போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மறைந்திருந்த இடமொன்றை “நத்தார் தாத்தா” முற்றுகையிட்டு சந்தேக நபர்களை கைது செய்த சம்பவம் பெரு நாட்டில் இடம்பெற்றுள்ளது.
பெரு நாட்டின் பொலிஸ் உத்தியோகத்தர்களே நத்தார் தாத்தா போன்று வேடமணிந்து சென்று இந்த முற்றுகையை நடத்தினர். பெரு தலைநகர் லீமாவில் உள்ள வீடொன்றில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சிலர் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இக் கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்குத் தீர்மானித்த பெரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நத்தார் தாத்தா வேடத்தில் சென்று அவ் வீட்டை சுற்றிவளைத்தனர்.
நத்தார் தாத்தா வேஷத்திலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், சம்மட்டி ஒன்றினால் கதவை உடைக்க ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளே நுழைந்து சந்தேக நபர்களை மடக்கிப்பிடித்து கைவிலங்கிட்டனர்.
இந்த முற்றுகையின்போது பதிவுசெய்யப்பட்ட வீடியோ இணையத்தில் பெரும் எண்ணிக்கையானோரால் பார்வையிடப்பட்டுள்ளது.
தொழிலதிபர்களை குறி வைத்து 11 பேரை ஏமாற்றி திருமணம் செய்து, பின்னர் நகை, பணத்துடன் தப்பியோடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் லோரன் ஜஸ்டின் ஒரு தொழிலதிபர். இவர் கடந்த ஒக்டோபர் மாதம் கொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்ரை அளித்துள்ளார்.
அதில், தன்னுடைய மனைவி மேகா பார்கவ் (28) திடீரென காணாமல் போய் விட்டதாகவும், வீட்டிலிருந்த 15 இலட்சம் ரூபா, நகை உள்ளிட்டவை மாயமானதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து மேகாவின் புகைப்படம், செல்போன் எண் உள்ளிட்டவைகளை வைத்து கொச்சி பொலிஸார் நடத்திய விசாரணையில் இதேபோல் அவர் கேரள மாநிலத்தில் மேலும் 3 பேரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு நகை, பணத்துடன் தப்பியோடியமை தெரியவந்தது. ஏனைய 3 பேரும் இதை வெளியில் சொன்னால் அவமானம் என கருதி பொலிஸில் முறையிடாமல் இருந்துள்ளனர்.
இதையடுத்து மேகா எங்கு உள்ளார் என கொச்சி பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கேரளாவில் 4 பேர் மட்டுமன்றி மும்பை, புனே, இந்தூர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட ஊர்களில் மொத்தம் 11 பேரை ஏமாற்றி திருமணம் செய்த தகவல் கிடைத்துள்ளது.
இதனிடையே மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மேகா பார்கவ், டில்லி அருகே நொய்டாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக மேகாவை நொய்டா பொலிஸாரின் உதவியுடன் கொச்சி பொலிஸார் தேடினர்.
இந்தநிலையில் கடந்த வாரம் மேகா கைது செய்யப்பட்டார். இந்த மோசடியில் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரி பிராசி, அவருடைய கணவர் தேவேந்திர சர்மா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து பொலிஸார் தெரிவித்திருப்பதாவது, மேகா மிகவும் அழகான தோற்றத்துடன் உள்ளார். இதனால் அவருடைய அழகில் மயங்கிய தொழிலதிபர்கள் அவரைப் பற்றியும், அவருடைய குடும்பத்தைப் பற்றியும் அலசி ஆராயாமல் திருமணம் செய்து உள்ளனர்.
தொழிலதிபர்கள் உள்ளிட்ட வசதி படைத்தவர்களை குறிவைத்து மேகா திருமண வேட்டை நடத்தி உள்ளார். மணமகள் தேவை விளம்பரத்தில் வரும் விவாகரத்து ஆனவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பணக்கார மணமகன்களே அவருடைய இலக்காகும்.
