அயர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்த பாகிஸ்தான் : காலிறுதிப் போட்டி அட்டவணை இணைப்பு!!

PAK

உலகக் கிண்ண கிரிக்கெட் பி – பிரிவு இறுதி லீக் ஆட்டத்தின் வாழ்வா? சாவா? போட்டியில், அயர்லாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் இலகுவாக வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் காலிறுதியில் அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது. இதேவேளை காலிறுதிக்கு தகுதி பெற்ற மற்றுமொரு அணியான மேற்கிந்திய தீவுகள் காலிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.

3 லீக் போட்டிகளில் வென்றிருந்தாலும், ஓட்ட வீத அடிப்படையில் பின்னடவைச் சந்தித்ததால், காலிறுதி செல்லும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணியிடம் அயர்லாந்து இழந்தது.

இன்றை போட்டியில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 238 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 46.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

அந்த அணியில் ஆரம்பம் மிகச் சிறப்பாக இருந்தது. ஷெசாத்தும் அகமதும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 120 ஓட்டங்களைச் சேர்த்தனர். ஷெசாத் 63 ஓட்டங்களை எடுத்தார். அவரைத் தொடர்ந்து சோஹைல் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மிஸ்பா உல் ஹக்குடன் ஓட்ட குவிப்பைத் தொடர்ந்தார் அகமது.

மிஸ்பா உல் ஹக் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அகமது கடைசி வரை ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களை குவித்தார். உமர் அக்மல் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களை சேர்த்தார்.

முன்னதாக அயர்லாந்து தனது இன்னிங்ஸ்சில், 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ஓட்டங்களை சேர்த்தது. அந்த அணியின் ஆரம்ப ஆட்டக்காரர் வில்லியம் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 107 ஓட்டங்களை குவித்தார். வில்சன் 29 ஓட்டங்களை சேர்த்தார். ஏனையோர் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஓட்டங்களை சேர்க்கவில்லை.

காலிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்..

பிரிவு ஏ: நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஷ்

பிரிவு பி: இந்தியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள்

SA

சீகிரிய சுவரில் பெயரை எழுதிய யுவதியின் எதிர்காலத்தை கருதி சகலரும் மன்னிப்பு வழங்க வேண்டும் : ரஞ்சன் ராமநாயக்க!!

Ranjan

சமீபத்தில் சீகிரிய பளிங்கு சுவரில் சேதத்தை ஏற்படுத்திய குற்றித்திற்காக இரண்டு வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள பெண்ணிற்கு சகலரும் மன்னிப்பு வழங்க வேண்டுமென பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு பொறுப்பான நிறுவனங்களுடன் சம்பவம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், குறித்த பெண்ணின் எதிர்கால வாழ்க்கைக்கு ஏற்பட்டிருக்கும் கரும்புள்ளியினை நீக்க சகலரும் மன்னிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த சின்னதம்பி உதயஸ்ரீ என்ற யுவதி தன் காதலனின் பெயரை சீகிரிய பளிங்கு சுவரில் எழுதியிருந்தார்.

இதேவேளை குறித்த பெண் தவறு செய்திருப்பதாகவும் சட்டரீதியாக அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளாகவும், சட்டம் சரியான வகையில் தான் செயற்பட்டுள்ளதாகவும் வெளியுறவு விவகார பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

எனினும் மனிதாபிமானத்துடன் பார்த்தால் குறித்த பெண்ணிற்கு வழங்கப்பட்ட தண்டனை காலத்தை குறைக்குமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கணவனை அடித்தே கொன்ற மனைவி!!

wife

இரத்தினபுரி – தபுலுவத்தை பிரதேசத்தில் பெண்ணொருவர் கணவனை அடித்துக் கொன்றுள்ளார். நேற்று இரவு (14.03) இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

44 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

சந்தேகநபர் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி காலிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை தக்கவைத்து!!

WI

உலகக் கிண்ண கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காலிறுதி வாய்ப்பை பெற்றுள்ளது.

