அமெரிக்காவை முந்தி முதலிடம் பிடித்த இலங்கை!!

2018ம் ஆண்டில் உலகில் பெண்கள் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான நாடாக இலங்கை இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

20 நாடுகள் கொண்ட பட்டியலில் இலங்கை முன்னிலையில் இருப்பதாக அந்நாட்டு தேசிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடத்தப்பட்ட சர்வதேச நிபுணர்கள் குழுவின் ஆய்வு, தரப்படுத்தல் மற்றும் கருத்துக் கணிப்புகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஏனைய நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, கனடா, நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, ஜப்பான், சுவிட்சர்லாந்து மற்றும் மாலைத்தீவுகள் ஆகிய நாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சீனாவிற்கான இலங்கைத் தூதுரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, உலக நாடுகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஓர் ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

லண்டனைச் சேர்ந்த தோம்ஸன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்ட விசித்திர உயிரினம்!!

பதுளை தெல்பத்தை தோட்டத்தில் வசிக்கும் தோட்ட தொழிலாளி ஒருவரின் வீட்டு தோட்டத்தில் இருந்து விசித்திரமான உயிரினம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த நபரின் வீட்டு தோட்டத்தில் இருந்து கொக்கோ மரத்தின் இலையிலிருந்து இந்த விசித்திரமான உயிரினம் உருவாகியுள்ளது. கொக்கோ மரத்தின் இலையை போன்ற உயிரினம் ஒன்றே அடையாளம் காணப்பட்டுள்ளது.

தனது வீட்டு தோட்டத்தினை துப்பரவு செய்து கொண்டிருக்கும் போது கொக்கோ மரத்தின் இலையை ஒத்ததாக ஓர் உயிரினம் அசைவதை அவதானித்த நபர் இந்த உயிரினத்தை அடையாளம் கண்டுள்ளார்.

தற்போது குறித்த உயிரினத்தை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பரீட்சைகளில் அதி கூடிய புள்ளிகளைப் பெறுவோரை பிரபல்யப்படுத்த வேண்டாம்!!

பாடசாலை மாணவர்கள் தோற்றும் தேசிய பரீட்சைகளில் அதி கூடிய புள்ளிகளை, பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளும் மாணவ மாணவியரை பிரபல்யப்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உளவியல் மருத்துவர்கள் இலங்கை பரீட்சை திணைக்களத்திடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அண்மையில் பரீட்சைகள் திணைக்களத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகளில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மாணவ மாணவியரை பிரபல்யப்படுத்துவதனால் ஏனைய பல மாணவ மாணவியர் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர் என உளவியல் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பரீட்சை தொடர்பிலான தேவையற்ற போட்டியினால் மாணவ மாணவியர் கடும் உளவியல் அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்ற நிலைமைகள் உயர்வடைந்துள்ளன.

இந்த விடயம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மாணவர்களை பிரபல்யப்படுத்தல் தொடர்பில் கொள்கை அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டியது கல்வி அமைச்சேயாகும் என பரீட்சை திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு சென்ற ரயிலில் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை!!

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

178 ஆம் மைல் கல்லுக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், அதற்கான காரணம் இன்னமும் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லுனுகல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான அமரசிங்க ஆராச்சிலாகே விக்ரமநாயக்க என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் மாற்றமடையவுள்ள விசா நடைமுறை!!

இலங்கையில் விசா நடைமுறையில் விரைவில் மாற்றம் ஏற்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசா கட்டணத்தில் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கான புதிய விதிகள் கொண்ட ஒரு வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடவுள்ளதாகவும், அவை, சட்ட மா அதிபரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் விசா முறை நீண்ட காலமாக மேம்படுத்தப்படாமல் உள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ். சிறுமி றெஜினா கொலை சம்பவத்தில் பொலிஸார் வெளியிட்ட புதிய தகவல்!!

யாழ்ப்பாணம் – சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட “சிறுமி றெஜினாவை நான்தான் கொலை செய்தேன்” என இளைஞர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், பொலிஸாரின் விசாரணைகளில் வேறு சில தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதன்படி நேற்று வட்டுக்கோட்டை பொலிஸார் சிலரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதில் 7 வயதுச் சிறுவனின் வாக்குமூலத்தில் இருந்தே சில தகவல்கள் வெளிவந்துள்ளன.

