99 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றவுள்ள முழு சூரிய கிரகணம்!!

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நீள் வட்டப்பாதையை நிலவு கடக்கும் போது சூரியனின் ஒளியை நிலவு மறைத்து விடும் நிகழ்வுக்கு சூரிய கிரகணம் என்று பெயர்.

இதில் முழு கிரகணம், பகுதி கிரகணம், கங்கண கிரகணம், கலப்பு கிரகணம் என பல வகைகள் உண்டு. இந்நிலையில், ஆகஸ்ட் 21ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தோன்றும் என நாசா அறிவித்துள்ளது.

99 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணம் இதுவாகும். ஆகஸ்ட் 21 இல் தோன்றவுள்ள முழு சூரிய கிரகணத்தில் சூரியனின் விளிம்புகள் மட்டுமே தெரியும் என நாசா கூறியுள்ளது.

மேலும், இதை வெற்றுக்கண்களால் பார்க்கக்கூடாது என்றும் அதற்கென பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளித் தடுப்புக் கண்ணாடிகளால் மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் நாசா அறிவுறுத்தியுள்ளது.

இதேபோல், உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 30 கோடி மக்களால் கிரகணத்தைப் பார்க்க முடியும் என்றும் நாசா தகவல் தெரிவித்துள்ளது.

பசுபிக்கிலிருந்து அட்லாண்டிக் வரையான கரைப்பகுதிகளைக் கடக்கும் முழு சூரிய கிரகணம் ஏற்பட்டு 99 ஆண்டுகள் ஆகின்றன. ஜூன் 8, 1918 அன்று முழு சூரிய கிரகணம் வாஷிங்டனில் இருந்து புளோரிடா வரை கடந்தது.

இதன் பின்னர், ஆகஸ்ட் 21 இல் ஏற்படவுள்ள கிரகணத்தை அமெரிக்காவின் 14 மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பார்வையிட முடியும் என நாசா தெரிவித்துள்ளது.

தொடரும் வறட்சி : குடிநீரை விலைக் கொடுத்து வாங்கும் மக்கள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சியின் தாக்கம் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு வலுப்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரன்குடா மக்கள் குடிநீருக்காக அல்லலுறும் இன்றைய நிலை மிகவும் கவலைக்குரியது

குடி நீருக்காக இந்த கிராமத்தில் இரண்டு பொதுக் கிணறுகளே பயன்படுகின்றன. நிலவும் அதிக வறட்சியால் இரண்டு கிணறுகளும் வற்றிப் போயுள்ளன.

இதனால் தமது தேவைக்காக 1500 ரூபா செலவில் குடி நீரைப் பெற்று கிணற்றினுள் அந்த நீரை ஊற்றி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பிரதேச செயலாளரிடம் தமக்கு முறையான விநியோக முறைமையொன்றை தருமாறு இந்த மக்கள் பல தடவைகள் கோரிய போதும் எவ்வித தீர்வும் இந்த மக்களுக்கு கிடைக்கவில்லை என்பது இந்த மக்களின் ஆதங்கம்

மகளிர் உலகக் கிண்ணத்தை சொந்த மண்ணில் வைத்து சுவீகரித்தது இங்கிலாந்து!!

இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 9 ஓட்டங்களால் தோற்கடித்த இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் வைத்து மகளிர் உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது.

இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்த இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களைப்பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சிவர் 51 ஓட்டங்களையும் டெய்லர் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக கோஸ்வமி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் 229 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சுக்கும் களத்தடுப்பிற்கும் தாக்குப்பிடிக்க முடியாது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுக்க இறுதியில் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த 9 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.

இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ரவூத் 81 ஓட்டங்களையும் கவூர் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் சருப்ஸொல் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தனது சொந்த மண்ணில் வைத்து 9 ஓட்டங்களால் தோற்கடித்த இங்கிலாந்து மகளிர் அணி 2017 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது.

பொலிஸ் தாக்கியதில் 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு : இஸ்ரேலுக்கு துருக்கி ஜனாதிபதி கண்டனம்!!

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித ஸ்தலமான அல் அக்சா மசூதி உள்ளது. இங்கு பாலஸ்தீனைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் பிராத்தனையில் ஈடுபடுகின்றனர்.