எனினும் பாகிஸ்தான் அயர்லாந்து போட்டி முடிவிலேயே மேற்கிந்திய அணியின் காலிறுதி வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும்.

14 அணிகள் இடையிலான 11ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்றுடன் லீக் சுற்று முடிவடைகிறது.

இன்று நடக்கும் கடைசி சுற்று லீக் ஆட்டம் ஒன்றில் மேற்கிந்திய தீவுகள்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் நேப்பியரில் மோதின. மேற்கிந்திய தீவுகள் அணியை பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலையிலே ஆட்டம் தொடங்கியது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சில் திணறியது.

47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 175 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியில் அதிகப்பட்சமாக நசீர் அஸிஸ் 60 ஓட்டங்களையும் ஜாவேத் 56 ஓட்டங்களையும் எடுத்தனர்.

மற்றவர்கள் யாரும் சொல்லும்படியாக ஓட்டங்களை எடுக்கவில்லை. 176 ஓட்டங்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் களமிறங்கியது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுமித் 15 ஓட்டங்களுடனும், சார்லஸ் 55 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். சாமுவேல் 9 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார். அதிரடியாக சிக்சர் அடித்து ஆட்டத்தை தொடங்கிய ரூஸ்செல் 7 ஓட்டங்களுடன் ஏமாற்றினார்.

மேற்கிந்திய தீவுகள் 30.3 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களை எடுத்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதியில் கார்டர் 50 ஓட்டங்களுடனும், ராம்டின் 33 ஓட்டங்ககளுடனும் களத்தில் இருந்தனர்.

விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டிகளில் இருந்து வெளியேறியது.

வவுனியா, மன்னார் டிப்போக்களுக்கு புதிய பஸ்கள்!!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா மற்றும் மன்னார் சாலைக்கு 15 பஸ்கள் வைபவ ரீதியாக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும் பண்டாரவினால் நேற்று சனிக்கிழமை மாலை 4.50 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் போக்குவரத்துப் பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக், வட மாகாண கடற்றொழில் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாட் பதீயூதின், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ஹுனைஸ் பாறுக், முத்தலிபு பாபா பாறுக், வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதீயூதின், வட பிராந்திய இ.போ.சா முகாமையாளர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது மன்னார்,வவுனியா சாலைகளுக்கான பஸ் வண்டிகளின் சாவிகள் வைபவரீதியாக குறித்த டிப்போக்களிடம் வழங்கப்பட்டன. இதேவேளை இன்று யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு 20 பஸ்கள் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
0 1 2bus

நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்ச்சனா சினிமாவில் நடிக்கிறார்!

Archana

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா. இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் நிறைய உள்ளது. தனியார் விழாக்களிலும் பங்கேற்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

தொலைகாட்சியின் முன்னணி தொகுப்பாளராக இருந்த போதே அர்ச்சனாவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. கதாநாயகியாக நடிக்கவும் அழைத்தனர்.

ஆனால் அவர் நடிக்க மறுத்து விட்டார். தற்போது ஷாஜி–கைலாஷ் இயக்கத்தில் ஆர்.கே. கதாநாயகனாக நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க அர்ச்சனாவை அழைத்தனர். கதையை கேட்ட அர்ச்சனாவுக்கு பிடித்து போனது. நடிக்க சம்மதித்துள்ளார்.

இதில் இனியா நாயகியாக நடிக்கிறார். அவருக்கு அக்காவாக அர்ச்சனா நடிக்கிறார். படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இனி தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் முடிவில் இருக்கிறாராம் அர்ச்சனா.

விளையாட்டு வீரரின் உடலை 30 கிமீ இழுத்துச் சென்ற ரயில் : நெஞ்சை உலுக்கும் ஓர் கோரச் சம்பவம்!!

