மஹாபொல மாணவர் புலமைப் பரிசில் தொகையை 2500 ரூபாவில் இருந்து 5000 ரூபாவரை அதிகரிக்கும் திட்டம் ஜூன் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் மஹாபொல புலமைப் பரிசில் பெறாத மாணவர்களுக்கான 2000 ரூபா கொடுப்பனவை 2500 ரூபாவாக அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 75,000 மாணவர்கள் நன்மை அடைவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோழிக்கறி உண்பதில் சிக்காகோ நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
அரை மணி நேரத்தில் அதிக கோழிக்கறி துண்டுகள் (இறகுப்பகுதி) உண்ணும் போட்டி அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 23ஆவது ஆண்டாக இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் சிக்காகோவைச் சேர்ந்த தொழில்முறை சாப்பாட்டு போட்டியாளரான பெட்ரிக் பெர்டோலெட்டியும் கலந்து கொண்டார்.
போட்டியில் இவர் நிர்ணயிக்கப்பட்ட அரை மணி நேரத்தில் 444 கறித்துண்டுகளை விழுங்கி விட்டார். இறுதி 2 நிமிடங்களில் மாத்திரம் இவர் 50 துண்டுகளை விழுங்கினார். அவர் உண்ட 444 கறித்துண்டுகள் என்பது புதிய சாதனையாக மாறியுள்ளது.
440 கறித்துண்டுகள் உண்டதே இதுவரை சாதனையாக இருந்தது. இந்த சாதனையை மொல்லி ஸ்குய்லர் என்பவர் படைத்திருந்தார்.
இந்நிலையில் மொல்லியின் சாதனையை முறியடித்தது குறித்து பெட்ரிக் கூறுகையில், ‘போட்டி முடிந்த போது சாப்பிட்டே எனக்கு வியர்த்து விட்டது. எனினும் அப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் அதற்கு மேல் ஒரு துண்டு கூட நான் உண்ண வேண்டாம் என எனக்கு தெரியும்’ என்றார்.
இம்முறை உலகக் கிண்ணம் எங்களுக்குதான் என்பதில் சந்தேகமேயில்லை, எங்களை யாராலும் தடுக்க முடியாது, என தென்னாபிரிக்க அணித் தலைவர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள உலகக் கிண்ண முதலாவது அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து-தென்னாபிரிக்க அணிகள் பலப் பரீட்சை நடத்த உள்ளன.
இதற்காக இரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது பத்திரிகையாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே தென்னாபிரிக்க அணித் தலைவர் டி வில்லியர்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தென்னாபிரிக்க அணி தற்போது மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளது. காலிறுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்றதில்லை என்ற அவப்பெயரை இந்த உலகக் கிண்ண போட்டியில் நீக்கியுள்ளோம்.
தென்னாபிரிக்க அணி தனது முழுப் பலத்தோடு விளையாடினால், அதை எந்த அணியாலும் தடுக்க முடியாது.
உலகக் கிண்ணத் தொடர்களில் மட்டும் தென்னாபிரிக்க அணி சிறப்பாக ஆடுவதில்லை என்ற அவப்பெயர் இருந்தது. அத்தனை உணர்ச்சிவசங்களுக்கு மத்தியிலும் மோதி, போராடி வெற்றி பெற்றுள்ளோம்.
பழைய கதைகள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அன்றைய போட்டியில் எப்படி விளையாடுகிறோமோ அதைப் பொறுத்துதான் வெற்றி, தோல்வி அமையும் என்பதில் மட்டுமே எனக்கு நம்பிக்கையுள்ளது.
உலகக் கிண்ண தொடர்களில் தென்னாபிரிக்கா இதற்கு முன்பு பல சோதனைகளை சந்தித்துள்ளது. ஆனால் இம்முறை நாம் புத்துணர்ச்சியுடன் உள்ளோம். நியூசிலாந்துக்கு எதிராக நாளை இடம்பெறவுள்ள போட்டியை ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளோம்.
நியூசிலாந்து பந்து வீச்சாளர் அடம் மில்னே காயத்தால் விலகியிருப்பது அவர்களுக்கு பெரும் இழப்புதான். ஆனால், என்னைப் பொறுத்தவரை, பிற அணிகளின் நிறை, குறைகளை அதிகமாக அலசி ஆராய்ந்து கொண்டிருப்பதில் விருப்பமில்லை.