திருமணம் குறித்து தன்னுடைய சகோதரி, அவருடைய கணவர் மூலம் பேசவைத்த மேகா பின்னர் தானே பேசி, தன்னுடைய புகைப்படங்களை அனுப்பி தொழிலதிபர்களை கவர்ந்துள்ளார்.
இதில் ஏமாந்த தொழிலதிபர்களைத் திருமணம் செய்து கொண்டு அவர்களின் நம்பிக்கையை மேகா பெற்றுள்ளார். சில மாதங்கள் அவர்களுடன் கணவன் மனைவியாக வாழ்ந்த அவர் பின்னர் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு மயக்கமருந்து கொடுத்துவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளார்.
சுமார் 2 மாத கால தேடலின்பின்னர் அவர் சிக்கியுள்ளார் என கூறியுள்ளனர்.
ஆனால் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பொலிஸாரிடம் மேகா மறுத்தார்.
இது குறித்து அவர், “நான் யாரையும் ஏமாற்றவில்லை. கேரளாவில் திருமணம் செய்த 3 பேரையும் விவாகரத்துச் செய்து விட்டேன். 4ஆவதாக லோரன் ஜஸ்டினுடன் திருமணம் நடந்தது. எங்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நான் பிரிந்து சென்றேன்” என கூறியுள்ளார்.
இதனிடையே மேகா எவ்வளவு பணம், நகை மோசடி செய்தார் என அறிய அவரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப் பொருள் உட்கொண்ட பின்னர் 4 மாத வயதான குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தாரென அமெரிக்காவின் முன்னாள் அழகுராணி ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்டின் சோரிச் லிசையுஸ் எனும் இந்த யுவதி 2013ஆம் ஆண்டில் மிஸ் அரிஸோனா அழகுராணி போட்டியில் பங்குபற்றியவர்.
இவர் கடந்த மே மாதம் கொகேய்ன் போதைப்பொருள் உட்கொண்ட பின்னர் தனது 4 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாய்ப்பால் அருந்திய குழந்தை மயக்கமடைந்ததால், அக் குழந்தையை லிசையுஸும் அவரின் கணவரும் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையின் ரத்தத்தை பரிசோதனை செய்வதற்கு மருத்துவர்கள் முயன்றபோது இவ்விருவரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும், குழந்தையை மற்றொரு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு இவர்கள் சம்மதித்தனர்.
இதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் டயமன்ட் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தையை மாற்றியது. ஆனால் அங்கும் குழந்தைக்கு நச்சுயியல் சோதனை நடத்த மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இவ் விடயம் குறித்து குழந்தைகள் நலத்துறை உயரதிகரிகளுக்கு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதையடுத்து குழந்தைகள் நலத்துறை அதிகாரி கள் உதவியுடன் மேற்படி குழந்தைக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
அப்போது குழந்தையின் உடலில் கொகேய்ன் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பாக த கிறிஸ்டின் சோரிச் லிசையுஸ் மற்றும் அவரின் கணவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தான் கொகேய்ன் உட்கொள்ளவில்லை எனவும் ஆனால், குழந்தையின் உடலில் எவ்வாறு கொகேய்ன் சென்றது என்பது தெரியாது எனவும் த கிறிஸ்டின் சோரிச் லிசையுஸ் ஆரம்பத்தில் தெரிவித்தார்.
அவரின் கணவரும் இதையே கூறினார். எனினும், ஒரு கட்டத்தில் கிறிஸ்டின் சோரிச் லிசையுஸ் உண்மையை ஒப்புக்கொண்டார். விருந்தொன்றில் கொகேய்ன் உட்கொண்டு 12 மணித்தியாலங்களின் பின்னர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததாக அவர் கூறினார்.
அதன்பின் கிறிஸ்டின் சோரிச் லிசையுஸின்; வீட்டில் சோதனை நடத்திய பொலிஸார், கொகேய்ன் போதை பொருளை கைப்பற்றியதுடன் இருவரையும் கைது செய்தனர். தற்போது இவர்கள் இருவருக்கும் எதிராக வழக்குத் தொடுக் கப்பட்டுள்ளது.