கடந்த வாரம் இந்த நகரில் பாதுகாப்பு பணியிலிருந்த இஸ்ரேலிய பெண் போலீஸ் அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். இதனால், மசூதிக்கு வெளியே மெட்டல் டிடெக்டர்கள் அமைத்து இஸ்ரேலிய போலீசார் அனைவரையும் சோதனை செய்து வருகின்றனர்.

இந்த சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாலஸ்தீனைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, பொலிஸார் அங்கு கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதில், 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் பாதுகாப்பு படையினரின் இந்த நடவடிக்கைக்கு துருக்கி அதிபர் எர்டோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை தொழுகைக்காக திரண்டிருந்த எங்கள் சகோதரர்கள் மீது இஸ்ரேல் அதிகப்படியான படை பலத்தை பிரயோகிப்பது கண்டிக்கத்தக்கது என அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

காரில் அடிபட்டு உயிருக்குப் போராடிய குட்டி யானையைக் காப்பாற்ற போராடிய யானைகள்!!(வீடியோ)

சிம்பாப்வேயில் காரில் அடிபட்டு உயிருக்குப் போராடிய குட்டி யானையைக் காப்பாற்ற மற்ற யானைகள் போராடிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

சிம்பாப்வே நாட்டின் ஹவேஞ் தேசிய வன உயிரியல் பூங்காவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோவை 69 வயதான ஹெய்தி என்ற பெண் வெளியிட்டுள்ளார்.

பூங்காவில் தாம் வலம் வந்து கொண்டிருந்த போது, தமது வாகனத்தை வேகமாகக் கடந்து சென்ற கார் ஒன்று குட்டி யானை மீது மோதி விட்டு சென்றுவிட்டதாகவும், அப்போது அடிபட்ட குட்டி யானையைக் காப்பாற்ற தாய் யானையும், தந்தை யானையும் போராடியதாகவும், இதைக் கண்ட பிற யானைகளும் உதவியதாகவும் ஹெய்தி கூறியுள்ளார்.

விபத்தில் சிக்கிய நபரைக் காப்பாற்ற நினைக்காமல் பெரும்பாலான மனிதர்கள் கடந்து போகும் இந்த காலத்தில், அடிபட்ட குட்டி யானையைக் காப்பாற்ற யானைகள் போராடிய காட்சி நெகிழ வைத்துள்ளது.

சட்டத்தின் பாதுகாவலனை துப்பாக்கி குண்டால் துளைத்துவிட முடியாது : வே.இராதாகிருஸ்ணன்!!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலானது நல்லாட்சிக்கும், இலங்கையின் சட்டத்துறைக்கும் விடுக்கப்பட்ட ஒரு சவாலாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

உண்மையாக சட்டத்தை பாதுகாக்கின்ற ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட முடியாது. அது முட்டாள்தனமான ஒரு செயற்பாடாகும்.

நல்லாட்சி அரசாங்கத்தில் சட்டத்துறைக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சிலருடைய திட்டமிட்ட ஒரு செயலாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்.

கடந்த காலங்களில் அவர் கொடுத்துள்ள பல தீர்ப்புகள் இதனை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. தற்பொழுது நடைபெற்று வருகின்ற வித்தியாவின் கொலை வழக்கு தொடர்பாகவும் பல உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.

அந்த குற்றச் செயலிலும் பல கோடி ரூபா பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளமை தெளிவாகின்றது. எனவே அவரை முடக்குகின்ற அல்லது பயமுறுத்துகின்ற ஒரு செயலாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

ஆனால் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இதனையெல்லாம் கண்டு அஞ்சமாட்டார் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. எனவே அவரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடமே இருக்கின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக பொது மக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவருடைய பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.

அதே போல இலங்கையில் சட்டத்தை நிலைநாட்ட வேண்டும் என கருதுகின்ற அனைவருடைய ஒத்துழைப்பும் அவருக்கு கிடைக்க வேண்டும்.

அந்த இறைவனுக்கே பொறுக்காத ஒரு செயலை செய்ய முற்பட்ட காரணத்தால் அவருடைய உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது.

மேலும் அவருடைய மெய்ப்பாதுகாவலரின் மறைவானது மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமாகும். அவருடைய குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். இந்த தண்டனையானது அனைத்து நீதிபதிகளுக்கும், சட்டத்தரணிகளுக்கும், பொது மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துகின்ற ஒரு தீர்ப்பாக அமைய வேண்டும்.

