ஜெயலலிதாவின் மகன் நான் என கூறிய இளைஞருக்கு நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், நடிகர் ஷோபன் பாபுவுக்கும் பிறந்த மகன் நான் என ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கூறி வருகிறார்.
மேலும் தனது சொத்துக்களை மீட்டு தாருங்கள் என நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், நான் 1985ம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் திகதி பிறந்தேன். மறைந்த எம்.ஜி.ஆர் முன்னிலையில் ஜெயலலிதா என்னை தத்து கொடுத்து விட்டார்.
அதற்கான ஒப்பந்தத்திலும் இருவரும் கையெழுத்து போட்டுள்ளனர். ஜெயலலிதாவை நான் அடிக்கடி வந்து சந்திப்பேன் எனவும் அவர் அதில் கூறியுள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து பேசிய நீதிபதி, இதை பார்த்தாலே பொய் வழக்கு என தெரிகிறது.
மேலும், இந்த உயர்நீதிமன்றத்தை உங்களது தனிப்பட்ட விளையாட்டுக்கு பயன்படுத்துகிறீர்களா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
உன்னை ஜெயிலுக்கு அனுப்பி விடுவேன் என கிருஷ்ணமூர்த்தியை எச்சரித்த நீதிபதி, நீ சமர்ப்பித்துள்ளது போலி ஆவணம் என தெரிகிறது.
ஜெயலலிதா கையெழுத்திட்ட ஒரிஜினல் பத்திரத்தை திங்கள்கிழமை பொலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் பா.க வேட்பாளராக கங்கை அமரன் களமிறங்குவார் என்று பா.ஜ.க தேர்தல் குழு செயலாளர் ஜே.பி.நட்டா டெல்லியில் அறிவித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் பா.ஜ.கவில் இணைந்து செயல்பட்டு வந்தார். இளையராஜாவின் இளைய சகோதரர் கங்கை அமரன்.
பா.ஜ.க வேட்பாளராக கங்கை அமரன் தேர்வு செய்யப்படுவார் என நேற்று இரவே தகவல் வெளியானது.
வேட்பாளர் தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று பா.ஜ.க அலுவலகத்தில் நடந்தது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், ஆர்.கே.நகர் பா.ஜ.க வேட்பாளர் பரிசீலனையில் கங்கை அமரன், நடிகர் விஜயகுமார், காயத்ரி ரகுராம், கவுதமி பெயர்கள் அடிபட்டு வந்தது.
இன்னும் மக்கள் நலக் கூட்டணி மட்டும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. நாளை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள புதியவளத்தாப்பிட்டி எனும் பின்தங்கிய கிராம வரலாற்றில் முதற்றடவையாக ஒரு மாணவி தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று சாதனைபடைத்துள்ளார்.
புதியவளத்தாப்பிட்டி நாவலர் வித்தியாலயத்தில் பயிலும் யோகநாதன் ஹைனியா என்ற மாணவியே இவ்விதம் 155 புள்ளிகளைப் பெற்று வரலாற்றுச்சாதனை படைத்துள்ளார்.
இப்பாடசாலையில் 12 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று மற்றுமொரு சாதனையைப் படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சாதனை மாணவி ஹைனியாவை கடந்தவாரம் இடம்பெற்ற நாவலர் வித்தியாலய விளையாட்டுப்போட்டியில் கௌரவித்துள்ளனர்.
அமைச்சர் தயாகமகேயின் இணைப்பாளர் வி.வினோகாந்த்தின் ஏற்பாட்டில் விழாவிற்கு பிரதம அதிதியாக வருகைதந்த கிழக்குமாகாணசபை உறுப்பினர் மஞ்சுள பெர்ணாண்டோ குறித்த சாதனை மாணவிக்கு பதக்கமணிவித்து சான்றிதழ் வழங்கிக் கௌரவித்துள்ளார்.
கௌரவ அதிதியாக அமைச்சர் தயாகமகேயின் இணைப்பாளர் வி.வினோகாந்த் கலந்து சிறப்பித்தார்.
