கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை மேற்கொண்ட விலங்குகள் காப்பக ஊழியர்கள். தாம் பராமரித்த நாய்கள் யாவும் தத்தெடுக்கப்பட்ட நிலையில், தாங்களே கூடுகளுக்குள் சென்று கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உள்ள பைக் பீக்ஸ் மானுட அமைப்பானது விலங்குகளை வருமானம் தரும் நோக்கத்திற்காக பராமரித்து வராத ஒரு அமைப்பாக செயற்பட்டுள்ளது. குறித்த அமைப்பில் பராமரிப்பிற்குட்பட்டு வந்த அனைத்து நாய்களும் கிறிஸ்மஸ் விடுமுறையை களிக்க வீடுகளுக்கு சென்ற நிலையில் காப்பக ஊழியர்கள் விலங்குகளை அடைத்து வைக்கும் கூடுகளுக்குள் சென்று தமது பண்டிகை கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் குறித்த மானுட அமைப்பானது, பண்டிகை விடுமுறையை ஒட்டி நாய்கள் தத்தெடுப்பதற்கு ஏதுவான வீடுகளை ஆய்வியல் ரீதியில் இனங்கண்டுள்ளனர்.
குறித்த காப்பகத்தின் பராமரிப்பிலுள்ள நாய்கள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முதலாகவே தத்தெடுக்கும் பட்சத்தில் பராமரிப்பிற்குட்பட்டு வந்த பிராணிகளுக்கான கொடுப்பனவுகள் யாவும் தள்ளுபடி என அதிரடி அறிவிப்பை காப்பகம் விட்டுள்ளது.
இந்நிலையில் அங்கிருந்த அனைத்து நாய்களும் கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்பாகவே தத்தெடுக்கப்பட்டுள்ளன என காப்பகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கென்னாபீஸ் எனப்படும் கஞ்சாவகை செடியை கொண்டு தமது நத்தார் மரத்தை அலங்கரித்திருந்த குற்றத்திற்காக இருவர் கைதான சம்பவம் இங்கிலாந்தில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது..
இங்கிலாந்தின் ஜெல்டன்ஹாம் நகரப்பகுதியிலுள்ள வீடொன்றை பொலிஸார் சோதனைக்குட்படுத்தியுள்ளனர். இந்நிலையில் வீட்டில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வண்ணக் காகிதங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த மரத்தை உன்னிப்பாக அவதானித்த பொலிஸார் அது அடர்த்தியாக வளர்ந்த கென்னாபீஸ் எனப்படும் கஞ்சா வகை போதை செடி என்பதை கண்டு பிடித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டிலிருந்த இளம் தம்பதியினர் சட்ட விரோத கஞ்சா பயிர்ச்செய்கையை மேற்கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்ததுடன், எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி மேலதிக விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த கஞ்சா செடியின் மூலமாக அலங்கரிக்கப்பட்ட நத்தார் மரத்தை சமுக வலைத்தளங்களில் பதிவுசெய்து, குறித்த மரம் தொடர்பான விளக்கத்தை அளித்துள்ளனர்.
அரசாங்கத்தின் தூர நோக்கில்லாத நடவடிக்கையினாலேயே அரிசியின் விலை அதிகரித்துள்ளது. எனினும் விரையில் மீண்டும் அரிசியின் விலை அதிகரிப்பதற்கான அபாயம் உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அரிசி தட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை போன்ற நடுத்தர வருமானம் பெறும் நாட்டில் டிஜிட்டல் செயல்முறை ஒரு சிறந்த அடிப்படையாகும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் அரச நிர்வாகத்தில் தரத்தை சிறப்பாக முன்னெடுக்க முடிவதோடு அரச சேவையும் மேம்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
பொருளாதார டிஜிட்டல் செயற்பாட்டின் மூலம் சந்தையையும் தொழில்நுட்பத்தையும் விரைவில் அடைந்து கொள்ளக்கூடிய பின்னணி உருவாக்கப்படும்.
பொருளாதார டிஜிட்டல் கட்டமைப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 15 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ் வரி முகாமைத்துவம் வரி மூலத்தையும் விரிவுபடுத்தும் வல்லமை உள்நாட்டு வருமான வரி திணைக்களத்திற்கு கிடைக்கும்.
வரி செலுத்துபவர்களுக்காக இலத்திரனியல் ஆவணங்கள் மற்றும் இலத்திரனியல் கொடுப்பனவு அலுவலகம் அமைக்கப்படும். இலத்திரனியல் அடையாள அட்டையின் ஊடாக இதற்கு பயன் கிடைக்கும்.
வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் இது இலகுவாக அமையும். தேசிய பண கொடுப்பனவு தளமொன்றின் மூலம் இணையத்தளத்தின் ஊடாக அனைத்து பணம் செலுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான ஒரு முறை வகுக்கப்படும்.
அரசாங்க அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களை வீடியோ கொன்பரன்ஸ் ஊடாக இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஒத்துழைப்புடன் கணனி பாதுகாப்பை பலப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியா பூனாவை இரானுவ முகாமிற்கு அருகே இன்று (27.12.2016) அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த சுகாதார திணைக்களத்திற்கு சொந்தமான பிக்கப் ரக வாகனமும் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியுள்ளது.
மதவாச்சி, நாவற்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் வைத்தியர் உள்ளிட்ட இரண்டு பெண்களும் ஆணொருவரும் பலியாகியுள்ளனர்.
புத்தளம் வைத்தியசாலையில் வைத்தியராக பணியாற்றும் ரி.எம்.ஏ.சுதேசிகா, அவரது கணவரான முகமது சபூர், மாமனாரான வவுனியாவின் பிரபல வர்த்தகர் சப்ரின், அவரது மனைவி மலீனா ஆகியோர் பயணித்த வாகனம் இந்த விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த வைத்தியரின் கணவர், படுகாயமடைந்த நிலையில், வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
பாரவூர்தியின் சாரதியை கைதுசெய்துள்ள மதவாச்சி பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சுகாதார திணைக்களத்தின் வாகனம், கனரக வாகனமொன்றுடன் மோதியதில் வைத்தியர் உள்ளிட்ட இருவர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மூன்று முறிப்பு சந்திப் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோயாளர்களை ஏற்றி வந்த முச்சக்கர வண்டி ஒன்றும், உழவு இயந்திரம் ஒன்று மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார் அடம்பன் பிரதேசத்தில் அனாதரவான நிலையில் காணப்பட்ட சிறுத்தை குட்டி ஒன்றை மன்னார் பொலிஸ் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
சிறுத்தை குட்டியை பொலிஸார் அனுராதபுரம் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சிறுத்தை குட்டி நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக அனுராதபுரம் மற்றும் வடமேல் பிராந்தியத்திற்கு பொறுப்பான கால்நடை மருத்துவர் சந்தன ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சந்திவெளியில் நேற்று இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிள்ளையார் கோயில் வீதி, சந்திவெளி, என்ற இடத்தை சேர்ந்த கோபாலன் கேதீஸ்வரன் (வயது 25) என்ற இளைஞனே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் செங்கலடி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு பிரேதப்பரிசோதனையின் பின் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா தமிழ் விருட்சத்தின் ஏற்பாட்டில் குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் வவுனியா அந்தணர் ஒன்றித்தின் தலைவர் முத்து ஜெயந்தி நாதக் குருக்களின் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகள் நினைவு கூறப்பட்டதுடன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி விசேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றது.
சுனாமிப்பேரலையில் இறந்தவர்களை நினைவு கூர்ந்து எண்ணை விளக்குகள் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலியும் நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார, வவுனியா மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார்,வடக்குமாகாண சபை உறுப்பினர் எஸ்.மயூரன், மாவட்ட செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் அ.பிரதீபன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
செட்டிகுளம் வீரபுரத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க ஆர்.டி.எப் (RDF) நிறுவனத்தின் ஏற்பாட்டில் தொழிற்பயிற்சி தொடர்பிலான விழிப்பூட்டல் நாடகம் இன்று (26.12.2016) இடம்பெற்றது.
நவீனத்துவமடைந்துவரும் இன்றைய உலகில் வேலையில்லா பிரச்சினையை குறைத்து கொள்ளவும், இளைஞர் யுவதிகளை எதிர்கால உலகிற்கு செயற்திறன் மிக்கவர்களாக மாற்றியமைத்து கொள்வதற்காகவும், அவர்களின் எதிர்காலத்தை வளம்மிக்கதாக மாற்றிக்கொள்வதற்காகவும் இவ்வாறான ஒரு தொழிற்பயிற்சி மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பில் கிராமப்புற மக்களையும் இளைஞர் யுவதிகளையும் தெளிவூட்டும் வகையிலும்,
நேரடியாக மக்களை அவர்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று விழிப்பூட்டுவதற்காகவும் இவ்வாறான வீதி நாடக விழிப்புணர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் தெரிவித்தார்.
