நிதிமுறைகேடு தொடர்பான விவகாரத்தில் லலித் மோடி குற்றவாளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ல் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை உருவாக்கிய லலித் மோடி நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டார் என்ற காரணத்துக்காக 2010ல் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்போது லண்டனில் வசித்து வரும் இவர் மீதான புகார் குறித்து விசாரணை குழு 133 பக்க அறிக்கை சமர்ப்பித்தது.
இதில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, நிதிமுறைகேடு மற்றும் ஐ.பி.எல் தொடருக்கெதிராக புதிய தொடரை தொடங்க திட்டமிட்டது போன்ற பல்வேறு முறைகேடுகள் இடம் பெற்றுள்ளன.
வரும் 25ம் திகதி சென்னையில் நடக்கவுள்ள பி.சி.சி.ஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் லலித் மோடிக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
ஜெனிவாவில் நேற்று அதிகாலை ஒருவர் தீக்குளித்ததாக செய்திகள் வந்தன. இருந்தபோதிலும் அவர் இலங்கையரா என்பதனை உறுதிப்படுத்த முடியாதிருந்தது. ஆனால் அந்நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத்தமிழர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேரில் கண்ட சாட்சியம். ஜெனிவாவில் உள்ள தமிழர் ஒருவர் நடந்ததை விபரித்துள்ளார். நேற்று சில நண்பர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஐநா முன்றலில் அந்த தோழர் தீக்குளித்த இடத்தில் அவர் யார் இன்னார் என்ற அடையாளங்கள் ஏதும் அறியாமலே மலரஞ்சலி செலுத்தி விட்டு நின்றிருந்தோம்.
அருகே 24X7 தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரபு தேசத்து இளைஞர்கள் அதிகாலை நடந்த தாங்கள் கண்ட அந்த சம்பவத்தை எங்களிடம் விளக்கிக் கொண்டு இருந்தார்கள்.
ஒரு மாநிறமான இளைஞன் இங்கே இரவு பன்னிரெண்டு மணியில் இருந்து சுற்றிக் கொண்டு இருந்தான். சரியாக அதிகாலை 1.30 மணி அளவில் ஒரு போத்தலில் இருந்து அடர்த்தியான ஜெலி போன்ற திரவத்தை எடுத்து தன் மீது பூசிக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் கொளுத்தி கொண்டான்!
கொழுந்து விட்டு சுவாலையாக எரியும் போது எந்த சலனமும் இன்றி சில கோஷங்களை மட்டும் சொல்லிவிட்டு ஒரே இடத்தில் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்று எரிந்து முடித்து கீழே விழுந்தான். ஐநாவை சுற்றி பாதுகாப்பு பணியில் இருக்கும் கமோண்டோக்கள் அவனை நெருங்கும் போது கீழே சாய்ந்து விட்டான்.
பின்னர் காவல் துறையினர் எங்களை விலக்கி விட்டு அவன் தன்னுடன் கொண்டு வந்திருந்த பையையும் காகிதங்களையும் எடுத்துகொண்டு எரிந்த அந்த நபரை அம்புலன்சில் ஏற்றி சென்று விட்டார்கள். எரிந்தவன் அருகே ராணுவ தளபதி உடையில் இருக்கும் தமிழர்களின் தலைவர் ஒருவர் படம் இருந்ததை மட்டுமே எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது என்று மயிர்க்கூச்செறியும் அந்த சம்பவத்தை விளக்கி கொண்டு இருந்தார்கள்!
இதற்கு இடையில் சுவீஸ் காவல்துறை தீக்குளித்தவரின் உடலருகே தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் படம் இருந்தது உண்மைதான் ஆனால் இறந்தவர் திபெத்தியராக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று சில உள்ளூர் செய்தி ஏடுகளின் மூலம் எங்களை குழப்பிவிட்டு இருந்தது.
இவ்வாறு குழம்பிய நிலையில் அது யாராக இருந்தாலும் ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக உயிர்க்கொடை செய்தவனுக்கு வீரவணக்கம் செய்வதில் தவறில்லை என்று மலரஞ்சலி செலுத்திவிட்டு அந்த இடத்தில் நின்றிருந்த போது ஒரு தமிழ் இளைஞர் சற்று பதட்டத்துடன் காரில் வந்து இறங்கினார். அவருடன் அவர் மனைவி மற்றும் ஒரு யுவதி மேலும் பிள்ளைகள் வந்திருந்தார்கள்!