பாடசாலை அபிவிருத்திசங்கத்தினர் பொதுமக்கள் மாணவர்கள் பாடசாலைசமுகத்தினர் முன்னிலையில் பகிரங்கமாக சாதனை மாணவி ஹைனியா இவர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டுள்ளமை ஏனைய மாணவர்களுக்கு முன்னுதாரணமும் ஊக்குவிக்கும் செயற்பாடாகுமென ஏற்பாட்டாளர் வி.வினோகாந்த் தெரிவித்தார்.
பாகுபலி – 2 ட்ரெய்லர் நேற்று முன்தினம் (16) இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. இது யூடியூப்பில் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
இந்த ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்தில் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் ஆகிய 4 மொழிகளையும் சேர்த்து 5 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்.
இதற்கு 4 மொழிகளிலும் இலட்சக்கணக்கான லைக்குகளும் ஆயிரத்திற்கும் அதிகமான கமெண்ட்களும் பதிவாகியுள்ளன.
இது இந்திய திரை உலகின் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
ஏற்கனவே, இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ‘Raees’ படம்தான் 24 மணி நேரத்தில் 2 கோடிக்கும் அதிகமான பேர் பார்வையிட்டது சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது பாகுபலி – 2 முறியடித்துள்ளது.
தொடர்ந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இது பல கோடியைக் கடக்கும் என்று எதிர்பர்க்கப்படுகிறது.
பின்னவல பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பிரதி அதிபரின் கையின் நடுவிரலை உடைத்த மாணவர் ஒருவரை ரம்புக்கனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இப்பாடசாலையில் 13 ஆம் தரத்தில் கல்வி கற்றுவரும் குறித்த மாணவர் கையில் வளையம் ஒன்றை அணிந்தவாறு பாடசாலைக்கு சென்றுள்ளார். ஒழுக்கத்துக்கு முரணான வகையில் இவ்வாறான அணிகலன்களை பாடசாலைக்கு அணிந்துவந்தமை குறித்து அம்மாணவனிடம் பாடசாலையின் பிரதி அதிபர் வினவியுள்ளார்.
அதன்போது, பிரதி அதிபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இம்மாணவன் அவரின் கையின் விரல் உடைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். காயமடைந்த பிரதி அதிபர் உடனடியாக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
இவ்வாறு தாக்குதல் நடத்திய மாணவன் இதற்கு முன்பதாகவும் ஒழுக்கத்தை மீறிய சம்பவமொன்று தொடர்பாக 14 நாட்கள் வகுப்புத்தடைக்கு உள்ளாகியிருந்தவரென பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் ரம்புக்கனை வலய கல்விப்பணிமனை மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிராந்தியத்தின் வீதி உணவு தொடர்பாக, புதிய பரிணாமம் ஒன்றை உருவாக்கி அதில் களியாட்டங்களையும், குதூகலத்தையும் கலந்து வித்தியாசமான, அனுபவத்தை, ‘கொழும்பு வீதி உணவுத் திருவிழா 2017’ பெற்றுத்தரவிருக்கிறது. பெயார்வே ஹொட்டேல் நிறுவனம் இதனை ஏற்பாடு செய்து அனுசரணையையும் வழங்குகிறது.
இன்று 18 ஆம் திகதி ஆரம்பமாகி, மே மாதம் 20 ஆம் திகதி வரை சனிக்கிழமைகள் தோறும் மாலை 6 மணிமுதல் நள்ளிரவு வரை இந்த உணவுத் திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாவூறச் செய்யும் அற்புதமான சுவையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உணவு வகைகளின் ஒன்றுதிரட்டலே இங்கு பிரதான அம்சமாக அமைந்திருக்கும். உணவு வகைகளில் புதிய பரிணாமத்தை அடைந்து கொள்ள வழிவகுக்கும் கொழும்பு வீதி உணவுத்திருவிழா சுவையினதும், கலையினதும் சங்கமமாக திகழவுள்ளது.
எலிபன்ட் ஹவுஸ் நிறுவனத்தின் இணை அனுசரணையுடன், Ballzy’s Entertainment நிறுவனமும் இணைந்து கொள்கிறது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை என்பன முக்கிய பங்காளிகளாக இணைந்து கொள்கின்றன.
