எலிசபெத் மகாராணிக்கு இரத்தினக்கல்லை அன்பளிப்பு செய்த, இரத்தினபுரியை சேர்ந்த பிரபல இரத்தினக்கல் வர்த்தகரான நிமல் பதிரண களுபோவில் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்திருந்த நிலையில் காணாமல் போயுள்ளமை தொடர்பில் தற்போதுவரை 10 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போயுள்ள நிமல் பதிரணவின் குடும்பத்தினர், களுபோவில வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் அவர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த அறையிலுள்ள சக நோயாளிகள் ஆகியோரிடமே இவ்வாறு வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளன.
திடீர் சுகயீனம் காரணமாக பொல்ஹேன்கொடவிலுள்ள, தனது இரண்டாவது மனைவியின் மகளின் கணவரினால், நிமல் பதிரண களுபோவில போதனா வைத்தியசாலையில் கடந்த 20 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த 23 ஆம் திகதி மர்மமான முறையில் வைத்தியசாலையிலிருந்து காணாமல் போயுள்ளார்.
எனினும் அவர் காணாமல் சென்று சுமார் ஒருவாரமாகியுள்ள நிலையில் கொஹுவல பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, பிரித்தானிய இளவரசி டயானா – சாள்ஸ் திருமணத்துக்கும் அதன்பின்னர் இளவரசர் வில்லியம்ஸ் – கேட் தம்பதியினரின் திருமணத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோதிரத்தில் பதிக்கப்பட்டுள்ள இரத்தினக்கல்லின் முதல் உரிமையாளர் இவராவார்.
காணாமல்போயுள்ள நிமல் பதிரணவினால் கொள்வனவு செய்யப்பட்ட இந்த இரத்தினக்கல், எலிசபெத் மகாராணி இலங்கைக்கு வந்திருந்தவேளையில் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த இரத்தினக்கல் பதிக்கப்பட்ட மோதிரம் அவர்களது பரம்பரை மோதிரமாக கருத்தப்படுகின்றது.
தற்போது அம்மோதிரத்தை இளவரசி கேட் வில்லியம்ஸ் அணிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








































