலைப்பாடு.
எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது இரு கட்சிகளின் இணைக்கப் பாட்டின் அடிப்பையில் தெரிவுசெய்ய முடியும் ஆனால் உண்மையான எதிர்க்கட்சியாக நாம் நியமிக்கப்படவேண்டியதே இப்போதைய அவசியமாகும். எனவே இவ் விடயத்தினை நாம் சபாநாயகரிடம் முன்வைத்துள்ளோம், பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைய சரியான முறையில் எதிர்க்கட்சியை நியமிக்க வேண்டும். இல்லையேல் அரசாங்கத்தின் தான்தோறித்தனமான போக்கினை கட்டுப்படுத்த முடியாது போய்விடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த தினமாக பெரிய வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக நேற்று வெள்ளிக்கிழமை அனுஸ்டித்தனர்.
மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக் கொண்ட இயேசு கிறிஸ்துவின் புனிதவெள்ளி நிகழ்வுகள் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
புனித வெள்ளி திருப்பலி ஆலய பங்குத் தந்தை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சிலுவை ஆராதனை இடம்பெற்றது.
குறித்த சடங்குகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்தியுடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தின் தீர்த்த உற்சவம்மகோற்சவ குரு சிவஸ்ரீ நடராஜ ராஜாராம் குருக்கள் தலைமையில் நேற்று (03/04/2015வெள்ளிகிழமைகிழமை ) இடம்பெற்றது.
அதிகாலை ஐந்து மணிக்கு அபிசெகங்கள்ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை ஆறு நாற்பந்தைந்து மணிக்கு தம்ப பூஜை இடம்பெற்றது.
தொடர்ந்து பங்குனி உத்தர தீமிதிப்பு உற்சவத்தை முன்னிட்டு ஆலயத்திலிருந்து கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் கோவில் நோக்கி பாற்குட பவனி இடம்பெற்றது.
தொடர்ந்து எட்டு மணிக்கு பொற்சுண்ணம் இடித்து மூலமூர்த்திகளுக்கு அபிசேகங்கள் இடம்பெற்று ஒன்பது மணியளவில் வசந்த மண்டபபூஜை இடம்பெற்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் விநாயகர் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் ஒன்பதரை மணியளவில் அமிர்தவர்ஷினி தீர்த்த கரையில் எழுந்தருளி தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
தொடர்ந்து தீர்த்த கரையில் அர்ச்சனை இடம்பெற்று இடபவாகனத்தில் வெளிவீதி உலாவந்து யாகம் கலைக்கப்பெற்று வழமையான பூசையுடன் பகல் உற்சவம் நிறைவு பெற்றது .
மீண்டும் மாலையில் திருஊஞ்சல் இடம்பெற்று பெற்று எட்டரை மணியளவில் கொடியிறக்கமும் இடம்பெற்று இரவு ஒன்பது மணியளவில்வெளி வீதிஉலா இடம்பெற்று உற்சவம் நிறைவு பெற்றது.
2014ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய கற்பகபுரம் கிராமத்தைச்சேர்ந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.
கற்பகபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தினரால் வருடாவருடம் முன்னெடுக்கப்படும் இவ்விழா நேற்று (03.04) நடத்தப்பட்டது.
ஆலய தலைவர் திரு.தங்கராஜா தலைமையில் நடத்தப்பட்ட இவ்விழாவில், 2014ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய பதினான்கு மாணவர்கள் தலா இரண்டாயிரம் ரூபாய் நிதி உதவியும், கற்றல் உபகரணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கற்பகபுரம் கிராமத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்கு முதல் தடைவையாக முதல் மாணவியாக தெரிவாகியுள்ள செல்வி சரண்யா கோபாலகிருஸ்ணன் எனும் மாணவிக்கு கௌரவிப்பும் ஊக்குவிப்புத்தொகையும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் கோவில் பிரதமகுரு கந்தசாமி குருக்கள் ஐயா, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர்களான பரமேஸ்வரன் பாபு, தர்மலிங்கம், ஆறுமுகம் ஸ்ரோர்ஸ் உரிமையாளர், ஆசிரியர் நித்தியானந்தன், ஆலய நிர்வாகசபை உறுப்பினர்கள், மாணவர்கள், கிராம மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய விருந்தினர்கள் அனைவரும், கற்பகபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் சமுக செயல்பாடுகளை பாராட்டிப்பேசியதுடன், ஏனைய ஆலயங்களும் ஏழை எளிய மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
நியூசிலாந்து கடலில் விழுந்து தத்தளித்த போது, இளம் பெண்களால் காப்பாற்றப்பட்ட தமிழ் மாணவர், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நியூசிலாந்து நாட்டில் பூபேஷ் பழனி (26) என்ற தமிழ் மாணவர் படித்து வந்தார். கடந்த திங்கட்கிழமை அவர், நியூசிலாந்தில் ஈஸ்ட்போர்ன் என்ற இடத்தில் உள்ள கடலில் விழுந்து தத்தளித்தார்.
அப்போது அங்கு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த 15 வயதான கெல்லி மெக்காவ் மற்றும் 16 வயதான பாய்கே ஓல்ட்ஸ் ஆகிய ஒன்றுவிட்ட சகோதரிகள் அவரது அலறல் சத்தத்தை கேட்டனர்.
உடனே, பாய்கே ஓல்ட்ஸ் துணிச்சலாக கடலில் குதித்தார். அவருக்கு கரையில் இருந்து இரண்டு வாலிபர்கள் டோர்ச் லைட் அடித்தபடி வழி காட்டினர்.
பாய்கே ஓல்ட்ஸ், மிகவும் ஆழத்தில் நீந்திச் சென்று, பழனியை கண்டுபிடித்தார். அப்போது, பழனி நன்றாக மூழ்கிய நிலையில் கிடந்தார். அவரை பாய்கே மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.
கரையில், பழனிக்கு கெல்லி மெக்காவ் முதலுதவி சிகிச்சை செய்தார். பின்னர், பழனியை வெலிங்டனில் உள்ள ஒரு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பழனி, 5 நாட்கள் கடந்த நிலையில், நேற்று மரணம் அடைந்தார். அப்போது, நண்பர்கள் உடன் இருந்தனர்.
5 நாட்களாக நண்பர்கள் செய்த உதவிக்காக, அவர்களுக்கு பழனியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
பழனி காப்பாற்றப்பட்டு வைத்தியாலையில் சேர்க்கப்பட்ட போது, முதலில் அவரைப் பற்றி எதுவும் தெரியவில்லை. ஆனால், செய்தி இணையத்தளங்களில் அவரது புகைப்படத்தை பார்த்து விட்டு, ஒருவர் அடையாளம் சொன்னதால், அவரைப் பற்றிய விவரங்கள் தெரிய வந்தன.