இலங்கை ஜனாதிபதி ஒருவர் முதன் முறையாக தன்சானியா விஜயம்..!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்சானியாவுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு தன்சானியா செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்குமிடையே ஒப்பந்தங்கள் பலவும் கைச்சாத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தன்சானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் சுற்றுலா துறைகளை பலப்படுத்திக் கொள்வது ஜனாதிபதியின் இவ் விஜயத்தின் பிரதான நோக்கமாகவுள்ளது.

இச் சுற்றுப் பயணத்தின் போது தன்சானியாவில் இடம்பெறும் பல மாநாடுகளிலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ஒருவர் தன்சானியாவுக்கான விஜயத்தை மேற்கொள்வது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

2012 உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கககளின் பல்கலைக்கழக விண்ணப்பங்கள் அடுத்த வாரம் முதல்..!

2012ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக அடுத்த வாரம் முதல் விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் அடங்களான புத்தகம் அச்சிடும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக அவ் ஆணைக்குழுவின் தலைவி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த புத்தகத்தை அடுத்த வாரத்திற்குள் விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாணவர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் பல்கலைக்கழங்களிற்கு தெரிவான மாணவர்களை இவ்வாண்டு இறுதிக்குள் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக, ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்த வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு முடிவு..!

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் சிறப்பு கூட்டம் நேற்று காலை இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் பிரஜைகள் குழுவின்; உப தலைவர் தனஞ்சயநாதன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுக்களின் காப்பாளரும், மனித உரிமை ஆர்வலருமான சண் மாஸ்டர், மற்றும் தலைமைக்குழு உறுப்பினர்கள், மாவட்டத்தின் பிரதேச இணைப்பாளர்கள், சமுக ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின் போது, ஒவ்வொரு உறுப்பினர்களிடமும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசம் சார்ந்து, மக்கள் சார்ந்து பிரச்சனைகள் கேட்டறியப்பட்டு, கருத்தொருமைப்பாட்டுடன் மாவட்ட மக்களின் நலன்சார்ந்த முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

வவுனியா மாவட்டத்தில் பிரதேச ரீதியாக திட்டமிட்டு மேற்கொள்ளப்;பட்டு வரும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லுதல் முதன்மைத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதோடு, இனங்களுக்கிடையில் முரண்நிலையை ஏற்படுத்தும் வகையில் நியாயமற்ற முறையில் வழங்கப்படும் காணி முறையை நிறுத்தக்கோருதல், அரச திணைக்களங்களில் சேவை காலத்தை கவனத்தில் கொள்ளாமல் வழங்கப்படும் முறையற்ற நியமனங்கள், ஆளணி உள்ளீர்ப்புகள், பணி இடமாற்றங்களை நிறுத்தக்கோருதல், இந்திய உதவித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வீடுகளை போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் தொடர்புடைய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல் போன்ற தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த சண் மாஸ்டர், தனது உரையில்,
யுத்தத்திற்குப்பின்னர் இலங்கை தீவில் சிறுபான்மையின மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இன்று வட கிழக்கு பிரதேசங்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட நில அபகரிப்புகளும், இனங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்தும் காணி ஒதுக்கீடுகளும், தமிழ் பேசும் மக்களை விரக்தியின் உச்ச நிலைக்கே கொண்டு சென்றுள்ளது.

நிகழ்காலத்தில் நாம் இழந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பிடி மண்ணுக்கும் கடந்த காலங்களில் கொடுக்கப்பட்ட விலைகள் அதிகம். காலை நீட்டி அசந்து தூங்கி கொண்டிருக்க தலைப்பக்கத்தால் நிலம் அசூர வேகத்தில் விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஆபத்தை உணருங்கள்.

இன்றைய சூழலில் காணியை கையகப்படுத்தும் கொள்கையும், 13வது திருத்த சட்டத்தை பலவீனப்படுத்தும் கொள்கையும், கொள்கை வகுப்பாளர்களின் நிகழ்ச்சி நிரலில் முதன்மை இடத்தை பெறுவதால், கால ஓட்டத்தில் காணியே இல்லாத உங்களுக்கெல்லாம் காணி அதிகாரம் எதற்கு? என்றுச்சிங்கள பேரினவாத சக்திகள் கேள்வி எழுப்பினாலும் இதில் ஆச்சரியப்படுவதற்கென்று ஏதுமேயில்லை.