ஹிப் ஹொப் தமிழா ஆதி அடுத்து எடுத்திருக்கும் அவதாரத்தில் படு பிஸி. ‘மீசைய முறுக்கு’ முதல் முயற்சி. சோஷியல் மீடியாவில் ஹிப்ஹொப் பிற்கு அதிரிபுதிரி வெற்றிதான். ஒரு பக்கம் மியூசிக், இன்னொரு பக்கம் நடிப்பு என ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரை சவாரி. ‘‘கனவுகள்தான் வாழ்க்கையை அழகாக்கும்.
கனவுகள் நிறைவேறுகிற வேளை நம்மையே அழகாக்கும். மியூசிக் ஆல்பம் பண்ணும்போதே நிறைய பேர் என்னை ஹீரோவா நடிக்கச் சொல்லிக் கேட்டார்கள்.
அப்ப இந்த அளவுக்கு பக்குவமில்லை. எல்லாமே கூடி வரணும்னு நினைச்சேன். இப்ப அதுக்கான நேரம் வந்திருக்கு. அதுதான் கம்பீரமா மீசையை முறுக்கியிருக்கேன்…’’ – சந்தோஷமாகப் பேசுகிறார் ஆதி.
பாரதியாரின் படம், அவரது வரிகள். மெசேஜ் சொல்ல கிளம்பிட்டீங்களா ப்ரோ?
அப்படியெல்லாம் இல்ல. காலேஜ் லவ் ஸ்டோரி இது. தனியா மியூசிக் பண்ண ஆரம்பிச்ச கஷ்டத்தை ஜாலியா சொல்லியிருக்கேன். அது எல்லாருக்கும் போகும். சமூக வலைத்தள இளைஞர்களை நிறைய அறிமுகப்படுத்தியிருக்கேன்.
நீங்க அவங்களைப் பார்க்கும்போது புதுமுகமா தெரியாது. அவங்ககிட்ட ஒரு சரளம் இருக்கும். வாழ்க்கையில எப்பவும் வெற்றியை எதிர்பார்க்கக் கூடாது.
டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவாவிடம் ஒரு தடவை, ‘உங்க சிறந்த வெற்றி எது’னு கேட்டாங்க. அப்ப அவர், தான் சிறப்பா ஆடித் தோற்ற ஒரு மேட்ச் பத்தி சொன்னார்.
டைரக்ஷன்ல அனுபவம் இல்லாம இறங்கியிருக்கீங்களே..?
நாங்க நிறைய வீடியோக்கள் செய்த அனுபவம் இருக்கு. எங்க ஆல்பத்தில் ‘வாடி புள்ள வாடி’யெல்லாம் இன்னிக்கு வரை செம ஹிட். அப்பவே, ‘நீங்க திரைப்படக் கல்லூரி மாணவரா’ன்னு கேட்டிருக்காங்க.
நான் ஓர் எஞ்சினியரிங் ஸ்டூடன்ட்னு சொல்லிச் சொல்லி களைச்சுப் போயிருக்கேன். இப்ப பரவலா அறியப்பட்ட ‘ஜல்லிக்கட்டு’ வீடியோ கூட நான் டைரக்ட் பண்ணினதுதான்.
குறும்படங்கள் செஞ்சுட்டு பெரிய திரைக்கு வந்த இயக்குநர்கள் இல்லையா? அந்த மாதிரிதான். இதுல கிடைச்ச அனுபவமே நிறைய. என்னால முடியும்னு நம்புனேன். படத்தைப் பார்த்துட்டு சுந்தர்.சி ‘நல்லா இருக்கு’ன்னு பாராட்டினார்.
அவர் மாதிரியான பெரிய அனுபவம் வாய்ந்த இயக்குநரே இப்படிச் சொன்னபோதுதான் எனக்கு மூச்சு வந்தது. விவேக்கின் சமூக அக்கறை எனக்குப் பிடிக்கும். அதை அவர் கொமடியில சொல்லுவார். படத்தில் அவர் எனக்கு அப்பாவா வர்றார். கிட்டத்தட்ட அவர்தான் படத்தோட ஹீரோ.
என்ன சொல்றார் சுந்தர்.சி?
