இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியின் போது பந்தயத்தில் ஈடுபட்ட மூன்று மும்பை சூதாட்டக்காரர்களை கோவா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹித்தேஸ் ஜதாகியா, சுனில் சுக்லா மற்றும் ஹித்தேஸ் தேசியா ஆகிய மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக கோவா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கணினி 16 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை சந்தேகநபர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது
அப்பிள் தனது ஐபோன் வரிசையின் அடுத்த வெளியீடான ஐபோன் 5 எஸ் இனை செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இது தொடர்பில் ஜேர்மன் நாட்டு இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இதுதொடர்பில் அப்பிள் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.
வெவ்வேறு அளவிலான திரைகளைக் கொண்ட இரு ஐபோன்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஐபோன்5 கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது, அதேபோல் ஐபோன் 5எஸ் உம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதேபோல் அதே தினத்தில் குறைந்த விலை ஐபோனும் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரியவருகின்றது.
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்தார்.
வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் மத்திய மாகாணத்தில் நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன.
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கு மொத்தமாக 142 உறுப்பினர்களை தெரிவுசெய்யும் நோக்கில் 43 இலட்சத்து 58 ஆயிரத்து 261 பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் மக்களால் விரும்பி பார்க்கப்படும் உலாவிகளில் முதலிடம் பிடித்துள்ளது குரோம் உலாவி. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் குரோம் உலாவி அறிமுகமான காலகட்டத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தான் முதலிடத்தில் இருந்தது.
ஆனால் அறிமுகமானதில் இருந்தே குரோம் உலாவியின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது.
இதனை தொடர்ந்து பல்வேறு வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் சமீபத்தில் இணைய செயல்பாடுகளை கண்காணித்து வரும் StatCounter குரோம் உலாவி தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஜூன் மாதம் இறுதியாகக் கிடைத்த தகவல்களின் படி குரோம் உலகாளவிய அளவில், 43 சதவிகித இணையப் பயனாளர்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது.
ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 25 சதவிகித வாடிக்கையாளர்களையே தன்னிடத்தில் வைத்துள்ளது.
பயர்பொக்ஸ் ஏறத்தாழ 20 சதவிகிதம் பேருக்கே சேவை செய்து வருகிறது. அடுத்த நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் சபாரி மற்றும் ஒபேரா உலாவிகள் உள்ளன.
யாழ் பல்கலை கழக வவுனியா வளாக பிரயோக பீட மாணவர்களின் ஏற்பாட்டில் உயர் தர மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு மாங்குளம் மகா வித்தியாலத்தில் நடைபெற்றது
கலை வர்த்தக கணித விஞ்ஞான மாணவர்களுக்கான கருத்தரங்கை யாழ் வவுனியா பிரபல ஆசிரியர்கள் நடாத்தினர் இந்து நாகரிக கருத்தரங்கினை சிவ .கஜன் அவர்களும் வணிக கருத்தரங்கினை திரு.சத்தியதாஸ் அவர்கள் நிகழ்தினார்.
மைதானத்தில் செயல்படுவதில் விராட்கோலி இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த ஒரு பேட்டியில்,
விராட்கோலியை டோனியுடன் ஒப்பிடுவது தவறானதாகும். இருவரும் வித்தியாசமான நபர்கள். மைதானத்தில் தனது செயல்பாடு குறித்து விராட்கோலி சுய மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். மைதானத்தில் செயல்படுவதில் விராட்கோலி இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டும்.
சிம்பாவேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சர்ச்சைக்குரிய பிடியால் ஆட்டம் இழந்த போது விராட்கோலி உணர்ச்சியை வெளிப்படுத்திய விதம் தவறானது. கோபத்தை குறைத்து அவர் வேறு மாதிரியாக நடந்து இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
விராட்கோலி சிறந்த வீரர் என்றாலும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் சமீபத்தில் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மகன் ஜோர்ஜ் அலெக்சாண்டர் லூயியை ஆயுதம் ஏந்திய 50 பொலிசார் 24 மணிநேரமும் பாதுகாக்கவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் அழகான ஆண் குழந்தையை கடந்த 22ம் திகதி பெற்றெடுத்தார்.
