தொடர்ந்து வேலை செய்ததால் மரணித்த மனிதர்..!

stressஇங்கிலாந்து நாட்டின் கிழக்கு லண்டன் நகரில் உள்ள அமெரிக்க வங்கியில் பணியாற்றி வந்தவர் மோரிட்ச் எர்ஹார்ட். 21 வயதான இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். கிழக்கு லண்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தனது நண்பர்களுடன் பிளாட்டில் வாடகைக்கு தங்கி வங்கியில் பணியாற்றினார்.

நேற்று இவர் குளியலறையில் இறந்து கிடப்பதை கண்ட நண்பர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், மோரிட்ச் எர்ஹார்ட் உள்பட சுமார் 300 பேர் இதே போல் அப்பகுதியில் உள்ள பல்வேறு வங்கிகளில் பணிபுரிந்தனர். படிப்பை முடித்து விட்டு புதிதாக பணியில் சேர்ந்திருந்தனர். மோரிட்ச் எர்ஹார்ட் நள்ளிரவு 3 மணி வரை விடாமல் வேலை செய்வார் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

இறந்து கிடப்பதற்கு 3தினங்களுக்கு முன்புதான் கடைசியாக அவரது அறை நண்பர்கள் அவரை பார்த்துள்ளனர். அதன்பின் அவரை இறந்து கிடந்த நிலையில் தான் கண்டனர். வங்கியில் நடத்திய விசாரணையில் விடாமல் இரவு பகலாக 72 மணிநேரம் மோரிட்ச் எர்ஹார்ட் பணிபுரிந்து விட்டு நள்ளிரவு அறைக்கு திரும்பியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், சாவுக்கான சரியான காரணம் தெரியவில்லை.

ஆனால் தொடர்ந்து வேலை செய்ததால் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும்,மோரிட்ச் எர்ஹார்ட்டின் வங்கிக்கு அனுப்பிய இமெயிலில், எனது குடும்பத்தினர் என்னிடம் மிகவும் எதிர்பார்க்கின்றனர். எனவே விடாமல் கடுமையாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் நச்சுப்பொருள் தாக்குதலால் 213 பேர் துடிதுடித்துப்பலி..!

syriyaசிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அது கலவரமாக மாறி 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

போராட்டக்காரர்களில் சிலர் அண்டை நாடுகளில் இருந்து போராயுதங்களை வாங்கி ராணுவத்துடன் போரிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். அதை அதிபர் ஆசாத் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து ராணுவத்தை ஏவி பொதுமக்களை கொன்று குவித்து வருகிறார்.

ராணுவம் நடத்தி வரும் வான் வழி, ஏவுகணை மற்றும் குண்டு வீச்சு தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். உயிர் பிழைத்த பலர் உடல் உறுப்புகள் சிதைந்து ஊனமுற்றவர்களாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிரியாவை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான துருக்கி, லெபனானில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. சபை கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

29-வது மாதத்தை எட்டியுள்ள இந்த போராட்டத்தில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள அய்ன் டர்மா, சமால்கா, ஜோபர் ஆகிய பகுதிகளில் அதிபரின் படைகள் ரசாயன குண்டுகளை வீசி பயங்கர தாக்குதலில் ஈடுபட்டன.

சுவாசத்தின் மூலம் நுரையீரலுக்குள் ஊடுருவி நரம்பு மண்டலத்தை முற்றிலுமாக செயலிழக்க வைக்கும் தடை செய்யப்பட்ட நச்சுப்பொருள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது.

இதன் விளைவாக, குழந்தைகள், பெண்கள் உள்பட 213 பேர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களின் உடல் உறுப்புகள் மிகவும் சிதைந்து போய் இருப்பதாகவும் பலரது கருவிழிகள் உருகி வழிந்த நிலையிலும் பலரது வாயிலிருந்து நுரை தள்ளியபடி உள்ளதாகவும் ஆஸ்பத்திரி பணியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் நடைபெற்ற போது அனைவரும் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். உள்ளூர் நேரப்படி, இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக அப்பகுதியில் வசிக்கும் சிலர் கூறினர்.