‘ஆம்பள’ படத்துக்காக என்கிட்ட ‘ஒரே ஒரு பாட்டு போட்டுக் கொடு’னு கேட்டார். நான் கொடுத்தது ‘பழகிக்கலாம்…’ பாட்டு. ‘யப்பா ரொம்ப புதுசா இருக்குதுப்பா..’னு சொல்லிட்டு மொத்த படத்தையும் என் கையில கொடுத்துட்டார்.
நான் அவரோட மியூசிக் டெஸ்ட்லேயும் பாஸ் பண்ணினேன். அடுத்து ஜல்லிக்கட்டு வீடியோவைக் கொண்டு போய் காட்டினேன்.
‘யோவ், என்னய்யா… எல்லா பக்கமும் சிக்ஸர் அடிக்கிறீயே’னு தட்டிக்கொடுத்தார். திடீர்னு ‘ஆம்பள’ பட இசை விழாவில் ‘ஆதியை வைத்து ஹீரோவா படம் தயாரிப்பேன்’னு சொல்லிட்டார்.
சொன்னதை செஞ்சார். நானே இயக்கும்போது, சொல்ல வந்த கருத்துகளை, மண் சார்ந்த உணர்வுகளைச் சொல்ல முடியும்னு நினைச்சேன். அதுக்கும் சம்மதிச்ச தங்கமான மனசு அவருடையது. இப்ப பாருங்க… 40 நாள்ல மொத்த படத்தையும் முடிச்சு அவர் கையில கொடுத்துட்டேன்.
ஜல்லிக்கட்டு ஆல்பம் மாதிரி அடுத்து என்ன?
அந்த வீடியோ இளைஞர்களுக்கு ரொம்ப பிடிச்சது. அதற்கடுத்து காவிரி நதிநீர் பிரச்சினை என் மனசுல இருக்கு.
அப்போ மியூசிக் ஆல்பம் எல்லாம் அவ்வளவுதானா?
தமிழ்நாட்டுல மியூசிக் ஆல்பம் என்பது ‘கிணத்துல போட்ட கல்’ மாதிரிதான். அதுலேயே சாதிக்க நினைச்சேன். ஆனா இப்ப சூழல் அதுக்கானதா இல்ல. பிடிவாதமா இருந்ததுல, சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைக்கும் போயிட்டேன். ஒண்ணு புரிஞ்சது. கூட்டத்துல இருந்து எதையும் சொன்னா யாருக்கும் கேட்காது.
பத்தோட பதினொண்ணா போகும். நாமளே ஓர் உயரத்துக்குப் போனா நாம விருப்பப்பட்டதை செய்யலாம். கொஞ்சம் பணம் பார்க்க சினிமாவுக்கு வந்தேன். ஆசைப்பட்ட தனி ஆல்பத்தை இன்னும் சிறப்பா பண்ணுவேன். ப்ளீஸ் வெயிட்..
வவுனியா இறம்பைக்குளம் புனித யோசப்வாஸ் வீதியில் அமைக்கப்பட்டிருந்த புனித யோசப்வாஸ் திருச் சொரூபம் கடந்த 10.12.2016 அன்று நள்ளிரவில் விஷமிகளால் தாக்கி சேதப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி எஸ்.சத்தியராஜ் அடிகளால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது.
தற்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.12.2016) காலை திருப்பலியின் பின்னர் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட புனித யோசப்வாஸ் திருச்சொரூபம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இயங்கிவரும் யூரோப்பியன் லங்வேஜ் தனியார் சர்வதேச கற்கைமொழி பயிற்சி நிலையத்தின் மூன்றாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்வும் நேற்று (20.12.2016) காலை 10 மணியளவில் இறம்பைக்குளம் விருந்தினர் விடுதியில் நிர்வாக இயக்குநர் கே.வின்சட் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அந்நிறுவனத்தில் சர்வதேச மொழியினை பயின்ற 28 மாணவர்களுகளுக்கு சர்வதேச தரச் சான்றிழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஓய்வு நிலை அதிபர் திருமதி.ஜி.நடராசா, போதகர் ஜெயசீரன், போதகர். றோலனஸ், போதகர், சரத்குமார் மற்றும் நிறுவனத்தின் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
சர்வதேச மொழியினை பயின்ற மாணவர்களின் அனுபவப்பகிர்வுகள், மாணவர்களின் கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ அரிஹர சுதன் ஐயன் ஐயப்ப சுவாமியின் மகரஜோதி மண்டல விரத சக்தி பூஜை பெருவிழா கடந்த திங்கட்கிழமை (19.12.2016) காலை இந்து அன்பக இயக்குனர் கு.ஜெயராணி (சாமி அம்மா) தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
சபரிமலை செல்லவுள்ள சுவாமிகளுக்கு மாலை அணிவித்து இப் பூஜை சிறப்பாக இடம்பெற்றது.
