நடிகர் அஜீத் ஓசையில்லாமல் நலிந்தோர் பலருக்கு உதவிகள் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக தனது வீட்டில் வேலை பார்க்கும் 10 பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கிறார்.
அஜீத்திடம் நீண்டகாலமாக சமையல் வேலை, வீட்டு வேலை, தோட்ட வேலை செய்யும் 10 ஊழியர்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. இது பற்றிய தகவல் தெரிந்ததும் அவர்களுக்கு உதவ அஜீத் முடிவு செய்தார். இதற்காக பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கேளம்பாக்கத்தில் நிலம் வாங்கினார்.
அந்த நிலம் வீட்டில் பணியாற்றும் 10 பேர் பெயருக்கும் தனித்தனியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதில் 10 பேருக்கும் அஜீத் சொந்த செலவிலேயே வீடுகள் கட்டி கொடுக்கிறார். இதற்கான பூமி பூஜை சமீபத்தில் நடந்தது. அஜீத் படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்று இருந்ததால் பூமி பூஜையில் அவரது மனைவி ஷாலினி கலந்து கொண்டார். விரைவில் வீட்டுக்கான கட்டுமான பணிகள் துவங்க உள்ளன.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 5 படகுகளுடன் நேற்று (18) இரவு காங்கேசன்துறை வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து இந்திய இணையமொன்று வெளியிட்டுள்ள செய்தியின்படி,
புதுகோட்டை மாவட்டத்தை சேர்ந்த 19 தமிழக மீனவர்கள் தமிழக எல்லை பகுயில் மீன்களை பிடித்து கொண்டு இருந்தனர்.
அங்கு வந்த இலங்கை கடற்படையினர் காரணம் ஏதும் இன்றி அவர்களை கைது செய்தனர்.
மீனவர்கள் பிடித்து வைத்து இருந்த மீன்களை எரிந்து கடலில் வீசினர். பின்னர் தமிழ்க மீனவர்கள் வைத்து இருந்த 5 விசை படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைபற்றி பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்தில் இலங்கை கடற்படை வீரர்கள் விசாரித்து வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படைவீரர்களால் கைது செய்வது பின்னர் விடிவிக்கபடுவது தொடர்கதையாக உள்ளது.
1980களில் தமிழ், ஹிந்தித் திரையுலகில் வலம்வந்த ஸ்ரீதேவி திருமணத்திற்குப் பின்னர் திரைப்படங்களில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சென்ற வருடம் அவரது நடிப்பில் வெளிவந்த இங்லிஷ் விங்லிஷ் அவருக்குப் பெரியதொரு வெற்றிப்படமாக அமைந்தது. ஒரு நடிகையின் நடிப்புத்திறமை என்றும் அழிவதில்லை என்று பலரையும் அந்தப் படம் கருதவைத்தது.
தற்போது தெலுங்குத் திரையுலகின் புகழ் பெற்ற எழுத்தாசிரியரான கோனா வெங்கட் தன்னுடைய கதை ஒன்றினால் ஈர்க்கப்பட்டுள்ள ஸ்ரீதேவி அதில் நடிப்பதற்கும் ஒப்புக் கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான போனி கபூர் மூன்று மொழிகளில் இப்படத்தினைத் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் மற்ற விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று கோனா வெங்கட் தனது இணையதளத் தகவலில் தெரிவித்துள்ளார்.
ரசாயன ஆயுதங்களை ஒழிக்கா விட்டால் சிரியா மீது தடை விதிப்பதற்கான தீர்மானத்தை ஐ.நா சபையில் கொண்டுவரும் முயற்சியில் மேற்கத்திய நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் இதில் 1400 பேர் இறந்ததாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. அந்நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்தப் போவதாகவும் எச்சரித்தது.
எனினும் அமெரிக்காவின் குற்றச்சாட்டை சிரியா அரசு மறுத்தது.
இதனிடையே சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து ஐ.நா. நிபுணர்கள் புலன்விசாரணை நடத்தினர். அவர்கள் தங்கள் விசாரணையை முடித்து ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த அறிக்கையில் சிரியாவில் அப்பாவி மக்கள் மீது மிகப்பெரிய அளவில் சரின் விஷவாயு பயன்படுத்தப்பட்டதை ஐ.நா ரசாயன நிபுணர்கள் உறுதிப்படுத்தினர்.
