யாழ் தெல்லிப்பழை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும், உயிரிழந்த பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதுடன், வீட்டின் சுவர்களில் இரத்தக் கறைகளும் காணப்படுகின்றன.
உயிரிழந்த பெண் தனது இரு பிள்ளைகளுடன் தெல்லிப்பழையில் வசித்து வந்ததாகவும், கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.
இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் மகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (3) அருகிலுள்ள வீட்டில் தூங்கச் சென்றவேளை வீட்டில் தாயும் மகனும் மட்டுமே இருந்துள்ளனர்.
அயல் வீட்டில் தூங்கச் சென்ற மகள் மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தாய் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். அதேவேளை, தனது சகோதரன் வீட்டில் இல்லாததையும் அறிந்துள்ளார்.
இது குறித்து அயல் வீட்டாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, அயல் வீட்டார் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
பின்னர், சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். மேலும் காணாமல்போன சிறுவனை தேடும் நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பில் போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது மகனை கடுமையாக கொடுமை செய்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் தனது 7 வயது மகனை தனது கணவர் தரையில் அடித்ததாக பெண் ஒருவர் கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு தன்னையும் பிள்ளையையும் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவ தினத்தன்று தனது கணவர் பணம் கேட்டு தன்னை கொடூரமாக தாக்கியதாகவும், அருகில் வந்த தனது 7 வயது மகனை தூக்கி தரையில் கொடூரமாக தாக்கியதாகவும் அந்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விரைந்து செயற்பட்ட பொலிஸார், சந்தேக நபரைக் கைது செய்தனர். இதேவேளை, சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும், சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்காக பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
விகாரை ஒன்றுக்கு சென்ற பாடசாலை மாணவன் மற்றும் மாணவியை அந்த விகாரையின் விகாராதிபதி, கொடூரமாக தாக்கியதாக குறித்த மாணவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன் காரணமாக இந்த ஆண்டு சாதாரண தர பரீட்சையில் அந்த மாணவரால் தோற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக வகுப்பு இடம்பெறாமையால் வெலிகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு குறித்த மாணவர்கள் சென்றுள்ளனர்.
அங்கு குறித்த விகாரையின் விகாராதிபதி மாணவனையும் அவருடன் சென்ற தோழியையும் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தாக்கப்பட்ட மாணவனின் தந்தை கூறுகையில், “இந்த தாக்குதலால் மகனின் உடலின் உள்பகுதி சேதமடைந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் கூறினர்.
அறுவை சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மகனுக்கு அடித்ததால் ஏற்பட்ட ரத்தக்காயம் இருப்பதாக மனைவி என்னிடம் கூறினார்.
இது வீழ்ந்ததால் ஏற்பட்ட காயம் அல்ல தாக்கியதால் ஏற்பட்ட காயம் என மருத்துவர்களும் கூறினர். பின்னர், இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்தேன்.
அதன் பிறகு வெலிகம பொலிஸாருடன் விகாரைக்கு சென்றோம் அங்கு தேரர் இல்லை. மகனுக்கு இன்னும் சாப்பிடவும் குடிக்கவும் முடியவில்லை. 6ம் திகதி பரீட்சை. அதுக்கு செல்லவும் தற்போது வழியில்லை. உடம்பு சரியில்லாம படுத்த படுக்கையா இருக்கிறான்.
மகன் தோழியுடன் சென்றமை குறித்து எங்களுக்கு அறிவித்திருக்கலாம், அதனை விடுத்து இவ்வாறு கொடூரமாக தாக்குவது முறையல்ல. எனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் தேரருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.
இந்த விடயம் குறித்து தாக்கப்பட்ட மாணவி கூறும் போது, “இருவரும் விகாரைக்கு சென்றோம். அப்போது அங்கு வந்த தேரர் ஈர்க்குமாரை எடுத்து நண்பரை தாக்கினார். அவர் ஓடினார், நானும் ஓடினேன். ஏன் தாக்கினீர்கள் என்று கேட்டோம். நாங்கள் தவறாக நடந்து கொள்ளவில்லை, பின்னர் என்னையும் அழைத்து தாக்கினார்.” என கூறியுள்ளார்.
இவ்வருடம் சாதாரண பரீட்சைக்கு தோற்றவிருந்த வெலிகம பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், கடந்த 25 ஆம் திகதி பரீட்சை அனுமதி சீட்டில் கையொப்பமிடவுள்ளதாக கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.