இன் நிகழ்வில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வருகைதந்த சுவாமிகள் கெளரவிக்கப்பட்டதுடன், அலங்கார தீபாராதனை, ஆனந்தமிகு ஐயப்பனின் பஜனைகள், பதினெட்டாம் படிப்பூஜை, மகா தீபாராதனை, பாத தரிசனம், சக்தி பூஜை(அன்னதானம்) என்பன சிறப்பாக இடம்பெற்றன.
வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் கடந்த 15.12.2016 அன்று 5 சிறுவர்களின் பிறந்ததினம் இந்து அன்பக இயக்குனர் கு.ஜெயராணி (சாமி அம்மா) தலைமையில் கொண்டாடப்பட்டது.
பிறந்தநாளை 5 சிறுவர்களும் மிகவும் மகிழ்வுடன் அன்பக சிறுவர்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
இவ் அன்பகத்தில் 60 க்கும் மேற்ப்ட்ட சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருவதுடன். இவர்களுக்குத் தேவையான உதவிகளை புலம்பெயர் உறவுகள் செய்து வருவதுடன் இங்குள்ளவர்களும் நேரடியாகச் சென்று குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு நீங்களும் நேரடியாகச் சென்று பார்வையிட்டு உதவிகளை செய்யமுடியும்.
ரவீந்திர ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சின் மூலம் இங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியையும் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 75 ஒட்டங்களால் வெற்றி கொண்டது.
இந்த வெற்றியின் மூலம் 05 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 4-0 எனும் கணக்கில் இந்திய அணியின் வசமானது.
சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கும் நோக்குடன் விக்கெட் இழப்பின்றி 12 ஓட்டங்களுடன் இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து தொடர்ந்தது.
அலிஸ்டயர் குக் மற்றும் கீட்டன் ஜென்னிங்ஸ் ஜோடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கியதோடு, 103 ஓட்டங்களைப் பெற்ற வேளையில், இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது.
தொடர்ந்து வந்த இங்கிலாந்து துடுப்பாட்ட வீர்ரகள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாற்றத்தை எதிர்க்கொண்டனர்.
அணியின் அதிகபட்ச ஓட்டமாக கீட்டன் ஜென்னிங்ஸ் பெற்ற 54 ஓட்டங்கள் மாத்திரமே பதிவானதோடு இங்கிலாந்தின் ஏனைய 07 துடுப்பாட்ட வீரர்களும் 20 க்கும் குறைவான ஓட்டங்களோடு ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா அபாரமாக பந்துவீசி இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலையச் செய்ததோடு, 07 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக இங்கிலாந்து அணியின் லியம் டொவ்சன் தெரிவு செய்யப்பட்டதோடு, இந்தப் போட்டியில் முச்சதம் கடந்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய கருண் நாயர் தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதிற்கு பாத்திரமானார்.
வவுனியாவில் இன்று(20.12.2016) இரவு 7 மணியளவில் மூன்றாம் குறுக்குத் தெருவில் இரண்டு இராணுவ வீரர்கள் கஞ்சா பாவனையில் ஈடுபட்டபோது பொலிசார் இருவரையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று 20.12.2016 இரவு 7 மணியளவில் மழை பெய்து கொண்டிருந்தபோது மக்களற்ற பகுதியில் சிவில் உடையில் இரண்டு இராணுவ வீரர்கள் கஞ்சா பாவனையில் ஈடுபட்டிருந்தபோது பொலிசார் கைது செய்துள்ளதாகவும் இவ்விருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா நெல்சிப்(NELSIP) திட்டத்தில் புனர்நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நாளை 21.12.2016 அன்று உத்தியோகபூர்வமாகத்திறந்து வைக்கப்பட உள்ளதாக வவுனியா நகரசபைச் செயலாளர் ஆர்.தயாபரன் தெரிவித்தார்.