எனினும் சிரியாவில் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது யார் அரசுத் தரப்பா அல்லது கிளர்ச்சியாளர்களா என்பது குறித்து ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த விவகாரம் குறித்து ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதர் சமந்தா பவர் கூறுகையில்..
சிரியாவில் இவ்வளவு பெரிய அளவில் ரசாயன ஆயுதத் தாக்குதலை ஆட்சியாளர்களால் மட்டுமே நடத்தியிருக்க முடியும் என்பது ஐ.நா. அறிக்கையின் தொழில்நுட்ப விவரங்கள் மூலம் தெளிவாகிறது. இத்தாக்குதலுக்கான பொறுப்பை அதிபர் பஷார் அல் அஸாத் அரசுதான் ஏற்க வேண்டும் என்றார்.
பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் லாரண்ட் ஃபேபியஸ் கூறுகையில் ரசாயன ஆயுதத் தாக்குதலுக்கு சிரியா அரசுப் படைகள்கதான் காரணம் என்பதில் சந்தேகமே இல்லை என்று தெரிவித்தார்.
பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் கூறுகையில் அப்பாவி மக்கள் மீது சரின் விஷவாயு செலுத்தப்பட்டதன் பின்னணியில் சிரியா அரசு இருப்பதை ஐ.நா. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது என்றார்.
இந்நிலையில் ரசாயன ஆயுதங்களை ஒழிப்பதாக அளித்த வாக்குறுதியை சிரியா நிறைவேற்றாவிட்டால் அந்நாட்டின் மீது தடைகளை விதிப்பதற்கு ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர மேற்கத்திய நாடுகள் தீவிரமாக உள்ளன.
இதற்கான வரைவுத் தீர்மானத்தை பிரான்ஸும் பிரிட்டனும் விரைவில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் மற்ற உறுப்பு நாடுகளுக்கு அனுப்ப உள்ளன. இது தொடர்பான பேச்சுவார்த்தையை பாதுகாப்பு கவுன்சில் இந்த வாரம் தொடங்க உள்ளது.
தரையில் இருந்து புறப்பட்டு தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளைக் கிளர்ச்சியாளர்கள் வைத்திருப்பதாகவும் அவர்கள்தான் அவற்றின் மூலம் சரின் விஷவாயுத் தாக்குதலை நடத்தியதாகவும் சிரியா அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்..
நாங்கள்தான் (அரசு) ரசாயன ஆயுதத் தாக்குதலை நடத்தினோம் என்று கூறப்படும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறேன். இது போன்ற தாக்குதல் உத்திகளை போரில் தோற்பவர்கள்தான் பின்பற்றுவார்கள். தோல்வி முகம் கண்டுவரும் கிளர்ச்சியாளர்களே இதைச் செய்துள்ளனர். மாறாக, எங்கள் ராணுவம் வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது என்றார்.
முன்னதாக சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது போர்க் குற்றம் என்று ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கமலஹாசனால் கடந்த 1997ம் ஆண்டில் துவக்கப்பட்ட மருதநாயகம் ஒரு வரலாற்றுத் திரைக் காவியமாகச் சித்தரிக்கப்பட்டது. 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது யூசுப் கான் என்ற வீரரைப் பற்றிய கதை இதுவாகும்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் தயாரிக்கப்படுவதாக இருந்த இந்தத் திரைப்படம் பின்னர் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பொருளாதாரப் பிரச்சினையும், மற்ற சில வெளிவராத பிரச்சினைகளும் இந்தப் படத்தைக் கிடப்பில் போட்டன.
தற்போது விஸ்வரூபம் படத்திற்கு கிடைத்த வரவேற்பில் கமலஹாசன் அதன் இரண்டாவது பாகத்தையும் தயாரித்து வெளியிடும் இறுதிக் கட்ட வேலைகளில் உள்ளார். இந்தப் படத்தின் வெற்றி அவருக்கு மீண்டும் மருதநாயகத்தை இயக்கும் எண்ணத்தை உருவாக்கியுள்ளது.
