கடலில் சுறாமீன் கடித்ததில் கையை இழந்த பயணி..!

sharkஅமெரிக்காவின் ஹவாய் தீவில் மாயி என்ற இடத்தில் அமைந்துள்ள ஒயிட் ராக் கடற்பகுதியாகும். நேற்று இந்தப் பகுதியில் கடலில் மூழ்கி நீந்திக் கொண்டிருந்த ஜெர்மன் பயணி ஒருவரை சுறாமீன் தாக்கியதில் அவரது வலது கையை இழந்துள்ளார். விபத்து நடந்ததைக் கேள்விப்பட்டு அவசரகால உதவியாளர்கள் வந்தபோது அவர் மயக்க நிலையை அடைந்திருந்தார்.

கடலிலிருந்து அவரை மீட்ட உதவியாளர்கள் அவரை மாயியில் உள்ள மருத்துவ மையத்தில் சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து இரண்டு புறமும் ஒரு மைல் தூரத்திற்கு கடற்கரை மூடப்பட்டுள்ளது. இன்று அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆராய்ந்த பின்னரே கடற்கரையை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்வார்கள்.

இதே இடத்தில் கடந்த பிப்ரவரியில் ஒரே நாளில் இரண்டு பேரும், ஜூலை மாத இறுதியில் ஒருவரும் ஆக இதுவரை நான்கு பேர் சுறாமீனின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். சமீப காலங்களில் சுறா மீன்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது. ஆயினும், புளோரிடா பல்கலைக்கழக கணக்கீடுகளின்படி, இதனால் ஏற்படும் இறப்பு சதவிகிதம் இரண்டாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைவா படத்தை நிபந்தனை அடிப்படையில் 23ம் திகதி வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு!!

Thalaiva-Movie-Updates

விஜயின் தலைவா படத்தை சில நிபந்தனைகளின் அடிப்படையில் வரும் 23ம் திகதி வெளியிடலாம் என திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தலைவா படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். 9ம் திகதி உலகமெங்கும் வெளியாகிவிட்ட இந்தப் படம் தமிழகத்தில் வெளியாகாததால், திருட்டு டிவிடிகள் வெளியாகிவிட்டன. இந்த நிலையில் படம் இன்று வருமா நாளை வருமா என தவிப்போடு இருப்பதாக விஜய் வீடியோவில் உருக்கம் காட்டினார்.

திரையுலக பிரமுகர்கள் சிலரும் படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்தப் படம் வெளியாக முதல்வர் உதவ வேண்டும் என திரும்பத் திரும்ப விஜயும் அவரைச் சார்ந்தவர்களும் கூறிவருவது அரசுத் தரப்புக்கு கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

படத்தை வெளியிடுவதும் வெளியிடாததும் திரையரங்குகள் விருப்பம். அரசையோ முதல்வரையோ இதில் தொடர்பு படுத்தக் கூடாது என தலைவா படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

எனவே இனி படத்தை வெளியிடுவது திரையரங்க உரிமையாளர்களின் கையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று தேனாம்பேட்டையில் தங்கள் சங்க அலுவலகத்தில் கூடிய திரையரங்கு உரிமையாளர்கள் தலைவா படத்தை வரும் 23ம் திகதி வெளியிடலாமா என ஆலோசித்தனர்.

ஆனால் அன்று தேசிங்கு ராஜா படத்துக்கு 350 அரங்குகள் கொடுத்திருப்பதால் விஜய் தரப்பு கேட்கும் 500 அரங்குகளில் வெளியிடுவது சாத்தியமில்லை என்று தெரிவித்தனர்.

250 முதல் 300 அரங்குகளில் சதவீத அடிப்படையில் வேண்டுமானால் தலைவாவை வெளியிடலாம். மினிமம் கரண்டி அடிப்படையில் என்றால் படத்தை வெளியிட முடியாது என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். இந்த நிபந்தனைக்கு விஜய் தரப்பு ஒப்புக் கொண்டால் தலைவா படம் அடுத்த வாரம் வெளியாகக் கூடும்.