பெயார்வே ஹோல்டிங்ஸ் குழும லைப்ஸ்டைல் துறையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ் குலதுங்க இதுபற்றி கருத்து வெளியிடுகையில், “கொழும்புப் பிரதேசத்தில் காணப்படும் பல வண்ண மயமான கலாசாரங்களின் உணவு வகைகளை உற்று நோக்குகையில், உணவு வேறுபாட்டின் உச்சத்தை அடைந்த ஒரு நகரமாக நாம் கொழும்பை அடையாளம் காண்கிறோம்” என்று தெரிவித்தார்.
“கொழும்பு வீதி உணவுத் திருவிழா ஒரு புத்தம்புதிய அனுபவத்தையும், உணவுத் தோற்றங்களையும் பெற்றுத்தரும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். மேலும் எமது இணை அனுசரணையாளர்கள், பங்காளிகள் மற்றும் நலன்விரும்பிகளின் ஆதரவுகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். பங்குதாரர்களின் ஆர்வம், ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் இந்த நிகழ்வில் நாம் பெரும் வெற்றியடைவோம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
விமானநிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாயை, விமானநிலைய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொண்டுள்ள சம்பவம் நியூசிலாந்தில் இடம்பெற்றுள்ளது.
நியூசிலாந்தின் மிகவும் நெரிசல் மிகுந்த விமான நிலையமாக கூறப்படும் ஒக்லாந்து சர்வதேச விமான நிலயத்திலுள்ள, ஓடுபாதைக்குள் நுழைந்த பாதுகாப்பு படையை சேர்ந்த குண்டு செயலிழக்க செய்யும் நாயால், 16 விமானங்கள் தாமதமடைந்ததால் குறித்த நாய் வேறு வழியின்றி சுட்டு கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நாயினால் புறப்பட்டு செல்ல வேண்டிய மற்றும் தரையிறங்க வேண்டிய 16 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் பாதிக்கப்பட்டன. விமான ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருந்ததாழும், கரும் இருட்டில் தன்னை பிடிக்க முயன்றவர்கள் மீது பாய்வதற்கு தயாராக இருந்ததாலும் குறித்த நாயை சுட்டதாக குறித்த விமானநிலைய பாதுகாப்புப்படை அறிவித்துள்ளது.
இந்நிலையில் கிறிஸ் என அழைக்கப்படும் குறித்த நாய், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் குண்டு செயலிழக்க செய்யும் பயிற்சியை நிறைவு செய்து பணியில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு நாய் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளமைக்கு அந்நாட்டு மிருக நல ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு, குறித்த நேரத்தில் மயக்க மருந்தூட்டி நாயை மீட்டிருக்கலாம். ஏன் அதை செய்யவில்லை என, குறித்த பாதுகாப்பு அதிகாரிக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடல் மார்க்கமாக ஏமன் கடல் பிராந்தியத்திற்குள், சுவிடனை நோக்கி சென்ற சோமாலியவை சேர்ந்த 100இற்கும் மேற்பட்ட அகதிகள் மீது நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் சுமார் 31 அகதிகள் பலியாகியுள்ளனர்.
ஏமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சால்வின் ஆட்சியை எதிர்த்து, அந்நாட்டிலுள்ள ஹவுத்தி இன மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் செங்கடலை ஒட்டியுள்ள ஹோடைடா பகுதியை தங்களது ஆதிக்கத்தில் வைத்திருக்கும் இந்தப் போராளிகள் குறித்த கடல் வழியாக ஆயுதங்களை கடத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சோமாலியாவை சேர்ந்த சுமார் 100இற்கும் மேற்பட்டவர்கள் அடைக்கலம் தேடி, சுவிடனிற்கு சென்றுள்ளனர். அத்தோடு குறித்த அகதிகள் அனைவரும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் மையம் அளித்திருந்த அடையாளச் சான்றிதழ்களுடன் சென்றுள்ளனர்.
