வவுனியா நெளுக்குளம் பிரதேசத்தில் வீடொன்றுக்குள் நுழைந்து துப்பாக்கியைக் காட்டி வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தி நான்கு இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பணத்தையும் தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் இராணுவ வீரர் ஒருவரையும் மேலும் நால்வரையும் கடந்த 2ஆம் திகதி கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைதான சந்தேக நபர்கள் வவுனியா மற்றும் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடமிருந்து ரி 56 ரைபிள் உட்பட தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த மே 6ஆம் திகதி வவுனியா நெளுக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த வீடொன்றில் துப்பாக்கியைக் காட்டி வீட்டாரை அச்சுறுத்தி பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிட்டது தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ வீரரே இக்கொள்ளையை திட்டமிட்டு நடத்தியுள்ளதாகவும் இந்த இராணுவ வீரர் வவுனியா இராணுவ தலைமையகத்தில் கடமையாற்றி வருவதாகவும் கடமையின் நிமித்தம் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியை இக் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வவுனியா குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துருக்கியில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், நாட்டின் தென்பகுதியிலுள்ள அன்தக்யா என்ற ஊரில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் உயிரிழக்கக் காரணமான தோட்டா யாருடைய துப்பாக்கியில் இருந்து வந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இஸ்தான்புல்லில் திங்கள் இரவும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் கலவரக் கட்டுப்பாட்டு பொலிசாருக்கும் இடையே மோதல்கள் நடந்தன.பொலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் இருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் பிரிவினர் பலப்பிரயோகம் செய்வதைக் கண்டித்து இரண்டு நாள் வேலைநிறுத்தம் ஒன்றை பொதுத்துறை ஊழியர்கள் சங்கம் செவ்வாயன்று ஆரம்பித்துள்ளது.
தீவிரப் போக்குடையவர்கள் எனக் கூறி இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை நிராகரித்த துருக்கியப் பிரதமர் ரெஜெப் தையிப் எர்தொவான், எதிர்க்கட்சிகள் பின்னால் இருந்து அரங்கேற்றுகின்ற ஆர்ப்பாட்டங்கள் இவை என்று கூறினார்.
கடந்த ஞாயிறன்று இஸ்தான்புல்லில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் கார் ஏற்றி கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தி திரையுலகின் இளம் நடிகைகளில் ஒருவரான ஜியா கான் மும்பையில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
நஃபீஸா கான் என்றும் அழைக்கப்பட்டுவந்த இவருக்கு 25 வயது ஆகிறது.
தூக்குமாட்டிக்கொண்ட நிலையில் இவர் காணப்பட்டிருந்தார்.
இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிசார் கூறுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜியா கானுக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்படவிருப்பதாக பொலிசார் கூறுகின்றனர்.
நிஷஃப்த், கஜினி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் இவர்.
தமது உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிராத பிரதேச செயலாளர்களை பிரதேச நிர்வாக நடவடிக்கைகளிலிருந்து நீக்குவதற்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களில் அவர்களை தங்கியிருக்குமாறு அண்மையில் வெளியிடப்பட்ட விசேட சுற்றுநிருபத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பி.பீ.அபேகோன் தெரிவித்துள்ளார்.
பிரதேச நிர்வாகத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.பதவிகளிலிருந்து நீக்கப்படும் அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு வேறு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிராத பட்சத்தில் அது குறித்து உடனடியாக அறிவிக்குமாறு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது
இலங்கையில் முதல் முறையாக ஆளில்லா உளவு விமானம் ஒன்று மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீடத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
யூ.ஏ.வீ (UAV) என்ற பெயரிலான இந்த ஆளில்லா உளவு விமானத்தை மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் சுதத் ரோஹன முனசிங்கவும் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களும், இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த விமானம் 200 மீற்றர் உயரத்தில் பறந்து 12 நிமிட நேரத்திற்கு உளவுப் பணியில் ஈடுபட்டு தகவல்களை வழங்கக் கூடிய வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது
வருமானத்தைக் குறைத்துக் காட்டிய வோடபோன் நிறுவனத்துக்கு 1,263 கோடி இந்திய ரூபாய் அபராதம் விதித்துள்ள இந்திய மத்திய தொலைத் தொடர்புத்துறை அறிக்கை அனுப்பியுள்ளது. 2008-09 மற்றும் 2010-11 ஆண்டுகளில் இந்த நிறுவனம் தான் ஈட்டிய வருமானத்தைக் குறைத்துக் காட்டி குறைவான வரியைக் கட்டியுள்ளது.