படப்பிடிப்பில் காயமடைந்த கமல்..!!

Kamal-Haasan

விஸ்வரூபம் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் கமல் சண்டைக் காட்சியில் நடித்தபோது காயம் அடைந்தார். தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.

புதிய படமொன்றின் பாடல் பதிவுக்காக லண்டன் சென்றிருக்கும் இளையராஜா முதன்முறையாக இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதில் பங்கேற்க வேண்டும் என்று கமலிடம் கேட்டார்.

விஸ்வரூபம் 2 படப்பிடிப்பிலிருந்து வீடியோ கன்பரன்ஸ் மூலமாக இளையராஜாவுடன் பேசிய கமல், படப்பிடிப்பின் போது காயம் அடைந்திருந்தாலும் இளையராஜாவின் இசை எந்த காயத்தையும் ஆற்றிவிடும் என்பதால் காயத்தை பொருட்படுத்தாமல் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக பதில் அளித்தார்.

அவுஸ்திரேலிய அணியில் பாகிஸ்தானை சேர்ந்த புதுமுக வீரர்!!

aus

மைக்கல் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் கொண்ட ஆஷஷ் தொடரில் அவுஸ்திரேலிய அணி மோசமாக விளையாடி தோற்று தொடரை இழந்தது.

முதல் டெஸ்டில்14 ஓட்டங்களிலும், 2வது டெஸ்டில் 347 ஓட்டங்களிலும், 4வது டெஸ்டில் 74 ஓட்டங்களிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 3வது டெஸ்ட் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது. இதனால் இங்கிலாந்து3–0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 21ம் திகதி தொடங்குகிறது.

அதைத்தொடர்ந்து இங்கிலாந்து – அவுஸ்திரேலியா மோதும் இரண்டு 20-20 ஆட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து இரு அணிகள் மோதும் 5 ஒருநாள் போட்டி நடக்கிறது. செப்டம்பர் 6ம் திகதி முதல் 16ம் திகதி வரை ஒருநாள் தொடர் நடக்கிறது.

ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

புதுமுக வீரர் பவாத் அகமது அணியில் இடம்பெற்றுள்ளார். சுழற்பந்து வீரரான இவர் பாகிஸ்தானை சேர்ந்தவர். 2010ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து இவர் அவுஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் புகுந்தார். உள்ளூர் போட்டியில் சிறப்பாக பந்து வீசியதால் அவுஸ்திரேலிய தேர்வு குழு வாய்ப்பு வழங்கியுள்ளது.

வேகப்பந்து வீரர் ஜோஷ் ஹாசல்வுட் 3 ஆண்டுக்கு பிறகு அணியில் இடம் பெற்றுள்ளார். சம்பியன் கிண்ண போட்டியில் விளையாடிய மிச்சல் மார்ஷ், டோகர்ட்டி ஆகியோர் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் தொடரில் விளையாடும் அவுஸ்திரேலிய அணி விவரம்:–
கிளார்க் (தலைவர்), பெய்லி, வானர், வட்சன், ஸ்டீவன் சுமித், மத்யூவாடே, ஷான் மார்ஷ், வோகஸ், பவ்ல்னெர், அரோன்பிஞ்ச், ஹாசல்வுட், ஹியூகஸ், மைக்கேல் ஜோன்சன், மேகஸ்வெல், மெக்காய், ஸ்டார்க், நதன் கோல்டர், பவாத் அகமது.

விமானம் போல் பறக்க புதிய ஆடை கண்டுபிடிப்பு..!!

dress

விண்ணில் பறக்கும் பறவையை கண்ட மனிதன் தான் பறக்க விமானம் கண்டு பிடித்தான். அதை தொடர்ந்து ஹெலிகாப்டர், கியாஸ் பலூன், ராக்கெட், விண்கலம் போன்றவை உருவாகின.

