விளையாட்டு விபரீதத்தில் முடிந்த கதை!!

Girl-w-Pistol-from-Secure-Logic

தென் ஆபிரிக்காவில் 7 வயது சிறுமி ஒருவர் தனது 6 வயது தோழியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆபிரிக்காவில் உள்ள பிரயோரியா பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி லிம்போபோ மாகாணத்தின் பேலா பேலா என்ற கிராமத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தப்போது அங்கு அவளது தோழியான 6 வயது சிறுமியுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.

இந்த இரண்டு சிறுமிகளும் விளையாடிக்கொண்டிருந்தப்போது, 7 வயது சிறுமி தன்னுடைய தாத்தாவின் கைத்துப்பாக்கியை வைத்து மற்றொரு சிறுமியை பயமுறுத்தியிருக்கிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக அச்சிறுமி மற்றொருவரை சுட்டுவிட முகத்தில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் பொலிசார் விரைந்து வந்து சிறுமியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கவனக்குறைவாக துப்பாக்கியை வைத்திருந்ததாக சிறுமியின் தாத்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தப்போது எதிர்பாராத விதமாக ஒருவர் 0.38 ரக துப்பாக்கியை கொண்டு மற்றொருவரை சுட்டதால் ஏற்பட்ட இந்த விபரீதம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக அழகிப் போட்டியை நடத்த எதிர்ப்பு!!

miss

இந்தோனேசியாவில் அடுத்த வருடம் நடத்தப்படவுள்ள உலக அழகிப்போட்டிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இந்தோனேசியாவின் மிகவும் செல்வாக்கு உள்ள உலமா சபையின் இஸ்லாமிய மதக்குருக்களின் உயர் மட்டம் கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தில் பெண்கள் தங்களின் தோலை காட்டி நடந்து வரும் இப்போட்டியானது இஸ்லாமிய மதக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், இப்போட்டியை இந்தோனேசியாவில் நடத்தக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதனையடுத்து இஸ்லாமிய மதக்குருக்கள் இப்போட்டியை இந்தோனேசியாவில் நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அரசு இப்போட்டியை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் புகைப்பிடித்தல் மற்றும் யோகாவிற்கு எதிராக பல முரண்பாடான உத்தரவுகளை உலமா சபை பிறப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. உலமா சபை விதித்துள்ள இந்த உத்தரவை மீறுவது பாவம் என்று இந்தோனேசிய மக்களில் பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

14 வயதிலேயே 110 வயது தோற்றம் : மரணத்தின் விளிம்பில் உள்ள சிறுவன்!!

boy

பீகாரை சேர்ந்த ஒரு சிறுவன் அரிய வகை நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால் 14 வயதிலேயே 110 வயது முதியவரை போல தோற்றமளிக்கிறார்.

பீகாரை சேர்ந்த அலி ஹுசைன் என்னும் 14 வயது சிறுவன் ப்ரோகேரியா என்னும் அரிய வகை மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சொந்தத்தில் திருமணம் செய்துகொண்ட இவரது தந்தை நபி ஹுசைன் கான் (50) மற்றும் தாய் ரசியா(46) ஆகியோருக்கு பிறந்த 8 குழந்தைகளில் 6 பேருக்கு இந்த மரபணு கோளாறு இருந்துள்ளது.

தனது 5 சகோதரர்கள் இதே பாதிப்பால் இறந்ததை கண்ட அலி ஹுசைன் தன்னுடைய நாட்களை கஷ்டப்பட்டு நகர்த்திக்கொண்டிருக்கிறார்.

சராசரியான நபர்களை விட சுமார் 8 மடங்கு அதிக வேகத்தில் வயது முதிர்ந்த தோற்றத்தை அளிக்கும் இந்த நோய், பிறக்கும் 8 மில்லியன் குழந்தைகளில் ஒரு குழந்தையை மட்டும் பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நோய் தாக்கிய நபர்கள் அதிகபட்சமாக 20 வயது வரைமட்டுமே உயிர்வாழ இயலும் என்பதும், இந்த நோயை குணப்படுத்த இன்னும் சரியான மருந்து இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

செப்டெம்பர் 3 வரை செந்தூரனை நாடு கடத்த முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்!!

