நாடளாவிய ரீதியில் இன்புலுவென்சா நோய்த் தாக்கம் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் பொது மக்கள் மிக அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார சேவைகள் பணியகம் தெரிவிக்கின்றது.
காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தடுமல் உள்ளிட்ட நோய் தாக்கங்கள் முன்னறிகுறியாக தென்படும் பின்னர் நோய் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வைத்திய ஆலோசனைகளை உரிய விதத்தில் பின்பற்றுமாறும் சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதன் பிரகாரம் இந்த நோய் தொற்று உள்ளதாக அறிந்துக்கொண்டவர்கள் அதின சன நடமாட்டம உள்ள பகுதியிலி சென்று நிற்பதை தவிர்க்க வேண்டும், தடுமல் அல்லது தும்மல் ஏற்படுகின்ற போது மூக்கை துவாய் ஒன்றினால் மறைத்துகொள்ள வேண்டும், தரமான ஒரு வைத்தியரை உடனடியாக நாடி உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சு விடுத்துள்ளது.
கொட்டகலை ரயில்வே கடவைக்கு அருகில் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்தே குறித்த நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் 2 பிள்ளைகளின் தந்தையான வேலு சந்திரபோஸ் (வயது 40) கொட்டகலை டிரேட்டன் கே.ஓ பிரிவை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மரண விசாரணைகளின் பின் கொட்டகலை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படவுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்ன அடம்பன் ராசபுரத்தில் 150 வீடுகளை பயனாளிகளிடத்தில் கையளிக்கும் நிகழ்வு நேற்று (10.04.2017) வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது.
லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதி அனுசரணையுடன் அமைக்கப்பட்ட 150 வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்துகொண்டிருந்தார்.
சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் 68 வீடுகளும், புளியங்குளம் பரிசங்குளம் பகுதியில் 82 வீடுகளும் அமைக்கப்பட்டு லைக்கா ஞானம் கிராமம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பயனாளிகளுக்கு வீடு வழங்கும் நிகழ்வில் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா குடும்பத்தாருடன் கலந்து கொண்டு வீடுகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, கே.கே.மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்களான ஜேம்ஸ் வேறி, கீத் வாஸ் மலேசிய பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.விக்கினேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன்,
ஞானம் அறக்கட்டளை நிறுவனமானது இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த 150 குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கின்றார்கள். நாட்டிலுள்ள தேசியப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்பட்டு ஒரு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அந்த அரசியல் சாசனத்தினூடாக நாங்களும் சமமாக ஒற்றுமையாக சுயமரியாதையுடன் வாழ வேண்டுமென்று இந்த நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு அந்த கோரிக்கையை முன்வைத்து வருகிறோம் .
கடந்த 80 வருடங்களாக மக்கள் ஜனநாயக ரீதியாக தேர்தல்களின் மூலமாக மக்கள் அம்முடிவைத் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அம்முடிவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அந்த கோரிக்கையை தொடர்ந்து எமது மக்கள் வேறு பல கோரிக்கையையும் முன்வைத்து தொடர்ந்து போராட்டிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக காணாமல் போனோர் தொடர்பான பிரச்சனைகள், காணிகள் சம்பந்தமான பிரச்சனைகள், மக்களின் மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் சம்பந்தமான பிரச்சனைகள், புனர்வாழ்வு, தொழில் வாய்ப்பு, போன்ற பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் அத்துடன் இப்பிரச்சனைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட வேண்டிய தேவையிருக்கின்றது.
புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தமிழ் மக்கள் ஒரு பெரும் பங்களிப்பை செய்தார்கள், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் பங்களிப்பும் பாரியதாக இருந்தது. ஆனால் அரசாங்கத்தின் போக்கானது அவர்களுடைய கொள்கைகளைப் பொறுத்தவரையில் அவர்களுடைய பழைய அரசாங்கத்திற்கும் புதிய அரசாங்கத்திற்குமிடையில் ஒரு மாற்றத்தை காண்கிறோம்.
ஆனால் எமது மக்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும், காணாமல் போனோர் சம்பந்தமாக ஒரு முடிவு விரைவில் கிடைக்கவேண்டும். அரசாங்கம் துரிதமாக செயற்படவேண்டும் எனபது அத்தியாவசியமாக இருக்கின்றது. அது அவர்களின் கடமை.
