தேசிய ரீதியில் நாடக போட்டிகளில் முதல் நிலைகளைப் பெற்ற நாடகங்களான
“பொய் முகம்” ,
“நீருக்குள் நெருப்பு” ,
“ரூ மேன் ரூ வோமேன் டெத் ஆப்ட்டர் பீஸ்” ஆகிய மூன்று நாடகங்களின் காட்சிகளை இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தின் அனுசரணையில், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினரின் ஒழுங்கமைப்பில் இரண்டு காட்சிகளாக மேடையேற்றப்படும்.
முதல் காட்சி 20.11.2016 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கும், இரண்டாம் காட்சி மாலை 4.30 மணிக்கும் வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் நடைபெறும்.
பாடசாலை மாணவர்களுக்கு 30/- பெறுமதியான நுழைவுச்சீட்டும், ஏனையவர்களுக்கு 100/- பெறுமதியான நுழைவுச்சீட்டும் கட்டணங்களாக அறவிடப்படும்.
மேலதிக தொடர்புகள் மற்றும் நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள 0775058672 , 0766644059 , 0770733719 , 0770779434 , 0777991883, 0777712647 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.
வவுனியா குருமன்காடு காளிகோவில் வீதியில் இன்று (15.11.2016) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியா குருமன்காட்டு காளிகோவில் வீதியூடாக தாண்டிக்குளம் நோக்கி பயணித்த காரும் அதே பாதையில் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட தேசிய இலக்கிய கலை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று(15.11.2016) காலை 9 மணிக்கு வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் கா.உதயராஜா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், கௌரவ விருந்தினராக வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி. சா.கர்ணன் மற்றும் தமிழ்மணி அகளங்கன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலை இலக்கிய போட்டி நடாத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இன் நிகழ்வுகள் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீரசிங்கம் பிரதீபன் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று(15.11.2016) காலை வாகன விபத்தொன்றிலிருந்து வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இன்று காலை வவுனியா கற்குளத்தில் நிகழ்வொன்றில் கலந்துவிட்டு செட்டிக்குளம் முதலியார்குளம் பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக பயணித்துக்கொண்டிருந்தபோது பூனாவ என்னும் இடத்தில் அவர் பயணித்துக்கொண்டிருந்த காரின் முன் இயத்திரக் கவசம் (வொனட்) கழன்று முன் கண்ணாடியில் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதி அதனை அவதானித்துக்கொண்டதனால் உடனடியாக காரினை வீதியின் ஓரமாக நிறுத்தியதால் பாரிய இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதுடன் இந்த விபத்தில் தெய்வாதீனமாக வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் காயங்களின்றி தப்பியுள்ளார்.
பொலிவியா நாட்டில் 4 வயது சிறுமியை வன்புணர்வு செய்து கொலை செய்த இளைஞனை பொதுமக்கள் ஒன்று திரண்டு தாக்கிய பின்னர் தூக்கிலிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு பொலிவியாவின் ரீயெஸ் நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் 4 வயது சிறுமி ஒன்றை மாயமான வழக்கில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர் ஒருவரை கைது செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் புறநகர் பகுதியில் இருந்து குறித்த சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டதை அடுத்து, தொடர்புடைய சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு பின்னரே கொலை செய்துள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகுந்து தாக்கி குறித்த நபரை அங்கிருந்து இழுத்து வந்துள்ளனர்.
முக்கிய தெரு வழியாக இழுத்து வந்து குறிப்பிட்ட பகுதியில் வைத்து அந்த நபரை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து அதே மரத்தில் தூக்கிலிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எண்ணிக்கை குறைவான பொலிசார் இருந்ததால் பொதுமக்களின் இச்செயலை தடுக்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த சிறுமியின் உடலும் பொதுமக்களால் தூக்கிலிடப்பட்ட நபரின் உடலையும் பொலிசார் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை யாரையும் பொலிசார் கைது செய்யவில்லை. இருப்பினும் சம்பவத்தில் தொடர்புடைய கிராம மக்களை பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உலகில் மிகவும் பயங்கரமான இயந்திர மனிதனை ரஷ்யா தயாரித்துள்ளது.
இயந்திர படை வீரன் என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. 4 மைல் தொலைவில் இருக்கும் எதிரியை அடையாளம் கண்டு கொலை செய்யும் திறன் இருப்பது இந்த இயந்திர மனிதனின் சிறப்பம்சமாகும்.