Madras-High-Court

சென்னை உயர் நீதிமன்றில் பம்மலைச் சேர்ந்த ஆர்.செந்தூரன் (32) தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலங்கையில் நடந்த இனப் பிரச்சனையை அடுத்து அகதியாக நான் இந்தியாவுக்கு 11.4.11 அன்று வந்தேன். 14.7.11 அன்று கியூ பிரிவு பொலிஸார் என்னை கைது செய்து செங்கல்பட்டு முகாமில் அடைத்தனர். பின்னர் தேவகோட்டை அருகே தாழையூரில் உள்ள முகாமில் என்னை அடைக்க உத்தரவிடப்பட்டது.

தேவகோட்டை தாசில்தாரின் அனுமதி பெற்று எனது மனைவி மற்றும் குழந்தைகளை சந்திப்பதற்கு சென்னைக்கு வந்தேன். அவரது அனுமதி பெற்று சென்னையில் வாடகை வீட்டில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன்.

என்னையும், மேலும் இரண்டு பேரையும் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு 19ம் திகதி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. கருத்து கூறுவதற்கு எனக்கு வாய்ப்பு தராமலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு என்னை கொன்றுவிடுவார்கள். எனவே என்னை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் ஆகியோர் கடந்த வாரம் விசாரித்தனர். மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன் ஆஜராகி ‘‘இந்தியாவுக்குள் மனுதாரர் நுழைந்ததே சட்டவிரோதம் அப்படிப்பட்டவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கத் தேவையில்லை” என்று வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள் ‘‘இதுபோல் ஈழநேரு தாக்கல் செய்த மனு மீது தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். செந்தூரன் வழக்கிலும் அதே உத்தரவை பிறப்பிக்கிறோம்” என்று கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை செந்தூரனின் மனு விசாரணைக்கு வந்தது. செந்தூரனை நாடு கடத்துவதற்கு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு 3ம் திகதிவரை நீட்டிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

10 மணி நேர போராட்டத்தில் பிரிக்கப்பட்ட ஒட்டிப் பிறந்த குழந்தைகள்..!

chinaசீனாவின் குவாங்க்சி மாகாணத்தில் உள்ள குய்பிங் ஆஸ்பத்திரியில் கடந்த ஜூன் மாதம் 14ம் திகதி யுவே ஜூக்சிங் என்ற பெண்ணுக்கு பிரசவம் நடந்தது.

இந்த பிரசவத்தில் அவருக்கு அழகான 2 பெண் குழந்தைகள் பிறந்தன. ஒன்றன்பின் ஒன்றாக பிறக்காமல் 2 குந்தைகளும் ஒட்டிப் பிறந்ததால் அவை எத்தனை நாள் உயிருடன் இருக்குமோ…? என்ற கவலை யுவே ஜூக்சிங்கின் இதயத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

2 குழந்தைகளையும் சத்திரசிகிச்சை மூலம் பிரித்தெடுக்கலாம். ஆனால்,அதற்கு நிறைய செலவாகும் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதற்காக தெரிந்தவர்களின் மூலம் இணையதளங்களில் குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டு நிதியுதவி செய்யுமாறு யுவே ஜூக்சிங் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மளமளவென 1லட்சம் யுவான் வரை நிதி குவிந்தது. சத்திரசிகிச்சையை இலவசமாக செய்ய குவாங்க்சி மருத்துவ பல்கலைக்கழக வைத்தியசாலையும் முன்வந்தது.

இதனையடுத்து, ஈரலின் மூலன் ஒட்டிப் பிறந்த அந்த குழந்தைகளை பிரித்தெடுக்க கடந்த 8ம் தேதி சத்திரசிகிச்சை நடைபெற்றது. 20 வைத்தியர்கள் உழைப்பில் சுமார் 10 மணி நேரம் நீடித்த இந்த சத்திரசிகிச்சையி ல் 2குழந்தைகளும் வெற்றிகரமாக தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டன.

சத்திரசிகிச்சைக்கு பிந்தைய 3 வார சிகிச்சைக்கு பின்னர் நேற்று தாயுடன் சேய்களும் நலமாக வீட்டை சென்றடைந்தனர்.

வெளிச்சமின்மை தொடர்பான விதிமுறைகளை மாற்ற வேண்டும்: அன்டி பிளவர்..!

andyபோதிய வெளிச்சமின்மை தொடர்பான விதிமுறைகளை மாற்ற வேண்டுமென இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் அன்டி பிளவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் வெற்றிபெறும் வாய்ப்பு, போதிய வெளிச்சமின்மை காரணமாக கைநழுவிப் போயிருந்தது.