தற்போது முன்னெப்போதும் இல்லாதளவுக்கு வடகிழக்கு பிரதேசங்களில் கலாசார சீரழிவுகளும் சிறுவர் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் தலைதூக்கியுள்ளன. அண்மையில் நெடுங்கேணியில் 7வயது சிறுமி மீதான பாலியல் வன்புணர்வு சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாகும். மக்களின் பலவீனங்களைக்குறிவைத்து விசமிகள் அவர்களை தவறான வழிகளுக்கு இழுத்துச்சென்று இளம் சமுகத்தையே சீரழித்து வருகின்றார்கள்.

இது போரினால் பாதிக்கப்பட்டு ஏதிலிகளாக நிற்கும் இந்த சமுகத்தின் மீது திட்டமிட்டு திணிக்கப்பட்டு வரும் ஒரு செயல்பாடாகும். இதற்கு இங்குள்ள தீய சக்திகளும் துணை போகின்றமை வருத்தமளிக்கிறது.

ஒரு சமுகத்தின் இருப்பை சிதைப்பதை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அனைத்து அநீதிகளையும் எதிர்க்கக்கூடிய மக்கள் ஒழுங்கமைப்புகளை பலப்படுத்த ஒவ்வொரு பிரஜையும் முன்வரவேண்டும். இழப்புகளிலிருந்து மீண்டெழுந்து சவால்களை சாதகமாக மாற்றி, உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்பதற்கு மக்கள் ஒன்றுபட்ட சக்தியாக பிரஜைகள் குழுக்களை பலப்படுத்த வேண்டும். பிரஜைகள் குழுவென்பது அரசியலுக்கு அப்பால்பட்ட ஒரு சமுகக்கூறாகும்.

பிரஜைகள் குழுவானது குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தை மட்டும் இலக்கு வைக்காமல் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் பல்வேறுபட்ட துறைசார்ந்த மக்கள் பிரதிநிதிகளை உள்வாங்கி பிரஜைகள் குழுவை பலப்படுத்த வேண்டும். சமகாலத்தில் வவுனியா மாவட்டம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை பிரஜைகள் குழு ஆராய வேண்டும்.

இன நல்லிணக்கத்துக்காக அர்ப்பணிப்போடு பணி செய்வதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அரசியல் தலைமைகளோடும் கருத்துப்பரிமாற்றங்களை பேண வேண்டும்.

ஜனநாயக பண்புகளை பிரதிபலிக்கும் தேசம் ஒன்றில் மக்கள் ஒன்றுகூடி தமது கருத்தை கலந்தாலோசிக்கவும், வெளிப்படுத்தவும் உரிமையுண்டு. மனித உரிமைகள் பற்றி வலியுறுத்தும் சட்ட பிரகடனங்களும் இவற்றையே வலியுறுத்துகின்றன. பிரஜைகள் குழுக்கள் இயங்க ஆரம்பித்த காலம் முதல் அதனை கருவிலேயே கழுவறுக்கும் செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

பிரஜைகள் குழுக்களின் பிரதிநிதிகளுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள், அநாமதேய தொலைபேசி அழைப்பு மிரட்டல்கள், அமர்வுகளுக்கு செல்லவிடாது தடுக்கும் மிதவாத போக்குகள் கண்டிக்கத்தக்கவை. இது நல்லாட்சிக்குரிய நாடாகவிருந்தால், மனித உரிமைகளை முன்னிறுத்தி பலம்பெற்றுவரும் சிவில் சமுக கட்டமைப்புகளை கண்டு அச்சம் கொள்ளத்தேவையில்லை.

வட பகுதிக்கு பயணிக்கும் போதெல்லாம் இழந்த உயிர்களைத்தவிர தமிழர்களுக்கு எல்லாமே தருவேன் என தேவவாக்கு சொல்லும் இந்த நாட்டின் ஜனாதிபதி, இறந்த நம் உறவுகளின் அபிலாசைகளையும், எஞ்சியுள்ள மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.