அவரது வெளிநாட்டு நண்பர்கள் பலரும் அந்தப் படத்திற்குத் தேவையான பொருளுதவியை அளிப்பதாகக் கூறியுள்ளது அவரது ஆர்வத்தினை மேலும் தூண்டியுள்ளது. அதனால், தன்னுடைய தீவிரமான ரசிகர்களுக்காக மருதநாயகம் படத்தினைத் தயாரிக்கும் முயற்சியில் அவர் மீண்டும் ஈடுபடக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிம்பாவேயின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹை வெட்டல் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். 40 வயதான இவர் துர்க்வே ஆற்றில் இருந்து 2 கிமீ தொலைவில் தனது அலுவலகத்தோடு குடியிருப்பையும் அமைத்து வசித்து வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் பணிகளை முடித்து விட்டு தனது படுக்கையறையில் படுத்து ஹை வெட்டல் உறங்கத் தொடங்கினார்.
அப்போது அவரது அறைக்குள் சுமார் 8 அடி நீள முதலை ஒன்று ஜன்னல் வழியாக உள்ளே புகுந்தது. இது எதுவும் ஹை வெட்டலுக்கு தெரியாமல் நன்றாக குறட்டை விட்டு உறங்கினார்.
அறைக்குள் புகுந்த முதலை இவரது கட்டிலுக்கு அடியில் புகுந்தது. அங்கு டைல்ஸ் தரையில் உறங்கியது. காலையில் கண் விழித்த ஹை வெட்டல் வழக்கம் போல சமையலறையில் தேனீர் போடும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது வீட்டை சுத்தம் செய்யும் பெண் வெட்டலின் அறையின் கட்டிலுக்கு அடியில் 8 அடி நீள முதலையைக் கண்டு மயக்கம் போடாத குறையாக அலறி கூச்சல் போட்டார். உடனே சத்தம் கேட்டு வெட்டலும், அக்கம் பக்கத்தினரும் அங்கு விரைந்தனர். அங்கு முதலையைக் கண்டு பதறினர்.
உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதலையை பிடித்தனர். இந்த முதலை அருகில் இருக்கும் துர்க்வே ஆற்றில் இருந்து தப்பி வந்திருக்கலாம் என தெரிவித்தனர்.
நைல் நதியில் வாழும் வகையைச் சேர்ந்த இந்த முதலையின் எடை சுமார் 150 கிலோ எடை கொண்டது. மனிதர்களை கூட வேட்டையாடக் கூடியது என்று முதலை நிபுணர்கள் தெரிவித்தனர்.
நஸ்ரியா–ஜெய் காதல் தீவிரமாகியுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
நஸ்ரியா தமிழில் நேரம் படம் மூலம் அறிமுகமானார். தற்போது ராஜா ராணி என்ற படத்தில் ஜெய் உடன் சேர்ந்து நடித்து உள்ளார். இப்படம் வரும் 27ம் திகதி ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு முன்பே இருவரும் திருமணம் எனும் நிக்கா என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர். இந்தப்படம் இன்னும் வெளிவரவில்லை. தற்போது தனுஷ் ஜோடியாக நய்யாண்டி படத்தில் நடித்து வருகிறார்.
திருமணம் எனும் நிக்கா படத்தில் நடித்தபோது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இது ராஜா ராணி படத்திலும் தொடர்ந்திருக்கிறது. இருவரும் தனியாக உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசுவதாக படப்பிடிப்பு குழுவினர் சொல்கிறார்கள்.
சமீபத்தில் படப்பிடிப்பில் இருந்து ஜெய்யுடன் நஸ்ரியா திடீரென மாயாகிவிட்டதாகவும் நீண்ட நேரத்துக்கு பிறகு திரும்பி வந்ததாகவும் கூறுகின்றனர். கோடம்பாக்கத்தில் திருமணத்துக்கு தயாராகும் அடுத்த காதல் ஜோடி ஜெய்– நஸ்ரியா என பரபரப்பாக பேசப்படுகிறது.
