பாகிஸ்தானின் நடுவர் அலீம் தார் அதிக டெஸ்ட் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியவர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் கேப் டவுனில் நடைபெறும் டெஸ்ட் போட்டியானது அவர் மத்தியஸ்தம் வகிக்கும் 332வது போட்டியாகும்.
அலீம் தார் 2000ஆம் ஆண்டு முதன் முதலில் டெஸ்ட் போட்டி ஒன்றில் நடுவராகப் கடமையாற்றியிருந்தார்.
இதற்கு முன்னர் அதிக டெஸ்ட்களில் நடுவராகப் பணியாற்றியவர் தென் ஆபிரிக்காவின் ரூடி கேர்ட்சன் ஆவார். இவர் 331 டெஸ்ட் போட்டிகளில் நடுவராகப்பணியாற்றியதுடன் 2010 இல் ஓய்வு பெற்றார்.
19 வயதான இளைஞன் ஒருவனை சூட்கேஸ் ஒன்றுக்குள் ஒளித்து வைத்து, வட ஆபிரிக்காவில் ஸ்பானிய ஆளுகைக்குட்பட்ட பிராந்தியத்துக்குள் கடத்திச் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவரை ஸ்பானிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30 ஆம் திகதி இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
ஆபிரிக்க கண்டத்தின் வட பகுதியில், மொரோக்கோவுக்கு அருகில் செவ்ட்டா எனும் நகரம் உள்ளது. 18.5 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட இந் நகரம் ஸ்பானிய ஆட்சிக்குட்பட்டதாகும்.
இதனால், மொரோக்கோவிலிருந்து செவ்ட்டாவுக்குள் நுழைவதற்கு பலர் முயற்சிக்கின்றனர். இதைத் தடுப்பதற்காக செவ்ட்டாவுக்கும் மொரோக்கோவுக்கும் இடையில் அதிக உயரமான வேலிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த வேலிகளுக்கு மேலாக ஏறி செயுட்டாவுக்குள் நுழைபவர்களை தடுப்பதற்கு ஸ்பானிய பொலிஸார் கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். புத்தாண்டுத் தினமான கடந்த ஞாயிறன்று அதிகாலை 4 மணியளவில் சுமார் 1100 பேர் இவ்வாறு மொரோக்கோவிலிருந்து செவ்ட்டாவுக்குள் நுழைய முயன்றபொது ஸ்பானிய படையினர் அவர்களை கலைக்க முற்பட்டனர்.
இதன்போது, குடியேற்றவாசிகள் கற்களை எறிந்ததால் சுமார் 50 படையினர் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்துக்கு முன்னதாக, சட்டரீதியாக செவ்ட்டா பிராந்தியத்துக்குள் சென்ற மொரோக்கோ பெண் ஒருவர், சூட்கேஸ் ஒன்றுக்குள் 19 வயதான இளைஞனை ஒளித்து வைத்து கடத்த முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
மேற்படி இளைஞன் ஆபிரிக்க நாடான கெபோனைச் சேர்ந்தவன் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மொரோக்கோ பெண்ணை ஸ்பானிய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
புறப்படத் தயாராகவிருந்த பயணிகள் விமானம் ஒன்றில், மதுபோதையிலிருந்த விமானி கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் கல்கெறி நகரிலிருந்து மெக்ஸிகோவின் கன்குன் நகருக்குப் புறப்படவிருந்த சன்விங் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியே மதுபோதையிலிருந்த குற்றச்சாட்டில் கடந்த சனிக்கிழமை கைது செய்ப்பட்டுள்ளார்.
37 வயதான மிராஸ்லோவ் குரோனிச் எனும் இவ் விமானி, விசித்திரமாக நடந்துகொள்வதையும் பின்னர் உணர்விழந்திருப்பதையும் விமான ஊழியர்கள் அவதானித்தனர்.
இது தொடர்பான அதிகாரிகளுக்கு ஊழியர்கள் தகவல் கொடுத்ததையடுத்து, அவ்விமான அறையிலிருந்து அவ்விமானியை அதிகாரிகள் வெளியேற்றினர்.