இதனடிப்படையில், இந்த இயந்திர மனிதனுக்கு 4 மைல் தொலைவில் இருக்கும் எதிரியை அடையாளம் கண்டு 100 வீதம் குறி தவறாது சுட்டுக்கொல்ல முடியும் என கூறப்படுகிறது. அதேபோல் 400 மீற்றர் தொலைவில் இருக்கும் இலக்கு நோக்கி கைக்குண்டை எறிய முடியும்.
மேலும் வானில் பறந்து வரும் எதிரிகள் மற்றும் ட்ரோன் விமானங்களையும் சுட்டு வீழ்த்தக் கூடியளவில் இந்த இயந்திர மனிதனை ரஷ்ய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
எது எப்படி இருந்த போதிலும் இது மனித இனத்திற்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் உருவாக்கம் என சில விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மனிதர்கள் கண்டவுடன் இந்த இயந்திர மனிதனால் தாக்க முடியும் என்பதே இதற்கு காரணம் என அவர்கள் கூறியுள்ளனர். இதன் எல்லை எங்கு சென்று முடியுமோ என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர், வருமான வரித்துறைக்கு கணக்கில் காட்டாத சுமார் 6000 கோடியை அரசிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்தியாவில் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளதால், வருமான வரித்துறைக்கு கணக்கில் காட்டாமல் பணம் பதுக்கி வைத்திருந்த நபர்கள் அரசிடம் சிக்கி வருகிறார்கள்.
இந்நிலையில், ஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி லால்ஜிபாய் படேல் தன்னிடம் இருந்த 6000 கோடியை அரசிடம் அப்படியே ஒப்படைத்துள்ளார்.
இந்தத் தொகைக்கான வட்டி ரூ.1800 கோடி. வரியின் மீது 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்பதால் மேலும் ரூ.3600 கோடி வரி செலுத்த வேண்டும். அதன்படி ஒட்டுமொத்தமாக ரூ.5400 கோடி வரிபிடித்தம் செய்யப்பட உள்ளது. லால்ஜிபாய்க்கு ரூ.600 கோடி மட்டுமே மிஞ்சும்.
தாமாக முன்வந்து ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்திருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் அதிவேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
திருகோணமலை – கிளிக்குஞ்சு மலை பகுதியில் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளையும் வெட்டி கொலை செய்த சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றின் மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
கன்னியா காட்டுப்பகுதியில் இருப்பதாக தெரிவிக்கபடும் புதையல் பெற்றுக்கொள்ள தமது இரு பிள்ளைகளையும் பலி கொடுக்க வேண்டும் என மனைவியிடம் கேட்டேன்.
எனினும் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வாய்த்தர்கத்தில் மூவரையும் வெட்டிக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 7 மாதங்களாக எவ்வித தொழிலுக்கும் செல்லாது குறித்த சந்தேகநபர் வீட்டில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரது வீட்டுக்கு அருகில் பாரிய கல் மலையொன்று இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில் முகம் வடிவிலான உருவமொன்று காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
அந்த கல்லில் பதியப்பட்டுள்ள படத்தை சந்தேகநபர் நாள் தோறும் பார்த்து வருவதாகவும், அதிகளவில் மந்திரம் மற்றும் சூனியம் போன்றவற்றுடன் சந்தேகநபர் தொடர்புபட்டவர் என தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சந்தேகநபர் புதையல் குறித்த சிந்தனையுடன் இருப்பதாகவும், இதனால் தனது பிள்ளைகளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படலாம் என உயிரிழந்த பெண் தன்னிடம் கூறியதாக உயிரிழந்த பெண்ணின் சகோதரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த முக்கொலை சம்பவத்தால் திருகோணமலை – கிளிக்குஞ்சு மலை பகுதியையே நேற்றைய தினம் சோகத்தில் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் ஒரே நாளில் 10 ஆயிரத்து 975 கிலோ பொருட்களை சேகரித்து தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
தமிழகம் திருநெல்வேலியை சேர்ந்த 52 வயதான வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்தி என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துபாயில் பணியாற்றி வரும் கிருஷ்ணமூர்த்தி சமூக சேவையில் அதிக அக்கறை கொண்டவர். அனைவருக்கும் கல்வியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகின்றார்.