எங்கள் அணி எப்படி விளையாடுகிறது என்பது மட்டுமே எனக்கு முக்கியம். தென்னாபிரிக்க அணி சிறப்பாக ஆடினால், கண்டிப்பாக வெற்றி எங்களுக்குதான் கிடைக்கும்.
இதேவேளை, காலிறுதியில் அப்படி ஒரு அபார வெற்றி பெற்ற பிறகு, அணியை மாற்றம் செய்வது கஷ்டமான காரியம்தான். ஆனாலும், சில மாற்றங்கள் அணியில் செய்யப்படலாம் என டிவில்லியர்ஸ் மேலும் தெரிவித்தார்.
ஐ.நா அனுசரணையில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வவுனியாவில் இன்று(23.03) ஆர்ப்பாட்டமொன்று வடக்கு கிழக்கு மாகாண சிவில் அமைப்புக்களின் ஒன்றியத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இதன்போது காணாமல்போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நம்பிக்கை இல்லை எனவும் சர்வதேச விசாரணையே தேவையெனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பின்னர் மன்னார் வீதி வழியாக யாழ் வீதியை வந்தடைந்து வவுனியா மாவட்ட செயலகத்தில் மகஜர் கையளிப்புடன் நிறைவடைந்திருந்தது.
இதன்போது கொலைகாரர்களிடமே நியாயமா?, ஏமாற்றும் உள்ளக விசாரணை வேண்டாம் ஐ.நா. அனுசரணையிலான விசாரணைக்குழுவே வேண்டும், கொலைகாரனிடம் நீதியை எதிர்பார்ப்பதா?,ஐ.நாவே இனப்பிரச்சனையில் தலையிடு, உள்ளக விசாரணை ஸ்ரீலங்கா அரசின் ஏமாற்று நாடகம் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.
இந் நிலையில் மாவட்ட செயலகத்திற்கு சென்ற ஆர்ப்பாட்டகாரர்கள் வவுனியா அரசாங்க அதிபரிடம் மகஜரை கையளித்திருந்தனர்.
மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர இவ்விடயம் தொடர்பாக உரிய இடத்திற்கு தெரியப்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.
இதன்போது காணாமல் போனோரின் உறவுகளுடன் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் ரி.தேவராஜா, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் வன்னி அமைப்பாளர் எஸ். கோவிந்தராஜ், அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஓமந்தை இணைப்பாளர் திவாகரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் மாபெரும் இரத்ததானம் முகாம் நேற்று முன்தினம் (21.03) காலை 09.00 மணி தொடக்கம் 12.30 மணிவரை நடைபெற்றது.
ஓமந்தை வாழ் இளைஞர்களின் பூரண ஒத்துழைப்பிலும் பொது மக்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் பங்களிப்பில் வெற்றிகரமாக இவ் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இவ் இரத்ததான நிகழ்விற்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவுமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியா வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர், தாதியர்கள், ஊழியர்கள், ஓமந்தை கிராம சேவையாளர் செல்வி. அனுசியா, வவுனியா மாவட்ட தேசிய இளைஞர் மன்றத்தின் தலைவர் அமுதவாணன், ஓமந்தை மத்திய கல்லூரி ஆரியர்களான திரு.சந்திரமோகன், திரு.தர்ஷன், திரு.கஞ்சுதன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர்களில் ஒருவரான முத்தையா கண்ணதாசன்,
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன், செயலாளர் ஸ்ரீ.கேசவன்,உப செயலாளர் கிருஷ்ணபிரபு பொருளாளர் த.நிகேதன், ஊடக இணைப்பாளர் வ.பிரதீபன், கழகத்தின் உறுப்பினர்களான மனோஜன், கஜீபன், முகுந்தன், நிசோகரன், விஷ்ணுதாசன், சுஜீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரட்டை குடியுரிமை பெற்றுள்ளவர்களுக்கு இன்று தொடக்கம் புதிய நடைமுறை செயற்படுத்தப்படுவதாக பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நான்கு வருடங்களுக்கு பின்னர் இன்று முதல் இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை குடியுரிமைக்காக இதுவரை சுமார் 300 பொதுமக்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் இவர்களின் விண்ணப்பங்களும் புதிய விண்ணப்பங்களுடன் பரிசீலிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களின்போது வயது வந்தவர்களுக்கு 250, 000 ரூபா அறிவிடப்படும் என்றும் முன்னர் இது 5 இலட்சமாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
22 வயதுக்கு குறைந்தவர்களுக்கு 50ஆயிரம் ரூபா அறிவிடப்படவுள்ளதுடன், இரட்டை குடியுரிமைக்கான தகுதிகள் தொடர்பான விபரங்கள் குடிவரவு, குடியகல்வு திணைக்கள இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரட்டை குடியுரிமை பெற்றுள்ள சுமார் 2000 பேர் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெறுவதாகவும் இதில் எவரேனும் குற்றமுள்ளவராக இனங்காணப்பட்டால் அவரின் இரட்டைக் குடியுரிமை ரத்துச் செய்யப்படும் என்று அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் லீ க்வான் யூ, தனது 91 வயதில் இன்று அதிகாலை சிங்கப்பூர் பொது வைத்தியசாலையில் காலமானார்.