“சிறுமி றெஜினாவுக்கு பிஸ்கட் மற்றும் ஜெலி என்பவற்றை வாங்கிக் கொடுத்து மூன்று பேர் அழைத்துச் சென்றதை தாம் பார்த்ததாக” அந்த சிறுவன் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ஆனால் “சிறுமி பாடசாலை முடிந்து வந்ததும் புறா காட்டுவதாக ஆசை வார்த்தை காட்டி மறைவான இடத்திற்கு சிறுமியை அழைத்து சென்று, சிறுமியை துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி கயிற்றால் கழுத்தை நெரித்துவிட்டு கிணற்றில் தூக்கி வீசியதாகவும், தோட்டுக்காகவே கொலை செய்ததாகவும், இதை தான் மட்டுமே செய்ததாகவும்” சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சிவகுமார் சதீஸ்குமார் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த இளைஞனை நீதிமன்றில் முன்னிலப்படுத்தி அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், ஐவர் விடுதலை செய்யப்பட்டு இருந்தனர்.

ஆனால், குறித்த சிறுமியின் பிரேத பரிசோதனையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தந்தையை பழிவாங்குவதற்காகவே இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் ஒரு செய்திகள் வெளிவந்தன.

இதில் எது உண்மை? பழிவாங்க நடைபெற்ற கொலையா? தோட்டுக்காக கொலை செய்யப்பட்டாரா? பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதா? அல்லது சிறுவன் கூறியதைப் போல் மூவர் இதில் தொடர்புபட்டுள்ளார்களா என்பது மர்மமாகவே உள்ளது.

விசேட பௌர்ணமி தினத்தில் சாதனை படைத்த இலங்கையர்!!

ரம்புகனையில் இருந்து தலதா மாளிகைக்கு 4 மணித்தியாலங்களில் நடந்து நபர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். வருடத்தின் விசேட பௌர்ணமி தினமான நேற்று இந்த சாதனை படைத்துள்ளார்.

தம்புகனை தியசுன்னத்த பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான எஸ்.பி.விக்ரம்சிங்க நேற்று தளதா மாளிகைக்கு தனது பயணத்தை ஆரம்பித்திருந்தார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எஸ்.பி.விக்ரம்சிங்க,

“நான் கடந்த 5 வருடங்களாக விசேட விடுமுறைகளில் 6 முறை அனுராதபுரத்திற்கு சென்றுள்ளேன். எனக்கு ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது கடற்படையின் பொறியியலாளர் பிரிவு முகாமில் சேவை செய்கின்றார். நண்பருடன் சிசிடீவி கமரா கட்டமைப்பு பொருத்தும் பணியில் நான் ஈடுபட்டு வருகின்றேன்.

வேலை இல்லாத நாட்களில் கிடைக்கும் எந்தவொரு வேலையும் செய்வேன். மனைவி வீட்டுப் பெண். நாங்கள் மிகவும் வறுமையிலேயே வாழ்ந்து வருகின்றோம். முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ வழங்கிய வீட்டிலேயே நாம் வாழ்ந்து வருகின்றோம். எனினும் ஆரோக்கியம் என்றால் என்ன என்பதனை நாட்டிற்கு வெளிப்படுத்த விரும்புகின்றோம்.

எனக்கு நடப்பது என்பது விருப்பமான ஒரு விடயம். நடப்பது ஆரோக்கியமான விடயமாகும். அதற்கமைய ரம்புகனைக்கு தனியாவே நடந்து செல்கின்றேன். 4 மணித்தியாலங்களில் தலதா மாளிகையை சென்றடைந்தவர், மீண்டும் அங்கிருந்து ரம்புகனைக்கு நடந்து சென்றுள்ளார்.

எனினும் ரம்புகனையில் இருந்து பயணத்தை ஆரம்பித்தவர் ஒரு இடத்திலேனும் நிற்காமல் கண்டி வரை பயணித்தமையே இதன் சாதனையாக கருதப்படுகின்றது.

