வவுனியாவில் இயங்கிவரும் யூரோப்பியன் லங்வேஜ் தனியார் சர்வதேச கற்கைமொழி பயிற்சி நிலையத்தின் மூன்றாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்வும் நேற்று (20.12.2016) காலை 10 மணியளவில் இறம்பைக்குளம் விருந்தினர் விடுதியில் நிர்வாக இயக்குநர் கே.வின்சட் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அந்நிறுவனத்தில் சர்வதேச மொழியினை பயின்ற 28 மாணவர்களுகளுக்கு சர்வதேச தரச் சான்றிழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஓய்வு நிலை அதிபர் திருமதி.ஜி.நடராசா, போதகர் ஜெயசீரன், போதகர். றோலனஸ், போதகர், சரத்குமார் மற்றும் நிறுவனத்தின் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
சர்வதேச மொழியினை பயின்ற மாணவர்களின் அனுபவப்பகிர்வுகள், மாணவர்களின் கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ அரிஹர சுதன் ஐயன் ஐயப்ப சுவாமியின் மகரஜோதி மண்டல விரத சக்தி பூஜை பெருவிழா கடந்த திங்கட்கிழமை (19.12.2016) காலை இந்து அன்பக இயக்குனர் கு.ஜெயராணி (சாமி அம்மா) தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
சபரிமலை செல்லவுள்ள சுவாமிகளுக்கு மாலை அணிவித்து இப் பூஜை சிறப்பாக இடம்பெற்றது.
இன் நிகழ்வில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வருகைதந்த சுவாமிகள் கெளரவிக்கப்பட்டதுடன், அலங்கார தீபாராதனை, ஆனந்தமிகு ஐயப்பனின் பஜனைகள், பதினெட்டாம் படிப்பூஜை, மகா தீபாராதனை, பாத தரிசனம், சக்தி பூஜை(அன்னதானம்) என்பன சிறப்பாக இடம்பெற்றன.
வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் கடந்த 15.12.2016 அன்று 5 சிறுவர்களின் பிறந்ததினம் இந்து அன்பக இயக்குனர் கு.ஜெயராணி (சாமி அம்மா) தலைமையில் கொண்டாடப்பட்டது.
பிறந்தநாளை 5 சிறுவர்களும் மிகவும் மகிழ்வுடன் அன்பக சிறுவர்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
இவ் அன்பகத்தில் 60 க்கும் மேற்ப்ட்ட சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருவதுடன். இவர்களுக்குத் தேவையான உதவிகளை புலம்பெயர் உறவுகள் செய்து வருவதுடன் இங்குள்ளவர்களும் நேரடியாகச் சென்று குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு நீங்களும் நேரடியாகச் சென்று பார்வையிட்டு உதவிகளை செய்யமுடியும்.
ரவீந்திர ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சின் மூலம் இங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியையும் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 75 ஒட்டங்களால் வெற்றி கொண்டது.
இந்த வெற்றியின் மூலம் 05 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 4-0 எனும் கணக்கில் இந்திய அணியின் வசமானது.
சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கும் நோக்குடன் விக்கெட் இழப்பின்றி 12 ஓட்டங்களுடன் இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து தொடர்ந்தது.
அலிஸ்டயர் குக் மற்றும் கீட்டன் ஜென்னிங்ஸ் ஜோடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கியதோடு, 103 ஓட்டங்களைப் பெற்ற வேளையில், இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது.
தொடர்ந்து வந்த இங்கிலாந்து துடுப்பாட்ட வீர்ரகள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாற்றத்தை எதிர்க்கொண்டனர்.
அணியின் அதிகபட்ச ஓட்டமாக கீட்டன் ஜென்னிங்ஸ் பெற்ற 54 ஓட்டங்கள் மாத்திரமே பதிவானதோடு இங்கிலாந்தின் ஏனைய 07 துடுப்பாட்ட வீரர்களும் 20 க்கும் குறைவான ஓட்டங்களோடு ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா அபாரமாக பந்துவீசி இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலையச் செய்ததோடு, 07 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக இங்கிலாந்து அணியின் லியம் டொவ்சன் தெரிவு செய்யப்பட்டதோடு, இந்தப் போட்டியில் முச்சதம் கடந்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய கருண் நாயர் தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதிற்கு பாத்திரமானார்.
