வட்ஸ் அப்பில் ஆபாச காட்சி : குற்றவாளியை கண்டுபிடித்த சரிதா நாயர்!!

saritha_nair

வட்ஸ் அப்பில் ஆபாச காட்சி வெளியிட்டது தொடர்பாக கேரள ஏடிஜிபி மீது சரிதா நாயர் புகார் கொடுத்துள்ளார். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சரிதாநாயரின் ஆபாச காணொளி சமீபத்தில் எங்கும் பரவியது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் சரிதாநாயர் புகார் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க பத்தனம்திட்டா பொலிசிற்கு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சரிதாநாயர் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள கேரள டிஜிபி அலுவலகம் சென்று டிஜிபி பாலசுப்பிரமணியத்திடம் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது..

தற்போது தென்மண்டல ஏடிஜிபியாக இருக்கும் பத்மகுமார் திருவனந்தபுரம் சரக ஐஜியாக இருக்கும்போது தான் என்னை கைது செய்தார். அப்போது என்னிடம் இருந்தும், எனது தாயிடம் இருந்தும் 7 கைப்பேசிகளையும், 2 மடிக்கணனிகளையும் பொலிசார் கைப்பற்றினர்.

ஆனால் இதில் 4 கைப்பேசிகளையும், ஒரு மடிக்கணனியை மட்டுமே பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மற்ற 3 கைப்பேசிகளையும், ஒரு மடிக்கணனியையும் ஏடிஜிபி தன்னிடம் வைத்துக்கொண்டார். அதில் தான் எனது ஆபாச காட்சியும் இருந்தது.

எனவே ஏடிஜிபி பத்மகுமார் தான் எனது ஆபாச காட்சிகளை வெளியிட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறப்பட்டிருக்கிறது.

4 வயது சிறுவனின் உடலில் வசிக்கும் பேய்!!

Devil

தனது நான்கு வயது மகனின் உடலில் 30 வருடங்களுக்கு முன் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க கடற்படையை சேர்ந்தவரின் ஆவி இருப்பதாக தாய் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

விர்ஜினியாவைச் சேர்ந்த மிச்செல் லூகாஸ் என்ற பெண்மணி தனது நான்கு வயது மகன் ஆண்ட்ரூ உடம்பில் 1983ம் ஆண்டு அக்டோபர் மாதம் போரில் இறந்த லூயிஸ் என்பவரது ஆவி புகுந்துள்ளதாக கருதுகிறார்.

இதுபற்றி மிச்செல் கூறுகையில், ஆண்ட்ரூ போரில் இறந்த லூயிஸ் பற்றியும், அவர் இறந்த முறையையும் நினைவுகூர்கிறான் என்றும் லூயிஸுடன் இறந்த மற்ற வீரர்களின் புகைப்படங்களையும் அவன் சரியாக அடையாளம் காண்கிறான் எனவும் தெரிவித்துள்ளார்.

1983ம் ஆண்டு அக்டோபரில் நடந்த இந்த போரில் இறந்த 241 அமெரிக்க கடற்படை வீரர்களில் லூயிஸும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆண்ட்ரூ அடிக்கடி தானாக அழுவதாகவும் ஏன் அழுகிறாய் என்று கேட்டால், என்னை ஏன் நெருப்பில் எரிந்து இறக்க அனுமதித்தாய் என்று கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மிச்செல் மேலும் கூறுகையில், என் மகன் உடலில் ஆவி புகுந்திருக்கிறது என்று நினைக்கிறேன் என்றும் அவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

உலக சாதனை படைத்த ரோகித் ஷர்மாவிற்கு குவியும் பணப்பரிசும் பாராட்டும்!!

rohit_shrma

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.

இப்போட்டியில் இந்திய வீரர் ரோகித் ஷர்மா 264 ஓட்டங்கள் அடித்து உலக சாதனை படைத்தார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த சாதனை படைத்த ரோகித் ஷர்மாவுக்கு மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் 2.64 லட்சம் ரூபா பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த மைதானத்தின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த பரிசை வழங்குவது பெருமை அளிப்பதாக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் ஈடன் கார்டன் மைதானத்தில் ரோகித் இந்த சாதனையை நிகழ்த்தியது சிறப்பு அடையாளம் என்றும் கூறியுள்ளது.

க.பொ.த சா/த மாணவர்களுக்கு தே.அ. அட்டை விநியோகிக்க விசேட திட்டம்!!

