ஜேர்மனியில் கடந்த 3 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து 5 பேர் தகுதி பெற்றனர்.
இதில், நாக்பூரைச் சேர்ந்த காஞ்சன்மாலா பாண்டே, கடல் அலைகளுக்கு எதிராக நீச்சல் அடிப்பதில் வல்லவராக அறியப்பட்டவர்.
சிறுவயது முதலே இரு கண்களிலும் பார்வையை இழந்தவர். இந்நிலையில், பெர்லின் நகருக்குச் சென்ற இவர்களுக்கு இந்திய பாராலிம்பிக் கமிட்டி ஒதுக்கிய நிதி சரியான சமயத்தில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பெர்லின் சென்ற பின்னர் கையில் போதிய பணமில்லாமல் தவித்த காஞ்சன்மாலா, அந்நகரில் பிச்சையெடுத்து தனக்கு தேவையான நிதியை திரட்டியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து போட்டியில் கலந்துகொண்ட காஞ்சன்மாலோ மற்றும் சுயேஷ் யாதவ் ஆகிய இருவரும் வெள்ளிப்பதக்கங்கள் வென்று, உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
பணி முடிந்து சோர்வாக வீட்டுக்கு வந்த கணவன் இரவில் சோபாவில் படுத்து தூங்கிய நிலையில் காலையில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் மனைவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Somerset கவுண்டியை சேர்ந்தவர் Mikey Murrell (36), இவர் மனைவி Ashley Murrell. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று Mikey 16 மணிநேர அலுவலக பணியை முடித்து விட்டு சோர்வாக வந்துள்ளார்.
ஏன் குடும்பத்துடன் நேரம் செலவழிக்காமல் இப்படி பணியே கதி என இருக்கிறீர்கள் என Ashley கணவர் Mikey-யிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதன்பின்னர், அங்கிருந்த சோபாவில் கணவரை படுத்துத் தூங்க சொல்லிவிட்டு தனது அறைக்கு Ashley சென்றுள்ளார்.
மறுநாள் விடிந்த பிறகு Mikey உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதை கண்டு Ashley கதறியுள்ளார், தூக்கத்திலேயே மூச்சடைப்பு ஏற்பட்டு Mikey உயிரிழந்தது பின்னர் தெரியவந்தது.
இந்நிலையில், கணவருடன் இறுதியாக தான் பேசிய போது அது வாக்குவாதமாக ஆனதை நினைத்து Ashley தற்போது மனம் வருந்துகிறார்.
வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என தெரியாது. அதனால் குடும்பத்தினருடன் ஏதாவது பிரச்சனை என்றால் அதை தீர்த்து விட்டு தூங்க செல்லுங்கள் என மற்றவர்களுக்கு Ashley வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தங்களுடைய திருமண நாளின் போது, மனைவியை சுற்றுலா அழைத்து செல்வதற்காக Mikey அதிக நேரம் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.
அண்டார்டிகா தீபகற்பத்தில் பெரிய அளவிலான பனிப்பாறை உடைந்துள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உலகின் ஐந்தாவது மிகப்பெரிய கண்டம் அண்டார்டிக்கா.புவியின் தென்முனையில் இந்த கண்டம் முழுவதும் ஏறக்குரைய பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது.
புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது.இங்கே நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது, வெவ்வேறு உலக நாடுகளின் ஆய்கூடங்கள் மட்டுமே இருக்கின்றன.
புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகிவருகின்றது. இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேற்கு அண்டார்டிகாவில் அமைந்துள்ள லார்சன் சி பனியடுக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிளவால், பனிப்பாறை ஒன்று பிரிந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து விரிசல் ஏற்பட்டுக்கொண்டிருந்த நிலையில், பனிப்பாறையானது முழுவதுமாக உடைந்து பிரிந்துவிட்டது நாசா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.
5 ஆயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட இந்த பனிப்பாறை லண்டனை விட நான்கு மடங்கு பெரியதாகும். இந்த பனித் தகர்வால் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்டார்ட்டிக்காவின் வடக்கில் உள்ள பனியடுக்கான லார்சன் ஏ மற்றும் லார்சன் பி பகுதிகளில் இதுபோன்ற பனித் தகர்வுகள் ஏற்பட்டதால், அவை முற்றிலுமாக நொறுங்கிப் போயின.