நீண்டகாலமாக இப் புணரமைப்புப்பணிகள் இடம்பெற்று வந்ததுடன் அனைத்து வேலைகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டு நாளை (21.12.2016) பிற்பகல் 3 மணிக்கு பொதுமக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
வவுனியா நகரசபைச் செயலாளர் தலைமையில் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரும் நெல்சிப் திட்டப்பணிப்பாளருமான பொ.குகநாதன் மற்றும் உலக வங்கி உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள், எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
வவுனியா நகரசபை, நெல்சிப் திட்டம் என்பன இணைந்து சுமார் 10 மில்லியன் ரூபா செலவில் பொதுப் பூங்கா புணர்நிர்மாணம் செய்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்றயதினம் (19.12.2016) சுவிஸ் வாழ் உறவுகளான தீபன் சுகந்தினி தம்பதிகளின் புதல்வி செல்வி .ஆர்.றஸ்மியா அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வழங்கப்பட்டது.
இன் நிகழ்வுகள் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது, நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமாகிய க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக வவுனியா வாடி வீட்டின் இயக்குனரும், இந்து அன்பகத்தின் ஆயுள் கால உறுப்பினருமான மா.கதிர்காமராஜா, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகரான முத்தையா கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களினை இந்து அன்பக இயக்குனர் கு.ஜெயராணி (சாமி அம்மா) அவர்களின் முன்னிலையில் வழங்கினார்கள்.
இன் நிகழ்வுகளில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் த.நிகேதன், உபதலைவர் பி.கெர்சோன், அமைப்பாளர் வ.பிரதீபன், கலாசார பிரிவின் ஒழுங்கமைப்பாளர் தே.பிரகாஸ்கர், உறுப்பினர் த.ரவி ஆகியோருடன் இன் நிகழ்வில் அன்பத்தின் நிர்வாகசபை உறுப்பினர்களுடன், ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் பார ஊர்தி ஒன்று கனகராயன்குளம் ஏ9 வீதியில் இன்று(20.12.2016) அதிகாலை மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற பார ஊர்தியானது வீதியை விட்டு விலகி உயர் அழுத்த மின் விநியோக கம்பம் ஒன்றுடன் மோதியது.
இதனால் மின்கம்பம் முற்றாக முறிந்து வீழ்ந்துள்ளது. மின் கம்பம் முறிந்து விழுந்தமையால் அப்பகுதியில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது. விபத்து காரணமாக பார ஊர்தியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் துருக்கிக்கான ரஷ்யத் தூதுவர் ஆண்ட்ரை கார்லோவ் பலியாகியுள்ளார்.
துருக்கி பொலிஸ் அதிகாரி ஒருவராலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்தை தனது கெமராவில் பதிவு செய்த அசோசியேட்டட் பிரஸ்ஸின் புகைப்படக் கலைஞர் புர்கான் ஒஸ்பிலிக் தனது ஆபத்தான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,
ரஷ்யாவைப் பற்றிய புகைப்படக் கண்காட்சி அது. ரஷ்யாவின் கலின்ங் கிராட் நகர் முதல் கம்சாட்கா நகர் வரையான புகைப்படங்கள் அந்தக் கண்காட்சியில் இடப்பெற்றிருந்தன. எனவே, அந்த கண்காட்சியில் நான் கலந்துகொள்ள முடிவு செய்தேன். ஏனெனில், என் அலுவலகத்திற்கு செல்லும் வழியில்தான் அந்தக் காண்காட்சி நடைபெற்றது.