Ic

எதிர்வரும் க.பொ.த சா/த பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகிக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 22 மற்றும் 29ம் திகதிகள் விசேட தினமாக அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் தேசிய அடையாள அட்டை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் சரத்குமார தெரிவித்தார்.

பிள்ளை மழையில் நனைந்ததால் அதிபரை தாக்கிய பிரதேச சபை உப தலைவர் கைது!!

A6

தன்னுடைய பிள்ளை மழையில் நனைந்தமை தொடர்பில் கெக்கிராவ பகுதி பாடசாலை அதிபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கெக்கிராவ பிரதேச சபை உப தலைவர் அநுர பண்டார ​ஹேரத் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமய வழிபாடு ஒன்றிற்காக மாணவர்களை, அதிபர் கெக்கிராவ நகருக்கு அனுப்பியுள்ளார். அதன்போது மழை பெய்ததால் உப தலைவரின் பிள்ளை உள்ளிட்ட மாணவர்கள் நனைந்துள்ளனர்.

இது குறித்து ஆராய உப தலைவர் அதிபர் அலுவலகத்திற்கு சென்று அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தாக்குதல் வரை சென்றுள்ளது.

அதிபர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கெக்கிராவ பிரதேச சபை உப தலைவர் இன்று காலை கைது செய்யப்ப்டுள்ளார்.

கொழும்பில் இருந்து யாழிற்கு புதிய கடுகதி ரயில் சேவை ஆரம்பம்!!

Train

கொழும்பு – கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இன்றிரவு முதல் புதிய கடுகதி ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படவுள்ள புதிய கடுகதி ரயில், மறுநாள் காலை 6.55 க்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ.ஆர். ரத்னாயக்க தெரிவித்தார்.

இந்த கடுகதி ரயில், கோட்டையில் இருந்து கிளிநொச்சி வரை கடுகதி ரயிலாக பயணிக்கவுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் வரை சகல ரயில் நிலையங்களிலும் இந்த ரயில் நிறுத்தப்படும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். அதிவேகப் பாதைக்கு இன்று அடிக்கல் நாட்டும் விழா!!

highway

இலங்கையின் மிகப் பெரும் அபிவிருத்தி செயற்திட்டமான யாழ். அதிவேகப் பாதைக்கு இன்று அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ரம்புக்கனை மற்றும் கலேவெல பிரதேசங்களில் இன்றும், பொத்துஹரயில் நாளையும் மூன்று தடவைகளில் அடிக்கல் நாட்டி வைத்து, நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கான அதிவேகப் பாதை கம்பஹா , வத்தளை , எண்டேரமுல்லயில் இருந்து ஆரம்பிக்கின்றது. இங்கிருந்து கம்பஹா நகரைத் தாண்டும் வரையிலும் அதிவேகப் பாதை பறக்கும் பாதையாக நிர்மாணிக்கப்படவுள்ளது. பின்னர் முதலாவது கட்டமாக தம்புள்ளை வரை இந்தப் பாதை நிர்மாணிக்கப்படும்.

தற்போதைக்கு நான்கு வழிப் பாதையாக நிர்மாணிக்கப்படும் அதிவேகப் பாதை எதிர்காலத்தில் தேவையேற்படின் ஆறுவழிப்பாதையாக நிர்மாணிக்கப்படுவதற்கான முறையில் இதன் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் நுழைவாயில்களாக கம்பஹா, வேயன்கொடை, மீரிகம தெற்கு, மீரிகம வடக்கு, நாகலகமுவ,பொதுஹர உள்வட்டப் பாதை, தம்பொக்க, குருநாகல், ரிதீகம, மெல்சிரிபுர, கலேவெல, நாரங்வெல உள்வட்டப் பாதை, கலகெதர, ரம்புக்கன, அலதெனிய, கன்னொருவை, தம்புள்ள ஆகிய இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

முதலாம் கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவுற்ற பின்னர் யாழ்ப்பாணத்துக்கான அதிவேகப் பாதையின் இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகளை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையும், தம்புள்ளையிலிருந்து திருகோணமலை வரையும், குருநாகலையிலிருந்து கண்டி வரையும் இந்தப் பாதை விஸ்தரிக்கப்படவுள்ளது.

வவுனியாவில் இருவர் கைது!!