அவ் விமானி கைது செய்யப்பட்டு இரு மணித்தியாலங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது அவரின் உடலில் அனுமதிக்கப்பட்டதைவிட 3 மடங்கு அல்கஹோல் இருப்பது தெரியவந்தது.
நூற்றுக்கும் அதிகமான பயணிகளைக் கொண்ட அவ் விமானத்தை பின்னர், வேறொரு விமானி மெக்ஸிகோவுக்கு செலுத்திச் சென்றார்.
இந்தியாவில் ஒட்டிப் பிறந்த இரு சகோதரிகள் 11 வருடங்களுக்கு மேலாக வைத்தியசாலை ஒன்றில் தங்கியிருந்த நிலையில், சிறுவர் இல்லமொன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வீணா, வாணி எனும் இச்சகோதரிகள் 14 வயதானவர்கள். இவர்கள் பிறக்கும் போது இருவரின் தலைகளும் ஒன்றுட னொன்று ஒட்டியி ருந்தன. கடந்த 11 வருடங்களாக இவர்கள் ஹைதராபாத் நகரிலுள்ள வைத்தியசாலை யொன்றிலேயே தங்கியிருந்தனர்.
சிறிய அறையொன்றில் நீண்ட காலமாக தங்கியிருந்ததால் சுகாதார பிரச்சினைகளை இவர்கள் எதிர்கொண்டனர். வீணாவும், வாணியும் தங்க வைக்கப்பட்டிருந்த சிறிய அறையில் பொருத்தப்பட்டிருந்த வாயு சீராக்கி முறையாக இயங்கவில்லை எனவும், காற்றோட்ட வசதி இல்லாததால், இச் சிறுமிகள் தோல் நோய்கள் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர் எனவும் தொண்டர் நிறுவனங்கள் தெரிவித் திருந்தன.
இந்நிலையில், இச் சகோதரிகள், அரசாங்கத்தினால் நடத்தப்படும் சிறுவர் விடுதி யொன்றுக்கு நேற்று முன்தினம் அனுப்பப்பட்டனர். இதன்மூலம் இச் சகோதரிகள் ஆரோக்கியமான சூழலில் வாழ்வ தற்கும் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், நீண்ட காலமாக தாம் தங்கியிருந்த வைத்தியசாலையிலிருந்து வெளியேறிச் செல்வது இச்சகோதரிகளுக்கும் வைத்திய சாலை ஊழியர்களுக்கும் மனோரீதியில் கடினமானதாகவே இருந்ததாம்.
இச் சகோதரிகளுக்கு ஒரு வருடமாக கல்வி போதித்த ஆசிரியையான வி.அனூஷா கூறுகையில், ‘இந்த இரட்டையர்களுடன் நான் உணர்வு பூர்வமாக பிணைக்கப்பட்டிருந்தேன். அவர்கள் என்னை தமது மூத்த சகோதரியாக கருதினர்’ எனத் தெரிவித்துள்ளார்.
இச் சிறுமிகள் மிகுந்து புத்திகூர்மையானவர்கள். அவர்களில் ஒருவர் மிக சிறப்பாக பாடுகிறார் என சிறுவர் இல்லத்தின் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வன்னி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் உள்ளிட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விவசாயக் கிணறுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பாவிற்கு சிவசக்தி ஆனந்தன் எம்.பி நேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தின் முழுவடிவம் வருமாறு..
பருவ மழை பொய்த்ததன் காரணமாக வட மாகாணம் முழுவதும் குறிப்பாக வன்னி மாவட்டம் பெரும் வறட்சியை எதிர் நோக்கியுள்ளது. குடிநீர் முதல் பயிர்ச்செய்கை வரை அனைத்தும் கேள்விக்குள்ளாகியுள்ளது. விதைக்கப்பட்ட பல வயல் நிலங்கள் தண்ணீர் இன்றி அழிந்தும் அழிந்து கொண்டும் இருக்கிறன.