பின்னர் மேலதிக வகுப்பிலும் பங்கேற்கவுள்ளதாகவும் அந்த மாணவன் கூறிச் சென்றுள்ளான். ஆனால் மேலதிக வகுப்பு நடைபெறாததால், தனது தோழியுடன் அப்பகுதியில் உள்ள விகாரைக்கு சென்றுள்ளார்.
அங்கு குறித்த விகாரையின் விகாராதிபதி மாணவனையும் அவருடன் சென்ற தோழியையும் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டி – பன்வில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 வயதான பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தில் பன்வில, தவலந்தன்ன – ஆகலை தோட்டத்தைச் சேர்ந்த 21 வயதான நிலு என்றழைக்கப்படும் செல்வராஜ் சபியா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் கடந்த சனிக்கிழமை (04.05.2024) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தெல்தெனிய ஆடைத் தொழிற்சாலையில் பணியை முடித்து விட்டு முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது, முச்சக்கர வண்டி வீதியை விட்டு சுமார் 35 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
மேலும், முச்சக்கர வண்டியில் பயணித்த இரு பெண்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மடுல்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்த நிலையில் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் புறநகர் பகுதியான ஹங்வெல்ல அரச ஊழியர் வீட்டுத் தொகுதியில் பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக அவர் இந்த செயலை செய்துள்ளார்.
கைக்குண்டுடன் அவர் பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பிள்ளைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்யும் நோக்கில் சந்தேக நபர் கைக்குண்டை ஏந்தியவாறு வீட்டுக்குள் பிரவேசித்ததாகவும் எனினும் மனைவி அங்கியிருந்து தப்பியோடியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நபர் தனது இரு பிள்ளைகளை பிணைக் கைதிகளாக வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரண்டு பிள்ளைகளை மீட்கும் முயற்சியில் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபட்டு காப்பாற்றியுள்ளனர். .
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் செவிலியராக பணியாற்ற பிரித்தானியா (UK) செல்ல தயாராக இருந்த இளம்பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேரளாவின் ஹரிபாட் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சூர்யா சுரேந்திரன் என்ற இளம்பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் பிரித்தானியா செல்ல தயாராக இருந்த நிலையில் அண்டை வீட்டாரிடம் விடைபெற சென்றுள்ளார்.
இதன்போது தொலைபேசி அழைப்பில் உரையாடிய படியே தன்னை அறியாமலேயே ஒரு அரளி இலை மற்றும் பூவை பிடுங்கி மென்றதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து ஆலப்புழா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் அவர் சாப்பிட்ட இலை, பூவின் விஷத்தை வெளியேற்ற முயன்றதுடன் உடல்நிலை சீராகவே அவர் வீடு திரும்பியுள்ளார்.
எனினும், அவரது உடல் நிலை மீண்டும் மோசமடைந்ததால் பருமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் துரதிர்ஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அரளி பூ மற்றும் இலையின் விஷமே அவரது மரணத்திற்கு காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை “கடும் அவதானம்” செலுத்தப்பட வேண்டிய நிலைக்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று(06.05.2024) வெப்பமானது மேலும் உயர்ந்து அதிக அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் இவ்வாறு வெப்பநிலை உயர் மட்டத்தில் இருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
போதுமான அளவு நீர் அருந்துதல், நிழலான பகுதிகளில் முடிந்த அளவு ஓய்வெடுத்தல், கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்று திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் மெரில் மெண்டீஸ் தெரிவித்தார்.
