வட்ஸ் அப்பில் ஆபாச காட்சி வெளியிட்டது தொடர்பாக கேரள ஏடிஜிபி மீது சரிதா நாயர் புகார் கொடுத்துள்ளார். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சரிதாநாயரின் ஆபாச காணொளி சமீபத்தில் எங்கும் பரவியது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் சரிதாநாயர் புகார் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க பத்தனம்திட்டா பொலிசிற்கு உத்தரவிட்டது.
இதுதொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சரிதாநாயர் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள கேரள டிஜிபி அலுவலகம் சென்று டிஜிபி பாலசுப்பிரமணியத்திடம் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது..
தற்போது தென்மண்டல ஏடிஜிபியாக இருக்கும் பத்மகுமார் திருவனந்தபுரம் சரக ஐஜியாக இருக்கும்போது தான் என்னை கைது செய்தார். அப்போது என்னிடம் இருந்தும், எனது தாயிடம் இருந்தும் 7 கைப்பேசிகளையும், 2 மடிக்கணனிகளையும் பொலிசார் கைப்பற்றினர்.
ஆனால் இதில் 4 கைப்பேசிகளையும், ஒரு மடிக்கணனியை மட்டுமே பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மற்ற 3 கைப்பேசிகளையும், ஒரு மடிக்கணனியையும் ஏடிஜிபி தன்னிடம் வைத்துக்கொண்டார். அதில் தான் எனது ஆபாச காட்சியும் இருந்தது.
எனவே ஏடிஜிபி பத்மகுமார் தான் எனது ஆபாச காட்சிகளை வெளியிட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறப்பட்டிருக்கிறது.