மக்களை கொல்ல அதிபர் பஷீர் அல் ஆசாத்தின் படைகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக உலக நாடுகள் குற்றம் சாட்டி வந்த போதிலும், இதனை ராணுவம் தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

பூனைக்கு இரத்தம் கொடுத்து உயிரைக் காப்பாற்றிய நாய்..!

dogவிஷம் சாப்பிட்டதால் உயிருக்கு போராடிய பூனையை காப்பாற்ற நாயின் ரத்தத்தை ஏற்றி நியூசிலாந்து வைத்தியர்கள் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

நியூசிலாந்தில் உள்ள தவுரங்கா பகுதியை சேர்ந்த கிம் எட்வர்ட்ஸ் என்பவர் வீட்டில் எலி தொல்லையை சகித்துக் கொள்ள முடியாமல் கடந்த வெள்ளிக்கிழமை, வீட்டை சுற்றிலும் எலி விஷத்தை போட்டு வைத்திருந்தார்.

மீனுக்கு விரித்த வலையில் யானை விழுந்த கதையாக எலிக்கு வைத்த விஷத்தை அவர் மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்த ரோரி என்ற பூனை தின்று விட்டது.

சற்று நேரத்தில் விஷத்தின் வீரியம் ரோரியின் ரத்தத்தில் கலந்ததால் பயங்கரமான அவலக்குரல் எழுப்பியபடி அது துள்ளித் துடித்தது. பூனையில் செய்கையை கண்டு பதறிப்போன கிம் எட்வர்ட்ஸ், ரோரியை காரில் தூக்கிப்போட்டுக் கொண்டு கால்நடை மருத்துவரிடம் விரைந்தார்.

ரோரியின் ரத்தத்தில் விஷத்தன்மை அதிகரித்து விட்டதாக கூறிய டாக்டர், அதை காப்பாற்ற வேறு வழியே இல்லை என கைவிரித்து விட்டார்.

´எப்படியாவது ரோரியை காப்பாற்றுங்கள்´ என்று கதறிய எட்வர்ட்சின் கெஞ்சலை புறக்கணிக்க முடியாத வைத்தியர் கேட் ஹெல்லெர், உடனடியாக தனது தோழி மிச்சேல் விட்மோருக்கு போன் செய்தார்.

ரோரியை கட்டிலில் படுக்க வைத்து உடலில் இருந்த விஷத்தன்மை கலந்த ரத்தத்தை ´டிரான்ஸ்ஃபியூஷன்´ முறையில் வெளியேற்றி, அதே வேளையில் தோழி மிச்சேல் விட்மோரின் செல்ல நாயான மேக்கி எனும் ´லாப்ரடார்´ இன நாயின் ரத்தத்தை ரோரியின் உடலில் பாய்ச்சினார்.

உயிரியல் கோட்பாடுகளின்படி, நாயும் பூனையும் வெவ்வேறு விலங்கின குடும்ப வகையை சேர்ந்தவை. நாய் வகைகளில் கூட மனிதர்களுக்கு உள்ளது போல் ரத்த பிரிவுகள் (குரூப்கள்) உள்ளன.

எனினும், ஆபத்துக்கு பாவமில்லை என்று தீர்மானித்து அரியதொரு புதிய முயற்சியாக நாயின் ரத்தத்தை பூனைக்கு ஏற்றி அதை வாழ்விக்க வைத்தியர் கேட் ஹெல்லர் முயற்சித்தார்.

அதிர்ஷ்டவசமாக, உயிர் பிழைத்துக் கொண்ட ரோரி, தற்போது நல்ல நிலையில் ஓடியாடி உற்சாகமாக உள்ளதாக எட்வர்ட்ஸ் கூறுகிறார்.

´நாயை போல் அது குரைப்பதில்லை… படித்துக் கொண்டிருக்கும் பேப்பரை அது பறிப்பதுமில்லை´ என வேடிக்கையுடன் அவர் குறிப்பிடுகிறார்.