இதற்கிடையில், அதிக சூரிய ஒளி காரணமாக தலைவலி, வாந்தி, உடல்வலி, தூக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கல்முனையிலிருந்து கொழும்பு (Colombo) நோக்கி பயணித்த அரச பேருந்து செங்கலடி சந்தியில் சற்று முன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து செங்கலடி சந்தியிலுள்ள ரான்ஸ்போமர் தூணை உடைத்து கடையொன்றினுள் புகுந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஒலிபெருக்கியின் சத்தங்களினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு…
வவுனியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் சமய வழிபாட்டுத்தளங்களிலும் , பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும் பயன்படுத்தப்படுவது மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதாக சுகாதார பிரிவினர் , நகரசபை , பொலிஸ் திணைக்களம் , மாவட்ட செயலகம் ஆகியவற்றிக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இவ்வாறான ஒலிபெருக்கிப் பாவனையை கட்டுப்படுத்துமாறும் இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்பாடுகளையும் பொலிஸார் அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று 06 ஆம் திகதி ஆரம்பமாகி 15 ஆம் திகதி நிறைவடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
30கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சாவை கைப்பற்றிய வவுனியா பொலிஸார்…
வவுனியா பொலிஸாரினால் இன்று (06.05.2024) அதிகாலை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30கிலோ 500கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டெடுத்துள்ளமையுடன் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் போதைப்பொருள் கைமாறுவதாக இடம்பெறுவதாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரிஸ்வி தலமையிலான பொலிஸ் பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கையினை மருதங்கேனி பகுதியில் முன்னெடுத்திருந்தனர்
இதன்போது போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில்
யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த 36,35 ஆகிய வயதுடைய இரு நபர்களை கைது செய்துள்ளமையுடன் அவர்களிடமிருந்து 30 kg 500g கேரளா கஞ்சாவினை வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் மீட்டெடுத்துள்ளனர்
கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா ஆகியவை மருதங்கேனி பொலிஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமையுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினருடன் இணைந்து மருதங்கேனி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
அண்மைக்காலமாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினருடன் இணைந்து பல திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கடம்பநாடு பகுதியில் வசித்து வருபவர் மனோஜ். அவரது மகள் 8 வயது அவந்திகா. அவர் அருகில் உள்ள ஒரு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு வயிற்றுப் போக்கும், வாந்தியும் ஏற்பட்டது.
இதனையடுத்து சிகிச்சைக்காக அடூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். உடல்நிலை மோசமானதை தொடர்ந்து சிறுமியை கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவந்திகா நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். ஷிகெல்லா நோய் பாதித்தது தான் மரணத்திற்கு காரணம் என கோட்டயம் மருத்துவமனை மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது.
அசுத்தமான குடிநீர் மூலம் தான் இந்த பாக்டீரியா உடலில் பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.அசுத்தமான குடிநீர் மூலம் இந்த நோய் பரவியிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள,
கிணறு, குளம் , குட்டை, ஆறு, ஏரிகளில் நீரை சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 8 வயது சிறுமி இந்நோயால் பாதிக்கப்பட்டு உயிரைவிட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு பூமி, மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை தெரிவித்துள்ளனர்.
அதாவது டெல்லி மெயில் அறிக்கையின்படி, பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.
அதில், இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியில் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டுபிடிக்கப்படுள்ளது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பூமியில் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் மறைந்துவிடும். அந்த நேரத்தில் பூமியின் வெப்பநிலை 70 டிகிரி செல்ஸியஸை எட்டும். அத்தகைய சூழலில் பூமியில் எந்த உயிரினமும் வாழ இயலாது. அனைத்தும் வெப்பத்தின் காரணமாக அழிந்துவிடும்.
பூமியில் நாம் கார்பனை வெளியேற்றும் வேகத்தின் காரணமாக இந்த அழிவு விரைவில் நிகழ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல நிகழ்ந்திருக்கலாம் என்றும், அதன் காரணமாக டைனோசர்கள் அழிந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆய்வு குழுவின் தலைவர் அலெக்சாண்டர் ஃபார்ன்ஸ்வொர்த் கூறுகையில், உலகில் கார்பன் டை ஆக்சைட்டின் அளவு இப்போது இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கலாம்.
இதன் காரணமாக உடல் வெப்பமடைந்து மனிதர்கள் இறந்துப்போகும் சூழல் உருவாகும். பின்னர் பூமியின் அனைத்து கண்டங்களும் ஒன்றிணைந்து ஒரு சூப்பர் கண்டத்தை உருவாக்கும், அது பாங்கேயா அல்டிமா என்று அழைக்கப்படுகிறது.
குறிப்பான பூமி முதலில் சூடாகவும், பின்னர் வறண்டதாகவும், இறுதியாக வாழத் தகுதியற்றதாகவும் மாறும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதமட்டுமன்றி வெப்பம் தாங்காமல் எரிமலைகள் வெடித்து சிதறி, பூமியின் பெரும்பகுதி எரிமலையால் மூடப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் அவ்வாறு நிகழும் போது அது அதிக அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடும். அதனால் மக்கள் சுவாசிக்க சிரமப்படுவார்கள். அதன்பிறகு படிப்படியாக பூமியில் ஒரு உயிரினம் கூட மிச்சமில்லாமல் மொத்தமாக அழிந்து விடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஈகுவடாரில் அழகிப்போட்டியில் கலந்துகொண்ட பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
லாண்டி பராகா கோய்புரா என்ற 23 வயது இளம்பெண், 2022யில் மிஸ் ஈகுவடார் போட்டியில் பங்கேற்று பிரபலமானார்.
