இரணைமடு..

கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் வான்கதவுகள் ஆறு அங்குலம் அளவில் இன்று காலை திறக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.

குளத்தில் தேங்கியுள்ள மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. இரணைமடு குளம் 36 அடி வரையில் நீரை சேமிக்க கூடியதாக இருப்பினும் தற்போது வரையில் அதன் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது.

இருப்பினும் தொடர் மழைகாரணமாக அதிகளவு நீர் குளத்திற்கு வந்துகொண்டிருப்பதனால் 31 அடி நீர் மட்டத்தில் குளத்தின் இரண்டு வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டுவருகின்றது.

எனவே இரணைமடு குளத்தின் வான் நீர் வெளியேறும் பகுதிகளில் வாழ்கின்ற பொது மக்கள் இது தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.















































