நவீன சிங்கப்பூரை உருவாக்கி, பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்ற நாடாக வளர்ச்சி பெற செய்த சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ க்வான் யூ, நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
லீ க்வான் யூ, 31 ஆண்டுகள் பிரதமராக இருந்து சிங்கப்பூரை வளர்ச்சியாக்கி காட்டியவர். அவரது மறைவு, ஒரு வார துக்க தினமாக அனுசரிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அவரது மறைவுக்கு ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கீ-மூன், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் தமது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
லீ க்வான் யூ, செப்டம்பர் 16ஆம் திகதி 1923 இல் சிங்கப்பூரில் வசதியான சீனக் குடும்பத்தில் பிறந்தார்.
இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் ,1950 இல், கேம்ப்ரிட்ஜ் பிட்ஸ் வில்லியம் கல்லூரில் சட்டம் பயின்றார் . 1954 இல் மக்கள் செயல் கட்சியின் பிரிவில் ஜெனரல் ஆனார்.
1955 இல் சிங்கப்பூரின் புதிய அரசியல் சட்டம் அமலாக்கத்துக்கு காரணமாக இருந்தார்.
அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை , நியமன உறுப்பினரையும் சேர்த்து 32 ஆக உயர இவரே காரணமாக இருந்தார்.
மலேசியாவிலிருந்து திடீரென பிரிந்தபோது , கண்ணீரோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு , தனது தொலை நோக்குச் சிந்தனையால் நவீன சிங்கப்பூரை உருவாக்கினார்.
1959 முதல் தொடர்ந்து 1990 வரை, உலகின் நீண்ட காலப் பிரதமர் என்ற வரலாற்றைப் பெற்றார்.
12 நவம்பர் 1954 இல் மக்கள் செயல் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அக் கட்சியே ஆட்சி புரிந்து வருகிறது.
1992 வரை அக் கட்சியின் செயலாளர் ஜெனரலாக இருந்தார்.
1959ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் திகதி லீ. முதல் பிரதமர் ஆனார். 1963 இல் மலேசிய கூட்டமைப்பில் இணைய பாடுபட்டார்.
1965 ஆகஸ்ட் 7 இல் மலேசியாவிலிருந்து பிரிய ஒப்பந்தம் ஏற்படக் காரணமாக இருந்தார். அதன் பிறகு சுயாட்சி பெற்ற சுதந்திரக் குடியரசு எனப் பிரகடனப் படுத்தினார்.
வெளிநாட்டு மூலதனத்தைப் பெருக்க முற்பட்டார். 1968, 1972, 1976, 1980 ஆகிய தேர்தலில் இவரது மக்கள் செயல் கட்சி மகத்தான வெற்றி பெற்றது. இன்று வரை இக் கட்சியே ஆட்சியில் உள்ளது.
இவருக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் லீ சியான் லூங் தான் இன்றைய பிரதமர். இவரது ஆட்சிக் காலத்தில் 18 வயது நிரம்பிய ஆண்கள் அனைவருக்கும் இராணுவப் பயிற்சி கட்டாயமாக்கப் பட்டது.
இதனால் , இன்று சிறந்த இராணுவப் படை, பொலிஸ் படை, குடிமைத் தற்காப்புப் படையோடு சிங்கப்பூர் திகழ்கிறது. தனி நபர் வருமானத்திலும் முதல் நாடாக விளங்குகிறது.