அத்துடன் கிராமங்கள் தோறும் தொடர்ச்சியாக இவ்வாறான விழிப்பூட்டல் நாடகங்கள் ஆர்.டி.எப் (RDF) நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கதிர்காமத்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் இராட்சத மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இல்லத்தை நடத்திச் செல்லும் முகாமையாளரின் அறையில் இருந்து பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்பது அடி நீளமான பாம்பு, அறையில் சுருண்டிருந்த நிலையில் முகாமையாளரால் அடையாளம் காணப்பட்டது.
வனவிலங்கு அதிகாரிகள் வருகை தருவதற்கு முன்னர் குறித்த இராட்சத மலைப்பாம்பை தொழிலாளர்களின் உதவியுடன் குறித்த முகாமையாளர் இரும்பு கூண்டினுள் அடைத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த வனவிலங்கு அதிகாரிகள், குறித்த இராட்சத பாம்பினை மீட்டு, பாதுகாப்பாக காட்டில் விடுவித்துள்ளனர்.
யாழ்.பண்ணை பகுதியில் ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் தொலைத்தொடர்பு கோபுரம் உடைந்து விழுந்ததினால் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
184 மீற்றர் உயரமான இந்த கோபுரம் இன்று கழற்றப்பட்டுக் கொண்டிருக்கும்போது மீதமாக இருந்த கோபுரத்தின் பகுதி அடியோடு சாய்ந்து விழுந்துள்ளது.
இதன்போது வீதியால் பயணித்து கொண்டிருந்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த கோபுரம் உடைந்து விழுந்ததினால் மின் தடை ஏற்பட்டுள்ளதுடன், தொலைத்தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த கோபுரத்தினை சீர்செய்யும் பணியில் ரெலிகொம் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.
கோபுரம் சாய்ந்து விழுந்ததினால் பண்ணைப் பாதையூடான போக்குவரத்துக்கள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
33,000 அடி (10,000 மீற்றர்) உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து உயிர் தப்பி, 44 வருடங்கள் உயிர்வாழ்ந்த பெண்ணொருவர் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
சேர்பியாவைச் சேர்ந்த வெஸ்னா வுலோவிக் என்பவரே இப்பெண்ணாவார். மேற்படி அனர்த்தத்தில் ஆச்சரியகரமாக உயிர்தப்பிய அவர் தனது 66 வயதில் இறந்துள்ளார்.
1972 ஜனவரி 26 ஆம் திகதி மேற்படி விமான அனர்த்தம் இடம்பெற்றது. அப்போது 23 வயது யுவதியாக இருந்த வெஸ்னா வுலோவிக், யூகோஸ்லாவியாவின் (சேர்பியா, பொஸ்னியா, குரோஷியா உட்பட பல குடியரசுகள் ஒன்றிணைந்த நாடு) விமான சேவை நிறுவனமான யூகோஸ்லாவ் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார்.
1972 ஜனவரி 26 ஆம் திகதி யூகோஸ்லாவ் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் டக்ளஸ் டி.சி 9 விமானமொன்றில் வெஸ்னா வுலோவிக் பணியில் இருந்தார். அவ்விமானம் சுவீடனின் ஸ்டொக்ஹோம் நகரிலிருந்து புறப்பட்டு டென்மார்க்கின் கொப்பன்ஹேகன் நகரில் தரையிறங்கிய பின் யூகோஸ்லாவியாவின் தலைநகர் பெல்கிரேட்டை நோக்கிப் புறப்பட்டது.
அதன்பின் செக்கஸ்லோவாக்கியாவின் (தற்போதைய செக் குடியரசின்) மலைப்பிராந்தியம் ஒன்றுக்கு மேலாக பறந்து கொண்டிருந்தபோது அவ்விமானம் வெடித்துச் சிதறியது.
யூகோஸ்லாவியாவைச் சேர்ந்த கிளர்ச்சிக் குழுவொன்றினால் விமானத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததாக கருதப்படுகிறது.
அப்போது 33,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த மேற்படி விமானத்தில் அவ்வேளையில் மொத்தமாக 28 பேர் இருந்தனர். அவர்களில் 27 பேர் பலியாகினர். ஆனால், வெஸ்னா வுலோவிக் மாத்திரம் உயிர்தப்பினார்.
விமானப் பணிப்பெண்ணான வெஸ்னா, விமானம் கீழே விழத்தொடங்கியபோது, விமானத்தின் வால்பகுதியில் உணவு வண்டியொன்றுக்கிடையில் அகப்பட்டிருந்தார்.
விமானத்தின் வால்பகுதியானது மரங்கள் அடர்ந்த அதிகளவான பனி பொழிந்திருந்த பகுதியில் வீழ்ந்தது.
