ஈராக்கில் 17 கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்..!

hangஈராக் நாட்டின் சிறைக்கைதிகளில் 17 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக நேற்று அந்நாட்டின் அரசு செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. மரண தண்டனையை ரத்து செய்யுமாறு சர்வதேச மனித உரிமைக் கழகங்களின் தொடர் வேண்டுதலையும் ஒதுக்கிவிட்டு ஈராக் இந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

அரசு இணையதளத்தில் நீதித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈராக் நாட்டவர் 15 பேருக்கும், எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. மக்களுக்கு எதிரான தீவிரவாதக் குற்றங்களுக்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டதாக நீதித்துறை குறிப்பிட்டுள்ளது.

மற்றொரு குற்றவாளியும் குறிப்பிடப்படாத குற்றங்களுக்காக தூக்கு தண்டனையைப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் இருவர் பெண்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்த செய்தியில் தண்டனை நிறைவேற்றப்பட்ட காலத்தினைப் பற்றிய தகவல் தரப்படவில்லை. இந்தத் தீர்ப்பினையும் சேர்த்து இதுவரை, இந்த வருடத்தில் மட்டும் மொத்தம் 67 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2003 ஆம் ஆண்டில்,ஈராக்கின் அதிபர் சதாம் ஹுசைன் அமெரிக்க படைகளின் உதவியுடன் பதவி இறக்கம் செய்யப்பட்டபின், அந்நாட்டில் மரணதண்டனைகள் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால், 2004ஆம் ஆண்டு மாற்று அரசாங்கம் அமைந்ததிலிருந்து மீண்டும் இத்தகைய தீர்ப்புகளை நிறைவேற்றுவதில் ஈராக் அரசு தீவிரம் காட்டி வருகின்றது.

லண்டனை மையமாகக் கொண்டு இயங்கிவரும் பொது மன்னிப்பு சபையின் கருத்துப்படி, மரண தண்டனைகளை நிறைவேற்றுவதில் ஈராக் உலக அளவில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. சீனா, ஈரான், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கின்றன. குற்றவாளிகளுக்கு நியாமான தீர்ப்பு வழங்கப்படுகின்றதா என்பது குறித்து அமெரிக்காவின் மனித உரிமைக் கழகமும் கேள்வி எழுப்பியுள்ளது.

பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹாக் செய்த பாலஸ்தீனர்..!

markபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கத்தை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் ஹாக் செய்துள்ளார். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணர் கலீல் ஷ்ரியாதே. அவர் பேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவை தொடர்பு கொண்டு புகார் கூறினார்.

அதாவது பேஸ்புக்கில் யாருடைய கணக்கின் பக்கத்திலும்(wall) யார் வேண்டுமானாலும் எழுதும் வகையில் உள்ளது. இது பாதுகாப்பானது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அதை பேஸ்புக் குழு கண்டுகொள்ளவில்லை. வழக்கமாக பேஸ்புக் பாதுகாப்பில் ஏதாவது பிரச்சனை(bug) இருப்பதை கண்டுபிடித்து தெரிவித்தால் பரிசு அளிப்பார்கள். ஆனால் அவர்கள் கலீலிடம் இப்படி ஒரு பிரச்சனையே இல்லை என்று தெரிவித்துவிட்டனர்.

இதனால் கடுப்பான கலீல் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கதை ஹாக் செய்து அதில் புகாரை தெரிவித்துள்ளார்.ஜக்கர்பர்கின் பக்கத்தில்(wall) கலீல் கூறியிருப்பதாவது, என் பெயர் கலீல் ஷ்ரியாதே. நான் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸில் பி.ஏ. முடித்துள்ளேன். உங்களின்(www.facebook.com)இணையதளத்தில் ஒரு பக்கை(bug) கண்டுபிடித்துள்ளேன்.

அது குறித்து உங்களிடம் புகார் தெரிவிக்க விரும்புகிறேன்.இந்த பக்(bug) மூலம் ஒரு பேஸ்புக் யூசர் மற்றொரு யூசரின் பக்கத்தில்(wall)எழுத முடிகிறது. நான் சாரா குடின் என்பவரின் பக்கத்தில் எழுதியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தில் வாழும் கலீலுக்கு ஜக்கர்பர்க்குடன் ஹார்வர்டில் படித்த சாராவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

டாப்ஸிக்கு பிடித்தது எது?

tapseeநான் பேட்மின்டனின் தீவிர ரசிகை என்கிறார் நடிகை டாப்ஸி.