அரசாங்கம் பதவி ஏற்று இரண்டு வருடகாலமாகிவிட்டது. மக்களுடைய காணிகள் மக்களுக்கு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். இராணுவம் மக்களுடைய காணியில் விவசாயம் செய்து அதில் வியாபாரம் செய்து தொழில்செய்து உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். எமது மக்கள் நலன்புரி நிலையங்களிலும் முகாம்களிலும் இன்ணொருவர் வீடுகளிலும் அவர்களின் தயவில் தங்கி வாழ முடியாது எனக் குறிப்பிட்டார்.
வவுனியா புகையிரத நிலையத்தில் எரிபொருளை ஏற்றிச்செல்லும் புகையிரதம் சற்றுமுன் தடம்புரண்டுள்ளது.
வவுனியா புகையிரத நிலைத்திற்கு அருகாமையில் உள்ள விடுதியொன்றினுள் புகையிரதம் புகுந்துள்ளது. எனினும் இவ்விபத்தில் புகையிரத ஓட்டுனருக்கோ பொது மக்களுக்கோ எவ்வித சேதமும் இல்லை விடுதி மாத்திரம் சிறியளவில் சேதமாகியுள்ளது.
இலங்கைக்கு மேலாக சூரியன் நேரடியாக உச்சம் கொடுப்பதும். காற்றின் அளவு குறைந்தமையும் காரணமாகவே நாட்டில் கடும் வெப்ப காலநிலை நிலவுகிறது.
இந்த நிலையில் குறித்த காலநிலை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கும் என்று காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சூரியனின் உச்சம் இலங்கைக்கு மேல் தொடர்வதே இதற்கான காரணமாகும். இன்று சூரியன் இலங்கையின் பங்கதெனிய, வாரியபொல உட்பட்ட வடமேற்கு பகுதிகளின் சில இடங்களுக்கு மேலாக நேரடியாக உச்சம் கொடுத்தது.
எனினும் இந்தியாவை போன்று 40 செல்சியஸ் அளவிலான வெப்ப அளவீடு இருக்கவில்லை. பொலநறுவையில் ஆகக்கூடுதலாக 35 செல்சியஸ் வெப்பமே பதிவானது.
யாழ்ப்பாணம், கொழும்பு, ரத்தினபுரி வவுனியா ஆகிய இடங்களிலும் 35 செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்தநிலையில் இன்று கொழும்பின் சில இடங்களில் சிறிய மழைப்பொழிவு நிகழ்ந்தது.
இலங்கையில் உரிய கல்வி முறை இல்லாமையினால் உயர்தரத்தில் 3A சித்திகளை பெற்ற இளைஞர்கள் முச்சக்கரவண்டி ஓட்டும் தொழில் ஈடுபடுவதாக தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்களின் இராஜாங்க அமைச்சர் ரவிந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.
இதனால் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகிய பின்னர் அவர் செல்ல கூடிய தொழில்களுக்கான பயிற்சியை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தொழில் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. சுதந்திர வர்த்தக மையத்தில் இலட்சத்திற்கும் அதிகமான வெற்றிடங்கள உள்ளன.
நாட்டில் 11 இலட்சம் முச்சக்கர வண்டிகள் உள்ளது. உயர்தரத்தில் 3ஏ சித்திகளை பெற்றுக் கொண்டு முச்சக்கர வண்டி ஓட்டுவோர் அதிகமானோரும் உள்ளனர்.
சிலர் 3 ஏ சித்திகளை பெற்ற போதும் பல்கலைகழகம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டமையினால் முச்சக்கர வண்டி ஓட்டுகின்றனர். இதனால் அரசாங்கம் உரிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சீனாவில் மலைச் சிகரங்களை இணைக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட பாலம் உலகின் மிக உயரமான பாலமாக விளங்குகிறது.
பேய்பான்ஜியாங் பாலம் என பெயரிடப்பட்டுள்ள இப் பாலம், சீ தியூ எனும் நதியொன்றுக்கு மேலாக 565 மீற்றர் (1854 அடி) உயரத்தில் உள்ளது.
இப் பாலத்தின் நான்கு வழி வாகனப் போக்குவரத்து நடைபெறுகிறது. இப் பாலத்தின் நீளம் 1341 மீற்றர்களாகும். 100 கோடி சீனா யுவான் (சுமார் 2152 கோடி ரூபா) செலவில் நிர்மாணிக்கப்பட்டது.
இப் பாலமானது யுனான் மற்றும் குய்ஸோ ஆகிய இரு மாகாணங்களை இணைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
யுனான் மாகாணத்தின் ஸுவான்வேய் நகரிலிருந்து குய்ஸோ மாகாணத்தின் ஷுய்சேங் நகரை அடைவதற்கு முன்னர் 4 மணித்தியாலங்கள் தேவைப்பட்டன.