 

va_citizen01

va_citizen04

 

வவு­னியாவில் போதை தலைக்கேற நீர்த்தாங்கியில் ஏறி நின்று சத்தமிட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்..!

Vavuniya  bus stand

வவு­னியா நக­ரி­லுள்ள நீர்த்­தாங்கி மீது மது போதையில் ஏறி நின்று சத்­த­மிட்டுக் கொண்­டி­ருந்­த­தாகக் கூறப்­படும் மாங்­குளம் பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒருவர் தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

மாங்­குளம் பொலிஸ் நிலை­யத்தில் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருந்த இந்த பொலிஸ் கான்ஸ்­டபிள் வவு­னியா நக­ருக்கு வந்து மது­வ­ருந்­திய பின்னர் போதையில் நீர்த்­தாங்கி மீதேறி சத்­த­மிட்டுக் கொண்­டி­ருந்­த­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

ஒரு நபர் நீர்த்­தாங்கி மீதேறி சத்­த­மிட்டுக் கொண்­டி­ருந்­த­தாக வவு­னியா பொலிஸ் பொலிஸ் நிலை­யத்­துக்கு கிடைத்த தக­வ­லின்­படி பொலிஸார் அந்த இடத்­துக்கு விரைந்து மிகச் சிர­மத்­துடன் அந்த நபரை கீழே இறக்கி விசாரணை செய்த போது அவர் பொலிஸ் கான்ஸ்டபிள் என்பது தெரிய வந்துள்ளது.

 

தமிழகத்திலிருந்து இலங்கை இராணுவத்தினர் வெளியேற்றம்..!

இலங்கையிலிருந்து பயிற்சிக்காக தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் வெலிங்டனிலுள்ள இராணுவப் பயிற்சி கல்லூரிக்கு சென்றிருந்த இரண்டு இலங்கை அதிகாரிகளும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்தத் தகவலை அந்தப் பயிற்சி மையத்தின் பேச்சாளர் கர்ணல் தத்தா தெரிவித்துள்ளார்.

எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் எங்கு சென்றுள்ளார்கள் என்பதை கூற அவர் மறுத்துவிட்டார்.

இலங்கையைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்க தமிழக அரசு உட்பட பல்தரப்பிலிருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் உள்ள நிலையில், இந்த இரு அதிகாரிகளும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெலிங்டன் வந்து சேர்ந்தனர்.

இதையடுத்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் இடம் பெற்றன.

தமிழக மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், இலங்கை படையினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்பட மாட்டாது என்று இந்திய இராணுவ அமைச்சர் ஏ. கே. அந்தோனி கூறிய நிலையிலும் இவர்கள் அந்த மையத்துக்கு பயிற்சிக்காக வந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதற்கு முன்னரும் இவ்வகையில் இலங்கையிலிருந்து இந்தப் பயிற்சி மையத்துக்கு வந்திருந்த அதிகாரிகள் தமிழகத்திலிருந்து எழுந்த எதிர்ப்புகள் காரணமாக வேறு இடங்களுக்குச் சென்றனர் அல்லது மீண்டும் தமது நாட்டுக்கு திரும்பினர்.

விம்பிள்டன் : ரஃபேல் நடால் அதிர்ச்சித் தோல்வி..!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் அதிர்ச்சியுறும் வகையில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் தோல்வியடைந்தார்.

பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்ஸி அவரை 7-6, 7-6, 6-4 எனும் நேர் செட்களில் வெற்றி கொண்டார்.

எட்டு முறை பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளை வென்று சாதனை படைத்த ரஃபேல் நடால் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்துள்ளது பெருத்த ஏமாற்றத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

உலக ஆடவர் டென்னிஸ் தரப்பட்டியலில் ரஃபேல் நடால் ஐந்தாவது இடத்தில் உள்ளார். ஆனால் அவரை வெற்றி கொண்ட ஸ்டீவ் டார்ஸி 135 ஆவது இடத்தில் உள்ளார்.