நான் கண்காட்சிக்கு நுழையும் முன்னே அங்கு உரைகள் தொடங்கப்பட்டு விட்டன. அதற்கு பின் ரஷ்ய தூதர் ஆண்ட்ரை கார்லோவ் தனது உரையைத் தொடங்கினார்.
நான் புகைப்படம் எடுப்பதற்காக அவரது அருகில் சென்றேன். துருக்கி – ரஷ்ய உறவுக்கு உபயோகிக்கப்படும் வகையில் அந்தப் படங்கள் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்.
அதுவரை அவ்விடம் வழக்கமான புகைப்பட கண்காட்சி நிகழ்ச்சியாகவே அது இருந்தது.
பிறகு திடீரென்று கருப்பு நிற கோட் சூட் அணிந்த அந்த நபர் துப்பாக்கியை வெளியே எடுக்கும்போது நான் திகைத்து நின்றேன். நான் அதனை திரைப்பட காட்சி என்று முதலில் நினைத்தேன்.
குறுகிய முடி வைத்திருந்த அந்த நபர் துப்பாக்கியை எடுத்து துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரை கார்லோவை 8 முறைச் சுட்டார். அங்கிருந்த மக்கள் பயந்து அங்கிருந்த மேசைகளுக்கு அடியில் பதுங்கிக் கொண்டனர். நான் சற்று பயந்து குழம்பிய நிலையில் இருந்தேன். இருந்தாலும் நான் சுவருக்கு பின்னால் ஒழிந்துகொண்டு புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன். மிக நிதானமாக திட்டமிட்டு இந்தப் படுகொலையை அந்த நபர் செய்தார்.
அதன்பின் அங்கு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பார்வையாளர்கள் பீதி அடைந்தனர். சுடப்பட்ட ரஷ்ய தூதர் எனக்கு சிறிய தொலைவிலே தரையில் வீழ்ந்து கிடந்தார். அவரது உடலிலிருந்து எந்த இரத்தமும் வெளிவரவில்லை. ஒரு வேளை அந்த நபர் அவரை பின்னால் சுட்டிருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
‘உலக அழகி 2016’ உலக அழகிப்போட்டி அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள அக்சான் கில்நகரில் நடைபெற்றது.
அதில் 50க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.
பல சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன. நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. அதில் கென்யா, பிலிப்பைன்ஸ், புவேர்ட்டோ ரிக்கோ, டொமிகன் குடியரசு மற்றும் இந்தோனேசியா ஆகிய 5 நாடுகளின் அழகிகள் கலந்து கொண்டனர்.
அதில் புவேர்ட்டோ ரிக்கோ நாட்டை சேர்ந்த ஸ்டெபானி டெல்வாலே என்ற 19 வயது இளம்பெண் உலக அழகி பட்டம் வென்றார்.
இந்நிலையில், உலக அழகிப் போட்டியில் முதல் 20 இடங்களுக்குள் இந்திய பெண் ஒருவர் இடம்பெற்றுள்ளார். மிஸ்வேர்ல்டு 2016 போட்டியில் இந்திய அழகி ப்ரியதர்ஷினி சாட்டர்ஜி 17வது இடத்தைப் பிடித்துள்ளார். டெல்லியில் வசித்து வரும் பிரியதர்ஷினி, சமூகவியல் படித்து வருகிறார்.
இறுதியாக இந்தியாவின் சார்பில் பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்றார். அதற்கு முன்பாக ரீட்டா பரியா(1966), ஐஸ்வர்யா ராய்(1994), டையானா ஹைடன்(1997) மற்றும் யுக்தா முக்கே பட்டங்களை வென்றுள்ளனர்.
வவுனியா மகாறம்பைக்குளத்தில் நேற்று (19.12.2016) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா மாகாறம்பைக்குளத்தில் நேற்று இரவு 9 மணியளவில் இரு அயலர்களுக்கிடையே வாக்குவாதம் இடம்பெற்று இவ் வாக்குவாதம் மோதலாக மாறி வாள் வெட்டுச்சம்பவத்துடன் முடிவடைந்துள்ளது.
இவ் வாள்வெட்டுச் சம்பவம் காரணமாக 21 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.