வவுனியாவில் இன்று(20.12.2016) இரவு 7 மணியளவில் மூன்றாம் குறுக்குத் தெருவில் இரண்டு இராணுவ வீரர்கள் கஞ்சா பாவனையில் ஈடுபட்டபோது பொலிசார் இருவரையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று 20.12.2016 இரவு 7 மணியளவில் மழை பெய்து கொண்டிருந்தபோது மக்களற்ற பகுதியில் சிவில் உடையில் இரண்டு இராணுவ வீரர்கள் கஞ்சா பாவனையில் ஈடுபட்டிருந்தபோது பொலிசார் கைது செய்துள்ளதாகவும் இவ்விருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா நெல்சிப்(NELSIP) திட்டத்தில் புனர்நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நாளை 21.12.2016 அன்று உத்தியோகபூர்வமாகத்திறந்து வைக்கப்பட உள்ளதாக வவுனியா நகரசபைச் செயலாளர் ஆர்.தயாபரன் தெரிவித்தார்.
நீண்டகாலமாக இப் புணரமைப்புப்பணிகள் இடம்பெற்று வந்ததுடன் அனைத்து வேலைகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டு நாளை (21.12.2016) பிற்பகல் 3 மணிக்கு பொதுமக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
வவுனியா நகரசபைச் செயலாளர் தலைமையில் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரும் நெல்சிப் திட்டப்பணிப்பாளருமான பொ.குகநாதன் மற்றும் உலக வங்கி உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள், எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
வவுனியா நகரசபை, நெல்சிப் திட்டம் என்பன இணைந்து சுமார் 10 மில்லியன் ரூபா செலவில் பொதுப் பூங்கா புணர்நிர்மாணம் செய்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்றயதினம் (19.12.2016) சுவிஸ் வாழ் உறவுகளான தீபன் சுகந்தினி தம்பதிகளின் புதல்வி செல்வி .ஆர்.றஸ்மியா அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வழங்கப்பட்டது.
இன் நிகழ்வுகள் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது, நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமாகிய க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக வவுனியா வாடி வீட்டின் இயக்குனரும், இந்து அன்பகத்தின் ஆயுள் கால உறுப்பினருமான மா.கதிர்காமராஜா, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகரான முத்தையா கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களினை இந்து அன்பக இயக்குனர் கு.ஜெயராணி (சாமி அம்மா) அவர்களின் முன்னிலையில் வழங்கினார்கள்.
இன் நிகழ்வுகளில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் த.நிகேதன், உபதலைவர் பி.கெர்சோன், அமைப்பாளர் வ.பிரதீபன், கலாசார பிரிவின் ஒழுங்கமைப்பாளர் தே.பிரகாஸ்கர், உறுப்பினர் த.ரவி ஆகியோருடன் இன் நிகழ்வில் அன்பத்தின் நிர்வாகசபை உறுப்பினர்களுடன், ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் பார ஊர்தி ஒன்று கனகராயன்குளம் ஏ9 வீதியில் இன்று(20.12.2016) அதிகாலை மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற பார ஊர்தியானது வீதியை விட்டு விலகி உயர் அழுத்த மின் விநியோக கம்பம் ஒன்றுடன் மோதியது.
இதனால் மின்கம்பம் முற்றாக முறிந்து வீழ்ந்துள்ளது. மின் கம்பம் முறிந்து விழுந்தமையால் அப்பகுதியில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது. விபத்து காரணமாக பார ஊர்தியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் துருக்கிக்கான ரஷ்யத் தூதுவர் ஆண்ட்ரை கார்லோவ் பலியாகியுள்ளார்.