இந்தப் போட்டியில் ரஃபேல் நடாலை வெல்வேன் என்று தான் உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை என்று போட்டி முடிந்தவுடன் பிபிசியிடம் பேசிய டார்ஸி தெரிவித்தார்.

தனது டென்னிஸ் வாழ்க்கையில் இந்த வெற்றி மிகப் பெரியது என்றும், இது இனி வரக்கூடியப் போட்டிகளில் தனக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.

முதல் செட்டிலிருந்தே டார்ஸியின் ஆளுமை அதிகமாக இருந்தது. எனினும் 6-6 என்ற நிலையில் ரஃபேல் நடால் முதல் இரு செட்களிலும் வெற்றி பெரும் சூழல் இருந்தும் அவர் அதை நழுவ விட்டார்.

கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் சுற்றில் நட்சத்திர ஆட்டக்காரர் ஒருவர் தோல்வியடிந்துள்ளது விம்பிள்டன் சரித்திரத்தில் இல்லாத ஒன்று என அரங்கத்தில் இருக்கும் பிபிசியின் டென்னிஸ் செய்தியாளர் சுட்டிக்காட்டுகிறார்.

இதனிடையே நடப்பு சாம்பியனான ரோஜர் ஃபெடரர் தமது முதல் சுற்று ஆட்டத்தில் எளிதாக வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மஞ்சள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்..!

ACCIDENT_logo

வவுனியா ஏ9 வீதியில் தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள மஞ்சள் கடவையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோட்டர் சைக்கிள் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தரும் மோட்டர் சைக்கிளை செலுத்தி வந்த யுவதியும் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

நேற்று (24) மதியம் 1.30 மணியளவில் பாடசாலைக்கு முன்னால் உள்ள மஞ்சள் கடவையில் பொலிசார் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது வவுனியா நகரில் இருந்து வந்த தனியார் வைத்தியசாலை ஒன்றின் தாதியர் தான் செலுத்தி வந்த மோட்டர் சைக்கிளின் வேகத்தை கட்டுபடுத்த முடியாது பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதனால் குறித்த மோட்டர் சைக்கிளை செலுத்திவந்த யுவதியும் கடமையில் இருந்த பொலிசாரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இப் பகுதியில் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-அதிரடி-

முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு: நவாஸ் ஷெரிப்..!

பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் தேசத்துரோக வழக்கை சந்திக்க வேண்டும் என்று புதிய பிரதமர் நவாஸ் ஷெரிப் அறிவித்துள்ளார்.

நாடு கடந்து வாழ்ந்துவந்த பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜெனரல் முஷாரப் இந்த ஆண்டின் முற்பகுதியில் சொந்த நாட்டுக்குத் திரும்பியிருந்தார்.

‘அவரது குற்றங்களுக்காக அவர் நீதிமன்றத்தின் முன்னால் பதிலளிக்க வேண்டும்’ என்று பிரதமர் ஷெரிப் கூறியுள்ளார்.

முஷாரப் அவரது ஆட்சிக் காலத்தில் நடந்த பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகளை எதிர்நோக்கியுள்ளார். குறிப்பாக, பெனாசீர் பூட்டோவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியமை, நீதிபதிகளை பதவி நீக்கியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள முஷாரப் தற்போது வீட்டுக் காலில் வைக்கப்பட்டுள்ளார்.

மண்டேலாவின் மோசமடைந்த உடல்நிலையில் முன்னேற்றமில்லை..!

மருத்துவமனையில் உள்ள நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்தும் மோசமடைந்தே காணப்படுவதாக தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் சகல வழிகளிலும் அவருக்கு சிகிச்சை அளித்துவருவதாக கூறிய ஜேக்கப் ஜூமா, மேலதிக மருத்துவத் தகவல்களை வழங்க மறுத்துவிட்டார்.

மண்டேலாவின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் நேற்று ஞாயிறு இரவு அறிவித்தனர்.

