பெற்றோரின் கவனயீனத்தால் ஒன்றரை வயதுக் குழந்தை பலி!!

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பகுதியில் ஒன்றரை வயது நிரம்பிய பெண் குழந்தை மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கமலதாசன் – சீதையம்மாள் என்போரின் இரண்டாவது புதல்வியான வஸ்மிளா என்பவரே இவ்வாறு தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதேவேளை காயங்களுக்குள்ளான சிறுமி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் போதே உயிரிழந்துள்ளார்.

பிரேதபரிசோதனைகளின் பின் சிறுமியின் சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோரின் கவனயீனமே சிறுமி உயிரிழந்தமைக்கு காரணம் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக பெற்றோர்களினதும், பெரியோர்களினதும் கவனயீனத்தால் பல சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் ஊனமுற்றுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக பல தடவைகள் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அப்பாவின் நினைவாக இருந்தவற்றை நிர்மூலமாக்கிவிட்டனர் : ஒருபெண்ணின் கதறல்!!

எங்கள் அப்பா நடத்திய கடையை காணவில்லை. அவர் கஸ்டப்பட்டு கட்டிய வீட்டையும் தரைமட்டம் ஆக்கிவிட்டார்கள். அப்பாவின் நினைவாக இருந்தவை எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன என கேப்பாப்புலவு மக்களுள் ஒருவரான சதானந்தன் தயாழினி தெரிவித்துள்ளார்.

பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் நேற்று விமானப்படையினரால் விடுவிக்கப்பட்டன. இந்நிலையில் தனது சொந்தக் காணியை சென்று பார்வையிட்ட பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இறுதி யுத்தத்தின் போது பிலக்குடியிருப்பில் இருந்து இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் குடியமர்ந்தோம். அப்போது இராணுவத்தினர் ஏவிய எறிகனை வீச்சினால் எங்கள் அப்பா உயிரிழந்தார்.

அத்துடன், ஏற்கனவே யுத்த அனர்த்தத்தினால் எனது சகோதரனையும் இழந்துவிட்டேன். இப்போது எங்கள் காணியை பார்க்கும் போது அண்ணாவுடன் துள்ளி விளையாடிய நினைவும், அப்பாவின் கஸ்டங்களும்தான் நினைவிற்கு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பை சுற்றித் திரியும் தங்கக் கார்!!

 
கொழும்பு நகர வீதிகளில் தங்க நிறத்திலான கார் ஒன்று சுற்றித் திரிவதாக சில வாரங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் அதேபோன்று மற்றுமொரு தங்க நிறத்திலான கார் கொழும்பை சுற்றி வருகின்றது. அந்த காரின் பதிவு இலக்கத்தை கொண்டு, அதன் உரிமையாளர் யார் என்பது தொடர்பில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த பிரபல நபரான Sheymon Rauff என்பவரினால் இந்த கார் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

“gold chrome wrap” நிறுவனத்தின் முதலாவது “Overfinch Range Rover” காரே இவ்வாறு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சிறைச்சாலை பஸ் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டார்!!

களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட மேலும் சில சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களில் சிலர் போலியான கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்ளுக்கு சந்தேகநபர்களின் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை கண்காணிப்பதற்காக இரண்டு விசேட பொலிஸ் குழுக்களை விமான நிலையங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவின் விசேட கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

களுத்துறை சிறைச்சாலையில் இருந்து கடுவல நீதவான் நீதிமன்றம் நோக்கி கடந்த 27 ஆம் திகதி கைதிகளை ஏற்றிச்சென்ற சிறைச்சாலை பஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதிகள் ஐவரும், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

பாதாள உலகக்கோஷ்டித் தலைவரான சமயங் என அழைக்கப்படும் அருண உதயசாந்த பத்திரணவும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

சிறைக் கைதிகளை நிர்வாணப்படுத்தி போதை மருந்து தேடுதல் வேட்டை!!

பிலிப்பைன்ஸ் சிறைச்சாலையொன்றில் பொலிஸார் நூற்றுக்கணக்கான கைதிகளை நிர்வாணப்படுத்தி போதை மருந்து தேடுதல் வேட்டை நடத்தியது மனித உரிமை செயற்பாட்டாளர்களை வெகுண்டெழச் செய்துள்ளது.

பிலிப்பீன்ஸில் போதை மருந்துப் பாவனையைத் தடுப்பதற்காக அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ ட்யூடர்தே கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளார். மரண தண்டனை வரை நீளும் இந்தச் சட்டங்கள் குறித்து சர்வதேசங்களும் அதிருப்தி தெரிவித்துள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, பிலிப்பீன்ஸின் செபு மாகாணத்தின் சிறைச்சாலையில், கைதிகளிடையே போதை மருந்து பாவனை இருப்பதாகக் கூறி போதை மருந்து தடுப்புப் பிரிவினரும், பொலிஸாரும் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதன்போது, சிறையில் மறித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து கைதிகளும் முழு நிர்வாணமாக்கப்பட்டு சிறைச்சாலை அரங்கில் அமரவைக்கப்பட்டனர். பின்னர் கழிவறைகள் உட்பட சிறைச்சாலை முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையும் போதை மருந்து தடுப்புப் பிரிவு இணையத்தில் வெளியிட்டது.

