வவுனியாவில் ஒன்பது வயது சிறுமி மீது முதியவர் பாலியல் துஷ்பிரயோகம் – விளக்கு வைத்த குளத்தில் சம்பவம்

child abuse

வவுனியா ஓமந்தை விளக்கு வைத்த குளத்தில் ஒன்பது வயது சிறுமி ஒருவரை முதியவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதையடுத்து அந்தச் சிறுமி வவுனியா வைத்தியசாலையில் வைத்திய கவனிப்பிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வந்துள்ளதாவது,

பாதிக்கப்பட்டுள்ள சிறுமி தனது தாயாருக்கு புதன்கிழமையன்று வீட்டுக்கு அருகில் உள்ள காட்டுப்பாங்கான பகுதியில் பாலைப்பழம் ஆய்வதில் உதவி செய்து கொண்டிருந்தாராம். அப்போது தாயுடன் இருந்த கைக்குழந்தை நித்திரை கொண்டதனால் அதனை வீட்டில் தொட்டிலிலிட்டு வருமாறு தாயார் இந்தச் சிறுமியை அனுப்பி வைத்துள்ளார்.

குழந்தையை தொட்டிலிலிட்டு அதனை நித்திரை கொள்ளச் செய்த போதே சந்தேக நபராகிய வயோதிபர் வந்து சிறுமியை பலவந்தப்படுத்தியுள்ளார். அப்போது சிறுமி அபயக்குரல் எழுப்பியதையடுத்தே இந்தச் சம்பவம் பற்றி வெளியில் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரைப்பற்றிய அடையாளங்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் அவரை தேடிச் சென்றுள்ளனர்.

முத்தரப்பு போட்டியில் சாதிக்குமா இலங்கை அணி ?

SRILANKA

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கின்றது. எனினும் இலங்கை அணி தன்னம்பிக்கையுடன் உள்ளது என அவ்வணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை – இந்தியா – மேற்கிந்தியத்தீவுகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நாளை மேற்கிந்தியத்தீவுகளில் ஆரம்பமாகின்ற நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அஞ்சலோ மத்தியூஸ்

அண்மையில் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிவரை முன்னேறியது. இதனால் வீரர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது.

ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் இந்திய மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் வலுவானவையாக காணப்படுகின்றன. இந்த அணிகளை வீழ்த்த வேண்டும் என்றால், எல்லா வகையிலும் சிறப்பாக விளையாடுவது அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம்.

மேலும் எமது அணியின் தொடக்க வீரர் திலகரட்ன டில்ஷான் சம்பியன் கிண்ணத் தொடரில் ஏற்பட்ட உபாதை காரணமாக இத்தொடரில் விளையாடமுடியாது போனமை துரதிர்ஷ்டவசமானது. எனினும் அணியில் இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை எதிர்கொள்கிறோம். இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்திற்கு தடையா ?

Annakodiyum Kodiveeranum Movie Wallpapers

பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவாகி வரவிருக்கும் அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்திற்கு தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை கீழகுயில்குடியை சேர்ந்த ரகுபதி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் “அன்னக்கொடியும் கொடி வீரனும்”. அந்த படத்திற்கான பூஜை கடந்த ஓராண்டுக்கு முன் பாரதிராஜாவின் சொந்த ஊரான தேனியில் போடப்பட்டது. பட பூஜையில் பாலுமகேந்திரா, பாக்கியராஜ், பாலச்சந்தர் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து வரும் 28 ஆம் திகதி திரைக்கு வர காத்திருக்கிறது. இந்நிலையில் அந்த படத்தில் வெவ்வேறு இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதுபோல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இதனால் தென் மாவட்டங்களில் சாதி மோதல் வெடிக்கும் அபாயம் உள்ளது என்று கூறி ரகுபதி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் படத்திற்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

மைக்ரோசொப்ட் பரிசை வெல்ல வேண்டுமா ?

