திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுடைய சிறுமியொருவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் அழைத்துச் சென்று வைத்திருந்த இளைஞரை, எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான், நேற்று (01) உத்தரவிட்டார்.
புன்னையடி- ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞருக்கும் சிறுமியும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாகவும் சிறுமியை, யாருக்கும் தெரியாமல் வாகரை பகுதிக்கு அழைத்துச் சென்று இளைஞரின் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில், சிறுமியின் பெற்றோர் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய, இளைஞரை நேற்று முன்தினம் (30) இரவு பொலிஸார் கைது செய்துள்ளார்.
விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமையைக் கொண்டவர் கல்பனா சாவ்லா. இவர் நாசாவில் பணியாற்றியவர்.
2003ஆம் ஆண்டு விண்வெளிப்பயணம் ஒன்றில் ஈடுபட்டு, பூமிக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் விண்கலம் வெடித்து உயிரிழந்தார்.
பல சாதனைகளையும் பெருமைகளையும் தம் வசம் கொண்ட கல்பனாவிற்கு பிறகு மீண்டும் ஒரு இந்திய வம்சாவளிப் பெண் விண்வெளியில் சாதனைகளைப் புரிந்துள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ் என்ற இந்திய வம்சாவளியான அமெரிக்க விண்வெளி வீராங்கனையே இவ்வாறு பெருமைப்படுத்தப்படுகின்றார்.
இவர் விண்வெளி வீராங்கனை மட்டுமல்லாது அமெரிக்க கப்பல் படை அதிகாரியும் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் ஒரே தடவையில் 195 நாட்களை விண்வெளியில் கழித்த பெண் என்ற சாதனையை கொண்டுள்ளார்.
மேலும், விண்வெளியில் 7 தடவைகள் நடந்ததன் மூலம், அதிக தடவைகள் விண்வெளியில் நடந்த பெண் என்ற சாதனையும் இவருக்கு உண்டு.
அத்துடன் விண்வெளியில் 50 மணி 40 நிமிடங்கள் என்ற நீண்ட நேரம் நடந்ததன் மூலம், நீண்ட நேரம் விண்வெளியில் நடந்த பெண் என்ற சாதனைகளையும் இவர் புரிந்துள்ளார்.
ஏப்ரல் 2006 இல், டிஸ்கவரி விண்வெளிக்கலத்தில் வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டார்.
இதன்போது, பகவத் கீதை புத்தகம், ஒரு பிள்ளையார் படம் மற்றும் சில சமோசாக்கள் போன்றவற்றையே தன்னுடைய சொந்தப் பொருளாக விண்வெளிக்கு இவர் எடுத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் ஏப்ரல் 16, 2007ஆம் ஆண்டு விண்வெளி நிலையத்தில் இருந்து பாஸ்டன் மராத்தான் ஓடிய முதல் நபர் என்னும் பெருமையை வில்லியம்ஸ் பெற்றார் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.
கல்பனா சாவ்லாவிற்கு பிறகு விண்வெளிப்பயணத்தில் பல்வேறு சாதனைகளைப் புரிந்த பெண் என்ற பெருமையினையும் இந்திய வம்சாவளிப் பெண்ணான சுனிதா எல். வில்லியம்ஸ் பெற்றுள்ளார்.
பிரித்தானியாவில் வசித்துவரும் வேன் ப்ரெஸ்காட் மற்றும் ஸ்டீஃப் தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை பிரெய்டன்.
பிரெய்டனுக்கு 2 வயதாக இருந்தபோதே புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரெய்டன் உயிரிழந்துள்ளார்.
மரணிக்கும் தருவாயில் நடந்த விடயங்கள் கண் கலங்க வைக்கின்றன. பிரெய்டன் நள்ளிரவில் புற்றுநோய் வலியால் முனங்கியுள்ளான். சிறுவனின் தந்தை தனது தோளில் அவனை சாய்த்துள்ளார்.
திடீரென தன்னை போட்டோ எடுக்கும்படி கூறியுள்ளார். உடனடியாக அவனது தாய் அவனை போட்டோ எடுத்துள்ளார்.
போட்டோ எடுத்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்துவிட்டான் பிரெய்டன். தற்போது அவனை இழந்து அந்த குடும்பம் தவித்து வருகிறது.
பிரெய்டனின் நினைவு எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த குடும்பத்தினர் தினமும் அவனைப் பற்றி பேசி வருகின்றனர்.
தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் பிரெய்டனின் தாய் ஸ்டீஃப். தனக்கு ஒரு தங்கை வேண்டும் என பிரெய்டன் விரும்பியதாகவும் தனக்கு பிறக்கப்போகும் பெண் குழந்தை பிரெய்டன் கொடுத்த பரிசு எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரெய்டனின் புகைப்படங்களை பெற்றோர் வெளியிட்டுள்ளனர்.
வவுனியா – கோவில்புதுக்குளம் சந்தியில் நான்கு பேருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்று முன்தினம் (30) இரவு இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் ஒரு மணி நேரமாக அப்பகுதியில் சற்று பதற்றமான சூழ்நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
கோவில்புதுக்குளம் சந்தியில் நின்ற இரண்டு பேருக்கும் வீதியில் பயணித்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் மோதலாக மாறியுள்ளது.
மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்தவர் 32 வயதுடைய எஸ்.ரஜீவ்காந் (சூப்பி) எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பாக வவுனியா தமிழ்மொழிமூல அவசர பொலிஸ் சேவைக்கு (0766224949) தகவல் வழங்கியுள்ளனர்.
எனினும் வவுனியா பொலிசார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில்மாகாண முதலமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக தனதுஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டுமொரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளதாக முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சட்டபூர்வமான, சுயாதீனமானதொரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு மீண்டும்விசாரணைகள் நடைபெறுமானால் அதற்கு முன்னைய விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கியது போன்று பூரணமான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளேன்.
எனினும் அவ்வாறான விசாரணைக்குழு அமைக்கப்படாதவிடத்து மத்திய அரசின் சட்டபூர்வமான விசாரணைக் குழுவான இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றி புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் நானாக ஆஜராகி என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சமர்ப்பித்து விசாரணைக்கு உட்படுவேன் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நான் ஒருபோதும் விசாரணைக்கு பயந்தவன் அல்ல. பயப்படவேண்டிய அவசியமும் எனக்கில்லை. நான் எந்தவிதமான குற்றங்களையும் செய்யவில்லை.
இந்த மாகாணத்தின் சுகாதாரதுறை அபிவிருத்திக்காகவும், கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்காவும் பணி செய்யவே எனது மருத்துவ தொழிலை இராஜினாமா செய்துவிட்டு பொதுவாழ்க்கைக்கு வந்தேன்.
அமைச்சுப் பதவியும் நான் கேட்டுப் பெற்றுக்கொள்வில்லை. துறைசார் அனுபவத்தின் அடிப்படையில் கட்சியின் தலைமையும், மாகாண முதலமைச்சரும் என்னை அமைச்சராக நியமித்தார்கள். அவர்களால் எனக்கு வழங்கப்பட்ட பதவியைக்கொண்டு மாகாணத்தின் சுகாதார துறை அபிவிருத்திக்கும்,யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எனது சக்திக்கும், மாகாண சபையின் சக்திக்கும் அப்பாற்பட்ட வகையில் அர்ப்பணிப்புடன் எனது கடமையை செய்திருக்கின்றேன்.
தற்போதும் செய்துகொண்டிருக்கின்றேன். கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அநாதரவாக விடப்பட்டுள்ள பொதுமக்கள், முன்னாள் போராளிகள், பெற்றோரை இழந்த சிறுவர்கள், கணவனை இழந்த மனைவிமார், விசேட தேவைக்குட்பட்டவர்கள், இவர்களை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்காக நாங்கள் எவ்வளவோ செய்ய வேண்டியுள்ளது.
அவர்களுக்கான விசேட செயற்திட்டங்கள் பலவற்றை எனது அமைச்சு செய்து வருகின்றது. அதைவிடுத்து வெறும் ஆவேசப்பேச்சுக்களை மட்டும் பேசி காலத்தை வீணடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
மக்களோடு மக்களாக அவர்களின்துன்பதுயரங்களில் பங்கெடுத்தவன் என்ற வகையில் அவர்களின் துயரங்களை நன்கறிவேன். கடந்த மூன்றரை வருடங்களில் வடக்கு மாகாண சுகாதாரத்துறை பாரிய அபிவிருத்திகளை கண்டுள்ளது.