ஆனால், இப் பாலம் நிர்மாணிக்கப்பட்ட பின் இப் பயண நேரம் ஒரு மணித்தியாலமாக குறைந்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 30,486 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த மார்ச் மாதத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்தில் மாத்திரம் 11,547 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனவரி மாதம் 10,464 பேரும் பெப்ரவரி மாதத்தில் 8,475 பேரும் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
வியட்நாமைச் சேர்ந்த 58 வயது லூ காங் ஹுயென், 35 ஆண்டுகளாக நகங்களை வெட்டாமல் வளர்த்து வருகிறார்.
நகத்தை வெட்டினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாதக்கணக்கில் படுக்கையில் இருக்க வேண்டியிருப்பதால் நகங்களை வெட்டுவதில்லை என இவர் தெரிவித்துள்ளார்.
முதலில் ஜாலியாக நகங்களை வளர்க்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் நகங்களால் இடையூறு ஏற்பட வெட்டிவிட்டேன். உடனே உடல்நிலை மிகவும் மோசமானது. பல மருத்துவர்களைப் பார்த்தும் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வருடம் படுக்கையில் இருந்தேன்.
பிறகு உடல் தேறி, நகங்களை வெட்டியபோது மீண்டும் உடல்நிலை மோசமானது. நகங்களுக்கும் உடலுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக நினைத்தேன். அதிலிருந்து நகங்களை வெட்டாமலும் உடையாமலும் பாதுகாத்து வருகிறேன். ஒரு நகம் தானாக உடைந்தாலும் சில மாதங்கள் படுக்கையில் விழுந்துவிடுவேன். இதனால் என் மனைவியும் குடும்பத்தினரும் நகங்களை வெட்ட அனுமதிப்பதில்லை. பார்ப்பதற்கு உறுதியாகத் தோன்றினாலும் ரொம்ப எளிதாக உடைந்துவிடும். தண்ணீர் பட்டால் உடையும் என்பதால் நகங்கள் மீது தண்ணீர் படாமல் குளிப்பேன்.
அதனால் அடிக்கடி குளிப்பதில்லை. உணவைக் கூட மனைவிதான் ஊட்டிவிட வேண்டும். மழை வரும்போது நகங்களை மட்டும் பிளாஸ்டிக் பையால் மூடிவிடுவேன். உடைகளைப் போடும் போதுதான் அதிக சிரமத்துக்கு உள்ளாகிறேன். இரவில் இரண்டு பக்கங்களிலும் தலையணைகளை வைத்து நகங்களைக் கிடத்தி வைத்திருப்பேன். தூக்கத்தில் கூடப் புரண்டு படுக்க முடியாது. வண்டி ஓட்டினாலும் சிரமமாகவே இருக்கும். ஒருமுறை விபத்தில் மாட்டிக்கொண்டேன்.
என்னைக் காப்பாற்றிக்கொள்வதைவிட நகங்களைத்தான் காப்பாற்ற நினைத்தேன். சிலர் நகங்களைக் கொடுத்தால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகச் சொல்கிறார்கள். எப்படிக் கொடுப்பேன்? சுவர்களில் ஓவியம் தீட்டுவதுதான் என் தொழில். எவ்வளவு சிரமம் இருந்தாலும் அதை மட்டும் விட்டுவிடவில்லை. குழந்தைகள் என்னைப் பார்த்தாலே பயந்து அலறுவார்கள். பெரியவர்கள் பாராட்டுவார்கள். 55 செ.மீ. நீளமிருக்கும் என் நகங்களை கின்னஸில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது என லூ காங் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட பாரிய விண்கல் ஒன்று பூமிக்கு அருகாமையில் கடந்து செல்லவுள்ளதாக நாஸா தெரிவித்துள்ளது.
2014JO25 என்று பெயரிடப்பட்டுள்ள சுமார் இரண்டாயிரம் அடி நீளம் கொண்ட இந்த விண்கல், எதிர்வரும் பத்தொன்பதாம் திகதி புதன்கிழமையன்று பூமிக்கு பதினெட்டு இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் கடந்துசெல்லவுள்ளது. இது, பூமியில் இருந்து நிலவுக்கான தூரத்தின் நான்கு மடங்காகும்.
இம்மாதம் 19ஆம் திகதி பின்னிரவில் இந்த விண்கல்லை மக்கள் காணலாம் என்று தெரியவருகிறது.
