சின்னத்திரையில் மெட்டி ஒலி தொடர் மூலம் பிரபலமானவர் இயக்குனர் திருமுருகன். இவர் பெரிய திரையில் எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவருடைய இரண்டு படங்களிலும் நடிகர் பரத் தான் ஹீரோ. வடிவேலு காமெடி கதாபாத்திரத்தில் இரண்டு படங்களிலும் நடித்திருந்தார்.
தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது. குடும்பக்கதை மற்றும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை இயக்கவிருக்கிறார் திருமுருகன். இப்படத்தில் பரத், வடிவேலும் இருவரும் நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்தின் துவக்கவிழா மற்றும் படப்பிடிப்பை விரைவில் நடத்த உள்ளனர்.
திருமுருகன் தற்போது நாதஸ்வரம் என்ற மெகா தொடரை இயக்கி வருகிறார். இதுகுறித்து இயக்குனர் திருமுருகன் கூறும்போது மெட்டி ஒலி மூலம் எனக்கு கிடைத்த புகழ் எம்டன்மகன் படத்திற்கும் கிடைத்தது. அதுபோல் இப்போது நாதஸ்வரம் தொடருக்கு கிடைத்திருக்கும் புகழ் அடுத்து இயக்கவிருக்கும் படத்திற்கும் கிடைக்கும் என்றார்.
இப்படத்தின் தலைப்பு மற்றும் பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் இளவயது திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
சிறுவயதில் திருமணம் முடித்த 71 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அவர்களில் 30 சதவீதமானவர்கள் 18 வயதுக்கு முன்னதாகவே கர்ப்பம் தரித்துள்ளார்கள் என தெரிய வந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
போதிய அறிவின்மை, குடும்ப பொருளாதார சூழல் போன்றவையே இதற்கான காரணம் என யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரீசா ஹொசைனி தெரிவித்துள்ளார்.
இளவயது திருமணங்களினால் மன உளைச்சல், சுகாதார சீர்கேடு மற்றும் சிசு மரணங்கள் போன்றன அதிகரிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்முறைகளும் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மற்றும் ஏறாவூர் பற்று ஆகிய பிரதேச செயலக நிர்வாக பிரிவுகளிலும் யுனிசெப் அமைப்பு மேற்கொண்ட ஆய்வுகளில் இளவயது திருமணங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை மாணவர்கள் இடைவிலகல் அதிகமாக காணப்படும் பிரதேசங்களிலே இளவயதில் திருமணங்களும் அதிகம் காணப்படுவதாக யுனிசெப் தெரிவிக்கின்றது.
தமது பிரதேசத்தில் பாடசாலை இடைவிலகலுக்கும் சிறுவயது திருமணங்களுக்கும் தொடர்புகள் இருப்பதாக குறித்த பிரதேச செயலக அதிகாரிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
குடும்பத்தின் ஏழ்மையான சூழல், தந்தையின் மதுப்பாவனை மற்றும் தாயானவர் மத்திய கிழக்குக்கு வேலைக்குப் போவது போன்ற காரணிகள் இப்படியான இளவயது திருமணங்களை அதிகப்படுத்துவதாக பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரான துரைசிங்கம் ஜெயசாந்தினி குறிப்பிடுகிறார்.
இளவயது திருமணத்திற்கு சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது குறித்த பெண்ணின் கணவன் மீது பாலியல் வன்முறை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. ஆனால் நடைமுறைச் சிக்கல்களும் சமூக சூழ்நிலையும் அந்த கணவனை தண்டிப்பதற்கு இடமளிப்பதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக உள்நாட்டு தன்னார்வ தொண்டர் அமைப்பான தேவை நாடும் மகளிர் அமைப்பின் சட்ட ஆலோசகரான அருள்வாணி சுதர்சன் கருத்துத் தெரிவிக்கையில்..
இலங்கையில் திருமண சட்டம் 18 வயதுக்கு கீழ் திருமணப்பதிவு செய்வது சட்ட விரோதம் என்கிறது. ஆனால் அதேசமயம் 16 வயதுக்கு மேற்பட்ட பெண் விரும்பும் ஆணுடன் உறவு வைப்பது பாலியல் குற்றமாக கருத முடியாது என்றும் சட்டம் சொல்கிறது.