அடுத்த சில தினங்களில் குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவும் சூழல் உருவாகி வருகிறது. விரைந்து செயற்படவில்லையெனில் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும். இந்த சூழலை இயற்கைப் பேரிடராகக் கருதி விரைந்து செயற்பட்டு பயிர் நிலங்களை காப்பாற்றுவதற்கு விவசாயக் கிணறுகளும், அழிந்து போன வயல் நிலங்களுக்கு நஷ்டஈடும், வறட்சி நிவாரணமும். மேட்டு நில பயிர் செய்கைக்கான தானியங்கள், விதைகள், மாற்று பயிர் செய்கையை ஊக்குவித்தல், ஏனைய வசதிகள், நீர் இறைக்கும் இயந்திரம் உட்பட குடி நீர் பிரச்சனையை தீர்பதற்குரிய சகல நடவடிக்கைகளையும் எடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தின் பிரதிகள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்களுக்கே வவுனியா நெற் களஞ்சிய சாலையில் உள்ள நெல்லை வழங்க வேண்டும் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் வவுனியா அரசாங்க அதிபருக்கு தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள நெற் களஞ்சியசாலையில் உள்ள நெல்லை எடுத்துச்செல்ல தென்பகுதியில் இருந்து பாரஊர்திகள் வவுனியாவிற்கு வருகை தந்திருந்த நிலையில் வவுனியா மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இந் நிலையிலேயே வடமாகாண சுகாதார அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் ஹரிசன் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியிருந்த நிலையில் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 8 அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு மாத்திரம் நெல்லை வழங்க அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இந் நிலையில் வவுனியா மாவட்டத்தில் அரிசி ஆலைகளில் பணியாற்றுபவர்களின் தொழில்வாய்ப்பு உட்பட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி வவுனியாவில் உள்ள அரிசி ஆலைகளுக்கு நெல்லினை வழங்க நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
வவுனியா பொது வைத்தியசாலையில் புத்தாண்டு தினமான 01.01.2017 அன்று ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று முன்தினம் (02.01.2016) மாலை இரு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாகவும் நேற்று (03.01.2016) மற்றொரு பிள்ளையும் இறந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ் விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் அவர்களிடம் வினவிய போது..
புத்தாண்டு தினத்தில் (01.01.2017) ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை தாய் ஒருவர் பெற்றெடுத்தார். இக் குழந்தைகளின் நிறை குறைவாக காணப்பட்டமையினால் சிறுவர் (குழந்தை) சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பாக இவர்களின் நிறை 600 கிராம், 550 கிராமாக காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தங்களுடைய ஊதியம் வழங்கப்படாதபோது, போராட்டங்கள் நடத்திய வெளிநாட்டு தொழிலாளர்கள் பலருக்கு சிறை தண்டனையும், கசையடிகளும் வழங்கப்பட்டிருப்பதாக சவுதி அரேபியாவிலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
45 நாட்கள் முதல் 4 மாதங்கள் வரையிலான சிறை தண்டனையை மெக்காவிலுள்ள நீதிமன்றம் ஒன்று சுமார் 50 தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளதாக சவுதி செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளன.
சிலருக்கு 300 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளன.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் சவுதி பொருளாதாரம் பாதிக்கப்பட்டபோது, பல மாதங்கள் அதிக அளவிலான தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காத சவுதி பின்லாடின் என்ற கட்டுமான ஜம்பவான் நிறுவனத்தோடு தொடர்புடைய வழக்கு இதுவாகும்.
இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல பேருந்துகள் கோபமடைந்த தொழிலாளர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சி செய்த நோர்வே பிரஜாவுரிமை பெற்ற இளைஞனும், சிறுமியின் தாயும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் நேற்று முன்தினம் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஆசிகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் நின்ற 12 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்தாக நோர்வே பிரஜாவுரிமை பெற்ற 28 வயது இளைஞன் ஒருவர் நேற்றுமுன்தினமிரவு கைது செய்யப்பட்டார்.