தற்போது அதையும் மிஞ்சும் வகையில் விமானம் துணையின்றி தானாகவே வானில் பறக்கும் யுக்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்காக விசேஷ உடை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இதை நியூசிலாந்தை சேர்ந்த நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர். பறக்கும் விசேஷ உடை 2 சிலிண்டர்களை கொண்டது. அதில் முன்னோக்கி தள்ளக்கூடிய காற்றாடிகள் உள்ளன. அவை கார்பன் இழையால் ஆன சட்டங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த சட்டையை வானில் பறப்பவர் முதுகில் மாட்டிக் கொண்டு அதில் உள்ள பட்டை வாரினால் இறுக கட்டிக் கொள்ள வேண்டும். பறக்கும் போது அதில் உள்ள 2 கைப்பிடிகளை செல்லும் திசைக்கு தக்கபடி மாற்றிக் கொள்ள முடியும்.

இதன் மூலம் மணிக்கு அதிகபட்சமாக 74 கி.மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். 30 கி.மீட்டர் தூரத்தை 30 நிமிடத்தில் சென்றடையலாம். 330 கிலோ எடையை தூக்கி செல்லலாம்.

இந்த பறக்கும் உடை கிளன் மார்டின் என்பவரின் முயற்சியால் உருவானது. நியூசிலாந்து கிறிஸ்ட் சர்ச் நகரை சேர்ந்த இவர் கடந்த 1980ம் ஆண்டில் அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார்.

அவர் தனது குழந்தை பருவத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘தண்டர்பர்ட்ஸ்’, ‘லாஸ்ட் இன் ஸ்பேஷ்’ போன்ற சாகச நிகழ்ச்சிகளை பார்த்து அதன் மூலம் ஆர்வம் ஏற்பட்டு இந்த முயற்சியை மேற்கொண்டனர். அவரது கனவு தற்போது தான் நனவாகி உள்ளது.

இதை மாட்டிக் கொண்டு பறக்க நியூசிலாந்தின் விமான நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. எனவே, இது அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

தொடக்கத்தில், இராணுவ வீரர்கள், விமான ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு படையினருக்கு என விசேஷமாக தயாரிக்கப்பட்டு வழங்கப்படும். பின்னர் சாதாரண வடிவில் தயாரிக்கப்படும் பறக்கும் உடை 2015ம் ஆண்டில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு வரும்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை..!

vavuniyaஎதிரிகளாக இருக்கும் இஸ்ரேல் – பாலஸ்தீன நாடுகள் பகைமையை மறந்து மீண்டும் சமாதான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது.

அமைதி பேச்சுவார்த்தையை விரும்பும் நல்லெண்ணத்தின் அடையாளமாக 104பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சமீபத்தில் அறிவித்தார்.

இதில் முதல் கட்டமாக நேற்று இஸ்ரேல் சிறையில் இருந்து 26 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, இஸ்ரேல் – பாலஸ்தீன குழுவினருக்கிடையே முதல் கட்ட அமைதி பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. பேச்சுவார்த்தையில் பங்கேற்ற இருநாட்டு அதிகாரிகளும் சந்தித்து கைகுலுக்கும் காட்சிகளை இஸ்ரேல் ஊடகங்கள் நேற்று வெளியிட்டன.

எனினும், பேச்சுவார்த்தை நடந்த இடம் பற்றிய தகவல்களை இரு நாடுகளுமே ரகசியமாக வைத்துள்ளன.

இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீனயர்களின் பிரேதங்களும் விரைவில் பாலஸ்தீன அரசிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எகிப்தில் தொடர்ந்து கலவரம் – ஒரே நாள் துப்பாக்கிச் சூட்டில் 278 பேர் பலி..!

egyptஎகிப்தில் அதிபராக இருந்த மோர்சி, மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறி ராணுவம் அவரை கடந்த மாதம் ஆட்சியிலிருந்து அகற்றியது. பின்னர் கைது செய்யப்பட்ட அவர் இதுவரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனால், கொதிப்படைந்த அவரது ஆதரவாளர்கள் பல்லாயிரக் கணக்கானோர் மோர்சியை மீண்டும் பதவியில் அமர்த்த கோரி தலைநகர் கெய்ரோவில் ரபா-அல்-அடாவியா என்ற முகாம் அமைத்து போராட்டம் நடத்தி வந்தனர்.