இதை கண்கூடாக பார்க்கலாம். நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமான பல திட்டங்களை நாங்கள் செய்திருக்கின்றோம். எனினும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளாலும், பதவி மோகத்தினாலும் சிலர் என்மீது அபாண்டமான பழியைச்சுமத்தியுள்ளனர்.
மக்கள் தங்கள் வாக்குபலத்தினினால் தங்களுக்கு சேவை செய்யவே எங்களை தெரிவு செய்துள்ளனர். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு எனக்கு உள்ளது.
மக்கள் மனங்களிலுள்ள சந்தேகத்தை போக்கவேண்டியது எனது கடமையாகும். அதை செய்வதற்காக சட்டபூர்வமான, சுயாதீனமானதொரு விசாணைக்குழு முன்னிலையில் அல்லது மத்திய இலஞ்சஊழல் ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு சமூகமளிக்க தயாராகவுள்ளேன் என்று அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவில் தாம் ஆஜராகமாட்டேன் என இவர் முன்னர் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் கிழக்குப் பிரதேசத்தில் இறுதி யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட சில குண்டுகள் இன்று காலை வெடித்துச் சிதறியுள்ளன.
முள்ளிவாய்க்கால் – நந்திக்கடல் வெளிப்பிரதேசத்தில் பொது மக்களின் வயல் நிலங்கள் உள்ளிட்ட காணிகளை இலங்கை படையினர் அண்மையில் விடுவித்திருந்தனர்.
குறித்த காணிகள் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த காணி நிலங்களை பொதுமக்கள் சுத்தம் செய்து தீ மூட்டிய போதே குறித்த குண்டுகள் வெடித்துச் சிதறியுள்ளன.
இதனால் அந்த பிரதேசத்தில் சிறிது நேரம் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பொதுமக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டமையினால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தம் முடிவடைந்த நிலையிலும் அப்பகுதியில் இன்றும் வெடிபொருட்கள், மற்றும் யுத்த சுவடுகள் காணப்படுகின்றன.
புதைக்கப்பட்ட நிலையிலும், கைவிடப்பட்ட நிலையிலும் ஆங்காங்கே வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட வண்ணம் உள்ளன.
அந்த வகையில் படையினரால் விடுவிக்கப்பட்ட நிலங்களிலும் இறுதி யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் காணப்படுகின்றன. அவற்றை சுத்தம் செய்யும் போது சில நேரங்களில் வெடிப்பு சம்பவங்களும் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று காலை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் தலைமையில் ஒப்பு கொடுக்கப்பட்டது.
அத்துடன், திருகோணமலை மறைமாவட்ட ஆயர், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் ஆகியோரும் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 23ஆம் திகதி மடு ஆலயத்தில் மடு ஆலய பரிபாலகர் தலைமையில் பாப்பரசரின் கொடியும் மடு அன்னையின் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று காலை திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனியும், அதனைத் தொடர்ந்தும் ஆசியும் வழங்கப்பட்டது.
இதன்போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை, மடு பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ் பிள்ளை, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன், மடு திருவிழாவில் நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் சிம்பாவேயிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த போட்டியில் அறிமுகமான வனிது ஹஸரங்கா கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரை பதித்துள்ளார்.
அறிமுக போட்டியிலே வனிது ஹஸரங்கா மூன்று விக்கெட்டுக்களை ஹெட்ரிக் முறையில் பெற்றதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியிலே ஹெட்ரிக் எடுத்த மூன்றாவது வீரராக பெயர் பதித்துள்ளார்.
இதற்கு முன்னதாக பங்களாதேஷ் அணியின் தையூல் இஸ்லம் மற்றும் தென்னாபிரிக்க அணியின் கஜிஸோ ரபாடா ஆகியோர் அறிமுக போட்டியிலே ஹெட்ரிக் எடுத்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சகலத்துறை ஆட்டக்காரரான வனிது ஹஸரங்கா 19 வயதுடையவர் என்பதுடன்,லஹிரு மத்துஷங்கவிற்கு பதிலாக இன்றைய போட்டியில் களமிறக்கப்பட்டார்.
Sri Lanka’s Wanidu Hasaranga (L) celebrates after he dismissed Zimbabwe’s Donald Tiripano (R) during the second one-day international (ODI) cricket match between Sri Lanka and Zimbabwe at the Galle International Cricket Stadium in Galle on July 2, 2017. / AFP PHOTO / ISHARA S. KODIKARA
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் நேற்று (01.07.2017) சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை 4 மணியளவில் வந்தடைந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள் என்பன இடம்பெற்றது.