Train

சென்னை- பெரம்பூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற விளையாட்டு வீரரின் உடல் ரயில் மோதி மேலே தூக்கியெறியப்பட்டு, இன்ஜின் முன்னுள்ள கொளுக்கியில் சிக்கியது. பெரம்பூரில் இருந்து திருவள்ளூர் வரை 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு இன்ஜினில் தொங்கியபடி உடல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை பெரம்பூர் ஜவகர் நகர், வெற்றி நகரை சேர்ந்தவர் லோகநாதன். எண்ணூர் துறைமுகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பவித்ரன் (21). இறகுப் பந்து விளையாட்டு வீரரான இவர் தபால் மூலம் பட்டப்படிப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இறகு பந்து பயிற்சிக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்ப பெரம்பூர் லோகோ அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது, சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோடு நோக்கி இரவு 10.40 மணிக்கு புறப்பட்ட ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் பவித்ரன் மீது மோதியது. படுவேகத்தில் வந்த ரயில் மோதியதால் மேலே பவித்ரன் தூக்கியெறியப்பட்டார்.

அதே வேகத்தில் கீழே வந்த அவரது உடல், ரயில் இன்ஜின் கொளுக்கியில் சிக்கிக்கொண்டது. இரவு நேரம் என்பதால் உடல் ரயில் இன்ஜினில் சிக்கி இருப்பது தெரியாமல், ரயில் வேகமாக சென்று கொண்டிருந்தது.

அப்போது இன்ஜினில் தொங்கிய பவித்ரனின் கால்கள் ரயில்வே தண்டவாளத்தில் தேய்ந்தப்படியே சென்றது. இதனால் ரயில் தண்டவாளத்தில் இருந்த கற்கள் தெரித்தது. சில கற்கள் ரயிலின் ஜன்னல் ஓரம் உட்கார்ந்திருந்த பயணிகள் மீதும், ரயில் நிலையத்தில் நின்று இருந்த பயணிகள் மீதும் சரமாரியாக பாய்ந்தது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனே ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதற்குள் பெரம்பூர் லோகோ, ஆவடி, அம்பத்தூர் உள்பட பல்வேறு ரயில் நிலையங்களை கடந்து, இன்ஜினில் தொங்கிய உடலுடன் ரயில் சென்று கொண்டிருந்த காட்சி பார்த்தவர்களின் இதயத்தை திடுக்கிட வைத்தது.

இதையடுத்து திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தி இன்ஜின் கொக்கியில் சிக்கிய பவித்திரனின் உடலை மீட்கும்படி ஓட்டுனருக்கு உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

அதன்படி 30 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து திருவள்ளூருக்கு நள்ளிரவு 11.20 மணிக்கு வந்த ரயிலை நிறுத்தினர். அதன்பிறகு இன்ஜினில் தொங்கியபடி கிடந்த பவித்ரனின் உடலை அரை மணி நேரம் போராடி ரயில்வே பொலிசார் மீட்டனர். அவரது இரு கால்களும் சிதைந்திருந்தன.

இதனால் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் அரை மணி நேரம் தாமதமாக திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு சென்றது. அதன்பிறகு பவித்ரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையறிந்து நேற்று காலை திருவள்ளூர் வந்த அவரது பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு பவித்ரனின் சடலத்தை பெற்றோரிடம் பொலிசார் ஒப்படைத்தனர். பெரம்பூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி தொங்கியபடி 30 கிலோ மீட்டர் தூரம் விளையாட்டு வீரரின் உடல் இழுத்து சென்ற சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா கிராமமட்ட அமைப்புக்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்!!(படங்கள்)

வவுனியா மாவட்டத்தின் கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு 2014ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் நேற்று (13.03) வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் வவுனியா மாவட்ட கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்விற்கு வடமாகாண சபை உறுப்பினர்களான திரு.இ.இந்திரராசா, திரு.ஜி.டி.லிங்கநாதன், திரு.ம.தியாகராஜா, வவுனியா மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தேன்மொழி மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இன் நிகழ்வில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு அலுவலக தளபாடங்கள், கதிரைகள் என்பனவும் பெண்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு தையல் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