இந்நிலையில், 10 ஆயிரத்து 975 கிலோ எடை கொண்ட கல்வி உபகரணங்களை ஒரே நாளில் சேகரித்து கொடுத்து கிருஷ்ணமூர்த்தி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஒரே நாளில் 50,000 ஆயிரம் நோட்டுப் புத்தகங்கள், 3 லட்சம் பென்சில்கள், 2000 ஆயிரம் புத்தகப் பைகள் உள்ளிட்ட 10,975 கிலோ எடையுள்ள பொருட்களைத் திரட்டியுள்ளார்.
சிரியா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு வழங்கும் நோக்கில் குறித்த பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சேகரிக்கப்பட்டுள்ள பொருட்கள் எமிரேட்ஸ் ரெட் கிரசன்ட் என்ற அமைப்பின் ஊடாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் சுமார் 1 லட்சம் குழந்தைகள் பயன் அடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவர் 4,571 கிலோ பொருட்களை ஒரே நாளில் திரட்டிக் கொடுத்தமையே கின்னஸ் சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படவுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நீர்க் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.
இதன்படி தேனீரின் விலை 5 ரூபாவினாலும், பால் தேனீரின் விலை 10 ரூபாவினாலும், உணவுப்பொதிகள், ப்ரைட் றைஸ், கொத்து போன்றவற்றின் விலைகள் பத்து ரூபாவினாலும் உயர்த்தப்படவுள்ளது.
ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நீர்க் கட்டணங்கள் உயர்த்தப்படுவதனால் மதாந்த நீர்க் கட்டணங்கள் சுமார் பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிப்பதாகவும், இதற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் டிசம்பர் மாதம் 1ம் திகதிக்கு முன்னதாக கொழும்பின் அனைத்து ஹோட்டல்களும் ஒருநாள் மூடி எதிர்ப்பு வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் ரோல்ஸ், பனிஸ் மற்றும் அப்பம் போன்றவற்றின் விலைகள் உயர்த்தப்படாது என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி ஹோட்டல் உரிமையார்கள் சங்க தேசிய சம்மேனத்தில் விலை அதிகரிப்பு குறித்து நிர்ணயிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறையில் இருந்து காலிக்கு பாரிய அளவிலான பயணிகளுடன் பயணித்த யாழ்தேவி ரயிலுக்கு ஏற்படவிருந்த பாரிய விபத்தை நபர் ஒருவர் தடுத்துள்ளார்.
வடக்கு ரயில் வீதியின் 108 3/4 கிலோ மீற்றர் மைல் கல் அருகில் ரயில் பாதை இராண்டாக உடைந்திருந்த நிலையில் ஏற்படவிருந்த விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனை அவதானித்த நபர் ஒருவர் சிவப்பு நிறத்திலான துணியை ரயிலை நோக்கி அசைத்து ஆபத்தினை தெரியப்படுத்தினார். இதனை உணர்ந்து கொண்ட ரயில் சாரதியை ரயிலை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார்.
தம்புக்த்தேகமவில் வசிக்கும் அங்கவீனமுற்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே பாரிய அனர்த்தத்தை தடுத்துள்ளார்.
வெளிநாட்டில் இடம்பெற்ற விபத்தொன்றில் கண்களை இழந்த 44 வயதான W.விஜித என்ற நபர் திறமையாக செயற்பட்டமையால் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற முடிந்துள்ளது.
நேற்று மாலை 3.25 அளவில் பௌணர்மி என்பதனால் விகாரைக்கு செல்வதற்காக வடக்கு ரயில் பாதை ஊடாக பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், வடக்கு ரயில் பாதையின் 10 இலக்கம் பெதிவெவ கிராமத்திற்கு அருகில் (தபுத்தேகம மற்றும் சேனரத்கம ரயில் பாதைக்கு இடையில்) ரயில் பாதை கிட்டத்தட்ட 3 அடி அளவில் உடைந்து பிரிந்து சென்றிருந்தனை கண்ட மக்கள் இது தொடர்பில் பொலிஸ் அவசர இலக்கத்தில் உடனடியாக அறிவித்துள்ளனர்.