நோர்வேயில் இருந்து வந்த நிலையில் வவுனியாவில் தங்கியிருக்கும் குறித்த இளைஞர், சிறுமியின் தாயாருடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அவ்வீட்டிற்கு சென்று வருபவராகும். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் குறித்த சிறுமி தனிமையில் இருந்த சமயம் பாலியல் துஸ்பிரயோக முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து சிறுமி, தனது உறவினர்களிடம் தெரிவித்ததையடுத்து சிறுமியின் சகோதரி வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பில் விசாரணை நடத்திய பொலிசார் குறித்த 28 வயது இளைஞனையும், சிறுமியின் 41 வயது தாயையும் கைது செய்தனர்.
குறித்த இருவரையும் நேற்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விண்கற்கள் பொழிவை இலங்கையர்கள் இன்றிரவு 8 மணிமுதல் 9 மணிவரையும், நாளை அதிகாலை 4 மணியளவிலும் அவதானிக்க முடியுமென இலங்கை கோள்மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை காலை 4 மணிமுதல் 5 மணிவரை விண்கற்கல் பொழிவை தெளிவாக அவதானிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மணித்தியாலத்திற்கு சராசரியாக 40 விண்கற்கள் விழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விண்கற்கல் மழை ஜனவரி 1ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை பொழியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இதுவே இந்த வருடத்துக்கான முதல் விண்கற்கல் பொழிவாகும். இருப்பினும், விண்கற்கள் பொழிவு ஏப்ரல் 22 மற்றும் 23ஆம் திகதிகள், மே 6 மற்றும் 7ஆம் திகதிகள், ஜூலை 28 மற்றும் 29ஆம் திகதிகள், ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் பொழியும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கோள்மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மற்றும் 21, 22 ஆம் திகதிகள், நவம்பர் 17, 18 மற்றும் டிசம்பர் 13, 14 மற்றும் 21, 22 ஆம் திகதிகளில் விண்கற்கள் பொழிவினை அவதானிக்க முடியும் என 2017 ஆண்டுக்கான இலங்கை கோளரங்கம் வானியல் நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இலங்கையின் நாணய பெறுமதியானது பாரிய சரிவை நோக்கி நகரும் நிலையில் உள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எதிர்வரும் காலத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை இது பாரிய சவாலுக்குட்படுத்தும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் 2016 ஆம் ஆண்டில் மட்டும் நாட்டின் பணப் பெறுமதியானது சுமார் 3.9 விகிதத்தால் பெறுமதியை இழந்துள்ளது.
இது ஒரு அமெரிக்க டொலருக்கான இலங்கை பெறுமதியாக 150 ரூபா தொடக்கம் 150.75 சதத்தை கொண்டிருந்தது. வருட இறுதியில் 151 ரூபாவாக உயர்ந்துள்ளது.
குறித்த பணப் பெறுமதி இழப்பானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச பங்கு பரிவர்த்தனைகளை சாவாலுக்குட்படுத்தி வருவதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் திடிரென புகுந்த நல்ல பாம்பினால் மக்கள் சிதறி ஓடினர். இச்சம்பவம் நேற்றுக்(02.01.2017) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
சன நெரிசல் மிக்க இலங்கை மின்சார சபை வீதிக்கு அருகில் திடீரென உட்புகுந்த குறித்த பாம்பு அங்காங்கே ஓடித் திரிந்தது. இதனால் பொருட்களை கொள்வனவு செய்ய வந்த மக்கள் பாம்பை கண்டதுடன் பதற்றத்துடன் சிதறி ஓடியதை காண முடிந்தது.
குறித்த பாம்பு பின்பு அப்பகுதியில் உள்ள கடையொன்றுக்குள் சென்று குளிர்சாதனப் பெட்டியில் மறைந்து கொண்டது. இதனைப் பார்த்த அக்கடையின் உரிமையாளர் பாம்பை குளிர்சாதனப் பெட்டியிலிருந்து அகற்ற வீதியில் சென்றவர்களின் உதவியை நாடியுள்ளார்.