microsoft

விண்டோசில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து, அதை தவிர்க்க சிறந்த வழிமுறைகளை கூறுவோருக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மைக்ரோ சொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோ சொப்ட் நிறுவனம், விண்டோஸ் மென்பொருட்களின் பல்வேறு வரிசைகளை வெளியிட்டு வருகிறது. கடைசியாக, விண்டோஸ் 8 மென்பொருளை வெளியிட்டுள்ளது. இதையடுத்து மற்றொரு நவீன வரிசையை வெளியிடும் நடவடிக்கையில் மைக்ரோ சொப்ட் இறங்கி உள்ளது.

இந்நிலையில், விண்டோஸ் மென்பொருளில் இருக்கும் பல்வேறு குறைபாடுகளை பயன்படுத்தி கொண்டு, ஹாக்கர்கள் எனப்படும் இணையதளத்தில் வைரசை பரப்பி குறிப்பிட்ட மென்பொருட்களை முடக்குதல் அல்லது அதில் இருந்து தகவல்களை திருடுதல் போன்றவற்றை மேற்கொள்பவர்கள் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர்.

சமீபத்தில், அமெரிக்காவின் சிடாடெல் நகரத்தில் வங்கியின் மென்பொருளில் புகுந்து வாடிக்கையாளர்களின் 2,950 கோடியை சத்தமில்லாமல் மர்ம நபர்கள் சுருட்டினர். இதேபோல், ஈரானின் அணு திட்டத்தையும் 2010ம் ஆண்டில் மர்ம நபர்கள் புகுந்து குளறுபடிகளை செய்தனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், இந்த சம்பவங்களிலும் இருந்த கணனிகளில் விண்டோஸ் மென்பொருள்தான் இருந்தது.

இதனால் விண்டோஸ் மென்பொருள் பாதுகாப்பானது அல்ல என்பதுபோன்ற தோற்றம் உருவாகி வருகிறது. இதை தடுப்பதற்காக அதிரடி நடவடிக்கையில் மைக்ரோ சொப்ட் நிறுவனம் இறங்கி உள்ளது. இதன்படி, சமீபத்தில் வெளியிடப்பட்ட விண்டோஸ் வரிசையில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து, அதற்கு தகுந்த வழி கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு 30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இத்திட்டம் அமுலுக்கு வந்துள்ளதாகவும் மைக்ரோ சொப்ட் தெரிவித்துள்ளது.

மேலும் மோசடிகளை தடுக்கும் வழிமுறைகளை சொல்பவர்களுக்கு தனியாக 6.50 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்த பரிசுத் தொகை 59 லட்சமாகும். இனி வரும் காலங்களில் விண்டோஸ் மென்பொருள்கள் அனைத்தும் இதுபோன்ற வழிமுறைகளின் மூலம் பாதுகாப்பானதாக உறுதி செய்யப்பட்ட பின்னரே வெளியிடவும் மைக்ரோ சொப்ட் திட்டமிட்டுள்ளது.

 

அமெரிக்க உளவு ரகசியத்தை அம்பலப்படுத்திய நபருக்கு விக்கிலீக்ஸ் ஆதரவு??

wikileaks

அமெரிக்க உளவு ரகசியத்தை அம்பலப்படுத்திய எட்வட் ஸ்னோடெனுக்கு, விக்கிலீக்ஸ் அசாஞ்சே புகலிடமாக இருக்கும் ஈக்வேடாரே வழி செய்யும் என நம்பப்படுகிறது. இதற்கு அசாஞ்சே ஆதரவாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

மொஸ்கோ விமான நிலையத்தின் போக்குவரத்து வலயத்தில் இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதி செய்துள்ளார். எனினும் ஸ்னோடெனை அமெரிக்காவுக்கு நாடுகடத்த ரஷ்யாவுக்கு தற்போது சட்ட ரீதியான அனுமதி இருப்பதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் கூறியுள்ளார்.