94 வயதான மண்டேலா, கடந்த 16 நாட்களாக ப்ரிட்டோரியா நகரின் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நுரையீரலில் மீண்டும் நோய்த் தொற்று ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் மோசமடைந்துள்ளதாக, ஞாயிறன்று மாலை அவரை மருத்துவமனையில் அதிபர் ஜேக்கப் ஜுமா சந்தித்தபோது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் பிறகே மண்டேலாவின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்கிற அறிக்கை வெளியானது.

மருத்துவமனைக்கு சென்ற அதிபர் ஜூமா அங்கு மண்டேலா அவர்களின் மனைவி க்ரேஷா மஷேலை சந்தித்து பேசியுள்ளார்.

மண்டேலா அவர்களின் உடல்நிலை மோசமாகியுள்ள நிலையில் தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா, தமது தேசத்தில் உள்ளவர்களையும் உலக மக்களையும் அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு மீண்டும் வேண்டியுள்ளார்.

சம்பியன்ஸ் கிண்ண வெற்றி- இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 கோடி!

trophy

இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 கோடி இந்திய ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இந்திய அணியின் 15 வீரர்களுக்கும் தலா 1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்திருக்கிறது.

மேலும் அணியின் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 30 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியதன் மூலம் 2 மில்லியன் டொலர் தொகையை ( 12 கோடி இந்திய ரூபாய் ) பரிசாக இந்தியா பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்திற்கு பண முதலை பிசிசிஐ எந்த வித பண உதவியோ குறைந்தபட்சம் ஒரு அனுதாபமோ தெரிவிக்கவில்லை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஜில்லா..!

கொலிவுட்டில் தலைவா திரைப்படத்தைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் நேசன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ஜில்லா.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

ஏற்கெனவே துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் நடித்திருக்கிறார். இந்நிலையில் விஜய்-காஜல் அகர்வால் ஜோடி சேரும் இரண்டாவது படம் இதுவாகும்.

இவர்களுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை மதுரை மற்றும் காரைக்குடி பகுதிகளில் படமாக்கிய படக்குழு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் விஜய் பிறந்த நாளான சனிக்கிழமை அன்றுடன் முடிவுக்கு வந்துவிட்டது.

முதற்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்காத விஜய் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தார்.

இரண்டுகட்டமாக இதுவரை 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்துள்ளது.

மேலும் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஒகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிசுகிசுவை ஊதி அணைக்கும் முயற்சியில் பிந்து மாதவி..!

சினிமாவில் பப்ளிசிட்டி வேண்டும் என்பதற்காக தங்களை பற்றி தாங்களே கிசுகிசுக்களை பரவ விடுகின்றனர்.
ஆனால் ஒருசிலரை பற்றி தானாகவே கசிந்து விடும்.

மேலும் தொடர்ந்து ஒரே நடிகருடன் நடித்தால் சொல்லவே வேண்டாம், உடனே கொளுத்தி போட்டு விடுவார்கள்.

இதே போன்று தான் பிந்து மாதவி- விமல் பற்றி கிசுகிசுக்கள் பரவி வருகிறது.

இதுபற்றி பிந்து மாதவி கூறுகையில், இதற்கு முன்பு களவாணி, கலகலப்பு படங்களில் ஓவியாவுடன் நடித்து வந்ததால் அவரையும், விமலையும் இணைத்து செய்திகள் வந்தன.

தற்போது நான் இரண்டு படங்களில் நடித்து விட்டதால், என்னைப் பற்றியும் வருகிறது.

சினிமாவில் இதெல்லாம் சகஜமான ஒன்று தான், ஆனால் அதை எக்காரணத்தை கொண்டும் தொடரவிடக் கூடாது.

காரணம், மற்ற ஹீரோக்கள் இதை உண்மை என நம்பி நம்மை தவிர்க்க வாய்ப்பிருக்கிறது. அதனால் தற்போது இந்த கிசுகிசுவை ஊதி அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் விமலுடன் நட்பு ரீதியில் சினிமா விழாக்களுக்கு ஒன்றாக வருவதைக்கூட நிறுத்தி விட்ட பிந்து மாதவி, மற்ற ஹீரோக்களின் படங்களில் கவனம் செலுத்த போவதாக கூறுகிறாராம்.