வவுனியாவில் பிரபல பாடசாலைகளில் மாணவிக்கு இடம்பெற்ற அநீதி!!

வவுனியாவில் கற்குழியில் தந்தையற்ற நிலையில் தாயின் அரவணைப்பில் வசித்துவரும் சன்முகஆனந்தம் நிதர்சினி என்ற 17 வயது பாடசாலை மாணவிக்கு வவுனியா பிரபல பாடசாலைகளில் அநீதி இடம்பெற்றுள்ளது.

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் குறித்த மாணவி கல்வி கற்று வந்துள்ளார். இதன் போது பழுதூக்குதல் போட்டியில் ஆர்வமுடையவர் என்பதனால் அவரது பாடசாலையின் விளையாட்டு பொறுப்பாசிரியர் அந்த மாணவிக்கு பயிற்சிகளை வழங்கி வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு நேரமின்மையினால் அம் மாணவியை தனியார் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று பயிற்சினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தாண்டிக்குளத்தில் அமைந்துள்ள பிரபல உடற்பயிற்சி நிலையத்திற்கு மாணவியின் தாயார் சென்று தனது மகளிற்கு பழுதூக்குதல் பயிற்சி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்றுவிற்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆண்கள் பயிற்சி பெறும் நிலையத்தில் பெண்கள் பயிற்சி பெறுவதை விரும்பவில்லை. பின்னர் மாணவியின் மாகாண மற்றும் தேசிய மட்ட சான்றிதழ்கள், பதக்கங்களை பார்வையிட்டதன் பின்னர் அவர் பயிற்சினை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அம் மாணவி தனியார் உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளை பெற்று சுமார் 60 கிலோ எடையினை தூக்கும் ஆற்றலை பெற்றுள்ளார்.

தேசிய மட்டத்திற்கு மாணவி சென்ற சமயத்தில் மாணவி கல்வி கற்ற பாடசாலையின் உடற்பயிற்சி பொறுப்பாசிரியர் 55 கிலோ எடையினையே தூக்குமாறு பணித்துள்ளார். குறித்த மாணவி 60 கிலோ எடையினை தூக்கியிருந்தால் தேசிய மட்டத்தில் மூன்றாவது இடத்தினை பெற்றிருப்பார்.

திறந்த விளையாட்டு போட்டி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. ஆனால் அந்த மாணவியின் நண்பிகளுக்கு பாடசாலையின் உடற்பயிற்சி பொறுப்பாசிரியர் செல்லுமாறு தெரிவித்துள்ளார். ஆனால் குறித்த மாணவிக்கு தெரிவிக்கவில்லை

இதனை கேள்வியுற்ற மாணவியின் தாயார் பொறுப்பாசிரியருடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார். இதன் போது நான் செல்லவில்லை உங்களுக்கு விரும்பமில்லை என்றால் செல்ல வேண்டாமேன காழ்ப்புணர்சியுடன் தெரிவித்துள்ளார்.

பின்னர் மாணவி யாழ்ப்பாணத்திற்கு சென்று பழுதூக்குதல் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

அதன் பின்னர் வடமாகாண விளையாட்டு போட்டிக்கு குறித்த மாணவியின் பெயரை பாடசாலையின் பொறுப்பாசிரியர் வழங்கவில்லை. அதனையடுத்து ஏன் எனது பெயரை வழங்கவில்லை என மாணவி பொறுப்பாசிரியரிடம் வினவிய போது எனக்கு தெரியாமல் சென்று போட்டிகளில் கலந்து கொள்கின்றீர்கள் நான் ஏன் செய்ய வேண்டுமேன தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பான மாணவியின் பெற்றோர் பாடசாலை அதிபரிடம் முறையிட்ட சமயத்தில் அவரும் இவ் விடயத்தில் கரிசனை காட்டவில்லை .

இதனையடுத்து பெற்றோர் மாணவினை வேறு பாடசாலைக்கு மாற்றுவதற்கு தீர்மானித்தனர். வவுனியாவில் இரு பாடசாலைகளிலேயே பழுதூக்குதல் போட்டிக்குறிய ஆசிரியர்கள் காணப்படுவதினால் வவுனியா நகரில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலைக்கு மாணவியை மாற்றியுள்ளனர்.