ஓர் ஆண்டுக்கு முன் சிறைக் கலவரத்தின்போது இறந்த, போதைப்பொருள் கடத்தல் நபர் லியான்ட்ரோ நோரெரோவுடன் இவருக்கு தொடர்பு இருந்ததாக நம்பப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள, கோய்புரா கடந்த மாதம் 28ஆம் திகதி கியூவெடோ நகருக்கு வந்துள்ளார்.
அவர் அங்குள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று, மதிய உணவு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
துப்பாக்கியால் சுட்டுக்கொலை
அதனைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத இரு நபர்கள் பதிவினைப் பார்த்து அங்கு வந்துள்ளனர்.
ஒருவர் நுழைவாயிலுக்கு அருகில் நிற்க, மற்றொரு நபர் கோய்புராவை நோக்கி வந்து 3 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் நிலைகுலைந்து விழுந்த அவர் உயிரிழந்துள்ளார்.
நீதிமன்ற விசாரணையின்போது, கோய்புராவுடனான தனது உறவை வெளிப்படுத்த வேண்டாம் என கொல்லப்பட்ட நோரெரோ கணக்காளரிடம் கெஞ்சினார் என்றும், தனது மனைவிக்கு கோய்புரா குறித்து தெரிந்தால் கலவரம் ஆகிவிடும் என்றும் கூறினார் என வாதிடப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலந்து பெண்ணை காதலித்து கரம் பிடித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியைச் சேர்ந்தவர் ரமேஷன். 33 வயதாகும் இவர் மேற்படிப்புக்காக போலந்து சென்றுள்ளார்.
அங்கேயே வேலை கிடைக்க தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் போலந்தைச் சேர்ந்த எவலினா மேத்ரா (30) உடன் ரமேஷனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரின் குடும்பத்திற்கும் இதனை கூறியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அவர்களும் சம்மதம் தெரிவிக்கவே பாரம்பரிய முறைப்படி ரமேஷன், எவலினாவின் திருமணம் வெகுவிமர்சியாக நடைபெற்றது.
கன்னியாகுமரியில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் தேங்காய்பட்டினம் கடற்கரை உள்ளது. தென்னை மரங்கள் நிறைந்த இந்த கடற்கரை சுற்றுலா பயணிகளுக்கு விருப்பமானது. தற்போது கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தேங்காய்பட்டினம் கடற்கரைக்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அடுத்த விழுந்தைம்பலம் பகுதியில் வசித்து வருபவர் பிரேமதாஸ். இவரது மகள் ஆதிஷா (6). விடுமுறை நாளான நேற்று பிரேமதாஸ் தனது மகளை அழைத்துக் கொண்டு தேங்காய்ப்பட்டினம் கடற்கரைக்கு சென்றார். இருவரும் கடற்கரையில் நின்று கொண்டிருந்தபோது திடீரென வந்த ராட்சத அலை அவர்களை கடலுக்குள் இழுத்துச் சென்றது.
இதையடுத்து அவர்களின் கூச்சல் சத்தத்தைக் கேட்ட மீனவர்கள், கடலுக்குள் நீந்தி பிரேமதாஸை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட அவரது மகள் ஆதிஷாவை மீனவர்கள் நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து புதுக்கடை போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு காவல் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாயமான சிறுமியை தீவிரமாக தேடி வருகின்றனர். விடுமுறையைக் கொண்டாடுவதற்காக கடற்கரைக்கு சென்ற நிலையில் சிறுமி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு இறை இரக்க ஆலயத்தில் மாதாவின் உருவ சிலையிலிருந்து கண்ணீர் சிந்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதாவின் உருவ படத்திலிருந்து இன்று (05.05.2024) அதிகாலை 5:30 மணியிலிருந்து இரத்தம் வடிந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனை அதிகளவில் மக்கள் சென்று அதிசயமாக பார்வையிட்டு வருகின்றனர்.
அதேவேளை, நேற்று யாழ்ப்பாணம் இருதய ஆண்டவர் ஆலயத்தில் உள்ள மாதா சிலையிலும் கண்களில் இருந்து கண்ணீர் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.