இவ்வாறு சென்றவர்கள் மீது ஏமன் படையினர் விமானத்தாக்குதல் ஒற்றை தடுத்துள்ளனர். குறித்த தாக்குதலில் 31 பேர் பலியானதாகவும், குண்டு வீச்சினால் சேதமடைந்த படகில் இருந்து, கடலில் குதித்து உயிர் தப்பிய சுமார் 80 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
அத்தோடு ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரசின் துணையுடன், ஏமன் இராணுவம், கடற்படை, விமானப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஹோடைடா பகுதியை ஒட்டியுள்ள பாப் அல்-மன்டேப் கடற்பரப்பில் பயணித்த சோமாலிய அகதிகளை ஏமன் இராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகொப்டர் தாக்குதல் நடத்தியுள்ளமை குறித்த பிராந்தியத்தின் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒரு படம் வெளியானால் திருட்டு டி.வி.டி வருவதையே தடுக்க முடியாமல் திணறி வருகிறது சினிமா உலகம். டோரண்ட் தளங்களை தயாரிப்பாளர்கள் நேரிடையாக மிரட்டியும், எச்சரித்தும் வருகிறார்கள்.
அவர்களும் பதிலுக்கு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகிறார்கள். திரையுலகுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் இந்த பைரஸி, யாரோ ஒருவரின் லாபத்துக்காக நடத்தப்படுகிறது.
ஆனால் திரையுலகில் இருக்கும், குறிப்பிட்ட படங்களில் வேலை செய்பவர்களே செய்யும் வேலை இன்னும் மோசமானதாக இருக்கிறது.
இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று பாகுபலி -2. அதன் டீசர்களும், புகைப்படங்களுமே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.
ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் அதன் டிரெயிலருக்காக காத்திருக்க, இன்று காலை அதன் ஹெச்.டி டிரெயிலர் வீடியோ வாட்ஸ் அப் மூலம் பரவ ஆரம்பித்துவிட்டது.
எப்படியும், கோடிகளில் ஹிட்ஸ் அடிக்கக்கூடிய படம்தான் பாகுபலி. வாட்ஸ் அப்பில் பரவுவதால் பல லட்ச பார்வைகளை அது தவறவிடும்.
அதன் மூலம் மட்டுமே பல லட்ச ரூபாய் பாகுபலி குழுவுக்கு வருவாய் இழப்பு நிச்சயம்.
இந்த டிரெயிலரை பாகுபலி படக்குழுவில் இல்லாத ஒருவர் லீக் செய்திருக்கும் வாய்ப்பு மிகக்குறைவு. அல்லது அவர் மூலம் யாருக்கோ அது கிடைத்து, அவர் லீக் செய்திருக்க வேண்டும்.
ஒரு சினிமாவில் பல நூறு பேர் வேலை செய்தே ஆக வேண்டும். அவர்கள் கதையை கூட வெளியே சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆனால், இப்படி கோடிக்கணக்கான பணம் வியாபரமாகும் ஒரு விஷயத்தை, யாருக்கும் எந்தப் புண்ணியமும் இல்லாமல் வெளியிடுவதில் என்ன கிடைக்கப்போகிறது எனத் தெரியவில்லை.
இத்தனைக்கும் வாட்ஸ்அப் மூலம் பரவும்போது வெளியிட்டவருக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை.
பாகுபலி முதல் பலி கிடையாது. இதற்கு முன் ரஜினி முதல் விஜய் படங்கள் வரை பாடல்களோ, ஒரு காட்சியோ அல்லது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோ.. என எதாவது ஒன்று லீக் ஆகிக் கொண்டேயிருக்கிறது.
திரையுலகை சாராதவர்கள் வெளியிடும் பைரஸியை விட இது மிகவும் ஆபத்தானது.
பாகுபலி
அனிருத் தான் இணையத்தில் லீக் ஆகும் விஷயத்துக்கு ஆரம்பம். அவரது முதல் பாடலான கொலைவெறியை யாரோ இணையத்தில் வெளியிட, வேறு வழியில்லாமல் ஆடியோ லான்ச்சுக்கு முன்பே யூட்யூபில் வெளியிட்டார்கள்.
அதுவே, அவருக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்று தந்தது தனிக்கதை. ஒரு பேட்டியில் கூட அனிருத் “அந்தப் பாட்டை நெட்ல ரிலீஸ் பண்ண ஆள் யாருன்னு தெரிஞ்சா, என் சொத்துல பாதில் தந்துடுவேன்” என்றார்.