இதேபோன்று லார்சன் சி பகுதியிலும் நிகழுமோ என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
பனியடுக்கு உடைந்தால், இதே போன்ற உடைப்புகள் அண்டார்டிக் தீபகற்பம் முழுவதும் தொடரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள்.
உலக வெப்பமயமாதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் சூழலில், நமது பூமியானது ஒரு பேராபத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதை இந்த பனித்தகர்வு நமக்கு காட்டுகிறது.
கடந்த பத்தாண்டுகளில் பிரின்ஸ் கஸ்டவ் சேனல், லார்சன் இன்லேட், லார்சன் ஏ, லார்சன் பி, வேர்டி, முல்லர், ஜோன்ஸ் சேனல், வில்கின்ஸ் போன்ற ஒரு டஜனுக்கும் அதிகமான பெரிய அளவிலான பனியடுக்குகள் உடைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள்.
ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும்.
இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் திட்டமிட்டனர்.
இதன் முதல்கட்டமாக, மூன்றாண்டுகளுக்கு முன்னர் சிரியாவின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய இப்படையினர் அங்கிருக்கும் கிறிஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை ஊரை விட்டு அடித்து விரட்டி விட்டு இஸ்லாமிய அரசை அமைத்துள்ளதாக அறிவித்தனர்.
இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளை ஓட ஓட விரட்டியவாறு முன்னேறிச் சென்ற ஈராக் இராணுவப் படைகள் மொசூல் நகரம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுவிட்டதாக சமீபத்தில் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து ஈராக் பிரதமருடன், பேசிய அமெரிக்க ஜனாதிதி டிரம்ப் மொசூல் நகரை ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றியதற்கு பாராட்டு தெரிவித்தார்.
ஐஎஸ் இயக்கம் தோல்வி அடைந்து ஓடுகிறது. விரைவில் அது துடைத்தெறியப்படும், இந்த சக்திகள் மீண்டும் இப்பகுதிக்குள் வந்துவிடக் கூடாது என்று கூறினார்.
அமெரிக்க தளபதி டவுன்செண்ட் கூறுகையில், ஈராக்கிய இராணுவம், குர்திஷ் பெஷ்மேகரா போராளிகள் மற்றும் உலக அளவிலான கூட்டணி ஆகியோருக்கும் மொசூல் வெற்றியில் பங்குண்டு.
இந்த வெற்றி மட்டும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை நீக்கிவிடாது. கடுமையான போர் காத்திருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் அவர்கள் சில பகுதிகளில் இன்னும் மறைந்துள்ளனர். அவர்கள் வைத்துவிட்டுச் சென்ற ஐஈடி குண்டுகள் இருக்கின்றன, போர் இத்துடன் முடியவில்லை. சிரியாவிலுள்ள ஐஎஸ் இயக்கமும் தோற்கடிக்கப்பட வேண்டும் என டவுன்செண்ட் தெரிவித்தார்.
காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்து விட்டு திரும்பிய பக்தர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர், 21 பேர் காயம் அடைந்தனர்.
இதில் உயிரிழந்த நிர்மலா என்ற பெண்ணின் மகன் உருக்கமாக கூறியுள்ளதாவது, அமர்நாத் யாத்திரை சென்ற எனது தாய் நிர்மலா தாக்குர் கடந்த ஞாயிற்றுக்கிழமை என்னை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது பால்தால் என்ற பகுதியில் சென்றபோது, தங்களது பேருந்து மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதாக கூறினார்.
இதைகேட்ட பதறிய நான், உடனடியாக வீட்டுக்கு திரும்புங்கள் என கூறினேன், ஆனால் அவர் யாத்திரையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்புகிறேன் என கூறினார்.
தீவிரவாத தாக்குதலில் என் தாய் கொல்லப்பட்டது இன்று அதிகாலை 5.30 மணிக்கு தான் எனக்கு தெரியும். தாயுடன் யாத்திரை சென்ற பாக்கியமணி என்பவர் போன் செய்து கூறினார்.
இந்த தாக்குதலில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவித்தார். பத்திரமாக திரும்புவேன் என்று கூறிய எனது தாய் பிணமாக திரும்புவது எனது நெஞ்சை பிளக்கிறது என கூறியுள்ளார்.
பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு அம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் உறவினர்கள் ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள தலசாஜா கிராமத்தை சேர்ந்தவர் அன்கு மினியகா(30), நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மினியகாவின் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் உதவியை கோரியுள்ளனர்.