காரில் வந்து இறங்கிய இளைஞர் தன் மச்சினனை நேற்று இரவில் இருந்து காணவில்லை, காரில் இருக்கும் யுவதியின் கணவன்தான் அவன், வயது 34 அவன் தீவிர ஈழ உணர்வாளன். இங்கே ஒருவர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்து பக்கத்து மாகாணத்தில் இருந்து வருகிறோம். தீக்குளித்தவரை யாராவது பார்த்தீர்களா என்று எங்களை நோக்கி கேள்வி எழுப்பினார். அவர் தன்னோடு கொண்டு வந்திருந்த அவருடைய மச்சினன் படத்தையும் நீட்டினார்!
நான் முன்பே இறந்த அந்த தோழரின் உடலை பார்த்து இருந்ததால் காரில் இருந்த இரு யுவதிகளின் தவிப்பையும் குழந்தைகளின் ஏக்கத்தையும் பார்த்தவாரே அவர் கொண்டு வந்திருந்த வீசா புகைப்படத்தை எட்டி பார்த்தேன், அதிர்ச்சி நெஞ்சில் இடியாய் இறங்கியது. அதற்கு மேல் அந்த இடத்தில் நிற்கும் துணிவு என்னிடம் இருந்திருக்கவில்லை.
ஆனாலும் இறந்த செந்தில்குமரன் ஏதாவது கோரிக்கைகளை விடுத்துள்ளாரா? ஏன், எதற்காக இவ்வாறு செய்தார் என்பது இதுவரையில் தெரியாமல் உள்ளது. பொலிஸார் எடுத்துச் சென்ற பையும் காகிதங்களிலும் ஏதாவது செய்தியினை தீக்கிரையான செந்தில்குமரன் விட்டுச் சென்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும் பொலிஸார் அவ்விபரங்களை இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!.
ஜெயம், பிரியசகி, உன்னாலே உன்னாலே போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சதா. சமீபகாலமாகத் திரைப்படங்களில் தலைகாட்டாத இவர் விரைவில் வெளியாகவிருக்கும் மத கஜ ராஜா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
விஜய் அண்டனியின் இசையில் நடிகர் விஷாலுடன் இணைந்து இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் அவர் தோன்றுகின்றார்.
இயக்குனர் சுந்தர்.சி இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் விஷாலுடன் நடிகைகள் அஞ்சலி, வரலக்ஷ்மி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் சோனு சூட், பிரகாஷ் ராஜ், சுப்பாராஜூ மற்றும் நிதின் சத்யா போன்றோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சதசாதனை உள்ளிட்ட பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். கிரிக்கெட்டில் சகாப்தம் என்று அழைக்கப்படும் இவர் 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 200வது டெஸ்ட்டில் விளையாடி புதிய மைல்கல் சாதனையை படைக்க உள்ளார்.
இதற்காக இந்திய அணி தென் ஆபிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்யும்போது அவர் 200வது போட்டியில் விளையாடும்படி அட்டவணை இருந்தது. ஆனால், தற்போது சச்சின் 200வது டெஸ்ட்டை இந்திய மண்ணில் விளையாட இந்திய கிரிக்கெட் சபை விரும்பியது.
இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி நவம்பரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டியில் விளையாட அழைப்பு விடுக்கப்பட்டது. இதை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து சச்சின் டெண்டுல்கர் 200வது டெஸ்ட்டை இந்திய மண்ணில் விளையாடுகிறார். ஆனால் எந்த மைதானத்தில் விளையாடுவார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. சுழற்சி முறையில் பெங்களூர், அகமதாபாத்தில் போட்டி நடைபெற வேண்டும்.
இந்நிலையில் டெண்டுல்கரின் சொந்த மண்ணான மும்பையில் விளையாட வேண்டும் என்று முன்னாள் அணித்தலைவர் கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் டெண்டுல்கர் தனது 200வது போட்டியை மும்பையில் விளையாடினால் பொருத்தமாக இருக்கும். அங்குதான் அவரது உறவினர்கள், நண்பர்கள் அதிகம் உள்ளனர்.
மும்பைதான் அவருக்கு உணர்வுபூர்வமாக இருக்கும். அவரது இந்த சாதனையை முறியடிக்க முடியாது. அவர் இந்த பொன்னான வாய்ப்பை அனுபவித்து விளையாட வேண்டும்.