அவர்களை கலைந்து செல்லும்படி பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. அதனால் மோர்சியின் ஆதரவாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த பொலீசார் நேற்று காலை களத்தில் இறங்கினர்.

அப்போது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய பொலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர். பின்னர் அது கலவரமாக மாறியது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்தினர்.

பேராட்டக்காரர்களுக்கும் பொலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் இன்று அதிகாலை நிலவரப்படி, 278 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், சுமார் 2 ஆயிரம் பேர் படுகாயமடைந்ததாகவும் முஹம்மது மோர்சியின் ஆதரவாளர்கள் கூறினர்.

பொலீசார் தரப்பில் 43 பேர் பலியாகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

கெய்ரோ நகரின் பல பகுதிகள் போர்க் களம் போல் காணப்படுகின்றன. துப்பாக்கிச் சூட்டில் இறந்த உறவினர்களின் பிரேதங்களை உறவினர்கள் தேடும் காட்சிகளும், இறந்தவர்களின் மனைவி, பிள்ளைகள் பிணங்களின் மீது விழுந்து கதறியழும் காட்சிகளும் நெஞ்சை நெகிழச் செய்கிறது.

தேர்தல் நீதியாகவும் நியாயமானதாகவும் நடைபெற வேண்டும்: இந்தியா அழுத்தம்..!

votingஎதிர்வரும் செப்டம்பர் மாதம்ட நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும், நம்பகமான முறையிலும் நடைபெறும் என்று இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹா, இன்று இந்தியாவின் 67வது சுதந்திர நாளை முன்னிட்டு இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கத்தின் அண்மைக்கால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக இந்தியா தனது கருத்தை தெரியப்படுத்தியுள்ளது.

மேலும், தேசிய ஒருமைப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம், நிலையான அரசியல் தீர்வு ஒன்று காண்பதாக, இந்தியாவுக்கும், அனைத்துலக சமூகத்துக்கும் அளித்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சமத்துவம், நீதி, கௌரவம், சுயமரியாதையுடன் கூடிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துவதன் மூலமே,இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட எல்லா குடிமக்களும் சம பங்காளராக வாழ முடியும் என்று தெரிவித்தார்.

போரின் முடிவு, எல்லா சமூகங்களும் இலங்கையில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கான இணையற்ற வாய்ப்பை வழங்கியுள்ளது இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொய்யாப்பழம் திருடிய 6 வயது சிறுமி : கைது செய்ய வற்புறுத்திய தாத்தா-பாட்டி!!

goa

வீட்டுத் தோட்டத்தில் விளைந்த கொய்யாப்பழங்களைத் திருடிய குற்றத்திற்காக 6 வயது சிறுமியைக் கைது செய்யச் சொல்லி வற்புறுத்திய வயதான தம்பதிகளால் ராஜஸ்தான் பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜஸ்தான் கோத்ரா மாவட்டத்தில் உள்ள பிரகதி நகரில் வாழ்ந்து வரும் வயதான தம்பதிகள் வீட்டுத் தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர். சமீப காலமாக அவர்களது தோட்டத்தில் உள்ள மரங்களில் இருந்து கொய்யாப் பழங்கள் மாயமாகி வந்தன.

திருடனைக் கையும், களவுமாக பிடிக்க நாள் பார்த்து வந்தனர். ஒருநாள் 6 வயது சிறுமி ஒருவர் சுவர் ஏறிக் குதித்து தோட்டத்திற்குள் புகுந்ததைக் கண்டனர் அவர்கள். உடனடியாக ஓடிச் சென்று அச்சிறுமியைக் கையும் களவுமாக கொய்யாப் பழக்களோடு பிடித்து விட்டனர்.

உடனடியாக அச்சிறுமியின் வீட்டைச் சோதனையிட்ட அவர்கள் அங்கிருந்து மற்றொரு கொய்யாவைக் கைப்பற்றியுள்ளனர். பின்னர், அச்சிறுமியை பொலிஸ் நிலையத்திற்குஅழைத்துச் சென்று பொலிசார் அவள் மீது வழக்கு பதிவு செய்யச் சொல்லி வற்புறுத்தினர்.