இந்நிலையில் 18 வயதுக்கு குறைந்த பெண் திருமணம் செய்யத்தான் தடை இருக்கின்றதே தவிர விரும்பும் ஆணுடன் இணைந்து வாழ தடை இல்லை என்றாகிறது. இதுவும் அந்த நடைமுறைச்சிக்கல்களில் குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிட்டார்.
ஆப்பிரிக்க மற்றும் ஆசியா நாடுகளில் இருந்து இத்தாலி வழியாக ஐரோப்பாவிற்குள் திருட்டுத்தனமாக மக்கள் குடியேறி வருகின்றனர்.
இவர்களை தடுக்க இத்தாலி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தும் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் நடவடிக்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இத்தாலி கடல் வழியாக 4 படகுகள் மூலம் ஐரோப்பியவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற700 பேரை கடற்படையினர் தடுத்து நிறுத்தினர்.
அவர்கள் சிரியா, எகிப்து, எரிட்டிரியா, நைஜீரியா மற்றும் கானா நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். பெரும்பாலானோர் சிரியாவை சேர்ந்த அகதிகள் என்று கூறப்படுகிறது.
மிகவும் அபாயகரமான இந்த இத்தாலி மற்றும் மோல்டா வழியாக கடல் வழியாக திறந்தவெளி படகுகள் மூலம் ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பாவிற்குள் செல்கின்றனர் என்று அஞ்சப்படுகிறது.
இதுபோன்று அத்துமீறி நுழைபவர்களுக்கு அடைக்கலம் தர ஐரோப்பிய யூனியன் நாடுகள் உதவ முன்வர வேண்டும் என்று இத்தாலி கேட்டுக்கொண்டுள்ளது.
சந்திரனின் வான்வெளி குறித்தும், அதை சுற்றிலும் தூசுகள் மிதப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மைய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.
அதற்காக லாட் என்ற ஆளில்லா விண்கலம் தயாரிக்கப்பட்டது. அது நேற்று விர்ஜீனியா விண்வெளி தளத்தில் இருந்து மின்போவர் வி. ரொக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த விண்கலம் ரோபோ மூலம் இயங்கும் சிறிய கார் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை கலிபோர்னியாவில் உள்ள நாசா அமெஸ் ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ் பீட்டர் வோர்டன் உருவாக்கியுள்ளார்.
இது வருகிற அக்டோபர் மாதம் 6ம் திகதி அதாவது இன்னும் 2 மாதத்தில் சந்திரனை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு தரை இறங்கும் லாடீ விண்கலம் தனது ஆய்வை தொடங்கவுள்ளது.
அங்கிருந்து தகவல்களையும், புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பவுள்ளது. 6 மாத ஆய்வுக்கு பின் லாடீ விண்கலம் சந்திரனிலேயே தனது வாழ்நாளை முடித்து கொள்ளும். பூமிக்கு திரும்பாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் படைக்காத சாதனையே இல்லை என்னும் அளவிற்கு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஆனால் சாதனை நாயகன் சச்சினும் படைக்க முடியாத ஒரு சாதனை இருக்கிறது. எல்லா நாடுகளிலும் டெஸ்ட் போட்டிகளிலும் சதம் போட்டுள்ள சச்சின், சிம்பாவே நாட்டில் மட்டும் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்ததில்லை.
200வது டெஸ்ட் போட்டியைக் காணவுள்ள சச்சின் இந்த ஒரு விடயத்தை மட்டும் இதுவரை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கர் 200வது டெஸ்ட் போட்டியை ஆடவுள்ளதே ஒரு சாதனைதான். காரணம், உலகில் இதுவரை எந்த ஒரு வீரரும் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடியதில்லை.
சச்சின் இதுவரை போய் விளையாடியுள்ள அத்தனை நாடுகளிலும் சதம் போட்டுள்ளார். ஆனால் சிம்பாவேயில் மட்டுமே இதுவரை அவர் சதம் போட்டதில்லை. சிம்பாவேயில் 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள சச்சின், அதிகபட்சமாக 74 ஓட்டங்கள் வரை எடுத்துள்ளார்.