இதையடுத்து 2008-09ம் ஆண்டுக்கு ரூ. 715 கோடியும், 2010-11ம் ஆண்டுக்கு ரூ. 548 கோடியும் அபராதம் விதித்துள்ளது தொலைத் தொடர்புத்துறை. பெற்ற வருமானம் , அன்னிய செலாவணி மூலம் கிடைத்த வருமானம், வட்டி மூலம் கிடைத்த வருமானம் ஆகியவற்றை இந்த நிறுவனம் குறைத்துக் காட்டியுள்ளது. இதையடுத்து 15 நாட்களில் ரூ. 1,263 கோடி அபராதத்தைக் கட்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த இந்த நிறுவனம் சீன தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு அடுத்தபடியாக உலகின் 2வது மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாகும். Voice Data Fone என்பதன் சுருக்கமே வோடபோன். இந்த நிறுவனத்தின் Zoozoo விளம்பரங்கள் உலகப் பிரசித்தி பெற்றவையாகும்.
தீப்பிடித்த தொழிற்சாலையில் இருந்து வெளியில் வர வழியில்லாமல் போனதே இவர்கள் உயிரிழக்கக் காரணம் என்று தெரிகிறது.
மிஷாஸி என்ற தொழிற்சாலை நகரத்தில் உள்ள இத்தொழிற்சாலையில் தீ ஏற்படுவதற்கு அம்மோனியா வாயுக் கசிவு காரணமா அல்லது மின் கசிவு காரணமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
சிக்குண்டவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.
சம்பவ இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் வாழும் மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சீனாவில் பணியிடத்தில் தொழிலாளர் பாதுகாப்பு அம்சங்கள் பல சந்தர்ப்பங்களில் மிகவும் மோசமாக இருப்பதுண்டு.
அங்கே பெரிய தொழிற்சாலைகளிலும், சுரங்கங்களிலும் தொழிலாளர்கள் உயிரிழக்கும் விபத்துகள் நடப்பது வழமை.
பணம் கேட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து சினிமா பாணியில் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை தம்பதியினரை போலீசார் மீட்டுள்ளனர். இக்கடத்தல் தொடர்பாக பெண் தாதாவாக செயல்பட்ட தலைமை ஆசிரியை உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை தமிழரான 59 வயதான கணபதிப்பிள்ளை தவராஜா இங்கிலாந்தில் குடிஉரிமை பெற்றவர் வசித்து வரும் இவர்களுக்கு அங்கு பெட்ரோல் நிரப்பு நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளன.இவருக்கு தர்ஷினி என்ற மகள் உள்ளார்.
கடந்த மாதம் 25-ந் தேதி லண்டனில் இருந்து தவராஜா இலங்கைக்கு சென்றார். பின்னர் தமிழகத்தை சுற்றிப் பார்க்க 29-ந் தேதி மனைவியுடன் கணபதி பிள்ளை தவராஜா சென்னை வந்தார். ஆனால் அவர்கள் திட்டமிட்டிருந்தபடி தியாகராயர் நகர் ஹோட்டலுக்கு அவர்கள் செல்லவில்லை. இதனால் அவர்கள் எங்கே போனார்கள் என்ற மர்மம் நீடித்து வந்தது. இந்நிலையில் லண்டனில் உள்ள கணபதி பிள்ளையின் மகள் தர்ஷினிக்கு தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. அதில் அவரது பெற்றோரை கடத்தி வைத்திருப்பதாகவும் நாங்கள் சொல்லும் இங்கிலாந்து நபரிடம் 3 லட்சம் பவுண்ட்ஸ் அதாவது இலங்கை மதிப்பில் 5.75 கோடி கொடுத்தால் அவர்களை விடுவிப்போம் என்றும் ஒரு பெண் ரௌடி போல மிரட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து லண்டன் காவல் துறையில் தர்ஷினி முறைப்பாடு செய்தார். லண்டன் போலீசார் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். திருச்சியில் சிக்கியது கடத்தல் கும்பல் இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கணபதிபிள்ளையின் லண்டன் பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் ஈழத் தமிழரான அஜந்தன் என்பவர்தான் இந்த கடத்தலுக்கு திட்டம் போட்டு தமது திருச்சி நண்பர் ரமேஷ் மூலம் அரங்கேற்றியிருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ரமேசின் நண்பர் கண்ணன், பெண் தாதா போல் மிரட்டிய ஆசிரியை இந்திரா மேரி, மதியழகன், பிரபு, சரவணன், சதீஷ்குமார், வசந்த், இளங்கோ ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
அவர்கள் தவராஜாவை ஒரு வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்தியுள்ளனர். அங்கிருந்தபடியே தொலைபேசியில் தர்ஷினியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். தொலைபேசி அழைப்புகளை வைத்து தவராஜாவும், அவர் மனைவியும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த காவல்துறை அவர்களை ஒரு வீட்டில் இருந்து மீட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய சத்யா என்பவர் தலைமறைவாகி விட்டார்.லண்டனில் உள்ள அஜந்தனும், ரமேசும் கைது செய்யப்பட்டனர்.