A6

கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவர் வவுனியா நகரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களின் போதே சந்தேகநபர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான 11 பவுண் தங்க நகைகளை அடகு வைக்க சென்றபோதே, இருவரும் சிக்கியுள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம் – கோப்பாய் மற்றும் நாவற்குழி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிகளில் சாதனை படைத்த ரோஹித் சர்மா!!

rohit

கொல்கத்தாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

மேலும் ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவர் இதற்கு முன்பு சச்சின், ஷேவாக் வரிசையில் இரட்டை சதம் அடித்து இருந்தார்.

தற்போது சர்வதேச அரங்கில் 2 முறை இரட்டை சதம் அடித்தவர் என்ற சாதனையை செய்துள்ளார். அது மட்டுமல்லாது இந்த போட்டியில் 264 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் 219 ஓட்டங்கள் எடுத்திருந்த ஷேவாக்கின் உலக சாதனையை தகர்த்துள்ளார்.

வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் இயம சங்காரா உற்சவம் -2014!!

sivan

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இன்று 14.11.2014 வெள்ளிகிழமை இயம சங்கார உற்சவம் இடம்பெற உள்ளது

பழுத்தமனத்து மார்கண்டேயனுக்காக எருதேறும் சிவபெருமான் எருமைகடாவுடையானை அதாவது இயமனை அடக்கியாளும் அற்புதமான நிகழ்வு இன்று மாலை இடம்பெறும்.

மேற்படி உற்சவத்தில் பக்த அடியார்கள் கலந்து எம்பெருமான் சிவபெருமானின் திருவருளை பெற்று கொள்ளுமாறு வேண்டிகொள்ளபடுகின்றனர்.

-கஜேந்திரன்-

153 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி!!

197971

இலங்கை இந்திய அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன்காடன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி 153 ஓட்டங்களால் வெற்றி கொண்டது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

இதன்படி களம் இறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 404 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா 264 ஓட்டங்களை பெற்றமை விசேட அம்சமாகும். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக மத்யூஸ் 2 விக்கெட்டுக்களையும் எரங்க மற்றும் குலசேகர தலா 1 விக்கெட்டினையும் பெற்றுக்கொண்டனர்.

405 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய இலங்கை அணி 43.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 251 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இலங்கை அணி சார்பாக மத்தியூஸ் 75 ஓட்டங்களையும் திரிமன்ன 59 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் குல்கர்னி 4 விக்கெட்டுக்களை பெற்றமை வி​சேட அம்சமாகும். போட்டியில் ஆட்ட நாயகனாக ரோகித் சர்மா தெரிவானார்.

தமிழக மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது பற்றி தீர்மானிக்கவில்லை : இலங்கை!!

fishermen

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து இந்திய மீனவர்கள் குறித்து இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐந்து மீனவர்களையும் மன்னிப்பு வழங்கி விடுவிக்கத் தயாராக இருப்பதாக, பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ள நிலையில் மொஹான் சமரநாயக்க இதனைத் தெரிவித்ததாக என இந்திய ஊடகச் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்கள் தரப்பில் இருந்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.

அதன்பின்னர் மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பிரபா கணேசன் மேன்முறையீடு செய்யாதிருந்தால் மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுவிக்கத் தயாராகவிருப்பதாக, ஜனாதிபதி குறிப்பிட்டார் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

எது எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து இது குறித்த உத்தியோகபூர்வ செய்திகள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!

Rajani

கதையை திருடிய குற்றத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மதுரை உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மதுரை சின்னசொக்கிகுளத்தை சேர்ந்த கே.ஆர்.ரவிரத்தினம், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், நான் பல ஆண்டுகளாக சின்னத்திரை இயக்குநராக உள்ளேன். முதல்முறையாக ‘முல்லைவனம் 999’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளேன்.

இப்படம் முல்லைப் பெரியாறு அணை, அந்த அணையைக் கட்டிய பென்னிகுக்கின் வரலாற்றின் பின்னணியைக் கொண்டது. புதிய திரைப்படங்கள் தயாரிக்கப்படும்போது, வேறு யாரும் உரிமை கொண்டாடாமல் இருப்பதற்காக படத்தின் கதையை சமூக வலைத்தளமான யூ டியூப்பில் பதிவேற்றம் செய்வது வழக்கம்.

அதன்படி, ‘முல்லைவனம் 999’ கதையை 24.2.2013ல் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்தேன். கடந்த 10 மாதங்களாக மதுரை, கேரளா, தேனி பகுதிகளில் படத்தின் முன்னோட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், 2.5.2014ல் யூ டியூப்பில் எனது ‘முல்லைவனம் 999’ கதை, ‘லிங்கா’ என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. ‘முல்லைவனம் 999’ படத்தின் கதையை யூ டியூப்பில் இருந்து திருடி, ‘லிங்கா’ படத்தை தயாரித்துள்ளனர்.