தற்போதைக்கு சிம்பாவேக்கு இந்திய அணி செல்லும் வாய்ப்புகள் இல்லை என்பதால் இந்த ஒரு விடயத்தை மட்டும் சச்சினால் நிறைவேற்ற முடியாது என்றே கருதப்படுகிறது.
சிம்பாப்வேக்குப் போய்த்தான் சதம் போடவில்லையே தவிர இந்தியாவுக்கு சிம்பாவே வந்திருந்தபோது அந்த அணிக்கெதிராக சதம் அடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அத்தனை நாடுகளுக்கெதிராகவும் சதம் அடித்த சாதனைக்குரியவர் சச்சின். ஆனால் சச்சின் படைக்காத சாதனையை ராகுல் டிராவிட் செய்துள்ளார். அதாவது டெஸ்ட் விளையாடும் 10 அணிகளின் நாடுகளிலும் அவர் சதம் போட்டுள்ளார்.
உலக அழகி போட்டிகள் நேற்று இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் அழகிப் போட்டி நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போட்டி நடத்துபவர்களின் உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அதை தொடர்ந்து ஜகர்த்தாவில் உலக அழகிப் போட்டி நடைபெறாது என அரசு அறிவித்துள்ளது. போட்டியின் தொடக்க விழா இந்துக்கள் அதிகமாக வாழும் பாலதீவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அழகி போட்டியின் இறுதி போட்டி ஜகர்த்தாவின் புற நகரில் வருகிற 28ம் திகதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மகாறம்பைகுளம் சாள்ஸ் விளையாட்டுக்கழகம் நடார்த்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடர் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
வவுனியாவின் பல முன்னணிக் கழகங்கள் பங்குபெற்றிய இச்சுற்றுத் தொடரின் இறுதிப்போட்டி இன்றைய தினம் சாள்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் பூந்தோட்டம் லயன்ஸ் விளையட்டுக்கழக அணியும் தவசிகுளம் செவ்வானம் விளையாட்டுக்கழக அணியும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய செவ்வானம் அணி 10 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 56 ஓடங்களைப் பெற்றது. லயன்ஸ் அணி சார்பாக நிதர்சன், உஷாந்தன், தர்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களை கைப்பற்றினர்.
57 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த லயன்ஸ் அணி ஆரம்பத்தில் நிதானமாக துடுப்பெடுத்தாடியது. எனினும் செவ்வானம் அணியினரின் மிகச்சிறப்பான பந்துவீச்சு காரணமாக போட்டி மிக விறுவிறுப்பாக மாறியது.
இறுதி ஓவரில் 9 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பாடிய லயன்ஸ் அணியினர் முதல் 5 பந்துகளில் 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். இதனால் ஆட்டத்தின் கடைசிப்பந்தில் 3 ஓட்டங்களை பெறவேண்டிய நிர்ப்பந்தம் லயன்ஸ் அணியினருக்கு ஏற்றப்பட்டது.
இறுதிப் பந்தினை எதிர்கொண்ட லயன்ஸ் அணியின் சௌமியன் 2 ஓட்டங்களைப் பெற்றார். இதனால் போட்டி சமநிலையில் முடிவடைந்தாக அனைவரும் எதிர்பார்த்த வேளையில் கடைசிப் பந்தில் சௌமியன் ரன்அவுட் ஆனதாக போட்டி நடுவர் திடீரென அறிவித்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த லயன்ஸ் அணியினர் நடுவரின் முடிவை ஏற்க மறுத்தனர். இதனால் மைதானத்தில் பலத்த சலசலப்பு ஏற்பட்டது.
நடுவர்களின் தீர்ப்பை ஏற்க மறுத்த லயன்ஸ் அணியினர், மைதானத்தை விட்டு வெளியேறியதுடன் போட்டித் தொடரின் இரண்டாம் இடம் பெற்ற அணியினருக்கு வழங்கப்படும் கிண்ணத்தையும் ஏற்க மறுத்தனர். இப்போட்டியில் நடுவர்கள் ஒருபக்க சார்பாக நடந்து கொண்டதாக லயன்ஸ் அணியினர் குற்றம் சாட்டினர்.