7 வயதுக்கு குறைவான குழந்தைகளை கைது செய்ய இயலாது என எவ்வளவோ பொலிசார் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்க மறுத்து பிடிவாதம் பிடித்துள்ளனர் அத்தம்பதி. பின்னர் ஒருவழியாக அச் சிருமியை அவர்களிடமிருந்து காப்பாற்றி அவளது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர் பொலிசார்.

சிறுமியை அவளது முடியைப் பிடித்து பொலிஸ் நிலையம் வரை இழுத்து வந்த அத்தம்பதியரின் மனிதாபிமானமற்ற செயலைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். கொய்யாவிற்கு கொடுத்த மதிப்பைக் கூட 6 வயது சிறுமிக்குத் தரவில்லையே என அச்சிறுமியின் பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

திருமணத்துக்கு பின் சினேகா, பிரசன்னா மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்கள்!!

sneha

சினேகாவும், பிரசன்னாவும் திருமணத்துக்கு பிறகு மீண்டும் புதுப்படமொன்றில் ஜோடியாக நடிக்கின்றனர். ஏற்கனவே இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போதுதான் இவர்களுக்குள் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இருவரும் மீண்டும் ஜோடியாக நடிக்க கதை கேட்டு வந்தார்கள். இந்த நிலையில் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கிய இயக்குனர் வைத்தியநாதன் சொன்ன கதை பிடித்துப்போய், தற்போது அவர் இயக்கும் புதுப்படத்தில் மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்கள்.
இதுகுறித்து சினேகா கூறும்போது, அருண் வைத்தியநாதன் படத்தில் இருவரும் சேர்ந்து நடிப்பது குறித்து பேசி வருகிறோம். ஓரிரு வாரத்தில் முடிவாகிவிடும் என்றார்.

படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விபத்து : கே.ஆர்.விஜயா, மோனிகா உயிர் தப்பினர்!!

monika

சுவடுகள் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு நடிகை கே.ஆர்.விஜயா, மோனிகா உயிர் தப்பினார்கள். இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி ஜெய்பாலா இயக்குகிறார். இவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். நாயகியாக மோனிகா நடிக்கிறார். கே.ஆர்.விஜயா முக்கிய பாத்திரத்தில் வருகிறார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கிறார். தற்கொலை முடிவுகளை சாடும் கதையம்சத்தில் இப்படத்தை எடுக்கின்றனர். இதன் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்தது. 40 அடி உயர கிரேனில் கேமராவை பொருத்தி கே.ஆர்.விஜயா, மோனிகா நடித்த காட்சிகளை ஜெய்பாலா படமாக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது மழையில் மண் ஈரமாகி இருந்ததால் கிரேன் பிடிப்பை இழந்து திடீரென சரிந்தது. கே.ஆர்.விஜயா, மோனிகா தலையில் அது விழப்போனது. உடனே படக்குழுவினர் அலறி சத்தம் போட்டார்கள் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த 200 பேர் ஓடிச்சென்று கிரேனை தாங்கி பிடித்தனர். இதனால் கே.ஆர்.விஜயா, மோனிகா உயிர் தப்பினார்கள். கிரேன் பழுதாகியது.

இதுகுறித்து ஜெய்பாலா கூறும்போது, விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் தப்பினோம். இக்கட்டான சூழலிலும் காட்சிகள் அழகாக படமாகியுள்ளன என்றார். இப்படத்தில் மோகன்சர்மா, கலைஞானம் போன்றோரும் நடிக்கின்றனர். காதல், காமெடியும் படத்தில் இருக்கும். தற்கொலை முடிவுகளை தடுப்பதாக இப்படம் இருக்கும் என்றும் இயக்குனர் கூறினார்.