பெரும்பாலான நடிகர், நடிகைகள் கிரிக்கெட் ரசிகர்களாக இருப்பார்கள்.

இதில் காஜல், திவ்யா ஆகிய இருவரும் பிரபல வீரர்கள் பங்கேற்கும் டென்னிஸ் விளையாட்டை ரசிப்பதற்காக சமீபத்தில் லண்டன் சென்று திரும்பினர்.

ஆனால் இவர்களில் சற்று வித்தியாசமானவர் டாப்ஸி.

இவர் பேட்மின்டனின் தீவிர ரசிகையாம்.

சென்ற வாரம் ஐதராபாத்தில் வீராங்கனை சாய்னா தலைமையில் பேட்மின்டன் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியினை நேரில் கண்டு ரசித்ததுடன் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டாராம் டாப்ஸி.

இந்தி வரைக்கும் பரவிய அமலாபாலின் புகழ்..!

amalaபாலிவுட்டில் புகழ் பரவியதால் அளவிட முடியாத மகிழ்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறாராம் நடிகை அமலாபால்.

தமிழில் மைனா படத்தில் அடைந்த வெற்றியை தொடர்ந்து விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார் அமலாபால்.

இவர் விஜய்யுடன் இணைந்து நடித்த தலைவா படமானது தமிழகத்தில் பல சிக்கல்களை சந்தித்து தற்போது வெளியாவற்கு தயாராகிவிட்டது.

மேலும் அமலாபால் தெலுங்கில் நடித்த பெஜவாடு ரவுடிலு என்ற படம் ஆந்திராவில் படு ஹிட்டானது.

இதனை அப்படியே இந்தியில் டப் செய்து வெளியிட்டார்களாம். போன இடத்திலும் ரசிகர்களின் ஆதரவை அள்ளியுள்ளது பெஜவாடு.

இந்தி வரைக்கும் நம்ம புகழ் பரவிடுச்சே என்பதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறாராம் அமலாபால்.

மீண்டும் பரபரப்பை உண்டாக்கும் ஆர்யா-நயன்தாரா திருமணக் கோல படங்கள்..!

nayantharaஏ.ஆர்.முருகதாஸ், ஃபோக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரிக்கும் ராஜா ராணி படத்தின் விளம்பர ஸ்டண்டுகள் நயன்தாரா, ஆர்யா திருமணம் பற்றியதாகவே தொடர்ந்து இருக்கிறது.

ஆர்யாவும் நயன்தாராவும் காதலிக்கிறார்கள் என்ற ஒரு கிசுகிசு சமாச்சாரத்தை எடுத்துக் கொண்டு இந்த விளம்பரங்களை வடிவமைத்து வருகிறார் படத்தின் இயக்குனர் அட்லீ.

கடந்த சில சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் ஆர்யா, நயன்தாரா மேடையில் திருமணம் செய்யப்போகிறார்கள் என்று விளம்பரம் செய்து அதையே படத்தின் புரமோஷனாக்கினார்கள்.

பிறகு மேடையில் இருவரையும் அழைத்து ராஜாராணி படத்தில் இருவரும் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள் என்று ரசிகர்களுக்கு ஆளுக்கொரு பல்பு கொடுத்தார்கள்.

படத்தின் ஆடியோ வருகிற 23ந் திகதி நடக்க இருக்கிறது. அதற்காக இன்று பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஆர்யாவும், நயன்தாராவும் திருமண கோலத்தில் வருவது போன்ற படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் கிறிஸ்தவ மணப்பெண் போல அவர் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த விளம்பரம் எல்லா விளம்பரத்தையும்போல சாதாரணமாகத்தான் கவனிக்கப்பட்டிருக்கும். இது தொடர்பாக இயக்குனர் அட்லி மீடியாக்களுக்கு அனுப்பி உள்ள மெயிலில் இதற்கான விளக்கத்தை கொடுத்து கவனிக்க வைத்திருக்கிறார்.

அதில் “வேண்டுமென்றேதான் இந்த படத்துடன் விளம்பரம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்பு செய்தது திருமண பத்திரிக்கை என்றால் இது திருமண ஆல்பம்” என்று கூறியிருக்கிறார். போகிற போக்கை பார்த்தால் ஆடியோ வெளியீட்டில் நிஜ திருமணத்தை நடத்தி விடுவார்கள் போலிருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் ஆடியோ வெளியீட்டு விழாவில் நயன்தாரா, ஆர்யாவுடனான காதலை உறுதி செய்யப்போகிறார். அல்லது பகிரங்கமாக மறுக்கப் போகிறார் என்பது மட்டும் உறுதி.