அந்த அறிவிப்பு மேற்கொண்டு சில நிமிடங்கள் செல்வதற்கு முன்னர் பயணிகளை ஏற்றிக் கொண்டு தபுத்தேகமயில் இருந்து செனர்த்கம நோக்கி வேகமாக பயணித்த ரயில் ஒன்றின் சத்தத்தை கேட்ட விஜத, உடனடியாக தனது வீட்டிற்கு சென்று சிவப்பு நிறத்திலான ஆடை ஒன்றை எடுத்து வந்து ரயில் வீதியில் விபத்தொன்று ஏற்படும் என்பதனால் ரயில் உடனடியாக நிறுத்துமாறு ரயில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை அசைவுகளை மேற்கொண்டுள்ளார்.
ஆபத்தென்பதனை அறிந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.. ரயிலை நிறுத்திய சாரதி உட்பட அதிகாரிகள் ரயில் பாதையை அவதானித்த போது ரயில் பாதையின் ஒரு பகுதி உடைந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த நபர் சரியான நேரத்தில் இந்த ரயிலை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் பாரிய விபத்தொன்று ஏற்பட்டிருக்கும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் கிட்டத்தட்ட 2500 மேற்பட்ட பயணிகள் யாழ்தேவியில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பறந்துகொண்டிருந்த விமானமொன்றில் நபர் ஒருவர் தனது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக காணப்பட்டதால் அவ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மெக்ஸிகோவின் கென்குன் நகரிலிருந்து ஜேர்மனியின் பிராங்பர்ட் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த விமானமொன்றிலேயே இச் சம்பவம் இடம்பெற்றது.
இச் சம்பவத்தையடுத்து மேற்படி விமானம் அமெரிக்காவின் புளேரிரிடா மாநிலத்திலுள்ள ஜக்ஸன்விலே நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் எயார் மார்ஷல்ஸ் எனும் விமானப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்நபரை கைது செய்தனர்.
34 வயதான ஒலிவர் சார்ள்ஸ், மெக்ஸிகோவில் வசிப்பவர். இவர் பிரித்தானிய பிரஜையாவார். இவர் அதிக மதுபோதையில் இருந்தார் என சக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் புறப்படுவதற்கு முன்னரே இவர் மதுபானமருந்த ஆரம்பித்திருந்ததாகவும், விமானம் புறப்பட்டவுடன் பயணி ஒருவரை கொல்லப்போவதாக அச்சுறுத்தினார் எனவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஒலிவர் சார்ள்ஸ் குற்றவாளியாக காணப்பட்டால் 20 வருடங்கள் வரையான சிறைத் தண்டனை விதிக்கப்பட லாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் பிரிந்து 65 வருடங்களின் பின்னர் மீண்டும் இணைந்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். டேர்பிஷயர் பிராந்தியத்தைச் சேர்ந்த ஹெலன் அன்ட்ரே, டெவி மோக்ஸ் எனும் இத் தம்பதியினருக்கு 1965 ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ஆனால், அவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே பிரிந்தனர். ஆனால், அதன்பின் 65 வருடங்கள் கடந்த நிலையில், அண்மயில் இவர்கள் மீண்டும் சந்தித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
தற்போது டெவி மோக்ஸுக்கு 86 வயது, ஹெலன் அன்ட்ரேவுக்கு 82 வயது என்பது குறிப்பிடத்தக்கது. ஹெலனின் மகளான டெவி வில்லியம்ஸே, டெவி மோக்ஸை தனது தாயாருக்காக மீண்டும் தேடிக் கண்டுபிடித்தாராம்.
டேவி மொக்ஸ் ஓவியராக தொழில் புரிந்ததால் அவர் ஹெலனை திருமணம் செய்து கொள்வதை ஹெலனின் பெற்றோர் விரும்பாததாலேயே இவர்கள் பிரிந்தனர் என டெபி வில்லியம்ஸ் கூறியுள்ளார்.
“இப் பிரிவானது இருவரின் இதயத்தையும் உடைத்தது. ஆனால், அக் காலத்தில் பிள்ளைகள் தமது பெற்றோர் கூறியதன்படியே செயற்பட்டனர்” என் டெபி. டேவி மோக்ஸும், ஹெலன் அன்ட்ரேவும் இடைப்பட்ட காலத்தில் பல தடவைகள் வேறு நபர்களை திருமணம் செய்து விவாகரத்துப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியுறுவார் என பந்தயம் பிடித்த பேராசிரியர் ஒருவர், வண்டு ஒன்றை உட்கொண்டுள்ளார்.