மாணவியினை குறித்த பெண்கள் பாடசாலையில் இணைக்கின்ற சமயத்தில் முன்னைய பாடசாலையில் இடம்பெற்ற விடயங்கள் அனைத்தையும் அதிபரிடம் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதன் போது மாகாணமட்ட போட்டிகளுக்கான பெயர் பட்டியல் அனுப்பிவிட்டோம் தேசிய மட்டத்திற்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளனர்.

நாளை (29.06) திருகோணமலை கந்தளாய் பகுதியில் தேசியமட்ட பழுதூக்குதல் போட்டி இடம்பெறவுள்ளது. ஆனால் இதுவரையில் அம் மாணவியின் பெயர் இணைக்கப்படவில்லை

இதற்கு மாறாக நான்கு மாணவிகளின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் மூவர் மாகாண மட்டத்தில் பங்கு பற்றியவர்கள், மாகாணமட்ட போட்டிகளிலேயே பங்கு பற்றாத மாணவியும் ஒருவர்

அவ்வாறெனின் தேசிய, மாகாண மட்ட போட்டிகளில் பங்கு பற்றி பதக்கங்கள் , சான்றிதழ்கள் பெற்ற இம் மாணவியின் ஆற்றல்களுக்கு வாய்ப்புகளை யார் வழங்குவார்?

ஏன் இவ்வாறான சம்பங்கள் இம் மாணவிக்கு இடம்பெற்றது என பல கோணங்களில் தேடிய சமயத்தில் ஆரம்பத்தில் குறித்த மாணவி கல்வி கற்ற பாடசாலையின் ஆசிரியரின் மனைவியே தற்போது அம் மாணவி கல்வி கற்கும் பாடசாலையின் உடற்பயிற்சி பொறுப்பாசிரியர் ஆவர்.

இதன் அடிப்படையிலியே தனது மகளை அவர்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டு இவ்வாறு செயற்படுவதாக மாணவியின் தாயார் தெரிவிக்கின்றார்.

ஏழை மாணவிக்கு நீதி கிடைக்குமா? வலயக்கல்விப் பணிப்பாளரே இது உங்களின் கவனத்திற்கு..

மீண்டும் பொலிசிடம் சிக்கிய நடிகர் ஜெய் : வைரலாகும் வீடியோ!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிக சப்தம் எழுப்பியபடி வந்த பிரபல நடிகரின் வாகனத்தை பொலிஸார் மடக்கினர்.

அதன் பின் அவரே அதிக ஒலி எழுப்பும் வாகனத்தை உபயோகிக்காதீர்கள் என்று அறிவுரை செய்த வீடியோ இப்போது பரவலாக மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் நேற்றிரவு நடிகர் ஜெய் தனது டிரைவருடன் சென்றிருக்கிறார். அப்போது அதிக சப்தம் எழுப்பியதற்காக அவரது கார் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

உங்கள் வாகனத்திலிருந்து அதிக சப்தம் வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று போலீசார் கூறியுள்ளனர். இதனை அடுத்து மன்னிப்பு கேட்ட நடிகர் ஜெய் உடனே அது பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்றிலும் பேசினார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

அதன் படி ” இது என்னுடைய கார் என்று கூறும் ஜெய் , இது போன்று சப்தம் வரும்படி உங்கள் வாகனம் இருந்தால் அதனை மாற்றி கொள்ளுங்கள் காரணம் இது போன்று சப்தத்துடன் உங்கள் வாகனம் இருந்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என கூறியுள்ளார்.

முன்னதாக நடிகர் ஜெய் குடித்து விட்டு வண்டி ஒட்டிய காரணத்திற்காக அவரது லைசென்ஸ் ஆறு மாதங்களுக்கு முடக்கி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பக்கெட் பால் குடித்த குழந்தை சிறிது நேரத்திலேயே மரணம் : அதிர்ச்சி சம்பவம்!!