சிறு சிறு விண்கற்கள் பூமிக்கு அருகாமையில் கடந்து செல்வது வழக்கமானதே என்றபோதும் இதுபோன்ற பாரிய விண்கல் பூமிக்கு மிக அருகாமையில் கடந்து செல்லும் முதல் சந்தர்ப்பம் இது என்றும், இந்த விண்கல்லால் பூமிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் நாஸா குறிப்பிட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, எதிர்வரும் 2027ஆம் ஆண்டு 1999AN10 என்ற பாரிய விண்கல் பூமியைக் கடக்கும் என்றும், சுமார் 2 ஆயிரத்து 600 அடி நீளமுள்ள இந்த விண்கல், பூமியில் இருந்து நிலவுக்கான தொலைவில் மிக நெருக்கமாகக் கடந்து செல்லும் என்றும் நாஸா தெரிவித்துள்ளது. இந்நிகழ்வு சுமார் 400 வருடங்களுக்குப் பிறகே இடம்பெறவுள்ளது என்றும், இதற்கு அடுத்தபடியாக 500 வருடங்களுக்குப் பின்னரே இதுபோன்ற நிகழ்வு இடம்பெறும் என்றும் நாஸா கூறியுள்ளது.
ஊழல் மோசடிக்காரர்களை தண்டிக்க வேண்டிய கட்டத்தில் ஜனாதிபதி உள்ளார். குற்றவாளிகளை தண்டிப்பதாக கூறுகின்றாரே தவிர குற்றகாளிகளை தண்டிக்க எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு மேலாக செயற்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முதலில் ஜனாதிபதி சிவப்பு எச்சரிக்கை விட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பதுளையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பில் குற்றவாளிகளை தண்டிப்பதில் ஜனாதிபதி மிகவும் அமைதியாக செயற்பட்டு வருகின்றார். குற்றவாளிகளை தண்டிப்பதாக கூறுகின்றாரே தவிர குற்றகாளிகளை தண்டிக்க எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை. மத்திய வங்கி ஊழல் விடயத்திலும், ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரங்களிலும் ஜனாதிபதி சிவப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. இப்போது அவர் தனது அதிகாரங்களை கையாண்டு நாட்டில் நடக்கும் ஊழல் மோசடிகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அதேபோல் சிவப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டியது வேறு யாருக்கும் அல்ல. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கே தற்போது ஜனாதிபதி சிவப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டும். அரசாங்கம் கொள்ளையடித்தாலும் பரவாயில்லை. ஆனால் மக்களுக்கான வேலைத்திட்டங்களை சரியாக மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆனால் வேலைத்திட்டங்களை முன்னெடுக்காது மக்களின் சொத்துக்களை சூறையாடி வருவதே இன்று நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக அமைந்துள்ளது. இன்று ஜனாதிபதி ஒரு கட்டளை பிறப்பிக்கும் போது அதற்கு மேலாக பிரதமர் ஒரு கட்டளையை விடுகின்றார். ஜனாதிபதி அதிகாரங்களை தாண்டிய வகையில் பிரதமர் தனது அதிகாரங்களை பயன்படுத்தி வருகின்றார். ஆகவே இந்த செயற்பாடு நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு பாரிய அவமானமாக அமைந்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் பாரிய டீல் ஒன்று உள்ளது என்பதை நான் ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வருகின்றேன். இப்போதும் அது உறுதியாக வெளிப்பட்டு வருகின்றது. பொது எதிரணியின் மேதின கூட்டம் காலி முகத்திடலில் இடம்பெற வேண்டும் என்பது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தேவையே. அதற்கான பசில் ராஜபக்ஷவை சரியாக பயன்படுத்தி வருகின்றார். அவர்களின் மே தினக் கூட்டத்திற்கு சகல வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்து அதன் மூலம் ரணில் விக்கிரமசிங்க சுயநல அரசியலை மேற்கொண்டு வருகின்றார்.
ஸ்ரீலங்க சுதந்திர கட்சியை இரண்டாகுவதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தவே இவர்கள் முயற்சித்து வருகின்றனர். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒற்றுமையே கட்சியின் பலமாகும். அதை பொது எதிரணியினர் விளங்கிக்கொள்ள வேண்டும். அதேபோல் தனித்து பயணித்தாலும் இறுதியில் நாம் இருவரும் ஒரு இலக்கையே அடைய வேண்டும் என்பதை உணர்ந்து பொது எதிரணியினர் செயற்பட வேண்டும்.
தேசிய அரசாங்கத்தில் நாம் இப்போது அங்கம் வகித்த போதிலும் அதன் மூலம் நாட்டை பலப்படுத்த வேண்டும் என்ற ஒரு நோக்கம் மட்டுமே உள்ளது. அதை தவிர்ந்து தொடர்ந்தும் தேசிய அரசாங்கமாக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இல்லை. வெகு விரைவில் நாம் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தனித்த ஆட்சியை அமைப்போம் என அவர் தெரிவித்தார்.