நியூ ஜேர்ஸி மாநிலத்திலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுபவர் கலாநிதி சாம் வாங். இவர் ஒரு நரம்பியல் விஞ்ஞானியாவார்.
இம் முறை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பெறுபேறுகள் தொடர்பாக தனது இணையத்தளத்தில் நுட்பமான ஆய்வுகளை அவர் வெளியிட்டிருந்தார்.
குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைவார் என்றே அவரும் கணித்திருந்தார். அமெரிக்க ஜனாதிபத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 270 தேர்தல் கல்லூரி வாக்குகள் தேவை.
இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் 240 தேர்தல் கல்லூரி வாக்குகளை விட அதிகமான வாக்குகளைப் பெற்றால் தான் வண்டு ஒன்றை உட்கொள்ளத் தயார் என சி.என்.என். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஸ்மேர்கோனிஷ்” எனும் நிகழ்ச்சியில் பேராசிரியர் சாம் வாங் கூறினார்.
இந்நிலையில், 270 இற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளதால், தனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக வண்டு ஒன்றை பேராசிரியர் சாம் வாங் உட்கொண்டார்.
திருமணமான 4 நாட்களில் கணவனை பிரிந்து சென்ற, பெண்ணொருவர் தன் காதலனுடன் 2ஆவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையை சேர்ந்தவர் ராமு, கூலித் தொழிலாளி. இவருடைய மகள் துர்கா ( 21), குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை தண்டபாணி கோவில் வீதியைச் சேர்ந்தவர் காசிலிங்கம் மகன் கேசவன் (24) இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவின் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் துர்காவின் வீட்டுக்கு தெரிய வந்த நிலையில், பெற்றோர் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேறொருவரு க்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் துர்காவை அவரது பெற்றோர் பிச்சனூர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். கடந்த 2ஆம் திகதி குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் இவர்கள் திருமணம் நடைபெற்றது.
ஆனால் தான் காதலித்த நடராஜனை கைப்பிடிக்க முடியவில்லையே என்ற கவலையில் இருந்துள்ளார். கணவருடன் வாழ பிடிக்காமல் காதலனுடன் சேரும் ஆசையில் துர்கா கடந்த 6ஆம் திகதி மாலை கணவனின் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.
அக்கம்பக்கத்தில் உள்ள தோழிகளின் வீட்டுக்கு சென்றிருப்பார் என வீட்டில் உள்ளோர் நினைத்துள்ளனர். ஆனால் வெகுநேரமாகியும் துர்கா வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், துர்காவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்திலும், தோழிகள் வீட்டிலும் விசாரணை செய்துள்ளார். இருப்பி னும் துர்கா குறித்த எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து துர்காவின் பெற்றோர் குடியாத்தம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதன்பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன புதுப்பெண் துர்காவை தேடி வந்தனர்.
இதனிடையே வீட்டை விட்டு வெளியேறிய துர்கா, 7 ஆம் திகதி காலையில் தனது காதலனை திருமணம் செய்துகொண்டார். பின்னர் பரதராமி அருகே உள்ள வீரிசெட்டிபல்லி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது பொலிஸாரும், உறவினர்களும் தங்களை தேடுவதை அறிந்த அவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை குடியாத்தம் சென்றுள்ளனர். பொலிஸார் அவர்களை பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த துர்காவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது துர்கா பொலிஸாரிடம் தனது காதலனை திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன்தான் வாழ்வேன் என கூறியுள்ளார். இதனையடுத்து அவர்களை பொலிஸார் குடியாத்தம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அமெரிக்க ஜனாதிபதியாக ஹிலாரி கிளின்டனை தெரிவுசெய்ய வேண்டும் எனக் கோரி அமெரிக்க தேர்தல் கல்லூரி அங்கத்தவர்களுக்கு மில்லியன் கணக்கானோர் மனுவொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனே இத்தேர்தலில் வெற்றி பெறுவார் என அமெரிக்காவிலும் ஏனைய நாடுகளிலும் அதிகமானோர் எதிர்வு கூறிய நிலையில், இத் தேர்தல் முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி மக்களின் வாக்குகளில் டொனால்ட் ட்ரம்பை விட, ஹிலாரி கிளின்டன் சுமார் 5 இலட்சம் வாக்குகளை அதிகமாக பெற்றுள்ளார்.