மறுபுறத்தில் ஸ்னோடெனுக்கு புகலிடம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக வெனிசுவெலா கூறியுள்ளது.
உலகை காப்பதற்கு வெளியிடப் பட்ட தகவலுக்காக இந்த இளைஞனை பாதுகாக்க முன்வர வேண்டும்’ என வெனிசுவெலா ஜனாதிபதி நிகொலஸ் மடுரோ தெரிவித்தார்.

ஸ்னோடென் தனது குடிவரவு எல்லைக்குள் வராத நிலையில் அவர் மீது உள்நாட்டு நீதிமுறையை பிரயோகிக்க முடியாது என ரஷ்யா விபரித்துள்ளது. எனினும் ஸ்னோடனுக்கு உதவுவதாக ரஷ்யா மீது அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டை அது முழுமையாக நிராகரித்தது.

திருமண பந்தத்தில் இணைந்தனர் ஜீவி பிரகாஷ் – சைந்தவி ஜோடி (படங்கள் இணைப்பு)

இன்றையதினம் திருமண பந்தத்தில் இணைந்த ஜீவி பிரகாஷ் – சைந்தவி ஜோடியின் திருமண புகைப்படங்கள்.

tamil-actor-gv-prakash-saindhavi-marriage-1 tamil-actor-gv-prakash-saindhavi-marriage-2
tamil-actor-gv-prakash-saindhavi-marriage-10

tamil-actor-gv-prakash-saindhavi-marriage-9

tamil-actor-gv-prakash-saindhavi-marriage-7

tamil-actor-gv-prakash-saindhavi-marriage-5

ந(ர)கரத்தில் வாழ்ந்தாலும் நான் கிராமத்தில் பிறந்தவனே…..

வாய்கால் தண்ணீரில்
மூழ்கிக் குளித்து
வரும் சிறுநீரையும்
கலக்க விட்டு
மேல் தண்ணீர் விலக்கி
இருகைகள் இணைத்து
அள்ளிப் பருகுவேன்
அப்போது புது
உற்சாகம் என்னுள்
பிறக்கும்..

இப்போ
கூல்வாட்டர் குடிக்கின்றேன்
குனிர் காய்ச்சல்
அடிக்கின்றது…

ஒல்லித் தேங்காய்க்கு
பூவரசம் தடி சீவி
கொம்புகள் அமைத்து
முள்முருக்கம் சோத்தியிலே
வண்டி செய்து
தங்கையை அதில் அமர்த்தி
வெட்ட வெளி வெயில் எல்லாம்
இழுத்து திரிவேன்
இன்னும் விளையாட வேண்டும்
இரவு வரக்கூடாது என்பேன்…

இப்போ
ஏசிக்கார் கதவை
திறந்து எட்டிப்பார்த்தாலே
எனக்கு லேசாக
தலைவலிக்கும்…

குண்டு மணி கோர்த்து
தங்கைக்கு அணிந்து
பனை ஓலையில் செய்த
மணிக்கூடு நான் அணிந்து
வயல் காட்டு வைரவர்
கோவிலுக்கு
வடை மாலை சாற்றுதற்கு
வண்டிகட்டி அப்பாவோடு
நாம் போவோம்…

பூஜை முடிந்ததும்
மூக்கு வரை உண்பேன்
முடியவில்லையன்றால்
மூன்று துள்ளுத்துள்ளி
முழுவதையும் செமிக்க
வைப்பேன்…

இப்போ
பத்துப்பவுண் கழுத்தில் அணிந்து
எட்டு இலட்ச கடிகாரம் கட்டி
நாகரீகம் என்ற பெயரில்
நான்கு வாய் உண்பதற்குள்
நாவு வறள்வது போல்
இருக்க
நாடுவேன் வைத்தியரை
அவர்
நானுாறு காட்டுதென்பார்
என் குருதி அழுத்தம்.