IMG_0834IMG_0867 IMG_0868 IMG_0886 IMG_0890

வவுனியா தெற்கிலுப்பைக்குளம் கோகுலம் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா!! (படங்கள்)

வவுனியா தெற்கிலுப்பைக்குளம் கோகுலம் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று சனிக்கிழமை (14.03) காலை 9.00 மணியளவில் முன்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி.குணராஜா சிவகுமாரி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் பிற முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராம முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப் போட்டி தொடர்ந்து மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள், வினோத உடை நிகழ்ச்சி , பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது.

IMG_7709IMG_7715 IMG_7719 IMG_7738IMG_7753 IMG_7757 IMG_7772 IMG_7781 IMG_7790IMG_7797 IMG_7814 IMG_7819 IMG_7821 IMG_7826

வவுனியா மாவட்டத்தில் உளவளத்துணை டிப்ளோமா பாடநெறிக்கான நேர்முகத்தேர்வு!!

national-institute

சமூக சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் நடத்தப்படும் உளவளத்துணை டிப்ளோமா பாடநெறியினை வவுனியாவில் நடாத்தும் பொருட்டு கடந்த மாதத்தில் உளசமூக முகாமைத்துவ நிறுவனத்தினால் க.பொ.த உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தியடைந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் உளவளத்துணை பாடநெறிக்கு விண்ணப்பித்த மாணவர்களிற்கான நேர்முக தேர்வு வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட சமூகசேவைகள் திணைக்களத்தில் வருகின்ற புதன்கிழமை 18.03.2015 அன்று பி.ப 12.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக உளசமூக முகாமைத்துவ நிறுவனத்தின் இணைப்பாளர் பிரதாப் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இக்கற்கைநெறியை பயில விரும்பும் பயிலுனர்கள் தங்கள் கல்வித்தகமை சான்றிதழ் மற்றும் பிறப்புச் சான்றிதழ்களுடன் தங்கள் திறமையை உறுதி செய்யும் ஏனைய சான்றிதழ்களுடன் குறித்த நேரத்திற்கு சமூகம் தருமாறும் குறித்தபாடநெறிக்கு ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியவர்கள் குறித்த தினத்தில் சமூகம் தந்து தாங்கள் விண்ணப்பிக்க தவறியதற்கான காரணத்தை உறுதிப்படுத்துமிடத்து அவர்களும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலதிக தொடர்புகளுக்கு 0776750261 தவராசா தர்ஸன், பயிற்றுவிப்பு உத்தியோகத்தர், தேசியசமூக அபிவிருத்தி நிறுவனம் என்ற இலக்கத்திற்கோ அல்லது 0777396557 தர்மேந்திரா, சமூகசேவை உத்தியோகத்தர், பிரதேசசெயலகம், வவுனியாஎன்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்தார்.

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனமானது உளவளத்துணை துறையில் டிப்ளோமா மற்றும் உயர் டிப்ளோமா பாடநெறிகளை வழங்குகின்ற ஒரேயொரு பல்கலைக்கழகமானிய ஆணைக்குழுவின் அங்கீகாரம்பெற்ற அரச நிறுவனம் என்பதுடன் இக்கற்கை நெறிகள் இரண்டு வருட காலப்பகுதிகளை தனிதனியே உள்ளடக்கியிருப்பதுடன் இவற்றுக்காக முறையே 50500.00 ரூபா மற்றும் 65500.00 ரூபா கற்கை நெறிக் கட்டணம் அறிவிடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

பவன்கல்யாணை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா!!

Hansika

பவன்கல்யாண் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். ரசிகர் பட்டாளமும் அதிகம் உள்ளது. அரசியலிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் ஐதராபாத்தில் சமீபத்தில் ஹன்சிகா அளித்த பேட்டி ஒன்றில் மக்களுக்கு சேவை செய்வதற்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறி இருந்தார்.