இந்தோனேசியாவில் மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை..!

indoஇந்தோனேசியாவில் உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கல்வி அதிகாரிகளின் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தோனேசியாவின் உள்ள சுமத்ரா தீவில் அமைந்துள்ள பிரபுமுலிக் மாவட்டத்தில் உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் கன்னித்தன்மை பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக அம்மாகாண கல்வி அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து கல்வி அதிகாரி முகமது ரஷீத் கூறுகையில், திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் உறவை தடுப்பதற்கும், விபசாரத்தால் மாணவிகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காகவும் இது போன்ற திட்டம் ஒன்றை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது என்று தெரிவித்தார்.

ஆனால் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என கடும் சர்ச்சை எழுந்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்களிலும் ஏராளமானோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை தெரிவித்திருந்தனர். இதனால் இந்த உத்தரவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. குழந்தைகள் மீது வன்முறையை திணிப்பதும், அவர்களை அச்சுறுத்துவதுமான இது போன்ற அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என்றும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாகாண கல்வி அதிகாரி விடோடோ கூறுகையில், மாணவிகளுக்கு தேவையான எவ்வளவோ நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கும் போது, இது போன்ற பரிசோதனைகள் தேவையற்றது. மேலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்றார்.

இதுகுறித்து தேசிய குழந்தைகள் உரிமை ஆணையர் ஏரிஸ் மெர்டகா, ஜகார்தாவில் அளித்த பேட்டியில், மாணவிகளுக்கு கன்னித்தன்மை இழப்பு என்பது செக்ஸ் நடவடிக்கைகளால் மட்டுமல்ல, விளையாட்டு, உடல் நலக் குறைவு போன்றவற்றால் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகளின் இந்த திட்டம் கடுமையான கண்டனத்திற்குரியதாகும் என்று தெரிவித்துள்ளார்.

தனது வளர்ப்புத் தந்தை மீது சாய்சிரிஷா பாலியல் புகார்..!

saiசாய்சிரிஷா தெலுங்கில் பிரபல நடிகையாக உள்ளார். ‘லவ் அட் டாக்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் பல புது படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். இவரது தந்தை பிரசாத் ராவ் கார் சாரதியாக உள்ளார்.

இரு மாதங்களுக்கு சாய்சிரிஷா திடீரென்று வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து பிரசாத்ராவ் பஞ்சாரா ஹில்ஸ் பொலிசில் புகார் செய்தார். எனது மகள் படப்பிடிப்புக்காக வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடிய வில்லை. கையடக்கத் தொலைபேசியும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.

பொலிசார் வழக்குப்பதிவு செய்து சாய் சிரிஷாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சாய்சிரிஷா தெலுங்கு தொலைக்காட்சி அலைவரிவை ஒன்றுக்கு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது….

பிரசாத்ராவ் எனக்கு வளர்ப்பு தந்தை. என் தாய் வீட்டில் இல்லாதபோது அவர் தவறாக நடக்க முயற்சி செய்தார். ஆசைக்கு இணைங்குமாறு வற்புறுத்தினார்.

செக்சுக்கு இணங்காவிட்டால் கொன்று விடுவதாக மிரட்டவும் செய்தார். என் தாய் பொருளாதார ரீதியாக அவரை சார்ந்து வாழ வேண்டி இருந்தால் என்னால் பொலிசில் புகார் செய்ய முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து வளர்ப்பு தந்தை மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

தனுஷ் பற்றி போனி கபூர் சொல்லும் யாருக்கும் தெரியாத புது தகவல்..!

danushமுன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் பற்றி பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார் ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே, தனுஷின் காதல் கொண்டேன் படத்தைப் பார்த்து அவரை இந்தியில் அறிமுகப்படுத்த விரும்பியதாகத் தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர்.

சமீபத்தில் தனுஷ் நடித்து வெளியான ராஞ்சனா இந்திப்படம் வசூலைக் குவித்தது.

அப்படம் பற்றி திரைத்துறையினைச் சேர்ந்த பலரும் தனுஷை வாழ்த்திக் கொண்டிருக்க போனி கபூரோ வேறு விதமாக தனுஷைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்.