லண்டனில் இருந்தபடி அஜந்தன் மின்னஞ்சல் மூலம் தவராஜா, மற்றும் அவர் மனைவி புகைப்படத்தை கண்ணனுக்கு அனுப்பினார். தவராஜா சென்னை வரும் நேரம் உள்ளிட்ட தகவல்களையும் தெரிவித்திருந்தார் . இதை வைத்தே கடத்தல் கும்பல் சினிமா பாணியில் இருவரையும் கடத்தியிருக்கிறது.தாங்கள் கடத்தப்பட்டது குறித்து அவர்கள் கூறுகையில், கடந்த புதன்கிழமை சென்னை விமான நிலையத்தில் வந்து நாங்கள் இறங்கினோம். தி.நகரில் நாங்கள் தங்க ஹோட்டல் அறை பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த ஹோட்டல் பெயர் பலகையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். எங்கள் பெயரும் அதில் இருந்தது.
எனவே அவர் ஹோட்டல் ஊழியர்தான் என்று நினைத்து அவருடன் சென்று காரில் ஏறினோம். சிறிது தூரம் சென்றதும் மேலும் 3 பேர் வந்து நாங்கள் சென்ற காரில் ஏறினார்கள். அதே நேரத்தில் கார் தி.நகருக்கு செல்லாமல் வேறு எங்கோ சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த நாங்கள் கார் ஓட்டுனரிடம் கேட்டோம். அதற்கு அவர் தி.நகரில் வீதி பணிகள் நடப்பதால் வேறு வழியாக அழைத்து செல்கிறோம் என்றார். சிறிது நேரத்தில் கார் புறநகருக்கு சென்று விட்டது. இதனால் எங்களுக்கு சந்தேகம் அதிகரித்தது. உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று நினைத்தபோது எங்களை அடித்து உதைத்தனர்.
எங்களிடம் இருந்த தொலைபேசியும் பறித்துக் கொண்டனர். ஒருநாள் முழுவதும் காரில் வைத்தே எங்களை எங்கெங்கோ அழைத்து சென்றனர். மறுநாள் எங்களை ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர். அப்போது கத்திமுனையில் நான் அணிந்திருந்த தாலி உள்ளிட்ட நகைகளை பறித்து கொண்டனர். இதையெல்லாம் பார்த்தபோது நாங்கள் உயிருடன் திரும்புவோமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. நல்ல வேளையாக சென்னை காவல் துறையினர் சிறப்பாக செயற்பட்டு எங்களை மீட்டு விட்டனர். காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர் அவர்கள்.
கண்டி – கொழும்பு குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவைக்கு பயணிகளிடையே பலத்த வரவேற்பு காணப்படுவதனால் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் குளிரூட்டப்பட்ட கடுகதி சொகுசு ரயில் சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.
முதலாவது குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை நேற்று கண்டிக்கும் கொழும்புக்குமிடையில் ஆரம்பிக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
நேற்று அதிகாலை 5.50 மணிக்கு கண்டியில் இருந்து ஆரம்பமான குளிரூட்டப்பட்ட சொகுசு கடுகதி ரயில் காலை 8.30 மணிக்கு கொழும்பை வந்தடைந்தது. கண்டியில் இருந்து புதிய சொகுசு ரயில் சேவையை ஆரம்பித்து வைத்த அமைச்சர் அதே ரயில் பயணிகளுடன் பயணம் செய்தார்.