இணையத்தில் அது லீக் ஆகவில்லையெனில், யூட்யூபில் பாடல் ரிலீஸ் செய்திருக்க மாட்டோம் என்பது அவரது கருத்து
ஜிமெயில் சேவையை பயன்படுத்துவோருக்கு கூகுள் நிறுவனம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதனுடாக ஜிமெயிலில் வரும் காணொளிகளை பதிவேற்றம் செய்வதற்கு முன்பாக பார்க்க முடியும். வீடியோ பயனுள்ளதாக இருப்பின் அதை டவுன்லோடு செய்யலாம்.
புதிய வசதியின் மூலம் பாவனையாளர்களுக்கு அதிகளவு இணைய வீதங்களை சேமிக்க முடியும். முன்னதாக ஜிமெயில் மூலம் அனுப்பப்படும் காணொளிகளை பதிவிறக்கம் செய்யாமல் பார்க்க முடியாது. ஆனால் புதிய வசதியின் மூலம் காணொளிகளை பதிவிறக்கம் செய்யாமலேயே காணொளி முன்னோட்டத்தை பார்க்க முடியுமென கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இனி வரும் காலங்களில் காணொளி இணைக்கப்பட்ட மின்னஞ்சல்களில் பதிவிறக்கம் செய்யும் குறியீட்டிற்கு அருகில், காணொளி ஒளிபரப்பு (streams – ஸ்ட்ரீம்) செய்யக் கோரும் குறியீடு வழங்கப்படும் எனவும், கூகுளின் யூடியூப், கூகுள் டிரைவ் மற்றும் ஏனைய காணொளி ஒளிபரப்புகளுக்கு பயன்படுத்தப்படும் உள்கட்டமைப்புகளை கொண்டு சீரான தரத்தில் காணொளிகள் வழங்கப்படுமென கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புதிய தொழிநுட்ப நிர்மாணங்கள் அறிமுகமாகவுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த புதிய ஜிமெயில் வசதிகள் 15 நாட்களில் வழங்கப்படவுள்ளது. மேலும் குறித்த மின்னஞ்சல் பக்கத்தினுடாக உள்வாங்கும் அளவை அதிகரித்தமை மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான ஜிமெயில் செயலியில் பணம் அனுப்பும் வசதியை அமெரிக்காவில் மட்டும் கூகுள் வழங்கியமையை தொடர்ந்து காணொளிகளுக்காக புதிய வசதிகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் அணி வீரர் ஷகிப் அல் ஹசனும் இலங்கை பந்து வீச்சாளரான சுரங்க லக்மாலுக்கும் இடையில் மைதானத்தில் வைத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இறுதியாக துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி வீரரான சுரங்க லக்மாலுக்கும் பங்களாதேஷ் அணி வீரரான ஷகிப் அல் ஹசனுக்கும் இடையில் கருத்து பரிமாற்றம் மோதலாகியுள்ளது.
குறித்த மோதல் தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.
மாசற்ற அரசியல் செயற்பாடு என்னும் தொனிப் பொருளில் ‘மார்ச் 12’ இயக்கத்தின் ஏற்பாட்டில் மாநாடு ஒன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இம்மாநாட்டில் புதிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறையுடன் மாசற்ற வகையில் புதிய அரசியலை கட்டியெழுப்புவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்வும் நடைபெற்றது.
வவுனியாவில் கடந்த 22 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (17.03.2017) 22வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்கள் இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி எமக்கு எதுவும் தெரியாது என்று இந்த அரசாங்கம் கூறலாம், எமக்கு தெரியும் இவர்களை இந்த அரசுதான் வைத்திருக்கின்றது என்று. விசாரணை என்ற பெயரில் இராணுவத்திடம் நாம் ஒப்படைத்த பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று இந்த அரசு கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
அவர்களை நாம் பத்திரமாக இந்த அரச இராணுவத்திடம் ஒப்படைத்தோம் ஆனால் இன்றோ அவர்களை தொலைத்தவர்களாய் தேடி அலைகின்றோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கதறி அழுதனர்.