பாலிவுட்டில் மிஸ்டர். இந்தியா, புஹார், வாட்டட் போன்ற வசூல் சாதனை படைத்த படங்களைத் தயாரித்தவர் போனிகபூர்.

இவர் நம்மூர் ஸ்ரீதேவியின் கணவரும் ஆவார்.

இவர் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் தனுஷ் பற்றி பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

அதில், தனுஷின் இரண்டாவது படமான காதல் கொண்டேன் படத்தை தான் மிகவும் ரசித்துப் பார்த்ததாகவும், அப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அப்பட விஷயமாக தான் தனுஷை சந்தித்து டோக்கன் அட்வான்ஸாக ஒரு லட்ச ரூபாய் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பின்பு, இருவருமே தங்களது படங்களில் பிசியாகிப் போனதால் பட வேலைகளைத் தொடர முடியாமல் போனதாகவும், இல்லையேல் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னரே தனுஷ் இந்தியில் அறிமுகமாகியிருப்பார் என கூறியுள்ளார் போனி.

பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த ராகுல் டிராவிட் ஆதரவு..!

cricketT20 கிரிக்கெட் போட்டியால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை இழந்து வருகிறது. டெஸ்ட் போட்டிக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை அதிகரிக்க செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பகல்-இரவாக (மின்னொளியில்) டெஸ்ட் போட்டியை நடத்த ஐ.சி.சி. கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. ஆனால் சில நடைமுறை சிக்கல்களை காரணம் காட்டி, எந்த அணியும் பகல்-இரவாக டெஸ்ட் போட்டியை நடத்த முன்வரவில்லை.

இந்த நிலையில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று இந்திய முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் வலியுறுத்தியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும் போது தெரிவித்ததாவது,

டெஸ்ட் கிரிக்கெட்டை பகல்-இரவு போட்டியாக நடத்த திறந்த மனதுடன் முயற்சிக்க வேண்டும். மின்னொளியின் கீழ் டெஸ்ட் போட்டி நடப்பதால், அதன் பாரம்பரிய தன்மைக்கு எந்த அச்சுறுதலும் வராது.

இந்த போட்டிகளில் ‘பிங்க்’ நிற பந்துகளை பயன்படுத்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ‘பிங்க்’ நிற பந்துகளில் விளையாடுகையில் பிரச்சினை இருப்பதாக ஒரு தரப்பினர் கூறுவதை அறிவேன்.‘பிங்க்’ நிற பந்தில் விளையாடிய அனுபவம் எனக்கு கொஞ்சம் உண்டு. எம்.சி.சி. அணிக்காக பிங்க் நிற பந்துகளில் ஆடிய போது, அதை எதிர்கொண்டு ஆடுவதில் எந்த பிரச்சினையும் இருப்பது போல் தெரியவில்லை.

இதே போல் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் விளையாடும் போது பனியின் தாக்கம் இருக்கலாம். சரியான காலத்தில், சரியான இடத்தில் போட்டி அட்டவணையை அமைத்தால் இரவில் பனிப்பொழிவு பிரச்சினையை தவிர்த்து விடலாம். ரசிகர்களின் கூட்டத்தை ஈர்க்க பகல்-இரவு டெஸ்ட் போட்டி அவசியமாகும்.

காலத்திற்கு தகுந்தாற் போல் மாற்றங்கள் என்பது 20 ஓவர் கிரிக்கெட்டை மட்டும் பிரபலப்படுத்த வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் மாற்றம் தேவை. இங்கிலாந்தில் நீண்ட காலம் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கூட சில மாற்றங்கள் வந்திருக்கிறது.

முன்பு போல் இல்லாமல் ஆட்டம் பாதிக்கப்படுவதை தவிர்க்க விம்பிள்டனில் மேற்கூரை கொண்ட ஸ்டேடியம் பயன்படுத்தப்படுவதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

எனவே பகல்-இரவு டெஸ்ட் போட்டியை சீக்கிரம் நடத்துவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என டிராவிட் கூறினார்.