-திசா.ஞானசந்திரன்-

குவைத்தில் இலங்கை பெண்ணை கொன்ற தமிழக இளைஞர்களின் மரண தண்டனை ரத்து..!

இலங்கை பெண் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தமிழகத்தை சேர்ந்த இருவரின் மரண தண்டனையை குவைத் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இந்தியா, நாகை மாவட்டம், முத்துபேட்டையை சேர்ந்தவர் 30 வயதான சுரேஷ் மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த 32 வயதான காளிதாஸ் ஆகிய இருவருக்குமான மரண தண்டணையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் கடந்த 2008ம் ஆண்டிலிருந்து குவைத்தில் வேலை செய்து வருகின்றனர்.

கடந்த 2008இல் இலங்கையை சேர்ந்த பாத்திமா என்ற பெண் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் சுரேஷ், காளிதாஸ், இலங்கையை சேர்ந்த நித்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் நித்யாவுக்கு ஆயுள் தண்டனையும் சுரேஷ், காளிதாசுக்கு மரண தண்டனையும் அறிவிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி இவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. மரண தண்டனையிலிருந்து இவர்களை மீட்கும் படி இருவரது குடும்பத்தினரும், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை கேட்டிருந்தனர்.

இந்நிலையில் இருவரது மரண தண்டனை ஜூன் 16ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.

தூதரக அதிகாரிகளின் முயற்சியினால் பாத்திமா குடும்பத்துடன், தூதரக அதிகாரிகளும், குவைத் அதிகாரிகளும் பேசினர்.

உரிய இழப்பீட்டை அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டதால், சுரேஷ் மற்றும் காளிதாசின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் பாத்திமா குடும்பத்தினருக்கு, கணிசமான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதால், சுரேஷ் மற்றும் காளிதாசின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு குறைந்த பட்ச தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சாலை விபத்துக்களில் தமிழகம் ஏன் முதலிடம்?

salai

கடந்த ஆண்டு இந்திய சாலை விபத்து மரணங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என தேசிய குற்ற ஆவணங்கள் மையம் கூறுகிறது.

கடந்த ஆண்டு இந்திய அளவில் 4.40 லட்சம் சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன அவற்றில் 1.39 லட்சம்பேர் இறந்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் நிகழ்ந்த 67,757 விபத்துக்களில் 16,175 பேர் இறந்தனர்.

அதற்கு முந்தைய ஆண்டு, 2011லும் தமிழ்நாட்டில்தான் மிக அதிக அளவில், 65,873 விபத்துக்கள், 15,422 மரணங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 2012ல் ஒவ்வொரு மாதமும் மிக அதிகமான சாலை விபத்துக்கள் நிகழ்ந்ததும் தமிழ்நாடு, மஹாராஷ்டிரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தான் எனவும் ஆவண மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் நீண்டகாலம் பணியாற்றி புதுடில்லி, திருவனந்தபுரம் உள்ளிட்ட மாநகரங்களின் சாலைப்போக்குவரத்து மேம்பாட்டுப் பணிகளுக்குத் தலைமை வகித்த என்.எஸ்.ஸ்ரீனிவாசன் குடிபோதையில் ஓட்டுவது, போதிய பயிற்சியின்மை, தேவையில்லாத வேகம் இவற்றாலேயே விபத்துக்கள் என விளக்குகிறார்.

மேலும் வாகன ஓட்டிகள் தவறு செய்தாலும் அவர்களை மன்னித்து காப்பாற்றும் வகையில் சாலைகள் வடிவமைக்கப்படவேண்டும் என வலியுறுத்துகிறார் ஸ்ரீனிவாசன்.

மாநில போக்குவரத்து திட்டமிடல் மையத்தின் தலைவர் காவல்துறையின் கூடுதல் டைரக்டர் ஜெனரல் எஸ்.ராஜேந்திரன் மற்ற மாநிலங்களைப்போலல்லாமல் தமிழ்நாட்டில் விபத்துக்கள் அனைத்தும் உடனடியாகப் பதியப்படுவதால் அதிக விபத்துக்கள் என்பதான தோற்றம் நிலவுகிறது என்றார்.