ஆனால் அம்புலன்ஸ் மறுக்கப்பட்டுள்ளது, இதையடுத்து கர்ப்பிணி பெண்ணை அவரின் உறவினர்கள் ஸ்ட்ரெச்சரில் வைத்து சுமந்து கொண்டே கரைபுரண்டோடிய நகபாலி ஆற்றை கடந்து அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மருத்துவமனையில் மினியகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் பேசிய “சேரி பிஹேவியர்” என்ற ஒற்றை வார்த்தை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியதாவது, “தமிழர் குடும்ப வாழ்க்கை முறையை சிதைக்கிற ஒரு நிகழ்ச்சியே இந்த பிக்பாஸ். ஒருவகையில் இது சேடிஸ்ட் யுக்தியாகவே பார்க்கிறேன்.
இந்த நிலையில் ‘சேரி பிஹேவியர்’ என்று காயத்ரி பேசியது, அப்பட்டமான சாதி ஆணவ, ஆதிக்கத் திமிர் ஆகும். அவரின் கீழ்த்தரமான சிந்தனையின் வெளிப்பாடு இது. ‘மனிதர்களுள் உயர்வு தாழ்வு கிடையாது’ என்ற, சமத்துவ சிந்தனை அவரிடமில்லை. அவருக்குள் ஊறிப்போயிருக்கும், ஆதிக்க சாதிய மனோபாவமே இவ்வகையான மோசமான பார்வையை வெளிப்படுத்தியுள்ளது .
அதை, எந்தவிதத் தடையுமில்லாமல் எப்படி அந்தத் தொலைக்காட்சி அனுமதித்தது… என்று தெரியவில்லை. என்னுடைய வருத்தமெல்லாம் எப்படி இதைக் கமல் அனுமதித்தார் என்பதுதான். கமல் முற்போக்கானவர். பெரியாரிய, திராவிடக் கருத்தோடு இயங்கி வந்தவர் என்பதால், அவர் மீது ஜனநாயக சக்திகளுக்குக் கூடுதல் மதிப்பு உண்டு.
ஆனால், அப்படிப்பட்டவரே, இதை அனுமதித்துள்ளார் என்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரின் கள்ள மௌனம் சமூக நீதிக்கு எதிரான செயலாகும். பணம் கிடைத்தால் மட்டும் போதும் என்று கமல் நினைத்துவிட்டாரோ? பணத்துக்காக எதையும் சொல்ல அனுமதிக்கலாமா? இப்படி ஒரு மோசமான வார்த்தையைக் காயத்ரி வெளிப்படுத்தியபோது, அதற்கு கமல் தடை விதித்திருக்க வேண்டும்.
தொலைக்காட்சி நிறுவனம் அதை ஏற்கவில்லை என்றால், சமூக நீதிக்கு எதிரான இந்தச் சாதியப் பேச்சுகளை அனுமதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று கமல், இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி வந்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் கமல், மேலும் நம் மனங்களில் உயர்ந்திருப்பார்.
ஆக, எந்த வகையிலும் இந்த நிகழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படியான சாதி ஆதிக்க மனோபாவக் கருத்துகள் வெளிப்படும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை போடவேண்டும் என்று கூறியுள்ளார்.
20 வருடங்களாக வெளி உலகத் தொடர்பே இல்லாமல் வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டிருந்த பெண்மணி ஒருவர் இன்று காவல்துறையால் மீட்கப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான சம்பவமொன்று இந்தியா, கோவாவில் இடம்பெற்றுள்ளது.
தனியார் பெண்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைக்கான சேவை அமைப்பு ஒன்றின் முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாகி இருக்கிறது.
கோவா பீச் ரிசார்ட்டுக்கு வெகு அருகிலிருக்கும் கிராமப் பகுதியான கண்டோலிமில் தான் இப்படி ஒரு சம்பவம் 20 ஆண்டுகளாக நிகழ்ந்து கொண்டிருந்திருக்கிறது.
ஆனால் இது குறித்த புகார்கள் எதுவும் இதுவரை தங்களுக்கு வந்ததில்லை என கோவா காவல்துறை தெரிவித்திருக்கிறது.
தினம் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் கோவா கடற்கரை கிராமம் ஒன்றில் 20 வருடங்களாக ஒரே அறைக்குள் பெண் ஒருவர் சிறை வைக்கப் பட்ட விதம் கடும் கண்டனத்திற்குரியதாகக் கருதப் பட்டாலும்,
இதன் பின்னணியை ஆராயும் போது மனிதர்களை மிருகங்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் விசயங்களில் முக்கியமானதாகக் கருதப் படும் மனிதாபிமானத்தின் மீது தான் சந்தேகம் எழுகிறது.