அத்தோடு சிறப்பு நிகழ்வாக, தென்னிந்திய பின்னணிப் பாடகர்கள் ஹரிஹரசுதன் ( ஊதா கலர் ரிப்பன் பாடல் புகழ்), மற்றும் ஸ்வாகதா சுந்தர், கலக்கப்போவது யாரு புகழ் அமுதவாணன், இவர்களுடன் இலங்கையின் முன்னணிக் கலைஞர்களுடன் இலங்கையில் முதல்தர இசைக்குழுக்களில் ஒன்றான ஸ்ருதிலயா இசைக்குழுவின் இசையில் மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகள் அனைத்தையும் வவுனியா நெற் குழுவினர் இணையத்தளம் மூலமாக நாள் முழுவதும் HD தொழில்நுட்பத்துடன் நேரடி ஒளிபரப்பினை மேற்கொண்டனர்.
தொடர்ச்சியாக 5வது ஆண்டாக இவ் ஆலயத்தின் பொங்கல் விழா நிகழ்வுகளை வெற்றிகரமாக நேரடியாக ஒளிபரப்பிய வவுனியா நெற் இணையத்தளம் இம்முறை நவீன ஒலி, ஒளி சாதனங்களுடன் மிகத் துல்லியமான FULL HD தரத்துடன் பகல் மற்றும் இரவு நேர நிகழ்வுகள் ஒளிபரப்பு செய்தது.
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் இன்று (01.07.2017) சனிக்கிழமை நடைபெற்று வருகின்றது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை 4 மணியளவில் வந்தடைந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள் என்பன இடம்பெறவுள்ளது.
அத்தோடு சிறப்பு நிகழ்வாக, தென்னிந்திய பின்னணிப் பாடகர்கள் ஹரிஹரசுதன் ( ஊதா கலர் ரிப்பன் பாடல் புகழ்), மற்றும் ஸ்வாகதா சுந்தர், கலக்கப்போவது யாரு புகழ் அமுதவாணன், இவர்களுடன் இலங்கையின் முன்னணிக் கலைஞர்களுடன் இலங்கையில் முதல்தர இசைக்குழுக்களில் ஒன்றான ஸ்ருதிலயா இசைக்குழுவின் இசையில் மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுகள் அனைத்தையும் இணையத்தளம் மூலமாக நாள் முழுவதும் HD தொழில்நுட்பத்துடன் நேரடி ஒளிபரப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக இவ் ஆலயத்தின் பொங்கல் விழா நிகழ்வுகளை வெற்றிகரமாக நேரடியாக ஒளிபரப்பிய வவுனியா நெற் இணையத்தளம் இம்முறை நவீன ஒலி, ஒளி சாதனங்களுடன் மிகத் துல்லியமான FULL HD தரத்துடன் பகல் நேர நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ததுடன் இரவு நேர நிகழ்வுகள் இரவு 9 மணி தொடக்கம் அதிகாலை 5 மணிவரை நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது.
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரிக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
வட மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண அரசியலில் சர்ச்சை நிலை தொடர்கின்ற நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஒற்றுமையாகச் செயற்படுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்த இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து அறிவுரை கூறியுள்ளார் என்று கூறப்படுகின்றது.
இந்தியத் தூதுவராகப் பதவியேற்ற பின்னர் யாழ்ப்பாணத்துக்கு முதல் தடவையாக வியாழக்கிழமை சென்ற இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, வடக்கு மாகாண முதலமைச்சரை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்டிருந்த உச்சக்கட்ட குழப்பம், அதன் பின்னரான நிலைமைகளிலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது, வடக்கு மாகாண உட்கட்டமைப்பு அபிவிருத்தி, வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்புவதற்கு உங்களிடம் ஒன்றுபட்ட ஒற்றுமை இருக்கவேண்டும்.
அரசியல் தீர்வை எடுப்பதற்கும் ஒற்றுமையாக இருப்பது உதவியாக இருக்கும் என்றும் முதலமைச்சரிடம் இந்தியத் தூதுவர் எடுத்துரைத்தார் என்று கூறப்படுகின்றது.