சென்னையில் பாக்கெட் பால் குடித்த 2 வயது குழந்தை சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிஷோர் – சித்ரா தம்பதியினரின் 2 வயது குழந்தை கனிஷ்காவுக்கு நேற்று காலை பாக்கெட் பாலை வாங்கி கொடுத்துள்ளார்.

குடித்த சிறிது நேரத்திலேயே குழந்தை கனிஷ்கா தூங்கியது. அடுத்த சில நொடிகளில் குழந்தை திடீரென அலறியபடி மயங்கியது. இதனால், அதிர்ச்சி அடைந்த சித்ரா குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் இதய துடிப்பு குறைவாக உள்ளது. உடனே குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றனர்.

அதன்படி சித்ரா தனது குழந்தையை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததை கேட்டு தனது குழந்தையை கட்டிப்பிடித்து கதறியுள்ளார்.

குழந்தை பாக்கெட் பாலை மட்டுமே அருந்தியது, வேறு எதையும் அருந்தவில்லை. எனவே குழந்தை இறப்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது என சித்ரா பொலிசில் புகார் கூறியிருந்தார்.

அதன்படி வேப்பேரி பொலிசார் வழக்கு பதிவு செய்து பால் குடித்ததால் புரை ஏறி குழந்தை இறந்ததா? அல்லது குழந்தை குடித்தது கலப்பட பாலா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

24 மணிநேர பாதுகாப்பையும் மீறி ஊடுருவிச் சென்ற இலங்கையர்கள் : தீவிர தேடுதலில் பொலிஸார்!!

இலங்கையிலிருந்து இராமேஸ்வரத்திற்கு சட்டவிரோதமாக படகில் சென்று, தப்பியோடிய இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேரை பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இன்று அதிகாலையில் உச்சிபுளி அருகே வலங்காபுரி கடற்கரைப் பகுதியில் பலத்த பாதுகாப்பையும் மீறி மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் பைபர் படகில் ஊடுருவியுள்ளதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சவுக்குத் தோப்புக்குள் மறைந்திருந்த மன்னார் பகுதியைச் சேர்ந்த சகாய பஸ்திபன் என்ற கான்டீபனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் கியூ பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், படகில் இருந்து தப்பி ஓடிய அரவிந்த் மற்றும் பாக்கியம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

கேரள கஞ்சாவை இலங்கைக்கு கடத்திச் செல்லவே இங்கு வந்ததாகவும் கஞ்சா குறித்து தகவல் கிடைக்காததால் ஏஜெண்டைத்தேடி உடன் வந்தவர்கள் சென்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்டுள்ள கஞ்சா குறித்து இராமநாதபுரம், உச்சிபுளி, கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள முக்கிய கடத்தல்காரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் 24 மணி நேர பாதுகாப்பையும் மீறி இலங்கை படகு ஊடுருவிய விவகாரம் இராமநாதபுரம் கடலோரப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின்சார சபை ஊழியர்களுக்கான இலங்கையரின் புதிய கண்டுபிடிப்பு!!

மின்சார இணைப்புகளை புதுப்பித்தலுக்கும், மின்கம்பங்களின் ஊடாக ஏறுவதற்கும் ஏணி ஒன்று அவசியமாகும். எனினும் அதனை எடுத்துச் செல்வதற்காக லொறி ஒன்றும், இரண்டு ஊழியர்களும் தேவைப்படும்.

அதற்கு மாற்றுவழியாக ஹட்டன் இலங்கை மின்சார சபையின் பாவனையாளர் மத்திய நிலையத்தின் மின் பொறியியலாளர் நிமல் சமரகோன், இரும்பினாலான பாதணி ஒன்றை வடிவமைத்துள்ளார்.

கொங்கறீட் தூண் ஒன்றினூடாக ஏறுவதற்கும், மரத்திலான கம்பங்களில் ஏறுவதற்கும் ஏணிக்கு மாறாக இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்ட பாதணிகளை அமைத்திருக்கின்றார்.

கொங்கறீட் தூண் மற்றும் கம்பங்களின் அகலத்திற்கு ஏற்ப இந்த பாதணிகளை மாற்றிக்கொள்ள முடியும்.