மனிதாபிமானம் என்ற ஒரு விசயமே இன்றைய குடும்ப அமைப்பில் இல்லாமல் போய் விட்டதோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.
மீட்கப் பட்ட அந்தப் பெண்மணி 20 வருடங்களுக்கு முன்பு தமது குடும்பத்தாரால் மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டவர்.
அந்தத் திருமண உறவு நிலைக்கவில்லை. தன் கணவருக்கு தன்னைத் திருமணம் செய்யும் முன்பே ஒரு வாழ்க்கை இருந்திருக்கிறது. அதில் மனைவி என்றொரு நபர் இருந்திருக்கிறார்.
தான் இரண்டாம் மனைவி அல்லது இரண்டாம் பட்சமான உறவு மட்டுமே எனத் தெரியவந்த நிலையில் அந்தப் பெண்மணி தனது கணவரிடம் கோபித்துக் கொண்டும், உறவை முறித்துக் கொண்டும் மீண்டும் தாய் வீட்டுக்குத் திரும்பி விட்டார்.
திரும்பியவருக்கு கடும் மன உளைச்சல் காரணமாக அப்நார்மல் பிகேவியர் (நடத்தைக் கோளாறு) இருந்திருக்கிறது.
இதன் காரணமாக அவரது மூர்க்கமான, வித்தியாசமான நடவடிக்கைகள் கண்டு பயந்த அவரது உடன்பிறந்தவர்கள் அப்பெண்ணை தங்களது பூர்வீக வீட்டின் ஓர் அறைக்குள் போட்டுப் பூட்டி வைத்திருக்கிறார்கள்.
உணவோ, தண்ணீரோ எல்லாமே ஒரு ஒரு சின்ன ஜன்னல் திறப்பினூடாக மட்டுமே என்று நாட்களைக் கடத்தி இருக்கிறார்கள்.
இப்படி கடந்த 20 வருடங்களாக அந்தப் பெண்ணுக்கும், வெளி உலகத்துக்குமான தொடர்பென்பது இந்த சிறு ஜன்னல் திறப்பின் வழியாக மட்டுமே என்றிருந்திருக்கிறது.
இதை அறிந்த பெண்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று இவ்விசயத்தை காவல்துறையின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல தற்போது அந்தப் பெண் மீட்கப்பட்டு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இதில் சோகமான விசயம் என்னவெனில்,
தமது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு இப்படியாகி விட்டால், முதலில் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டியது மருத்துவ சிகிச்சையும் அதன் பின்னர் குடும்பத்தினரின் அரவணைப்புமே என்பது ஏன் பெரும்பாலானோருக்குத் தெரிவதே இல்லை.
காரணம் தான், தன் மனைவி, தன் மக்கள் என்று சுருங்கி விட்ட சுயநல மனப்பான்மை தானே!
இந்தப் பெண் விசயத்திலும் அதுவே தான் நடந்திருக்கிறது. உடன் பிறந்தோர் இவர் விசயத்தில் தனிக் கவனம் செலுத்த விரும்பவில்லை.
உடன்பிறந்த குற்றத்திற்கு உணவும், தண்ணீரும் அளித்து ஒரு அறைக்குள் பாதுகாப்பாக சிறை வைத்திருந்தால் போதுமென தீர்மானித்து விட்டார்கள்.
கணவரைப் பிரிந்து வந்த நிலையில் மீண்டும் அவருக்கென பாதுகாப்பாக ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதற்கான முனைப்போ அல்லது அவரது மனப்பிரச்சினைகளைத் தீர்த்து அவரை இயல்பானவராக மாற்றும் ஆறுதலான நோக்கமோ எதுவுமே அவர்களிடத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.
கோவாவில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு மட்டுமே இப்படி நிகழ்ந்ததென்று கூற முடியாது. இந்தியாவெங்கும் கிராமங்கள் தோறும் இப்படியான பெண்கள் நிறைந்திருக்கிறார்கள்.
அவர்களது முதல் தேவை உணவோ, தண்ணீரோ அல்ல… அதை விட முக்கியமானது மனநல சிகிச்சை!
அது குடும்பத்தாரால் உணரப்பட்டால் மட்டுமே இப்படியானவர்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்க முடியும்.