இதையடுத்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இந்தச் செயலுக்காக தமது கடும் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.

எனினும், இதன்போது மரிஜுவானா உட்பட போதை மருந்து பக்கெற்றுகள் சிலவற்றையும், அலைபேசிகள், கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களையும் தாம் கைப்பற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

என்றபோதிலும், கைதிகளின் அந்தரங்கத்தைப் படம் பிடித்து வெளியிடுவது அவர்களது அடிப்படை உரிமைகளை மீறும் குற்றச்செயலாகும் என்று மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவில் நடுவீதியில் எரியும் மர்மத்தணல் : ஆராயும் இராணுவம்!!

 
முல்லைத்தீவு 35 பிரதான வீதியில் மர்மமான தீ தணல்கள் கொட்டிய நிலையில் சுமர் அரை மணிநேரம் அவை நடுவீதியில் எரிந்து புகைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த எரிதனல் வட்டுவாகல் பாலத்திலும், மணற்குடியிருப்பு பாலத்திற்கும் அருகிலும் நடு வீதியில் புகைத்துக் கொண்டிருந்துள்ளதாக கூறப்படுகின்றது .

இந்த நிலையில், போக்குவரத்து சாரதிகள் குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் அச்சத்துடன் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வட்டுவாகல் பாலத்தில் எரிந்து கொண்டிருந்த எரிதனல் நீண்ட நேரம் கற்புரம் எரிவது போன்று எரிந்து கொண்டிருந்தது.

இதன் காரணமாக, அருகில் காவலரனில் இருந்த இராணுவத்தினர் சற்று பரபரப்புடன் காணப்பட்டதாகவும், குறித்த தனல் என்னவென்பது தொடர்பில் அவர்கள் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகின்றது.

எனினும், குறித்த எரிதனல் என்ன..? அது எங்கிருந்து விழ்ந்தது என்பது தொடர்பில் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா செட்டிகுளத்தில் 9 மில்லியன் செலவில் சித்த வைத்தியசாலை திறந்துவைப்பு!!

 
வவுனியா செட்டிக்குளத்தில் சித்தவைத்தியசாலை கட்டிடத்தொகுதி புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தால் இன்று (02.03.2017) காலை 10 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு 2016ம் ஆண்டு மாகாண குறித்தொகுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதியில் இருந்து 9 மில்லியன் ரூபாய் செலவில் கிராமிய சித்த மருத்துவமனை அமைக்கபட்டு திறந்து வைக்கப்பட்டதுடன் மரக்கன்று நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான செந்தில்நாதன் மயூரன், ஜெயதிலக, சுதேச மருத்துவ திணைகளத்தின் வடமாகாண ஆணையாளர் திருமதி.துரைரட்ணம். வைத்தியர் மகேந்திரன், சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன், வைத்தியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்!!

 
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (02.03.2017) மதியம் 1 மணி தொடக்கம் 2 மணி வரை வைத்தியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலபே தனியார் வைத்திய கல்வி வழங்கும் நிறுவனத்தினை அரசுடைமையாகுமாறு அரசினை வலியுறுத்தும் முகமாகவே இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

வைத்திய சேவையின் இதயத்தை காப்போம், போலிப் பட்டம் விற்கும் சைட்டத்தினை மூடு என பல்வேறு பாதாதைகளை தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் தபால் மூலமான கவனயீர்ப்புப் போராட்டம் : ஊடகவியலாளர்களும் பங்கேற்பு!!

 
வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 7ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

கடந்த (28.02.2017) மதியம் 2.30 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நீதி வழங்குமாறு ஜனாதிபதிக்கு தபால் மூலமான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (02.03.2017) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

இப் போராட்டத்தில் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

நெடுவாசல் போராட்டம் : உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்த சிறுவன்!!

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு புரட்சியை அடுத்து நெடுவாசல் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு தமிழகம் மட்டுமில்லாமல் உலகெங்கும் இருந்து தமிழர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நெடுவாசல் மற்றும் அதனனை சுற்றுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் என பெருந்திரளாக போராட்டத்தில் பங்குபெற்று வருகின்றனர்.