ஆனால் நாம் சரிவர கண்காணிக்கிறோம் என்பதைத்தான் புள்ளி விவரங்கள் காட்டுவதாக அவர் கூறினார்.
மற்றபடி தேசிய நெடுஞ்சாலைகளில்தான் மிக அதிகமான விபத்துக்கள் நிகழ்வதாகவும் அவற்றைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளிப்பது, அவர்களது கண்பார்வை நிலையினை கண்காணிப்பது எல்லாவற்றிற்கும் மேலாக பாதுகாப்பான சாலைகளை வடிவமைப்பது இப்படிப் பல தளங்களில் அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்து செயல்பட்டு விபத்துக்களைக் குறைத்து பாதுகாப்பான சாலைப் பயணத்தினை உறுதிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் ராஜேந்திரன்.

(BBC)

கட்டாக்காலியாக திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை – வவுனியா நகரசபை உப தலைவர்..!

cow

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலியாக திரியும் மாடுகளை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்படும் என வவுனியா நகரசபையின் பதில் தலைவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக் காலமாக வவுனியாவில் திரியும் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களால் ஏற்பட்ட வாகன விபத்துக்களால் பலர் காயமடைத்ததோடு பல பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பல சௌகரியங்களை எதிர் கொண்டனர்.

இதற்கமைவாக நேற்றைய தினம் மாவட்ட சிரே~;ட பொலிஸ் அத்தியட்சகருக்கும் நகரசபைக்கும் இடையில் இடம்பெற்ற அவசர சந்திப்பை அடுத்தே இந் நடவடிக்கை உடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் தொழில்சார் உத்தியோகத்தர்களின் பல முறைப்பாட்டு கடிதங்கள் மற்றும் கோரிக்கைகள் எமக்கும் பொலிசாருக்கும் கிடைத்துள்ளன. இதற்கமைவாக வீதிகளிலும் பொது இடங்களிலும் காணப்படும் மாடுகளை பிடிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ் நடவடிக்கைக்கு நகரசபையின் சுகாதார பிரிவின் விசேட ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந் நடவடிக்கைக்கு பொறுப்பாக எமது நகரசபையின் சிரேஸ்ட உறுப்பினரும் சுகாதார குழுத்தலைவருமான சு.குமாரசாமி நியமிக்கப்படடுள்ளார்.

இதன் பிரகாரம் மாடுகள் பிடிக்கப்பட்டு நகரசபையில் விசேடமாக அமைக்கப்பட்ட இடத்தில் வைத்து பராமரிக்கப்படும். மாடுகளை உரியவர் பெற வேண்டுமாயின் ஒரு நாள் கட்டணம் ரூபா 750இ பிடி கூலியாக ரூபா 400இ பராமரிப்பு ரூபா 250 செலுத்தவேண்டும்.

கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு 72 மணித்தியாலங்களுக்குள் பெற தவறும் பட்சத்தில் அம்மாடுகள் பகிரங்க ஏலத்தில் விற்கப்படும்.

வைரவபுளியங்குளம் யு9 வீதிஇ வேப்பங்குளம்இ ப+ந்தோட்டம் போன்ற பகுதியில் தான் கூடுதலான கட்டாக்காலி மாடுகள் காணப்படுகின்றன. இவற்றினைக்கட்டுப்படுத்த பொது மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அதே போல் வவுனியா நகரில் கட்டாக்காலி நாய்களையும் கட்டுப்படுத்த பம்பைமடு பிரதேசத்தில் விசேட பண்ணை அமைக்கப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு..!

இலங்கை அநுராதபுரம் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்கள் இன்று மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் ஜூலை 11ம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 15ம் திகதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை படையால் மீனவர்கள் 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களை ஜூன் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளையில் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் முற்றுகை..!