227 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 4 ஓவர்களில் 21 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில், போட்டி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை இது தொடர்பான விதிகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென அன்டி பிளவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் தலைவராக தொடர்ந்தும் கிளார்க்..!

clarkஅவுஸ்திரேலிய அணியின் தலைவராக மைக்கல் கிளார்க் தொடர்ந்தும் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3 -0 என்ற ஆட்டக்கணக்கில் இழந்த நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் அணியின் திறமை வெளிப்பாட்டு முகாமையாளர் அடம் பிரேசர் இதனைக் கூறியுள்ளார்.

நடைபெறவுள்ள இந்தியாவிற்கான கிரிக்கெட் விஜயம் தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்புக்களை மேற்கொள்ளும் மூவர் அடங்கிய அணியின் கண்காணிப்பாளர் குழுவில் அடம் பிரேசரும் அடங்கியுள்ளார்.

இந்த நிலையில் மைக்கல் கிளார்க் உலகத் தரம் வாய்ந்த வீரர் எனக் கூறியுள்ள அடம் பிரேசர், அவரின் தலைவர் பதவிக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்னல் தாக்கி இளம்பெண் பலி – மாங்குளத்தில் சம்பவம்..!

vavuniyaவவுனியா, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் பெண் ஒருவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக மாங்குளம் பொலிஸர் தெரிவித்தனர்.

அவர் தனது வீட்டின் கிணற்றடியில் இருந்தவேளை மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 26 வயதான கிருஷ்ணா நிர்மலாதேவி என பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மாங்குளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை பெண்ணை குளிரூட்டியில் வைத்து கொலை செய்ய முயற்சி: இலங்கைத் தூதரகம் மறுப்பு..!

fridgeகுளிரூட்டி இயந்திரத்தில் வைத்து தம்மை கொலை செய்ய முயற்சித்ததாக இலங்கை பெண் ஒருவர் சுமத்திய குற்றச்சாட்டை சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் மறுத்துள்ளது.

நிலங்கெதர தயாரத்ன என்ற இந்த பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சவூதிக்கு தொழிலுக்காக சென்றுள்ளார்.

இந்தநிலையில் தமது எஜமானர் தம்மை கொலை செய்யும் நோக்கில் குளிரூட்டியில் வைத்து பூட்டியதாக அவர் இலங்கையில் உள்ள தமது கணவருக்கு அறிவித்திருந்தார்.

எனினும் இது தொடர்பில் சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த பெண்ணின் உடம்பில் சில எரிகாயங்கள் உள்ள போதும் அவர் நலமாக உள்ளார் என்று தெரியவந்துள்ளது.

வீட்டைச்சுற்றி மீன் தொட்டி மதில்!!(படங்கள் )

துருக்கியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் தனது வீட்டுக்குரிய சுற்று மதிலை மிக நீண்ட மீன் தொட்டியைக் கொண்டு உருவாக்கியுள்ளார்.

சுமார் 50 மீற்றர் நீளமான இந்த மீன் தொட்டியை உருவாக்குவதற்கு 21,000 அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளார்.

பணம் பலதையும் செய்யும் என்பதற்கு இந்த மீன் தொட்டி மதிலும் ஒரு உதாரணம்.

f1 f2 f3 f4 f5 f6 f7

சத்யராஜ் படத்தை முடக்கிய தலைவா தயாரிப்பாளர் : இயக்குனர் பரபரப்பு புகார்!!

sathiyaraj

உளவுத்துறை, ஜனனம் போன்ற படங்களை இயக்கியிருப்பவர் ரமேஷ் செல்வன். தற்போது சத்யராஜ் நடிப்பில் கலவரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தலைவா திரைப்பட தயாரிப்பாளர் மீது புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.

அந்த மனுவில் தற்போது சத்யராஜை கதாநாயகனாக வைத்து கலவரம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளேன். இந்த படத்தை எனது நண்பர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். எங்கள் படத்தின் விளம்பரங்களை பார்த்து தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் எங்களை இரண்டு வாரங்களுக்கு முன் நேரில் அழைத்து பேசினார்.