கூரிய ஆயுதங்களினால் ஒருவரை வெட்டிக்கொலை செய்த மூன்று குற்றவாளிகளுக்கு பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குணதிலக்க இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் 12 வருடங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. கடந்த 2005 -11-17ம் திகதி பண்டாரகம அட்டலுகம பிரதேசததில் மொஹமட் இஸ்ஸதீன் என்பவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் 7 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவர்களின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
53 வயதான மொஹமட் லெப்பே மொஹமட் சகரியா,51 வயதான ஜமால்தீன் மொஹமட் ஃபஷிம், 34 வயதான மொஹமட் பாருக் மொஹமட் இக்பால் ஆகிய குற்றவாளிகளுக்கே மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையரை மற்றுமொரு இலங்கையர் கொலை செய்த வழக்கு பிரித்தானியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை நபர் ஒருவரின் மனைவி அவரை விவகாரத்து செய்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதனால் பொறாமைப்பட்ட முன்னாள் கணவர், மனைவியின் வாழ்க்கைக்கு புதிதாக வரும் நபரை கடத்தி சென்று அவரை தாக்கி கொலை செய்துள்ளார்.
ஞானசந்திரன் பாலச்சந்திரன் என்ற இலங்கையர் தனக்கு போட்டியாக வந்த சுரேன் சிவானந்தன் என்பவரை கொலை செய்ய இருவரை நியமித்துள்ளார்.
17 வயதான இளைஞர் உட்பட மூவர் இணைந்து 12 மணி நேரம் சுரேனை சிறைப்பிடித்தனர். பின்னர் Milton Keynes என்ற பிரதேசத்தை சுற்றி பல்வேறு இடங்களில் சுரேன் தொடர்ச்சியாக தாக்கப்பட்டுள்ளார்.
இறுதியாக 32 வயதான அவர் கொல்லப்பட்டார். தலையில் பாரிய காயங்களுக்கான அவரது இரத்தம் படிந்த உடை குளம் ஒன்றுக்கு அருகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவரது உடல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 21ம் திகதி அதிகாலை 4 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
சுரேனின் தலை மற்றும் கழுத்து பகுதியில் கிட்டத்தட்ட 39 காயங்கள் காணப்பட்டதாக வழக்கறிஞர் Prosecutor John Price QC தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது உச்சந்தலையில் தீவிர காயம் காணப்பட்டுள்ளதுடன் அவர் கண் கடுமையாக சேதமடைந்து காணப்பட்டுள்ளது.
“அவரது உடலில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளது. நீண்ட கால வன்முறைக்கமைய சுரேன் பழி தீர்க்கப்பட்டுள்ளார் என வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிறந்த சுரேன், பாலச்சந்திரனை விவாகரத்து செய்த மனைவியான ரகுபதி அன்னலிங்கம் என்பவரை சந்திக்க எத்தனை வாரங்களுக்கு முன்னர் சென்றார் என Luton Crown நீதிமன்ற ஜுரி வினவியுள்ளது.
இந்த ஜோடி இலங்கையில் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்தி கொண்டதோடு, பேஸ்புக் மூலம் மீண்டும் இணைந்தனர், பின்னர் ரகுபதி தனது மகிழ்ச்சியற்ற திருமணத்தை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்தார்.
18 ஆண்டுகளாக பார்க்காத பெண்ணை சந்திக்க சுரேன் பிரித்தானியா சென்றுள்ளார். ஆனால் இலங்கையிலுள்ள கலாச்சாரம் இந்த உறவை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதால், அவர்களது உறவு இரகசியமாக இருந்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 38 வயதான பாலச்சந்திரன், “நீ உன் கணவனுடன் வாழ முடியாது, எனவே நீ வேறு யாரையாவது அழைத்துச் செல், நீ ஒரு தவறானவள்” என கூறியுள்ளார்… என நீதிபதியிடம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்ற இரண்டு சந்தேகநபர்களான 30 வயதான கிரோராஜ் யோகராஜ் மற்றும் 24 வயதாக பிரசாந் தேவராசா ஆகியோர் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கொதி நீர் மற்றும் மின்சார உபகரணத்தை பயன்படுத்தி பாடசாலை மாணவனை சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் ஒன்று மாவத்தகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸாரினால் நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்திற்கு முகம் கொடுத்த சிறுவனின் வாக்குமூலத்திற்கமைய மேலும் 2 சந்தேக நபர்களை தேடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் இடம்பெற்று 25 நாட்களின் பின்னரே பொலிஸாரினால் சந்தேக நபர்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள முடிந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்த சிறுவன், மாவத்தகம ஹிதகால்ல பிரதேச பாடசாலையில் 9ம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார்.