அந்த குழந்தைக்கு ஜோர்ஜ் அலெக்சாண்டர் லூயி என்று பெயர் வைத்துள்ளனர். இந்தநிலையில் குழந்தை ஜோர்ஜை பாதுகாக்க 50 பொலிசார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் 24 மணிநேரமும் ஆயுதம் ஏந்தி ஜோர்ஜை பாதுகாக்கும் பணியில் ஈடுபடவிருக்கின்றனர். இளவரசர் ஜோர்ஜ் தனது பெற்றோருடன் 19வது நூற்றாண்டில் கட்டப்பட்ட அன்மர் ஹாலில் பெரும்பாலான நேரத்தை செலவிடவிருக்கிறார்.
தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள பொலிசார் குட்டி இளவரசரை பாதுகாப்பதுடன் பிற பணிகளிலும் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் டெல்லியில் காதலியை கோடரியால் வெட்டிய பின்னர் வாலிபர் ஒருவர் கைகளை அறுத்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படித்து வந்தவர் ஆகாஷ். இவர் அதே வகுப்பில் பயின்ற ரோஷினி என்ற பெண்ணை காதலித்து வந்தார். நேற்று பல்கலைகழக வளாகத்திற்கு ஒரு கோடரியுடன் வந்த ஆகாஷ், வகுப்பிலிருந்த ரோஷினியை வெறித்தனமாக தாக்கினார்.
இதனால் பலத்த காயமடைந்த ரோஷினி இரத்த வெள்ளத்தில் வலியால் துடித்தார். உடனடியாக அவரை சப்டர்ஜங் மருத்துவமனைக்கு பிற மாணவர்கள் அழைத்து சென்றனர்.
காதலியை தாக்கிவிட்டு ஆகாஷ் தன்னுடைய கையை அறுத்து தற்கொலை செய்துக்கொண்டார். அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் அவருடைய உயிர் பிரிந்தது.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரோஷினிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழில் முதல்வன், பம்பாய், இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மனிஷா கொய்ரலா. கடைசியாக மாப்பிள்ளை படத்தில் தனுஷ் மாமியாராக நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார். மனிஷா கொய்ரலாவுக்கு கடந்த நவம்பர் மாதம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
வைத்தியர்கள் பரிசோதித்த போது கர்ப்பப்பை புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தீவிர சிகிச்சைக்குப்பின் பூரண குணமடைந்தார்.
சிகிச்சை காரணமாக தலைமுடி போய்விட்டது. ஆளே உருமாறி இருக்கிறார். தற்போதைய தோற்றத்திலான புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டார். அமெரிக்காவில் ஆறு மாத சிகிச்சை முடிந்து நேற்று மும்பை திரும்பினார். அந்தேரியில் உள்ள வீட்டில் உறவினர்கள் வரவேற்றனர்.
கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சின் 7 வது மாடியில் நேற்று திடீரென பற்றிய தீயினால் அமைச்சின் ஊடகப்பிரிவு முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
பொலிஸார் தீயணைப்பு படையினரின் ஒத்துழைப்புடன் குறுகிய நேரத்திற்குள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்படாத போதிலும் உடமைகள் நாசமாகியிருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.
சேதமாகிய சொத்துக்களின் விபரம் இதுவரை கணிப்பிடப்படவில்லை. தீ ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஊடகப் பிரிவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அலுவலகம் என்பன தீக்கிரையாகியுள்ள போதும் முக்கியமான ஆவணங்கள் பாதுகாப்பான முறையில் கையிருப்பிலிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊடகப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த நுட்பம் வாய்ந்த கெமரா, வீடியோ பதிவுகள் என்பன எரிந்து சாம்பலாகியுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் அகதி ஒருவருக்கு தமிழகம் நாகப்பட்டினம் நீதிமன்றம் 11 வருட கடுழிய சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
வெடிப்பொருட்களை கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த தண்டனை நேற்று விதிக்கப்பட்டுள்ளது.