இதனை விசேட நீதிமன்றம் மூலம் விசாரணை செய்து உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாகும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூறு வீதம் நீதிபதி இளஞ்செழியன் இலக்கல்ல : இன்று இரவுக்குள் சந்தேகநபர் கைது செய்யப்படுவார்!!

யாழ். நல்லூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்று இரவுக்குள் கைது செய்யப்படுவார் என யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒன்று என தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து எமது செய்தி சேவை அவரிடன் வினவிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நானே இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றேன். இந்த துப்பாக்கி பிரயோகம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல.

இது நூறு வீதம் உறுதியானது. முன்னாள் போராளி ஒருவர் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலருடன் முரண்பட்டுக்கொண்டு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்று இரவுக்குள் கைது செய்யப்படுவார்” என யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ். நல்லூர் பகுதியில் வைத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த சம்பவத்தை அடுத்து யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

கதறி அழுத நீதிபதி இளஞ்செழியன் : நெகிழ்ந்து போன தென்னிலங்கை மக்கள்!!

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் முழு இலங்கையையும் அதிர வைத்துள்ளது.

நாட்டில் அமைதி நிலவி வரும் இந்நிலையில் நீதியை காக்கும் நீதிபதி ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி தாக்குதல் மேற்கொண்டமை பாரதூரமான விடயமாகும்.

நல்லூரில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உயிர் தப்பியிருந்தார். எனினும் அவரின் பாதுகாவலர்களில் ஒருவர் கொல்லப்பட்டும் மற்றுமொருவர் காயமடைந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதிபதியின் பாதுகாப்பு கடமையில் கடந்த 17 வருடங்காக கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர நேற்று இரவு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் தனது மெய்ப்பாதுகாவலரின் இழப்பை தாங்க முடியாத யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி, ஹேமச்சந்திரவின் குடும்பத்தினர் முன்னிலையில் கதறி அழுதார்.

இந்த உருக்கமான சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் இதயங்களை கனக்க செய்துள்ளது.

நீதிபதி இளஞ்செழியனின் இந்த நேர்மையான குணத்தை தென்னிலங்கை ஊடகங்கள் வெகுவாக பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

அதேபோல் சமூக ஊடகங்களிலும் சகல இனங்களைச் சேர்ந்தவர்களும் நீதிபதியின் குணாதிசயத்தை வரவேற்று பதிவிட்டு வருகிறனர்.

இலங்கையில் இவ்வாறு எந்தவொரு அரசியல்வாதியும் தனது மெய்பாதுகாவலரின் உயிரிழப்பை மதித்தில்லை. எனினும் நீதிபதியான இளஞ்செழியன், ஹேமச்சந்திரவின் குடும்பத்தினர் முன்னிலையில் கதறி அழும் காட்சி நெகிழ வைப்பதாக பதிவிட்டுள்ளனர்.

ஹேமச்சந்திரவின் மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கோரி கதறியழுத நீதிபதியை, சிங்கள மக்கள் பாராட்டியுள்ளனர்.

படித்தவர், பதவி பெற்றவர், பட்டம் பெற்றவர் என்ற போதிலும், மனித உயிருக்கு முன்னால் இவ்வளவு நெகிழ்ச்சியடைவதென்பது பாராட்டப்பட வேண்டிய விடயம் என் குறிப்பிட்டுள்ளனர். எந்த இனமாக இருந்தாலும் சிறந்த ஒருவராக நீதிபதி காணப்படுகின்றார்.

இலங்கை அரசியல்வாதிகள் நீதிபதியிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளது. அவரிடம் இருந்து சிலவற்றை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்னமும் மனிதர்களிடம் மனிதாபிமானம் காணப்படுகின்றதென்பதற்கு நீதிபதி சிறந்த உதாரணமாக காணப்படுகிறார்.

தமிழ் நீதிபதி என்ற போதிலும் நன்றிக் கடன் தெரிந்த உண்மையான மனிதன் என நீதிபதியை பலரும் பாராட்டியுள்ளனர்.

நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சூத்திரதாரியின் மோட்டார் சைக்கிள் மீட்பு!!

நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றவரின் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிளை யாழ். அரியாலை பகுதியில் வைத்து இன்று காலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது நல்லூர் பகுதியில் வைத்து நேற்று மாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் லிங்கம் கூல் பார் வழியாக தப்பிச் சென்றிருந்தார்.

இந்த நிலையில் குறித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் அரியாலை பகுதியில் வைத்து கண்டுபிடித்துள்ளனர்.