வவுனியா வேப்பங்குளம் வாணி அருணோதயா சர்வதேச முன்பள்ளியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி அதிபர் திரு.எஸ்.தயாளன் தலைமையில் 21.03.2015 அன்று மன்னார் வீதி, வேப்பங்குளத்தில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அகளங்கன் மற்றும் ரோய் ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .அது தொடர்பான படங்கள் வவுனியா நெற் வாசகர்களுக்காக
சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அகிலாண்டேஸ்வரம் திருத்தலத்தின் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரருக்கு மகோற்சவம் ஆரம்பமாகி நேற்று (21.03.2015) இரண்டாம் நாள் திருவிழா இடம்பெற்றது .
நேற்று காலை பத்து மணிக்கு வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் விநாயக பெருமான் மூஷிக வாகனத்திலும் உள்வீதி வெளி வீதி எழுந்தருளி செய்தனர்.
மீண்டும் மாலை நான்கரை மணியளவில் விநாயகர் யாகம் ஆரம்பமாகி ஐந்து மணிக்கு மூலஸ்தான பூஜை ஐந்தரை மணிக்கு கொடிதம்ப பூஜை தொடர்ந்து இரவு ஆறரை மணிக்கு வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் விநாயக பெருமான் மூஷிக வாகனத்திலும் உள்வீதி வெளி வீதி எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்றது. திருவிழா தொடர்பான விபரங்களுக்கு தொடர்ந்தும் வவுனியா நெற்ருடன் இணைந்திருங்கள்.
தற்போதைய காலக்கட்டத்தில் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள் மூலம் எழும் பிரச்சனைகள் அதிகமாகி வருகிறது. முகம் தெரியாத விஷமிகள் பலரும் இருக்கும் பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களில் விளையாட்டாக சிலர் பதிவேற்றும் புகைப்படங்கள் அவர்களுக்கே ஆபத்தாக முடிந்து விடுகிறது.
சமூக வலைதளங்களில், தங்களின் படங்களை பதிவு செய்துள்ள பெண்கள், வக்கிர எண்ணம் கொண்ட நபர்களால் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறிய வண்ணம் உள்ளன. இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க படங்களை பதிவேற்றம் செய்யாமல் இருப்பது சிறந்தது.
தனிமையில் ஒவ்வொரு மனிதனும் தங்களது உடல் அழகை ரசிப்பது சாதாரண விடயம்தான். முன்பு கண்ணாடியில் பார்த்தோம், இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் செல்ஃபிக்கள், வீடியோக்கள் என எடுத்து பார்ப்பது வழக்கமாகிவிட்டது.
சமூகவலைத்தளங்கள் மூலம் பெறப்படும் புகைப்படங்களானது சில ஆபாசதளத்திற்கு விற்பனை செய்யப்பட்டு மார்பிங் (Face Morphing) என்னும் தொழிநுட்பம் மூலம் ஆபாச புகைப்படமாக மாற்றப்படுகிறது.
Face Morphing என்றால் என்ன?
கணனியில் அனிமேஷன் நுட்பங்களை பயன்படுத்தி ஒரு புகைப்படத்தை படிப்படியாக முற்றிலும் மற்றொரு புகைப்படமாக மாற்றும் முறையே Face Morphing தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தில் 3 முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
Pre- process
இந்த முறையில் சில தேவையில்லாத பகுதிகள் நீக்கப்பட்டு, குறிப்பிட்ட அந்த புகைப்படமானது பட்டை தீட்டப்படுகிறது. அடுத்த முறைக்கு இந்த புகைப்படத்தை கொண்டு செல்ல சரியான அளவில் மாற்றியமைக்கப்படுகிறது.
Feature Finding
இதில் புகைப்படங்களில் உள்ள இரண்டு கண்கள் மற்றும் வாய்களின் இரு புறங்களின் ஓரங்கள் ஆகியவை சீரமைக்கப்படுகிறது. புகைப்படத்தில் உள்ள உருவம் சிரிக்காமல் இருந்தாலும், கவலையான தோற்றத்துடன் இருந்தாலும் இந்த முறை மூலம் சீரமைக்கப்படுகிறது.
Cross Dissolve
இரு வெவ்வேறு புகைப்படங்களை இணைக்கும் முக்கிய வேலை இங்கு தான் நடக்கிறது. இதன் மூலம் ஒரு புகைப்படத்தை வேறு ஒரு புகைப்படமாக எளிதாக மாற்ற முடியும்.