தலைவா நிச்சயம் வெற்றி பெறும்: அமலா பால்..!

இளைய தளபதி விஜய்- அமலாபால் இணைந்து நடித்துள்ள படம் தலைவா.
இயக்குனர் ஏ.எல். விஜய்யின் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

அப்போது பேசிய அமலா பால், தலைவா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தது பெருமையாக உள்ளது.

ஒவ்வொரு நடிகைக்கும் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது கனவு.

தலைவா படத்தின் மூலம் என்னுடைய கனவு நிறைவேறி உள்ளது.

விஜய் மிக இனிமையானவர், அன்பாக பேசி பழகுவார்.

திறமையானவர்களை கொண்டு உருவாகியுள்ள இப்படம், நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஏற்கனவே ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தெய்வ திருமகள் படத்தில் நடித்தேன்.

இதில் நடித்ததும் நல்லதொரு அனுபவத்தை தந்தது என தெரிவித்துள்ளார்.

விழாவில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஏ.எல்.அழகப்பன், நடிகை சரண்யா, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

லண்டன் ஹோட்டலில் பறக்கும் தட்டுகள்..!

லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மாயாஜாலக் காட்சிகள் போன்று ஓர்டர் செய்த உணவுகள் பறக்கும் தட்டாக ஆகாயத்தில் வந்து மேசையில் குதிக்கிறது.
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஹோட்டல் நிறுவனம் யோ சுஷி. தலைநகர் லண்டன் மட்டுமின்றி நாட்டின் பல இடங்களிலும் ரஷ்யா, ஐக்கிய அரபு குடியரசு உள்ளிட்ட நாடுகளிலும் இதன் கிளைகள் உள்ளன.

இதன் லண்டன் கிளையில் தான் சமீபத்தில் டிரோன் சர்வீஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வாடிக்கையாளர் ஓர்டர் செய்த உணவை மினி டிரோன் ஒன்று சுமந்து கொண்டு சாப்பாட்டு மேசைக்கே பறந்து வருகிறது.

ஐபேட் கண்ட்ரோலில் இயக்கப்படும் இந்த டிரோன் சப்ளை வாடிக்கையாளர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.இதில் மினி ஹெலிகாப்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால், அது அழகாக இறக்கைகளை சுழற்றிய,படி , பறந்து செல்கிறது.

உணவுப் பதார்த்தங்களை வாடிக்கையாளர் எடுத்துக் கொண்ட பிறகு திரும்பி பறந்து சென்று விடும் வகையில் இது ட்யூன் செய்யப்பட்டுள்ளது.2 நவீன கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த டிரோனை, ஹோட்டல் ஊழியர் ஒருவர் ஐபாட் உதவி கொண்டு இயக்குகிறார்.

இந்த டிரோன் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறனுடையது.இது குறித்து யோ சுஷி ஓட்டல் அதிகாரிகள் கூறுகையில், உலகம் முழுவதும் எங்கள் ஹோட்டல்கள் 70 இடங்களில் உள்ளது.

கன்வேயர் பெல்ட் மூலம் சப்ளை செய்வது, ரோபோ மூலம் சப்ளை செய்வது ஆகிய முயற்சிகளை தொடர்ந்து, தற்போது மினி டிரோன் உதவியுடன் சப்ளையை தொடங்கியிருக்கிறோம்.

அசம்பாவிதங்கள் எதுவுமின்றிஇ இது சிறப்பாக நடந்தால் மற்ற கிளைகளிலும் இந்த பறக்கும் தட்டு முறை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தனர்.

தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக மனிதர்களின் வேலைகளை இலகு படுத்தியுள்ளது.  லண்டனில் உள்ள உணவகமொன்றில் பறந்து பறந்து உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் உபகரணத்தை இதற்கு சிறந்த உதாரணமாக குறிப்பிடலாம்.

குறித்த உணவகம்.குறித்த உபகரணமானது மணிக்கு 25 மைல் வேகத்தில் பறந்துசெல்லக் கூடியது. இது பாரம் குறைந்த காபன் பைபர் பிரேம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் அதனை தனது 64 கிளைகளிலும் அறிமுகப்படுத்தவுள்ளது.குறித்த நிறுவனமானது இதற்கு முன்னரும் பல புரட்சிகர அறிமுகங்களை தனது உணவகங்களில் மேற்கொண்டுள்ளது.