6அநுராதபுரம் விஹார கல்லஞ்சிய 50 வீட்டுத்திட்ட குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் தனது மகள்மார் இருவரை வீட்டுக்கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் கடந்த 7 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்றபோது நுவரெலியா பிரதேசத்திலுள்ள இராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றிவரும் உயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டில் இருந்திருக்கவில்லை எனவும், அவ் வேளையில் வீட்டிலிருந்த குறித்த பெண்ணின் மூத்த மகனான 7 வயது சிறுவனுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் நதீகா மதுரங்கி குணசேகர (30), புவனீ நுவன்ஞனி ( 4) மற்றும் ஒன்றரை வயதான பிகுன்யா செவ்வந்தி ஆகிய மூவருமாவர்.
பிள்ளைகள் மூவரும் நித்திரைக்கு சென்றதன் பின்னர் இப் பெண் கடிதமொன்றை எழுதி, அக் கடிதத்தை குடும்பப் படங்கள் அடங்கிய புகைப்பட அல்பமொன்றினுள் வைத்து அதனை சமையலறையை அடுத்து இருந்த அறையிலிருந்த மேசை மீது வைத்துவிட்டு, மகள்மார் இருவரையும் கிணற்றில் வீசிவிட்டு வீட்டு சமையலறையினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஏழு வயதான மகன் மறுநாள் சனிக்கிழமை காலை 7 மணியளவில் நித்திரை விட்டெழும்பி சமையலறைக்கு சென்று பார்த்தபோது. தனது தாய் தூக்கில் தொங்குவதனை கண்டு அதிர்ச்சியடைந்து இவ் விடயத்தை அயலவர்களுக்கு தெரியப்படுத்தியதனையடுத்து அவர்கள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
தனது பிள்ளைகள் இருவரும் நித்திரையில் இருக்கும்போதே கிணற்றில் போடப்ப ட்டிருக்கலாம் எனவும் தனது மகன் சற்று பெரியவன் என்பதனால் அவன் விழித்துக் கொள்ளக்கூடும் என்ற எண்ணத்தில் அப் பெண் அவனை விட்டுவைத்திருக்கலாம் என்றும் பொலி ஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய, குறித்த பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் எழுதியிருந்த கடிதத்தை பொலி ஸார் மீட்டதுடன் உயிரிழந்த பெண்ணினால் அவரது மரணம் குறித்து உறவினர்களுக்கு அறிவிப்பதற்கு இலகுவாக இருப்பதற்காக அவரது நெருங்கிய உறவினர்கள் இருவரின் தொலைபேசி இலக்கங்கள் எழுதப்பட்டவாறு சமையலறை கதவில் ஒட்டப்பட்டிருந்த காகிதமொன்றினையும் மீட்டிருந்தனர்.
இம் மூன்று சடலங்களையும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவுக்கு மரண விசாரணைகளுக்கு அனுப்பி வைக்குமாறும் அப்பரிசோதனை அறிக்கைகளை நீதி மன்றுக்குச் சமர்ப்பித்ததன் பின்னர் சடலங்களை உயிரிழந்தவர்களுக்கு நெருக்கமான உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் நீதிவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் அணியும் போது 10 விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தற்காலிகமாக இரத்துசெய்யப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கொதாகொட தெரிவித்தார்.
குறித்த வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சில விதிமுறைகள் தொடர்பில் பிரச்சினைகள் நிலவுவதால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரமாண்ட சிங்கர் பிளஸ் காட்சியறை வவுனியாவில் கடந்த 06.04.2017 அன்று ஹொரவப்பொத்தானை வீதியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
சிங்கர் வவுனியா கிளை முகாமையாளர் உதயகுமார் கஜதீபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சிங்கர் நிறுவனத்தின் வர்த்தக மற்றும் வணிகப் பணிப்பாளர் மகேஷ் விஜயவர்தன மற்றும் விற்பனை அபிவிருத்தி முகாமையாளர் ரொஹான் பெரேரா பிராந்திய முகாமையாளர் அசங்க விஜயகோன் ஆகியோர் கலந்துகொண்டு காட்சியறையை திறந்து வைத்தனர்.
கஜதீபன் ஆஷவியின் வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து சமய வழிபாடுகள் நடைபெற்று பிரமாண்ட காட்சியறை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
இக் காட்சியறையில் புதுவருட மற்றும் திறப்புவிழா சலுகையில் பல்வேறு வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்களை பெற்றுக்கொள்ளமுடியும்.
தொடர்புகளுக்கு
0242224421