வீடு புகுந்து 30 வயது பெண்ணை துப்பாக்கி முனையில் கற்பழித்த பொலிஸ்காரர்கள்..!

rape

இந்திய உத்தர பிரதேசத்தில் 30 வயது பெண்ணை 2 பொலீசார் துப்பாக்கி முனையில் கற்பழித்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் காகெரு கிராமத்தைச் சேர்ந்த 30 வயது பெண்ணின் வீட்டுக்குள் கான்ஸ்டபிள்கள் தீபக் ரதி மற்றும் விகாஸ் சவுத்ரி ஆகியோர் புகுந்துள்ளனர்.

அவர்கள் அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் கற்பழித்துவிட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். இந்த விவகாரம் குறித்து யாரிடமாவது தெரிவித்தால் உன்னை கொன்று விடுவோம் என்றும் அவர்கள் அப்பெண்ணை மிரட்டியுள்ளனர்.

அவர்களின் மிரட்டலையும் தாண்டி அப்பெண் பொலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் அந்த 2 பொலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த 2 பொலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

இரண்டு காதலர்களைப் பிரிந்த சிநேகா!

snehaaaஅமலா பாலைப் போல சினேகாவும் இரண்டு காதலர்களைப் பிரிந்துவிட்டாரா எனப் பதற வேண்டாம். இது சிநேகாவின் காதலர்கள் படம் பற்றிய செய்தி.

அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்த அத்வைதாவைத் (இப்போது கீர்த்தி என பெயரை மாற்றிவிட்டாராம்) தவிர புதுமுகங்கள் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கிறது சிநேகாவின் காதலர்கள்.

முதல்கட்ட படப்பிடிப்பை 25 நாட்களுக்கு கோவை மற்றும் கொடக்கானலில் முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். இதில், திலக், உதய் என்ற இருவரைக் காதலித்து, கண்ணீருடன் பிரிந்திருக்கிறார் சிநேகா.

அடுத்த ஷெட்யூல் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. சென்னை மற்றும் கொடைக்கானலில் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள்.

இந்த ஷெட்யூலிலும் பலரைக் காதலித்துக் கசிந்துருகி பிரியப் போகிறாராம் சிநேகா. ஆனால் காதலர்களின் எண்ணிக்கையை மட்டும் படத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார் இயக்குநர்.

விரல் விட்டு எண்ண முடியுமா? இல்லை கல்குலேட்டர் வேண்டுமா என்பது சிநேகாவுக்கே வெளிச்சம்.

மகளின் காதல் விவகாரம் : பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மீண்டும் சென்ற சேரன்!!

cheran

இயக்குனர் சேரன் தன் மகளின் காதல் விவகாரம் குறித்து மீண்டும் பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
இயக்குனர் சேரனின் இரண்டாவது மகள் தாமினி . இவரும் சூளைமேட்டை சேர்ந்த சந்துரு என்பவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் காதலனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் தனது தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் தாமினி புகார் அளித்திருந்தார்.

இதற்கிடையில், தாமினியை மீட்டு ஒப்படைக்கும்படி சந்துருவின் தாய் ஈஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இது குறித்து வழக்கு விசாரணை தொடர்ந்து நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தாமினியின் இணைய தள முகவரியை பயன்படுத்தி மோசடி செய்ததாக சந்துரு மீது பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிந்து கொள்வதற்காக இயக்குனர் சேரன் பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் சிவக்குமாரை சந்தித்து பேசியுள்ளார்.

மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதி மொழியை தொடர்ந்து சேரன் வீடு திரும்பியுள்ளார்.

வவுனியா நெல் வயல்களில் கபில நிறத் தத்தியின் தாக்கத்தால் ஆபத்து..!

vavuniyaவவுனியா மாவட்டத்தில் 2013 சிறுபோக நெற்செய்கை அறுவடையானது 40% முடிவடைந்துள்ள நிலையில், சற்று தாமதமாக பயிர் ஸ்தாபிக்கப்பட்ட பாவற்குளம் பகுதியில் நெல் வயல்களில் கபில நிற தத்தியின் தாக்கம் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை வவுனியா விவசாய திணக்களத்தின் பயிர் பாதுகாப்பிற்கு பொறுப்பான பாடவிதான உத்தியோகத்தர் இரா.தர்மதேவன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

பாவற்குளம் 6 ஆம் வாய்க்கால் பகுதியில் இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இதற்கு சரியான தடுப்பு முறைகளை கையாண்டு இத்தத்தியின் பெருக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 50% வரை விளச்சல் பாதிக்கப்படுவதோடு அருகாமையில் உள்ள நெல் வயல்களுக்கும் மிக விரைவாக பரவலடையும் அபாயம் காணப்படுகின்றது.