உணவினை தானாக சென்று வழங்கக் கூடிய ‘கொன்வேயர் பெல்ட்’ மற்றும் பேசும் ரொபோ ட்ரோலிஸ் என என்பன அவையாகும்.இதனால் ஊழியர்களின் நேரம் மீதமாவதுடன், துரிதமாக உணவும் பரிமாறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

விஞ்ஞானம் போகின்ற போக்கை பார்த்தால் எதிர்காலத்தில் மனிதர்கள் செய்யும் சகல வேலைகளையும் இயந்திரங்கள் செய்யும்.மனிதர்களுக்கு இனி வேலையே இல்லாமல் போய்விடும் போலிருக்கிறது அல்லவா?

fly1 fly2
fly3

ஐஸ்வர்யாவை புகழ்ந்த விஷால்..!

பூபதி பாண்டியன் இயக்கத்தில், விஷால்- ஐஸ்வர்யா அர்ஜூனின் நடிப்பில் உருவாகியுள்ள படம் பட்டத்து யானை.
இப் படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடந்தது.

விழாவில் பேசிய விஷால், மலைக்கோட்டை படத்தில் நடித்த போதே பட்டத்து யானை குறித்து நானும், பூபதி பாண்டியனும் யோசித்து வைத்திருந்தோம்.

ஆனால் அதற்கான நேரம் இப்போதுதான் அமைந்திருக்கிறது.

சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் இணைகிறோம். பட்டத்து யானை படம் முழுநீள நகைச்சுவை படமாக மட்டுமின்றி கமர்ஷியல் படமாகவும் இருக்கும்.

ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு இது முதல் படம், ஆனால் அவர் ஏற்கனவே பல படங்களில் நடித்ததை போன்றதொரு அனுபவம் இதில் தெரியுது.

ஒரு படத்தின் நாயகன், நாயகிக்கு மட்டும் கெமிஸ்ட்ரி நல்லா இருக்கணும்னு கிடையாது.

அந்தப் படத்தோட நாயகன், இயக்குனருக்கும் கெமிஸ்ட்ரி நல்லா இருந்தாலே படம் ஹிட்டாகும் என்று தெரிவித்தார்.

விழாவில் விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன், ஆர்யா, பூபதி பாண்டியன், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், பட தயாரிப்பாளர் கேயார், இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மயில்சாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்தும் மலேசியாவை சூழ்ந்துள்ள மாசு மண்டலம்..!

இந்தோனேசியாவின் காட்டுத் தீயினால் பரவிவரும் புகை-மாசு மண்டலம் மலேசியாவின் பல பகுதிகளை இன்னும் சூழ்ந்துகொண்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை தலைநகர் கோலாலம்பூரில் எதிரில் இருப்பவை சரியாக தெரியாதபடி மாசுமண்டலம் மூடியிருந்தது.

கோலாலம்பூரிலும் செலாங்கோர் மாநிலத்திலும் பள்ளிக்கூடங்களை மூடிவிடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு தென் மாவட்டங்களில் மாசு மண்டலத்தின் அளவு அதிகரித்திருந்ததால் மலேசியா அவசரநிலை பிரகடனம் செய்திருந்தது.

சிங்கப்பூரில் காற்றின் போக்கு மாறியுள்ளதால் வானம் தெளிவாக மாறிவருகிறது.

இதற்கிடையே, செயற்கையாக மழையை பெய்ய வைக்கக்கூடிய ‘கிளவுட் ஸீடிங்’ தொழிநுட்ப முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாக இந்தோனேசியா கூறியுள்ளது.

இதன்மூலம் சிறிதளவு மழைத்தூறல்களைத் தான் வரவழைக்க முடிந்துள்ளது.

தமக்கும் செய்வதற்கு வேறுவழிகள் இல்லையென்று அந்நாட்டின் இடர் மேலாண்மை அமைச்சர் தெரிவித்தார்.