மரங்களும் பனிப்படிவுகளும் ஒரு குஷன் போன்று அமைந்ததால் விமானத்தின் வால்பகுதி நொருங்காமல் இருந்தது. விமா னம் வீழ்ந்து சில மணித்தியாலங்களின் பின், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களால் வெஸ்னா வுலோவிக் மீட்கப்பட்டார்.
அவர் மிக மோசமாக படுகாயமடைடைந்திருந்தார். மண்டையோட்டில் வெடிப்பு ஏற்பட்டிருந்தது, கால்கள், இடுப்பு எலும்பு, விலா எலும்புகளில் முறிவுகள் ஏற்பட்டிருந்தன. வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வெஸ்னா வுலோவிக் 10 நாட்கள் கோமா நிலையில் இருந்தார்.
சிறிது காலம் அவரின் உடல் இடுப்புக்குக் கீழ் இயங்கவில்லை. அவரை குணப்படுத்துவதற்காக பல்வேறு சத்திரசிகிச்சைகள் செய்யப்பட்டன. பல மாதங்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்த வெஸ்னா பின்னர் எழுந்து நடமாடியதுடன் மீண்டும் யூகோஸ்லோவ் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் வேறொரு பணியில் இணைந்தார். எனினும், மேற்படி விமான அனர்த்தம் குறித்த எந்த நினைவும் அவருக்கு மீளத் திரும்பவில்லை.
2008 ஆம் ஆண்டு நியூயோர்க் டைம்ஸுக்கு அளித்த செவ்வியொன்றில், நான் உடைந்து நொறுங்கினேன். மருத்துவர்கள் என்னை மீள ஒன்றிணைத்தனர்’ எனக் கூறியிருந்தார்.
33,000 அடி (10,000 மீற்றர்) உயரத்திலிருந்து பரசூட் உதவியின்றி வீழ்ந்து உயிர்தப்பியதால், உலகில் அதிக உயரத்திலிருந்து பரசூட் இன்றி வீழ்ந்து உயிர்தப்பியவராக 1985ஆம் ஆண்டு வெஸ்னா வுலோவிக் கின்னஸ் சாதனையாளராக அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
66 வயதான வெஸ்னா வுலோவிக், கடந்த வெள்ளிக்கிழமை சேர்பியாவின் தலைநகர் பெல்கிரேட்டிலுள்ள தனது வீட்டில் இறந்தார் என சேர்பிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அவரின் மரணத்துக்கான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை.
சர்வதேச விமான நிலையமொன் றின் கதவுகளை உடைத்துக்கொண்டு கார் ஒன்று வேகமாக விமான நிலையத்துக்குள் நுழைந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.
கஸாந் நகரிலுள்ள கஸான் சர்வதேச விமான நிலையத்தின் கண்ணாடி கதவுகளை தகர்த்துக்கொண்டு இக்கார் உள்ளே நுழைந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விமான நிலைய கட்டடத்துக்குள் நுழைந்தவுடன் கார் நிறுத்தப்படவில்லை. அந்நபர் தொடர்ந்தும் காரை செலுத்திக் கொண்டிருந்தார்.
பின்னர் விமான நிலையத்திலிருந்து பயணிகள் வெளியேறும் பகுதியின் கதவையும் அக்கார் தகர்த்தது. அவ்வேளையில் பொலிஸாரால் அக்காரை வழிமறித்து நிறுத்த முடிந்தது.
அதன்பின் காரின் சாரதியான ரஸ்லன் நுர்ட்டின்வோ (40) கைது செய்யப்பட்டார். அவர் மது போதையில் இருந்தார் என ரஷ்ய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நீதிமன்றில் நடைபெற்ற விசாரணையின்போது, தனது காதலி உள்ளூர் ரயில் நிலையத்தை வந்தடையவிருந்ததாகவும் அவரை வரவேற்பதற்குச் செல்வதற்காக விமான நிலையத்துக்கு ஊடாக தான் காரை செலுத்தியதாகவும் கூறினாராம்.
மேற்படி சம்பவத்தால் எவரும் காயமடையவில்லை. ஆனால், நீர்விநியோக குழாய் உடைந்ததால் கட்டடத்துக்குள் தண்ணீர் வழிந்தோடி வெள்ளம் ஏற்படத் தொடங்கியது.
ரஸ்லன் நுர்ட்டின்வோவுக்கு 15 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை, கட்டடங் களை சேதப்படுத்தியமை தொடர்பாக மேலும் இரு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.