இறுதியாக வழங்கப்பட்ட தீர்ப்பு மட்டுமன்றி போட்டி முழுவதும் பல தீர்ப்புகள் சர்ச்சைக்குரிய விதத்திலும் லயன்ஸ் அணிக்கு எதிரானதாகவும் வழங்கப்பட்டதாக லயன்ஸ் அணியினர் விசனம் தெரிவித்தனர்.
பலத்த சர்ச்சைகளுடன் நிறைவடைந்த இப்போட்டியில் செவ்வானம் அணியினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தொடரின் சம்பியன்ஸ் பட்டமும் வழங்கப்பட்டது.
வவுனியாவில் இதுபோன்ற சுற்றுத்தொடர்களில் இவ்வாறான சர்ச்சைகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், இனிவரும் காலங்களில் இடம்பெறும் போட்டிகளின் போது பக்கசார்பற்ற பொதுவான நடுவர்களை நியமிக்கவேண்டிது போட்டி ஏற்பாட்டாளர்களின் கடமையாகும்.
வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் திரு.க.சந்திரகுலசிங்கமும் (மோகன்), ஆதரவாளர்களும் நண்பர்களும் அப்பகுதிகளில் தேர்தல் பிரசாரப் பணிகளில் நேற்று மாலை ஈடுபட்டிருந்தனர்.
நேற்று மாலை 4 மணியளவில் தோணிக்கல் மாடசாமி கோவிலடிப் பகுதியில் தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது திடீரென அங்கு வந்த வவுனியா பொலிசார் இப்பகுதிகளில் நீங்கள் பிரசார நடவடிக்கையில் ஈடுபட இயலாது என தெரிவித்து வேட்பாளர் க.சந்திரகுலசிங்கத்தின் (மோகன்), ஆதரவாளர்களையும், நண்பர்களையும் மிரட்டி, அவர்களிடமிருந்த பிரசுரங்களை பறித்துவிட்டு தொடர்ந்தும் இங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டால் உங்கள் வாக்குரிமையையும் இழக்கவேண்டி வருமென எச்சரித்துச் சென்றுள்ளனர்.
திரைப்பட இயக்குநரும், நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கும் மறைந்த முன்னாள் தமிழக அமைச்சரும், சட்டமன்ற சபாநாயகருமான காளிமுத்துவின் இளையமகள் கயல் விழிக்கும் இன்று காலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி. ஏ மைதானத்தில் பழ.நெருமாறன் தலைமையில் திருமணம் நடைபெற்றது. மேளதாளம் முழங்க தாலி கட்டினார் சீமான்.
அரசியல், திரைப்பட பிரபலங்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இத்திருமணம் விழாவில் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தற்கொலைகளை தடுக்கும் வகையில் தேசிய ரீதியிலான வேலைத் திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் 10ம் திகதி நினைவுகூறப்படவுள்ள தற்கொலைகளை தடுக்கும் தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வருடத்திற்கு 3500 பேர் தற்கொலை செய்து கொள்வதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்கொலைகளுக்கு அதிகம் விஷம் பயன்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
உலகம் முழுவதும் வருடாந்தம் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
வவுனியா வேப்பங்குளத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா பாரதிபுரத்தை சேர்ந்த பெருமாள் நிசாந்தினி என்ற 12 வயதுடைய சிறுமியே இவ்வாறு நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சிறுமி இதே காப்பத்தில் தங்கியுள்ள தனது சகோதரியுடன் நேற்று வாய்த் தர்க்கப்பட்டிருந்த நிலையில் காப்பக வளாகத்தில் தூக்கில் தொங்கியுள்ளதாக காப்பகத்தின் நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இச் சிறுமியின் தந்தை நோய் வாய்ப்பட்ட நிலையில் வாழ்வதாகவும் தாயாரால் பிள்ளைகளை பராமரிக்க முடியாத நிலையில் தமது காப்பகத்தில் இவர்களை சேர்த்திருந்ததாகவும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
சிறுமியின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்களுக்கான தேசிய மட்ட கபடிப் போட்டி நேற்றைய தினம் வவுனியா பூந்தோட்டம் தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது.