மேற்படி ரயில் சேவை திங்கள்- வெள்ளி- சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மாத்திரம் இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சரது வேண்டுகோளுக்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் தினமும் இந்த கடுகதி சொகுசு ரயில் சேவையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சொகுசு ரயில் பிற்பகல் 5.20 மணிக்கு கொழும்பில் இருந்து கண்டிக்கு பயணமாகும். டிக்கட் கட்டணமாக 500 ரூபா அறவிடப்படுகிறது.
1864 இல் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது முதல் முழுமையாக குளிரூட்டப்பட்ட ரயில் சேவை ஈடுபடுத்தப்படுவது இதுவே முதற்தடவையாகும்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பிரதானமாக இலக்கு வைத்தே குளிரூட்டப்பட்ட ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதாகவும் ரயில்வே திணைக்களம் கூறியது.
அமைச்சர் மேலும் கூறியதாவது- வீதிகளில் காணப்படும் அதிக வாகன நெரிசல் காரணமாக மக்கள் ரயிலில் பயணிக்க அதிகம் விருப்பம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு சிறந்த சேவை வழங்குவதை இலக்காக வைத்தே குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன என்றார்.
மக்களின் வசதிக்காக நாடுபுராவும் குளிரூட்டப்பட்ட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். ரயில் சேவையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டு வருவதோடு பயணிகளின் தொகையும் கூடியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் விலை உயர்விற்கமைய ரயில் மற்றும் இ.போ.ச. கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய எதுவித தேவையும் கிடையாது என்று கூறிய அவர்- மக்களுக்கு வசதியான போக்குவரத்து சேவை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகக் கூறினார்.
ரஜினி நடித்த தளபதி, பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு உள்பட ஏராளமான படங்களில நடித்தவர் ஷோபனா.
இரண்டு முறை தேசிய விருது பெற்ற ஷோபனா, தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தனக்கான தனக்கான சினிமா வாய்ப்பு குறைந்ததும், அமெரிக்கா சென்று பரத நாட்டிய பள்ளி நடத்தி வந்தார்.
பின்னர் அதேபோன்ற நாட்டிய பள்ளியை சென்னையில் தொடங்கி நடத்தி வருகிறார்.
மேலும் திருமணமே செய்து கொள்ளாத ஷோபனா, அனந்த நாராயணி என்றொரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், சிம்பு நடித்த போடா போடி படத்தில் அப்பட நாயகியான வரலட்சுமிக்கு அம்மாவாக சினிமாவில் மீண்டும் பிரவேசித்த ஷோபனா, இப்போது ரஜினியின் கோச்சடையான் படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படம் தனக்கு சினிமாவில் பெரிய என்ட்ரியை கொடுக்கும் என்று சொல்லும் அவர், தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு அம்மாவாக ஒரு வேடத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து பரவலாக நடிக்க ஆசைப்படும் ஷோபனா, வெயிட்டான வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கப்போகிறாராம்.
குறிப்பாக, அம்மா வேடமாக இருந்தாலும் கவலையில்லையாம். கதாநாயகியாக சினிமாவில் பெரிய ரவுண்டு வந்ததுபோல் அம்மாவாகவும் ஒரு ரவுண்டு வருவேன் என்கிறாராம் ஷோபனா.
பல்கலைக்கழக ஒழுங்கு விதிமுறைகளை மீறிச் செயற்பட்டார்களென இனங்காணப்பட்டுள்ள 47 மாணவர்கள் சப்ரகமுவ சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலிருந்து நேற்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இம் மாணவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை மேற்கொண்டு இறுதி முடிவு எடுக்கும்வரை இவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்துவதற்கு நிர்வாகச் சபை தீர்மானித்துள்ளது.
இவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள காலப் பகுதிக்குள் பரீட்சைக்கு தோற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படின் விசேட நிபந்தனைகளின் அடிப்படையில் பரீட்சைக்கு தோற்ற முடியுமென பல்கலைக்கழக நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய- பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பொறுப்பில் இவர்கள் பரீட்சை எழுத அனுமதிக்கப் படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.