கே.கே நகர் திருச்சிராப்பள்ளி என்ற இடத்தில் உள்ள அகதி முகாமில் வசித்து வந்த இவர் சௌந்தரராஜன் என்ற பெயரைக்கொண்டவராவார்.
2012ம் ஆண்டு மார்ச் 18ம் திகதியன்று இவர் வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டார்.
இதன்போது இவர் வைத்திருந்த செய்மதி தொலைபேசி, டெட்டினேட்டர் குச்சிகள், ஜெலிக்னைட் குச்சிகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றை இவர் இலங்கைக்கு கடத்தவிருந்தார் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தனது 75ம் ஆண்டில் இந்தியத் திரைப்பட உலகின் 100வது ஆண்டு திருவிழாவை சென்னையில் நடத்துகிறது. இதில் தென்னிந்தியாவின் நான்கு முதலமைச்சர்கள், தமிழக ஆளுநர் மற்றும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இவ்விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் 21, 22, 23, 24, திகதிகளில் இவ்விழாவினை அனைத்து தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்களும் கலந்துக் கொண்டு சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளார்கள். 21ம் திகதி காலை மலையாளத் திரைப்பட கலைஞர்கள் நடிகர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சி 4 மணி நேரம் நடைப்பெறும். அன்றைய தினம் மாலை 4 மணி நேரம் தமிழ்த் திரைப்பட கலைஞர்கள் நடிகர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சியும் நடைபெறும்.
22ம் திகதி காலை கன்னடத் திரைப்பட நடிகர்கள் கலைஞர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சியும், அன்றைய தினம் மாலை தெலுங்கு மொழி கலைஞர்கள் நடிகர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சியும் 4 மணி நேரம் நடைபெறும்.
23ம் திகதி மாலை தென்னிந்திய மொழி கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் இனிய விருந்து நடைபெறும், தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் ஒன்று சேரும் குடும்ப விழா.
24ம் திகதி இந்திய திரை உலகம் இதுவரை கண்டிராத சரித்திர விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் இந்திய ஜனாதிபதி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா முதல் அமைச்சர்கள் மற்றும் தமிழக ஆளுநர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இவ்விழாவில் அனைத்து மொழியைச் சேர்ந்த திரைப்பட சாதனையாளர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.
இந்த விழா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஸ்டுடியோ முதலாளிகள் என அத்தனை சங்கங்களையும் சார்ந்தவர்களின் முன்னிலையில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்ளவும் நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை மற்றும் பங்களிப்புகளுக்காகவும் நான்கு மொழி கலைஞர்கள் நடிகர்கள் சாதனையாளர்கள் சென்னையில் சங்கமிக்க வேண்டும் என்பதால் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மொழி திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் உலகமெங்கும் செப்டம்பர் 18, முதல் 24 வரை நடைபெறாது.
இது மட்டுமல்லாமல் சென்னை நகரமெங்கும் வண்ணமயமான அலங்காரங்கள், திரையரங்குகளில் சிறந்த இந்தியத் திரைப்படங்கள், பூங்காக்களிலும் சென்னையில் முக்கிய இடங்களிலும் கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், கருத்தரங்குகள், திரைப்பட போட்டிகளில் வெற்றிப் பெற்ற ரசிகர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைப்பெறும்.