டெண்டுல்கரின் ஓய்வுக்கு பின்பு அந்த இடம் வெற்றிடமாகவே இருக்கும். நாம் நிறைய வீரர்களின் ஓய்வை பார்த்து இருக்கிறோம். பல வீரர்கள் வருவார்கள் போவார்கள் என்று கூறினார்.
பாகிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளின் முகாம்களை அழிப்பதற்காக அமெரிக்கா தொடர்ந்து ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
நாட்டின் இறையாண்மையை மீறி அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாக கூறி தொடர் போராட்டம் நடந்து வந்தாலும் அமெரிக்கா தனது தாக்குதலை நிறுத்தவில்லை. இந்நிலையில் நேற்று இரவு ஆப்கானிஸ்தான் எல்லை அருகில் வடக்கு வசிரிஸ்தானில் உள்ள தர்கா மண்டி என்ற கிராமத்தில் இந்த தாக்குதல் நடத்தியது.
அப்போது நேட்டோ படைகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஹக்கானி நெட்வொர்க் தீவிரவாதிகள் தங்கியிருந்த பகுதியில் 3 ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. இதில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து சி.ஐ.ஏ.வின் உளவு விமானங்கள் அப்பகுதியில் தாழ்வாகப் பறந்து கண்காணிப்பதாக உள்ளூர் பொதுமக்கள் தெரிவித்தனர். பாகிஸ்தானில் இதுவரை அமெரிக்கா 400 முறை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 565 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் போராளிகள் அல்லாத பலரும் இதில் கொல்லப்பட்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அடுத்த வாரம் நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரச்சினை எழுப்புவதாகவும் அவர் கூறினார்.
சமுத்திரம்,கடல்பூக்கள், ஈரம் உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர் நடிகை சிந்து மேனன். அவர் கடந்த 2010ம் ஆண்டு டொமினிக் பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் அவர் இன்று தூக்க வில்லைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரை மீட்டு சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை சக்தி மில்ஸில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட 19 வயது இளம்பெண் தன்னை இக்கொடூரதிற்கு ஆளாக்கிய நபர்களின் ஆண்மையை நீக்க வேண்டுமென்று ஆவேசமாக கூறியுள்ளார்.
மும்பையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி சக்தி மில்ஸ் பகுதியில், பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார்.
குற்றவாளிகளை சம்பவம் நடந்து 70 மணி நேரத்திற்குள் கைது செய்த பொலிசார் அவர்களை விசாரித்தப்போது பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தன.
விசாரணையில் இந்த 5 பெரும் இதற்கு முன் அதே சக்தி மில்ஸ் பகுதியில் கடந்த 6 மாதங்களில் 10 பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர் என்பதும் அவர்கள் யாரும் இவர்கள் மீது புகார் அளிக்காததால் இவர்களது அட்டூழ்யம் தொடர்ந்து நடைபெற்று வந்ததும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த குற்றவாளிகள் கும்பல் ஜூலை மாதம் 31ம் திகதி தன்னை பலாத்காரம் செய்ததாக கோல் சென்டரில் பணிப்புரியும் பெண் ஒருவர் புகார் அளித்தார்.
இது குறித்து அப்பெண் தொலைக்காட்சி ஒன்றுக்கு கூறுகையில் அவர் தனக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக தொடர்ந்து பெண்களுக்கு இத்தகைய கொடுமைகளை செய்துவரும் இந்த குற்றவாளிகளின் ஆண்மையை நீக்கவேண்டுமென ஆவேசப்பட்டிருக்கிறார்.
அப்போதுதான் இவர்கள் மீண்டும் இத்தகைய கொடுமையை வேறொரு பெண்ணுக்கு செய்யமாட்டார்கள் என அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இரண்டு இலங்கையர்களுக்கு நியூஸிலாந்து நீதிமன்றம் 17 வருட சிறைத் தண்டனையை விதித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதல் இந்த இரண்டு பேருக்கும் எதிரான வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்தது.