சுற்றுப்பயணங்களின் போது, 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்காக, டெஸ்ட் எண்ணிக்கையை குறைத்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடராக நடத்தப்படுவதற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

சர்வதேச போட்டிகளிலிருந்து முன்னணி காற்பந்து வீரர் க்லோஸ் ஓய்வு..!

footballஜெர்மனியின் முன்னணி கால்பந்து வீரராக விளங்குபவர் மிரோஸ்லாவ் க்லோஸ்.

இவர் வரும் 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடக்க இருக்கும் உலககோப்பை கால்பந்து போட்டிக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தேசியப் போட்டிகளில் பங்கேற்பதற்கும் இதே முடிவு எடுக்கப்படலாம் என்றும் அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். லாசியோ அணியின் நட்சத்திர வீரரான க்லோஸ் (வயது 35), ஜெர்மனிக்காக 128 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இதுவரை அவர் அடித்துள்ள கோல்களின் மொத்த எண்ணிக்கை 67 ஆகும். இன்னும் ஒரு கோல் அடித்தால் அவர் சக நாட்டவரான மியுல்லரின் சாதனையை சமன் செய்ய முடியும்.

மேலும், இந்த 67 கோல்களில் 14 உலகக் கோப்பை (3) போட்டிகளில் அடித்ததாகும். வரும் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் இன்னும் ஒரு கோல் அடித்தால், பிரேசில் வீரர் ரொனால்டோவின் சாதனையான 15 என்ற எண்ணிக்கையை சமன் செய்வார்.

இந்த இரண்டு சாதனைகளை சமன் செய்வதுடன் மிரோஸ்லாவ் ஒய்வு பெறக்கூடும் என்றபோதிலும், ஜெர்மனிக்காக கோப்பையை வெல்வதே தனது லட்சியம் என்று அவர் தெரிவித்தார்.

லாசியோ அணியுடனான ஒப்பந்தம் இந்த வருடத்துடன் முடிவதால், பண்டஸ்லிகா அணியுடனான தனது ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் எண்ணத்திலும் மிரோஸ்லாவ் உள்ளார்.

மூளையின் செயல்திறனை மட்டுப்படுத்தி, அறிவாற்றலை இழக்கச் செய்யும் நோய்..!

brainமூளையின் செயல்திறனை மட்டுப்படுத்தி, அறிவாற்றலை இழக்கச் செய்யும் ஆல்சைமர் நோயினால் 2006-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகளாவிய அளவில் சுமார் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

2050ம் ஆண்டிற்குள் சுமார் 12 கோடி பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

ஆரம்பத்தில் சிறிய நினைவாற்றல் இழப்பு என்ற நிலையில் தொடங்கும் ஆல்சைமர் நோய், நாளடைவில் மனக்குழப்பம், மனச்சிதைவு, நீண்டகால நினைவாற்றல் இழப்பாக உருமாறி இறுதிகட்டத்தில் புலன் உணர்வுகளை குறைத்து இறப்பை ஏற்படுத்திவிடும்.

இந்நோய்க்கு முழு நிவாரணம் அளிக்கக்கூடிய மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்நோய் தொடர்பான நிறைய ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்நோய் தொடர்பாக நடத்திய ஆய்வில், குடிநீர் மற்றும் உணவு வகைகளில் அதிக அளவில் காணப்படும் தாமிரம் (செம்பு) மூளை மண்டலத்தில் காரைப் படலத்தை ஏற்படுத்தி ஆல்சைமர் நோயை தீவிரப்படுத்துகிறது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஈரல், சாக்லேட், பருப்பு, எள், சிப்பி மற்றும் கனவா மீனில் தாமிர சத்து அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நரம்பு மண்டல செயல்பாடு, எலும்பு வளர்ச்சி, இயங்கு தசைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பி ஆகியவற்றில் தாமிரத்தின் பங்கு முக்கியமானதாக இருந்தாலும், நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவு மற்றும் குடிநீர் நமது அறிவாற்றலுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் ரஷீத் டியென் குறிப்பிட்டுள்ளார்.