பவன்கல்யாணை மனதில் வைத்து தான் அவர் இப்படி சொன்னதாக தெலுங்கு பட உலகில் செய்தி பரவியது. இதையடுத்து பேஸ்புக், டுவிட்டர்களில் ஹன்சிகாவை கண்டித்து ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்தார்கள்.

அரசியலுக்கு வருவது அவரவர் சொந்த விருப்பம். இதுபற்றி விமர்சிக்க ஹன்சிகாவுக்கு தகுதி இல்லை என்றும் கண்டித்தனர். பவன்கல்யாணை தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கிறார் என்றும் குறிப்பிட்டனர். இதனால் ஹன்சிகா அதிர்ச்சியாகியுள்ளார்.

நான் எதேச்சையாகத்தான் அப்படி கூறினேன். பவன்கல்யாணை நினைத்தோ அல்லது அவர் பெயரை கூறியோ எந்த கருத்தும் சொல்லவில்லை என்று அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

ரஜினியின் புதுப் படத்தை இயக்க 7 இயக்குனர்கள் போட்டி!!

rajnikant

ரஜினி அடுத்த படத்துக்கு தயாராகியுள்ளார். சமீபத்திய படங்களான கோச்சடையான், லிங்கா இரண்டுமே எதிர் பார்த்த வசூலை ஈட்ட வில்லை. எனவே அடுத்த படத்தின் கதையை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறார்.

புதிய படத்தை ஒஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்க போவதாக கூறப்படுகிறது.
இருவரும் நேரில் சந்தித்து பேசி இதை முடிவு செய்துள்ளனர். ஒஸ்கார் ரவிச்சந்திரன் ‘ஐ’ படத்தை அதிக பொருட்செலவில் எடுத்து உலகம் முழுவதும் வெளியிட்டார்.

எனவே ரஜினியின் படத்தையும் பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் எடுத்து பெரிய அளவில் வெளியிட முடிவு செய்துள்ளார்.

முன்னணி இயக்குனர்கள் பலரிடம் கதைகள், கேட்கப்பட்டு உள்ளதாம். விரைவில் யார் இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

தற்போது ரஜினியின் படத்தை இயக்கும் போட்டியில் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி, பி.வாசு, மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்பராஜ் ஆகிய 7 பேர் இருப்பதாக கூறப்படுகிறது.

ஷங்கர் ஏற்கனவே ரஜினியை வைத்து எந்திரன், சிவாஜி படங்களை இயக்கியுள்ளார். அவை வெற்றி பெற்றுள்ளன. மணிரத்னம் தளபதி படத்தை எடுத்தார். அதுவும் வெற்றிகரமாக ஓடியது. பி.வாசு சந்திரமுகி படத்தை இயக்கினார். அப்படம் வசூல் சாதனை படைத்தது. இயக்குனர் ஹரி ‘சிங்கம், சாமி, அய்யா உள்ளிட்ட ஹிட் படங்கள் எடுத்துள்ளார். ரஜினிக்கான கதையொன்று தன்னிடம் இருப்பதாக கூறி வருகிறார். இதுபோல் ஏ.ஆர்.முருகதாசும் ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி போன்ற ஹிட் படங்களை எடுத்து முன்னணி இயக்குனராக இருக்கிறார்.

கார்த்திக் சுப்பராஜ் ஜிகர்தண்டா படம் மூலம் பிரபலமானார். இந்த படம் ரஜினிக்கு மிகவும் பிடித்து போய் கார்த்திக் சுப்பராஜை நேரில் அழைத்து பாராட்டினார். இவர்களில் யார் ரஜினி படத்தை இயக்குவார்கள் என்பது ஓரிரு வாரத்தில் தெரியவரும் என்கின்றனர்

கணவர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் நடிகை ரதி பொலிஸில் புகார்!!