ஆணாதிக்கத்தால் அசிட் வீச்சுக்கு ஆளாகி தன் கோலத்தை இழந்தவர் டெல்லியைச் சேர்ந்த லெட்சுமி அகர்வால். திருமணம் செய்ய வற்புறுத்திய 32 வயது ஆணை மறுத்து, தன் உரிமையை வெளிப்படுத்தியது மட்டுமே லெட்சுமி செய்த குற்றம். அதற்காகச் சமூகத்தால் குற்றவாளி போல ஒதுக்கப்பட்டு, மறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.
வலிகளைத் தாண்டிய வலிமையில் போராடியவர். இன்று ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ‘ஸ்டாப் ஆசிட் அட்டாக்’ அமைப்பு மூலம் நம்பிக்கை தரும் விடிவெள்ளியாக திகழ்கிறார்.
லெட்சுமியின் நெடிய போராட்டத்தின் விளைவாக, ஆசிட் வீச்சைத் தடுக்க பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த விதத்திலும் வெறுக்கத்தக்கவர்கள் இல்லை என்பதை உலகுக்கு வலியுறுத்தும் விதமாக, ஆசிட் வீச்சுக்குள்ளனவர்களுக்கான பேஷன் ஷோ நடத்தி வெற்றி கண்டவர் லெட்சுமி.
பாதிக்கப்பட்டவர்களை மாடல்களாக முன்னிறுத்தி காலண்டர் வெளியீடு உட்பட பல்வேறு வழிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவரது போராட்டத்தில் உறுதுணையாக இருந்த அலோக் திக்ஷித்துடன் ‘லிவிங் டு கேதர்’ வாழ்க்கையில் இருக்கிறார். இவர்களுக்கு ‘பிக்கு’ என்ற இரண்டு வயது பெண் குழந்தை உண்டு. லெட்சுமியின் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் அங்கீகரிக்கும் வகையில், அமெரிக்க அரசு ‘உலகின் தைரியமான பெண்’ என்ற விருதை வழங்கிக் கௌரவித்துள்ளது. ‘விவா அண்டு திவா’ தனது நிறுவன மாடலாக இவரை அங்கீகரித்துள்ளது. ஒருபுறம் ‘ஸ்டாப் ஆசிட் அட்டாக்’ இயக்கம். மறுபுறம் பொறுப்பான அம்மா என சுறுசுறு தேனீயாக இருந்தவருடன் போன் டாக் செய்தோம்.
பள்ளிப் பருவத்தில் எனக்குள் ஆயிரம் கனவுகள் இருந்தது. அந்தக் கனவுகளைச் சிதைப்பது போல இந்தக் கோர சம்பவம் நடந்தது. அம்மா இல்லை. அந்தச் சமயத்தில் அப்பா மட்டும் உடன் இருந்தார். மருத்துவச் செலவுக்கே வழியில்லை. என் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக வீட்டுக்குள் முடங்கினேன். வறுமை என்னைத் துரத்தியது. எந்தத் தவறும் செய்யாத நான் குற்றவாளியைப் போல வீட்டுச் சிறையில் முடங்கினேன். தவறு செய்தவனோ, சுதந்திரமாக வெளியுலகில் உலாவினான். ஒரு கட்டத்தில் நீதி கேட்டு நீதிமன்ற படிகளில் ஏறினேன். அந்தச் சமயத்தில் சட்டரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலர் உதவிக்கு வந்தனர்.
பத்திரிகை நண்பராக அலோக் திக்ஷித் அறிமுகமானார். ஸ்டேஷன், கோர்ட் என போராட்டமான வாழ்வில் தோள் கொடுத்த தோழரானார். அவலட்சணமான என் முகத்தைப் பார்ப்பதே பாவம் என ஒதுங்கியவர்கள் மத்தியில், என் மன அழகை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு என்னுடைய சுகதுக்கங்களில் பங்கெடுத்தார். எங்களுக்குள்ளான புரிதல், காதலாக மலர்ந்தது. திருமண பந்தத்தில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. எந்த நிபந்தனையும் இல்லாத ‘லிவிங் டு கேதர் லைப்’ னூலம் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். எங்கள் அன்பின் சாட்சியாக மகள் ‘பிக்கு’ இருக்கிறாள்” என்கிறவர் குரலில் மலர்ச்சி.