தமிழ் மட்டுமல்லாமல் இந்தியாவைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அத்தனை கலைஞர்களையும் தமிழகமும் சென்னை மாநகர மக்களும் வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவிலிருந்து ஹெரோயினை இடுப்புப் பட்டிகளில் மறைத்து கடத்தி வந்த இலங்கைப் பெண்ணுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஜாஎல பள்ளிவீதியைச் சேர்ந்த வீரசிங்க ஆராச்சிகே தொன் சந்த்ராணி என்ற 54 வயது பெண்ணுக்கே நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ. கபூர் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
நீண்ட வழக்கு விசாரணையின் பின் 8 வருடம் விளக்கமறியலில் இருந்த நிலையில் இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2005 ஜூலை 8ம் திகதி இந்தியாவிலிருந்து இப்பெண்மணி கட்டுநாயக்க விமான நிலையம் வந்திறங்கிய போது இவரில் சந்தேகம் கொண்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் இவரது பொதிகளை சோதனை செய்தபோது இவர் கொண்டுவந்த பொதியில் இருந்து 474 இடுப்புப் பட்டிகளில் சூசகமான முறையில் ஹெரோயின் மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றில் சுத்தமாக ஹெரோயின் 141.8 கிராம் இருந்ததாக தெரிய வந்தது. இவர் மீது போதைப் பொருளை கடத்தி வந்தமை தன்வசம் வைத்திருந்தமை வியாபாரம் செய்கின்ற ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் மீது வழக்குத் தொடரப்பட்டன.
குற்றவாளியாகக் காணப்பட்ட இவருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை வழங்கி தனது தீர்ப்பை அறிவித்தார்.
நடிகை கனகா உடல் நிலை பற்றி நேற்று பரபரப்பான வதந்திகள் வெளியாயின. கேரள ஆஸ்பத்திரியில் அவர் இறந்து விட்டதாக செய்திகள் வந்தன. பிறகு அது தவறானவை என தெரிய வந்தது. கனகா கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது.
அதிசயப் பிறவி, கோவில் காளை, கும்பக்கரை தங்கையா, சாமுண்டி போன்ற படங்களிலும் நடித்தார். இவர் மறைந்த நடிகை தேவிகாவின் மகள் ஆவார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் கனகா தனியாக வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன் அவருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறுவதாகவும் செய்தி பரவியது. இந்த நிலையில் நேற்று அவர் இறந்து விட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து நேற்று மாலை ராஜாஅண்ணாமலைபுரம் வீட்டில் இருந்து கனகா திடீர் என வெளியே வந்தார். நான் உயிரோடுதான் இருக்கிறேன் என பேட்டி அளித்தார். அப்போது நான் பணக்காரி. என் சொத்துக்களை அபகரிக்க சதி நடக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
இதையடுத்து கனகாவுக்கு சொத்து பிரச்சினையில் உதவ நடிகர் சங்கம் முன் வந்துள்ளது. சொத்து விவகாரத்தில் கனகாவுக்கு நடிகர் சங்கம் உறுதுணையாக இருக்கும் என்று சரத்குமார் கூறியுள்ளார். இதனை கனகாவிடம் நடிகர் சங்க மனேஜர் நடேசன் தெரிவித்தார். கனகாவுக்கு என்ன உதவி தேவையோ அதை நடிகர் சங்கம் செய்து கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள்ளே கலைப்பீட 3ம் வருட மாணவர்கள், 4ம் வருட மாணவர்கள் உள்பிரவேசிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தடை வித்துள்ளது.
நேற்று பல்கலைக்கழகத்தில் இரண்டு பிரிவுகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்தே இதனை யாழ்.பல்கலைக்கழக பதிவாளர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இன்று மதியம் 12 மணிக்குள் இரண்டு வருடங்களைச் சேர்ந்த மாணவர்களும் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டள்ளது.
மேலும் மறு அறிவுறுத்தல்கள் வரும் வரையில் இவர்கள் எவரும் பல்கலைக்கழக எல்லைக்களுக்குள்ளாக செல்லக் கூடாது என்றும் அதனை மீறி நடந்தால் பல்கலைக்கழக அனுமதி ரத்துச் செய்யப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.