Rathi

புதிய வார்ப்புகள், முரட்டுக்காளை, உல்லாசப் பறவைகள், ஏக் துஜே கே லியே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள ரதி அக்னிஹோத்ரி தனது கணவர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பிரபல கட்டிட வடிவமைப்பாளர் அனில் விர்வானி என்பவரை கடந்த 1985ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ரதி, தெற்கு மும்பையில் உள்ள கணவரின் வீட்டில் வசித்து வருகிறார். சமீப காலமாக கணவர் தன்னை அடித்து, உதைத்து, உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தி வருவதாக மும்பை பொலிஸில் அவர் புகார் அளித்துள்ளார்.

தற்போது 51 வயதாகும் ரதியின் மகன் தனுஜ் என்பவரும் சினிமாவில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

வீதியோர சுவர்களில் சிறுநீர் கழிப்பவர்களை தடுக்க புதிய வழி!!

Paint

குடி போதையில் மிதக்கும் நபர்கள் பொதுவாக வீதியோர சுவர்களில் சிறுநீர் கழிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.

இதனை தவிர்ப்பதற்கு Hydrophobic தொழில்நுட்பத்தினைக் கொண்ட பெயின்ட் வகைகள் பெரிதும் கைகொடுக்கின்றன.

Hydrophobic தொழில்நுட்பமானது அதன் மேல் விழும் திரவங்களை உறுஞ்சி வைத்திருக்காது தெறிப்படையச் செய்கின்ற தன்மை உடையது.

இந்த வகை பெயின்டினை பயன்படுத்தி தற்போது ஜேர்மன் நகரில் அதிகளவான இடங்களில் வர்ணம் பூசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் படுகாயம்!!

Vaal

யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கலட்டி சந்திப் பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இளைஞர் ஒருவர் முச்சக்கர வண்டியில் வந்தவர்களால் துரத்தித் துரத்தி வெட்டிக் காயப்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்றிரவு 8.30 மணியளவில் இளைஞர்கள் சிலர் முச்சக்கர வண்டி ஒன்றில் துரத்திச் சென்றுள்ளனர். இவ்வாறு துரத்திச் செல்லப்பட்ட நபர் வீடு ஒன்றினுள் புகுந்துள்ளார்.

முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் வீட்டினுள் புகுந்து அந்த இளைஞரை வெட்டியுள்ளனர்.

கலட்டியைச் சேர்ந்த ப. கஜன்(21) என்பவரே இவ்வாறு வெட்டிக் காயப்படுத்தப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவிலில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை சுகன்யா!!

Suganya

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்றுக்கு சென்ற நடிகை சுகன்யா, தனது கனவில் வரும் கடவுள் சிலைகளை தோண்டி எடுக்குமாறு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே திருநந்திபுரம் கிராமத்தில் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பழமை வாய்ந்த செம்மனேரி ஆண்டவர் கோயில் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பிரபல நடிகை சுகன்யாவின் குலதெய்வம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 9.30 மணியளவில் சுகன்யா தனது உறவினர்களுடன் செம்மனேரி ஆண்டவர் கோயிலுக்கு சென்றதை அறிந்த ஊராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் பொதுமக்கள் கோயிலுக்கு விரைந்தனர்.

அப்போது பேசிய சுகன்யா, இக்கோயிலின் எதிரே உள்ள ஆலமரத்தின் அடியில், சிலைகள் மண்ணில் புதைந்துள்ளது போல் எனக்கு அடிக்கடி கனவு வருகிறது. எனவே அந்த இடத்தில் பள்ளம் தோண்டி பார்க்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து கோவிலுக்கு விரைந்த பெரியதச்சூர் துணை ஆய்வாளர் , இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் ஆகியோர் நடிகை சுகன்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்கள் சுகன்யாவிடம், வருவாய் துறையினரின் அனுமதி பெற்ற பிறகு தான் அந்த இடத்தில் பள்ளம் தோண்ட முடியும் என்றும், நீங்கள் வருவாய்துறையினரிடம் அனுமதி பெற்று வாருங்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதைகேட்ட பின்னர் நடிகை சுகன்யா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.