துருக்கி பொலிஸ் அதிகாரி ஒருவராலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்தை தனது கெமராவில் பதிவு செய்த அசோசியேட்டட் பிரஸ்ஸின் புகைப்படக் கலைஞர் புர்கான் ஒஸ்பிலிக் தனது ஆபத்தான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,
ரஷ்யாவைப் பற்றிய புகைப்படக் கண்காட்சி அது. ரஷ்யாவின் கலின்ங் கிராட் நகர் முதல் கம்சாட்கா நகர் வரையான புகைப்படங்கள் அந்தக் கண்காட்சியில் இடப்பெற்றிருந்தன. எனவே, அந்த கண்காட்சியில் நான் கலந்துகொள்ள முடிவு செய்தேன். ஏனெனில், என் அலுவலகத்திற்கு செல்லும் வழியில்தான் அந்தக் காண்காட்சி நடைபெற்றது.
நான் கண்காட்சிக்கு நுழையும் முன்னே அங்கு உரைகள் தொடங்கப்பட்டு விட்டன. அதற்கு பின் ரஷ்ய தூதர் ஆண்ட்ரை கார்லோவ் தனது உரையைத் தொடங்கினார்.
நான் புகைப்படம் எடுப்பதற்காக அவரது அருகில் சென்றேன். துருக்கி – ரஷ்ய உறவுக்கு உபயோகிக்கப்படும் வகையில் அந்தப் படங்கள் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்.
அதுவரை அவ்விடம் வழக்கமான புகைப்பட கண்காட்சி நிகழ்ச்சியாகவே அது இருந்தது.
பிறகு திடீரென்று கருப்பு நிற கோட் சூட் அணிந்த அந்த நபர் துப்பாக்கியை வெளியே எடுக்கும்போது நான் திகைத்து நின்றேன். நான் அதனை திரைப்பட காட்சி என்று முதலில் நினைத்தேன்.
குறுகிய முடி வைத்திருந்த அந்த நபர் துப்பாக்கியை எடுத்து துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரை கார்லோவை 8 முறைச் சுட்டார். அங்கிருந்த மக்கள் பயந்து அங்கிருந்த மேசைகளுக்கு அடியில் பதுங்கிக் கொண்டனர். நான் சற்று பயந்து குழம்பிய நிலையில் இருந்தேன். இருந்தாலும் நான் சுவருக்கு பின்னால் ஒழிந்துகொண்டு புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன். மிக நிதானமாக திட்டமிட்டு இந்தப் படுகொலையை அந்த நபர் செய்தார்.
அதன்பின் அங்கு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பார்வையாளர்கள் பீதி அடைந்தனர். சுடப்பட்ட ரஷ்ய தூதர் எனக்கு சிறிய தொலைவிலே தரையில் வீழ்ந்து கிடந்தார். அவரது உடலிலிருந்து எந்த இரத்தமும் வெளிவரவில்லை. ஒரு வேளை அந்த நபர் அவரை பின்னால் சுட்டிருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
‘உலக அழகி 2016’ உலக அழகிப்போட்டி அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள அக்சான் கில்நகரில் நடைபெற்றது.
அதில் 50க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.
பல சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன. நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. அதில் கென்யா, பிலிப்பைன்ஸ், புவேர்ட்டோ ரிக்கோ, டொமிகன் குடியரசு மற்றும் இந்தோனேசியா ஆகிய 5 நாடுகளின் அழகிகள் கலந்து கொண்டனர்.
அதில் புவேர்ட்டோ ரிக்கோ நாட்டை சேர்ந்த ஸ்டெபானி டெல்வாலே என்ற 19 வயது இளம்பெண் உலக அழகி பட்டம் வென்றார்.
இந்நிலையில், உலக அழகிப் போட்டியில் முதல் 20 இடங்களுக்குள் இந்திய பெண் ஒருவர் இடம்பெற்றுள்ளார். மிஸ்வேர்ல்டு 2016 போட்டியில் இந்திய அழகி ப்ரியதர்ஷினி சாட்டர்ஜி 17வது இடத்தைப் பிடித்துள்ளார். டெல்லியில் வசித்து வரும் பிரியதர்ஷினி, சமூகவியல் படித்து வருகிறார்.