அப்போது எங்களுடைய தலைவா படத்தின் பிரச்னையில் நாளை முடிவு தெரிந்து விடும். தெரிந்ததும் தலைவா படத்தை உடனே வெளியிடுகிறோம். உங்களுடைய கலவரம் படம் வெளியிட்டால் எனது தலைவா படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காது.

எனவே நானே உங்களுடைய படத்தினை 2.25 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறேன். ஒப்பந்தம் தயார் செய்து கொண்டு வந்து விடுங்கள் என்று கூறினார்.

அதன்படி நேற்று ஒப்பந்தத்தோடு சந்திரபிரகாஷ் ஜெயினை சந்திக்க சென்றோம். அதற்கு அவர் எங்களை சந்திக்க மறுத்ததுடன், எங்களை தாழ்த்தியும் அவமானப்படுத்தியது மட்டுமில்லாது உங்களை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி படத்தை வாங்க மறுத்து விட்டார்.

படத்தை வெளியிடாததால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் நானும் எனது தயாரிப்பாளர் ரவிச்சந்திரனும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை.

எனவே இந்த பிரச்சினையில் போலீசார் தலையிட்டு எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சந்திரபிரகாஷ் ஜெயின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

என்னுடைய படங்களில் இனி லுங்கி டான்ஸ் இருக்கும் : தனுஷ்!!

danush

தனுஷ் சமீபகாலமாக சென்டிமென்ட் நிறைய பார்க்கும் மனிதராக மாறி உள்ளார். அவர் இப்போதெல்லாம் சினிமா விழாக்களுக்கு வேஷ்டி, சட்டை அணிந்துதான் வருகிறார்.

அவரிடம் ஏன் வேஷ்டி, சட்டையுடன் கலந்து கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு நான் ஒரு தமிழன். தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை அணிவதில் பெருமைப்படுகிறேன் என்று கூறி அனைவரின் வாயையும் அடைத்து விடுகிறார்.

சினிமா விழாக்கள் தவிர்த்து இனிமேல் தான் நடிக்கும் படங்களிலும் ஒரு காட்சியிலாவது வேஷ்டி, சட்டை அணிந்து நடிக்கவேண்டும் என தனுஷ் முடிவு செய்துள்ளார். வேஷ்டி, சட்டையை தவிர தான் நடிக்கும் படங்களில் ஒரு பாட்டுக்காவது லுங்கி கட்டி ஆடுவது எனவும் தீர்மானித்துள்ளார்.

இதுகுறித்து தனுஷ் கூறும்போது, என்னுடைய பல படங்களில் லுங்கி கட்டி நடித்துள்ளேன். அதிலும் குறிப்பாக ஆடுகளத்தில் ஒரு பாட்டு முழுவதும் லுங்கி கட்டித்தான் ஆடினேன்.

அது பெரும்பாலானவர்களுக்கு பிடித்திருந்தது. அந்த டான்ஸை கிராமத்து மக்கள் பார்த்துவிட்டு என்னை தங்களில் ஒருவராகவே நினைத்தார்கள் என்று கூறினார்.

அதனால் சென்டிமென்டாக இனிவரும் படங்களில் ஒரு பாடலுக்காவது லுங்கி கட்டி ஆடுவது என தனுஷ் முடிவு செய்துள்ளார்.

கோலிவுட்டின் டொம் க்ரூஸ் அஜீத் : ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் புகழாரம்!!

ajith

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ஆரம்பம் படத்தின் ஒவ்வொரு சண்டைக் காட்சிகளிலும் ரொம்பவே ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் அஜீத். இதனால் பலமுறை விபத்துகளில் சிக்கியும், கடைசிவரை டூப் போடாமலேயே துணிச்சலாக நடித்துள்ளார்.

இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய ஹாலிவுட்டை சேர்ந்த லீ விட்டேக்கர் கூறும்போது,

அஜீத் ஒரு சாகசக்காரர். கமலுக்கு அடுத்தபடியாக கடினமாக உழைக்கக்கூடிய நடிகர். ஆரம்பம் படத்தில் நடித்தபோது, அவரது உடம்பில் பல இடங்களில் காயம் ஏற்பட்டபோதும் அவர் மனம் தளரவில்லை. மீண்டும், மீண்டும் கடினமான ஆக்ஷன் காட்சிகளில் தில்லாக நடித்தார். அப்போதெல்லாம் என் கண்களுக்கு ஹாலிவுட்டின் டொம் க்ரூஸ் போன்று தெரிந்தார் என்று கூறியுள்ளார்.