நவநீதம்பிள்ளையின் யாழ். வருகை: காணாமல்போன உறவுகளின் ஒன்றியம் போராட்டம்..!

navaneethamஜ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் யாழ்.மாவட்டத்திற்கு எதிர்வரும் 27ம் திகதி வருகைதரவுள்ள நிலையில் ஐ.நாடுகள் சபையின் யாழ்.அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக காணாமல்போனவர்களின் உறவுகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2009ம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டும், யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயமும் காணாமல்போன உறவுகள் எங்கிருக்கின்றார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது, என வெளிப்படுத்த வலியுறுத்தியும், யுத்தத்தின் பின்னர் வடக்கு மாகாணத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில ஆக்கிரமிப்பு மற்றும் மீள்குடியேற்றப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் எனக்கோரியும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் 27ம் திகதி காலை 9மணி தொடக்கம் 11மணிவரையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியவாறு மிகவும் அமைதியான முறையில் போராட்டம் நடைபெறவுள்ளதுடன், போராட்டத்தின் நிறைவில் மனிதவுரிமைகள் ஆணையாளரை 15பேர் கொண்ட குழுவினர் சந்திக்கவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,

அதன்போது 13அம்சக் கோரிக்கையடங்கிய மகஜர் கையளிக்கப்படவுள்ளதாகவும், தெரிவிக்கப்படுவதுடன், மகஜர் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் போராட்டத்திற்கு மனிதவுரிமை செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கும் பொது அமைப்புக்கள், மற்றும் சமுக அமைப்புக்கள் ஆதரவு வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோன்று எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலிருந்து 50 பேர் கொண்ட குழுவினர் கொழும்பு சென்று அங்கும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் எந்தப் பகுதிக்கும் சென்றுவர நவநீதம்பிள்ளைக்கு அனுமதி..!

navaneethamஇலங்கை வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளைக்கு சுதந்திரமாக நாட்டின் எப்பிரதேசத்திற்கும் சென்றுவர வாய்ப்பளிக்கப்படும்.

இலங்கை தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நேரில் உண்மை நிலைமையை அறிய அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்தார்.

நாட்டிலிருந்து திரும்பிச் செல்வதற்கு முன்னர் இங்குள்ள உண்மை நிலை தொடர்பாக நியாயமான கருத்தை அவர் வெளியிடுவார் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐ. ம. சு. மு. ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் குறித்தும் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் எவ்வாறு பதிலளிக்கும் எனவும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :-

ஐ. நா. உயர் பதவி வகிக்கும் தலைவியான நவநீதம்பிள்ளைக்கு இலங்கை வருகை தருமாறு 2 வருடங்களுக்கு முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே அவர் இங்கு வருகை தருகிறார்.

இவருக்கு முன்னர் இருந்த ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் லுயிஸ் ஆபர் இலங்கைக்கு விஜயம் செய்தார். அவர் வரும் முன்னரும் இலங்கை குறித்து பல குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், அவர் இலங்கையை விட்டும் செல்கையில் உண்மை நிலையை வெளிப்படையாக குறிப்பிட்டார்.

எமது அழைப்பை ஏற்று நவநீதம்பிள்ளை இங்கு வருகை தந்ததை வரவேற்கிறோம்.

யாழ்ப்பாணமோ, வெலிவேரியாவோ எப்பகுதிக்கும் நேரில் சென்று வர அவருக்கு தடை கிடையாது. நாட்டின் உண்மை நிலையை நேரில் காண வருகை தந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்.

அவர் தனது விஜயம் முடிவடைந்து திரும்பிச் செல்வதற்கு முன்னர் நேரில் கண்ட விடயங்கள் தொடர்பில் உண்மை நிலையை நியாயமாக வெளியிடுவார் என நம்புகிறோம் என்றார்.

சினிமாவில் பிஸியான நடிகராகிய விஜய் சேதுபதி..!

vijaysethuதற்போது தமிழ் சினிமாவில் பிஸியாக யார் இருக்கிறார்கள் என்று கேட்டால், அது கண்டிப்பாக விஜய் சேதுபதி தான். சுந்தரபாண்டியன் படத்திற்கு பிறகு, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என தொடர்ச்சியாக ஹாட்ரிக் ஹிட் அடித்த விஜய் சேதுபதி அதை தொடர்ந்து தொடர்ச்சியாக 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

பண்ணையாரும் பத்மினியும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி, சங்குதேவன் உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வரும் விஜய் சேதுபதி, அதைதொடர்ந்து இன்னும் பல படங்களில் ஒப்பந்தமாகி கொண்டு இருக்கிறாராம்.