இறுதியாக இந்தியாவின் சார்பில் பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்றார். அதற்கு முன்பாக ரீட்டா பரியா(1966), ஐஸ்வர்யா ராய்(1994), டையானா ஹைடன்(1997) மற்றும் யுக்தா முக்கே பட்டங்களை வென்றுள்ளனர்.
வவுனியா மகாறம்பைக்குளத்தில் நேற்று (19.12.2016) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா மாகாறம்பைக்குளத்தில் நேற்று இரவு 9 மணியளவில் இரு அயலர்களுக்கிடையே வாக்குவாதம் இடம்பெற்று இவ் வாக்குவாதம் மோதலாக மாறி வாள் வெட்டுச்சம்பவத்துடன் முடிவடைந்துள்ளது.
இவ் வாள்வெட்டுச் சம்பவம் காரணமாக 21 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
வவுனியா குருமன்காடு சாந்தி கிளினிக் சந்திக்கு அருகே இன்று (20.12.2016) 2.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் காயமடைந்ததுடன் மோட்டார் வண்டி ஓட்டுநர் தப்பியோடியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த பல்சர் ரக மோட்டார் சைக்கில் வீதியின் மறுபக்கத்திற்கு மாற முயன்ற சமயத்தில் அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் பிலசர் ரக மோட்டார் சைக்கிலில் பயணித்த பெண் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் விபத்துக்குள்ளான மற்றைய மோட்டார் மோட்டார் வண்டி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்துப் பொலிஸார் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
வவுனியாவில் நேற்று(19.12.2016) இரவு ஏ9 வீதியில் வெடிபொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று முறிப்பு பகுதியிலே இச் சம்பவம்இ டம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக வவுனியா போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் போது மதவாச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த முச்சக்கர வண்டியை மறித்து சோதனை செய்த போது குறித்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
பொலிசாரால் ஜெக்னேற்றர் – 199, ஜெக்னேற்றர் தொப்பி – 200, 10 மீற்றர் நீளமான வயர் றோல் – 5 மற்றும் பயணப்பை – 02 என்பன கைப்பற்றப்பட்டதுடன் முச்சக்கர வண்டியும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா நீலியாமோட்டை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள காணியில் மாடு அடைக்கச்சென்ற ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(19.12.2016) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்த நிலையில் குடும்பஸ்தரின் சடலம் காணப்பட்டதை அவதானித்த ஊர் மக்கள், பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பறயனாலங்குளம் பொலிசாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பனங்காமம் பகுதியைச் சேர்ந்த எஸ்.குணசிங்கம் (வயது 60) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பறயனாலங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு தழுவிய ரீதியில் 48 மணிநேர பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தவகையில் நேற்று (19.12.2016) இரவு தொடக்கம் அமுலாகும் வகையில் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற்று வருகின்றது. வவுனியா மத்திய தபாலகத்திலும் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதியோர் கொடுப்பனவுகளை பெறுவதற்கு முதியோர்கள் பலர் பல சிரமத்திற்கு மத்தியில் அஞ்சல் அலுவலகத்தினை நாடியபோதும் இப் பணிபுறக்கணிப்பு காரணமாக பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நான்கு கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்றுவருவதாக ஒன்றியத்தின் இணைப்பாளர் கே. என். சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
யாழ்.இளவாலை பகுதியில் பற்றை ஒன்றுக்குள் இருந்து அழுகிய நிலையில் சடலம் ஒன்றை இளவாலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த சுதுகல தேவகே குணசேன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பற்றைக்குள் அழுகிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள், இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் பதில் நீதிவான் தம்பிமுத்து மரண விராசணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
சடலத்தின் சட்டை பையில் இருந்து தொலைபேசி இலக்கம் ஒன்று மீட்கப்பட்டு, அந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டபோது சடலமாக மீட்கப்பட்ட நபர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த சுதுகல தேவகே குணசேன என அடையாளம் காணப் பட்டுள்ளதுடன் இந்த நபர் ஊர் ஊராக திரிபவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.