உள் அரசியல் விவகாரங்களில் நேரடியாகத் தலைபோடுவதை அவர் தவிர்த்து மறைமுகமாகவே விடயங்களைச் சுட்டிக்காட்டியதாக கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர் ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்துக்குள் ஒழுக்க விழுமியங்களை மீறிச் செயற்படும் எம்.பிக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் ஏற்பாடுகள் அமைந்துள்ள புதிய நிலையியல் கட்டளைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜூலை மாதத்துக்குரிய முதல்வார நாடாளுமன்றக் கூட்டத்தொடர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அன்றைய தினம் இதை நிறைவேற்றுவதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் அந்த வாரத்துக்குள் எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் சபாநாயகர் உறுதியாக இருக்கின்றார் என்றும் அறியமுடிகின்றது.
இலங்கை நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகள் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் நவீன யுகத்துக்கேற்ப முழுமையாக மாற்றியமைக்கப்படவுள்ளது. இதற்கான உத்தேச வரைபு நகல் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
உத்தேச வட்ட வரைபு குறித்து திருத்தங்களை முன்வைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த 22ஆம் திகதிவரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, இறுதி வரைபு செவ்வாயன்று நிறைவேற்றப்படவுள்ளது.
புதிய நிலையியல் கட்டளைகளின் பிரகாரம் சபை அமர்வுகளின்போது ஒழுக்க விழுமியங்களைப் பின்பற்றாது, குழப்பங்களை ஏற்படுத்தும் எம்.பிக்களுக்கு இரண்டு வாரங்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு சபாநாயகரால் தடைவிதிக்க முடியும்.
அத்துடன், சபை அமர்வைக் குழப்பியடிக்கும் வகையில் செங்கோல் மீது கைவைத்து அதை தூக்கிச் சென்றால் குறித்த உறுப்பினருக்கு எட்டு வாரங்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு தடைவிதிப்பதற்குரிய ஏற்பாடும் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை, கேள்வி பதில் நேரத்தின்போது எம்.பிக்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் சபையில் இருக்க வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. எம்.பிக்களின் வருகை உட்பட ஏனைய விடயங்கள் குறித்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிலையியல் கட்டளைகள்,
நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளானவை இணங்கப்பட்ட விதிகளாகும். இவற்றின் கீழ் நடைமுறைகள், விவாதம் மற்றும் சபையினுள் உறுப்பினர்களது நடத்தை என்பன சீரமைக்கப்பட்டுள்ளன.
நிலையியல் கட்டளைகளின் பிரதான நோக்கமானது,
நாடாளுமன்றத்தின் ஒழுங்கமைதியுடைய காத்திரபூர்வமான செயற்பாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகளை வகுத்துரைப்பதாகும்.
நிலையியல் கட்டளைகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளின் மிக முக்கியமான மூல ஆதார ஏடாகவும் மற்றும் விவாதங்களுக்கு அதிக சந்தர்ப்பம் அளிப்பனவாகவும், பரிசீலனையின் பின்பு தீர்மானங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவனவாகவும் உள்ளன.
இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் அரசமைப்பின்கீழ் நிலையியல் கட்டளைகள் விதிகளுக்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நூல்நிலையத்தில் காணப்படுகின்ற பதிவுகளின்படி நிலையியல் கட்டளைகளின் முதலாவது தொகுதி அப்போதைய சட்டவாக்கச் சபையால் 1912ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
அப்போதைய பிரிட்டன் நாடாளுமன்றத்தை இவை அடிப்படையாகக் கொண்டமைந்தன. அதன் பின்னர் நாடாளுமன்ற வரலாற்றிலே பல்வேறு கட்டங்களிலே அத்தகைய புதிய நிலையியல் கட்டளைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
நாடாளுமன்ற தீர்மானத்தின் மூலம் நிலையியல் கட்டளைகளுக்கு ஏற்பாடு செய்யலாமென இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் 1978ஆம் ஆண்டு அரசமைப்பின் 74ஆம் உறுப்புரை குறிப்பிடுகின்றது.
முன்னர் நடைமுறையில் இருந்த நிலையியல் கட்டளைகளுக்குப் பொருத்தமான மாற்றங்களை மேற்கொண்டு, தற்போது நடைமுறையிலுள்ள நிலையியல் கட்டளைகள் 1978ஆம் ஆண்டு அரசமைப்பின்கீழ் கட்டமைக்கப்பட்டு 1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன.