கடந்த பெப்ரவரி மாதம் 23ம் திகதி வடக்கு கென்டபெரியில் வைத்து சமீரா மதுரங்கன மெனிக்கே பெத்தலாகே என்பவரை கொலை செய்தமை தொடர்பில் 24 வயதான துவான் பிரவாஸ் ஸவால் மற்றும் 35 வயதான முதியான்சலாகே விராஜ் வசந்த அழகக்கோன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பெண் ஒருவரின் விவகாரம் தொடர்பிலேயே இந்த கொலை இடம்பெற்றதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்தது. கொலை சம்பவம் இடம்பெற்ற பின்னர் கொலை செய்யப்பட்டவரை, குறித்த இருவரும் தீயிட்டு கொளுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை அழைத்துச் செல்லும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை பிரஜையை இந்தோனேசிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அக்ரம் என்ற இந்த இலங்கை பிரஜை தெற்கு ஜகர்த்தா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக இந்தோனேசிய பொலிஸார் தெரிவித்தனர்.
அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்றவேளை இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு அருகில் கடலில் மூழ்கிய படகில் அகதிகளை இவரே அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் அவுஸ்திரேலியா நோக்கி 210 பேரை படகில் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த படகில் பயணித்த குழந்தைகள் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 10 பேர் வரையில் உயிரிழந்ததோடு 189 பேர் மீட்கப்பட்டனர். அத்துடன் பலர் காணாமல் போயினர்.
இலங்கை, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்த படகில் பயணம் செய்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள முதல் மனித உருவம் கொண்ட கிரோபோ என்ற ரோபோ தனது முதல் வார்த்தையை விண்வெளியில் பதிவு செய்துள்ளது.
ஜப்பான் உருவாக்கிய ரோபோ இது. இந்த ரோபோ தற்போது தனது முதல் வார்த்தையை விண்வெளியில் பதிவு செய்து புதிய வரலாறு படைத்துள்ளது. இதுதான் விண்வெளியில் ஒலித்த முதல் ரோபோ குரலாகும்.
அகன்ற கண்களுடன் பெரிய சைசிலான கண்களைக் கொண்டது கிரோபோ ரோபோ. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்தபடி இந்த ரோபோ பூமியில் வசிக்கும் மனிதர்களுக்கு வணக்கம் என்று தனது முதல் பேச்சில் தெரிவித்தது.
மேலும் நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்ரோங்குக்கும் அது அஞ்சலி செலுத்தியது.
கிரோபோவின் பேச்சு வீடியோ மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் மேலும் அது கூறுகையில் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி ஒரு ரோபோ புதிய பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி தனது காலடியை எடுத்து வைத்தது என்று தன்னைப் பற்றியும் கூறியுள்ளது.
சிரியாவில் சிறை பிடிக்கப்பட்ட ராணுவத்தினரை புரட்சிப்படையினர் வெற்று உடலுடன் முழங்காலிட வைத்து தலையில் சுட்டுக் கொன்ற காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ படத்தில் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு விசுவாசமான 7 ராணுவத்தினர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அனைத்து வீரர்களும் உடைகளை அகற்றிய நிலையில் கைகளைக் கட்டி தரையில் கீழே தள்ளி விடப்படுகின்றனர்.
பின்னர் அவர்களுக்குப் பின்னால் நின்று கொள்ளும் புரட்சிப் படையினர் துப்பாக்கிகளால் அவர்களை சுட்டுத் தள்ளுகின்றனர். இந்தத் தண்டனைக்கு முன்பாக புரட்சிப் படையினரால் மாமா என்று அழைக்கப்படும் அப்துல் சமத் இஸ்ஸா – இவர்தான் இந்தக் குழுவின் தலைவர் போல ஒரு கவிதையை வாசிக்கிறார். பின்னர் அவரே துப்பாக்கிச் சூட்டை ஆரம்பித்து வைக்கிறார். அதாவது முதல் குண்டை அவர் சுடுகிறார்.
இஸ்ஸா பேசுகையில், கடந்த ஐம்பது ஆண்டுகளாக இவர்கள் ஊழல்வாதிக்கும், ஊழலுக்கும் துணை போயிருக்கிறார்கள். கடவுளின் பெயரால் நாம் உறுதி எடுக்கிறோம் நாம் பழி தீர்ப்போம் என்று அவர் கூறுகிறார்.
இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் நடந்துள்ளது. அதை வீடியோவில் புரட்சிப்படையினரே படமாக்கியுள்ளனர். இப்போது அந்தப் படையைச் சேர்ந்த ஒருவரே கசிய விட்டுள்ளார். புரட்சிப் படையினரின் செயலால் மனம் அதிர்ந்து போய் அதிலிருந்து இவர் விலகி விட்டாராம். இந்த வீடியோவை அவர் நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு கொடுத்துள்ளார். அவர்கள் இதை வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் வர்த்தக நகராக திகழ்வது கராச்சி இங்கு கிரிமினல் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகம். நூற்றுக்கணக்கான ரவுடி கும்பல்கள் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆள்கடத்தல், வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் என பல்வேறு கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன்மூலம் தினமும் அவர்கள் 300 கோடி ரூபாய் வரை சம்பாதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் தினமும் 5 ஆயிரம் கோடி அளவுக்கு கறுப்பு பணங்களை சம்பாதிப்பதாகவும் அந்த தகவல் கூறுகிறது.