இங்கிலாந்தில் விசாரணைக்கு வரும் முஸ்லீம் பெண்கள் பர்தா அணிந்து கொள்ளலாம் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பிளாக் பிரியார்ஸ் கிரவுன் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணை நடந்தது.
அப்போது சாட்சியம் அளிக்க வந்த 22 வயது முஸ்லிம் பெண் மத வழக்கப்படி முகத்தை மறைத்தபடி பர்தா அணிந்து வந்தார்.
அப்போது முகத்தில் பர்தா அணிந்திருந்தால் கண்களை பார்த்து எப்படி சாட்சியம் பெற முடியும் என்றும் சம்பந்தப்பட்ட நபர் இவர்தான் என்பதை நீதிமன்றம் அறிய வேண்டும். எனவே முகத்திரையை விலக்க வேண்டும் என நீதிபதி பீட்டர் மர்பி கூறியுள்ளார்.
அதற்கு பெண் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் மனித உரிமை ஆர்வலர்களும் நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து முஸ்லிம் மத பெண்கள் பொது இடங்களில் பர்தாவை விலக்க கூடாது. அவ்வாறு அவரை வலியுறுத்துவது மனித உரிமைக்கு எதிரானது என்று நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மர்பி முஸ்லிம் பெண்கள் நீதிமன்ற விசாரணைக்கு வரும் போது பர்தா அணிந்திருக்கலாம்.
ஆனால் வழக்கில் சாட்சியம் அளிக்க வரும் பெண் சம்பந்தப்பட்ட நபர்தானா என்பதை பெண் பொலிஸ் அதிகாரி தனியறைக்கு அவரை அழைத்து சென்று பர்தாவை விலக்கி பார்த்து உறுதி செய்ய வேண்டும் என்றும் அதன்பின் அவரது சாட்சியம் ஏற்கப்படும் என கூறி தீர்ப்பளித்துள்ளார்.
இணையத்துக்கு அடிமையாவது, தனிமை பறிபோவது மற்றும் நரம்பு பிரச்சினையால் பலர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது நிறுத்தி வருகின்றனர் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
பலர் அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினர் இணையமே கதி என்று இருக்கின்றனர். மேலும் ஃபேஸ்புக், டுவிட்டர் இருப்பது அவர்களுக்கு மேலும் வசதியாக உள்ளது.
நண்பர்களிடம் அரட்டை அடிப்பது, தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை நிமிடத்திற்கு நிமிடம் சமூக வலைதளங்களில் அப்டேட் செய்பவர்கள் உள்ளனர். இந்நிலையில் வியன்னா பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள் சமூக வலைதளங்கள் பயன்பாடு குறித்து ஒரு ஆய்வை நடத்தினர்.
விக்கிலீக்ஸ், தேசிய பாதுகாப்பு ஏஜென்சி ஆகியவை பல இரகசியங்களை அம்பலப்படுத்தியதையடுத்து சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் தங்களின் சொந்த விஷயங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அஞ்சுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
தங்களின் சொந்த விஷயங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நினைத்து பலர் தங்களின் ஃபேஸ்புக் கணக்கை நிறுத்தி வருகின்றார்களாம்.
இணையத்திலேயே கிடையாய் கிடப்பது, தனிமை பாதிக்கப்படுவது மற்றும் நரம்பு பிரச்சினையால் பலர் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுகிறார்களாம். சமூக வலைதளங்களை பயன்படுத்தி சலிப்பு ஏற்படுவதாலும் சிலர் அவற்றை பயன்படுத்துவதை நிறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் சுழற்பந்து வீச்சார் ரவீந்திர ஜடேஜா ஒரு நாள் போட்டியின் பந்து வீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
அவர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் சுனில் நரைனுடன் முதலிடத்தில் தொடர்ந்து வருகிறார். இப்பட்டியலில் அஸ்வின் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் முறையே 18 மற்றும் 20ஆவது இடங்களில் உள்ளனர்.
அதேசமயம் சகலதுறை ஆட்டக்காரர் பட்டியலில் ஜடேஜா நான்காவது இடத்தில் உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
அதேபோல் ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோஹ்லி 4ம் இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து இந்தியக் அணித் தலைவர் தோனி 7ம் இடத்தில் உள்ளார்.