இந்த தொழில்நுட்பம் மூலம் நம் முகத்தை வேறு ஒரு பெண்ணின் உடலில் அப்பட்டமாக நம்மை போன்றே மார்பிங் செய்ய முடியும்.
எனவேதான் பெண்கள் தங்களது செல்ஃபிக்கள், புகைப்படங்களை முடிந்தவரை சமூக வலைத்தளங்களில் தவிர்த்து விடுங்கள் என பல சமூக அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த முதியவா் ஒருவா் காட்டுப்பகுதியில் 15 அடி பள்ளத்தில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
கினிகத்தேனை பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த தொலவத்தகே தொண் உபசேன (82) என்ற முதியவா் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தார் கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனா்.
இந்நிலையில், நேற்று சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் அவரது செருப்பு, குடை, சாரம் என்பன கினிகத்தேனை தியநில்ல பகுதியில் காணப்பட்டதையடுத்து இது தொடர்பாக மஸ்கெலியா அதிரடிப் படை உயா் அதிகாரி சி.ஐ.குலந்துங்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து அதிரடிபடையினருடன் சென்று தேடுதல் மேற்கொண்ட போது 15 அடி பள்ளத்தில் காட்டுப்பகுதியில் முதியவா் விழுந்து கிடந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வவுனியா கல்வாரிக்கான தவக்கால பாதயாத்திரை மன்னார் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் இருந்து ஆரம்பமாகி நேற்று (20.03) வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தை வந்தடைந்தது.
இவர்களுடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் இருந்து இணைந்தவர்களும் கோமரசங்குளம் கல்வாரி ஆலயம் நோக்கி பயணித்தார்கள். இதில் 2,500 இற்கு மேற்பட்ட பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
வவுனியா பெரிய நொச்சிக்குளம் (நேரியகுளம்) றோமன் கத்தோலிக்க பாடசாலையில் தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி செ.தர்மசீலன் தலைமையில் இன்று(21.03) நடைபெற்றது.
இன் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகதாரலிங்கம் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி செ.அன்ரன் சோமராஜா (வலயக் கல்விப் பணிப்பாளர்-வவுனியா தெற்கு),கே.தவரட்ணம் (பிரதிக் கல்விப் பணிப்பாளர்-கல்வி அபிவிருத்தி), வண.பிதா அற்புதராஜ் (பங்குத் தந்தை-இலுப்பைக்குளம்), க.அந்தோணிஐயா (தவிசாளர்- வெங்கலசெட்டிகுளம்), ச.ஜேசுதாசன்(கோட்டக் கல்விப் பணிப்பாளர்-வெங்கலசெட்டிகுளம்), M.P.நடராஜ் (வவுனியா கோட்டக் கல்விப் பணிப்பாளர்), S.கணேசபாதம் (உதவிக் கல்விப் பணிப்பாளர்-ஆரம்பக்கல்வி), செ.விஜயகாந்தன் (ஆசிரிய ஆலோசகர் -ஆரம்பக்கல்வி) ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இன் நிகழ்வில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கப்பட்டன.
வவுனியா நகரசபையின் சுகாதார தொண்டர்கள் இன்று (21.03) வவுனியா நகர சபை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வடமாகாணத்தில் சுகாதார தொண்டர்களுக்கான நியமனம் இன்று வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வவுனியா நகர சபையில் பணியாற்றும் ஏழு பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாத நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த 7 சுகாதார தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஏனைய சுகாதார தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, ‘ஏனைய மாகாணங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள கல்வி தகுதியை வடக்கிலும் அமுல்படுத்து’, ‘உள்ளக வெற்றிடம் உள்ளக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியிருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகதாரலிங்கம் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோருடன் கலந்துரையாடியிருந்தனர்.
அதனை தொடர்ந்து வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு செல்ல முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். அதன்போது அங்கு வந்த வட மாகாண சுகாதார அமைச்சர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதை அடுத்து இப்பிரச்சினைக்கு வெகு விரைவில் தீர்வினை பெற்றுக் கொடுப்பதாக உறுதியளித்தார்.
வடமாகாண சுகாதார திணைக்களத்தில் பணியாற்றிய சுகாதார தொண்டர்களில் 450 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(21.03) சனிக்கிழமை வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
வடமாகாண சுகாதார சுதேசிய அமைச்சின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த 450 சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகதாரலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனா்.