ஆண்கள், பெண்கள் பிரிவுக்கான போட்டிகள் தனித்தனியாக இடம் பெற்றதுடன், தேசிய ரீதியான விளையாட்டு நிகழ்வு ஒன்று முதன் முதலாக வடமாகாணத்தில் இடமபெற்ற சந்தர்ப்பமாகவும் அது அமைந்திருந்தது.
டெர்பிஷயர் அணிக்கு எதிரான கவுண்ட் போட்டியில் பியுஸ் சாவ்லா 10 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார்.
இங்கிலாந்தில் உள்ளூர் அணிகள் பங்கேற்கும் கவுன்டி போட்டிகள் நடந்து வருகிறது.
இதில் டான்டன் நகரில் கடந்த 3ம் திகதி தொடங்கிய நான்கு நாள் போட்டியில் சமர்சட்- டெர்பிஷயர் அணிகள் மோதின.
முதல் இன்னிங்சில் சமர்சட் அணி 103 ஓட்டங்களும், டெர்பிஷயர் 298 ஓட்டங்களும் எடுத்தன. சுழலில் அசத்திய பியுஸ் சாவ்லா 5 விக்கெட் கைப்பற்றினார்.
இரண்டாவது இன்னிங்சில் சமர்சட் அணி 438 ஓட்டங்கள் எடுத்தது.
இதனையடுத்து 244 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு டெர்பிஷயர் அணி இரண்டாவது இன்னிங்சை தொடக்கியது.
சந்தர்போல்(74*), ஸ்லாட்டர்(59) கைகொடுக்க டெர்பிஷயர் அணி 8 விக்கெட்டுக்கு 244 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மீண்டும் துல்லியமாக பந்துவீசிய பியுஸ் சாவ்லா 5 விக்கெட் வீழ்த்தினார்.
அபாரமாக பந்துவீசிய சாவ்லா இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் கைப்பற்றிய போதும் சமர்சட் அணி தோல்வி அடைந்தது.
கவுன்டி போட்டியில் சமர்சட் அணிக்காக மூன்று முதல் தர போட்டியில் விளையாடிய இவர் இதுவரை 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அமைதியாக இருக்க மாட்டோம் என்று சிரியா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக, இந்தியாவுக்கான சிரியா நாட்டுத்தூதர் ரியாத் காமல் அப்பாஸ் டில்லியில் நேற்று அளித்த செவ்வியில் தெரிவித்தாவது..
சிரியாவில் நடந்து வரும் சம்பவங்களின் நோக்கமானது அங்கு ஜனநாயகத்தை ஏற்படுத்துவதோ, சீர்திருத்தங்களை மேற்கொள்வதோ அல்ல. அதிபர் பஷார் அல் அஸாதின் ஆட்சியை அகற்ற அமெரிக்கா செய்து வரும் சதியாகும்.
நாங்கள் அமெரிக்கக் கொள்கையை விரும்பவில்லை. போராடி எங்கள் மக்களைக் காப்போம். எங்கள் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்களின் இயற்கை வளங்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. மத்திய கிழக்கில் அமெரிக்கா விரும்பும் ஒரே விஷயம் எண்ணெய் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு ஆகியவைதான்.
சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பதைக் கண்டறிய நேரில் வந்து பார்க்குமாறு சர்வதேச நாடுகளை கேட்டுக் கொள்கிறோம். இந்த விவகாரத்தில் ஆதாரம் காட்டுமாறு அமெரிக்காவுக்கு சவால் விடுக்கிறேன்.
ஈராக் விஷயத்திலும் இதே பொய்யைத்தான் அமெரிக்கா கூறியது.
10 ஆண்டுகளுக்குப் பின் அது தவறு என்று அமெரிக்காவே ஒப்புக்கொண்டது என்று ரியாத் காமல் அப்பாஸ் கூறினார்.