அதனூடாக ஏணி தேவைப்படாத நிலையில், குறித்த பாதணிகளை பயன்படுத்தி மின்கம்பங்களில் ஏறி திருத்த பணிகளை மேற்கொள்ள முடியும். மேலும் இந்த முறை ஊடாக ஆளணி மற்றும் செலவீனங்களும் இல்லாமல் போகின்றன.

இதனை எடுத்துச் செல்வதற்கும் வாகனம் அவசியப்படுவதில்லை. குறிப்பாக வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்குக்கூட இந்த பாதணியை எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும்.

யாழ். சிறுமி கொலையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களில் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது குறித்த நபரை 7ஆம் மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மேலும் ஐவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதில் சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சிவகுமார் சதீஸ்குமார் என்பவருக்கே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், தோடுகளைத் திருடுவதற்காகவே சிறுமியை கொலை செய்ததாகவும், தான் மட்டுமே இந்தக் கொலையை செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், புறா காட்டுவதாக ஆசை வார்த்தை காட்டி மறைவான இடத்திற்கு சிறுமியை அழைத்து சென்று, துன்புறுத்தி சிறுமி மயக்கமடைந்ததும் தோட்டை எடுத்து விட்டு, மாடுகள் கட்டும் கயிற்றால் சிறுமியின் கழுத்தை நெரித்து உடலை கிணற்றுக்குள் வீசியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். சுழிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் பாடசாலை முடிவடைந்து வீட்டுக்கு வந்த சிறுமி சிவனேஸ்வரன் றெஜினா காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு நேற்றைய தினமே பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரிந்து சென்ற காதலி : விரக்தியில் விஷப்பாம்பை கொத்த விட்ட காதலன் : நேரலையில் அதிர்ச்சி!!

ரஷ்யாவில் காதலி பிரிந்து சென்றதால், காதலன் பாம்பை விட்டு கொத்த செய்து இறந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ரஷ்யாவின் பீட்டர்ஸ்பெக்கைச் சேர்ந்த ஜோடி Arslan Valeev-Ekaterina Katya, இருவரும் பாம்பு மற்றும் பூனைகள் குறித்த காணொளிகளை வெளியிடும் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.

சுமார் 4,00000 மேல் சப்ஸ்க்ரைபர்களைக்கொண்டுள்ளதால், இவர்களின் சேனல் ரஷ்யா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பிரபலம்.

அர்ஷன் உயிரியல் பூங்காவில் பணியாற்றியவர் என்பதால், விலங்குகள் குறித்த அனுபவம் அவருக்கு உண்டு. இதன் காரணமாகவே அதிகமாக பாம்புகள் குறித்த வீடியோவை தன்னுடைய யூடியூப் சேனலில் தயாரித்து வெளியிட்டு வந்துள்ளார்.

அதில் உலகின் கொடிய விஷம் கொண்ட பிளாக் மாம்பா என்கிற பாம்பை வைத்துப் பல வீடியோக்களையும் வெளியிட்டிருக்கிறார்.

இந்த ஜோடியின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த போது, கடந்த 2017-ஆம் ஆண்டு ஜுலை மாதம் திடீரென்று இருவருக்கும் மனக் கசப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனைவியான Ekaterina Katya அவர் பொது இடத்தில் வைத்து அடித்துள்ளார். ஆத்திரமடைந்த அவர் இவரை விட்டு தனியாக சென்று ஒரு யூடியூப் சேனல் ஒன்றை நடத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி வேறு ஒருவருடன் வாழவும் ஆரம்பித்துள்ளார். மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் இருந்த Arslan Valeev-வுக்கு அவர் வேறொருவருடன் சேர்ந்து வாழ்கிறார் என்ற விடயம் தெரிந்தவுடன் மிகவும் வேதனையடைந்துள்ளார்.

கடும் விரக்தியில் இருந்த அவர் திடீரென்று அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ஆம் திகதி தன்னுடைய யூடியூப் சேனலில், நேரலையாக வந்து, தன்னுடைய பார்வையார்களிடம் பேச ஆரம்பிக்கிறார்.

அப்போது இன்று என்னுடைய வாழ்வின் மிகவும் முக்கியமான நாள், என்று கூறிக் கொண்டு கேமராவை விட்டு வெளியே செல்கிறார்.