பீரிஸின் கருத்துக்களுக்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு..!

glஇலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விரோத மனப்பான்மையுடன் பேசுவதாக தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியப் பிரதமரை நேரில் அழைக்க புதுடில்லி சென்றிருந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் தெரிவித்த கருத்துக்களை அடுத்த தமிழக மீனவர்களின் இந்தக் கருத்து வந்துள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பிறகு டில்லியிலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய இலங்கை மீனவர்களிடையே உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், அமைச்சரின் கருத்துக்கள் ஒரு நல்லுறவோடு பேசுவதுபோல தங்களுக்கு தெரியவில்லை என்று தமிழ்நாடு விசைப்படகு மீனவர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலர் போஸ் தெரிவித்தார்.

அவரது கருத்துக்கள் தமிழக மீனவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது எனவும் அவர் கூறுகிறார்.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ இருநாட்டு மீனவர்களுக்கும் இடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்த எடுத்த நடவடிக்கைகளுக்கு மாறக பேராசிரியர் பீரிஸின் கருத்துக்களை உள்ளடக்கிய அறிக்கை, தமக்கிடையே மேற்கொண்டு ஒரு பெரிய விரோதத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும் போஸ் தெரிவித்தார்.

(BBC)

இரு பிள்ளைகளை தெருவில் கைவிட்டு சென்ற தந்தை: பொலிஸார் வலைவிரிப்பு..!

homaஹோமாகம பிரதேசத்தில் தாயற்ற இரண்டு பிள்ளைகளை, காவல்துறை நிலையத்திற்கு அருகாமையில் கைவிட்டுச் சென்ற பிள்ளைகளின் தந்தையை பொலிஸார் தேடி வருகின்றனர்.

6 மற்றும் 8 வயதான இந்த பிள்ளைகள் தமது தந்தையுடன் ஹோமாகம பிற்றிபன பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளனர்.

ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னதாக அவர்களின் தாய் குறித்த பிள்ளைகளை கைவிட்டுச் சென்ற நிலையில் அவர்களை, தந்தையே பராமரித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பிள்ளைகளை சுற்றுலாவொன்றிற்கு அழைத்துச் செல்வதாக ஹோமாகம காவல்துறைக்கு அருகாமையில் கைவிட்டுச் சென்றுள்ளார்.

கடையொன்றிற்குச் சென்று பொருட்களை வாங்கி வருவதாக கூறிச் சென்ற தந்தை பல மணிநேரங்களாகியும் திரும்பி வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த பிள்ளைகளை காவல்துறையினர் பொறுப்பேற்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பாண் வியாபாரத்தில் போட்டி: வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில்!

jaffnaயாழ்ப்பாணத்தில் பாண் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் மீது இனந்தெரியாத நபர்களின் வாள் வெட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாண் விற்பனையில் ஈடுபடும் வெதுப்பகங்களில் ஏற்பட்ட போட்டியே இத்தாக்குதலுக்கு காரணமென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சுதுமலையில் உள்ள வெதுப்பகத்தில் வேலை செய்யம் இளைஞன், முச்சக்கர வண்டியில் பாண் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சுன்னாகம் பிரதேசத்தில் வைத்து குறித்த முச்சக்கர வண்டியை வழிமறித்த இனந்தெரியாத நபர்கள் குறித்த இளைஞனைத் வாளால் வெட்டியுள்ளனர்.

வாள் வெட்டில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியாசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடாநாட்டில் இயங்கிவரும் அநேகமான வெதுப்பகங்கள் விற்பனையை அதிகரிக்கும் நோக்குடன் போட்டி போட்டுக்கொண்டு முச்சக்கர வண்டி மூலம் நடமாடும் பாண் விற்பனையை ஆரம்பித்துள்ளன.

இந் நடமாடும் சேவையினால் பாவனையாளர்கள் நன்மையடைந்துள்ள போதிலும் இதுவரை காலமும் பாண் விற்பனையில் ஈடுபட்டு வந்த சிறுசிறு வியாபாரிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் போட்டி மனப்பான்மையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இப்போட்டியே குறித்த இளைஞன் தாக்கப்படக் காரணமென பொரு மக்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பெண்ணை 42 நிமிடம் கழித்து பிழைக்க வைத்த ஆஸி. மருத்துவர்..!!

diedஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மொனாஷ் மருத்துவ மையத்திற்கு சென்ற வாரம் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி அழைத்து வரப்பட்டார்.