கல்வி நடவடிக்கைகளிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ள மாணவர்கள் தாங்கள் நிரபராதியென நிரூபிப்பதற்கு அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கலகச் செயற்பாடுகளில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பல்கலைக்கழக உபவேந்தர் மஹிந்த ரூபசிங்ஹ தலைமையில் கூடிய நிர்வாகச் சபையிலேயே இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டநிர்ணய விவகார சூறாவளி சுழன்று அடித்துக் கொண்டிருக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோணியும் ஒரு விவகாரத்தில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“Rhiti Sports Management” என்ற மும்பை நிறுவனம் அருண் பாண்டே என்பவருக்கு சொந்தமானது. இந்த நிறுவனம்தான் சுரேஷ் ரெய்னா, ரவீந்தர ஜடேஜா, ஓஜா மற்றும் ஆர்.பி.சிங் ஆகிய வீரர்களை நிர்வகிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. சரி இந்த ரிதி நிறுவனத்துக்கும் டோணிக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி எழுகிறது அல்லவா? ரிதி நிறுவனத்தின் உரிமையாளர் அருண் பாண்டே டோணியின் மிகவும் நெருங்கிய நண்பர்.
அதுமட்டுமின்றி இந்த நிறுவனத்தில் 15% பங்குகளை டோணி தம் வசம் வைத்தும் இருக்கிறார்.. இதுதான் இப்போது சர்ச்சை… அதாவது இந்திய அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்யும் போது தாம் 15% பங்குகளை வைத்திருக்கும் நிறுவனம் நிர்வகித்து வரும் வீரர்களுக்கு ஆதரவாகத்தானே டோணி முடிவு எடுப்பார்.. என்று கை நீட்டி குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த விவகாரத்தை கிளப்பிவிட்டவர் முன்னாள் இந்திய அணியின் வீரர் கீர்த்தி ஆசாத்தான். அவர்தான் ஊடகங்களிடம் இந்த விவகாரத்தை எடுத்துவிட்டவர். அத்துடன் இன்னொரு விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் டோணி இருந்து வருகிறார். என்கிறார் கீர்த்தி ஆசாத். இதற்கு டோணி என்ன பதில் சொல்வாரோ? ஆனால் இதைவிட பெரிய பெரிய வணிக விவகாரங்கள் கிரிக்கெட்டில் கொடி கட்டிப் பறக்கின்றன அவை அனைத்தும் மறைமுகமாக நடந்தேறுகின்றன என்று கூறுவோரும் இருக்கின்றனர்.
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க மாத்தறை மாவட்டத்தில் கொட்டபொல, பஸ்கொட, பிடபெத்தர பிரதேச செயலகப் பிரிவுகள், காலி மாவட்டத்தில் நெலுவ மற்றும் தவளம பிரதேச செயலகப்பிரிவுகள், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை, வலல்லாவிட, புளத்சிங்கள, பதுரலிய பிரதேச செயலகப் பிரிவுகள்,
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோறளே பிரதேச செயலகப்பிரிவு பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலகப்பிரிவு இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, இரத்தினபுரி, எஹெலியகொட, பலாங்கொட பிரதேச செயலகப் பிரிவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியே மேற்படி இயற்கை அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஆறு மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் மண்சரிவு, பாறைகள் புரள்தல், குன்றுகள் சரிதல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படலாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
நோயின் கொடுமை தாங்க முடியாத இளம் பெண் ஒருவர் தனக்கு தானே தீவைத்து கிணற்றுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி சுன்னாகத்தைச் சேந்த சர்வேஸ்வரன் பிரிந்தா (வயது 26) என்ற இளம் பெண்ணே நோயின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இவரது சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இவரது சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆர். தனுசன் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவில் இருந்து சீனா சென்ற விமானத்தில் பெண் பயணி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். இதனால் விமானம் அவரசரமாக தரையிறக்கப்பட்டது.
அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் இருந்து சீனாவின் தலைநகர் பீஜிங்குக்கு நேற்று முன்தினம் US 851 என்ற விமானம் புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது கழிவறைக்கு சென்ற 40 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவர், நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை. கழிவறையில் அந்த பெண் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் விமான பணிப்பெண்களிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து விமானிக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் விமானம் அவசரமாக அலாஸ்காவில் தரையிறக்கப்பட்டது. அங்கு தயாராக இருந்த போலீசார் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் கழிவறையில் இருந்து பெண்ணை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் வந்த மற்ற பயணிகள் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு வேறு விமானத்தில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். தற்கொலைக்கு முயன்ற பெண் பயணியின் பெயர், அதற்கான காரணத்தை விமான நிறுவனம் தெரிவிக்கவில்லை.
பெண் பயணி விமானத்தில் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சிலர் சமூக இணையதளத்தில், தங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியான அனுபவத்தை விரிவாக எழுதி உள்ளனர்.