அப்போது ஏதோ ஒரு சத்தம் கேட்கிறது. அதன் பின் கேமரா முன் வந்த அவர் நான் கேத்ரிக்கை மிகவும் விரும்புகிறேன், கடைசி நேரத்தில் அவளுடன் இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறி தன்னுடைய கையை காட்டுகிறார்.

கையில் ரத்தம் கொட்டுகிறது. அதன் பின் தான் தெரிகிறது, அவர் தான் வீட்டில் பிளாக் மாம்போ பாம்பை தன்னுடைய கைகளில் கடிக்கும்படி வைத்திருக்கிறார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர், கேமராவில் கேத்ரி எண்ணை காண்பித்து இதைப் பற்றி அவளிடம் சொல்லிவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதைக் கண்ட பார்வையாளர் ஒருவர் உடனடியாக ஆம்புலன்சிற்கு தெரிவிக்க, அவர்கள் விரைந்து வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இது குறித்து அப்போதைய காலக்கட்டத்தில் கேத்தியிடம் பேசிய போது அவர் எதுவும் கூறவில்லை எனவும், அதன் பின் சில நாட்கள் சென்ற பின்பு, எங்கள் இருவருக்கும் விவாகரத்து நடக்கவில்லை, நாங்கள் பிரிந்திருந்தோம், இப்போது வரை நான் அந்த வீடியோவை பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

உலகத்திலுள்ள அபாயகரமான பாம்புகளின் பட்டியலில் பிளாக் மாம்போ பாம் பாம்பு முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனது அக்காவை காதலிக்க உனக்கென்ன தகுதி : சாதி வெறியால் நடந்த கொடூர சம்பவம்!!

திருச்சி மாவட்டத்தில் தனது அக்காவை காதலித்த நபரை அப்பெண்ணின் சகோதரன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நரசிம்மன் கோவில் அருகிலுள்ள தோப்பு ஒன்றில் விஜய் என்ற நபர் உடலில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த பொலிசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், ஆனால் உடலின் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்டுள்ளதால் ரத்தம் வெளியேறி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே விஜய் உயிரிழந்தார்.

விஜய் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் குறித்து பொலிசார் விசாரணை நடத்தியதில் சாதி மாறிய காதலால் இந்த கொலை நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

அழகேஸ்வரி என்ற பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவியை விஜய் காதலித்து வந்துள்ளார். திருச்சி பேருந்து நிலையத்தில் வைத்து இருவரும் அவ்வப்போது சந்தித்துக்கொண்டனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள்.

இது மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே, இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் விஜய்-அழகேஸ்வரி காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இருவீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தனது நண்பனின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக விஜய் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, விஜய் காதலித்த மாணவியின் தம்பி விஷ்வா, கூட்டாளிகளுடன் சேர்ந்து விஜய்யை கத்தியால் குத்தி சாய்த்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும்,எனது அக்காவை காதலிக்க உனக்கென்ன தகுதியிருக்கு, நீ வேறு சாதியை சேர்ந்தவன் என பிரச்சனை செய்து, கத்தியால் குத்தியுள்ளார்.

தற்போது விஷ்வா உள்ளிட்ட 3 குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளதால் அவர்களை தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்ட சீன காதல் ஜோடி!!

சீனாவை சேர்ந்த காதலர்கள் தமிழர்கள் முறைப்படி மேளதாளம் முழங்க திருமணம் செய்து கொண்டனர்.

சீனாவை சேர்ந்த முகமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் யான்சாங்காய், இவரது காதலி அழகுகலை பயிற்சியாளரான ரூபிங்.

இந்து கலாச்சாரத்தில் ஆர்வம் கொண்ட இருவரும் சீர்காழியை அடுத்த காரைமேடு சித்தர்புரத்திற்கு வந்தனர்.

அங்கு வேதமந்திரங்கள் முழங்க தமிழ் கலாச்சார முறைப்படி மாலை மாற்றி, திருமணம் செய்து கொண்டனர், கூடியிருந்த கிராம மக்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.