‘ஸ்டாப் ஆசிட் அட்டாக்’ இயக்கப் பணிகள் பற்றி எனக் கேட்டதும், ‘‘எங்கள் அமைப்பில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட முப்பது பெண்கள் உள்ளனர். நாங்கள் ஒன்றிணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்துவருகிறோம். பெண்கள் எந்தச் சூழலிலும் வன்முறைக்கு உள்ளாகக் கூடாது என்பதே எங்கள் நோக்கம். சமீபத்தில், எங்கள் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்குத் திருமணம் செய்துவைத்தோம்.
அசிட் வீச்சுக்கு உள்ளான பெண்கள் தங்கள் அழகை இழப்பதோடு, வீச்சின் தன்மைக்கேற்ப கண், மூச்சுக்குழல் எனப் பல்வேறு உடல் உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது. அதனால், தற்கொலை எண்ணம் மேலோங்கி இருக்கும். அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி, தேவையான உதவிகள் செய்து, கவுன்சிலிங் அளிக்கிறோம். அமைப்பில் உள்ள ஒவ்வொருவருக்கும் நீதி கேட்டு சட்டப் போராட்டம் செய்துவருகிறோம். எங்களின் தொடர்ந்த முயற்சியின் விளைவாக சில விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், நாங்கள் அடைய வேண்டிய தூரம் வெகு தூரத்தில் உள்ளது.
”உங்கள் குழந்தை ‘பிக்கு’ பற்றிச் சொல்லுங்களேன்” என்றதும், ‘‘க்யூட் சுட்டி. அவள் அப்பாவின் பயங்கர செல்லம். எந்த நேரமும் அவளைக் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். துறுதுறுவென ஓடிக்கொண்டிருப்பாள். எங்கள் வாழ்வின் வசந்தம் அவள். அவள் விரும்பும் வாழ்க்கை அவள் வாழ வேண்டும். குழந்தையைக் கவனிப்பது என்பது, அவ்வளவு எளிதான காரியமல்ல. என் பெரும்பாலான நேரத்தை அவளிடம்தான் செலவழிக்கிறேன். குழந்தையைக் கவனிக்கவேண்டிய சூழல் இருப்பதால், ‘மாடல்’ வாய்ப்பைத் தேடவில்லை. அழகு என்பது முகத்தில் மட்டுமல்ல. வேறு வடிவங்களிலும் உணர்த்த முடியும்… உணர முடியும்’ – கம்பீரமாகவும் பளீர் எனவும் ஒலிக்கிறது லெட்சுயின் குரல்.
இலங்கையின் பிரபல நடிகை பியுமி ஹன்சமாலி பங்கேற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் மோதல் நிலை ஏற்பட்ட காணொளி ஒன்று வெளியாகி’யுள்ளது.
நடிகை பியுமி ஹன்சமாலியுடன் இருந்த ஊடகவியலாளர் குழுவுக்கும், விருந்தில் கலந்து கொண்ட குழுவொன்றுக்கும் ஏற்பட்ட வாய்தர்க்கம் அடிதடி மோதலாக மாறியுள்ளது.
கிரிபத்கொடவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற விருந்தின் இறுதியில் மோதல் இடம்பெற்றுள்ளது. அது தொடர்பான சீ.சீ.டீ.வி காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
தாக்குதலுக்குள்ளான நபர்கள் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டிருந்த பியுமி ஹம்சமாலி,
அந்த தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லை. நண்பர்கள் சிலர் மற்றும் இளைஞர் குழுவொன்றுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தகராறு காரணமாக இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் டெங்கு நோய் தாக்கத்தினால் 6 வயது மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது கிழக்கு மாகாணத்தில் அதிகளவிலானவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பயிலும் உதயராஜன் அஞ்சனா வயது – 6 என்ற சிறுமியே நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
கடந்த 13ஆம் திகதி அன்று காய்ச்சல் காரணமாக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி நேற்றிரவு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் நேற்று முன்தினத்தில் இருந்து 23 மணிநேரத்தில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.