கடந்த மாதம் 16ம் திகதி காலை சிறுவன் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த மூவர் மின்சார ஹீட்டரில் நீர் கொதிக்க வைத்து அந்த நீரை சிறுவனின் உடலில் ஊற்றியுள்ளனர். பின்னர் ஹீட்டரில் சிறுவனின் முகத்தில் சூடு வைத்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அந்த சிறுவனின் பெற்றோர் வீட்டில் இருக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
பின்னர் பிரதேச மக்களினால் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த சிறுவன் இன்னமும் தீவிர சிகிச்சை பிரிவிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊவாபரணகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரகொல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமி உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிமடை மத்திய மகா வித்தியாலயத்தை அண்மித்ததாக காணப்படும் உமா ஓயாவில் நேற்று முற்பகல் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 81 வயதான தாய், 32 வயதான மகள் மற்றும் மகளின் பிள்ளை ஆகிய மூவருமே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பிற்பகல் 1 மணியளவில் அப்பகுதிக்கு நீராடச் சென்ற நபரொருவர், மேற்படி மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்ததைக் கண்டு வெலிமடை பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.
வெலிமடை மொரகொல்ல பிரதேசத்தை சேர்ந்த கருப்பையா புஷ்பவதி (32), கதிராயி (81) மற்றும் இரண்டரை வயதான தங்கராஜா லெனினி என்ற சிறுமி ஆகிய மூவருமே இவ்வாறு சம்பவத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு நீதிவான் பரிசோதனைகளின் பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக வெலிமடை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டன. இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வரு கின்றனர்.
வியாழன் கிரகத்தின் மிகவும் அறியப்பட்ட `தி கிரேட் ரெட் ஸ்பாட்` என்ற பகுதியின் அமைப்பு மற்றும் தோற்றத்தை பற்றி ஆராய்வதற்காக , அதன் மேற்பகுதியில் நாசாவின் ஆளில்லா விண்கலம் ஒன்று பறந்து வருகிறது.
ஜுனோ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா ஆய்வு விண்கலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான பெரிய புயலான அந்த பெரும் சிவப்புப் பகுதி குறித்த நெருக்கமான தரவுகளை சேகரிப்பதற்காக வியாழனுக்கு மேல் 9,000 கிலோ மீட்டர் உயரத்தில் பயணித்து வருகிறது.
அப்பகுதியில் மேகங்களின் கட்டமைப்பு மற்றும் அவற்றின் கீழே என்ன இருக்கிறது என்பது குறித்து சோதிக்கவும், இந்தப் புயல் வளிமண்டலத்தின் ஆழத்தில் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் விரும்புகின்றனர்.
ஜுனோ விண்கலம் வியாழன் கிரகத்தை வந்தடைந்து 12 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்ததை விட, இந்த கிரகத்தின் காந்தப்புலம் அதிக பலத்துடன் இருப்பதையும் ஏற்கனவே இந்த விண்கலம் கண்டறிந்துள்ளது.
ஊழல் மற்றும் பண முறைகேடு செய்ததற்காக பிரேசில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாவுக்கு (Luiz Inacio Lula da Silva) ஒன்பதரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் 2003 முதல் 2010 வரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் லூயிஸ் இனாசியோ லுலா. இவரது பதவிக் காலத்தில் ஊழல் மற்றும் சட்ட விரோதமாக பணப்பறிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் மீதான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் மீதான் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், லூயிஸ் இனாசியோ லுலா குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது.
வவுனியாவில் டெங்கு நுளம்பின் தாக்கம் காரணமாக நகர்ப் பகுதியில் டெங்கு நுளம்பை ஒழிக்க விசேட நடவடிக்கை ஒன்று இன்று (12.07) மாலை மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா பொது சுகாதார பணிமனையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். அத்துடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டு அதனை அழிக்கும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
நகர்ப் பகுதியில் அமைத்துள்ள பாடசாலைகள், பள்ளிவாசல், வாகனங்கள் திருத்தும் இடங்கள், கடைகள் என்பனவற்றுக்கு அருகில் நுளம்பு பெருகும் இடங்களும் அழிக்கப்பட்டன. இதன்போது மக்களுக்கு டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.