களுவாஞ்சிக்குடியில்..

களுவாஞ்சிக்குடியில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பில் அவரின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுவாஞ்சிக்குடி – மகளூர் பல நோக்கு கூட்டுறவு சங்க வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய ராஜேந்திரன் ரஜேந்தினி என்ற பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர், திருமணம் முடித்துவிட்டு வெளிநாடு சென்றிருந்த நிலையில் கடந்த 18 நாட்களுக்கு முன் வீடு திரும்பியுள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர் வெளிநாட்டிலிருந்து அனுப்பிய பணம் தொடர்பில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்குமிடையே மீண்டும் சச்சரவு ஏற்பட்டுள்ளதையடுத்து மனைவி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவனான 38 வயது நபர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் தடயவியல் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







































