ஆசிய நாடுகளில் நெல்லை பாதிக்கும் பூச்சிகளில் பிரதான இடத்தை வகிப்பது கபில நிறத்தத்தி ஆகும். இதன் பாரிய தாக்கமாக தத்தி எரிவு விளங்குகிநது. தத்திகளினால் பாதிக்கப்பட்ட பயிர்; முதலில் மஞ்சள் நிறமாவதோடு தத்தியின் எண்ணிக்கை அதிகமாகும்போது உலர்ந்து இறந்துபோகும்.

கபில நிறத் தத்திகள் தண்டில் இருந்து சாற்றை உறிஞசிக்குடிப்பதனால் எரிவு ஏற்படுத்துவதோடு மேலதிகமாக புற்பறட்டை, பம்பை பறட்டை, மற்றும் வாடற்பறட்டை போன்ற வைரஸ் நோய்களை பரப்பும் காவியாக செயற்படுகின்றது. குடலை பருவத்திற்கு முன்னர் பயிரில் அதிக அளவு குட்டையான சிறகுள்ள நிரையுடலிகளே காணப்படும்.

பயிர்கள் முதிர்ச்சியடையும்போது பறந்து செல்லக்கூடிய நீண்ட சிறகுகளைக்கொண்ட தத்திகள் அதிக எண்ணிக்கையில் உருவாகும் எனவும் தெரிவித்த அவர், இதனை கட்டுப்படுத்தும் வழிகளாக எதிர்புத்தன்மை கொண்ட வர்கங்களை பயிரிடுதல் (பிஜி300, பிஜி357, பிஜி304, பிஜி352), பயிர்களை தொடர்ந்து அவதானித்து நீர் முகாமைத்துவம் வெய்தல், வாய்க்கால் மற்றும் சுற்றுபுறங்களில் களைகள் இல்லாமல் துப்பரவாக வைத்தல், தேவைப்படுமாயின் சிபாரிசு செய்யப்பட்ட பீடைநாசினி ஒன்றினை வயலில் நீரினை வடிகட்டியபின் வலு தெளிகருவி மூலம் பயிரின் அடிப்பகுதியில் படும் வகையில் பயிர்களை பிரித்து விசிறியும் கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்த அவர் சிபாரிசு செய்யப்பட்ட பீடைநாசினிகளை வீசுவதனூடாகவும் கட்டுப்படுத்தலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் அதிகரித்து வரும் சிறுவர் திருமணங்கள்..!

childஇலங்கையில் சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் மற்றம் கல்விக்கான நிதியம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய தெளிவின்மை, பொருளாதார நிலைமைகள் போன்றவற்றால் இவ்வாறு சிறுவர் திருமணங்கள் அதிகரித்த நிலையில் காணப்படுவதாக, அதன் இலங்கைக்கான பிரதிநிதி ரீசா ஹொசைனி தெரிவித்துள்ளார்.

சிறுவயதில் திருமணம் முடித்த 71 பேர் மத்தியில் நடத்தப்பட்ட சோதனையில் அவர்களில் 30 சதவீதமானவர்கள், 18 வயதுக்கு முன்னதாகவே கருத்தரித்திருந்தமை தெரியவந்துள்ளது.

இவ்வாறான சிறுவர் திருமணங்களால், மன உளைச்சல், சுகாதார சீர்கேடுகள், சிசு மரணங்கள் போன்றன அதிகரிப்பதுடன், அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் ஏனைய வன்முறைகளும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து நாட்டு மக்களுக்கு போதிய தெளிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.