சபையால் காலத்துக்குக் காலம் நிலையியல் கட்டளைகளுக்குத் திருத்தங்கள் கொண்டுவர முடியும். 123ஆம் நிலையியல் கட்டளையின்கீழ், நிலையியல் கட்டளைகள் குழுவொன்று நியமிக்கப்படல் வேண்டும்.
பொதுத் தேர்தலொன்றின் பின்னர் நடைபெறும் முதலாவது கூட்டத்தின்போது மேற்கொள்ளப்படவேண்டிய நடைமுறைகள், உறுப்பினர் இருக்கை ஒழுங்கு, சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோரைத் தெரிவுசெய்தல்.
புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாணம் அல்லது உறுதிப்பிரமாணம், கூட்டங்களுக்கான திகதி, நேரம் ஆகியவற்றை நிர்ணயித்தல் போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதாக தற்போதைய நிலையியல் கட்டளைகள் தொகுதி காணப்படுகிறது.
கூட்ட நடப்பெண், நாடாளுமன்ற அலுவல்கள் போன்றனவும் கூட நிலையியல் கட்டளைகள் மூலமாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன.
அவசர சட்டமூலங்களுக்கான நடைமுறைகள், தனியார் உறுப்பினரின் சட்டமூலம், ஒதுக்கீட்டுச் சட்டமூலம், வாக்களித்தல் போன்றனவும் நிலையியல் கட்டளைகளில் விதித்துரைக்கப்பட்டுள்ளன.
விவாதத்துக்கான ஒழுங்குவிதிகள், நாடாளுமன்றத்தில் உரையாற்றும் உறுப்பினர்களுக்கான விதிகள், உரையாற்றா உறுப்பினர்களுக்கான விதிகள் மற்றும் நாடாளுமன்றத்தில் ஒழுங்கு போன்ற விடயங்களை நிலையியல் கட்டளைகள் தெளிவாக நெறிப்படுத்துகின்றன.
கலேவல, பம்பரகஸ்வெவ பிரதேசத்தில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சோகச் சம்பவம் ஒன்று நேற்று நிகழ்ந்துள்ளது.
கொஸ்கஸ்ஹின்ன பாடசாலையில் 3ம் தரத்தில் கல்வி பயிலும் எட்டு வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் (29) பாடசாலையில் இடம்பெற்ற உதவி வகுப்பில் பங்குபற்றியதன் பின்னர், பெற்றோர்கள் அறிந்திராத நிலையில் நண்பர்கள் சிலருடன், பட்டம் விட்டு விளையாட சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, பட்டத்தின் நூலைப் பிடித்தவாறு பின்நோக்கி சென்ற சிறுவன் திடீரென கிணற்றில் வீழ்ந்ததாக அச்சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்த ஏனைய சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அயலவர்கள் சேர்ந்து குறித்த சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதிலும் சிறுவனை காப்பாற்ற முடியாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாங்கள் பட்டம் விட்டு விளையாடும்போது மற்றுமொரு சிறுவனின் கழுத்தில் நூல் சிக்கி காயம் ஏற்பட்டதாக குறித்த சிறுவன், தன்னிடம் தெரிவித்த நிலையில், பட்டம் விட செல்ல வேண்டாம் என தான் அறிவுறுத்தியதாக குறித்த சிறுவனின் உதவி வகுப்பு ஆசிரியை அழுதவாறு தெரிவித்தார்.
கொழும்பு நகர் உட்பட மேல்மாகாணத்தில் ஆங்காங்கே குப்பைகளை வீதிகளில் போட்டுச் செல்லும் நபர்களை சீ.சீ.ரீ.வி. கெமராக்களில் கண்காணித்து கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
தற்போதும் கடந்த சில நாட்களுக்குள்ளும் கொழும்பு நகர் உட்பட மேல்மாகாணத்தில் ஆங்காங்கே குப்பைகளை போட்ட 600 பேரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு வடக்கு, மத்திய கொழும்பு, கொழும்பு தெற்கு, நுகேகொடை, கல்கிஸை, கம்பஹா, களனிய, நீர்கொழும்பு, களுத்துறை பாணந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆங்காங்கே குப்பைகளை கொட்டும் நபர்கள் குறித்தும் குப்பைகளை வீதிகளில் எறிந்து விட்டு தப்பிச் செல்லும் வாகனங்கள் குறித்தும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கும்படியும் பொலிஸ் பேச்சாளர் பொது மக்களைக் கேட்டுள்ளார்.