உள்நாட்டு மருந்துகளை பயன்படுத்தி இயங்கி வந்த சட்டவிரோத கருக்கலைப்பு மத்திய நிலையம் ஒன்றை தம்புள்ளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.

தம்புள்ளை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் தம்புள்ளை – கல்வெட்டியாய பிரதேச வீடொன்றில் இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

குறித்த நிலையத்தை இயக்கிச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருக்கலைப்பு செய்துகொள்ள வரும் பெண்களிடம் குறித்த சந்தேகநபர் தலா 15,000 ரூபா கட்டணம் அறவிட்டு வந்துள்ளார்.

இது குறித்து தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் தசைகளை வலுவாக்கும் சிறந்த பயிற்சி முறைகள்..

 

jym

எடை தூக்கி மூலம் செய்யப்படும் பயிற்சிகள் தளர்வடைந்த தசைகள் இறுக்கப்படுகிறது. ஒவ்வொரு பகுதி தசைக்கும் ஒவ்வொரு விதமான உபகரணங்கள் மூலம் செய்யப்படும் எடை தூக்கும் பயிற்சிகள் அதிக அளவில் நன்மை கிடைப்பதாக உள்ளது.

நல்ல அழகான கட்டுக்கோப்பான உடலழகை பெறவும், வயதாகும் காலங்களில் வரும் தசை இழப்பு பிரச்சினைகளுக்கும் பளு தூக்கும் பயிற்சி சிறந்தது. ஏரோபிக் பயிற்சிகளும் உடற்பயிற்சிகளும் உங்களின் தசைகள் எடுத்து கொள்ளும் ஒட்சிசன் அளவை அதிகரித்து உங்களின் இருதயமும் நுரையீரலும் நன்கு செயல் பட உதவி புரிகின்றன.

பளு தூக்கும் பயிற்சிகள் எனப்படும் எடை தூக்கும் பயிற்சிகள் உங்கள் தசைகளின் செயல்பாட்டை அதிகரிக்க செய்கின்றன. தசைகளுக்கு அதன் எடையை விடவும் அதிக அளவு எடை கொண்டு பயிற்சி செய்யப்படுவதால் அவை நன்கு வலுப்படும்.

எடை தூக்கும் பயிற்சிகள் ஆரம்பிபதற்கு முன் வார்ம்அப் (warm up) ஸ்டெரச்சிங் (stretching) மிக அவசியம். எடை தூக்கும் பயிற்சியை மற்ற உடற்பயிற்சியை விட அதிக அளவு பரிந்துரைக்கப்படுவதற்கு காரணங்கள் உள்ளன.அவையாவன

எடை தூக்கும் பயிற்சிகள் உடலில் உள்ள கொழுப்பை தசையாக மாற்ற உதவும்.

தசைகளின் அளவை அதிகரிக்கவும், உடலை கட்டுறுதி பெறவும் செய்யும்.

எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கவும் (BONE டென்சிட்டி) உடலின் நெகிழும் தன்மையை அதிகரிக்கவும் செய்யும்.

வளர்சிதை மாற்றங்கள் வீதத்தை அதிகரிக்க செய்யும். (INCREASES METABOLIC RATE)

பொதுவாக எடை தூக்க டம்பெல்ஸ் (dumbbells)+ பார்பெல்ஸ்(barbells) தான் அதிக அளவில் உலகில் பயன்படுத்துகின்றனர். இத்தகைய பயிற்சிகளை செய்து வந்தால் கட்டான உடலழகை பெறவும், வயதாகும் காலங்களில் வரும் தசை இழப்பு பிரச்சினைகளில் இருந்து விடுபடவும் முடியும். நீங்களும் முயற்சி செய்து பலன் அடையுங்கள்.