இதன் போது அப்பகுதியால் வந்த இளைஞர் ஒருவர் பாம்பைப் பிடிக்க பேரம் பேசியதுடன் இலாவகமாக அப்பிள் கடையிலிருந்து நல்ல பாம்பை பிடித்து வேறு இடத்தில் விடுவதற்காக எடுத்துச் சென்றார்.
இந்த ஆண்டின் இறுதியில், அனைத்து விதமான யானைத் தந்த வர்த்தகம் மற்றும் பதப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது.
யானைகளின் எதிர்காலத்தை பொறுத்தவரையில் இந்த முடிவு ஒரு “வரலாற்று ரீதியான முடிவு´´ என்றும், யானைகளின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையளிக்கும் முடிவு என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தென் ஆப்பிரிக்காவில் நடந்த, அருகிவரும் உயிரினங்களைச் சந்தைப்படுத்தும் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டில் (Cites)-சைட்ஸ்) கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தை அடுத்து இந்த நகர்வு ஏற்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய யானைத் தந்த சந்தையை சீனா கொண்டுள்ளது. உலகின் 70 சதவீத யானை தந்த வர்த்தகம் சீனாவில் நடப்பதாகவும் சில மதிப்பீடுகள் உள்ளன.
சீனாவில் ஒரு கிலோ யானைத் தந்தம் சுமார் ரூ 71,355, அதாவது 1,100 அமெரிக்க டொலர்கள் அல்லது 850 பிரிட்டன் பவுண்ட் மதிப்பீட்டைப் பெற முடியும். கடந்த வெள்ளியன்று சீனாவின் மாநில கவுன்சில் இந்தத் தடை குறித்த விவரங்களை அறிவித்தது.
யானைத் தந்த வணிக செயலாக்க நடவடிக்கை மற்றும் விற்பனை இந்த ஆண்டு மார்ச் 31-ஆம் திகதியுடன் நிறைவடையும் என்றும், பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்கள் படிப்படியாக இந்த வர்த்தகத்தில் இருந்து நிறுத்தப்படுவார்கள் என்றும் இந்த வர்த்தகம் இந்த ஆண்டின் இறுதியில் முடிவுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சமீபத்திய செய்தியை, உலகளாவிய இயற்கை நிதியம் (WWF) என்ற பாதுகாப்பு குழு வரவேற்றுள்ளது. இந்த முடிவு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பு என்றும், உலகின் யானைத் தந்தத்திற்கான முதன்மை சந்தையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சமிக்ஞை இது என்றும் குறிப்பிடபட்டுள்ளது.
மேலும், ஆப்பிரிக்காவில் யானைகள் வேட்டையாடுவதைத் தடுப்பதற்கான சர்வதேச அளவில் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு உத்வேகம் அளிக்கும் முடிவு இது என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பெரிய அளவில் தலைமை ஏற்றுள்ள சீனாவை வனஉயிரின வர்த்தகம் மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு குழுவின் துணை இயக்குநரான எல்லி பெப்பர் புகழ்ந்துள்ளார்.
சீனாவில் இருக்கும் யானை தந்தத்திற்கான மிகப் பெரிய உள்நாட்டுச் சந்தையை, ஒரே அடியாக முடிவுக்கு கொண்டுவர மிகத் தீவிரமான கால அளவைக் கொண்டுவந்துள்ளது உலகளவில் குறிப்பிடத்தக்க செயலாகும், என்றார் அவர்.
இந்த முடிவு தற்போதுள்ள யானைகளை காப்பாற்றுவதற்கான முக்கியமான திருப்புமுனை,´´ என்று அவர் கூறினார்.
1989ல் யானைத் தந்தத்திற்கான சர்வதேச சந்தை மூடப்பட்டாலும், உலகின் பல நாடுகளிலும் சட்டப்பூர்வமாக உள்நாட்டுச் சந்தைகள் செயல்பட்டு வந்தன.