எனினும், அமெரிக்க தேர்தல் விதிகளின்படி மக்களின் நேரடி வாக்குகளின் மூலம் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவதில்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கப்பட்ட தேர்வாளர்கள் எனும் தேர்தல் கல்லூரி வாக்குகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதி தெரிவு செய்யப்படுகிறார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களின் வாக்குகளில் முதலிடம் பெறும் வேட்பாளருக்கு அந்த மாநிலத்தின் தேர்தல் கல்லூரி வாக்குகள் அனைத்தும் சென்றுவிடும். மொத்தமாகவுள்ள 538 தேர்தல் கல்லூரி வாக்குகளில் 270 வாக்குகளைப் பெறுபவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.
இதுவரை 48 மாநிலங்களின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, டொனால்ட் ட்ரம்ப் சுமார் 6 கோடியே 2.6 இலட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்கு 290 தேர்தல் கல்லூரி வாக்குகள் கிடைத்துள்ளன.
ஹிலாரி கிளின்டனுக்கு 6 கோடியே 8.3 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால், அவர் 228 தேர்தல் கல்லூரி வாக்குகளையே பெற்றுள்ளார். எஞ்சியுள்ள தேர்தல் முடிவுகளில் மிச்சின் மாநிலத்தில் ட்ரம்ப் வெல் வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அவரின் தேர்தல் கல்லூரி வாக்குகள் 306 ஆக அதிகரிக்கலாம். நியூ ஹாம்ப்ஷயரில் ஹிலாரி கிளின்டன் வெற்றி பெறுவார் எனவும் இதன்மூலம் அவரின் தேர் தல் கல்லூரி வாக்குகள் 232 ஆக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் எதிர்வரும் டிசெம்பர் 19 ஆம் திகதியே தேர்தல் கல்லூரியின் தேர்வாளர்கள் ஜனாதிபதிக்கான தமது வாக்குகளை அளிக்கவுள்ளனர். இதையடுத்தே உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி தெரிவு அறிவிக்கப்படும்.
இந்நிலையில், மக்களின் அதிக வாக்குகளைப் பெற்ற ஹிலாரியை அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யுமாறு தேர்வாளர்களுக்கு மனு மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
”ஜனாதிபதியாக சேவையாற்றுவதற்கு ட்ரம்ப் தகுதியற்றவர். அவர் பொய்யர், வெருட்டுபவர், கடந்த கால பாலியல் தாக்குதல்களை ஒப்புக்கொண்டவர், அவரின் அனுபவமற்ற தன்யைமானது அமெரிக்க குடியரசுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்” எனவும் மேற்படி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எலிஜா பேர்க் என்பவர் இந்த மனுவை ஆரம்பித்திருந்தார். இந்த மனுவில், இலங்கை நேரப்படி நேற்று மாலை வரை சுமார் 38 இலட்சம் பேர் கையெழுத்திட்டிருந்தனர்.
ஹிலாரி, தேர்தல் கல்லூரி வாக்குகளிலும் முதலிடம் பெறுவதற்கு குறைந்த பட்சம் 38 தேர்வாளர்கள் எதிர்மாறாக வாக்களிக்க வேண்டும். அமெரிக்க தேர்தல் விதிகளின்படி மாநிலங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு தமது வாக்குகளை அளிப்பதற்கு தேர்வாளர்கள் கடமைப்பட்டவர்கள். ஆனால் சில தேர்வாளர்கள் எதிர்மாறாக வாக்களித்துள்ளனர்.
மொத்தமாக 157 தடவைகள் தேர்வாளர்கள் எதிர்மாறாக வாக்களித்தனர் என ‘ஃபெயார் வோட்’ எனும் அமைப்பு கூறுகிறது. இவற்றில் 71 தடவைகள் தேர்வாளர்கள் தமது வாக்குகளை அளிப்பதற்கு முன்னர், வேட்பாளர் இறந்தமை காரணமாக இவ்வாறு வாக்களிக்கப்பட்டது.
3 வாக்குகளுக்குரிய தேர்வாளர்கள் வாக்களிப்பதற்கு சமுகமளிக்க வில்லை. ஏனைய எதிர்மாறான வாக்குகளுக்கு தேர்வாளர்களின் சொந்த அபிப்பிராய ங்கள் காரணம் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் 29 மாநிலங்களில், அந்தந்த மாநிலத்தில் மக்களின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற வேட்பாளருக்கு தேர்வாளர்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.