41 வயது நிரம்பிய வநேசா தனசியோ என்ற அந்தப் பெண்ணுக்கு இதயத்திலிருந்த ரத்தக்குழாய் ஒன்று முற்றிலுமாக அடைத்திருந்தது.மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த பின் அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.

ஆயினும், மருத்துவர்கள் மனம் தளரவில்லை. ஆஸ்திரேலியாவிலேயே அரிதான லூகாஸ்௨ என்ற கருவியை உபயோகித்து அவரது மூளைக்குத் தொடர்ந்து ரத்தம் செல்லுமாறு மருத்துவர்கள் ஏற்பாடு செய்தனர்.

பின்னர் இதய அறுவை சிகிச்சை நிபுணரான வாலி அகமர் நோயாளியினுடைய ரத்தக்குழாயில் இருந்த அடைப்பை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அந்த முயற்சியில் வெற்றியடைந்த பின்னர் தனசியாவின் நின்றுபோன இதயம் 42 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு சிறிய அதிர்வுக்குப்பின் வேலை செய்ய ஆரம்பித்தது.

தனசியாவை உயிர்ப்பிப்பதற்கு சில மருந்துகளையும், அதிர்வுகளையும் அவருக்குக் கொடுத்ததாக மருத்துவர் அகமர் தெரிவித்தார்.

தனசியா மீண்டு வந்துள்ளது மிகப்பெரிய அதிசயம் என்றும் அவர் கூறியுள்ளார்.தான் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது வரை நினைவிருந்ததாகக் கூறும் தனசியா, அதன்பின்னர் ஒரு வாரம் கழித்துதான் தான் நலமுடன் இருப்பதை உணர்ந்ததாக சந்தோஷத்துடன் கூறுகின்றார்.

மலேசியாவில் குற்றங்களில் ஈடுபட்ட 3 தமிழர்கள் உள்பட 5 பேர் சுட்டுக்கொலை..!

malaysiaமலேசியாவில் பல இடங்களில் துப்பாக்கி சூடு, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்து வந்ததால் குற்றவாளிகளை பிடிக்க மலேசிய பொலீசார் தீவிர வேட்டை நடத்தினார்கள்.

அப்போது கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஒரு கும்பலை பிடிக்க வடக்கு பினாங் மாநிலம் ஜோர்ஜ் டவுன் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர்.

அங்கு பதுங்கியிருந்த 5 பேரை பொலீசார் சுட்டுக் கொன்றனர். அவர்களில் 3 பேர் இந்திய வம்சாவளியினர் என்று பொலீசார் தெரிவித்தனர். தமிழர்களான அவர்கள் ஜெ.கோபிநாத் (வயது 31), என்.ராகன் (25), எம்.சுரேஷ் (25) என்று தெரியவந்தது. இதுதவிர நாடு முழுவதும் சந்தேகப்படும்படியான 200 பேரை கைது செய்துள்ளதாகவும் பொலீசார் தெரிவித்தனர்.

நண்பர்களிடம் பந்தயம் கட்டி கைக்குழந்தையை தரையில் வீசி அடித்த பொலீஸ்காரர்..!

babyசீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள லிங்ஷு நகரை சேர்ந்தவர் குயோ ஷென்ஸி. பொலீஸ்காரராக பணிபுரிகிறார். சம்பவத்தன்று இவர் கரோகி பகுதியில் உள்ள பாரில் தனது நண்பர்களுடன் மது குடித்தார்.

குடிபோதையில் தள்ளாடியபடி நண்பர்களுடன் ரோட்டில் நடந்து வந்தார். அப்போது ஒருவர் தனது 7 மாத பெண் குழந்தை யூயூவை தூக்கி கொண்டு மனைவியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் தனது நண்பர்களிடம் அந்த நபர் கையில் ஒரு பொம்மையை எடுத்து செல்வதாக கூறினார். ஆனால் அவரது நண்பர்கள் குழந்தைதான் என அடித்து சொன்னார்கள்.

அதை பொய் என வாதிட்ட பொலீஸ்காரர் ஷென்ஸி அந்த நபரை நோக்கி வேகமாக சென்றார்.

பின்னர், அவரின் கையில் இருந்த குழந்தையை பிடுங்கி தரையில் வீசி அடித்தார். அதில், குழந்தையின் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் உயிருக்கு போராடிய குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவத்தை தொடர்ந்து பொலீஸ்காரர் ஷென்ஸி கைது செய்யப்பட்டார்.