தெலுங்கில் விக்ரமசிம்ஹா வாக மாறிய கோச்சடையான்!!

kochadayan

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் கோச்சடையான். இந்த படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குகிறார். முதன்முறையாக மோஷன் கேப்சர் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டிரைலரை தயார் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக ரொம்பவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஹாலிவுட்டில் தயாரான அவதார் படத்தைப் போல இந்த படத்திலும் விஷுவல் எபக்ட்ஸ் பயங்கரமாக இருக்கும் என்கிறார்கள்.

இப்படத்தின் பின்னணி இசையை லண்டனில் உள்ள ஸ்டுடியோவில் முடித்துவிட்டார் ஏ.ஆர்.ரகுமான. தமிழ், ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளிலும் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் விக்ரமசிம்ஹா என்ற பெயரில் வெளிவர உள்ளதாம். அதற்கான டப்பிங் பணிகளில் தற்போது இந்த படக்குழு களமிறங்கியுள்ளதாம். விரைவில் படத்தை வெளியிடவும் முடிவு செய்துள்ளனர். இப்படம் ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தி நடிகை சோனம் கபூர் தலைமையில் நடந்த கற்பழிப்புக்கு எதிரான ஊர்வலம்!!

sonam

மும்பையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு புகைப்பட நிருபராக பணிபுரிந்த 23 வயதுப் பெண் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடந்த 22ம் திகதி கற்பழித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இது போன்ற தொடர் நிகழ்வுகள் பொதுமக்களிடையே கோபத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் நடந்த நிகழ்ச்சி குறித்து, பல ஹிந்தித் திரையுலக நட்சத்திரங்கள் தங்களின் கோபத்தை இணையதளத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.அவர்களில் சோனம் கபூரும் ஒருவராவார்.

இவர் நடிகர் அனில் கபூரின் மகளாவார். முன்னாள் மொடல் அழகியான இவர் பிரான்ஸ் நாட்டு அழகுப் பொருட்கள் விற்பனை நிறுவனமான லோ ரியலின் செய்தித் தொடர்பாளராக இருப்பதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளார்.

மும்பையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திற்காக தான் மிகவும் வெட்கக்கேடாக உணருவதாகவும், இது ஒரு கோழைத்தனமான செயல் என்றும் சோனம் கபூர் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை எதிர்த்து மும்பையில் ஞாயிற்றுக்கிழமை அன்று இவரது தலைமையில் ஹிந்தித் திரையுலக நட்சத்திரங்கள் உட்பட பலர் ஒரு ஊர்வலம் நடத்தினர்.

ஜோகர்ஸ் பூங்காவிலிருந்து கார்ட்டர்ஸ் சாலையில் இருந்த திரை அரங்கு வரை நடந்து சென்ற இவர்கள் கற்பழிப்புக்கு எதிரான இந்தியா என்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் தாங்கிச் சென்றனர்.

பாடகி சோனா மகோபத்ரா,கன்னட நடிகை ரேஷ்மா டிசோஸா,டிவி நடிகர் கரன்வீர் போரா, டீஜே சிது, குஷால் பஞ்சாபி, தலிப் தஹில்,பாபா சித்திக் போன்றோர் இவருடன் இணைந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

பயங்கரவாதச் செயற்பாடுகளில் எவரும் ஈடுபட அனுமதியில்லை : கோட்டாபாய ராஜபக்ச­!!

kotapaya

இலங்கையிலிருந்து கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட எவருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ச­ தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

நாட்டின் எந்தப் பகுதியிலும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட எவருக்கும் இடம ளிக்கப் போவதில்லை. பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு ஒன்று யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தவிருப்பவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். இப்படியான ஆபத்து ஏதும் அங்கு இல்லை. பயங்கரவாதம் தலைதூக்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை படையினர் எடுப்பர்.

யாழ்ப்பாணத்தில் 99 வீதம் தமிழர்களே வாழ்ந்து வருகின்றனர். அங்கு படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

எனவே பாகிஸ்தான் தீவிர வாதிகளினால் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடிய சாத்தியம் எப்போதும் ஏற்படாது. எனினும் இந்திய கரையோரங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.