ஜகார்த்தா உடன்பாட்டில் இலங்கை கைச்சாத்து..!

jagartaமனிதர்களின் சந்தேகத்துக்கு இடமான நடமாட்டங்களை தடுப்பது தொடர்பான கைது செய்தல், தடுத்து வைத்தல் மற்றும் சட்ட நடவடிக்கை எடுத்தல் போன்ற செயற்பாடுகளை வலுப்படுத்துவம் வகையிலான ஜகார்த்தா கோட்பாட்டை இலங்கை உள்ளிட்ட 13 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இடம்பெறும் இது தொடர்பான மாநாட்டில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் இலங்கை சார்பில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துக் கொண்டிருந்தார்.

இதன் போது சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடுகின்றவர்களை உடனடியாக கைது செய்யவும், அவர்களை நீதிமன்றத்தின் முன்லைப்படுத்தும் முன்னர் தடுத்து வைக்கவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் வலு செய்யும் வகையிலான உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

இதில் இலங்கை, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட 14 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன.

இதேபோன்று இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகள் ஆட்கடத்தல் செயற்பாடுகளுக்கு உள்ளாக்கப்படாமை தொடர்பான பிராந்திய உடன்படிக்கை ஒன்றும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ்தீவு அருகே மற்றொரு படகு மூழ்கியது: 106 பேர் உயிருடன் மீட்பு..!

christmasஅவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத மாகப் பயணித்த மற்றுமொரு படகு நேற்றுக் கடலில் மூழ்கியுள்ளது. இப் படகிலிருந்து 106 புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து 120 கிலோ மீற்றர் கடல் மைல் தொலைவிலேயே இப்படகு மூழ்கியிருப்பதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகொன்று மூழ்குவதாகக் கிடைத்த தகவலையடுத்து கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் சுங்கப் பிரிவினரின் விமானங்களும், அவுஸ்திரேலிய கடற்படையினரின் கப்பலொன்றும் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

படகில் பயணித்தவர்களில் இருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன், படகிலிருந்தவர்களை மீட்பதற்கு 8 ஹெலிகொப்டர்களும், கடற்படையினரின் இரண்டு படகுகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய கரையோரப் பாதுகாப்பு அதிகாரசபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவிலிருந்து பயணித்த படகொன்றே இவ்வாறு மூழ்கியிலிருக்கலாமென ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு இவ்வருடத்தில் மாத்திரம் 13,000ற்கும் அதிகமானவர்கள் சட்டவிரோதமாகப் படகுகளில் வந்திருப்பதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி (படங்கள்)..!

தமிழ்தூது தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு நிகழ்வினை வவுனியாவில் கொண்டாடுவதற்கான முன்னோடி நிகழ்வாக வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 20.8.2013 இடம்பெற்ற போது கலாநிதி அகளங்கன் உரை நிகழ்த்துவதையும் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களையும் படத்தில் காணலாம்.

vavuniya

vavuniya1

சாதிக்க துடிக்கும் அஷ்வின்!!

ashwin

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அசத்த வேண்டுமென தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், இதுவரையிலும் 16 டெஸ்ட்டில் 92 விக்கெட், 58 ஒருநாள் போட்டிகளில் 80 விக்கெட் எடுத்துள்ளார்.

இந்நிலையில் இவர் கடைசியாக பங்கேற்ற மேற்கிந்திய தீவுகளுடனான முத்தரப்பு தொடரில் 5 போட்டிகளில் 6 விக்கெட் தான் கைப்பற்றினார்.
இதுகுறித்து அஷ்வின் கூறுகையில் தற்போது இந்திய போட்டிகளில் பங்கு பெறாததால் ஓய்வு கிடைத்துள்ளது.