போராட்டம் என்றால் வன்முறை, பொது சொத்துக்கள் சேதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். ஆனால் தமிழர்கள் அறவழியில் எந்தவித இடையூறும் இல்லாமல் லட்சக்கணக்கானோர் ஒன்றிணைந்து திருவிழா கோலம் பூண்டதுபோல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்த போராட்டத்தில் உலகளவில் தமிழர்களை கவர்ந்துள்ளான் ஒரு சிறுவன். அந்த சிறுவன் முதுகில் குத்தாதே என்று பின் புறத்திலும் வயிற்று பகுதியில் வயிற்றில் அடிக்காதே என்று முன்பகுதியிலும் எழுதி போராட்டத்தில் பங்கு பெற்றுள்ளான்.

சிறுவனின் இந்த போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை ஆனந்தப்படுத்தும் விதமாக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் பன்றிக்காய்ச்சல் காரணமாக இளம் தாய் மரணம்!!

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்றிக்காச்சல் காரணமாக கடந்த 22ம் திகதி முதல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இளம் தாய் ஒருவர் இன்று(02.03.2017) மரணமடைந்துள்ளதாக வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது..

கடந்த 22ம் திகதி இனங்காணப்பட்ட 25 வயதுடைய ஹெப்பிட்டிக்கொலவ பகுதியைச் பெண்ணொருவர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப்பிரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இவருக்கு குழந்தை கிடைத்து ஒரு கிழமை கடந்த நிலையில் பன்றிக்காய்ச்சல் தொற்றுக்கு முகங்கொடுந்திருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று (02.03) அவர் மரணமடைந்துள்ளார்.

அத்துடன், 37 வயதுடைய பூவரசம்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது தவிர மேலும் ஐவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் பன்றிக்காச்சல் ஏற்பட்டவர்களை பார்வையிடுவதற்கு கர்ப்பிணித் தாய்மார், சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வரவேண்டாம் எனவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் 24மணிநேர பணிப்புறக்கணிப்பு!!

 
மாலபே தனியார் கல்வி நிறுவனத்தினை அரசுடைமையாகுமாறு அரசினை வலியுறுத்தும் முகமாகவே இன்று (02.03.2017) காலை 8.00மணி தொடக்கம் நாளை (03.03.2017) காலை 8.00மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் சேவைகள் மாத்திரமே இயங்கவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் அகிலேந்திரன் தெரிவித்தார்.

பணிப்புறக்கணிப்பு தொடர்பாக வைத்தியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இது இலங்கை மருத்துவ சேவையின் தராதரம் பற்றிய போராட்டம். தரமற்ற மருத்துவர்களை அரசியல் செல்வாக்குக்காகவும் பணத்துக்காகவும் உருவாக்கி நோயாளர்களின் உயிரை பணயம் வைக்கும் அரசியல் வியாபாரிகளுக்கு எதிரான போராட்டம் எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் 7வது நாளாக காணாமல்போனோரின் உறவுகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

 
வவுனியாவில் கடந்த 7 நாட்களாக நாளாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (02.03.2017) 7வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த மாதம் மேற்கொண்ட சாகும் வரையான உணவு தவிர்ப்புப் போராட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டதுடன் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முன்னோற்றம் ஏற்படவில்லை என்று தெரிவித்து தமது போராட்டத்தினை சுழற்றி முறையில் தற்போது 7ஆவது நாளாக மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!!

 
வவுனியாவில் இன்று (02.03.2017) காலை 7மணியளவில் ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓமந்தையிலிருந்து வவுனியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த பார ஊர்தியில் ஜேசிபி ஏற்றப்பட்டு வவுனியாவிற்கு கொண்டு வந்தபோது எதிர்பாராமல் பாரஊர்தி தடம் புரண்டதில் பார ஊர்தியில் பயணித்த மூவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா காணாமல்போனோரின் உறவினர்களின் போராட்டத்திற்கு பல்கலைக்கழக சமூகம் ஆதரவு!!

 
வவுனியாவில் தொடரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் சுழற்சி முறையிலான போராட்டத்திற்கு நேற்று (01.03.2017) பிற்பகல் 2 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர் சமூகம் தமது ஆதரவினை வழங்கும் நோக்கில் ஆசிரியர் சங்கம், உத்தியோகத்தர்கள் மாணவர்கள், என பேரணியாக வந்து காணாமற்போன உறவுகளுக்கு தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நீதி வழங்குமாறு ஜனாதிபதிக்கு தபால் மூலமான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை இன்றுடன் மூன்றாவது நாளாகவும் மேற்கொண்டுவருகின்றனர்.

தபால் மூலமான கவனயீர்ப்பு போராட்டத்திலும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு யுரேனஸ் இளைஞர் கழகத்தால் பரிசில் அன்பளிப்பு!!

வவுனியா யுரேனஸ் இளைஞர் கழகத்தால் சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டிகளுக்கு ரூபா 12,000 பெறுமதியான பரிசில்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று(01.03) சமளங்குளம் பாடசாலையில் இடம்பெற்றது.

இதில் யுரேனஸ் இளைஞர் கழக தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் பரிசில்களை பாடசாலை அதிபரிடம் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் இளைஞர் கழக உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.