கிரேட் எலிபண்ட் சென்சஸ் (Great Elephant Census) என்ற யானை தொகை கணக்கெடுப்பில், கடந்த ஏழு ஆண்டுகளில் யானைகள் கொல்லப்படும் சம்பவங்கள் பெரிய எண்ணிக்கையில் உயர்ந்ததுள்ளது என்றும், இதனால், ஆப்பிரிக்காவில் யானைகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக சுருங்கியது என்றும் தெரியவந்துள்ளது.
அக்டோபர் மாதம் சைட்ஸ் (Cites) தீர்மானத்திற்கு சீனா ஆதரவு அளித்ததால், யானைத் தந்த வர்த்தகத்திற்குத் தடை கொண்டுவரும் முடிவுக்கு இருக்கும் பலம், அங்குள்ள பங்கேற்பாளர்களை ஆச்சரியப்பட வைத்தது.
இன்னும் வலுவான தீர்மானத்தை சீனா விரும்பியதாக சில பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
புஸ்ஸல்லாவ நீவ் மெல்போட் தோட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் திவியராஜன் (வயது 23) என்ற இளைஞன் நேற்று (2) இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தந்தை உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு இன்று (03) காலையில் வீடு திரும்புகையில் இவர் தூக்கில் தொங்கி உயிரிழந்திருப்பதை கண்டுள்ளார்.
பின்னர் அயலவர்களின் உதவியுடன் புஸ்ஸல்லாவ வகுகபிட்டிய வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய இளைஞரை அனுமதித்துள்ளனர்.
எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாக இவர் இறந்துள்ளார். சடலம் பிரேத அரையில் வைக்கபட்டு பிரேத பரிசோதனை¸ பொலிஸ் விசாரணை மற்றும் வாக்கு மூலங்களின் பின்னர் பிரேதம் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.
இந்த தற்கொலைக்கு காதல் தான் காரணம் என சந்தேகிக்கபடுகின்றது. மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சபரிமலை யாத்திரிகர் ஒருவருடன் சுமார் 600 கிலோ மீற்றர்கள் நடந்தே சென்ற ‘மாலு’ என்ற நாய், மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.நவீன் (37) என்பவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவர், உடுப்பியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் திகதி கால்நடையாகவே சபரிமலைக்குப் புறப்பட்டார்.
சுமார் 80 கிலோ மீற்றர் கடந்திருந்தபோது, வீதியின் எதிர்ப்புறமாக நாய் ஒன்று நவீனைப் பின் தொடர்ந்தது. சற்று நேரத்தில் வீதியைக் கடந்து நவீனின் பின்னால் வரத் தொடங்கியது. அதை விரட்ட நவீன் எவ்வளவோ முயற்சித்தபோதும், எந்த விதத் தொந்தரவும் தராத அந்த நாய் அவரையே பின்தொடர்ந்து சென்றது. ஓரிரு நாட்களில் நவீனும் நாயும் நண்பர்களாகினர்.அந்த நாய்க்கு மாலு என்று பெயரிட்ட நவீன், அதற்கு கறுப்புப் பட்டியையும் முத்து மாலை ஒன்றையும் மாட்டிவிட்டார்.
நவீன் சபரிமலையை அடைய எடுத்துக்கொண்ட பதினெட்டு நாட்களும் அந்த நாய் அவரையே பின் தொடர்ந்தது. நவீனை விட்டு ஒரு சில மீற்றர் இடைவெளியில் அவரைத் தொடர்ந்த அந்த நாய், இரவில் நவீன் தூங்கும்போது அவரது பொருட்களுக்கு பாதுகாப்பாகவும் இருந்தது. இவ்வாறு சுமார் 600 கிலோ மீற்றர் தூரத்தை நடந்தே கடந்திருக்கிறது மாலு.
யாத்திரை முடிந்து வீடு திரும்பும்போது, விசேட அனுமதி பெற்று மாலுவை பேருந்தில் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார் நவீன். தற்போது, நவீனின் குடும்ப உறுப்பினர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள மாலு அவர் வீட்டிலேயே தங்கியிருக்கிறது.