இதனை பயன்படுத்து எனது பந்துவீச்சு திறமையை வளர்க்க முயற்சித்து வருகிறேன். தற்போது பந்தை பிட்ச் செய்யும் நீளத்தை குறைத்து வேகமாக செல்லும் வகையில் பயிற்சி எடுத்து எடுகிறேன். அத்துடன் வலது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு கேரம் முறையில் பந்துவீச முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கஞ்சா வைத்திருந்த இருவர் பொலிஸாரினால் கைது!!

kanja

வவுனியாவில் இருவேறு பிரதேசங்களில் மூவாயிரம் கிராம் கஞ்சா போதைப் பொருள் வைத்திருந்த இருவரைப் பொலிஸார் கடந்த வாரம் கைது செய்து வவுனியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர் என யாழ். பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்

யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

வவுனியா வேப்பங்குளம் பிரதேசத்தில் ஆயிரம் கிராம் கஞ்சா போதைப் பொருளை வைத்திருந்த நெளுக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேபோல் கடந்த 14ம் திகதி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் இரண்டாயிரம் கிராம் போதைப் பொருளை வைத்திருந்த வவுனியா புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த நபரொருவரைக் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரையும் பொலிஸார் வவுனியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர் என்றார்.

ஆபாச நடனத்தை ரசித்து பார்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்!!

pakistan

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேர் ஆபாச நடனம் பார்த்து சிக்கியுள்ளனர். பாகிஸ்தான் அணி நேற்றிரவு சிம்பாவே புறப்பட்டது.

இந்நிலையில் அணி வீரர்களான ஜுனைத் கான், அன்வர் அலி மற்றும் அலி ஆசாத் லாகூரில் உள்ள தியேட்டர் ஒன்றில் ஆபாச நடனம் பார்த்தது ஜியோ நியூஸ் சனல் கமராவில் பதிவாகியுள்ளது.

தியேட்டர்களில் நடக்கும் இந்த ஷோக்களில் நடிகைகள் மேடையில் கவர்ச்சியாக ஆடுவார்கள். நேற்று இரவு சிம்பாவே புறப்படும் முன்பு தான் அவர்கள் இந்த ஆபாச நடனத்தை பார்த்து சிக்கியுள்ளனர்.

நடனம் ஆடிய ஒரு பெண் கூறுகையில் ஜுனைத் நடனத்தை பார்க்க வந்தது மிகவும் மகிழ்ச்சி. அவர் தான் எங்களில் பெரும்பாலானோருக்கு பிடித்த வீரர் என்று தெரிவித்துள்ளார்.

இணையத்தில் என் பெயரில் மோசடி : நடிகர் கார்த்தி ஆவேசம்..!!

karthi

இணையத்தில் தனது பெயரில் மோசடிகள் நடப்பதாக நடிகர் கார்த்தி கூறினார். பிரியாணி பாடல்களை திருடி நெட்டில் யாரோ வெளியிட்டு விட்டதாக சமீபத்தில் தான் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு போய் புகார் அளித்து விட்டு வந்தார். தற்போது சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டரிலும் தனது பெயரில் போலி கணக்குகள் துவங்கப்பட்டு உள்ளதாக வருத்தப்பட்டார்.

நான் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் எதிலும் இல்லை. ஆனாலும் என் பெயரில் நிறைய போலி கணக்குகள் உள்ளன. இந்த போலிகளை நம்பி ரசிகர்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

என் பெயரை பயன்படுத்தி பணம் வசூலிப்பதாகவும் ரசிகர் ஒருவர் மூலம் தெரிய வந்தது. இதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அகரம் போன்ற அமைப்புகளுக்கு நான் நிதி திரட்டும் பணிகள் எதையும் செய்யவில்லை. யாரோ என் பெயரை தவறாக பயன்படுத்தி மோசடி செய்வது தெரிகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கார்த்தி கூறினார்.

பிரியாணி படத்தின் பாடல்களை வருகிற 31ம் திகதி விழா நடத்தி வெளியிட கார்த்தியும் இயக்குனர் வெங்கட்பிரபுவும் திட்டமிட்டனர். ஆனால் பாடல்கள் இணையத்தில் வெளியாகி விட்டதால் இன்றே பாடல் சி.டி.க்கள் கடைகளில் விற்பனைக்கு வந்தன.