உலகிலேயே கிரிமினல் குற்றவாளிகள் அதிகம் நிறைந்த நகரங்களில் ஒன்றாகவும் கராச்சி திகழ்கிறது. கராச்சி நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் தினமும் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்படுகிறார்கள்.
உடல் முழுவதும் செயலிழந்த குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதி கோரி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழிக்கோடு நெடுவிளையை சேர்ந்தவர் டென்னிஸ்குமார். இவரது மனைவி சுஜாமேரி. இவர்களுக்கு மார்த்தாண்டம் தனியார் வைத்தியசாலையில் ஆண் குழந்தை பிறந்தது.
ஆனால் அந்த குழந்தையின் உடலில் எந்த அசைவும் இல்லை. பின்னர் கண்பார்வையும் போனது. தனியார் வைத்தியசாலை வைத்தியர்களின் கவனக்குறைவுதான் இதற்கு காரணம் என்று பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர்.
குமரி முதல் சென்னை அரசு தலைமை குழந்தை வைத்தியசாலை வரை வைத்தியர்கள் பரிசோதித்து பார்த்து விட்டனர். ஆனால் குழந்தையின் உடல் நலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனால் குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதி கோரி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் எதிரில் குழந்தையுடன் பெற்றோர் மண்டியிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்திய பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த கற்பழிப்பு குற்றவாளியும், சைக்கோவுமான ஜெய்சங்கர் தப்பியோடிவிட்டதால் அவன் தனியாக இருக்கும் பெண்களை குறி வைக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பல்வேறு கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் தொடர்புடைய சைக்கோவான சேலத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து தப்பியோடிவிட்டான்.
அவனைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்சங்கர் பெண்களை கற்பழித்து அவர்களை கொடுமைப்படுத்துவதற்கு பெயர் போனவன்.
இந்நிலையில் அவன் சிறையில் இருந்து தப்பிவிட்டதையடுத்து மாநிலங்களில் உள்ள பொலிசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அவன் பெங்களூரிலேயே ஒளிந்திருக்கக்கூடும் என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதனால் தனியாக பயணம் செய்யும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர். ஜெய்சங்கர் எப்பொழுதும் தன்னுடன் ஒரு கருப்பு பையை வைத்திருப்பான்.
மேலும் தான் கற்பழிக்க முயற்சி செய்யும்போது அதை எதிர்த்து போராடும் பெண்களை அவன் தன் பையில் உள்ள வெட்டுக்கத்தியால் தாக்கி கொன்றுவிடுவான் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் பியுஹே ஆற்றில் இரசாயன தொழிற்சாலையின் அம்மோனிய கழிவுகள் கலந்தன. இதனையடுத்து அந்த ஆற்றில் இருந்த மீன்கள் எல்லாம் செத்து மிதந்தன.
உடனடியாக அப்பகுதிக்கு வந்த சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் செத்து மிதந்த 100 தொன் மீன்களை வெளியே எடுத்து சேகரித்தனர்.
கொட்டப்பட்டிருந்த அந்த இறந்த மீன்கள் பனித்திட்டுகள் போன்று காட்சியளித்தன. இதனால் அப்பகுதி மீனவர்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த வருடம் தொடக்கத்தில் ஷாங்காய் மாகாண ஆற்றில் இதுபோன்று 16 ஆயிரம் பன்றிகள் செத்து மிதந்து வந்த சம்பவம் அதிர்ச்சியூட்டியது. இதற்கு அந்த ஆற்றின் கரையில் இருந்த பன்றி பண்ணை மீது குற்றம் சாட்டப்பட்டது.
இப்போது 100 தொன் மீன்கள் இறந்துபோனதற்கு ஹூபெய் மாகாண ஒரு ரசாயன தொழிற்சாலை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் முன்னேறி வரும் சீனா இதுபோன்ற சுற்றுச்சூழல் மாசு அடையும் பிரச்சினையை சந்தித்து வருகிறது