 

தனுஷை பார்த்து திருந்துவார்களா பொலிவூட் நடிகர்கள்??

tanush
ராஞ்சனா ஹீரோ தனுஷை பார்த்து பொலிவூட் ஹீரோக்கள் திருந்துவார்களா? பார்க்க பெரிதாக வசீகரம் இல்லை, உத்தமபுத்திரன் படத்தில் விவேக் சொல்வது போன்று நாலு நெஞ்சு எலும்பு, 2 நல்லி எலும்பு உள்ள தனுஷ் 6 பேக்கை காட்டி மிரட்டும்  பொலிவூட்டில் ராஞ்சனா படம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
படத்தின் ஷூட்டிங் நடக்கையில் தனுஷை பார்த்து பிற  பொலிவூட் நடிகர்கள் மிரண்டிருக்க மாட்டார்கள். ஆனால் தற்போது படம் ரிலீஸான பிறகு வட இந்திய மீடியாக்களும், திரை விமர்சகர்களும் தனுஷை கொண்டாடுகிறார்கள்.

ஜிம் உடம்பை காட்டுவதிலேயே குறியாக இருந்து முகபாவனைகள் பற்றி மறந்துவிட்ட பொலிவூட் நடிகர்கள் மத்தியில் தனுஷ் நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அவரது நடிப்பு மிகவும் அருமை என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிவுட்டில் பெயர் வாங்க 6 பேக்கும், லுக்கும் தேவையில்லை நடிப்பு இருந்தால் புகழ் பெறலாம் என்பதை தனுஷ் நிரூபித்துள்ளார். இதைப் பார்த்து பிற நடிகர்கள் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா? உடம்பில் கவனம் செலுத்தும் நடிகர்களுக்கு மத்தியில் அமீர் கான், ரன்பிர் கபூர் உள்ளிட்ட சில நடிகர்கள் நடிப்பில் அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை கவைலைக்கிடம்..!

20ஆம் நூற்றாண்டில் உலகளாவிய ரீதியில் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக திகழ்ந்தவரும் தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாகவுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் தந்தை என்று கருதப்படும் நெல்சன் மண்டேலா நலமடைய வேண்டும் என அந்நாட்டு சிறுவர்கள், மக்கள், தலைவர்கள் என அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவர் அருகிலேயே 24 மணிநேரமும் உள்ளனர்.

மண்டேலாவின் செயற்கை சுவாசதை நிறுத்துவதற்கு அவரது உறவினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் ஜுமா இன்று மொசாம்பிக் நாட்டுக்கு மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளார்.

நேற்று இரவு ஜூமா, மண்டேலாவை காண வந்தார். அப்போதும் அவர் உடல் நிலையில் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் தனது பயணத்தை ரத்து செய்வதாக அவர் தெரிவித்தார்.

94 வயதான மண்டேலா நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 8ஆ் திகதி பிரிட்டோரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உறுப்புகளின் இயக்கம் படிப்படியாக குறைவதையடுத்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தியவர் நெல்சன் மண்டேலா.

இதற்காக 27 ஆண்டுகள் சிறைக்காவலில் இருந்த மண்டேலா, 1994-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.

ஐந்தாண்டுகள் மட்டும் ஜனாதிபதியாக பதவி வகித்த மண்டேலா, அதன் பின்னர் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்று, தனது சொந்த கிராமமான குனு-வில் ஓய்வெடுத்து வந்தார்.

மாதுருஓயா காட்டுப் பகுதியில் தீ..!

மகாஓயா பிரதேசத்தில் அரலங்வில வீதியில் மாதுருஓயா காட்டுப் பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

நேற்று இத் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது பொலிஸ், இராணுவம், விமானப் படை மற்றும் இடர் முகாமைத்துவ நிலையம் என்பன இணைந்து தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

தீ காரணமாக அழிவடைந்த நிலப்பரப்பு தொடர்பில் இதுவரை பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை பதுளை நகரப்பகுதியிலுள்ள பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று இன்று அதிகாலை தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

பதுளை மாநகர சபை தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.