எனினும், நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேகநபராக கருதப்படும் புனர்வாழ்வு பெறாத முன்னாள் போராளி ஒருவரின் நண்பர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கடந்த 17 வருடங்களாக நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராக பணியாற்றிய சிலாபத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஹேமரத்ன என்பவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் சடலத்திற்கு ஏராளமான பொது மக்கள் அஞ்சலி!!

 
யாழில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் உடல் தற்போது யாழ். பொலிஸ் தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான பொதுமக்கள் வருகைதவருகின்றனர்.

நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிலாபத்தைச் சேர்ந்த 51 வயதாகிய ஹேமரத்ன என்பவர் உயிரிழந்திருந்தார்.

இவர் கடந்த 15 வருடங்களாக நீதிபதி இளஞ்செழியனின் நம்பிக்கைக்குரியவராகவும், அவரது மெய்ப்பாதுகாவலராகவும் பணியாற்றியிருந்தார்.

யாழ். நல்லூர் பகுதியில் நேற்று நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இவர் பரிதாபமாக உயிரிழந்திருந்தார். இவருடைய உடல் பிரேதபரிசோதனையின் பின் இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் யாழ். பொலிஸ் தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், பலரும் அஞ்சலி செலுத்துகின்றனர்.

உயிரிழந்தவரின் உறவினர்களை இனறு காலை யாழ். போதனா வைத்தியசாலையில் சந்தித்த நீதிபதி இளஞ்செழியன் அவர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரியதுடன், கண்ணீர்விட்டு அழுதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே எனக் கதறும் உறவுகள்!!

 
வவுனியா மத்திய தபால் நிலையத்திற்கு அருகே கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர்.

இப் போராட்டம் இன்றுடன் (23.07.2017) 150 நாளை எட்டியுள்ள நிலையில் தமக்கு நீதி கோரி வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலிருந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தினர்.

​காலை 11.30 மணியளவில் வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி வழிபாடு செய்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கந்தசாமி கோவில் முற்றலில் இருந்து நடைபவணியாக மணிக்கூட்டு கோபுரத்தை வந்தடைந்து அங்கிருந்து அவர்களின் போராட்ட இடத்தினை வந்தடைந்தனர்.

நடைபவணியின் போது இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த தாயொருவர் வீதியில் உருண்டு கதறி அழுவதை காணக்கூடியதாக இருந்தாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.​

வவுனியாவில் பொலிஸ் நடமாடும் சேவை!!

 
வவுனியா பொலிசாரினால் பொலிஸ் நடமாடும் சேவை நிலையமொன்று இன்று (23.07) காலை 10 மணியளவில் காத்தார்சின்னகுளம் கிராம சேவகர் பிரிவிலுள்ள அண்ணாநகர் கிராமத்தில் கோவில் பிரார்த்தனைகளின் பின்னர் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார இந்நிலையத்தினைத் திறந்து வைத்தார். இதன் போது வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி சோமரத்ன விஜயமுனி, பிரதேசத்தின் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தக சங்க தலைவர் கே.ராஜலிங்கம், கிராம சேவகர்கள், மத தலைவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள், பொலிஸ் அதிகாரிகள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நடமாடும் சேவை நிலையத்தின் செயற்பாடுகள் இன்று (23.07) தொடக்கம் எதிர்வரும் ஆவணி மாதம் (23.08) வரை சுமார் ஒரு மாத காலம் செயற்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதன் மூலம் பிரதேசத்தின் புத்திஜீவிகள் மற்றும் பொது மக்களினால் முன்வைக்கப்படும் பிரதேசத்தின் அபிவிருத்திப்பணிகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக அடையாளங்காணப்பட்டு அவற்றினை நிறைவேற்றி முடிப்பதற்கு வழிகாட்டியாகச் செயற்படுதல் மக்களின் முறைப்பாடுகளுக்குத் தீர்வு பெற்றுக் கொடுத்தல், சிரமதானம், வடிகால் அமைத்தல், துப்பரவு செய்தல், வீதி அமைத்தல் போன்ற பல்வேறு பொது மக்கள் நலன்சார்ந்த பணிகனை முன்னெடுக்கவுள்ளதாக நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அத்துடன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு வசதியற்ற கே.கமலநாதன் குடும்பத்திற்கு வீடு கட்டுவதற்காக அடிகல்நாட்டி வைக்கப்பட்டதுடன், ஒரு மாத காலத்திற்குள் வீடு கட்டி கொடுப்பதாக பொலிசார் உறுதியளித்திருந்தனர்.

நோயினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாதுள்ள அம்மாவிற்கு முச்சக்கர நாற்காலி வழங்கியும் வைக்கப்பட்டது. அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும், கண் பார்வை குறைவுற்றோருக்கான கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா மாவட்ட 29வது இளைஞர் விளையாட்டு விழா!!

 
வவுனியா மாவட்டத்தின் 29வது விளையாட்டு விழா நிகழ்வுகள் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் நேற்று (22.07.2017) காலை 10.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்றது.

29வது இளைஞர் விளையாட்டு விழாவின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் நகர பிதாவும், வட மாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு அதிதிகளாக இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.முனபர், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வடக்கு மற்றும் வன்னி மாகாண இளைஞர் சேவைகள் மன்றத்தின் கண்காளர் திரு.இரட்ணகுமார் ஆகியோர் சிறப்பித்தார்கள்.

கௌரவ அதிதிகளாக வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஜெகதீஸ்வரன்(சிவம்), இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன், IAPS அக்கடமியின் பணிப்பாளர், சபரி அச்சக நிறுவன உரிமையாளர் பிரசாத் மற்றும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஜ.சுகானி மற்றும் இளைஞர் சேவை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டதுடன்,

இவ் வருட விளையாட்டு நிகழ்வில் பரிசளிப்பு நிகழ்வு மற்றும் உதைபந்தாட்ட கண்காட்சி போட்டிகள் நடைபெற்றது. கண்காட்சி போட்டியில் 786 இளைஞர் கழகம் எதிர் அல் இக்பால் இளைஞர் கழகங்கள் மோதிக்கொண்டன.

அத்தோடு தடகள மற்றும் பெரு விளையாட்டு விழாக்களின் பரிசளிப்பு நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

வவுனியாவில் இன்னுயிர் ஈரத்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு!!

 
வவுனியா கனகராயன்குளத்தில் ஈழப்புரட்சி அமைப்பின் (ஈரோஸ்) ஏற்பாட்டில் நேற்று (22.07.2017) மாலை 4.00 மணியளவில் விடுதலை போராட்டத்தில் இன்னுயிர்களை அர்பணித்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூறும் நிகழ்வும் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.

யுத்தத்தில் உயிர்நீத்த போராளிகள் , பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் பொதுச்சுடரும் ஏற்றி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான தியாகராஜா, மயூரன், சிறிரேலோ அமைப்பின் செயலாளர் உதயராசா ,ஈரோஸ் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் புஸ்பராசா , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஈரோஸ் அமைப்பினரின் வளாகத்தில் 480 மரக்கன்றுகள் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நீதிபதி இளஞ்செழியனை கொலை செய்ய முயற்சித்தவர் இனங்காணப்பட்டதாக பொலிஸ் தகவல்!!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லூர் பின் வீதியில் நேற்று சனிக்கிழமை மாலை 5.10 மணியளவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றமையால் அங்கு பெரும் பதற்ற நிலை உருவாகியது.

இந்தச் சம்பவத்தின் போது, யாழ். மேல் நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொரு மெய்ப்பாதுகாவலர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு நடாத்திய துப்பாக்கிதாரியை அடையாளம் கண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிதாரி புங்குடுதீவு நாலாம் வட்டாரத்தை சேர்ந்தவர் என்றும் அவர் மீது கொலை வழக்கு ஒன்று நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, நேற்றைய தினம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் அனலைதீவை சேர்ந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

-தமிழ்வின்-

யாழ். நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!!

 
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்.நல்லூர் பின்வீதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மெய்ப்பாதுகாவலர், யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், நேற்றிரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிந்த நிலையில், அவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த மெய்ப்பாதுகாவலரின் சடலம் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவரது சடலம் சிலாபத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் அவரது வீட்டில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்ற பின்னர் சடலம் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஹேமரத்ன என்பவர் 17 ஆண்டு காலமாக நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக இருந்தார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

அத்துடன்,யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் வாகனத்தை இடைமறித்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் ஹேமரத்னவிற்கு, உப பொலிஸ் பரிசோதகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மெய்ப்பாதுகாவலர்களின் சடுதியான செயற்பாட்டாலேயே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.