வேறு எந்த இந்தி அணி வீரரும் முதல் பத்து இடங்களுக்குள் இல்லை.
ஒஸ்ரியா தலைநகர் வியன்னாவில் பஸ், ரயில்களில் முத்தமிடுவது, போனில் சத்தமாக பேசுவது, சீன உணவுகளை சாப்பிடுவது போன்றவைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
கலை கலாச்சாரத்திற்குப் பெயர் போன வியன்னாவின் பெருமையை காக்கும் வகையில் இந்த உத்தரவை அந்த நாட்டு போக்குவரத்துத்துறை அமுல்படுத்தியுள்ளது.
பொது இடங்களில், பொதுப் போக்குவரத்துகளில் இனிமேல் இப்படி நடந்தால் அது அநாகரீகமாக கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படுமாம்.
ரயில்கள், பேருந்துகளில் ஜோடிகளாகப் போவோர் மிகவும் நாகரீகமாக நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தம்பதிகள் நெருக்கமாக அமருவது, உதட்டு முத்தமிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. வியன்னாவில் பொதுப் போக்குவரத்தை வியனர் லினியன் என்ற நிறுவனம்தான் கவனிக்கிறது. இந்த நிறுவனத்திற்கு நிறையப் புகார்கள் வந்ததாம்.
அதில் பொது போக்குவரத்து வாகனங்களில் முத்தம் கொடுப்போரால் பெரும் சங்கடம் ஏற்படுவதாக மக்கள் குமுறியிருந்தனராம்.
அதேபோல செல்போன்களில் படு சத்தமாக பேசுவதையும் தடை செய்துள்ளனர். இது அக்கம் பக்கத்தில் இருப்போருக்கு இடையூறாக இருப்பதால் இந்த தடை. இனிமேல் மெதுவாகத்தான் செல்போனில் பேச வேண்டுமாம்.
அதேபோல சீனச் சாப்பாடு, பாஸ்ட் புட், கபாப் போன்றவற்றை ரயில்கள், பஸ்களில் வைத்து சாப்பிடுவதற்கும் தடை போட்டு விட்டனர்.
இந்த உத்தரவுகளை கண்காணிக்கவும் தவறு செய்வோரைக் கையும் களவுமாக பிடிப்பதற்கும் ஆட்களை நியமித்துள்ளனராம்.
இதேபோல பலர் திடீரென ஆடைகளை கழற்றிப் போட்டு நிர்வாணமாக காட்சி தருவதும் அங்கு சகஜமாகும். அதற்கும் தடை விதித்துள்ளனர்.
இன்னொரு முறை ஒரு நபர் தான் வளர்த்து வரும் குதிரையுடன் ரயிலில் பயணித்து அத்தனை பேரையும் டென்ஷனாக்கினாராம்.
எத்தனை வழக்குகள் போட்டாலும் அதற்கு நான் அஞ்சமாட்டேன் என்று தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜரான தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2012ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம், தே.மு.தி.க. நலத்திட்ட உதவிகள் வழங்குவது மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக குப்புசாமி என்பவர் அதே ஆண்டு டிசம்பரில் தஞ்சை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்தவழக்கி்ற்காக நேரில் ஆஜராகுமாறு விஜயகாந்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதில் 7 முறை முன் ஜாமீன் பெற்றார். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் விஜயகாந்த்திற்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால். இன்று காலை ஆஜரானார்.
அப்போது நீதிமன்ற வாசலில் காரை விட்டு இறங்கியதும் உற்சாகத்துடன் தொண்டர்களை பார்த்து இரு கைகளை மேலே தூக்கி, பெரிய கும்பிடு போட்டார். பின்பு வழக்கினை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சேதுமாதவன், வரும் நவம்பர் 28ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில் என்மீதும் எனது கட்சியினர் மீதும் இதுவரை 50 முதல் 60 அவதூறு வழக்குகள் தொடுத்துள்ளனர்.அத்தனையும் பொய் வழக்குகள்.