கடந்த மாதமும் இதுபோன்ற சம்பவம் நடந்தது. தாயுடன் சென்ற 2 வயது சிறுமியை ஒரு நபர் தூக்கி தரையில் அடித்து காயப்படுத்தினார். சிகிச்சை பலனின்றி இறந்தது.

வவுனியாவில் ‘முதலீட்டாளர்கள் தினம் 2013’..!!

vavuniyaகொழும்பு பங்குச்சந்தை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கொழும்பு பங்குச்சந்தை பிரதிநிதிகளுடன் தொடர்பை ஏற்படுத்துதல், பங்குத்தரகர் நிறுவனங்கள் மற்றும் அலகுப்பொறுப்பாட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்தல் தொடர்பான விபரங்களை பொது மக்களுக்கு வழங்கும் வகையில் முதலீட்டாளர்கள் தினம் 2013 நிகழ்வு வவுனியா நகரில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

வவுனியாவின் றோயல் கார்டின் ஹோட்டலில் ஓகஸ்ட் 31ஆம் திகதி காலை 10.30 மணி முதல் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் அறிவுபூர்வமான முதலீட்டுத் திட்டங்களை தெரிவு செய்வது தொடர்பான விபரங்கள் தமிழ் மொழியில் பங்குபற்றுநர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படவுள்ளன.

பிணையங்கள் பரிவர்த்தனையின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த முதலீட்டாளர்கள் தின நிகழ்வில், சட்ட ரீதியான முதலீடுகள் பற்றி அறிந்து எம்மை நாமே வளப்படுத்த அனைவரும் வருமாறு கொழும்பு பங்குச்சந்தையின் அதிகாரிகள் அழைப்புவிடுத்துள்ளனர்.

தாமினி இன்று நீதிமன்றத்தில் ஆஜர் : 2 வார போராட்டம் முடிவுக்கு வருகிறது..!!

thaamini

இயக்குனர் சேரன் மகள் தாமினி, சூளைமேட்டை சேர்ந்த சந்த்ரு என்ற வாலிபருடன் காதல் வயப்பட்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறினார். சந்த்ருவின் குடும்பத்தினருடன் சென்னை பொலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் கொடுத்த அவர் சந்த்ருவை கொலை செய்ய சேரன் முயற்சி செய்வதாக பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்.

இதைதொடர்ந்து சேரன், பொலீசில் அளித்த புகாரில் சந்த்ருவின் நடவடிக்கை சரியில்லை என்றும், எனவேதான் அவரது காதலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக கண்ணீர் மல்க பேட்டி அளித்த சேரன் “தனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். காதலுக்கு நான் எதிரி இல்லை” என்று தெரிவித்தார்.

இதையடுத்து சேரனின் மகள் தாமினிக்கு பெண் பொலீசார் கவுன்சிலிங் அளித்தனர். கல்லூரி படிப்பை முடித்த பின்னர் காதலை பற்றி சிந்திக்கலாம் என்று அறிவுரை கூறினர். ஆனால் தாமினி காதலன் சந்த்ருவுடன்தான் செல்வேன் என்று பிடிவாதமாக கூறினார்.
இதனால் அவரை பொலீசார் காப்பகத்தில் தங்க வைத்தனர்.

இதற்கிடையே சந்த்ருவின் தாய் உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் 2 வாரங்களுக்கு தாமினி, தான் படித்த பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டில் தங்கி இருக்க உத்தரவிட்டனர்.

இதன்படி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அவர் தனது குடும்பத்தினரை பிரிந்து வெளியில் தங்கியுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது தாமினி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

தனது மகள் மனம் மாறி எப்படியும் தன்னுடன் வந்து சேர்ந்து விடுவாள் என்று சேரன் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார். தலைமை ஆசிரியரின் வீட்டில் தாமினி தங்கி இருந்த போது அவருக்கு தினமும் கவுன்சிலிங் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தாமினி மனம் மாறியுள்ளாரா? என்பது தெரியவில்லை.

இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும் போது நீதிபதிகள் அவரிடம் யாருடன் செல்ல விரும்பம்? என்று கேட்க உள்ளனர். இதற்கு தாமினி என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
காதலை மறந்து தந்தை சேரனுடன் தாமினி செல்வாரா? இல்லை குடும்பத்தினரை உதறிவிட்டு காதலனை கரம் பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்றுடன் தாமினியின் காதல் போராட்டம் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.