எனவே, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லிங்கா படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். லிங்கா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. உடனடியாக தடைவிதிக்க மறுத்த நீதிபதி, மனு குறித்து தமிழக டிஜிபி, தென் மண்டல ஐஜி, மதுரை பொலிஸ் கமிஷனர், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செயலர், மத்திய அரசு சினிமா பிரிவு முதன்மை தயாரிப்பாளர், லிங்கா படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்குமார், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 19ம் திகதிக்கு தள்ளிவைத்தார்.

கரை ஒதுங்கிய திமிங்கலம் வெடிக்கும் அபாயம்!!

whale

பிரான்சில் கரை ஒதுங்கியுள்ள திமிலங்கலம் வெடிக்கும் நிலையில் இருப்பதால் அதிகாரிகள் செய்வதறியாமல் குழம்பிப் போயுள்ளனர்.

பிரான்சின் தெற்கு கடற்கரையில் நவம்பர் மாத தொடக்கத்தில் பாரிய திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

ஏற்கனவே அழுகிய நிலையில் இருந்த திமிங்கலம், மேலும் அழுகி வருவதால் அதனை உடனே அப்புறபடுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் வெடித்து விடும் அபாயம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்பத்தின் தாக்கத்தால் அதன் உடலில் உட்புற வாயுக்கள் உருவாகும். இதனால் அதன் உடல் பெருத்துக் கொண்டே போகும். பின் திடீரென்று எப்போது வேணுமானாலும் வெடிப்பு நிகழலாம் என்று தெரிகிறது.

எனவே இந்த திமிங்கலத்தை அப்புறப்படுத்த நடைமுறையில் சாத்தியமான முறையிலும், ஆபத்து குறைவான அணுகுமுறையோடும் செயல்படுத்தும் முறைகளை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் அந்த திமிங்கலம் இருக்கும் இடத்தினை தடுத்துள்ளதோடு மக்கள் அருகே செல்லகூடாது என்பதற்காக அந்த பகுதியை மூடிவைத்துள்ளனர்.

வால் நட்சத்திரத்தில் தரையிறங்கும் ஐரோப்பிய விண்கலம்!!

rosetta

வால் நட்சத்திரத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விண்கலம், அதன் இறுதிக் கட்டப் பாதையை வெற்றிகரமாக எட்டியுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

வால் நட்சத்திர ஆராய்ச்சிக்காக கடந்த 2004ம் ஆண்டு, பிலே எனப்படும் ரோபோவுடன் “ரொசெட்டா’ என்ற விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

160 கோடி டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம், இதுவரை 600 கோடி கிலோ மீட்டர்கள் தூரம் பயணித்து தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

விண்கலத்திலிருந்து பிரிந்து வால் நட்சத்திரத்தில் “பிலே’ ரோபோ தரையிறங்குவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான சமிக்ஞைகள் விண்கலத்திலிருந்து ஆய்வு மையத்துக்குக் கிடைத்துள்ளன.

இந்த செயல்பாடுகள் சரிவர நடக்கும் பட்சத்தில், விண்கலத்திலிருந்து பிரிந்து “பிலே’ ரோபோ, வால் நட்சத்திரத்தில் தரையிறங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என்று ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

400 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இந்த வால்நட்சத்திரத்தில் படிந்துள்ள பனிகட்டிகள் மற்றும் நுண்துகள்கள் பற்றி பிலே ஆராய்ந்து பூமிக்கு தகவல்களை அனுப்பும்.

பிந்திய தகவலின் படி குறித்த ரோபோ வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது

மோடியின் அழைப்பை நிராகரித்த ஷாருக்கான்!!

Shah_Rukh_Khan

பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் இணையப் போவதில்லை என்று பொலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 2ம் திகதி பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

அப்போது அமிதாப்பச்சன், கமல்ஹாசன், டெண்டுல்கர் உட்பட 9 பிரபலங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் இணைய வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்று இந்த 9 பேர் மட்டுமின்றி நாடு முழுவதும் பல பிரபலங்கள் துடைப்பத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்துள்ளதாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், முதலில் நாம் நம்மை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் நான் இணையப் போவதில்லை. அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரபலங்களின் இந்த முயற்சியைப் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.