இதன் மூலம் எனக்கு மக்களிடம் நல்ல செல்வாக்கினை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. வழக்குகளை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன். இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் என்றும் தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் பணம் வாங்கிக் கொண்டு ஜோடிகளை அறைகள், கழிவறைகளில் நேரம் செலவிட அனுமதிப்பது அம்பலமாகியுள்ளது. இந்தவிடயம் தொடர்பிலான தகவல் பிரபல தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு தெரியவந்தது.
இதையடுத்து அந்த அலைவரிசையின் செய்தியாளர் மெட்ரோ ரயில் நிலைத்திற்கு சென்று துப்புரவுத் தொழிலாளி ஒருவரிடம் தானும் தனது பெண் நண்பரும் நேரம் செலவிட ஒரு அறை வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த ஊழியர் 500 ரூபா கேட்டுள்ளார் 300 முதல் 500 வரை அளித்தால் ஜோடிகள் தனிமையில் ஒரு மணிநேரம் இருக்க அனுமதிக்கப்படுகிறார்களாம். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு இது குறித்து டெல்லி மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரி அனுஜ் தயால் கூறுகையில்..
தொலைக்காட்சி அலைவரிசையில் வெளியான விவகாரம் குறித்த சிடி எங்கள் நிறுவனத்தின் தலைமை பாதுாப்பு கமிஷனிரடம் அளிக்கப்பட்டுள்ளது. யாராவது தவறு செய்தது உறுதியானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
டெல்லி மெட்ரோ ரயில் நிலைய கழிவறைகள் தனியார் நிறுவனங்களால் பராமரிக்கப்படுகிறது என்றார். முன்னதாக கடந்த ஜூலை மாதம் டெல்லி மெட்ரோ ரயிலில் ஜோடிகள் மிகவும் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் வெளியாகின.
உலகின் மிகச் சிறிய காரை வடிவமைத்துள்ள அமெரிக்கர் அதை சாலையில் ஓட்டிச் சென்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் தன் படைப்பை இடம் பெறச் செய்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த, அஸ்டின் கால்சன் கார் வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். வித்தியாசமான பல கார்களை வடிவமைத்துள்ள இவர் ஏதேனும் புதுமை படைக்க வேண்டும் என்ற ஆவலில் சிறிய ரக காரை வடிவமைத்துள்ளார்.
இதன் பலனாக 25 அங்குல உயரமும் நான்கு அடி நீளமும் உடைய சிறிய ரக காரை வடிவமைத்துள்ளார். மிகச் சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரை சாலையில் ஓட்டுவதற்கு சில முக்கிய அம்சங்கள் தேவைப்பட்டன.
இதன்படி பாதுகாப்பு கண்ணாடி, ஒலிப்பான், மற்றும் சீட் பெல்ட் போன்றவை சேர்க்கப்பட்டன. அதன் பின் சாலை போக்குவரத்து வாகன விதிகளின் படி அனைத்து அம்சங்களும் பூர்த்தி செய்யப்பட்டு தடையில்லா சான்றிதழையும் பெற்றார்.
அரசாங்க ஒப்புதலுடன் தான் வடிவமைத்துள்ள காரை சாலையில் ஓட்டிக் காண்பித்த கால்சன் தன் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் உலகின் மிகச் சிறிய கார் என்ற பெருமையையும் இந்த கார் பெற்றுள்ளது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெற்ற வெற்றியானது பாரியதொரு விடயம் என அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கெதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற ஆட்டக்கணக்கில் கைப்பற்றிய பின்னர் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அநேகமானவர்களுக்கு இந்த தொடர் பாரியதொரு விடயம் இல்லாத போதிலும் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு இந்த தொடர் மிகப் பெரிய விடயம் எனவும் அவர் கூறியுள்ளார்.
சொந்த நாட்டில் நடைபெறவுள்ள குளிர்கால ஆஷஸ் தொடரில் இந்த வெற்றி எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பதை கூற முடியாது எனவும் மைக்கில் கிளார் குறிப்பிட்டுள்ளார்.
ஒருநாள் அணி என்ற வகையில் மகிழ்ச்சியுடன் நாடு திரும்புவதாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் கூறியுள்ளார்.